ப்ரியங்களுடன் ப்ரியா–24

தரையில் விளையாடிய காலம் மறந்து
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் …

game4

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய் 
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

Game2

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 

game9
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும் 
என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு…
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

Game1

வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றாற் போன்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம் இயந்திரம் போல…

இளைப்பாற சற்று அமரலாம் என்று நினைக்கும் போது துரத்தி வரும் வாழ்க்கையை வெல்ல மீண்டும் ஓட்டம் என வட்டமாகி போன பின்னர் மறந்து போன பால்ய விளையாட்டுகள் எல்லாமே கானல் நீர் ஆகி விட்டது…

பெண்ணுரிமை போற்றிய மகாகவி பாரதியை ரசிக்கும் நாமே

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரியை மறந்து போனோமா அல்லது கடந்து போனோமோ என்று தெரியவில்லை…

இப்போ இதை படிக்கிற எத்தனை பேர் நம்ம குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாட அனுப்புறோம் ??

இல்லை பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி சொல்லி குடுத்து இருக்கோம் ??

Game3

நம்ம  குழந்தைகளுக்கு நாகரிக உலகில் விளையாட கூட நேரமில்லீங்க… புழுதித் தெருக்களில், புரண்ட நாம்தான் இன்னைக்கு  குழந்தைகளை கான்கிரீட் ரோடுகளில் பாதம் பதியாமல் செருப்போடும், வாகனத்துடன் தான் நடத்துகிறோம்..

விலைமதிப்பிட முடியாத பண்பாட்டுப் பொக்கிசங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் கிராமத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடிய விளையாட்டுக்கள் கூட சமூக அக்கறை சார்ந்ததாக இருந்தது. உழைப்பவர்களின் செல்வத்தை ஏகாதிபத்தியத்தின் வலிய கரங்கள் கவர்ந்து கொள்ளும் காரியம் காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கேரளாவில் நான் பாட்டி வீட்டில் இருந்த போது  பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோட்டத்திற்கு   விளையாட சென்று விடுவேன் !

நிறைய  விளையாட்டுக்கள் விளையாடுவோம்
ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது , கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி , சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம்.

game11

இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் ..
ஓடிபிடிப்பது –  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை – வலிமை சேர்க்கும் , மணல் வீடு – சோறு பொங்குதல்  போன்றவை சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை உணர்த்தும், பல்லாங்குழி – சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் அவரது வீட்டில் செய்த உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில் விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும்.

நொண்டி,பச்சை குதிரை, மேடு பள்ளம், கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் என நாம் மறந்து போன, மறைந்து போன குழந்தைப் பருவ விளையாட்டுகள் ஏராளம்.

game5

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது. கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம் தன்னந்தனியாக. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு என சீர்படுத்தி, அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று வகைப்படுத்தி நம்மவர்கள் இதிலும் புத்திசாலித்தனத்தை ஆழமாக பதித்தவர்கள்.

கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி மகிழ்ந்தவர்கள் 1990 முன்னர் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டு நாளுக்கு நாள் மாற்றத்தை பரிசளித்து, நமது நினைவுகளை பேரழிவுக்குள்ளாக்குகிறது. மாற்றம் மட்டுமே மாறாதது என்ற போதிலும். இந்த அதிவேக மாற்றங்கள் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கின்றன…

game7

வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம்..

இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?

இப்படி எல்லாத்தையும் தொலைசிட்டு நம்ம பிள்ளைங்களுக்கு வேற எதை சேர்த்து வைக்க போறோம் ?

முதலில் பிள்ளைங்க மனநிலையை நாம்தான் மாற்றனும்.

விளையாட்டில் வியர்வை வெளியேறினால் உடம்புக்கு என்னன்னா நன்மைகள் என்று நாம்தான் சொல்லி குடுக்கணும்..

அவங்களை விளையாட அனுமதிக்கணும்.

game10

இவ்வாறான விளையாட்டுக்கள் இப்போது அழிய காரணம் புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், என ஒரு புறம் இருந்தாலும்  சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் குழந்தைகள் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவங்க  வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது.

இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டை ஆரம்பிப்போம்!

game8

தரையில் விளையாடிய காலம் மறந்து 
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்..

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய்
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

game6

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும்…

என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு 
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

  • ப்ரியா கங்காதரன்

IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–20

குளிர்

winter2..

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய 

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை, பெருமழை

எதுவும் குளிரை  மட்டும் 

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்…

குளிர் காலம்… உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரையும்,, நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியையும்   சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் காலம்… ஏழைகளும்  இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என பெருந்தன்மை காட்டும் இயற்கை.. பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது..குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்…

.

என் சிறு வயதில் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது.. அதிலும்  படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, சூடான காப்பியின் நறுமணத்துடன் கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்..காப்பியை குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.. யாராவது எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான்.. பாட்டி வீட்டில் விறகடுப்புதான்.. அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் வெளியில் வந்து பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவதை பார்க்க  வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்று  அக்கா,, அண்ணன் களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.

கடவுளின் தேசத்தில்  நானிருந்த வீட்டின் பின் புறத்தில் பலா மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்து இருக்கும், சுற்றிலும் செடிகள் இருந்தாலும்  அந்த  மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து கம்பிரமாய் இருக்கும் ,, குளிர் காலங்களில் பாட்டி பேச்சை கேட்க்காமல் ஆட்டம் போட்டு திட்டு வாங்கி பலா  மரத்தடியில்   உக்காந்து அதோட இலையை கன்னத்தில் வைத்து உரசும் போது சவரம் செய்யாத அப்பாவின் 5 நாள் தாடை  முடியின் சொரசொரப்பும் கத கதப்பும் எனக்கு கிடைக்கும் ..   அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப் போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும் ..

குளிர் அதிகமாக இருக்கும்  நாட்களில், வைக்கோல்போரை கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்து போட்டு . வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்ந்ததையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் குளிருக்கு  எவ்வளவு இதமாக இருக்கும் தெரியுமா..?

நம் ஊரில் எப்பொழுதும் வெயில் காலம் . மழைக் காலம், குளிர் காலம் என்று காலநிலை மாறி,மாறி வந்தாலும், பெரும்பாலான நாட்கள் வெய்யிலிலும், வியர்வையிலும் தான்.. குளிர்காலம்… மனதுக்கும் உடலுக்கும் குளிரூட்டக் கூடிய காலம் தான். இதோ குளிர்காலம் தொடங்கிவிட்டது…ஆனாலும்,பனிக்காலம் தொடங்கும் போதே நமது தலை முதல் கால் வரை ஒவ்வொருவிதமான தொல்லைகள் ஏற்படுகின்றது.கொஞ்சம் கவனமாக இருந்தால் எந்தவித பிரச்சனையும் இன்றி பனிக்காலத்தையும் ரசிக்கலாம்.

winter1

குளிர்காலத்தை சமாளிப்பது எப்படி :

குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு நிறைய ஊட்டச்சத்து நிரம்பியவையாக இருக்கவேண்டும்.

இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய நேரம் இது.. கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள். வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். பெரியவர்கள் மப்ளர் கட்டிக் கொள்ளலாம். தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று பிரட்சனை தரும். ஆகவே இப்படிச் செய்வது வரும்முன் காப்பது போலாகும்..

.

பனிக்கால பராமரிப்பு:-

இந்த குளிர்காலத்தில் சருமமும் தலைமுடியையும் வறண்டு போகச் செய்யும். பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்க கிரீம்கள் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பாக இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கபடும். கால்பாதங்கள் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து. 15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை அழுந்தத் துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாசிலைனுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தரும்.

உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணை பூசவும். வாசிலைன் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள

பிரத்தியேகக் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

பாதாம்

பாதாம் பருப்பு  பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.  இது சர்க்கரை நோய்க்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

தேன்

இந்த குளிர்காலங்களில்  தேனை சேர்த்து கொள்ளுவது நல்லது . இது ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

ஒமேகா 3

கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்

இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

இஞ்சி

அதிக மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

வேர்க்கடலை

குளிர்காலங்களில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உணவில் சேர்த்துக் கொள்லலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

winter4

குளிர் காலத்தில் நோய்களைத் தடுக்கும் முறைகள்

எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும்.

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.

வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை’ கட்டி வைக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது.

அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம்.

தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:- வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும்.

தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம்.

இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும்.

குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்..

winter5

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை , பெருமழை

எதுவும் குளிரை  மட்டும்

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்

– ப்ரியா கங்காதரன்

IMG_20151029_123940

ப்ரியங்களுடன் ப்ரியா–19

மழை போலவே வாழ்க்கையும்!

rain4

பல துளிகள் நிறைந்த

மழை போலவே வாழ்க்கையும்…

கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக
மாறிய மழையை போலவே …

யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..

இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும்   தருணம் போலவே..

நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே..

ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும்  தருணம் போலவே..

வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….

rain3

மழை பற்றிய நினைவுகள் சற்று சின்னதாக இருந்தாலும் மனதைவிட்டு
நீங்காதவை.. எப்போதும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது..

மழை விரும்பாதவரோ ரசிக்காதவரோ இருக்க முடியுமா?

ஒவ்வொருவருக்கும் மழை ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு வயதிலும், மழை ஒவ்வொரு பார்வையை விட்டுச் செல்கிறது.

ப்ரியா குட்டி  மழைல நனையாத .. சளிப்பிடிச்சுக்கும்னு எங்க ஆத்தா ( பாட்டி) சொன்னது தான் எனக்கு இன்றளவும் மழை பற்றிய சிறு வயது நினைவு… நாஞ்சின்னப் பொண்ணா இருந்தப்ப, ஆலங்கட்டி மழை பேஞ்சு எங்க வூட்டு ஓடெல்லாம் உடைஞ்சு போய்ருக்கு னு எங்க ஆத்தா சொன்னப்ப என் தலைல விழுந்தா என்ன ஆகும்..?னு யோசிச்சிருக்கேன்..

கடவுளின் தேசத்தில் தான் என்னோட பால்ய பள்ளி வாழ்க்கை தொடங்கியது .. விழித்திருக்கும் நேரம் முழுதும் மழையும் மழை சாரலும் மட்டுமே காணும் தேசம் என்பதால் இப்போ வரை என்னால மறக்க முடியாது என் பாட்டி எனக்கு முதல் முதலில் வாங்கி தந்த சின்ன குடை ..

இப்போதும் என் கைபையில் எப்போதுமே ஒரு சிறு குடை இருக்கும் ,, அதை விரிக்கும் போதெல்லாம் கேரளா மழை சாரல் நினைவில் விரிவதும் தவிர்க்க முடியாது.

rain1

பருவ மழையை விட வசந்தகாலத்தின் தொடக்கத்தில் பெய்யும் கோடை மழைக்கு  தனி விஷேசம் உண்டு. வெய்யிலின் தாக்கத்தை  குறைக்க பெய்யும் மழை அது.

கோடை காலத்தில் பொதுவாக மாலை அல்லது இரவில்தான் மழை, இடியும் மின்னலுமாய் வானத்தில் தனியாய் ஒரு ராஜாங்கம் அரங்கேறும்..

சில நேரங்களில் ஆலங்கட்டி மழை கூட பெய்யும்.. அதை பொறுக்கி பாட்டிலில் சேகரிப்பது கூட தனி சுவாரஸ்யம்தான்.  மழையில் நனைய வேண்டாம் காய்சல் வரும் என்பவர்கள் கூட  கூட கோடை மழையில் நனைய சம்மதம் சொல்லிவிடுவார்கள்.

rain2

மழை காலமென்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம்.. காளான், ரயில் பூச்சி, மற்றும் தும்பி, எங்க பாட்டியுடன் காளானைப் பிடுங்க,தோட்டத்தில் சுற்றி வருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.

காளான் எல்லாரு கண்ணுக்கும் தெரியாதுனு சொல்லுவாங்க எங்க ஆத்தா.. அதைப் பிடிங்கும் பொழுது வரும் மண் வாசனைக்கு எதுவும் ஈடாகாது.

எங்கள் தோட்டத்தில் மழைக்காலத்தில் தும்பிக்கும்,ரயில் பூச்சிக்கும் பஞ்சமே இருந்ததில்லை. தும்பியின் வாலைப் பிடித்து விளையாட பிடிக்கும்..

சிறு வயதில் பூச்சிகளுடன் விளையாடியது பதின்ம வயதை அடைந்தவுடன் சலித்துவிடுகிறது. ஆனால் தும்பியும் ரயில் பூச்சியும் அப்படியே தான் இருக்கின்றன. கொஞ்சம் வயதாக வயதாக மழை மீதிருந்த பயம் மறைந்து மழையில் நனைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
rain6

மனசு வளர வளர மழை மீதான காதல் அதிகம் ஆகிடுச்சு.

ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்தடோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

இந்த பாடல் வெளியான நாளில் இருந்து இப்போ வரைக்கும் மழை வரப்ப ஒரு குடை எடுத்து போயிட்டு ரேவதி ஆடியது போல

மழையில் ஆட மனசு துள்ளுவது எனக்கு மட்டுமல்ல .. இதை வாசிக்கும் எல்லோருக்குமே என்பது உண்மையே ..

எங்கள் ஊரில் மழை பெய்வதை விட மண் வாசனையும் மழைச் சாரலும் வரும் நாட்களே அதிகம். வருடத்தில் பாதி நாட்கள் மழை நாட்களே பாலக்காடு, பொள்ளாச்சி வரை பெய்யும் மழை அதீத காற்றினால் வலுவிழந்து ஈரக்காற்று மட்டுமே வரும்.. விசுவிசுவென வீசும் ஈரக்காற்றில் வாய்க்கால் மேட்டிலும் ஆற்றோரத்திலும் சுற்றி திரிந்த நாட்களை நினைத்தால் இன்றும் இதமாக இருக்கிறது…

ஆற்றில் குளிக்கும் பொழுது மழையில் நனைந்திருக்கிறீர்களா?

அது ஒரு அற்புதமான அனுபவம். ஆற்றின் நீரோட்டம் சூடாகக் கீழே செல்ல குளுகுளுவென மழை மேலிருந்து விழ என ஆறுகளிலும் வாய்க்கால்களில் மட்டுமே இது போன்ற அனுபவத்தைப் பெற முடியும். எத்தனை கோடிகளைச் செலவு செய்தாலும் செயற்கையாக இந்த அனுபவத்தைத் தர முடியாது. அது தான் இயற்கையின் வரம்.

கிராமங்களில் இது போன்ற நினைவுகளென்றால் கோவை போன்ற நகரங்களில் வேறு மாதிரியான நினைவுகள்..

மழைக்காலம் எனக்கு வேறு மாதிரி அனுபவங்களைத் தந்தது. காலையில் பள்ளிக்கு செல்லும் பொழுது, மழைக்காலத்தில் மழையின் இன்னொரு முகத்தைக் காண முடிந்தது.

சாலையெங்கும் தேங்கிக் கிடிக்கும் தண்ணிரும், ஈவு இரக்கமின்றி சேற்றை வாரி இரைக்கும் வாகனங்களும், கூடவே வந்துவிடும் கொசுக்களும் என மழையை ஒரு திகிலுடன் எதிர்நோக்குவோர் தான் அதிகம். மேட்டுப்பாங்கான இடங்கள் என்றால் கூட பரவாயில்லை தாழ்வான பகுதிகளென்றால் படகுகளிலும் முழங்கால் அளவு தண்ணீரிலும் செல்லும் நிலையில் உள்ளதை என்ன வென்று சொல்ல? இது போன்ற இடங்களில் வாழ்வோருக்கு மழைக்காலம் என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்திருக்கும்? எங்கே வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிடுமோ என்றும், சட்டையில் சேறடிக்காமல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கும் பொழுது எப்படி மழையை ரசிக்க முடியும்?

வள்ளுவர் முதல் மழையையும் மழைக்காலத்தையும் போற்றாதவர்களே இல்லையெனலாம். சிறு வயது முதலே மழையுடன் உறவாடிய எனக்கு கோவையில் கிடைத்த அனுபவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பல கோடி ஆண்டுகளாக மழையை ரசித்த நாம் மழையை ரசிக்க முடியாமல் போவது எதனால்?

யார் காரணம்?

நாம் தான் காரணம் என்றால் ஏற்றுக் கொள்ளவோமா?

நம் வீட்டு மாடியில் விழும் மழையை நம் வீட்டில் சேகரிக்கும் மனம் கூட நமக்கு இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமானது. வீட்டை உயர்த்திக் கட்டுவதும், மழை பெய்ய ஆரம்பித்த 10 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பதும் எப்போதும் மழை காலத்தில் நிகழ்வது தான் ..

ஒன்று மட்டும் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ..

மூன்றாம் உலக போர் என்று ஒன்று உருவானால் அது நிச்சயம் தண்ணிர்க்காக மட்டுமே என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கிறார்கள் …

நமக்கு கடவுள் தரும் தண்ணிரை சேமிக்காமல் வீணாகி விடுவது நாம் கடவுளுக்கு செய்யும் துரோகம் என்பதில் யாருக்காவது மாற்று கருத்து இருக்கா ?

ஆறு ..குளம் ,, ஏரி .. இப்படி எல்லா நீர்நிலை தேக்கமும் கான்கிரட் கட்டிடமா மாறி போனால் நம்மோட எதிர்காலம் .. நம்ம சந்ததிகள் எதிர்காலம் என்னவாகும் ??

சென்ற மாதம் காரைக்குடி செட்டிநாடு பகுதிக்கு சுற்றுலா  போனப்ப எங்க குடும்ப நண்பர்  மூலமா செட்டிநாடு நகரத்தார் வீடுகளை காண சென்றோம் ..

நாம எல்லோரும் அவங்க வீடுகளின் பிரமாண்டம் ,, கலைநயம் மட்டுமே பார்க்கிறோம் .. ஆனா அவங்க எவ்வளவு தொலைநோக்கு பார்வையோட ஒவ்வொரு விசயமும் பார்த்து பார்த்து கட்டி இருக்காங்க என்று நண்பர் விளக்கி சொல்லும் போது தான் புரிந்தது ..

பல ஆண்டுகளுக்கு முன்பே செட்டிநாடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கவென்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன.

இப்போ மழைநீர் சேகரிப்புக்கு சில வழிமுறைகளை காண்போம் ..

2 முக்கியமான முறைகளில் மழை நீரை சேமிக்கலாம்.. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்..

வழிந்தோடும் மழைநீரை சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவை இதில் அடங்கும் நிலத்தடிநீர் மட்டத்தை உயிர்த்துதல் என்பது புதிய முறையாகும்.

நிலத்தடி நீர்வளம் குறித்த சில உண்மைகள்..
ஒரு கிணறு என்பது தண்ணீரை சேமிக்கும் இடமல்ல. கிணறுகள், நிலத்தின் மேல் பகுதியை,  நிலங்களுக்கடியிலுள்ள நீருற்றுகளுடன் இணைக்கின்றன. நிலத்தடி நீர்வளத்தை பொறுத்து, மழைகாலங்களில், கிணறுகளில் நீர் மட்டம் உயரும் அல்லது தாழும்.

மழை பெய்வது நின்று விட்டால், கிணற்றுக்கு நிலத்தடியில் உள்ள நீரூற்றுகளிலிருந்து ஓரளவிற்கு நீர் கிடைக்கும்.

வற்றிவிட்ட ஆழ்குழாய் கிணறுகளை, நிலத்தடி நீர் ஊற பயன்படுத்தலாம். வற்றிவிட்ட கிணற்றின் மேல் பகுதியில், ஆழ்குழாய் வடிநீர் குளங்களை அமைத்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உண்டு.

மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படம், வீடியோ படங்கள்

மழைநீர் சேகரிப்பு  குறித்த குறும்படம், வீடியோ படங்கள் பார்க்க, http://in.youtube.com/profile_play_list?user=indiawaterportal என்ற இணையதளத்தை உபயோகியுங்கள்/பாருங்கள்.

மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்:-

நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன், மழைநீரும் உபயோகப்படும்

கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.

அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.

இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு..

மழை நீரை சேகரிப்போம்
மண்ணில் வாழும்
உயிரினம்
மரித்து போகாமலிருக்க

IMG-20151107-WA0018

ஒவ்வொரு மழைத்துளிக்குள்ளும்
ஓர் உயிர் ஒளிந்திருக்கிறது

அது
நீங்கள் நேசிக்கும்
உயிராகவும் இருக்கலாம்…

பல துளிகள் நிறைந்த
மழை போலவே வாழ்க்கையும் ..
கொண்டாடப்படுவதுமாக
சபிக்கபடுவதுமாக 
மாறிய மழையை போலவே …

யாருமில்லா பெருவெளியில்
ஒற்றை மழைத் துளி
ஒரே ஒரு பூவின்
இதழின் இடைவெளியில்
உட்புகுந்து வெளியேறும் தருணம் போலவே..

இருள் சூழ்ந்த இரவில்
மெல்லிய வெளிச்சக் கீற்றலின் மின்னல்
இருளை வெளியேற்றும்   தருணம் போலவே..

நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்யும் தருணம் போலவே.. 

ஒவ்வொரு முறையும் மழை
என் முகத்தில் விழுந்து எழுந்து
என் இதழை முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்லும்  தருணம் போலவே..

வாழ்க்கையும் பல துளிகள் நிறைந்த
மழை போலவே ….

-ப்ரியா கங்கா தரன்

ப்ரியங்களுடன் ப்ரியா – 10

புடவை… ரொம்ப பெரிய தலைப்பு …
அழகாக மடித்து கொடுத்தால்
அருமையாக படிக்கலாம்!
 

IMG_7101
பால் நிலவு
பருத்தியை நூலாக்கி …
விண்ணில்  
தறி செய்து…
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க …
நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!
Sundari Silk_Day 2 -09
புடவை ,நம்ம எல்லோருக்கும் ரொம்பபிடிச்ச விஷயம்… பிடிச்ச விஷயத்தை பிடிச்ச மாதிரி நாம எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறோம்?

அதனால சேலை பற்றி கொஞ்சம் பேசுவோமே…

கடலில் இருக்கும் மீனை கூட எண்ணிவிடலாம்… பெண்கள் நம் மனதில் இருக்கும் புடவை பற்றிய ஆசைகளை மட்டும் எண்ணி விடவே முடியாது!

ஆதிகால  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பதில் ஒரு வரி வருகிறது ..

*பாத்து இல் புடைவை உடை இன்னா*

பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.

அப்போவே பாருங்க… நம்ம முன்னோரே சொல்லி இருக்காங்க.. சரியான முறையில் இல்லாத புடவை உடுத்துவது துன்பம் என்று.

அப்போவே அப்படி என்றால் இப்போ நாம எப்படி இருக்கணும்?

நாம்  கட்டுகின்ற தைக்கப்படாத உடையான புடவை  பல்லாயிரம்   ஆண்டுகளுக்கு முன்பே  பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் ஏதும்  இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் புடவைகள்  இருந்திருக்கின்றன.

Sundari Silk_Day 2 -03

புடவைகளின் வகைகள்

பட்டு, கைத்தறி ,சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் ,டிசைனர் எம்ப்ராய்டரி,  டிசைனர் பார்ட்வேர் ,  டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா , ஹாஃப் ஆம்ப்,  ஹாஃப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், டெனிம்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைகின்றன ..

img_02_black copy

புடவைகள் தேர்வு செய்யும் முறை

பொதுவாக நாம் கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை  விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். அவர் ஒன்னு ஒண்ணா எடுக்க எடுக்க நம்ம மனசுல  வரும் பாருங்க ஒரு சுனாமி பேரலை… இதை எடுப்போமா அதை எடுப்போமா என்று!

அங்கேதான் நாம கவனமா இருக்கணும்…. வெறும் கண்ணைப் பறிக்கும் அழகில் மயங்காம, நாம குடுக்கும் பணத்திற்கு வொர்த் இருக்கா? இதை நாம கட்டிய பின்னாடி நல்லா இருக்குமா ? துணியின் தரம் என்ன? இதையெல்லாம் நிதானமா யோசிச்சு தான் தேர்வு செய்யணும்.

எங்கே ப்ரியா. அதையெல்லாம் பார்க்க முடியுது ?? சுத்தி 10 கண்ணாடி வச்சு சேலையை தோளில் வச்சு நம்மை வாங்க வச்சு விடுறாங்களே என்று மட்டும் சொல்லாதிங்க… நம்ம பணம் நாமதான் பொறுமையா தேர்வு செய்யணும்!

தரம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்..

அதைப் போலவே நம்ம உடல்வாகு, நிறம்பொருத்தும் தேர்வு செய்யணும்.

ஒரு  புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது… எனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் ..

‘இந்த நினைவு மாறாது, யார் என்ன சொன்னாலும் , இதற்காக  நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்!

img_01 copy
புடவை  கட்டும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை

பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

சில புடவைகளில்  உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.

புடைவையின்  ஒரு முனையில் முந்தானையும் மறுமுனையில் சில சேலைகளில்  தைப்பதற்கான ப்ளவுஸ் துணியும் இருக்கும். ப்ளவுஸ் தைப்பதற்கான துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும். கட்டுவதற்க்கும் கனமாக இருக்கும்..

புதுப் புடவை  கட்டுவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் தேய்த்து   கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய  உதவி செய்யும் ..

_DSC4555
சற்று உயரமானவர்களுக்கான புடவை  முறைகள்

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.

அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.

கொஞ்சம் பருமனானவர்களுக்கு  மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்..

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.

பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

உயரம் குறைவான தோழிளுக்கு  புடவை முறைகள்

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.

டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.

கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஊடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லைட் வயலட், வெளிர் நீலத்தில் பூக்கள் இதெல்லாம் ஓகே.

ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.

சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்த வேண்டாம். மேலும் குண்டாகக் காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்…

_DSC4454l

புடவைகளை எப்படி பாதுகாப்பது?

ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்…

விலை உயர்ந்த புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

விலை உயர்ந்த உடைகளை வைக்கும் வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது வார்ட்ரோபின் வாசனையை தரும். ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது. பர்ஃப்யூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெளளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம்.

உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில்  கறை உண்டாக்கும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.

நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும்.

புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்..

பால் நிலவு   
பருத்தியை நூலாக்கி…
விண்ணில்  
தறி செய்து ..
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க…

நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!

 

– ப்ரியா கங்காதரன்

v1படங்கள்: சுந்தரி சில்க்ஸ்

தினம் தினம் தந்தையர் தினம்

father

ஒவ்வொரு தந்தைக்குள்ளும்

ஒரு மகன்

ஒவ்வொரு மகனுக்குள்ளும்

ஒரு தந்தை

தந்தையல்ல மகன்

தந்தையினால் மகன்

அதே மண்தான்

தாவரம் வேறு

அதே கடல்தான்

அலை வேறு

அதே சூரியன்தான்

கிரணம் வேறு

அதே காற்றுதான்

மூச்சு வேறு

அதே ஆகாயம்தான்

அண்டம் வேறு

அணுவுக்குள் திணிந்த உயிர்ச்சங்கிலியை

உடல் மாற்றி

மூலவித்தின் முடிச்சவிழ்க்கும்

முன்மனிதன்

தாயின் கருப்பைக்கு உயிர்தானம் தந்து

தந்தையாகிறான்

தாயினும் சிறந்து.

  • நா.வே.அருள்

Image courtesy: http://ngm.nationalgeographic.com

நூல் அறிமுகம் – 9

இலைகள் பழுக்காத உலகம் 

Wrapper

ராமலக்ஷ்மி

ளைத்தளத்தில் பிரபலமான கவிஞர் ராமலக்ஷ்மி 1987ல் இருந்து தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வருபவர். ‘முத்துச்சரம்’ என்ற வலைப்பூவை உருவாக்கி, தொடர்ந்து பதிவுகள் இடுபவர். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளியானவை.

‘‘அன்பையும், பாசத்தையும், கவலைகளையும் வெளிப்படுத்துகிற எந்தக் கவிதையிலும் வலிந்து திணிக்கப்பட்ட பாசாங்கோ, வார்த்தைகளின் ஆர்ப்பாட்டமோ இல்லை. இயல்பாக, உண்மையின் மையப் புள்ளியிலிருந்து இதைப் பதிவு செய்கிறார். அதனால்தான் இந்தக் கவிதைகள் மென்மையையும் முரண்பாட்டையும் ஒருங்கிணைத்துச் செல்கின்றன.

கவிதையை உச்சநிலைக்கு எடுத்துச் செல்வதில் முதன்மையானது ரசனை சார்ந்த அனுபவம். ரசனைக்குக் கூர்மையான கவனிப்பு அவசியம். யாரும் நுழையாத கவிதைப் பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிற போது, வாசகன் காணும் உலகம் ஆச்சரியங்கள் விரியும் வண்ண உலகமாகிறது. ‘அரும்புகள்’ கவிதையில் ராமலக்ஷ்மியின் கவிதைப் பார்வை நேர்த்தியும் அழகும் மிக்கதாக இருக்கிறது. நாம் கவனிக்கத் தவறி விட்டோமே என்று வியக்கத் தோன்றுகிறது…’’ என்று இந்நூல் மதிப்புரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் க. அம்சப்ரியா. ராமலக்ஷ்மியின் ‘அரும்புகள்’ கவிதை மட்டுமல்ல… பல கவிதைகள் ரசனை சார்ந்த அனுபவத்துக்கு நம்மை உட்படுத்துபவை.

எளிமையான வரிகளில், மிரட்டாத சொல்லாட்சியில் மிளிர்கின்றன இத் தொகுப்பில் உள்ள கவிதைகள். உதாரணத்துக்கு சில கவிதைகள்…

அரும்புகள் 

moon

என்றைக்கு

எப்போது வருமென

எப்படியோ தெரிந்து

வைத்திருக்கின்றன

அத்தனைக் குஞ்சு மீன்களும்

அன்னையருக்குத் தெரியாமல்

நடுநிசியில் நழுவிக்

குளம் நடுவே குழுமிக் காத்திருக்க

தொட்டுப் பிடித்து விளையாட

மெல்ல மிதந்து

உள்ளே வருகிறது

பிள்ளைப் பிறை நிலா.

***

எல்லாம் புரிந்தவள் 

mother and daughter

மகளின் மழலைக்கு

மனைவியே அகராதி

அர்த்தங்கள் பல

முயன்று தோற்று

‘அப்பா அம்மாவாகவே முடியாதோ…’

திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்

அருகே வந்தணைத்து

ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு

அம்மாவாகி விடுகிறாள்

அன்பு மகள்.

***

கடன் அன்பை வளர்க்கும் 

coin

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை’

புதுக்கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இட்த்தில்

வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான்

முந்தைய கடன்களை

காலத்தே அடைத்த்தற்கான

நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன்வைத்தான்.

சிணுங்கியது அலைபேசி

‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’

அறிவித்தாள் அன்பு மகள்

முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க

சில்லறை இல்லாதபோது

தன்குட்டிப் பையைக் குலுக்கித் தேடி

எடுத்துத் தந்த இரு ஐந்து ரூபாய்

நாணயங்களை நினைவூட்டி.

***

நூல்: இலைகள் பழுக்காத உலகம்

ஆசிரியர்: ராமலக்ஷ்மி

வெளியீடு: அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் – 603 306.

தொலைபேசி: 9994541010.

விலை: ரூ.80/-

பிற நூல்கள்…

நூல் அறிமுகம் – 1 

நூல் அறிமுகம் – 2

நூல் அறிமுகம் – 3

நூல் அறிமுகம் – 4

நூல் அறிமுகம் – 5

நூல் அறிமுகம் – 6 

நூல் அறிமுகம் – 7

நூல் அறிமுகம் – 8

Image courtesy:  

ww.chinese.cn

http://api.ning.com/

http://www.circlevillegifts.com/

காதல்… காதல்… காதல்…

Snow-Love-Wallpaper

காதல் குளிர்

ஓர் எலியைப் போல

முதுகு மடங்கி உட்கார விருப்பம்

எனக்கும்

உன் உள்ளங்கைப் போர்வைக்குள்

இத்தனை பாந்தமாய்

‘மவுஸ்’.

1120

புள்ளி இல்லாத கோடுகள்

என்னால் உன்னை

வாசித்தறிய முடியவில்லை

புத்தகத்தின் பின்புறமுள்ள

கணிப்பொறி விலைக்கோடு

நீ.

Red_Rose_flowers

வழுக்கு ஏணி

ஒருமுறை

ஏணி எடுத்து வந்து

ஏறச் சொன்னாய்

மெல்ல மெல்ல

இறங்கிக் கொண்டிருந்தேன்

உன் இதயத்திற்குள்.

rose_buds-normal

காதல் பயணம்

ஒரு டிக்கெட்தான்

எடுத்துச் சென்றேன்

பாவம்

கடைசி வரையிலும்

நீ என் பக்கத்திலேயே

பயணம் செய்ததை

பார்க்கவேயில்லை

பரிசோதகரும் கண்டக்டரும்…

valentines-heart-in-water-free-hd-wallpaper-t2

காதல் வெடிகுண்டு

அவசரமாய் நீ திரும்புகையில்

குவிகிற அழகை

என் செல்போன் கேமராவில்

சேமித்திருக்கிறேன்

விம்மிப் புடைக்கும் அது

எப்போது வெடிக்குமோ?

rose 1

உரிமை ஆசிரியருக்கு

உன் செல்போனுக்கு அனுப்பிய

குறுஞ்செய்திகளையெல்லாம்

தொகுப்பாய் வெளியிட எனக்கு

விருப்பம்தான்

உன் பெற்றோர் பிரசுரிப்பார்களா?

3d-abstract_widewallpaper_red-rose_26213

பொய்யாய் பழங்கதையாய்…

சங்க காலத்தில்

நம் தாத்தா பாட்டிகள்

வெயிலில் மரநிழலில்

இரவில் நிலவடியில்

காதலித்தார்களாமே

நமக்கு

கணிப்பொறி சாட்டிங்

காதல் போதுமா?

water-lillies-x4dq

பிரளயம்

நீ

குளம் சென்று வந்த பிறகு

அலை அடங்கவேயில்லை.

– நா.வே.அருள்

heart_in_sand_1600x1200

Image courtesy:

http://www.afloralaffairpa.com

http://www.hdwallpapers.in

http://wondrouspics.com

http://stuffkit.com

http://www.wallpapersdb.org

http://www.hdwallpapersfree.eu

http://hdwallpaper.freehdw.com

http://www.gebs.net.au

திறந்து கிடந்த இரு ரகசிய அறைகளும் பூட்டிஇருந்த ஓர் இதய அறையும்

Bedroom-Doors

அவளுக்காக அவன் வைத்திருந்த இதய அறையில் வசிப்பதற்காக வந்தவள்தான்.

இருக்கட்டுமே என்று தாராள மனதுடன்
இன்னும் இரண்டு அறைகள் கொடுத்திருந்தான்
அவளுக்கே அவளுக்கானதாக ஒன்றும்…
அவளுடன் சேர்ந்து சந்தோஷம் கொள்ள மற்றொன்றும்…
பிரச்சினைகளைக் குறுக்கி ஒரு அளவீடாக
வைத்துக்கொண்டாலும்
ஒரு அறையில் வெங்காயம் உரிக்கும்போதும்
இன்னொரு அறையில் வேண்டாதபோது சீண்டும்போதும்
வருகிற கண்ணீரை வெளியுலகம் அறிவதில்லை.
இருந்தாலும்
இந்த இரண்டு அறைகளை விட்டு வெளியில் வர
அவளுக்கு நேரமே இல்லை
ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும்…
அவளுக்காக

அவன் வைத்திருந்த இதய அறையில்
கடைசிவரை
அவள் வசிக்கவே இல்லை.
– நா.வே.அருள்
vegetablesbedroom
                            –நா.வே.அருள்

மழை இலவசம்

rain

இன்று கடைத்தெரு பக்கம் போகிறபோது

மழை விற்றுக் கொண்டிருந்தது தெரு…

வாங்க மனசில்லாத பலர்

குடை கொண்டு போனார்கள்!

தெருவின் இருபுறத்திலும்

ஈரச் சாக்கின்மேல்

பரப்பி வைத்துக்

குளித்த காய்கறிகள் மேல்

குடை பிடித்துக்கொண்டிருந்தார்கள்;

விற்றுத்தீருமா எனும்

விசனம்  முகங்களில்…

பத்து ரூபாய் கொடுத்துக்

கொத்துமல்லி வாங்கிய எனக்கு

கை நிறைய கறிவேப்பிலை தந்தார்

வயதான மூதாட்டி.

வாங்கி திரும்புகையில்

என்னை

இருத்தி நிறுத்தியது இன்னொரு குரல்…

“ரெண்டு ரூபாய்க்கு கொத்துமல்லி கறிவேப்பிலை

குடும்மா… கறிக் கொழம்பு வைக்கணும்…”

“ரெண்டு ரூபாய்க்கு வராதும்மா…”

சட்டென்று முகம் சுருங்கித் திரும்பிய பெண்மணியின்

கெஞ்சிய குரல்

நாறும் குப்பையாய் நடுத்தெருவில் கிடக்க

சோ வென்று பெய்ய ஆரம்பித்தது மழை!

இலவசமாக விற்கிற இயற்கைக்கு முன்

மனிதர்கள்

தோற்றுத்தான் போகிறார்கள்!

நா.வே.அருள்

kothumalli

Image courtesy:

http://samaiyalattakaasam.blogspot.in/

பழைய பாடல்… புதிய வரிகள்!

’மணமகள்’ திரைப்படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி ‘நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி…’ என்றொரு பாடலைப் பாடி இருப்பார். அந்தப் பாடலை குங்குமம் தோழி வாசகி வி.ஜெ.விஜயலக்‌ஷ்மி இப்படி மாற்றி எழுதியிருக்கிறார்…

padal081