திருவண்ணாமலை கிரிவலம்
ஒரு தரிசன வழிகாட்டி
‘திருவாரூர்ல பிறந்தா முக்தி; காசியில இறந்தா முக்தி; திருவண்ணாமலையை நினைச்சாலே முக்தி’… இது பல காலமாக தமிழகத்தில் உலாவரும் ஒரு பழைய பழமொழி. அந்த அளவுக்கு கீர்த்தியும் மகிமையும் திருவண்ணாமலை திருத்தலத்துக்கு உண்டு. வெல்லத்தை நாடி வரும் எறும்புக் கூட்டம் போல இந்தப் புண்ணிய தலத்தை ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல… இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தப் புனிதத் தலத்துக்கு அன்றாடம் வருகை தரும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.
இந்த கையடக்க நூல், திருவண்ணாமலையின் பெருமையை எளிய முறையில் அறிமுகம் செய்கிறது. உதாரணமாக, ‘இப்படிப்பட்ட ஆன்மிகப் பொக்கிஷம் வேறெங்கும் இல்லை. அதற்குக் காரணம் திருவண்ணாமலையில் இருக்கும் மலை. இந்த மலையே சிவலிங்கம். இந்த மலைச்சாரலிலும், அதன் குகைகளிலும் இன்னும் பல்வேறு சித்தர்களும் ஞானிகளும் உலகறியாமல் தங்களை ஒளித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.’… இப்படி திருவண்ணாமலை பற்றிய பல முக்கிய, பெருமைக்குரிய உதாரணங்களை எளிமையாகத் தருகிறார்கள் இந்நூலை எழுதிய சொ.மணியன் மற்றும் நா.மோகன கிருஷ்ணன்.
இந்தக் கையடக்கப் புத்தகத்தில் அக்னி ஜோதியான சிவன் கல் மலையானது எப்படி, திருவண்ணாமலை கிரிவல முறைகள், மலையைச் சுற்றியுள்ள லிங்கங்கள், புண்ணிய ஸ்தலங்கள் அவற்றின் வரலாறு, திருவண்ணாமலையில் தங்கும் இடங்கள், கட்டணம், சுற்றியுள்ள முக்கிய இடங்கள் அத்தனையும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் திருவண்ணாமலை செல்ல விரும்புகிறவர்களுக்கு உற்ற வழிகாட்டி இந்தப் புத்தகம்.
நூல்: திருவண்ணாமலை கிரிவலம் – ஒரு தரிசன வழிகாட்டி
ஆசிரியர்கள்: சொ.மணியன் மற்றும் நா.மோகன கிருஷ்ணன்
விலை: ரூ.25/-
வெளியீடு: தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரைச் சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020.
தொலைபேசி: +91 73057 76099 / 044-2441 4441/ mail2ttp@gmail.com