திரைவானின் நட்சத்திரங்கள் – 6

விஸ்வரூபம்!

Image

‘‘இன்று என்னை எப்படியும் கொன்றுவிடுவார்கள். இன்றைக்கு நான் வீடு திரும்பப் போவதில்லை. இப்படி நினைத்தபடிதான் ஒவ்வொரு நாளும் நான் வீட்டைவிட்டு வெளியே வருகிறேன’’ ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சாபா சாஹர் (Saba Sahar). ஆப்கானிஸ்தானின் முதல் பெண் திரைப்பட இயக்குநர்.

இது கலவரப்படுத்தும் விஷயம்தான். ஆனால் ஆச்சரியப்படும்படியான மற்றொரு செய்தியும் உண்டு. கதை எழுதி, இயக்கி, சொந்தமாகத் தயாரித்து, இவரே நடித்து வெளியான திரைப்படங்கள் எல்லாம் நம்ம ஊர் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ ரக படங்கள். போலீஸ் அதிகாரியாக அவரே நடித்திருப்பார். நீதிக்காகப் போராடும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் நேர்மையான கதாபாத்திரம். வில்லன்களாக வருபவர்கள் தலிபான்கள், போதை மருந்து கடத்துபவர்கள், ரௌடிகள். படங்களில் அவர்தான் சூப்பர் ஹீரோ. ஆப்கானிஸ்தானில் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையை அணிந்து குங்பூ சண்டை போடுவார். வில்லன்களிடம் இருந்து காப்பாற்ற அடிபட்டுக் கிடப்பவர்களைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவார். இரண்டு கைகளை விட்டுவிட்டு பைக்கில் பறப்பார்! சினிமா வேலை இல்லாத நாட்களில் காவல் நிலையத்துக்குப் போவார். ஆம்… அவர் உண்மையிலேயே ஒரு போலீஸ் அதிகாரி!

1975, ஆகஸ்ட் 28ம் தேதி காபூலில் பிறந்தார் சாஹர். 14 வயதில் காவல்துறையில் சேர்ந்தார். 1990ல் போலீஸ் அதிகாரியாகத் தகுதி பெற்றார். சினிமா சாகசம் அவருக்கு நிரம்பப் பிடிக்கும். அதனாலேயே ஆப்கன் அமைச்சகத்தில் இருந்த திரைப்பட மற்றும் நாடகத்துறை (Department of Cinema and Theater) அவரை ஈர்த்தது. அதில் சேர்ந்தார். காவல்துறை வேலையையும் விடவில்லை. அந்தப் பணியையும் செய்தபடியே காபூல் பல்கலைக்கழகத்தில் இருந்த ஃபிலிம் அகாடமியில் சேர்ந்து, சினிமாவை இயக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டார். இயக்குநரானார்.

இந்த வெற்றி சாதாரணமாக அவருக்குக் கைகூடிவிடவில்லை. ஆப்கன், தலிபான்களின் பிடியில் இருந்த நாடு. வீட்டில் இருப்பவர்கள் ஜன்னலைக்கூட மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். பெண்களை வெளியே பார்க்கவே முடியாது. நாட்டில் இருக்கும் மொத்தப் பெண்களில் 12 சதவிகிதம் பேர்தான் படிக்கத் தெரிந்தவர்கள். அவர்களிலும் வேலைக்குச் செல்பவர்கள் வெகு சில பெண்கள்தான். அப்படிப்பட்ட ஒரு தேசத்தில்தான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநராக, நடிகையாக, தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக வளர்ந்திருக்கிறார் சாஹர். ஆப்கானிஸ்தான் காவல்துறை தொடர்பாக ‘கமிஷனர் அமானுல்லா’ என்ற பெயரில் இவர் தயாரித்த 24 எபிசோட்களைக் கொண்ட தொடருக்கு மக்களிடம் அமோக வரவேற்பு!

Image

‘‘ஆண்கள் செய்யும் அத்தனை வேலையும் செய்யும் திறமை படைத்தவர்கள் ஆப்கானிஸ்தானிலிருக்கும் பெண்கள் என்பதை நான் வெளிக்கொண்டு வர விரும்புகிறேன். பழமைவாதத்தில் ஊறி, தங்கள் மகளையும் மனைவியையும் வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பவர்கள் என் படங்களைப் பார்க்க வேண்டும். பெண்களை வெளியே விட வேண்டும். அப்படி வெளியே வரும் பெண்கள் கல்வி பெற வேண்டும், சம்பாதித்து சுய காலில் நிற்க வேண்டும். ஆப்கானிஸ்தானை மறு சீரமைக்க அது உதவும்’’ வெகு அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் சாஹர்.

சாஹருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ இருவரும் சமமாகத்தான் ஒரு நாட்டில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

பாதுகாப்புக்கு காவல்துறையினரை வைத்துக் கொண்டுதான் பரபரப்பான திரைப்பட வேலைகளைச் செய்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நிம்மதியாக வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்குத் தொல்லைகள். பழமைவாதிகளால் தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளானார். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்பட்டமான கொலை மிரட்டல். ‘‘இந்தா பாரு… உனக்கு வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடு. நீ சீக்கிரமே சாகப் போறே…’’ இந்த மிரட்டலை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், மிரட்டல் தொடர்ந்தது. உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார். அவருடைய செல்போன் அழைப்புக்கு வந்த மிரட்டலை ட்ரேஸ் செய்தது காவல்துறை. கந்தஹாரில் இருந்து யாரோ போன் செய்திருப்பது தெரிய வந்தது. ஆனால், ஆள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரம் மிரட்டலும் நிற்கவில்லை. மாறாக, இன்னும் அழுத்தம் பெற்றது. சினிமாவில் நடப்பது போலவே காட்சிகள் தொடர்ந்தன.

‘‘போலீஸுக்கு ஏன் சொன்னே? அவங்கட்ட சொல்லிட்டா மட்டும் உன்னை சும்மா விட்டுடுவோமா? மொத்த அரசாங்கமும் உன் பின்னால நின்னாலும் உன்னைய விட மாட்டோம். தெருவுல, எல்லாருக்கும் நடுவுல வச்சு உன்னையக் கொல்றோம் பாரு…’’

அதற்குப் பிறகு தன்னுடைய கைத்துப்பாக்கியோடும்  காவல்துறையினரின் பாதுகாப்புடனும்தான் வெளியே வர ஆரம்பித்தார் சாஹர்.

Image

சினிமா மீது ஈர்ப்பு வர அவருக்கு அழுத்தமான காரணமும் இருந்தது. அவர் சிறுமியாக இருந்த காலத்தில் காபூலில் இருந்த திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. நல்ல நல்ல திரைப்படங்கள் வெளியாயின. ஒரு கதாயகியாக வேண்டும் என்கிற கனவோடுதான் அவர் வளர்ந்தார். எட்டு வயதில் வீட்டுக்கே தெரியாமல் ஒரு நாடகத்தில் நடித்தார். யாரோ போய் வீட்டில் சொல்ல, வீட்டிலிருந்தவர்கள் கொதித்துப் போனார்கள். வீடே திரண்டு வந்தது. சாஹரின் அப்பா ஒரு நிமிடம்தான் மகள் நடிப்பதைப் பார்த்தார். ‘நம்ம வீட்ல இப்படி ஒரு பொண்ணா?’ என்று பிரமித்துப் போனார். மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு, மகளின் திறமையை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.

***

சாஹர், தன்னுடைய முதல் திரைக்கதையை எழுதியது ரொம்ப சிக்கலான காலம். 1996ம் ஆண்டு. தலிபான்கள், கோலோச்சிய காலம். சினிமாவை ஒதுக்கி வைத்து… இல்லை… நாடுகடத்தியிருந்தார்கள் தலிபான்கள். அசையும் படங்கள் எல்லாம் மதத்துக்கு எதிரானவை. இசை, நடனம், சினிமா… மூச்! இவையெல்லாம் மகா பாவம்! இதைச் சொன்னதோடு நிற்காமல் செயலிலும் காட்டியது தலிபான் ராணுவம். ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான மாநில சினிமா கம்பெனி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. கையில் கிடைத்ததையெல்லாம் எரித்தார்கள், நாசமாக்கினார்கள். அந்தச் சூரையாடலில் பல அரிய பொக்கிஷங்கள் அழிந்து போயின. சாஹரின் நண்பர்கள் சிலரை தலிபான் போலீஸ் கைது செய்து கொண்டு போனது. காவல் நிலையத்தில் அடித்தே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் செய்த குற்றம், யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் சினிமா பார்த்தது. அரண்டு போனார் சாஹர். இனியும் இந்த தேசத்தில் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். குடும்பத்தோடு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். பிறகு, ஈரானில் சில காலம் தங்கியிருந்தார்.

எத்தனைக் காலம்தான் இப்படியே ஓட்டுவது? அமெரிக்காவிடம் அடைக்கலம் கோரினார். 2001ல் அவருக்கு அமெரிக்காவுக்குச் செல்ல விசாவும் கிடைத்தது. அதே நேரம் மற்றொரு மாற்றமும் அவர் சொந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டிருந்தது. தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவா, ஆப்கானிஸ்தானா? பிறந்த பூமிதான் அவருடைய முதல் விருப்பமாக இருந்தது. காபூலுக்குத் திரும்பினார். சொந்தமாக ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.  

ஆப்கானிஸ்தானின் திரைப்படத் தொழிற்சாலையை மறு கட்டமைப்பு செய்ய முடிவெடுத்தார். தைரியமான இயக்குநர்கள் சிலரை இணைத்துக் கொண்டார். களத்தில் இறங்கினார். ஆப்கானிஸ்தானில் வந்து இறங்கியிருந்த வெளிநாட்டுப் படைகள் திரைப்படம் எடுக்க முழு சுதந்திரம் அளிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தன. அந்த நம்பிக்கை அவருக்குப் போதுமானதாக இருந்தது.

அவருடைய முதல் திரைப்படம் ‘தி லா’. 2004ல் வெளியானது. அதைத் திரையிட திரைப்பட உரிமையாளர்கள் தயங்கினார்கள். ஒரு பெண் இயக்கிய திரைப்படம்… கலவரம் வந்தால் என்ன செய்வது என்று பயந்தார்கள். கடைசியாக ‘போலீஸ் பாதுகாப்புக் கிடைத்தால் திரையிடுகிறோம்’ என்றார்கள். அதற்கும் ஏற்பாடு செய்தார் சாஹா. நடந்தது வேறு. படம், திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அமைதி நிலவியது. அதுவரை திரையரங்குகளில் வெளிநாட்டுத் திரைப்படங்களை மட்டுமே பார்த்து வந்தவர்களுக்கு சொந்த மண்ணில் எடுக்கப்பட்ட படம் மிகவும் பிடித்துப் போனது. கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். ‘தி லா’ அபார வெற்றி, வசூலில் சாதனை படைத்தது. பஜார்களில் அந்தப் படத்தின் திருட்டு டி.வி.டி. விற்பனையும் சக்கைபோடு போட்டது.

***

Image

திரைப்படத்தில் சூப்பர் கதாநாயகி, நிஜத்தில் போலீஸ். இருந்தாலும் அவருக்குத் தொல்லைகளும், மிரட்டல்களும் குறையவில்லை. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டுவிதமான சூழல் நிலவுகிறது. சுதந்திரத்தின் மீது தீராத வேட்கை கொண்டை இளைய தலைமுறை… மறுபடியும் பழமைவாதத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு அதன் மேல் ஒய்யாரமாக அமர ஆசைப்படும் பழைய தலைமுறை. வீட்டுப் பெண்களை சவுக்கால் அடிப்பது, வெளியே நடனமாடினால் சிறையில் தள்ளுவது அல்லது கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணம். ஒரு திரைப்படத்தில் நடிக்க கதாநாயகி கிடைப்பதே கடினம். சாஹர் போன்றவர்கள் கிட்டத்தட்ட ஒரு போர்க்களத்தின் மீது நின்றுகொண்டுதான் ஆப்கானிஸ்தானில் திரைப்படம் எடுக்க வேண்டியிருக்கிறது.

2012ல் ஒரு தலிபான் தளபதியிடம் இருந்து சாஹருக்கு அழைப்பு! அது காபூலில் வெளியே தெரியாத ஓர் நிழல் இடம். முழுக்கப் பாதுகாப்பு செய்யப்பட்ட பகுதி. தளபதி மிக மெதுவான குரலில்தான் பேசினார். ஆனால் வார்த்தைகளில் கடுமை. ‘‘பொழுதுபோக்கு என்கிற பெயரில் திரைப்படம் எடுப்பது நமக்கு எதிரானது. நம் சட்டத்துக்கு எதிரானவை தடை செய்யப்பட வேண்டியவை’’.

தளபதி கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தார். சாஹரின் கண்களைக் கூர்ந்து பார்த்தார். தொடர்ந்தார். ‘‘இப்படிப்பட்ட படம் எடுப்பவர்கள் அதை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் அதற்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டியிருக்கும்’’. சாஹருக்கு அது என்ன தண்டனை என்று தெரியும். மரண தண்டனை!

***

திரைப்படத்துறையில் அழுத்தமாகக் கால் பதித்துவிட்டாலும் சொந்த வாழ்க்கை அவ்வளவு சுகமானதாக இல்லை சாஹருக்கு. மனஸ்தாபம் காரணமாக கணவர் பிரிந்து போய்விட்டார். ‘என் அம்மா, சகோதரிகள், சகோதரர்கள் மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருக்கிறார்களே தவிர, மற்ற உறவினர்கள் என்னை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். என் வீட்டுக்கு வரும் உறவினர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்’’. ஒரு பத்திரிகை பேட்டியில் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார் சாஹர்.

‘‘மறுபடியும் தலிபான்கள் இங்கே தலையெடுத்தால், என்னைப் போன்ற பெண்கள் சினிமாவில் நடிக்கவோ, சினிமாவை இயக்கவோ முடியாது. நானேகூட வேறு நாட்டுக்கு இடம் பெயர வேண்டியதுதான்’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

நிறைய படங்களை இயக்கி, நடித்திருந்தாலும் சாஹரின் படைப்புகளில் முக்கியமானவை  ‘கானூன்’ மற்றும் ‘காஸம்’ (‘Quanoon’ (The Law), ‘Quasam’ (The Oath) என்ற இரு படங்கள் முக்கியமானவை. காவல்துறையின் வல்லமையைப் பேசுபவை. 2011ல் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘Kabul Dream Factoryl’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அது சாஹரின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருந்தது.   

‘‘திரைப்படங்களை நான் விரும்புகிறேன். அதைவிட என் நாட்டை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். சண்டை போடுவதை விட, போதைப் பொருளை எடுத்துக் கொள்வதை விட, தீவிரவாதத்தைவிட ஆப்கானிஸ்தானில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இதை நான் மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என்னுடைய உரிமைகளைக் கேட்பதற்காக நான் இறந்து போனால் அது மற்ற பெண்களை பாதிக்க வேண்டும். பிறகு, அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும்’’ என்கிற தீராத கனவு அவருக்கு இருக்கிறது.

அடுத்து அவர் எடுக்கப் போகும் திரைப்படம் தலிபான்களைப் பற்றிய படம். சாஹர் உறுதியான குரலில் இப்படிச் சொல்லியிருக்கிறார்… ‘‘இந்தத் திரைப்படத்துக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசும், ஆஸ்கர் விருதும் கிடைக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை எடுத்த பிறகு நான் உயிரோடு இருப்பேனா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இறைவனின் அருளாசியுடன் நிச்சயம் இந்தப் படத்தை எடுப்பேன்’’.

– பாலு சத்யா 

Sahar Saba (* August 28 1975 in Kabul ) is an Afghan filmmaker and actress .

2011 Saba Sahar was on the ZDF documentary co-produced Kabul Dream Factory of Sebastian Heidinger portrayed in the section “Forum” of the 2011 Berlin International Film Festival premiered [2]

1 thought on “திரைவானின் நட்சத்திரங்கள் – 6

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s