திரைவானின் நட்சத்திரங்கள் – 8

Image

ஆசிட் வீச்சைத் தாங்குமா அழகிய முகம்?

பாகிஸ்தான். பரபரப்புக்குப் பஞ்சமில்லாத நாடு. ஆப்கானிஸ்தானோடு பிரச்னை, தீவிரவாதிகள் ஊடுருவல், வெடிவிபத்து, அரசியலில் தடாலடி மாற்றங்கள்… என்று எப்போதும் சர்ச்சைகளுடன் ஒவ்வொருநாள் பொழுதையும் தொடங்கும் பூமி. கடந்த ஆண்டு, இவை, எல்லாவற்றையும் இடது கையால் ஓரம் கட்டிவிட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார் ஷர்மீன் ஓபெய்ட் சினாய் (Sharmeen Obaid Chinoy).

காரணம், இவரும் டேனியல் ஜங் என்கிற அமெரிக்க இயக்குநரும் இணைந்து இயக்கியிருந்த ‘சேவிங் ஃபேஸ்’ (Saving Face) என்ற ஆவணப் படத்துக்கு, சிறந்த டாகுமென்டரிக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. அதோடு, பாகிஸ்தானிலிருந்து முதன்முதலாக ஆஸ்கர் விருது பெறுபவர் என்கிற பெருமையையும் தட்டிக்கொண்டு போயிருந்தார் இவர். இத்தனைக்கும் ஒரு வெடிவிபத்தில் ஏழு பேர் பலியாகி, முதலமைச்சர் மயிரிழையில் உயிர் பிழைத்த சம்பவமும் அன்றைக்கு நடந்திருந்தது. ஆனாலும், ஷர்மீன் ஓபெய்ட் சினாய் தலைப்புச் செய்திகளில்…

Image

ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்கள்தான் இந்த டாகுமென்டரியின் முக்கிய களம். ரக்‌ஷனா, ஜாகியா இருவரும் அப்படி ஒரு தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அந்தப் பெண்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது அந்த நிகழ்வு. அவர்களுக்கு சிகிச்சை தருவதற்காக லண்டனில் இருந்து பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரான டாக்டர். முகமது ஜாவத் என்பவர் வருகிறார். அவருடைய பயணத்தையும் அவரிடம் சிகிச்சை பெறும் பெண்களையும் சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளோடு நகர்கிறது படம்.

வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆசிட் வீச்சுக்கு ஆளாவது பாகிஸ்தானில் தொடர்கதையாகிப் போன ஒரு நிகழ்வு. அவர்களில் பலர் அற்பக் காரணங்களுக்காகவும், காரணமே இல்லாமலும்கூட அந்தக் கொடுமைக்கு ஆளானவர்கள். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான பிரச்னையை ஆவணப்படுத்தவேண்டும் என்று நினைத்ததற்காகவே ஓபெய்ட் சினாயை மனதாரப் பாராட்டலாம். பாகிஸ்தானில் இருந்துகொண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு மிகப் பெரிய சமூகப் பிரச்னையை ஆவணப்படமாக எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் அதுகூட அவருக்குப் பிரச்னை இல்லை. ஓபெய்ட் சினாய் வேறுவிதமான சிக்கல்களை அனுபவிக்கவேண்டி இருந்தது.

“படப்பிடிப்பின் போது, நானோ எங்கள் குழுவில் இருப்பவர்களோ உடல்ரீதியான எந்த அபாயத்தையும் எதிர்கொள்ளவில்லை. யாரும் எங்களுக்கு எதிராக உரத்த சத்தத்தைக்கூட எழுப்பவில்லை. ஆனால், இதுபோன்ற உச்சகட்ட வன்முறையைக்கூட சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்கிற மக்களின் மனநிலையை எதிர்கொள்வதுதான் சிரமமாக இருந்தது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் ஷூட்டிங்குக்குப் போன இடம் செராய்க்கி பெல்ட் (Seraiki Belt) என்கிற ஊர். பருத்தி விளையும் பூமி. பாகிஸ்தானிலேயே மிகக் குறைந்த படிப்பும், மிக அதிகமான அளவில் வறுமையும் தாண்டவமாடும் பகுதி. அந்த மக்களோடு பணியாற்றுவதுதான் சிரமமான காரியமாக இருந்தது. ‘பாகிஸ்தானி’ என்கிற முறையில், ஓர் ஆண், சகல உரிமைகளையும் அனுபவிக்கிறான். இஷ்டத்துக்கு வாழ்கிறான். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பெண்களின் பிரச்னையைப் புரிய வைப்பது கடினம்’’ என்று ஆஸ்கருக்கு நாமினேஷன் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டிருந்தார் அவர்.

****

Image

ஓபெய்ட் சினாய், 1978ம் ஆண்டு கராச்சியில் பிறந்தார். நன்றாக உருது பேசத் தெரிந்த, உருது மொழியிலேயே ஊறிய குடும்பம்.  பள்ளிப் படிப்பை கராச்சியில் முடித்த பிறகு, அமெரிக்காவில் உள்ள ஸ்மித் காலேஜில் சேர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். இன்டர்நேஷனல் பாலிஸி ஸ்டடீஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

அவர் இந்தத் துறையில் ஈடுபடுவதற்குக் காரணமே ஒரு சோகமான கதை! அப்போது பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தார் ஓபெய்ட் சினாய். பாகிஸ்தானில் வாழும் ஆப்கன் அகதிக் குழந்தைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. நேரில் போனார். பல குழந்தைகளைப் பார்த்தார். அவர்களுடைய கொடுமையான வாழ்க்கைக் கதைகளைக் கேட்டதும் நொந்துபோனார். ‘இதை வெறும் கட்டுரையோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆவணப்படமாக எடுத்தால் உலகம் முழுக்கக் கொண்டு போகலாமே!’ என்கிற எண்ணம் அப்போதுதான் அவருக்குத் தோன்றியது. கட்டுரை முயற்சியை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்தார்.

வந்தவர் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கவில்லை. ‘ஸ்மித் காலேஜு’க்கும், ‘நியூ யார்க்ஸ் டைம்ஸ் டெலிவிஷன் டிவிஷனு’க்கும் முதல் காரியமாக ஒரு அப்ளிகேஷன் போட்டார்.  தன்னுடைய ப்ராஜக்டுக்கு நிதி உதவி கோரினார். அவர் அனுப்பியிருந்த உருக்கமான கடிதத்தைப் பரிசீலித்த இரண்டு அமைப்புகளுமே அவருக்கு நிதி உதவி தருவதற்கு ஒப்புக்கொண்டன. அதோடு, அவர் ஆவணப்படம் எடுப்பதற்குத் தேவையான உபகரணங்களையும் பயிற்சியையும் கொடுத்தன. இப்படி ஆரம்பித்த அவருடைய பயணத்துக்குப் பலன் இல்லாமலும் போகவில்லை.

‘டெரர்ஸ் சில்ட்ரன்’ என்கிற பெயரில் அவர் எடுத்த ஆவணப்படம்  பரவலாகப் பேசப்பட்டது. ‘ஓவர்சீஸ் பிரஸ் கிளப் விருது’, ‘அமெரிக்கன் வுமன் அண்ட் ரேடியோ அண்ட் டெலிவிஷன் விருது’, ‘சவுத் ஏஷியன் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் விருது’ என்று மூன்று விருதுகளைப் பெற்றுவிட்டது அந்தப் படம். மொத்தம் 16 ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார் ஷர்மீன் ஓபெய்ட் சினாய். பல உலகப் படவிழாக்களில் அவர் படங்கள் பங்கேற்றன. விதவிதமான விருதுகளை வாங்கிக் குவித்தன. அவற்றில் ஒன்று ‘எம்மி’ விருது.

கிட்டத்தட்ட ஆஸ்கர் விருதுக்கு சமமாகக் கருதப்படும் எம்மி விருது, தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்படும் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படுவது. ‘பாகிஸ்தான்: சில்ட்ரன் ஆஃப் தலிபான்’ என்கிற டாகுமென்டரி படத்துக்காக ஓபெய்ட் சினாய்க்கு எம்மி விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் தலிபான் அமைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர்கள், அவர்களுடைய மனநிலை, வாழ்வாதாரமே ஆட்டம் காணும் சூழ்நிலை என எல்லாவற்றையும் அழகாக அந்தப் படத்தில் சித்தரித்திருந்தார் ஓபெய்ட் சினாய்.

Image

ஆஸ்கர் விருது பெற்ற பிறகும் கூட அடுத்த களப்பணி என்ன என்பதிலேயே அவருடைய எண்ணம் எல்லாம் இருந்தது. ஆஸ்கர் விருது பெற்றது குறித்து அவர் பத்திரிகையில் பேட்டி அளித்தபோது குறிப்பிட்டது, அவர் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. “இந்த விழாவில் நம்முடன் இருக்கும் டாக்டர் முகமது ஜாவத்திலிருந்து, பாகிஸ்தானில் என்னுடன் பணியாற்றிய அத்தனை கதாநாயகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இது போன்ற பெண்களுக்கு சிகிச்சை தருவதுதான் டாக்டர் முகமது ஜாவத்தின் முக்கியப் பணி. இந்தப் படத்தின் முக்கியமான அங்கமாக இருந்தவர்கள் ரக்ஸனாவும் ஜாகியாவும். அந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தப் படத்தில் பணியாற்றிய தைரியத்தையும் வேதனையையும் ஈடுபாட்டையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஒரு மாற்றத்துக்காகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் பெண்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்களுடைய கனவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். இந்த விருது உங்களுக்காக’’.

ஆஸ்கர் விருது கிடைத்த அன்று டிவிட்டரில் பதிவு எழுதிய ஓபெய்ட் சினாய் இப்படி எழுதினார்: “பாகிஸ்தானின் பிரதிநிதியாக பெருமைக்குரிய ஓர் உலக மேடையில் நான் ஏறியதற்காகப் பெருமைப்படுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. வெற்றி, தோல்வியைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நான் திரும்ப வருவேன்.”

உலகம் முழுக்க இருந்து ஓபெய்ட் சினாய்க்கு பாராட்டுகள் குவிந்தன. ஆஸ்கர் விருது பெற்ற பிறகு, பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், இணையதளங்களிலும் ‘சேவிங் ஃபேஸ்’ பற்றிய பேச்சுத்தான். பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர், ‘ஜாகித் சுல்ஃபிகார் அலி பூட்டோ இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’யில் ஃபேகல்டி உறுப்பினர், ‘தி சிட்டிஸன்ஸ் ஆர்ச்சிவ் ஆஃப் பாகிஸ்தான்’ அமைப்பின் தலைவர் போன்ற பல பதவிகளோடு மகுடமாக இந்த ஆஸ்கர் விருதும் அவருக்குச் சேர்ந்திருந்தது.

****

‘சேவிங் ஃபேஸ்’ ஷூட்டிங்கில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றும் ஓபெய்ட் சினாய்க்கு நடந்தது. அதில் முக்கிய பாத்திரங்களில் ஒருவராக நடித்த ரக்ஸனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரக்ஸனா தன் குழந்தைக்குப் பெயர் சூட்டினார். பெயர்: முகமது ஜாவத். பல பேர் ரக்ஸனாவிடம், “குழந்தையின் அப்பா பெயரையே வைத்திருக்கலாமே?” என்று கேட்டார்கள்.

அதற்கு ரக்ஸனா சொன்னார்: “என் பையன் வளரும்போது டாக்டர். ஜாவத் மட்டும்தான் அவனுக்கு ரோல் மாடலாக இருக்கவேண்டும். அவன் அப்பாவாக இருக்கக்கூடாது. ஏனென்றால், என் முகம் இப்படி ஆனதற்குக் காரணமே அவன் அப்பாதான்.”

****

Image

காய்த்த மரம் கல்லடி படும். இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஓபெய்ட் சினாய்க்கு மிகப் பொருத்தம். எந்தப் பெண்ணை முன்னிலைப்படுத்தி ஆவணப்படம் எடுத்தாரோ, அந்தப் பெண்ணே எதிராகக் கிளம்பினார். ரக்ஸனா வழக்குப் போட்டார். ‘‘இந்தப் படத்தில் நடித்தால் எனக்குப் பணமும், குடியிருக்கப் புது வீடும், என் முகத்தை மாற்றியமைக்க பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து தருவதாக உறுதி அளித்தார் ஓபெய்ட் சினாய்’’ என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். கோர்ட்டில் தன் கணவன் தன்னை விட்டுப் போய்விட்டதாகவும், தான் சார்ந்திருந்த மொத்த சமூகமே தன்னை ஒதுக்கிவிட்டதாகவும் முறையிட்டார். ஓபெய்ட் சினாய், தன் மீது சுமத்தப்பட்ட பழிகளை கடுமையாக ஆட்சேபித்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. ரக்ஸனாவை பின்னால் இருந்து இயக்குவது ஜாவத் என்கிற உண்மை. வெறுத்துப் போனார். மனதளவில் புழுக்கத்துக்கு ஆளானார். ஆனாலும் அவர் மீது சுமத்தப்பட்ட கறையைப் போக்க வழி பிறக்கவில்லை. ரக்ஸனாவும் ‘ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிர் பிழைத்தோர் அமைப்பு’ம் (The Acid Survivors Foundation) இணைந்து வழக்குப் போட்டன. ‘சேவிங் ஃபேஸ்’ படத்தை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது. அதனால் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்கள் திரும்பவும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. தலை வணங்கி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார் ஓபெய்ட் சினாய். அவரைப் பொறுத்தவரை இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு. போதும்!

ஆனால், அவர் பயணம் நிற்கவில்லை. சமூகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், சாமான்யர்கள் என்று தேடித்தேடி பல மறைக்கப்பட்ட பக்கங்களை ஆவணப்படுத்தினார். அவர் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரும் என்றுதான் தோன்றுகிறது.

– பாலு சத்யா

****

Obaid-Chinoy
Born 12 November 1978
KarachiPakistan
Residence KarachiPakistan
Nationality Pakistani
Occupation Documentary filmmaker
Known for Saving Face (2012)
Pakistan’s Taliban Generation/ Children of the Taliban (2009)
Afghanistan Unveiled/Lifting the Veil (2007)
Iraq: The Lost Generation (2008)
First Pakistani to win an Oscar.
Religion Islam
Website
Official website

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s