புவனா ஸ்ரீதர் – ஒரு தோழி பல முகம்
நான்
பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சியில். பொறியியலில் டிப்ளமோ, சைக்காலஜியில் டிகிரி. அப்பா குடும்பத்தில் முதல் பேத்தி, பெற்றோரின் தலைமகள், கணவரின் அன்பான மனைவி, என் மகள் மற்றும் மகனின் பொறுப்பான தாய், புகுந்த வீட்டின் கடைசி மருமகள்… இப்படி எல்லா நிலைகளிலும் நல்லவர்கள் என்னைச் சுற்றி இருப்பதே வரம்.
பள்ளி
ஐந்தாம் வகுப்பு வரை மேட்டூரிலும், பின்பு ஸ்ரீரங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். ‘படிப்பில் கெட்டி பள்ளியில் சுட்டி’ என்று பெயர் எடுத்ததால் கிளாஸ் லீடர் ஆகவும் பொறுப்பேற்ேறன். எந்த நெருக்கடியும் இல்லாத பட்டாம்பூச்சி வாழ்க்கையாக என் நட்புகளுடன் அமைந்தது என் பள்ளி வாழ்க்கை. இன்றும் என் பள்ளிக் கல்லூரி தோழமைகளுடன் நட்பு தொடர்கிறது.
குடும்பம்
கணவர் ஸ்ரீதர் வங்கியில் தலைமை மேலாளர். மகள் கல்லூரியில் நுழைகிறாள். மகன் 11ம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறான். என் குழந்தைகள் இருவரையும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் மனிதநேயத்துடனும் வளர்த்து வருகிறேன்.
ஊரும் பேரும்
திருமணத்துக்குப் பிறகு கணவரின் பணி இடமாற்றம் காரணமாக முதலில் மும்பை, பிறகு கள்ளக்குறிச்சியில் கூட்டுக்குடும்பம், பின் கோயம்புத்தூர், பாலக்காடு, கிருஷ்ணகிரி, இப்பொழுது செங்கல்பட்டில்… ஒவ்வோர் ஊரிலும் புதுப்புது வீடு, அனுபவம், மனிதர்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது.
பொழுதுபோக்கு
பலவகை ஓவியங்கள், Soft toys, க்வில்லிங் காதணிகள், செயற்கை ஆபரணம் செய்தல், மணப்பெண்களுக்காக டிசைனர் பிளவுஸ் செய்தல் ஆகிய கலைகளை கற்றுள்ளேன். ஃபேஸ்புக்கில் ‘ஸ்ரீவிஜா ஆரி டிசைனர்ஸ்’ பேஜ் நடத்தி வருகிறேன். ஆன்லைன் டிேரடிங்கும் செய்வதுண்டு.
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்
பள்ளி, கல்லூரி நட்புகள், மறந்தே போன குடும்ப உறவுகள் அனைவரையும் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் தொடர்பு நீடிக்கவும் ஃபேஸ்புக்கே காரணம். பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் இதில் நிறைய விஷயங்களை கற்றும் கொள்ளலாம்.
வீடு
ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமான வீட்டில் வசித்துள்ளோம். சொந்த வீட்டில் வசிக்க முடியவில்லையே என்ற எண்ணமே வராத அளவுக்கு ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. விதவிதமான மனிதர்கள், கலாசாரம், சமையல் என்று குழந்தைகளும் நானும் புதுப்புது அனுபவங்களைப் பெற்று வருகிறோம்.
மனிதர்கள்
அப்பா, அம்மா, நான், தங்கை என்று சிறிய குடும்பத்தில் பிறந்தேன். படிப்பு, நட்பு என்று பட்டாம்பூச்சியாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. திருமணத்துக்குப் பிறகுதான் மனிதர்களைப் புரிய ஆரம்பித்தது. பொறாமைக்காரர், நம்பிக்கை துரோகிகள், புறம் பேசுபவர்களைக் கண்டால் இன்றும் அலர்ஜிதான்… ஒதுங்கிவிடுகிறேன்.
புத்தகம்
பள்ளிக் காலத்திகல் இருந்தே ஒரு புத்தகமும் விடாமல் படிப்பேன். ‘அம்புலி மாமா’ முதல் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள் வரை ஆர்வமுண்டு. இறையன்பு, சுகிசிவம், வேதாத்ரி மகரிஷி போன்றவர்களின் ஆன்மிக நூல்களை விரும்பிப் படிப்பேன். சைக்காலஜி படித்ததால் டாக்டர் ஷாலினியின் மருத்துவக் கட்டுரைகள், வலைத்தளங்களும் வாசிப்பதுண்டு.
வாழ்க்கை
வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வதே மன நிம்மதியைத் தரும். எந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தைத் தரும். ஒவ்வொரு நிமிடமும் வரமே. மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்து ஒவ்வொரு நொடியையும் வாழ வேண்டும்.
பிடித்தப் பெண்கள்
நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே எனக்குப் பிடித்தவர்களே. குடும்பத்துக்காக படிப்பைத் துறந்த பெண்கள், கணவன் சரியில்லாமல் தைரியமாக குடும்பத்தைச் சுமக்கும் பெண்கள் என்று தன்னம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொரு பெண்ணுமே பிடித்த பெண்தான். என் அப்பா வெளிநாட்டில் வாழ்ந்தபோதும் தனியாளாக இரண்டு பெண்களை வளர்த்த என் அம்மாவே நான் வணங்கும் தலைமைப் பெண்.
இசை
காலை நடைப்பயிற்சியில் ஆரம்பித்து இரவு தூங்கும்வரை இசையுடனே வாழ்வது நிம்மதி தரும். இசை இன்றி அமையாது இவளுலகு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் ‘குறையொன்றும் இல்லை’ பாடலைக் கேட்டாலே மனம் அமைதி கொள்ளும்.
உடலும் மனமும்
அளவான உணவு, நடைப்பயிற்சி, நிறைய தண்ணீர், மனதை சந்தோஷ நிலையில் வைத்துக் கொண்டாலே போதும்… யோகா செலய்வதும் உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக்கும். வெறும் அரிசி உணவை மட்டும் உண்ணாமல் சிறுதானிய உணவுகளையும், நிறைய பழம் மற்றும் காய்களையும் உண்டு வந்தாலே உடல் எடை குறைந்து இளமையாகக் காட்சியளிக்கலாம்.
சமையல்
திருமணத்துக்குப் பிறகுதான் கற்றுக் கொண்டேன். கோயம்புத்தூரின் அரிசிம் பருப்பு சாதம், பச்சைப் பயறு கூட்டு, மும்பையின் பாவ் பாஜி, கிருஷ்ணகிரியின் சிறுகீரைத் தொக்கு என ஒவ்வோர் ஊரிலும் பலவித சமையலைக் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் மீன் குழம்பு, நண்டு கிரேவி என் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். கேழ்வரகு உருண்டையுடன் மீன் குழம்பு எனக்குப் பிடித்த உணவு.
இயற்கை
பள்ளி விடுமுறைக் காலத்தில் கிராமத்திலுள்ள தாத்தா வீட்டுக்குச் சென்று விடுவோம். தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, ரோஜாப்பூ தோட்டம், மல்லிகைத் தோட்டம், என்றுமே வற்றாத ஆறு என்று சித்தி, மாமா பசங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாட்டம்தான். கிராமத்தின் அத்தனை குறும்புகளும் விளையாட்டுகளும் கலந்த அழகிய நாட்கள் எங்கள் குழந்தைப் பருவம். கணவரும் குழந்தைகளும் விடுமுறையில் எங்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பலவகை மரக்கன்றுகள் நடுவது, உரமிடுவது என ஆர்வத்தோடு இறங்கி விடுவார்கள். என் அப்பாவுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஜீவாமிர்தம், அமிர்த கடைசல் என்று அவரே தயார் செய்து செடிகளுக்கும் மரங்களுக்கும் இடுவார். இயற்கையை ரசிக்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கும். விடுமுறையில் குடும்பத்துடன் மலைப்பிரதேசங்களுக்கும் சென்று வருவோம்.
மரம் வளர்த்தல், மரங்களை அழியாமல் காத்தல், பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் மண்வளத்தை காப்பாற்றுவது போன்றவற்றை நாமும், நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்தும் வாழ்வோம். இயற்கையையும் சுற்றுசூழலையும் காப்பதும் நம் கடமை என்று உணர்வோம்.
தண்ணீர்
பிறந்து வளர்ந்தது காவிரிக் கரையோரம் என்பதால் தண்ணீர் பிரச்னை என்றால் என்ன என்று கூட்த் தெரியாமல் வளர்ந்தேன். ஊர் மாறும் போதுதான் நீரின் அருமை புரிந்தது. தண்ணீர் கஷ்டம் இல்லாத வீடாக அமைய வேண்டும் என்று வேண்டுதலே வைக்கிறேன். தண்ணீரின் அவசியம், தண்ணீர் சிக்கனம் போன்றவற்றை இளைய தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டியது நம் கடமை. பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைத்தாலே ஆறு, ஏரி, குளம் போன்றவை மாசுபடாமல் காத்து, அவற்றில் மழைக்காலத்தில் தண்ணீரை சுத்தமாக சேமித்து வைக்கலாம். துணிப்பைகளை உபயோகிப்பதால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை விட்டொழிக்க முடியும். நாம் ஒவ்ெவாருவரும் செய்யும் இந்த முயற்சிகூட கணிசமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைக்கும். நம்மால் இயன்ற வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கலாம். மரங்களை நடலாம். மழை பெறலாம். நீரின்றி அமையாது உலகு.
புகைப்படக்கலை
சிறுவயதில் இருந்தே புகைப்பட கலையில் ஆர்வம் அதிகம். கோயில்கள், குளங்கள், மலைப்பிரதேசம், பூக்கள், சூரியன், பறவைகள், விலங்குகள் என்று நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தும் வருகிறேன்.
அழகென்பது
அழகென்பது தன்னம்பிக்கை, நேர்மை, மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டாலே அழகு தானே கூடிவிடும்.
நேர நிர்வாகம்…
சரியான திட்டமிடல் இருந்தாலே போதும்… நிச்சயமாக நிறைய நேரத்தை மிச்சபடுத்தலாம். ‘நான் ரொம்ப பிஸி… நேரமே இல்லை’ என்று புலம்பவே வேண்டாம். முதல் நாள் இரவில், தூங்கப் போவதற்கு முன்பே மறுநாள் வேலை என்னென்ன… எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாலே போதும்… மறுநாள் காலை முதல் டென்ஷன் இல்லாமல், நிதானமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்.
பிடித்த ஆளுமைகள்
இந்திரா காந்தி, மதர் தெரசா, டயானா. மூன்று தலைமுறைகளையும் தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் மனோரமா ஆச்சியும் எனக்குப் பிடித்த ஆளுமையே.
சினிமா
ரஜினி படத்தை மட்டும்தான் தியேட்டருக்குச் சென்று பார்ப்போம். இப்போது சூர்யா பசங்களின் சாய்ஸ். எல்லா நல்ல படங்களையும் தியேட்டருக்குச் சென்று பார்க்கிறோம். ஜோதிகா மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. அவர் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.
கடந்தது வந்த பாதை
புது அனுபவங்களையும் பக்குவத்தையும் படிப்பினையும் தந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய இருக்கிறது. கற்ற ஒவ்வொரு பாடத்தையும் படிக்கட்டுகளாக எண்ணி பயணம் செய்கிறேன்.
பிடித்தவை
இயற்கையை ரசிக்கவும் இசை கேட்கவும் பிடிக்கும். தொலைதூர பயணம்… அதில் மெலடி பாட்டுகள், தோழிகளுடன் மணிகணக்கில் அரட்டை மிகவும் பிடித்தவை.
வாழ்க்கை
நட்புகள், உறவுகள் மனநிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. வருவதை அப்படியே ஏற்று நதி போல ஓடிக்கொண்டே இருப்போம். இந்த நிமிடம் அழகு என்று ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்வோம். வாழ்க்கை வாழத்தானே!
***
Image courtesy:
http://raviyolimathi.blogspot.in/
rlalitha.files.wordpress.com
http://ennsamaiyal.blogspot.in
http://www.sparkenergy-blog.co.uk
http://media-1.web.britannica.com
படிக்க…