ப்ரியங்களுடன் ப்ரியா – 10

புடவை… ரொம்ப பெரிய தலைப்பு …
அழகாக மடித்து கொடுத்தால்
அருமையாக படிக்கலாம்!
 

IMG_7101
பால் நிலவு
பருத்தியை நூலாக்கி …
விண்ணில்  
தறி செய்து…
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க …
நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!
Sundari Silk_Day 2 -09
புடவை ,நம்ம எல்லோருக்கும் ரொம்பபிடிச்ச விஷயம்… பிடிச்ச விஷயத்தை பிடிச்ச மாதிரி நாம எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறோம்?

அதனால சேலை பற்றி கொஞ்சம் பேசுவோமே…

கடலில் இருக்கும் மீனை கூட எண்ணிவிடலாம்… பெண்கள் நம் மனதில் இருக்கும் புடவை பற்றிய ஆசைகளை மட்டும் எண்ணி விடவே முடியாது!

ஆதிகால  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பதில் ஒரு வரி வருகிறது ..

*பாத்து இல் புடைவை உடை இன்னா*

பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.

அப்போவே பாருங்க… நம்ம முன்னோரே சொல்லி இருக்காங்க.. சரியான முறையில் இல்லாத புடவை உடுத்துவது துன்பம் என்று.

அப்போவே அப்படி என்றால் இப்போ நாம எப்படி இருக்கணும்?

நாம்  கட்டுகின்ற தைக்கப்படாத உடையான புடவை  பல்லாயிரம்   ஆண்டுகளுக்கு முன்பே  பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் ஏதும்  இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் புடவைகள்  இருந்திருக்கின்றன.

Sundari Silk_Day 2 -03

புடவைகளின் வகைகள்

பட்டு, கைத்தறி ,சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் ,டிசைனர் எம்ப்ராய்டரி,  டிசைனர் பார்ட்வேர் ,  டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா , ஹாஃப் ஆம்ப்,  ஹாஃப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், டெனிம்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைகின்றன ..

img_02_black copy

புடவைகள் தேர்வு செய்யும் முறை

பொதுவாக நாம் கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை  விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். அவர் ஒன்னு ஒண்ணா எடுக்க எடுக்க நம்ம மனசுல  வரும் பாருங்க ஒரு சுனாமி பேரலை… இதை எடுப்போமா அதை எடுப்போமா என்று!

அங்கேதான் நாம கவனமா இருக்கணும்…. வெறும் கண்ணைப் பறிக்கும் அழகில் மயங்காம, நாம குடுக்கும் பணத்திற்கு வொர்த் இருக்கா? இதை நாம கட்டிய பின்னாடி நல்லா இருக்குமா ? துணியின் தரம் என்ன? இதையெல்லாம் நிதானமா யோசிச்சு தான் தேர்வு செய்யணும்.

எங்கே ப்ரியா. அதையெல்லாம் பார்க்க முடியுது ?? சுத்தி 10 கண்ணாடி வச்சு சேலையை தோளில் வச்சு நம்மை வாங்க வச்சு விடுறாங்களே என்று மட்டும் சொல்லாதிங்க… நம்ம பணம் நாமதான் பொறுமையா தேர்வு செய்யணும்!

தரம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்..

அதைப் போலவே நம்ம உடல்வாகு, நிறம்பொருத்தும் தேர்வு செய்யணும்.

ஒரு  புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது… எனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் ..

‘இந்த நினைவு மாறாது, யார் என்ன சொன்னாலும் , இதற்காக  நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்!

img_01 copy
புடவை  கட்டும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை

பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

சில புடவைகளில்  உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.

புடைவையின்  ஒரு முனையில் முந்தானையும் மறுமுனையில் சில சேலைகளில்  தைப்பதற்கான ப்ளவுஸ் துணியும் இருக்கும். ப்ளவுஸ் தைப்பதற்கான துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும். கட்டுவதற்க்கும் கனமாக இருக்கும்..

புதுப் புடவை  கட்டுவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் தேய்த்து   கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய  உதவி செய்யும் ..

_DSC4555
சற்று உயரமானவர்களுக்கான புடவை  முறைகள்

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.

அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.

கொஞ்சம் பருமனானவர்களுக்கு  மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்..

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.

பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

உயரம் குறைவான தோழிளுக்கு  புடவை முறைகள்

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.

டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.

கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஊடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லைட் வயலட், வெளிர் நீலத்தில் பூக்கள் இதெல்லாம் ஓகே.

ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.

சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்த வேண்டாம். மேலும் குண்டாகக் காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்…

_DSC4454l

புடவைகளை எப்படி பாதுகாப்பது?

ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்…

விலை உயர்ந்த புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

விலை உயர்ந்த உடைகளை வைக்கும் வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது வார்ட்ரோபின் வாசனையை தரும். ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது. பர்ஃப்யூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெளளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம்.

உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில்  கறை உண்டாக்கும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.

நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும்.

புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்..

பால் நிலவு   
பருத்தியை நூலாக்கி…
விண்ணில்  
தறி செய்து ..
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க…

நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!

 

– ப்ரியா கங்காதரன்

v1படங்கள்: சுந்தரி சில்க்ஸ்

காதல் ஓவியங்கள்!

கட்டுத்தனமான, உயர்ரகக் காதல்களை சினிமாவில் பார்த்து சலித்துப் போய்விட்டோம்… நாளைக்கு ஒன்றாக பத்து வருடங்களுக்கு காதல் இணைக்கு மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதுவதுதான் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்… ஒருவருக்காக மற்றொருவர் உருகுவதும், உயிர் விடுவதும் கூட இதில் அடக்கம். ஒருவரின் மொத்த வாழ்க்கையையும் மற்றொருவரின் பின்னால் அடகு வைப்பதே காதல் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கொரிய பெண் ஓவியர் புவ்வாங்கின் (Puuung) கருத்தோ வேறாக இருக்கிறது.

‘‘ஒவ்வொருவரோடும் தொடர்புபடுத்தக் கூடிய ஏதோ ஒன்றுதான் காதல். நம் தினசரி நடவடிக்கைகளில், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் காதல் வரும் வழிகளை வெகு சுலபமாக கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதனால்தான் நம் அன்றாட வாழ்க்கையில் காதலுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க நான் முயற்சி செய்தேன். அவற்றை ஓவியமாக வடித்தேன்.’’ இப்படிச் சொல்லும் புவ்வாங் வெகு சாதாரணமாக வரைந்த ஓவியங்கள் உலகம் முழுக்க வெகு பிரபலம். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களில் காதல் எப்படியெல்லாம் ஒளிந்திருக்கிறது என்பதை அந்த ஓவியங்கள் பேசுகின்றன.

இவருடைய காதல் ஓவியங்களை http://www.grafolio.com இணையதளத்தில் காணலாம். இங்கே சில ஓவியங்கள் தோழிகளின் பார்வைக்கு…

1

 

3

4

5

6

 

8

9

10

11

12

13

14

15

16

17

 

19

20

21

 

***

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் மாநில மாநாடு & இருநாள் கருத்தரங்கு!

Entrepreneurs

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT) 9வது மாநில மாநாட்டையொட்டி ‘மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள்’ குறித்த இருநாள் கருத்தரங்கை ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கில், ‘தொழில் தொடங்குவது எப்படி?’, ‘மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான என்னென்ன தொழில் வாய்ப்புகள் உள்ளன?’, ‘தொழில் தொடங்க எங்கு பயிற்சி பெற வேண்டும்?’, ‘அதற்கான உதவி திட்டங்கள் என்னென்ன?’,  ‘தொழில் தொடங்கத் தேவையான நிதி, இடம், மூலப்பொருட்கள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை எங்கு பெறலாம்?’,  ‘மார்கெட்டிங் இணைக்கப்பட்ட தொழில்கள் யாவை?’, ‘வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி?’, ‘மத்திய, மாநில அரசு மானிய திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெற என்னென்ன வழிமுறைகள்?’, ‘தொழில் தொடங்கி தொடர்ந்து நீடித்திருப்பது எவ்வாறு?’… இவற்றோடு பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், நிதி நிறுவன அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தனியார்துறை தொழில் அதிபர்கள், வெற்றிகரமாக செயல்படும் மகளிர் தொழில் முனைவோர்கள், இயற்கை சுற்றுப்புறச் சூழல் வேளாண் சார்ந்த கிராம வளர்ச்சிக்கான தொழில் நடத்தி வரும் நிறுவனங்கள், பெண்கள்  வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய தொழில்கள், நிதி கையாளும் முறை, தொழிலில் நிலைத்திருக்க ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் பெறலாம்.

தொழில் அதிபராகி நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனளிப்பீர்! இம்மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து தகவல்களும் அடங்கிய மாநாட்டு மலர், கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்ப்ப் படிவங்கள், தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். கருத்தரங்கில் இலவச தொழில் ஆலோசனைகளும் வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

வாரீர் மாநில அளவில் நடக்கும் இக்கருத்தரங்குக்கு! பெறுவீர் பெரும் பயன்!

கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவேண்டிய முகவரி:

135-B, செயிண்ட்பால்ஸ் காம்ப்ளக்ஸ்,

பாரதியார் சாலை,

திருச்சிராப்பள்ளி – 1.

தொலைபேசி எண்: 0431-4200040, 9488785806.

Image courtesy:

http://cpainerie.com/

===

முத்தான மார்கழிக் கோலங்கள் 30

இந்தக் கோலங்களை வரைந்திருக்கும் ‘குங்குமம் தோழி’ வாசகி சுமதி பாரதி கோவையைச் சேர்ந்தவர். இதுவரை சுமார் 1 லட்சம் கோலங்களை வரைந்திருக்கிறார். மார்கழி மாதத்தில் வாசலில் இட்டு மகிழலாம்… பார்த்து பரவசப்படலாம்.

kolam049

kolam050

kolam051

kolam052

kolam053

kolam054

kolam055kolam061

kolam056

kolam057

kolam058

kolam059

நிர்பயா – ஓவியக் கண்காட்சி

ஓவியர் என்.ஸ்வர்ணலதாவின் ஓவியக் கண்காட்சி இப்போது சென்னையில்… அத்தனையும் பெண்கள் அனுபவிக்கும் வலி, பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை தொடர்பானவை!

நாள்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை.

நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

இடம்: 48, இரண்டாவது பிரதான சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028.

தொடர்புக்கு: 9003168626 மற்றும் 9382344123.

art176

இவ்வளவுதான்… சினிமா பியூட்டி சீக்ரெட்ஸ்!

ஷாப்பிங்

சினிமா நடிகைகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. ‘காஜல் கண்ணு எவ்ளோ அழகு தெரியுமா?’, ‘சமந்தா செம க்யூட் இல்ல!’ இப்படி நடிகைகளை வர்ணித்து சிலிர்ப்பதும் ஆச்சரியப்படுவதும் எப்போதும் முடியாத தொடர்கதை. நிஜத்தில் மேக்கப் இல்லாமல் நடிகைகளைப் பார்த்தால் ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என்று தோன்றலாம்… ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம், மேக்கப் இல்லாமல் அழகோடு இருக்கும் நடிகைகள் மிக மிகக் குறைவு.

‘‘நான் ரொம்ப சுமாரான பொண்ணுதான். எல்லாம் மேக்கப் மேன், ஹேர் டிரெஸ்ஸர், ஒளிப்பதிவாளரோட வேலை’’ என்று நடிகை சமந்தா தன்னுடைய அழகு ரகசியம் பற்றி சமீபத்தில் சொன்னது சிலருக்கு நினைவிருக்கலாம். சமந்தாவின் ஸ்டேட்மென்ட்டை தன்னடக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்; உண்மையாகவும் எடுத்துக் கொள்ளலாம்…

நடிகைகளின் அழகுக்கு முக்கியக் காரணமாவது ‘சினிமா சீக்ரெட் என்ற மேக்கப் செட்.’ இது கோடம்பாக்கத்தில் ரொம்பவும் பிரபலம். ஒரு மேக்கப் செட்டில் என்னென்ன இருக்கும்? பார்க்கலாமா?

ப்ரீ மேக்கப் பேஸ்

01. Pre make up base

வீடு கட்டுவதற்கு முன்பு அஸ்திவாரம் போடுகிற மாதிரி, மேக்கப்புக்கு முன் போடுகிற மேக்கப் இது. விலை ரூ.500லிருந்து ரூ.3,200 வரை.

ஃபவுண்டேஷன் மேக்கப்

02. Cream Foundation

இது மேக்கப் போடுவதற்கு முகத்தைத் தயார்ப்படுத்தும் ப்ராசஸ். ரூ.1,500லிருந்து ரூ.2,600 வரை. இது முடிந்ததும் க்ரீம் ஃபவுண்டேஷன் போட்டுக் கொண்டால் முதல் கட்டம் ஓவர்.

03. Foundation make up

காம்பாக்ட் மேக்அப் பவுடர்

ஃபவுண்டேஷன் மேக்கப்புக்குப் பிறகு போட்டுக் கொள்கிற பவுடர் இது. ரூ.3,500.

லூஸ் பவுடர்

04. Loose powder

வழக்கமாக நாம் பவுடர் அடித்துக் கொள்வது போல் பயன்படுத்தும் பவுடர் இது. ரூ.1,900.

இதற்கு அடுத்து  ப்ளஷர் போட்டுக் கொண்டால் ஆப்பிள் கன்னம் போல வழுவழுவென்று ஆகிவிடும். ரூ.1,200.

ஐ லேஷ்

Eye lash

நடிகைகள் பட்டாம்பூச்சிபோல் கண்களை இமைக்கிறார்களா? அதற்கு இந்த ஐலேஷ்தான் காரணம். இதை கண் இமையில் ஒட்டிக் கொண்டால் நீங்களும் கண்ணழகிதான். விலை. க்ரூ. 190லிருந்து ரூ. 250 வரை.

Mascara

இந்த ஐலேஷுக்கும் ஒரு மேக்கப் உண்டு. அது மஸ்கரா. இதை ஐ லேஷில் போட்டுக் கொள்ள வேண்டும்.

வழக்கமாக நாம் புருவத்துக்குப் பயன்படுத்தும் ஐ லைனர் ரூ.125க்கும், இமைகளுக்கு மேல் பயன்படுத்தும் ஐ ஷேடோ ரூ.900க்கும் கிடைக்கிறது.

லிப்ஸ்டிக் ப்ளேட் வித் பிரஷ்

Lipstick plate with brush

நாம் ஸ்டிக் டைப்பில் உபயோகப்படுத்தும் லிப்ஸ்டிக் ப்ளேட் வடிவத்தில் கிடைக்கிறது. உதடுகளில் போட்டுக் கொள்ள ஸ்பெஷல் பிரஷ் இதனுடன் உண்டு. இந்த ப்ளேட் ரூ.2,200க்கும், பிரஷ் ரூ.450க்கும் கிடைக்கிறது.

ஷார்ட் விக்

Short wig

பாப் கட்டிங் வேண்டும் என்றால் ஷார்ட் விக் அணிந்து கொள்ளலாம். கொஞ்சம் நீளமான அலைபாய்கிற கூந்தல் வேண்டும் என்றால் லாங் விக் அணிந்து கொள்ளலாம். இந்த இரண்டு விக்குகளின் விலைகளிலும் பெரிய வித்தியாசமில்லை. ரூ.1,500லிருந்து கிடைக்கிறது.

மேக்கப் கிட்

Make up kit

இதெல்லாம் தனித்தனியாக வேண்டாம், காஸ்ட்லியாகவும் வேண்டாம்… சீப் அண்ட் பெஸ்ட்டாக வேண்டும் என்று கேட்பவர்களுக்காக அடிப்படையான பொருட்கள் கொண்ட மேக்கப் கிட் இது. ரூ.600.

கண்ணாடி

Mirror 1

ஓ.கே. மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டாகிவிட்டதா? இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே முதலில் ரசிக்க வேண்டாமா? அதற்குத்தான் இந்தக் கண்ணாடி. சினிமா வட்டாரத்தில் அதிகம் பயன்படுத்துகிற பொருட்களில் இதுவும் ஒன்று. ரூ.300 மட்டும்.

என்ன… மேக்கப்புக்கு ரெடியாகிட்டீங்களா..?

– ஞானதேசிகன்

பொருட்கள்: கிளாமர் சினி வேர்ல்ட், சாலிகிராமம், சென்னை

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

குறும்பர் வாழ்வு… பேசும் ஓவியங்கள்!

Image

வெளிப் பார்வைக்கு சாதாரண ஓவியங்களாகத்தான் தெரிகின்றன. உற்றுப் பார்த்து, இது என்ன, எப்படி, ஏன் என்பதைக் கேட்டறிந்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் பின்னால் குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள்…

சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் சி.பி.ஆர்ட் சென்டரில் அந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மிகப் பெரிய கேன்வாஸில் இரண்டு பேர் மும்முரமாக ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்துப் பேசினோம். அவர் பெயர் பாலசுப்ரமணி.

பாலசுப்ரமணிக்கு சொந்த ஊர் பாவியூர். ‘பாவி’ என்றால் கிணறு என்று ஓர் அர்த்தம் இருக்கிறதாம். ஊட்டி, கோத்தகிரியில், சோளூர் மட்டத்துக்கு அருகே இருக்கிறது பாவியூர். மலை கிராமம். மொத்தம் 130 ஆதிவாசிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு புண்ணியத்தில் மின்சாரம் இருக்கிறது. வெளியுலகத் தொடர்பு கொள்ள ஒரே ஒரு பேருந்து வந்து செல்கிறது. அதுவும் நேரடியாக ஊருக்கு வருவதில்லை. ‘காபி ஸ்டோர்’ என்கிற அத்தியூர் மட்டத்துக்கு அருகே இருக்கும் இடத்தில் இறக்கிவிட்டுப் போய்விடும். அங்கிருந்து பிரியும் மண்சாலையில் நடந்தால் பாவியூருக்குப் போய்விடலாம்.  பிள்ளைகள் படிக்க ஐந்தாவது வரையான ஆரம்பப்பள்ளி இருக்கிறது. மேற்கொண்டு படிக்க, கீழ் கோத்தகிரிக்கோ, மேல் கோத்தகிரிக்கோதான் போக வேண்டும். இப்படிப்பட்ட உள்ளடங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்கள் இந்த ஓவியர்கள். Image

‘‘இந்த ஓவியங்களை எல்லாம் நாங்க வரைவோம்னு நினைக்கவே இல்லை. ஆதிவாசிகளுக்கு ஓவியங்கள் வரையும் பழக்கம் இருக்கு. குகைகள்ல, மலைப் பாறைகள்ல வரைவாங்க. அந்தப் பழக்கம் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு. கோயில் திருவிழா, பண்டிகைன்னா வீட்ல இருக்குற சுவத்துல சித்திரங்கள் வரைவாங்க. வீடுன்னா நீங்க நினைக்கிற மாதிரி காரை வீடு இல்லை. மண் சுவரால எழுப்பின வீடு. எங்க தலைமுறையில ஓவியம் தெரிஞ்ச ஒரே ஆளு இந்தா இருக்காரே… கிருஷ்ணன்… அவரோட தாத்தா மாதன்தான்’’. என்று பக்கத்தில் நின்றிருக்கும் கிருஷ்ணனைக் காட்டிவிட்டு மேலே தொடர்கிறார் பாலசுப்ரமணி.

‘‘கிருஷ்ணன், எனக்கு சித்தப்பா மகன். ஒரு நாள் சி.பி.ராமசாமி ஐயர்  ஃபவுண்டேஷன்லருந்து அதன் இயக்குநர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா எங்க ஊருக்கு வந்திருந்தாங்க. ‘வெள்ளரிக்கொம்பை’, ‘தாழைமொக்கை’ போன்ற இடங்கள்ல இருக்குற பாறை ஓவியங்களைப் பாத்தாங்க. அழியப் போற நிலைல இருந்துச்சு ஆதிவாசிகளோட ஓவியக்கலை. ‘இதை இப்படியே விடக்கூடாது. யாராவது கத்துக்க வாங்க’ன்னு எங்களை ஊக்குவிச்சாங்க. தாத்தா சொல்லிக் கொடுத்த பழக்கத்துல கிருஷ்ணன் கொஞ்சம் வரைவாரு. ஆனா, முறையா தெரியாது. இங்கே சென்னைக்கு வந்தோம். சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் எங்களுக்கு ஓவியர் வெங்கடேசனை அறிமுகம் செஞ்சு வச்சுது. அவருதான் எங்களுக்கு பிரஷ் பிடிச்சு எப்படி வரையறதுன்னு சொல்லிக் கொடுத்தாரு. மெல்ல மெல்ல வரைய ஆரம்பிச்சோம். இப்போ நான், கிருஷ்ணன், என் மகள் கல்பனா மூணு பேரும் சேந்து வரைஞ்ச ஓவியங்கள்தான் இங்கே இருக்கறதெல்லாம்…’’.

ஒவ்வொரு ஓவியமும் ஒரு தனி உலகம். குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியலைப் பேசுபவை. ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னார் பாலசுப்ரமணி. இங்கே சில மாதிரி ஓவியங்களும் அதற்கான விளக்கமும்…

கொவைக்கல் 

Image

திணை, சாமை, ராகி என எந்த தானியமுமாக இருக்கட்டும்… காட்டில் விளைந்த பிறகு அப்படியே எடுத்துப் பயன்படுத்திவிட மாட்டார்கள் குறும்பர் இன மக்கள். அதைக் கொண்டு போய் கொவைக்கல் என்கிற இடத்தில் மொத்தமாக வைத்துப் படைப்பார்கள். சாமி கும்பிட்ட பிறகுதான் தானியங்கள் வீட்டுக்குப் போகும்.

கும்பதேவா

Image

‘கும்ப’ என்றால் குடம். வருடம் ஒரு மண் பானையை எடுத்துப் போய் மலை மேல் இருக்கும் தெய்வத்துக்கு வைத்துவிட்டு வருவார்கள். சில இடங்களில் மூன்று குடங்கள் வைக்கப்படும். சில இடங்களில் 7 குடங்கள் இருக்கும். 7 விதமான தானியங்கள் நன்றாக தங்கள் மண்ணில் விளைய வேண்டும் என்பதற்கு இந்த வழிபாடு. 7 நாள் காட்டுக்குள் இருந்து கடும் விரதம் இருப்பார்கள். ஆடைகள் எதுவும் அணியாமல், சுள்ளி இலைகளை மட்டும் கட்டிக் கொண்டு விரதம் நடக்கும். ‘மொதலி’ எனப்படுபவர் கிட்டத்தட்ட பூசாரி மாதிரி. புதிதாக பயிர் வைப்பதென்றாலும், களை எடுப்பது என்றாலும், அவர்தான் தொடங்கி வைப்பார்.  தங்களைக் காக்கும் தெய்வமான ‘கும்பதேவா’வின் பெயரை உரக்கச் சொல்லி, காரியங்களுக்கு துணையிருக்க வேண்டுவார் மொதலி.

தேன் எடுத்தல்

Image

‘தேன்’. நினைத்தாலே தித்திக்கும். ஆனால், அதை எடுப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதிலும் மலைத்தேன் எடுப்பது என்பது சூரத்தனமான வேலை. எப்பேர்ப்பட்ட மலையாக இருந்தாலும், எந்தப் பாறை இடுக்கில் இருந்தாலும் தேனை எடுத்துவிடுவார்கள் குறும்பர் இன மக்கள். ஆனால், அது ஒரு கூட்டு முயற்சி. அது போன்ற தேனெடுக்கும் ஒரு நிகழ்வுதான் இந்த ஓவியம். மலை உச்சியில் ஒரு மரம். அதில் பிணைக்கப்பட்ட கயிற்றேணியை இருவர் பாதுகாப்புக்காக பிடித்துக் கொள்கிறார்கள். கயிறு, மலைப் பாறையில் இறங்க, உச்சியில் ஒருவர் மற்றொரு கயிறை விடுகிறார். கயிற்றில் கூடை. அதில் தேனீக்களை விரட்ட புகை மூட்டம். நூலேணியில் இருவர் தேனெடுக்க ஏறுகிறார்கள்.

திருமணம் 

Image

குறும்பர் பழங்குடியினர் வாழ்வில் சுவாரஸ்யமான வைபவம் திருமணம். மாப்பிள்ளை வீட்டிலிருந்து 7 பேர் கிளம்பிப் போய் பெண் கேட்பதில் களை கட்ட ஆரம்பிக்கும் திருமண விழா. வரதட்சணை என்கிற பேச்சுக்கு குறும்பர் இன மக்கள் வாழ்வில் இடமில்லை. ஆனால், சீர் உண்டு. அதிலும் ஓர் ஆச்சரியம். இரண்டு சீர். ஒன்று திருமணத்துக்கு… மற்றொன்று மரண நிகழ்வுக்கு! மண மக்களின் மரணத்துக்கும் சேர்த்து திருமணத்தின் போதே சீர் செய்து விடுகிறார்கள். மண மக்களை மேடைக்கு அழைத்து வரும் போது அவர்கள் பாதங்களைத் தரையில் பட விடுவதில்லை. விரிப்புகளை விரித்து அதன் மேல் நடந்து வரச் செய்கிறார்கள். காட்டில் விளையும் ‘பால மரம்’ மேடையில் நடப்படுகிறது. மணமக்கள் அமர ஒரு பிரத்தியேக திண்ணை தயாராகிறது. (அதற்கு அவர்கள் மொழியில் ‘அக்க திண்ணெ மதுவெ’ என்று பெயர்). மண்ணில் குழைத்துச் செய்யப்பட்ட திண்ணை. அதில் மணமக்கள் அமர, திருமணம் நடக்கிறது. மாங்கல்யமாக கருகமணி கோர்த்த காசுமாலை மணமகளுக்கு அணிவிக்கப்படுகிறது.

கொவை மனை 

Image

காட்டில் வெள்ளாமை விளைந்த பிறகு தானியங்கள் பங்கு போடும் இடம் இது. இந்த இடத்தில், இந்த மனையின் முன்புதான் தானியங்கள் பிரிக்கப்படும். முக்கியமாக மூன்று பங்காகப் பிரிக்கப்படும். முதல் பங்கு ‘மொதலி பங்கு’. ஊர்ப் பெரிய கட்டுக்கு, எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர்களுக்கு என்றும் வைத்துக் கொள்ளலாம். அடுத்தது மண்ணுக்காரனுக்கு. தானியம் விளைந்த மண்ணுக்குச் சொந்தக்காரனுக்கான பங்கு. அடுத்தது ‘சாதிக்காரன் பங்கு’. தானியம் விளைய உதவிய உழைப்பாளர்களுக்கானது.

கெதேவா 

Image

காட்டு தெய்வத்திடம் வேண்டுதல் நடக்கிறது. ‘பயிர்களை எலி, பூச்சியிடம் இருந்து காப்பாற்று தெய்வமே! விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு உதவு சாமி!’ என்ற கோரிக்கையோடு தெய்வத்தை வழிபடுகிறார்கள். ஒரு மரத்தைச் சுற்றிச் சிறு குழி வெட்டியிருக்க, அதன் நடுவே இருக்கும் தெய்வத்துக்கு 7 குடம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அந்தத் தண்ணீரிலேயே குழி நிரம்பி வழிந்துவிட்டால் அந்த வருடம் விளைச்சல் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமோகமாக இருக்கும் என்று அர்த்தமாம்.

திருவிழா 

Image

ஊர்த் திருவிழாவை அமர்க்களமாகக் கொண்டாடுவது குறும்பர் இன மக்களின் வழக்கம். ஆட்டம், பாட்டு எல்லாம் தூள் பறக்கும். பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, கூட்டாகச் சேர்ந்து நடனமாடுவார்கள்.

‘‘கிட்டத்தட்ட அழிஞ்சுபோற நிலைமல இருந்த எங்களோட ஓவியக்கலையை மீட்டெடுக்க சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் உதவியிருக்கு. அதோட எங்களோட பழக்க வழக்கம், பண்பாடு எல்லாத்தையும் இதன் மூலமா எங்க அடுத்த தலைமுறையும் தெரிஞ்சிக்கவும் வழி பிறந்திருக்கு. இந்த ஓவியங்கள் மூலமா எங்களுக்கு வருமானம் கிடைக்கவும் செய்யுது’’ என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் கிருஷ்ணன்.

வருமானம் என்று அவர் சொன்னாலும், மிகப் பெரிய ஓவியங்களைத் தவிர மற்ற எல்லாமுமே 200லிருந்து 900 ரூபாய்க்குள்தான் விலை. எங்கோ மலை கிராமத்திலிருந்து வந்து தங்கள் பாரம்பரியத்தை ஓவியங்களாக வடிக்கும் அந்த மூன்று பேரையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

ஓவியங்களில் உயிர்ப்போடு திகழ்வது மரங்களும் செடி, கொடிகளும். சின்னச் சின்ன கோடுகளில் அற்புதமாக இயற்கையை வரைந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விஷயமும் உண்டு. இவற்றில் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் முகங்கள் இல்லை. பழமையையும் இயற்கையையும் போற்றி, இன்று வரை பாதுகாத்து வரும் எத்தனையோ மலைவாழ் மக்களைப் போலவே!

– பாலு சத்யா

படங்கள்: ஆர்.கோபால்

குறிப்பு: இந்த ஓவியக் கண்காட்சி, சென்னை, ஆழ்வார் பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் வளாகத்தில், Vennirul Art Galleryயில் செப்டம்பர் 21 வரை நடை பெறுகிறது.

தொடர்புக்கு… ஓவியர் பாலசுப்ரமணி – 8489001673.

ரசனை போதும்!

Image

உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது தாஜ் மகால். ‘டிரிப் அட்வைசர்ஸ்’ என்ற சர்வதேச நிறுவனம் 2013ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க விரும்பும் முக்கியமான 25 இடங்களை ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டிருக்கிறது. முதல் இடம் பெரு நாட்டில் இருக்கும் மச்சு பிச்சுவுக்கும், இரண்டாம் இடம் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயிலுக்கும் கிடைத்திருக்கிறது. உலக அதிசயங்களில் ஒன்று, பழமையானது, அழகு மிளிர்வது, காதல் சின்னம் என பெருமைகளுக்கு உரிய தாஜ் மகாலுக்கு கிடைத்த மற்றொரு கௌரவம் இது!

அந்த சரித்திரச் சின்னத்துக்குப் போய் வந்த இருவர், தாஜ் மகால் குறித்த தங்கள் பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்…

கீதா பிரேம்குமார் – இயக்குநர், வெக்டர் இண்டோஜானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்.

Image

ஒரு நல்ல கலைப் படைப்பை இப்படி தர நிர்ணயம் பண்றதை என்னால ஏத்துக்க முடியலை. அதுவும் உலக அளவில் எனும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு. படிச்சவங்கள்ல இருந்து பாமரர்கள் வரைக்கும் ஒவ்வொருத்தரும் ரசிக்கிற கலைப் படைப்பு தாஜ் மகால். ரசிப்புத் தன்மைக்கு அளவு கோல் கிடையாது. இப்படி ‘இதுக்கு முதல் இடம்… இதுக்கு மூணாவது இடம்’னு ஆய்வு செஞ்சு லிஸ்ட் போடுறது கூட ஒரு வகையில பரபரப்பை ஏற்படுத்துற வியாபார தந்திரம்தான். ராஜராஜசோழன் கட்டிய கல்லணையையோ, திருக்குறளின் பெருமையையோ மார்க் போடுறதுக்கு நாம யாரு? என்னைப் பொறுத்த வரைக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குங்கறதுக்காக யாரு வேணாலும் சொல்றதை ஏத்துக்க முடியாது. நான் தாஜ் மகாலுக்குப் போயிருக்கேன். அது கலை நயத்தோட இருக்குற ஓர் அற்புதம்தான். ஆனா, அந்தக் கட்டடம் கட்ட எத்தனை பேரோட உழைப்பு தேவைப்பட்டிருக்கு? 22 ஆயிரம் பேருக்கு மேலன்னு சொல்றாங்க. தாஜ் மகால் கட்டி முடிக்கப்பட்டதும் அதைக் கட்டின முக்கியமான தொழிலாளிகளின் கண்ணைக் குருடாக்கி, கைகளை வெட்டினதா எல்லாம் சொல்றாங்க. ஏன்னா, திரும்ப அதே மாதிரி ஒரு கட்டடம் கட்ட அவங்க உதவி செஞ்சுடக் கூடாதுங்கறதுக்காக. ஒவ்வொரு இடத்திலும் ஒரு எனர்ஜி லெவல் இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கென்னவோ தாஜ் மகாலுக்குப் போன போது நெகட்டிவ் எனர்ஜிதான் கிடைச்சுது. ஒரு சமாதிக்குப் போன உணர்வுதான் ஏற்பட்டது.

*****************************

பத்ரி சேஷாத்ரி – எழுத்தாளர், பதிப்பாளர்

Image

நான் மூன்று முறை தாஜ் மகாலைச் சென்று பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை எண்ணி வியந்துபோவது வழக்கம்.
தாஜ் மகாலைப் படமாக, பொம்மையாகப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அது நிஜத்தில் எவ்வளவு பெரிய ஒரு கட்டடம் என்பது வியப்பைத் தரும். அதன்முன் நாம் ஒரு சிறு துரும்புபோலக் காட்சி அளிப்போம்.
உலகின் சுற்றுலாத் தளங்கள் பற்றிய ஒரு இணையக் கருத்துக் கணிப்பில் தாஜ் மகால் மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மாச்சு பிச்சு, கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் ஆலயம் ஆகிய இரண்டுக்கும் பிறகு அடுத்த நிலையில் உள்ளது முகலாயப் பேரரசர் ஷா ஜஹான் கட்டிய தாஜ் மகால்.
தாஜ் மகாலை அவன் தன் காதல் மனைவி மும்தாஜுக்காகக் கட்டினான் என்றுதான் நாம் புத்தகத்தில் படித்திருப்போம். ஃபேஸ்புக்கில் பலர் அப்படியொன்றும் காதலும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை, அவன் என்று ஒரு பெரிய பட்டியலைக் காண்பிப்பர். ஷா ஜஹான் தன் மனைவியை எப்படி நடத்தினான், அவள் மூலம் எத்தனை பிள்ளைகளைப் பெற்றான், அவனுக்கு வேறு எத்தனை மனைவிகள் இருந்தனர் என்பது பற்றி எனக்கு அவ்வளவாகக் கவலை இல்லை. ஆனால், அவன் கட்டுவித்த தாஜ் மகால் இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. அதில் நாம் தெரிந்துகொள்ளப் பல விஷயங்கள் உள்ளன.

Image
முகலாயர்களின் கட்டடக் கலையை தில்லி முதல் லாகூர் வரையுள்ள விரிந்த முகலாய சாம்ராஜ்யத்தில் பல இடங்களில் காணலாம். இவை அக்பர், ஜஹாங்கீர், ஷா ஜஹான், ஔரங்கசீப் ஆகிய முகலாயப் பேரரசர்களால் கட்டப்பட்டன. அக்பர் கட்டிய புலந்த் தர்வாஸா, பஞ்ச் மகால் ஆகியவற்றை தாஜ் மகாலுக்கு வெகு சமீபத்திலேயே காணலாம். லாகூர் சென்றிருந்தபோது ஜஹாங்கீர் எழுப்பிய கட்டடங்களைப் பார்த்தேன்.

ImageImage
இவை அனைத்தையும்விட ஷா ஜஹான் காலத்தில்தான் மிக அதிகமான கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. அவை பெரும்பாலும் இன்றும் நிலைத்திருக்கின்றன. இவற்றில் மிக மிக வித்தியாசமானது தாஜ் மகால்.
முற்றிலும் வெண் சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தின் பல்வேறு நுணுக்கங்களை கட்டடக் கலை அறிவற்ற என்னால் விளக்க இயலாது. முகலாயக் கட்டடங்களுக்கே உரித்த ஜாலி வேலைப்பாடுகள், சலவைக் கல்மீது செதுக்கப்பட்ட நுண்ணிய புடைப்புச் சிற்பங்கள், அரபிச் சித்திர எழுத்துகளில் மெல்லிய கருப்பில் எழுதப்பட்டு வெள்ளைக் கல்லில் இழைக்கப்பட்ட குர் ஆன் வசனங்கள், பாரசீகக் கவிதைகள், உயரமான வளைவு வாயில்கள், மாபெரும் மினாரத்துகள், மிக நன்கு அறியப்பட்ட நடுவில் உள்ள கும்பம் என்று தாஜ் மகாலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
உலகக் கட்டடக் கலையில் தாஜ் மகால் ஓர் உச்சம். ஆனால், அது இருக்கும் இடத்தைப் பராமரிப்பது என்பது விரும்பிய அளவு இல்லை. தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் பாதை நான் சென்றபோதெல்லாம் நெரிசல் மிகுந்ததாக இருந்தது. இப்போது பாதையை அகலப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் ஆக்ரா நகருக்குள் நுழைந்து தாஜ் மகால் இருக்கும் இடத்துக்கு வருவதற்கே வெகு நேரம் பிடிக்கிறது. தாஜ் மகால் இருக்கும் காம்ப்லெக்ஸ் மிகப் பெரிய ஓரிடம். முழுவதுமாகச் சுற்றிப் பார்க்க அல்லது நடந்து செல்லக் கால்கள் கெஞ்சும். உங்களை அழைத்து வந்திருக்கும் வண்டி எங்கோ வெகு தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். முழு சக்தியுடன் இருந்தாலொழிய ஓர் ஓரத்தில் உட்கார்ந்துவிடுவீர்கள்.
இவ்வளவு ஆடம்பரமான ஷா ஜஹானின் கட்டடத்துக்கு முற்றிலும் மாற்றாக தாஜ் மகால் பாணியில் ஆனால் சற்றே சிறியதாகக் கட்டப்பட்ட ஒரு கட்டடம் மகாராஷ்டிரத்தில் ஔரங்காபாத் என்ற நகரில் உள்ளது. ஔரங்கசீப் தன் மனைவி தில்ரஸ் பானு பேகத்துக்காகக் கட்டிய பிபி கா மக்பாரா என்ற கட்டடம்தான் அது. புத்த ஓவியங்கள் நிறைந்துள்ள அஜந்தா குகைகளுக்குச் செல்ல நீங்கள் ஔரங்காபாத் வழியாகத்தான் செல்லவேண்டும். அப்போது கூட்டமே இல்லாத பிபி கா மக்பாராவை நீங்கள் பார்வையிடலாம்.
முகலாயக் கட்டடங்களைப் பார்க்க நீங்கள் விரும்பினால் தில்லியைப் போல உங்களுக்கு வேறு இடம் கிடைக்காது. தில்லி, அதன்பின் ஃபதேபூர் சிக்ரி, ஆக்ரா, பாகிஸ்தான் செல்ல முடிந்தால் லாகூர் என்று சென்று பார்வையிடுங்கள்.

Image
இந்த நேரத்தில் நானும் சில நண்பர்களும் பாகிஸ்தானில், லாகூரில் ஜஹாங்கீர் கட்டிய ஒரு பெரிய தோட்ட அரண்மனையைப் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. இந்தியர்கள் நாங்கள் மூவர், எங்கள் பாகிஸ்தானி நண்பர் ஒருவர் என்று அந்தப் பெரிய அரண்மனையிலேயே மொத்தம் நாங்கள் நான்கு பேர்தான் சுற்றிக்கொண்டிருந்தோம். அங்கே வேலை செய்யும் ஓரிரு உள்ளூர்க்காரர்கள் இருந்தனர். அவ்வளவுதான். அப்படி தாஜ் மகாலை நம்மால் என்றுமே கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு கூட்டம்.
இனி… கூட்டம் இன்னும் அதிகமாகத்தான் போகிறது.

************************************

தாஜ்மகால் சில தகவல்கள்…

  • உலக அதிசயங்களில் ஒன்று. முகலாயப் பேரரசர் ஷா ஜகான், தன் மூன்றாவது மனைவி மும்தாஜ் மகாலின் நினைவாகக் கட்டியது. 1631, ஜூன் 17ம் தேதி மும்தாஜ், தன்னுடைய 14வது குழந்தையை பிரசவிக்கும் போது இறந்து போனார்.
  • இது மொகலாயர்களின் கட்டிடக்கலை அழகுக்கும், திறமைக்கும் அழியாத சான்றாக விளங்குகிறது. இஸ்லாமிய, பாரசீக, துருக்கிய, இந்திய கட்டிடக்கலை நுட்பங்கள் எல்லாம் கலந்த கலவை.
  • 1983ம் ஆண்டு, யுனெஸ்கோவால் ‘உலக பாரம்பரிய சின்னம்’ என அறிவிக்கப்பட்டது.
  • 1632ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டிட வேலை, 1653ல்தான் முடிந்தது.
  • அப்துல் கரீம் மம்முத்கான், மக்ரமத்கான், உஸ்தாத் அஹமது லஹாவ்ரி (Ustad Ahmad Lahauri) என மூன்று கட்டிடக்கலை வல்லுநர்களின் மேற்பார்வையில் தாஜ்மகால் எழுப்பப்பட்டது. இருந்தாலும் லஹாவ்ரிதான் தலைமை வடிவமைப்பாளராக கருதப்படுகிறார்.
  • இதற்கு முன்பு மொகலாயர்களால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் செந்நிறத்தில் செங்கற்கலால் கட்டப்பட்டவை. ஷாஜகான்தான் முதன் முதலாக இதைக் கட்டுவதற்கு வெண்ணிற பளிக்குக் கற்களை அறிமுகப்படுத்தினார்.
  • தாஜ் மகாலைப் பற்றி ஷா ஜகான் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதன் ஆங்கில வடிவம் இங்கே…
  • Should guilty seek asylum here,
    Like one pardoned, he becomes free from sin.
    Should a sinner make his way to this mansion,
    All his past sins are to be washed away.
    The sight of this mansion creates sorrowing sighs;
    And the sun and the moon shed tears from their eyes.
    In this world this edifice has been made;
    To display thereby the creator’s glory.
  • இதைப் பார்வையிட ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள். தாஜ் மகால் 360 ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்குக் காரணம் அது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளதுதான். யமுனை நதி நாளுக்கு நாள் வற்றிப் போய், சாக்கடை போல மாறி வருவதும், காடுகள் அழிவதும், தொழிற்சாலைப் பெருக்கமும் தாஜ் மகாலை அழித்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
  • தொகுப்பு: பாலு சத்யா

ஓவியமாக உயிர் பெற்ற நிர்பயா!

ந்தியர்கள் மறக்க முடியாத பெயர்… டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் கற்பனைப் பெயர்… ‘நிர்பயா’. அதையே தலைப்பாக்கி, சமீபத்தில் ஓர் ஓவியக் கண்காட்சியை டெல்லியில் நடத்தியிருக்கிறார் சென்னை ஓவியர் ஸ்வர்ணலதா.

இவரது கணவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர். டிசம்பர் மாதம் விடுமுறைக்கு டெல்லிக்குப் போயிருக்கிறார் ஸ்வர்ணலதா. அவர்கள் இருந்த இடத்துக்கு இந்தியா கேட் வழியாகத்தான் செல்ல வேண்டும். அது டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இறந்து போன நேரம். அதற்கு எதிராக தினமும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட அந்த போராட்டங்கள் ஸ்வர்ணலதாவை யோசிக்க வைத்தன.

PD1_9541

‘‘இந்தியா கேட்ல நடந்த போராட்டங்களை நேரில் பார்த்தேன். அப்போ எல்லா பத்திரிகையிலும் அதுதான் தலைப்புச் செய்தி. போராட்டத்துல கலந்துகிட்ட எல்லா பெண்கள் முகத்துலயும் ஒரு பயத்தைப் பார்த்தேன். பல பெண்களுக்கு வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம். வேலை பார்த்தாதான் நகர வாழ்க்கையில செலவுகளை சமாளிக்க முடியும். பெண் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, பள்ளி நேரம் முடிஞ்சதும் சரியா வீட்டுக்கு வரணுமேன்னு பதைபதைப்போட காத்திருப்பாங்க. ஏன்னா, 3 வயசு, 2 வயசு குழந்தைகள் எல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக ஆரம்பிச்சிட்டாங்க. இந்தக் கொடுமைகள் கிட்டத்தட்ட ஒரு தொடர்கதை மாதிரி தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சிடுச்சு. என்னதான் பெண்கள் பாதுகாப்புக்குன்னு சட்டங்கள் வந்துட்டாலும், பெண்களுக்கு ஆதரவா குரல்கள் எழுந்தாலும், பாலியல் கொடுமைகளுக்கு எதிரா போராட்டம் நடந்தாலும் இன்னும் பெண்களோட கஷ்டம் தீரலை. பெண் குடும்பத்தில் ஒரு அங்கம், அவளும் இந்த மனித சமுதாயத்தில் ஓர் அங்கம்னு யாரும் நினைக்கறதில்லை. அவங்களோட கஷ்டங்களை வெளியே கொண்டு வரணும்னு நினைச்சேன்.

வினோதினி, வித்யான்னு தொடர்ந்து பாலியல் பலாத்கார வன்முறைகள்… வெளியே தெரியாம பெண்களுக்கு எதிரா எத்தனையோ கொடுமைகள்… இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணுங்கிறதுக்காக இந்த ஓவியங்களை வரைய ஆரம்பிச்சேன். ஜனவரியிலிருந்து மே மாதத்துக்குள் 37 ஓவியங்கள், 6 சிற்பங்களை உருவாக்கிட்டேன். கண்காட்சியா வைக்கிறதுக்கு டெல்லிதான் பொருத்தமான இடம்னு தோணிச்சு. டெல்லியில இருக்குற ‘இந்தியா ஹாபிடேட் சென்டர்’ (India Habitat Centre) முக்கியமான இடம். அங்கே ஓவியக் கண்காட்சியை வச்சா நிறையபேருக்குப் போய் சேரும்னு நினைச்சேன். ஆனா, அங்கே இடம் கிடைக்கிறது கஷ்டம். அப்ளிகேஷன் போட்டுட்டு, ரெண்டு, மூணு மாசம் காத்திருக்கணும். அவங்க என் ஓவியங்களைப் பாத்துட்டு உடனே கண்காட்சி நடத்த அனுமதி குடுத்துட்டாங்க. அதுதான் ஆச்சரியமான விஷயம்.

970906_187115724777483_1194129611_n

‘நிர்பயா’ ஓவியக் கண்காட்சிக்கு நான் எதிர்பார்த்ததை விட நிறையபேர் வந்தாங்க. சில பெண்கள் ஓவியங்களைப் பாத்துட்டு கண் கலங்கினாங்க. என்னோட ஓவியக் கண்காட்சி வெற்றி அடையறதுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு ரொம்ப முக்கியக் காரணம். இன்னும் இதைத் தொடர்ந்து நடத்த வேண்டி இருக்கு. சொந்த ஊரான சென்னையில ‘நிர்பயா’ கண்காட்சியை ஆகஸ்டுக்குள்ள நடத்தணும்னு முடிவு செஞ்சிருக்கேன். உலக அளவுல இதைக் கொண்டு போகிற திட்டமும் இருக்கு’’ என்கிற ஸ்வர்ணலதா இன்னொரு விஷயத்தையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார்.

‘‘பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை அரசாங்கத்தால மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. அரசால் அதிகபட்சமா தண்டனைகளைக்  கடுமையாக்க முடியும். அவ்வளவுதான். தனிமனிதனாப் பாத்து இப்படி பண்ணக்கூடாதுன்னு முடிவெடுத்தாத்தான் இதெல்லாம் சரியாகும். அதுக்கு பெண்களை சக மனுஷியா மதிக்கவும், நடத்தவும் எல்லாரும் முன் வரணும்.’’

ஏற்கனவே, 1998ல் சென்னை லலித்கலா அகடாமியில் ஸ்வர்ணலதா ஓர் ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கிறார். ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை தஞ்சாவூர் பாணி ஓவியங்களாக வரைந்து கண்காட்சியாக வைத்திருந்தார். ‘‘அந்த கண்காட்சிக்குக் கிடைத்த வரவேற்புதான் என்னை மேலும் மேலும் ஓவியம் வரையத் தூண்டியது’’ என்கிறார் ஸ்வர்ணலதா. அதைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டிலும் ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார்.

இவருடைய ஓவியங்களில் பெரும்பாலானவை Contemporary Style என சொல்லப்படும் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட பாணியில் உருவாக்கப்பட்டவை. சென்னை கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்களில் ஒன்று… தாஜ்மகால், அதை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தன் மனைவி, மகளுடன் பார்வையிடுவது போல் அமைந்திருக்கும்.

ஸ்வர்ணலதாவின் அடுத்த திட்டம்? ‘‘மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘ஓசோன்’ சம்பந்தமா ஒரு ப்ராஜக்ட் குடுத்திருக்காங்க. இன்னும் வரைய ஆரம்பிக்கலை. அதை திட்டம் போட்டு முன் முடிவெடுத்தெல்லாம் செய்ய முடியாது. உட்காந்ததும் என்ன தோணுதோ வரைய ஆரம்பிச்சிடுவேன். சமயத்துல ஒண்ணு வரையணும்னு நினைச்சு, அது 4 ஓவியமாக்கூட நீளும்’’ என்று சிரிக்கிறார்.

‘நிர்பயா’ ஓவியக் கண்காட்சியில் ஸ்வர்ணலதா வரைந்த ஓவியம் ஒன்றில் காந்தி தலைகுனிந்து நிற்கிறார். காந்தி இருந்திருந்தால் அப்படித்தானே நின்றிருப்பார்?!

– பாலு சத்யா

ஆட்டமும் நானே… பாட்டும் நானே!

Image

‘தோல் பாவைக் கூத்து’ என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? ‘தசாவதாரம்’ படத்தில் ‘முகுந்தா… முகுந்தா…’ பாடலில் அசின், ஒரு சின்ன திரைக்குப் பின்னாலிருந்து பொம்மைகளை ஆட்டிப்பாடுவாரே… அதேதான் இது. பார்ப்பதற்கு சுவாரசியமாகத் தெரிந்தாலும் மகா சிரமமான கலை இது. கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட தோல்பாவைக்கூத்துக் கலையில் 50 வருடங்களாக தனியொரு பெண்ணாக சாதித்துக் கொண்டிருப்பவர் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜெயா செல்லப்பன். ஆண்களே தொடத் தயங்கும் மிகக் கடினமான, சவாலான கலையான தோல்பாவைக் கூத்தை 7வது வயதிலிருந்து இவர் செய்து வருகிறார். முற்றிலும் அழிவதற்கு முன்பாக இந்தக் கலையைக் காப்பாற்றி விட வேண்டும் என்கிற வேகம் இவரது பேச்சில் தெரிகிறது.

Image

“எங்கப்பா தோல் பொம்மைக் கலைஞர், திடீர்னு அவருக்கு தொண்டை கெட்டுப் போய், சுத்தமா பாடவே முடியலை. வேற தொழிலும் தெரியாது. வயித்துப் பிழைப்புக்கும் வழியில்லை. அப்படியும் ஒரு முறை துணிஞ்சு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. கூட்டம் கூடிருச்சு. பாட முடியலை. ஓடி விளையாடிக்கிட்டிருந்த என்னைக் கூப்பிட்டு, மடியில உட்கார வச்சுப் பாட வச்சாரு. அன்னிக்கு ஆரம்பிச்சதுதான் இந்தப் பித்து. அப்பாவுக்கு முந்தி, பாட்டனார், முப்பாட்டனார்னு எல்லாரும் இதே கலைல இருந்தவங்கதான். நான் களமிறங்கின பிறகு தோல் பொம்மையில சொல்லாத கதையே இல்லை. ராமாயணம், மகாபாரதம், நல்லதங்காள், அரிச்சந்திரன் மயான காண்டம், நளதமயந்தி கல்யாணம்னு நிறைய பண்ணிருக்கேன், தோல் பொம்மை ஆட்டிக்கிட்டிருந்த நான், பிறகு தெருக்கூத்துலயும் வேஷம் கட்ட ஆரம்பிச்சேன்.

காலம் மாற, மாற, தோல் பொம்மையாட்ட மோகம் குறைஞ்சு, ஜனங்க கூத்து பார்க்கத்தான் ஆசைப்பட்டாங்க. கூத்து கட்டறதுல வேலை சுலபம். ஆனா, தோல் பொம்மை ஆட்டறது ஆம்பளைங்களாலயே தாக்குப் பிடிக்க முடியாத கலை. பத்து பேர் கஷ்டத்தையும் ஒரே ஆள் சமாளிக்கணும். கதையில் வர்ற அத்தனை கதாபாத்திரத்துக்கும் ஒரே ஆளா நானேதான் குரலையும் மாத்தி, பொம்மையும் ஆட்டணும். நாலு பக்கமும் திரை போட்ட ஒரு மறைவான பகுதிக்குள்ள காலை மடிச்சு குத்துக்கால் போட்டு உட்கார்ந்து, ஒரு கைல கட்டையும், இன்னொரு கைல பொம்மையும் பிடிச்சுக்கிட்டு, கதாபாத்திரத்துக்கேத்தபடி சரியா குரலை மாத்திப் பேசிப் பாடவும் செய்யணும். உடம்பு ரொம்பவும் பலகீனமாகிப் போகும். மூல நோய் வரும். இத்தனையையும் சகிச்சுக்கிட்டு ராப்பகலா பாடுபட்டாலும், கூரையைப் பிச்சுக்கிட்டு காசு கொட்டாது. ஏதோ வயித்து ஈரம் காயாமப் பார்த்துக்கிற அளவுக்குத்தான் வரும்படி.

Image

எனக்கு 7 பொம்பளைப்புள்ளைங்க, ரெண்டு பசங்க.. பொண்ணுங்களை கட்டிக் கொடுத்தாச்சு. எனக்குப் பிறகு ஒருத்திகூட இந்தக் கலையை எடுக்க விரும்பலை. ஒரு மகனுக்கு ஆர்வம் இருக்கு. என் கணவரோட தம்பி, விருப்பப்பட்டு இந்தக் கலையைக் கத்துக்கிட்டு செய்திட்டிருக்காரு. நகரங்கள்லதான் தோல் பொம்மையாட்டம்னா என்னனே தெரியலையே தவிர, சில கிராமங்கள்ல இன்னும் அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. தோல் பொம்மையாட்டம்தான் வேணும்னு கேட்டு வர்றவங்களும் இருக்காங்க” என்று சொல்லும் ஜெயாவுக்கும் சமீப காலமாக உடல்நலம் சரியில்லை. பக்கவாதம் வந்த காரணத்தினால் கலையைத் தொடர முடியாத சோகம்.

Image

“அரசாங்கம் எங்களை மாதிரிக் கலைஞர்களுக்கு பென்ஷன், உதவித்தொகை, நலத்திட்டமெல்லாம் தர்றதா கேள்விப்பட்டு, அஞ்சு வருஷமா எழுதிப்போடறோம். எந்த நல்லதும் நடக்கலை. இந்தக் கலை என் உசிருக்கும் மேல. என்னோட இது மறைஞ்சிடக் கூடாதுங்கிறதுதான் என் விருப்பம். தெருக்கூத்து பயிற்சிப் பட்டறைல, விருப்பமுள்ளவங்களுக்கு இலவசமா இந்தக் கலைகளை சொல்லித் தர்றதா வாக்களிச்சிருக்காரு ஹரி கிருஷ்ணன்னு ஒரு கலைஞர். என்னால இப்ப நிகழ்ச்சிகள்தான் பண்ண முடியாதே தவிர பயிற்சிக்கு வர்றவங்களுக்கு பாடவும் அடவுகளும் சொல்லித் தர முடியும்”  – நெகிழ வைக்கிறார் ஜெயா.

– ஆர். வைதேகி