திரைவானின் நட்சத்திரங்கள் – 12

வாழ்ந்து பார்க்கலாம்…

Image

* நான் ஒரு அடங்காப்பிடாரி, அவ்வளவுதான். 

முன்பொரு காலத்தில் தமிழ் நடிகைகளுக்கு சில அடையாளங்கள் இருந்தன. ‘‘அய்யய்யோ… அந்தம்மா நடிச்ச படமா? ஒரே அழுவாச்சியா இருக்கும்பா. ஆள வுடு… நான் வர்ல’’ என்று பழைய வண்ணாரப்பேட்டை பக்கம்கூட சர்வ சாதாரணமாக சில நடிகைகளின் பெயர்களைச் சொல்லிப் பேசிக் கொள்வார்கள். அது திரையில்தானே தவிர, நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்த நடிகைகள் அவர்கள். உண்மையில், திரைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் தங்கள் வாழ்நாள் முழுக்க துயரத்தை மட்டுமே அனுபவித்த நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பேட்ரிஸியா நீல் (Patricia Neal). திரைக்குப் பின்னால் அவர் அனுபவித்த துயரம்… அம்மம்மா… வெற்று வார்த்தைகளில் விவரித்துவிடக் கூடிய காரியம் இல்லை அது! இத்தனைக்கும் அவர் ஒன்றும் சாதாரண மனுஷி கிடையாது. உலகம் முழுக்க எத்தனையோ நடிகைகள் தங்களுடைய லட்சியம் என்று கருதியிருக்கும் ஒரு விருதை அனாயசமாகப் பெற்றிருப்பவர். அது, ஆஸ்கர் விருது!

ஜனவரி 20, 1920. அமெரிக்காவிலுள்ள கென்டகி மாகாணத்தில் இருக்கும் பேக்கார்ட் என்கிற சின்னஞ்சிறு ஊரில் பிறந்தார் பேட்ரிஸியா நீல். அப்போது அவருக்கு பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர் ‘பேட்ஸி’. அப்பாவுக்கு நிலக்கரிச் சுரங்கமொன்றில் வேலை. அம்மா மருத்துவர். டென்னஸியில் இருக்கும் நாக்ஸ்வில்லியில் (Knoxville) வளர்ந்தார் பேட்ரிஸியா. கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் உள்ள குடும்பம். அது, கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். பேட்ரிஸியாவுக்கு பத்து வயது. குழந்தைகள், கிறிஸ்துமஸ் பரிசாக எது கேட்டாலும் கிடைக்கும். கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) கொண்டு வந்து கொடுத்துவிடுவார். இந்த நம்பிக்கை கிறிஸ்தவ குழந்தைகளுக்கு ஆழமாக உண்டு. பேட்ரிஸியாவுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பேட்ரிஸியா, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்… ‘‘ஐயா வணக்கம். இந்த வருடம் கிறிஸ்துமஸுக்கு எனக்கு கவர்ந்திழுக்கும் பொம்மைப் பொருட்களோ, வாயும் மனதும் நிறையும் அளவுக்கு சாக்லெட்டுகளோ, கேக்குகளோ வேண்டாம். நான் நாடகம் பயில வேண்டும். இது கிடைத்தால் போதும். இந்த வருடத்திய கிறிஸ்துமஸ் எனக்கு மகிழ்ச்சியாகக் கழியும்’’.

ஒரு சின்னஞ்சிறுமியின் எளிய கோரிக்கை. கிறிஸ்துமஸ் தாத்தா மனது வைத்தாரோ என்னவோ… நாடகத்தைப் படிக்கும் பிரிவில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. அது மட்டுமல்ல… அந்த வருடம் டென்னஸி மாகாண அளவில், பள்ளிகளுக்கு இடையே நடந்த நாடகம் வாசிப்பதற்கான பிரிவில் முதல் பரிசை வென்றார் பேட்ரிஸியா. நார்த் வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் இரண்டு வருடங்கள் நாடகப் பயிற்சி பெற்ற பிறகு, நியூ யார்க்குக்குப் போனார். பிரபல ‘பிராட்வே’ தயாரிப்பில் பயில முதல் வாய்ப்பு. ‘தி வாய்ஸ் ஆப்ஃ தி டர்ட்டில்’ என்கிற அந்த நாடகத்தில் அவர் நடித்தபோது அவருடைய பெயரும் மாறியது. என்ன காரணமோ, கம்பெனிக்காரர்கள் அவர் பெயரை ‘பேட்ஸி’ என்பதில் இருந்து ‘பேட்ரிஸியா’ என்று மாற்றினார்கள். அதற்கு அடுத்து அவர் நடித்தது ‘அனதர் பார்ட் ஆஃப் தி ஃபாரஸ்ட்’ என்ற நாடகத்தில். அதற்கு மிகச் சிறந்த நடிகைக்கான ‘டோனி’ விருது கிடைத்தது. மெல்ல மெல்ல ஒரு நடிகையாக அறியப்பட ஆரம்பித்தார்.

‘இந்தப் பெண் யார்? இவளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே!’ என்கிற எண்ணம் ஒரு நிறுவனத்துக்கு வந்தது. அது சாதாரண நிறுவனம் இல்லை. ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘வார்னர் பிரதர்ஸ்’. ஆளனுப்பினார்கள். அழைத்தார்கள். ஏழு வருடங்களுக்கு தங்கள் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார்கள். அட்வான்ஸ் கொடுத்தார்கள். பிறகு கொஞ்சம் பிசியாகிவிட்டார் பேட்ரிஸியா. வரிசையாகப் படங்கள். 1949ல் அவர் நடித்த ‘தி ஹேஸ்டி ஹார்ட்’ அதில் முக்கியமான ஒன்று. அதில் நடித்தவர் ரொனால்ட் ரீகன். பின்னாளில் அமெரிக்காவின் அதிபராகப் பதவி ஏற்றவர். அதே ஆண்டு, அதற்கு அடுத்து நடித்த படம்தான் அவர் வாழ்க்கையை மாற்றிப் போட்டது. ‘தி ஃபவுண்டெய்ன் ஹெட்’.

—-

Patricia Neal Hud

* கேரி கூப்பர் மிக வசீகரமான மனிதர்.

சிலருக்கு சில நேரங்களில் சிலரைப் பிடித்துப் போகும், அதுவும் பார்த்த கணத்தில். ஜென்ம ஜென்மாந்திரமாக ஒரு பந்தம் இருவருக்கும் இருந்தது போல ஓர் உணர்வை ஏற்படுத்திவிடும். அந்த உணர்வு, அந்தப் படத்தில் நடித்த கேரி கூப்பரை (Gary Cooper) பார்த்தபோது பேட்ரிஸியாவுக்கு ஏற்பட்டது. அப்போது அவருக்கு வயது 21. கூப்பருக்கு வயது 46. திருமணம் ஆகியிருந்தது. அவருக்காக எதையும் செய்ய சித்தமாக இருந்தார் பேட்ரிஸியா. நட்பு, காதலாக மாறியது. ஒருவருடம், இரண்டு வருடம் அல்ல… 3 வருடம் துரத்தித் துரத்திக் காதலித்தார்.

விதி, பேட்ரிஸியாவின் வாழ்க்கையில் முதன் முறையாக மூக்கை நுழைத்தது. ‘இதோ பார்… நான் இருக்கேன். நீ நினைச்சதெல்லாம் நடந்துட்டா, அப்புறம் நான் என்னத்துக்கு?’ கொக்கரித்துச் சிரித்தது விதி. பிஸியாக, ஒரு ஷூட்டிங்கில் இருந்தபோது கூப்பருக்கு ஒரு தந்தி வந்தது. அனுப்பியிருந்தவர் அவர் மனைவி வெரோனிகா. ‘என்ன செய்யப் போறீங்க? நான் வேணுமா, அவ வேணுமா? முடிவு உங்க கையில’. அவ்வளவுதான். கூப்பரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பேட்ரிஸியாவை அழைத்தார். விவரத்தைச் சொன்னார்.

‘ஏங்க… உங்களுக்குத் தெரியாதா? நான் உங்க கருவை சுமந்துகிட்டு இருக்கேன்’.

கூப்பர் ரொம்ப கூலாக சொன்னார்… ‘கலைச்சிடு’.

இது பேட்ரிஸியாவின் வாழ்க்கையில் விழுந்த முதல் அடி. சாதாரணப் பெண்கள் எழுந்து நிற்கவே முடியாத அடி. அதிலிருந்தும் மீண்டு எழ முயற்சித்தார். வாழ்க்கை அவரை பயமுறுத்திப் பார்த்தது. ‘ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்’ தயாரிப்பில் வெளியான ஒரு படத்தில் நடித்தார். ‘தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ என்ற படம். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் அவருக்குத் தடை போட முடியவில்லை. ஆனால், அவர் மேல் வேறொரு பிம்பம் சினிமா துறையில் அழுத்தமாக விழுந்தது. வார்னர் பிரதர்ஸின் ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே அவர் மற்றொரு கம்பெனியில் நடித்ததாலோ என்னவோ, அவருடைய சினிமா வாழ்க்கை தேங்கிப் போனது. கைவசம் படங்கள் எதுவும் இல்லை. ஆனால், வாழ்க்கை நீண்டு, பெருத்து ‘வா… வா!’ என்று சிரித்து அழைத்தது. நடிகை. சினிமாவாக இருந்தால் என்ன… நாடகமாக இருந்தால் என்ன…? நாடகத்தில் நடிக்கப் போனார் பேட்ரிஸியா. அப்போது நாடக உலகில் பிரபலமாக இருந்த ‘ஹெல்மேன்’ என்பவரின் படைப்பு. ‘தி சில்ட்ரன்ஸ் ஹவர்’ என்ற அந்த நாடகம் பரவலான வரவேற்பைப் பெற்றது. 1953ல் ரோல்ட் டால் (Roald Dahl) என்ற எழுத்தாளரைச் சந்தித்தார். பேசி, முடிவெடுக்கக் கூட அவகாசம் இல்லை என்பது போல இருவரின் திருமணமும் நடந்தது.

‘நான் விரும்பவே இல்லை என்றாலும்கூட அவரைத் திருமணம் செய்து கொண்டேன்’ என்று தன் சுயசரிதைக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார் பேட்ரிஸியா. 30 வருட இல்வாழ்க்கையில் அவர்களுக்கு 5 குழந்தைகள்.

—-

Image

* அடிக்கடி என் வாழ்க்கையிலும் கிரேக்கக் கதைகளில் வருவது போல துயரச் சம்பவங்கள். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை எனக்குள் இருக்கும் நடிகை ஏற்க மறுக்கிறாள்.

சினிமா, நாடகம் இரண்டிலும் மாறி மாறி நடித்தார் பேட்ரிஸியா. எதில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். 1961ல் அவர் நடித்த ‘பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃபானிஸ்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினார்கள். அதற்கடுத்து அவர் நடித்த படம் ‘ஹட்’. அவருக்கு இணையாக நடித்தவர் ஹாலிவுட்டின் அப்போதைய பிரபல ஹீரோ பால் நியூமேன். வசூலில் சக்கை போடு போட்ட அந்தப் படம் ‘சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை’ அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

இதற்கிடையில் 1960ல் அது நடந்தது. கணவர் டால் நான்கு வயது மகன் தியோவோடு ரோட்டில் நடந்து போனபோது ஒரு டாக்ஸி அவர்கள் மேல் மோதியது. அதில் குழந்தை தியோவுக்கு மூளை குழம்பிப் போனது. இது நடந்து இரண்டு வருடத்தில் மற்றொரு இடி பேட்ரிஸியாவுக்கு. மூத்த மகள் ஒலிவியா என்கிற அழகு மகள், அம்மை நோய் வந்து இறந்து போனாள். அப்போது அவளுக்கு 7 வயது.

இன்னல்கள் தொடர்ந்து வந்தாலும் அவரின் நடிப்பு வாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. துயரம் என்கிற பழிகாரனும் அவளை விடுவதாக இல்லை. பின் தொடர்ந்தது. 1965. கருவுற்றிருந்தார் பேட்ரிஸியா. அவருக்கு திடீரென்று பக்கவாத நோய். அப்போது பீவர்லி ஹில்ஸில் இருந்த வீட்டில் இருந்தார். மனைவியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் டால். டாக்டர்கள் 14 மணி நேரம் விடாமல் சிகிச்சை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 3 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். மீண்டு வந்தபோது பேச முடியவில்லை. வார்த்தைகள் குழறின. நடக்க முடியவில்லை. சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்கள் நிற்க முடியவில்லை. அந்த நோய் வந்ததாலேயே அவருக்கு வந்த சினிமா வாய்ப்புகள் நழுவிப் போயின. அவற்றில் ஒன்று, ‘தி கிராஜுவேட்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பு. இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலும் சுகப்பிரசவம். லூஸி என்கிற மகளைப் பெற்றெடுத்தார். ஆனால், பக்கவாதத்திலிருந்து மீண்டெழுவது அத்தனை சுலபமானதாக இல்லை.

வீட்டுக்கு வந்துவிட்டாலும் டால், பேட்ரிஸியாவைப் பாடாகப் படுத்தினார். ‘பேச்சு சிகிச்சை எடு!’, ‘உடற்பயிற்சி செய்!’, ‘நீ சுயமாக உன் காலில் நிற்கப் பழகு!’ என்றெல்லாம் சொல்லி பல பயிற்சிகளுக்குக் கட்டாயப்படுத்தினார். அதற்கு வேண்டியதையும் செய்தார். பயிற்சி… பயிற்சி… பயிற்சி… இடைவிடாத பயிற்சி.  படிப்படியாக, நடக்கவும் பேசவும் ஆரம்பித்தார் பேட்ரிஸியா.

Image

1967ல் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாலை விருந்தில் கலந்து கொண்டார். ‘ஒரு கட்டத்தில் நான் என் கணவர் ரோல்ட் டாலை திட்டித் தீர்த்தேன். எந்தப் பாடாவதி தண்ணீரில் இருந்து எழுந்து வந்தேனோ, அதிலேயே என்னை இவர் மூழ்கடிக்கப் பார்க்கிறாரே என்று வாயில் வந்ததையெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் திட்டி அழுதேன்’’ என்று அங்கே பேசியபோது குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபடியும் திரைப்படத்தில் பிரமாதமாகக் கோலோச்ச முடியவில்லை. என்றாலும் அவ்வப்போது வந்த வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். 1968ல் ‘தி சப்ஜெக்ட் வாஸ் ரோசஸ்’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பைப் பார்த்தவர்கள் அசந்து போனார்கள். ஆஸ்கர் விருதுக்கு அவர் பெயர் இரண்டாவது முறையாக நாமினேஷன் செய்யப்பட்டது. விருது கிடைக்கவில்லை என்றாலும், அந்தப் படத்தில் அவர் நடித்ததற்காக இன்றளவும் நினைவுகூரப்படுகிறார்.

மறுபடியும் சொந்த வாழ்க்கையில் பிரச்னை. 30 வருட மண வாழ்க்கையில் முறிவு. அது 1983ம் வருடம். கணவர் டாலுக்கு தன் சினேகிதி ஃபெலிசிட்டி க்ராஸ்லேண்டோடு நெருக்கம் என்று அறிந்தார். கலங்கினார். கதறி அழுதார். இப்படிக் கூட நடக்குமா என்று கடவுளைக் கேள்வி கேட்டார். கணவரைப் பிரிந்தார். அதே வருடம் டால், க்ராஸ்லேண்டை திருமணம் செய்து கொண்டார். மனம் சஞ்சலப்பட்டவராக கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினார் பேட்ரிஸியா.

வாழ்க்கை விரட்டுகிறதே… தொடர்ந்து சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்தார். எல்லாமே சின்னச் சின்ன ரோல்கள். சின்னதோ, பெரியதோ… எந்தப் பாத்திரமாக இருந்தாலும் முழுவீச்சோடு, முழுத் திறமையை வெளிப்படுத்தி நடித்தார். தன் செலவு போக கிடைக்கும் வருமானத்தில் சேமிக்க ஆரம்பித்தார். அதைக் கொண்டு ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பித்தார். அதற்குப் பெயர், ‘பேட்ரிஸியா நீல் ரீஹேபிலிட்டேஷன் சென்டர்’. அங்கே சிகிச்சை பெற்றவர்கள் இளைஞர்கள், குழந்தைகள். எல்லோருமே மூளையில் காயம்பட்டவர்கள், பாதிப்படைந்தவர்கள்… அவரைப் போலவே! தன்னைப் போலவே அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார் பேட்ரிஸியா. அதற்காக என்ன செய்யவும் சித்தமாக இருந்தார். அவர் ஆசைப்பட்டபடியே அவருடைய மறுவாழ்வு மையத்திலிருந்து மீண்டெழுந்து வந்தவர்கள் பலர்.

தனது 84வது வயதில், 2010, ஆகஸ்ட் 8ம் தேதி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவர் இறந்த போது சொன்ன கடைசி வாக்கியம்… ‘எனக்கு அற்புதமான வாழ்க்கை வாய்த்திருந்தது’.

– பாலு சத்யா

* பேட்ரிஸியா நீல் சொன்னவை.

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

Patricia Neal

Born Patsy Louise Neal
January 20, 1926
Packard, Kentucky, U.S.
Died August 8, 2010 (aged 84)[1]
Edgartown, Massachusetts, U.S.
Cause of death Lung Cancer
Resting place Abbey of Regina Laudis
Residence Edgartown, Massachusetts
Nationality American
Education Knoxville High School
Alma mater Northwestern University
Occupation Actress
Years active 1949–2009
Home town Knoxville, Tennessee
Spouse(s) Roald Dahl (1953–1983; divorced)
Partner(s) Gary Cooper
Children Olivia Twenty (1955–1962)
Chantal Tessa Sophia (b. 1957)
Theo Matthew (b. 1960)
Ophelia Magdalena (b. 1964)
Lucy Neal (b. 1965)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s