வாழ்க்கை சிலரை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும். வாய்ப்புகளை வாரி வழங்கும். கிடுகிடுவென்று வெற்றிப் பாதையில் ஏறி மேலே மேலே போய்விடுவார்கள்.
பலருக்கோ கரடு முரடான மலைப்பாதையாக இருக்கும். பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றி என்கிற கனியைப் பறிக்க முடியும்.
இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் மார்த்தா மெஸ்ஸாரோஸ் (Marta Meszaros). ஹங்கேரியின் மிக முக்கியமான பெண் இயக்குநர்… ஹங்கேரிய சினிமா வரலாற்றில் முதல் பெண் இயக்குநர். இந்த உயரத்தை அடைய அவர் பட்ட சிரமங்கள் ஒரு தனி நூலாக எழுதப்பட வேண்டியவை.
ஹங்கேரியில் இருக்கும் புத்தாபெஸ்டில் பிறந்தார் மார்த்தா. அப்பா ஒரு சிற்பி. சரியான வருமானம் இல்லை. வறுமை தீர வேண்டுமே? 1935ல் ரஷ்யாவுக்கு இடம் பெயர்ந்தது மார்த்தாவின் குடும்பம்.
மார்த்தாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவருடைய அம்மா இறந்து போனார். சோவியத் ரஷ்யாவின் அதிபராக ஸ்டாலின் இருந்த காலம் அது. அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் எதிராக இருந்தவர்கள் களையெடுக்கப்பட்ட நேரம். மார்த்தாவின் அப்பா, லாஸ்ஸியோ மெஸ்ஸாரோஸ் (Laszio Meszaros) அந்த லிஸ்டில் இருந்தார். கைது செய்யப்பட்டு, கிர்கிஸ்தான் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிறையில் இரண்டு ஆண்டுகள் இருந்த அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இறந்த தகவல்கூட பல ஆண்டுகள் கழிந்த பிறகுதான் மார்த்தாவுக்குத் தெரியும்.
மார்த்தா உறவினர் ஒருவரால் வளர்க்கப்பட்டார்.
மாஸ்கோவில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஹங்கேரிக்குத் திரும்பினார் மார்த்தா. ஆனாலும் அவர் நினைத்ததைப் படிக்க முடியாத அளவுக்குப் பல கட்டுப்பாடுகள். அப்பா ஒரு கலைஞர் என்பதாலோ என்னவோ அவருக்கு நாடகத்திலும் சினிமாவிலும் அப்படி ஓர் ஈடுபாடு இருந்தது. படிப்பதற்காக மறுபடியும் மாஸ்கோவுக்கே போனார் மார்த்தா.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் மாஸ்கோவில் இருந்த ஒரு திரைப்படப் பள்ளியில் (The Russian State Institute of Cinematography) சேர்ந்தார். ‘‘என்னால் ஹங்கேரியில் இருக்கும் திரைப்படப் பள்ளியில் சேர முடியவில்லை. அங்கே பெண்கள் இயக்குநர் படிப்புப் படிக்க முடியாது. எனக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் மாஸ்கோவில் இருந்த திரைப்படப் பள்ளியில் சேர்ந்தேன். 50களில் ரஷ்யாவில் நிறைய படங்கள் தயாரிக்கப்படவில்லை. வெளிவந்த ஓரிரு படங்களும் அரசு சார்ந்த படங்களாக இருந்தன. நான் சேர்ந்த பள்ளியில் மிக மிகத் திறமையான, சுவாரஸ்யமான ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால், பிராக்டிக்கலாக எதுவும் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கான பண வசதி பள்ளியில் இல்லை. பண்பாட்டையும் இலக்கியத்தையும் கற்றுக் கொள்ளவும், நிறைய சினிமா பார்க்கவும் ஏற்ற இடம். எப்போதாவது புகைப்படம் எடுப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். அவ்வளவுதான்’’ என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மார்த்தா.
1956ல் ஹங்கேரிக்குத் திரும்பினார். அரசுக்கு எதிராக புரட்சி நடந்து கொண்டிருந்த நேரம். ஆவணப்படங்கள் எடுக்கலாம் என்று நினைத்தார். எதைப் பற்றி எடுப்பது என்கிற கேள்வி வந்த போது வறுமையில் வாடும் மக்களைப் பற்றி எடுக்கலாம் என முடிவு செய்தார். ஆனால், சென்சார் அதிகாரிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது. ‘‘கம்யூனிச ஆட்சியில் ஏழைகளா? சான்ஸே இல்லை’’ என்று மறுத்தார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு 4 குறும்படங்களை இயக்கினார் மார்த்தா.
அப்போதெல்லாம் கேமராவைத் தூக்கிக் கொண்டு படமெடுக்க இஷ்டத்துக்கு வெளியே போக முடியாது. ஸ்டுடியோவில்தான் படம் எடுக்க வேண்டும். அதற்காகவே தனியாக ஸ்டுடியோக்கள் இயங்கின. ‘புத்தாபெஸ்ட் நியூஸ் ரீல் ஸ்டுடியோ’வில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே இருந்தபோதுதான் தன்னுடைய முதல் நான்கு ஆவணப்படங்களை எடுத்தார். பிறகு, ரோமேனியாவில் இருக்கும் ‘அலெக்ஸாண்ட்ரு சாஹியா’ (Alexandru Sahia) ஸ்டுடியோவில் இரண்டாண்டுகள் வேலை பார்த்தார். ஏனோ மனம் ஒட்டாமல் ஹங்கேரிக்கே திரும்பினார். 1968 வரை அங்கே இருந்தவர் பல குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கினார். பிறகு ‘மாஃபிலிம் 5’ என்ற நிறுவனத்துடன் இணைந்தார். தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்க அவர் 1968 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
‘‘மற்ற நாடுகளைப் போல ஹங்கேரி அவ்வளவு மோசமானதில்லை. உதாரணமாக போலந்தில் சென்சார் மிகக் கடுமையாக இருக்கும். ஹங்கேரியில் அப்படி இல்லை’’ என்று ஒரு பேட்டியில் மார்த்தா குறிப்பிட்டிருந்தாலும் தன் சொந்த நாட்டில் வேறு விதமான பிரச்னைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஸ்டுடியோவை அரசே நடத்தி வந்தது. ஒரு திரைப்படத்துக்கான கதை, வசனத்தை எழுதி முடித்தவுடன் அதை ஸ்டுடியோவுக்கு அனுப்ப வேண்டும். அங்கே அதைப் பரிசீலிப்பதற்காகவே இருக்கும் குழு முழு ஸ்க்ரிப்டை அக்குவேறு, ஆணிவேராக அலசும். அந்தக் குழுவுக்கு கதையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றினால் குறிப்பிடுவார்கள். உரிய மாற்றங்களைச் செய்த பிறகு ஸ்கிரிப்டை ஸ்டுடியோ இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். அவர்தான் இந்தக் கதையைப் படமாக எடுக்கலாமா, அதற்கு எவ்வளவு பணத்தை ஒதுக்கலாம் என்பதையெல்லாம் தீர்மானிப்பார். அத்தோடு விஷயம் முடிந்துவிடுவதில்லை.
அதற்குப் பிறகு ஸ்கிரிப்டை ஸ்டுடியோ இயக்குநர், பண்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். அங்கே மறுபடியும் ஒரு குழு, வரி வரியாக திரைக்கதை, வசனத்தைப் படிக்கும். பல நேரங்களில் பல காட்சிகள் உருவப்படும். சில நேரங்களில் சில வசனங்கள் நீக்கப்படும். ‘‘பண்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் ஸ்க்ரிப்டுகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் மார்த்தா. இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு, படத்தைத் தயாரிக்க அனுமதி கிடைக்கும்.
படம் தயாரித்த பிறகு உடனே ரிலீஸ் செய்துவிட முடியாது. ஸ்டுடியோவில் இருப்பவர்கள், திரைப்படத்தை பார்வையிடுவதற்காகவே இருக்கும் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகளுக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காட்ட வேண்டும். அவர்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அதை சரி செய்ய வேண்டும்.
இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் ஹங்கேரி திரைத்துறையில் கால் பதித்த மார்த்தா மெஸ்ஸாரோஸ் செய்த சாதனை அளப்பரியது. 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், பல குறும்படங்களை இயக்கினார். பல விருதுகளை பெற்றன அவருடைய படங்கள். இத்தனைக்கும் இயக்கத்துக்காக அவர் கோடிக்கணக்கிலோ, ஏன்… லட்சக்கணக்கிலோ கூட சம்பளம் பெறவில்லை. எல்லாமே சொற்பத் தொகை. காரணம், சம்பளத்தை வழங்கியது அரசு. அவருடைய படம் நூறு நாடுகளில் விநியோகஸ்தர்களால் திரையிடப்படும். வருமானம் அரசுக்குக் கிடைக்கும். ஆனால் அவருக்கு ஒரு பைசா கிடைக்காது.
மார்த்தாவும் பல இயக்குநர்களும் இந்தப் பிரச்னைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இறங்கி வந்த அரசு, ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏதாவது ஒரு திரைப்படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பானால், இயக்குநருக்கு தொலைகாட்சி நிலையம் கணிசமான தொகையை வழங்க வேண்டும். இந்தத் திட்டம்கூட ஹங்கேரியில் மட்டும்தான் செல்லுபடியாகும். பக்கத்தில் இருக்கும் போலந்து நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் ஒரு பைசாகூட இயக்குநருக்குக் கிடையாது. இந்த மாதிரியான சூழலில்தான் பல சிறந்த படங்களை இயக்கினார் மார்த்தா.
மார்த்தாவின் படங்கள் அவர் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களைப் பல வழிகளில் பேசின. ஏழ்மை, குழந்தைகள், பெண்கள் என பலரை முன்னிறுத்தி அந்த அனுபவங்கள் படைப்புகளாயின. சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்தது, ஆதரவற்ற வாழ்க்கை, புரட்சிக்குப் பின்பான ஹங்கேரி சூழ்நிலை எல்லாமே அவர் படங்களில் பதிவு செய்யப்பட்டன. கிழக்கு ஐரோப்பா மறந்துவிட்ட பல யதார்த்தங்களைப் படம் பிடித்தன. பெண்கள் நிலை, கிராமத்துக்கும் நகரத்துக்கும் நடுவே நிலவும் பண்பாட்டு பிரச்னை, மதுப் பிரச்னை, தலைமுறை இடைவெளி, முதலாளி-தொழிலாளி சிக்கல்கள், குழந்தைகள் நிலை என பல களங்களைக் கொண்டவை அவர் திரைப்படங்கள்.
‘டயரி ஃபார் மை மதர் அண்ட் ஃபாதர்’ (Diary for my Mother and Father) அவர் இயக்கத்தில் 1990ல் வெளியான திரைப்படம். ஒரு மாணவியின் பார்வையில் படம் விரிகிறது. அந்த மாணவி, கம்யூனிச சூழலில் வளர்ந்தவள். ஹங்கேரிக்கு வந்தால் அது வேறு விதமாக இருக்கிறது. மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வீட்டிலோ அவளுடைய சகோதரியே அவளை சேர்க்க மறுக்கிறாள். மாணவி, திருமணமான ஒருவனைக் காதலிக்க, அவனோ போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவுகிறான். கடைசியில் வேலைநிறுத்தத்தில் போராடும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறான்.
அரசு, அதற்கு எதிரான கிளர்ச்சி இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படம் மார்த்தாவின் உண்மை வாழ்க்கையின் அடையாளம் என்றே சொல்லலாம்.
மார்த்தாவின் குடும்ப வாழ்க்கை மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலையாகத்தான் இருந்தது. 1957ல் லாஸ்லோ கார்டா (Laszlo Karda) என்ற இயக்குநரை மணந்தார். இரண்டே வருடங்கள்… இருவரும் பிரிந்தார்கள். 1960ல் மிக்லோ ஜேன்ஸ்கோ (Miklo Jansco) என்ற இயக்குநரை மணந்தார். 1973ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு மிக்லோ ஜேன்ஸ்கோ ஜூனியர், நைக்கா ஜேன்ஸ்கோ (Nyika Jansco) என இரண்டு பிள்ளைகளும், காஸியா ஜேன்ஸ்கோ (Kasia Jansco) என்ற மகளும் பிறந்தார்கள். இரு பிள்ளைகளுமே ஒளிப்பதிவாளர்கள். மார்த்தாவின் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். மார்த்தா, போலந்து நடிகர் ஜேன் நோவிக்கியை (Jan Nowicki) மணந்தார். 2008ல் அந்த மணவாழ்க்கை முறிந்தது.
கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு தேசத்தில் முதல் பெண் இயக்குநர் என்கிற முத்திரை பதித்தவர் மார்த்தா. கடந்த 2012ம் ஆண்டு வரை அவர் இயக்கிய திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. இன்னமும் திரைப்படத்தின் மேல் தீராத காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சமூகத்தையும் மனிதர்களையும் அந்த அளவுக்கு நேசித்ததுதான் அவர் திரைப்படத்துறையில் ஈடுபடக் காரணம். ஒரு பேட்டியில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்… ‘‘எனக்கு வாழ்க்கையைப் பிடிக்கும். வாழ்வது பிடிக்கும். இன்றும் உணர்சிகரமான தருணங்களை அனுபவிக்கிறேன். ஒரு நல்ல மனுஷியாக நான் வாழ வேண்டும் என விரும்புகிறேன். பேசுவது, படிப்பது, சண்டை போடுவது எல்லாம் எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றையும் விட மனிதர்களை எனக்குப் பிடிக்கும்’’.
– பாலு சத்யா
Márta Mészáros | |
---|---|
Born | 19 September 1931 (age 81) Budapest, Hungary |
Occupation | Film director Screenwriter |
Years active | 1954 – present |