கிர்திகா தரன்
நான்…
கிர்த்திகா, கீர்த்தி, அம்மா, அக்கா – ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பதவி, பட்டம். அந்தந்த வயதில் அவற்றை அனுபவித்தே இருக்கிறேன்… மனுஷியாக வாழ்வதே சவாலாக இருக்கும் காலத்தில் திரும்பி பார்க்கும் வாழ்க்கை திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம். காலம் ஒவ்வொரு பருவத்திலும் மனிதர்களை சேர்க்கிறது… விலக்குகிறது. அனைவரிடமும் முடிந்த வரை அன்பு பாராட்டி நதி போல ஓடிக்கொண்டு இருப்பதே சாதனை. தாய் என்பது மிகப்பெரிய பதவியும், பொறுப்பும். வாசிக்க, எதையும் கவனிக்க, கேள்விகள் கேட்க, பதில்கள் தேட கற்றுக் கொடுப்பது மட்டும் பெற்றோரின் பொறுப்பு என்று நம்புகிறேன். கல்வியை கற்றுக் கொடுப்பது நம் கடமையல்ல… அது திணிப்பாக மாற வாய்ப்பு உண்டு. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள தூண்ட வேண்டும். பிறகு அவர்களே கற்றுக் கொள்வார்கள். இன்றும் நான் ஐந்து வயது தோழமை கூட பேசிகொள்வது வரம்… ஐந்து நிமிட தோழமைகள் கூட மறக்காமல் இருப்பது வரமோ வரம்.
பள்ளி
பள்ளிப் பருவத்தில் ஒரு பட்டாம் பூச்சியாக என்னை இருக்க விட்டது மிகப் பெரிய விஷயம். இப்போதைய பள்ளிகளைப் போல சிறகை ஒடித்து அடைத்து ருசிக்காமல், சிறகை விரித்து பறக்க விட்ட காலம். மதிப்பெண்கள் பற்றிய கவலை தேர்வு நேரங்களில் மட்டும். உற்சாகம், சந்தோஷம், விளையாட்டு, பேச்சு, பேச்சு, பேச்சு நிரம்பிய காலம் அது. பெரிய பள்ளியில் ஆசிரியர்கள் அறிய இருப்பதே பெரிய விஷயம். அவர்களிடம் நெருக்கமும் இருந்தது. அந்த நெருக்கமே அவர்கள் போதிப்பதை நெருங்கி பார்க்க செய்தது. வீட்டில் படித்த நினைவே இல்லாமல் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அதற்கு ஆசிரியர்கள் காரணமாக இருதிருக்கின்றனர்.
ஊர்… கற்றதும் பெற்றதும்
20 வருடமாக வசிக்கும் இடம் என்று சொல்லி, தள்ளி வைக்க முடியாது பெங்களூரை… இதன் நீரை அதிகம் குடித்து, அதன் காற்றை சுவாசித்து, இந்த ஊர் என் மெய்யோடு கலந்து யுகமாகிவிட்டது. ஆரம்பத்தில் ‘என் மாநிலம் தமிழ்நாடு’ என்று சொன்னது போய் ‘கர்நாடக வாழ் தமிழர்’ என்று சொல்லும் அளவுக்குக் கலந்து விட்டது.
பல மொழிகள் , பல கலாசாரம், கல்வி முறைகள், உடை வகைகள், பரந்த சிந்தனை, மாடர்ன் மனசு, எதையும் சகித்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்குதான். தனியாக மொழி தெரியாமல் எங்கும் போய் சமாளிக்கும் தன்னம்பிக்கையையும் இது தந்தது.
உணவு
உடுப்பி கடுபு, மங்களூர் ஹோலிகே, வட கர்நாடக ஜோலா தோசை, கத்தரிக்காய் கொஜ்சு, பெங்களூரு போண்டா சூப், மதுர் வடை, ராகி உருண்டை – தொட்டுக்க பசார் கீரைக் குழம்பு, கர்நாடக ரசம், ரோட்டோர பானி பூரி, மசால் பூரிகள், எம்.டி.ஆர். ரவா இட்லி, வீணா ஸ்டோர் இட்லி-சட்னி… ஐயர் கஃபே வடை, காபி, CTR வெண்ணெய் தோசை… ஒன்றா இரண்டா உணவு வகைகள்? அனைத்தையும் ஒரு கை பார்ப்பதே நம் வேலை!
புத்தகம்
சுஜாதாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. சிறு வயதில் மகாபாரதம், ராமாயணம், தேவி பாகவதம் மற்றும் பத்திரிகைகள்… தவிர பாலகுமாரன், ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜெயமோகன், சுந்தர ராமசாமி, காஃப்கா, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜி.நாகராஜன், பஷீர்… அடுத்து பெருமாள் முருகனின் எழுத்துகள்… கொங்கு நாடு பற்றிய அறிமுகம் அவர் நாவல்கள் மூலமே. இன்னும், இன்னும் நிறைய எழுத்தாளர்கள்… தற்பொழுது வாசித்துக்கொண்டு இருப்பது அம்பை சிறுகதைகள். இதுதான் என்று இல்லை… நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்கப் பிடிக்கும்.
குடும்பம்
20 வருடங்களாக கூட்டுக் குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மாமியாருடன் இருக்கிறேன். அம்மா, அப்பாவோடு இருந்ததை விட அவரோடு அதிகம் இருக்கிறேன். குழந்தைகளுக்கு பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது வரம். பக்கத்திலாவது சித்தப்பா, அத்தை, பாட்டி, கசின் என்று யாரேனும் அருகிலாவது இருக்க வேண்டும். அப்போது குடும்பத்தின் ஆணி வேர் பலமாக குழந்தைகளின் மனதில் ஊன்றப்படும். எல்லார் அன்பும் நிறைக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். வாய்ப்பு இருக்கும் வேளையில் பெரியவர்களோடு குழந்தைகள் ஐக்கியமாக விட வேண்டும். நம் பிரச்னைகளை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும். கணவர் மருத்துவர்… இரு ஆண் குழந்தைகள்… ஆண்களால் அழகாக சூழப்பட்ட வாழ்க்கை.
பொழுதுபோக்கு
புத்தகம், இணையம், நண்பர்கள், பயணம்…
இயற்கை
பையன் ஒரு கேள்வி கேட்டான்… ‘வெளிநாட்டில் தண்ணீருக்கு அடியில் கண்ணாடிக் குழாயில் இருந்து கொண்டு மீன்கள், டால்பின்கள், சுறாக்கள் பார்க்க முடியுமே! ஏன் நம்ம ஊரில் அந்த வசதி இல்லை?’ ‘உன்னை கண்ணாடி வீட்டில் குடியிருக்க சொன்னால் இருக்க முடியுமா?’ என்று கேட்டேன். ‘ஹையோ. நான் பாத்ரூம் போகணும். அம்மாவை கட்டிக்கிட்டு தூங்கணும். முடியாது’ என்றான். ‘அதே போல்தான் மிருகங்களும். அதுவே நீருக்கு மேலே வரும். இல்லையென்றால் நீச்சல் கற்றுக்கொண்டு மூழ்கிப் போய் பார்க்கலாம்… நட்பாக அளாவலாம்… அதை விட்டுவிட்டு வேடிக்கை பொருளாக்கி பார்க்க கூடாது’ என்றேன். இயற்கையும் அப்படித்தான். காய்ந்து இலையும் சருகுமாக இருக்கும் காட்டுச் செடிகளை, மரங்களை அழித்து கொரியன் புல் வளர்ப்பது, பூச்செடிகள் போடுவது இயற்கை காட்சி அல்ல. இயற்கையாக இயற்கையை விடுவதே இயற்கை. அதைக் காப்பாற்றி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
தண்ணீர் சிக்கனம் – பிளாஸ்டிக் பயன்பாடு
இரண்டு மூன்று வருடங்களாக பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வாங்குவதை முடிந்தவரை தவிர்கறேன். முக்கியமாக தமிழ்நாட்டில் மிக அதிக பிளாஸ்டிக் பை உபயோகம் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. பிளாஸ்டிக்குகளை எல்லா இடங்களிலும் வீசி வருவது வருத்தம் தருகிறது. சமீபத்தில் ஒருநாள் பார்த்தேன். இங்கு ஒரு மூலையில் நான்கு, ஐந்து BBMP குப்பை லாரிகள் நின்று கொண்டு இருந்தன. ஈரக் குப்பைகள் தனியே உரத்துக்கு… பேப்பர் குப்பைகள் விலைக்கு என்று அனைத்தையும் அழகாகாகக் கழித்துவிட்டனர். டம்ப் செய்வது பெரும்பாலும் குறைக்கப்பட்டு இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு வந்தால் வாழும் இடம் சொர்க்கமாகும்.
பள்ளியில் ஒருநாள் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்தேன். ‘நீங்கள் குடிக்கும் தண்ணீரை வெளியே எடுங்கள்’ என்றேன். ‘அது எவ்வளவு ஃப்ரெஷ்?’ என்று கேட்டேன். அனைவரும் ‘இப்பதான்’ என்றார்கள். ‘எங்கம்மா பழைய தண்ணி வைக்க மாட்டாங்க’ என்றார்கள். ‘எங்கிருந்து வந்தது?’ என்றேன். ‘பைப்’, ‘டாங்க்’, ‘அக்வா கார்ட்’ என்று பதில்கள்… ‘பிறகு?’ என்றதற்கு ‘ஆறு’, ‘ஏரி’ ‘நிலத்தடி நீர்’… இன்னும் ரிவர்ஸில் போகச் சொன்னேன். ‘மழை’, ‘மேகம்’, ‘பனி’… இன்னும் பின்னே… ‘கடல்’, ‘ஆறு’, ‘ஏரி’, ’குளம், குட்டைகள்… பிறகு? சுற்றிச் சுற்றி வந்தது.
‘நாம் குடிக்கும் நீர் பல மில்லியன் காலங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. நம்மால் ஒரு சொட்டு கூட ஆய்வு கூடத்துக்கு வெளியே உருவாக்க முடியாது என்பதே உண்மை. நம் பாட்டிலில் இருக்கும் நீர் நம் கொள்ளு தாத்தாவின் உச்சாவாகக் கூட இருக்கலாம். ஆனால், அதில் விஷம் கலந்தால் நமக்குத்தான் திரும்பி வரும்’ என்றேன். ‘சுத்தப்படுத்த மிக அதிக செலவாகும். மரங்கள் ஓவர் டியூட்டி செய்ய வேண்டும். சிக்கனமாக இருப்பது நல்லது’ எனச் சொல்ல… மாணவர்கள் அழகாக ஏற்றுக்கொண்டனர். கதையால் சிக்கனம் சொல்லலாம்… அறிவுரை யாருக்கும் பிடிக்காது.
சமூக அக்கறை
எப்பொழுதும் உண்டு. இப்பொழுதும் இரு பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளிகளில் பாடம் எடுக்கிறேன். கல்வியின் மூலமே ஒரு சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டிய நிர்பந்தம். ஆனால், அந்த வாய்ப்பு சிலருக்கு இல்லாமல் போவது சமூக்க் கேடு. அனைவரும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாழ வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூகத்துக்கு சிறு பங்காவது செய்ய வேண்டும். பலர் அப்படிச் செய்வது நம்பிக்கையைத் தருகிறது.
மனிதர்கள்
அனைவரும் நல்லவர்கள். மிகக் குறைந்த விகித அளவே வேறு மாதிரி இருக்கிறார்கள். நாம் குறை, பகை இல்லாமல் அன்பாக இருந்தால் நம்மிடம் அன்பு செலுத்த மனிதர்களுக்குத் தடை ஏதும் இல்லை. நாம் நட்புரிமையுடன், ப்ரியத்துடன் நேசத்தை செலுத்தினால் உலகம் அழகாகும். நமக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் சக்தி மட்டுமே உண்டு.
பிறந்த ஊர்
கொல்லுமாங்குடி… கும்பகோணம் அருகில். இன்னமும் கிராமத்தின் வெள்ளந்தித்தனத்தை ஒளித்து வைத்து இருப்பது வரம். கிரிகெட், சீரியல் உள்ளே நுழையாத காலம்… அதனால் பளிங்கு, கிட்டிப்புல், கபடி, பாண்டி, ஊஞ்சல் என்று உற்சாகப் பறவையை கட்டிக்கொண்டு பறந்த காலம். கற்றுக்கொள்ள வாழ்கை எத்தனையோ வைத்திருக்கிறது. குழந்தைப் பருவம் மிக இனிமை… அதை எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுத் தந்தது ஊர்.
நேர நிர்வாகம்
அப்படியெல்லாம் எதுவுமில்லை. எத்தனை வேலை இருந்தாலும் அவ்வப்போது முடித்து விட வேண்டும். சும்மா இருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்க வேண்டும். நேரம் என்ன தேக்கி வைத்து இருக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு போக வேண்டும்.
சமையல்
சுவையா சமைக்க பிடிக்கும். ஆனால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் கிச்சனில் இருக்கப் பிடிக்காது. திறமையான பல பெண்கள் சமையல் அறையில் நேரத்தை வீணடிப்பதில் ஒப்புதல் இல்லை. எளிமையாக இந்த நேரத்தில் ஒரு நாளுக்கே சமைத்து விடலாம். அதை இன்னொருவரிடம் தொழில் ரீதியாக ஒப்படைத்தால் அவர் குடும்பத்துக்கும் வருமானம் கிடைக்குமே.
பிற கலை
சினிமா, டிராமா, எழுத்து, ஓவியம, புகைப்படம், நாட்டியம்… ஏன் பஜன் கூட ரசிக்கப் பிடிக்கும்.
வீடு-அலுவலகம் சமாளித்தல்
கற்றுக்கொண்டு இருக்கிறேன். எத்தனை ஒழித்தாலும் குப்பை சேருவதை தடுக்க முடியவில்லை. அதனால் அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு இப்படி இப்படியே வேலை செய்து முடிக்கிறேன்.
கடந்து வந்த பாதை
மிக அழகான பாதை… கிராமத்தில் பிறந்து, விவசாயத்தோடு வளர்ந்து, டவுனில் படித்து, நகரத்தில் வாழ்ந்து, உலகம் சுற்றும் குழந்தைகளை வளர்த்து… நல்ல குடும்பம், நட்புகளை வரமாக பெற்று… வேறென்ன வேண்டும்..
சினிமா
நல்ல சினிமாக்களை பார்ப்பது பிடிக்கும். மசாலாவும் பிடிக்கும், ஜேம்ஸ் கேமரூன், மணிரத்னம், மிஷ்கினும் பிடிக்கும். பிடித்த ஹீரோக்களில் அரவிந்த் சாமி முதல் ஜார்ஜ் க்ளூனி வரை ரசனை நீள்கிறது. தரமான உலக படங்களும் பிடிக்கும். தற்பொழுது தமிழ் படங்கள் உச்சத்தை நோக்கி பயணம் செய்வதாக தோன்றுகிறது. ‘ஜிகர்தண்டா’, ‘சதுரங்க வேட்டை’, ‘மெட்ராஸ்’ என்று இயக்குநர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். அந்தப் பக்கம் பார்த்தால் கலர்ஃபுல்லாக ’காவியத் தலைவன்’… மிக அழகாக அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமா நகர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
உடல் நலம் மன நலம்
இரண்டும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவை. ஒன்று நன்றாக இருந்தால் இன்னொன்றும் அப்படியே இருக்கும்.
எழுதியதில் பிடித்தவை
குட் டச்… பேட் டச்…’ பற்றி அதிகம் தெரியாத நேரத்தில் அதைப் பற்றி விளக்கமாக எழுதினேன். அது ஃபேஸ்புக்கில் நிறைய ஷேர் செய்யப்பட்டு வலம் வந்தது. அடுத்து அப்பா பற்றி எழுதியது… அனைத்துமே உணர்வு பூர்வமானவை.
இசை
மனதுக்கினிய எந்த ஒலியும் இசையே. அன்பின் ஹலோ, குழந்தையின் அழைப்பு, பையனின் ஸ்கைப் கால் – அனைத்துமே இசைதான். சிலரின் பேச்சுகள் கூட இசையாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.
பிடித்த ஆளுமைகள்
தமிழ் இணையத்தில் ஈரோடு கதிர், ரவி நாக், அமுத தமிழ் இன்னும் பலர். அன்பின் ஆளுமைகளும் அதிகம் உள்ளனர். வெளியில் படேல், அம்பேத்கர், காந்தி. அதைத் தவிர அனைத்து தன்னம்பிக்கை பெண்களும் பிடித்த ஆளுமைகள்.
பிடித்த பெண்கள்
அம்மா, அக்கா, தம்பி மனைவி… வீட்டுக்கு வெளியே கிரண் மசூம்தார்- தொழில் அதிபராக. ஜெயலலிதா, இந்திரா அவர்களின் தன்னம்பிக்கைகாக. மதர் தெரசா சேவைக்காக.
நகைச்சுவை… வாழ்க்கையில்!
ஒன்றா, இரண்டா… எத்தனையோ காமெடிகள். காமெடி திருவிழாவே நடக்கும் நம்மைச் சுற்றி
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்
கற்றது கொஞ்சம்… எழுத்து, தமிழ், மன உறுதி. பெற்றது அன்பு, நட்புகள், இது போன்ற வாய்ப்புகள். இழப்பதற்கு எதுவும் இல்லை.
அழகென்பது
தன்னம்பிக்கை.
வீடு
வீட்டை அலங்கரிக்க மிக ஆசை. பையன் கொஞ்சம் சுட்டி என்பதால் அவன் பொம்மைகளைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. சுவரில் இத்தனை நாள் அவன் கிறுக்கல்களே ஓவியம். ஒரு பூவைக் கூட ஓர் இடத்தில் வைத்தால் வீட்டை அழகாக்கும் சூத்திரம் மிகப் பிடிக்கும்.
வாழ்க்கை
நதி போல அணைத்து, கழுவி, வீழ்ந்து, எழுந்து, வேகம் கொண்டு, சுழித்து, பயன் பெற்று, பயன் அளித்து… ஓடிக்கொண்டே கலக்க வேண்டும். ரசனை நொடிகள்… அழகு நிமிடங்கள்… வாழ்தல் மிக இனிது.
மறுசுழற்சி
அதைவிட மினிமலிசம் நல்லது. தேவை இல்லாமல் சேர்ப்பது லக்கேஜ் சுமக்கும் அபாயம்.
எழுத்தும் வாசிப்பும்
அனைத்து எழுத்துகளும்… வடை சுற்றின பேப்பரைக்கூட விடுவதில்லை.
புகைப்படக்கலை
ஒரு கணத்தை ஓராயிரம் விழிகளுக்கு படைப்பது அத்தனை எளிதல்ல அந்தக் கணம். அதை மனதில் பிடிப்பதா, கேமராவில் பிடிப்பதா என்ற சண்டையில் கேமரா தோற்க நேரும். மனமும் கேமராவும் ஒன்று சேரும் கணத்தில் காட்சி கவிதையாகிறது.
படிக்க…
ஸ்டார் தோழி – 16
Image courtesy:
http://upload.wikimedia.org/wikipedia/commons