எம்.ஏ.சுசீலா
சிறுகதை, பெண்ணிய ஆய்வு எனும் இருதளங்களிலும் இயங்கி வரும் இவர் 1949ல் காரைக்குடியில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். அதே பாத்திமா கல்லூரியில் இடையே இரண்டாண்டு காலம் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் 1979ல் எழுதிய முதல் சிறுகதையே ‘கல்கி’ வார இதழில் முதல் பரிசைப் பெற்றுத் தந்தது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் இவருடைய 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய சில கதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ‘கண் திறந்திட வேண்டும்’ என்ற சிறுகதை இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளிவடிவம் பெற்றிருக்கிறது. சொற்பொழிவுகளில் ஈடுபாடு கொண்டவர். 150க்கும் மேற்பட்ட வானொலி சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகும் எழுத்தாளுமை இவருடையது. தாஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஊர்மிளை
இருள் பிரியாத புலர் காலைப் பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன்அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்று கொண்டிருந்தது. சீதையின் வரவைஎதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு லட்சுமணன்.
“அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்!இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை. நேற்றுப் பகல் முழுவதும் ஏதோ உளைச்சலோடும்வேலைப் பளுவோடுமே இருந்தார்…’’
‘‘அதனால் வலுக்கட்டாயமாக எழுப்பி விடைசொல்லிக் கொள்ள எனக்கும் மனம் வரவில்லை. அதனாலென்ன…அவர்தான் நேற்று மாலையேவிடை கொடுத்துவிட்டாரே…நாம் கிளம்பலாம் வா…” என்றபடி கலகலப்பான உற்சாகமானமனநிலையுடன் வெளிப்பட்டு வருகிறாள் சீதை.
அந்தப்புர அடைசலிலிருந்து விடுபட்டு வெளிக்காற்றின் சுவாசத்தை மீண்டும்நுகரவிருக்கும் பரிசுத்தமான ஆனந்தம் ஒன்று மட்டுமே அவளுக்குள் நிரம்பித்தளும்பிக் கொண்டிருக்கிறது. அவளோடு இயல்பாகப் பேச முடியாமல் தயங்கித்தடுமாறும் லட்சுமணன்,“பார்த்து ஏறுங்கள் அண்ணி” என்று மட்டுமே மெல்லிய குரலில் முனகுகிறான்.
மீண்டும் ஒரு சிறிய சலசலப்புக் கேட்கிறது. சற்றும் எதிர்பாராத ஒருதருணத்தில் ஊர்மிளையும் அங்கே வந்து சேர்கிறாள். சலனமே காட்டாத இயல்பானபாவனைகளுடன் ஏதோ ஏற்கனவே பேசி வைத்துக் கொண்டதைப் போல தேரில் ஏறி,சீதையின் அருகே அமர்கிறாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத லட்சுமணன், லேசாகத் துணுக்குற்றுப் போகிறான். ஆனாலும் கூட லேசான ஓர் ஆறுதலின் நிழல்அவனுள் படர்கிறது. சீதையின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டேதனியாகப் பயணம் செய்ததாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது அவனுக்கில்லை..!ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோஅவள்? நன்றி உணர்வோடு ஊர்மிளையை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது சீதை அவளோடுஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.
“அட…ஊர்மிளையா? பார்த்தாயா…உன்னையும் உடன் அழைத்துக்கொண்டு போகலாமென்றுஎனக்குத் தோன்றவே இல்லை! இந்த லட்சுமணனுக்கும் கூடத்தான் அதுதோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? அது இருக்கட்டும்… நீ இப்போதுவந்திருப்பது எனக்காகவோ…இல்லையென்றால் இனிமேலும் லட்சுமணனை விட்டுப்பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா? உண்மையைச் சொல்…”
குறும்புச் சிரிப்புடன் கேட்டபடி அவளது கரங்களைப் பற்றிக் கொண்ட சீதை குழந்தையைப் போல குதூகலிக்கிறாள்.
ஒப்புக்கு முறுவலித்தாலும் ஊர்மிளையின் புன்னகை உயிரற்ற வறட்சியுடன்இருப்பது, வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதைக்கு அப்போதுஉணர்வாகியிருக்கவில்லை.
“ஒரு தடவையாவது கங்கை நதி தீரத்தை…அதில் தவழும் அலையின் வீச்சுக்களைஆசைதீரப் பார்த்தபடி குளிரக் குளிர அதில் நீராட வேண்டும் ஊர்மிளை. ஆனால்,நம்மைப் போன்ற அரசகுலப் பெண்களுக்கெல்லாம் அது அத்தனை சுலபமாகசாத்தியமாகிவிடுமா என்ன? கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது.அவர்கள் பெற்ற அந்த வரம்..! ஊராரின் பார்வையில் அது ஒரு சாபமாகக் கூடஇருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது.அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரச கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும்.ராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும்இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்குவாய்த்திருக்குமா என்ன?”
வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த சீதைக்கு இந்தக் கட்டத்தில் தன்பேச்சில் ஏதோ ஓர் அபசுரம் தட்டுவது புலனாக, சற்றே இடைவெளி விடுகிறாள்.இலக்குவனுக்கும் ஊர்மிளைக்கும் கண்கள் வழி நடந்தேறும் கருத்துப் பரிமாற்றம்அவளைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.
“ஆனாலும் நீ ரொம்பத்தான் மோசம் லட்சுமணா! அண்ணன் மீது என்னதான் பாசம்என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது? அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெறவேண்டும் என்று கூட உனக்குத் தோன்றவில்லை இல்லையா? வன வாசத்தில்இதைப் பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம்?” என்று செல்லமாக அவனைக்கடிந்து கொண்டு விட்டு ஊர்மிளையின் பக்கம் திரும்புகிறாள்.
“பதினான்கு ஆண்டுகள் ஐயாயிரத்துக்கும் மேலாக நீண்ட பகல்களும்இரவுகளும்..! எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை..? அசோகவனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன..! ஆனால், அத்தனை நாளும் இவன்தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக்கொள்கிறார்களாம்..! பேசுபவர்களுக்கு என்ன? தங்களுக்கென்று வந்தால்தானே எந்தநோவின் வலியும் தெரியும்!”
“ஊர்…ஊர்…ஊர்… எப்போதும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் ஊரைப் பற்றியகவலை ஒன்றுதான். அதன் நாற்றமடிக்கும் வாயில் விழாமல் என்னைக்காத்துக்கொள்வதற்காகவே வெளி வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தேன் சீதா..! நல்லது கெட்டது என்று எதற்கும் எந்தக் காரணத்துக்காகவும் நான் வெளியே வரவேஇல்லை. அதற்குத்தான் இந்தப் பட்டம்…”
வறண்ட புன்னகையோடு விரக்தியான தொனியில் விடையளிக்கிறாள் ஊர்மிளை.
“சரி விடு ஊர்மிளை…அதற்காக நீ லட்சுமணனை வெறுத்துவிடாதே.அண்ணாவுக்குப் பணிவிடை செய்த நேரம் போக பாக்கியிருந்த நேரம் முழுக்க அவன்மனதுக்குள் நீயும், உன் நினைவுகளும் மட்டும்தான் நிறைந்து கிடந்தன.பர்ணசாலை வாசலில் வில்லைப் பிடித்துக் கொண்டு எங்களுக்காக அவன் காவலிருந்தஅந்த நெடிய இரவுகளில் அவன் கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர் உன்நினைவுகளின் ஈரத்தையும் சுமந்து கொண்டுதான் ஓடியிருக்கிறது. அப்போது அவன்தன்னை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அது சாத்தியமாகாதபடிஅவன் உதடுகள் உன் பெயரைத்தான் உச்சாடனம் செய்து கொண்டிருந்தன. இந்தஉண்மையை அவனோடு துணைக்கிருந்த குகன் என்னிடம் சொல்லியிருக்கிறான்.சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தபோது அவன் கொண்டிருந்த மூர்க்காவேசம் கூட உன்மீது அவன் வைத்திருந்த காதலின் வேகத்தால் விளைந்ததுதானே…”
அந்தப் பேச்சின் ஓட்டத்தை திசை மாற்ற முயல்கிறாள் ஊர்மிளை. “போதும்…போதும்…இப்போது வேறு ஏதாவது பேசலாம் சீதா. நாம் இருவருமாகச்சேர்ந்து அபூர்வமாக ஒன்றாக வந்திருக்கிறோம். நம் வழியில் தென்படும்காட்சிகளோடு பிணைந்திருக்கும் உன் அனுபவ முடிச்சுக்களை ஒவ்வொன்றாகஅவிழ்த்துச் சொல்லிக்கொண்டே வாயேன், கேட்கிறேன். அங்கே மாளிகையில் உனக்கோஎனக்கோ அதற்கான அவகாசமே கிடைத்ததில்லை.”
அந்த ஒரு வார்த்தைக்காகவே காத்துக்கொண்டிருந்த சீதை, “சஞ்சலமானசூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும்அனுபவங்களும் பின்னாளில்அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப்பார்த்தாயா ஊர்மிளா…” என்று தொடங்கி, சித்திரகூடம், தண்ட காரண்யம், அசோகவனம் என்று தன் நினைவுச் சேமிப்பின் பக்கங்களைப் பிரித்து மலர்த்தஆரம்பித்துவிடுகிறாள்.
ராவண வதம் முடிந்து, அயோத்தியில் மறுவாழ்க்கையைத் தொடங்கி அவள்கருவுற்ற நாள் தொட்டு அந்தப் பழைய பாதைகளுக்குள் ஒரு முறை பயணித்து வரவேண்டும் என்பதே அவளது கனவாக இருந்து வந்திருக்கிறது. முந்தைய சுமைகளும்மனக்குழப்பங்களும் நீங்கப் பெற்ற புதிய நிறைவுகளின் பெருமிதத்தோடு, அதேஇடங்களுக்குள் உலவி வர வேண்டுமென்ற தன் தாகத்தை அவ்வப்போது ராமனிடம் அவள்பகிர்ந்து கொண்டுமிருக்கிறாள். அவனும் உடன் வந்திருந்தால் இன்னும்கூடமகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அது முடியாமல் போனாலும் தனது நுட்பமானவிருப்பத்தைக் கூடச் சரியான தருணத்தில் நிறைவேற்றித் தந்திருக்கும் கணவனைஎண்ணி, அவள் உள்ளம் ஒரு கணம் கசிகிறது.
அந்தப் பேதை உள்ளம் போட்டு வைத்திருக்கும் கணக்கு லட்சுமணனின் உள்ளச்சுமையை இன்னும் கூட்டுகிறது. அதை இறக்கி வைக்கும் தவிப்புடனும்தாகத்துடனும் அவன் ஊர்மிளையை நிமிர்ந்து நோக்கியபோது அவள் கண்களின்வெறுமையான பார்வையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் மர்மமான ஏதோ ஒருபுதிரும் அவனுக்குள் கலவரத்தைக் கிளர்த்துகின்றன. சீதையின் பேச்சைஆர்வமுடன் கேட்பதுபோல அவள் காட்டிக் கொள்வதும் கூட ஒரு பாவனை போலவேஅவனுக்குப்படுகிறது.
நேற்றை இரவின் கணங்கள் அவனுக்குள் ஊர்ந்து நெளிகின்றன.
***
நினைவு மலரத் தொடங்கிய நாள் முதலாக அண்ணனின் சொல்லுக்கு அடுத்த சொல்இல்லாமல் வாழ்ந்து பழகி விட்டிருந்தாலும் அன்று…அந்தக் கணம்…ராமன் தந்தஅதிர்ச்சியைத் தாங்கும் வல்லமை இலக்குவனுக்கு இருந்திருக்கவில்லை.நீர்ப்பந்து போல முண்டியடித்துக்கொண்டு மேலெழும்பி வரும் எதிர் வார்த்தைகள்வலுக்கட்டாயமான மனோதிடத்துடன் பிடித்தழுத்தி உள்ளத்தின் பாதாளஆழங்களுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே ஒரு மௌனச் சிலை போல அண்ணனின் முன்புபாறையாய் இறுகி நின்று கொண்டிருக்கிறான் அவன்.
“இந்தக் காரியத்தை நான் என் உள் நெஞ்சின் ஒப்புதலோடு செய்துகொண்டிருப்பதாகத்தான் நீயும் கூட நினைக்கிறாயா தம்பி” தழுதழுத்துத்தள்ளாடும் ராமனின் சொற்களை அதற்குமேல் பொறுத்துக் கொள்ள ஆற்றாமல்வெடித்துச் சிதறுகிறான் லட்சுமணன்.
“மணிமகுடம் என்ற முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள், உள்நெஞ்சின் வழிகாட்டுதலோடு மட்டுமே எப்போதும் இயங்கிவிட முடிவதில்லைலட்சுமணா! ஆயிரம் திசைகளை நோக்கி நீளும் ஆயிரம் வழிகாட்டும் நெறிகள்அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாரத்தை அன்றே பரதன்ஏற்றுத் தொடர்ந்திருந்தால் என் உள்ளம் சொல்வதை மட்டுமே நான் கேட்கும்வாழ்வு எனக்கு வாய்த்திருக்கும்.”
மறுமொழியாக, அபிப்ராயமாக, ஆலோசனையாகச் சொல்ல நினைத்த ஒரு சிலவார்த்தைகளையும் அண்ணனின் கண்ணீர் கரைத்துவிட, ‘‘தங்களின் ஆணையை நாளைகட்டாயம் நிறைவேற்றி விடுகிறேன் அண்ணா…” என்று மட்டுமே சுருக்கமாகச் சொல்லிமுடித்துவிட்டுச் ‘சட்’டென்று வெளியேறித் தன் அந்தப்புரம் வந்துச்சேர்கிறான் லட்சுமணன்.
உணவு பரிமாறும் வேளையில் அவனது முகக் குறிப்பிலிருந்தே அவன் நெஞ்சின்நெருடலை இனம் கண்டுவிட்ட ஊர்மிளை அவன் தலையை ஆதரவாய்க் கோதியபடியே இவ்வாறுகேட்கிறாள், “இன்று உங்கள் அண்ணா…என்ன சுமையை உங்கள் தலையில் ஏற்றிவைத்திருக்கிறார்?”
இந்தக் கேள்வி லட்சுமணனை எரிச்சலூட்டி மெல்லிதான ஒரு கோபத்தையும்அவனுள் படரவிட்டபோதும் தன் உள்ளத்தை இத்தனை துல்லியமாக அவளால் படிக்கமுடிந்திருப்பது அவனுக்கு வியப்பூட்டுகிறது. அந்த வியப்பினூடே சிறுமகிழ்ச்சியும்கூட! திருமணமாகிச் சில நாட்களிலேயே அவளை விட்டுப் பிரிந்துபோய் அகழி போல் நீண்ட கால இடைவெளி அவர்களுக்கிடையே திரையிட்டிருந்தபோதும்தங்கள் மனங்கள் இன்னும் முற்றாக விலகி விட்டிருக்கவில்லை என்பது அவனுக்குலேசான ஆறுதலை அளிக்கிறது.
ஊராரின் ஒரு வார்த்தைக்காக உள்ளத்தின் தடையையும் மீறிக்கொண்டு அண்ணியைக்கானகத்தில் கொண்டுபோய் விட்டாக வேண்டிய கட்டாய நிர்பந்தத்தில் அண்ணனின்ராஜநீதி அவனுக்குப் போட்டு வைத்திருக்கும் கைவிலங்கு பற்றிக்கழிவிரக்கத்தோடு அவளிடம் விவரிக்கிறான் அவன்.
ஒரே கணம் அதிர்ந்து போகும் ஊர்மிளை, அடுத்த நொடியே சமநிலைக்கு மீண்டு விடுகிறாள்.
“அரச பதவி அளிக்கப்படுவதே முறையில்லாத வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிப்போடுவதற்கும் தவறான நீதிகள் அரங்கேறி விடாமல் தடுக்கவும்தான் என்பதை உங்கள்அண்ணா என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்..?”
“அண்ணாவை குற்றம் சொல்லாதே ஊர்மிளை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால்மட்டுமே என்னென்ன நெருக்கடிகள் எங்கிருந்தெல்லாம் எதிர்ப்படும் என்பதைப்பூரணமாகப் புரிந்துகொள்ள முடியும்.”
“போர்ப்பகை என்ற ஒன்று மட்டுமே புறப்பகையாகி விடுமா என்ன? அதை மட்டும்விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை..? என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின்மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத்துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன? சரி… அதெல்லாம்போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டுமுறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது?”
“இதைப் பற்றி இனிமேல் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை ஊர்மிளை. நாளைஅண்ணியிடம் இதை எப்படிச் சொல்வது? அதைத் தொடர்ந்து அவளுடைய வேதனையை எப்படிஎதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே இப்பொழுது என்னைத் தின்று கொண்டிருக்கிறது.”
“அப்படியானால் அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்…”
“வேறு வழி?”
“வெறுமே ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன். நாளை இதே போல வேறொருநெருக்குதல் நேரும்போது…சரயு நதியில் மூழ்கி உங்கள் உயிரை நீங்களேமாய்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் தமையனார் கட்டளையிட்டால்..?”
‘‘அதையும் கூட நான் நிறைவேற்றுவேன் ஊர்மிளை…” ஏதோ அவசர வேலையிருப்பது போலஅவன் கரங்களின் பிடியிலிருந்த தன் விரல்களை மெல்ல விடுவித்துக்கொண்டு உள்ளேநகர்ந்து போகிறாள் ஊர்மிளை.
***
தேர், சீதை இறங்க வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மலைஅடுக்குகளும்குன்றுகளும் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் பச்சை மரகதமாய்மினுங்கிக் கொண்டிருக்க, இடையிடையே கீற்று வேய்ந்த ஓலைக்குடில்கள்தென்படுகின்றன. துல்லியத் தெளிவுடன் சலசலக்கும் சிற்றோடை நீர்ப்பரப்புகள், தாமரை பூத்த தடாகங்கள், விட்டு விடுதலையாகிச் சிறகடிக்கும் புள்ளினங்களின்கலவையான ஒலி, எழும்பித் துள்ளும் பந்து போன்ற லாகவத்துடன் கால் தூக்கிஅநாயாச வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் மான்கள்…
“இந்த இடம் கண்ணுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் இங்கே இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா லட்சுமணா?”
சீதையின் கேள்வியில் அவளே அறியாதபடி தொக்கி நிற்கும் முரண்நகையின் விசித்திரம் லட்சுமணனை மேலும் வேதனைக்கு ஆளாக்க…“அப்படியே செய்யலாம் அண்ணி” என்று மட்டுமே விடையளிக்கிறான்.
ஓடை நீரைக் கால்களால் அளைந்தபடி ஊர்மிளையிடம் சலிக்காமல்பேசிக்கொண்டிருக்கும் சீதையிடம், காலப் பிரக்ஞையெல்லாம் எப்போதோ கழன்றுபோய்விட்டிருக்கிறது. பொழுதடையும் நேரம் நெருங்குவதை உணர்ந்த லட்சுமணன்அவர்களின் அருகே செல்கிறான்.
“அந்த மானைப் பார்த்தாயா தம்பி..? முன்பு வந்த பொன்மானைப் போலவேஇருக்கிறதல்லவா? பயந்து விடாதே, அதைத் தொடர்ந்து போகச் சொல்லி நான் ஒன்றும்உன்னை அனுப்பிவிட மாட்டேன்.”
“அதை வலுவில் சென்று பிடிக்க வேண்டிய தேவையே இல்லை அண்ணி. இங்கேஅருகிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றித்தான் இங்குள்ளமான்கள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும்.”
“என்ன…வால்மீகி மாமுனியா? ஊர்மிளை! நாம் போய் அவரைத் தரிசித்துவிட்டு வந்தாலென்ன?”
“தரிசிப்பதற்கென்று தனியாகப் போக வேண்டியதில்லை அண்ணி. இனிமேல் நீங்கள் தங்கப் போகும் இடமே அதுதான்…இது…அண்ணனின் விருப்பம்…”
எந்த உணர்வையும் இம்மியளவு கூடக் கலந்துவிடாமல் பசையற்ற இயந்திரத்தொனியில், உயிரின் சக்தி அனைத்தையும் ஒன்று கூட்டித் தயக்கத்தோடு இதைச்சொல்லி முடித்தபோது லட்சுமணனின் உயிரே உலர்ந்து போய்விட்டது.
நச்சுப் பாம்பின் கொடும் விஷப் பல்லொன்று உக்கிரமாய்த் தீண்டியதைப் போலவினாடிக்கும் குறைவான நேரம் துடித்துப் போகும் சீதை அடுத்த கணமேநிதானத்துடன் நிமிர்கிறாள்.
“இது…இப்படி…நிகழாமல் இருந்திருந்தால் மட்டுமே நான்ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர் முகத்தில் மண்டியிருந்த இருளுக்கான காரணம்இப்போது புரிகிறது! உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின்அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா லட்சுமணா?”
நடைப்பிணமாய் தளர்ந்து துவண்டபடி…முனிபுங்கவரின் குடிலுக்கு வழிகாட்டச் செல்கிறான் லட்சுமணன்.
குடிலின் வாயிலை அணுகும் நிமிடத்தில்…
“இனிமேல் உன் உதவி தேவைப்படாது. நீ விடை பெற்றுக் கொள்ளலாம்…” என்று உறுதியான தொனியுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொள்கிறாள் சீதை.
கழுவாய் தேடிக்கொள்ளவே வழியில்லாத பாவம் ஒன்றைச் செய்துவிட்டபரிதவிப்புடன் திரும்பியே பார்க்காமல் தேர் நின்ற திசையை நோக்கி விரையத்தொடங்கிய லட்சுமணனின் உள்ளத்தில் ஊர்மிளையின் நினைவு குறுக்கிட, அவளைஉடனழைத்துச் செல்வதற்காகக் திரும்புகிறான். அதற்குள் அவளே அவனை நோக்கிவருகிறாள்.
“நீங்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் சீதைக்குத் துணையாகஇங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவனது எந்தமறுமொழிக்கும் காத்துக் கொண்டிருக்காமல், சீதையின் கரத்தை இறுகப் பற்றியபடிவால்மீகியின் ஆசிரமத்துக்குள் நுழைகிறாள் ஊர்மிளை.
தேர்த்தட்டில் லட்சுமணனின் பயணம் தொடங்கியபோது செம்பிழம்பாய் இருந்தமாலைச் சூரியன், வானத்துக் கருமேகங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ளமுயன்று கொண்டிருந்தான்.
***
Image Courtesy:
http://imagination-chariot.blogspot.in/
http://solusipse.edublogs.org/
http://images.fineartamerica.com
காலத்தை வென்ற கதைகள் மற்றவை…