ஒரே ஒரு பூமி!

ரஞ்சனி நாராயணன்

image

உலகச் சுற்றுச்சூழல் தினம்

‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

என்ன அருமையாகக் கவிஞர் மனிதனுக்கே பூமியின் வளங்கள் எல்லாம் என்று சொல்லுகிறார்! மனிதன் ஆண்டு அனுபவிக்க என்று இறைவன் படைத்ததையெல்லாம் மனிதன் தனது பேராசையினால் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விழைந்ததன் விளைவே இப்போது உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு தினத்தை ஒதுக்கி எல்லோருக்கும் நமது சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி அதைச் சரிப்படுத்துவதும் நம் கடமையே என்று நமக்கு நினைவு மூட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது!

‘ஒரே ஒரு பூமி’ என்ற கோஷத்துடன் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஆரம்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நம்மைச் சுற்றி ஆரோக்கியமான பசுமையான சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்  பற்றியும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வரும் கேடுகள் பற்றியும் உலக மக்களிடையே இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கொண்டாட்டம். சுற்றுச்சூழலை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. யாரோ காப்பாற்றுவார்கள் அல்லது அரசு பார்த்துக்கொள்ளும் என்று நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, அதை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கான வழிகளை பற்றிப் பேசுவதும் கூட இந்த நாளை நாம் அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். ஐக்கிய நாடுகள் சபையால் மிகப்பெரிய அளவில் அனுசரிக்கப்படும் இந்த உலகச்சுற்றுச்சூழல் தினம் உலகில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள், அரசு மற்றும் ஆரோக்கிய அமைப்புகள் சுற்றுச்சூழலைக் காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசுவதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஒரு நாள்.

image

அப்படி என்ன நம் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது?

மனிதன் எப்போதெல்லாம் பேராசை கொண்டு இயற்கைக்கு ஊறு விளைவிக்கிறானோ அப்போதெல்லாம் இயற்கை சீறுகிறது. மனிதா நீ உன் எல்லையை மீறுகிறாய் என்று எச்சரிக்கை செய்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து இயற்கையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திக் கொண்டே வருகிறோம். விளைவு திடீர் மழை, தொடர்ந்து வரும் வெள்ளம். விவசாய நிலங்களிலும் நீர் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் புகுந்து மனித உயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது.

மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யாமல் போவதால் ஏற்படும் வறட்சியால் உணவுப் பயிர்கள் பாதிக்கப்படுவது, உணவுப் பொருட்கள் வீணாவது, உலக வெப்பமயமாதல், அழிந்து போகும் அல்லது மனிதனின் பேராசையினால் அழிக்கப்படும் காடுகள்; காடுகள் அருகி வருவதால் விலங்குகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இதன் காரணமாக மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் மோதல்கள், உயிரிழப்புகள் இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

image

ஒவ்வொரு வருடமும் இந்த உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வருட மையக்கருத்து ‘GO WILD FOR LIFE’ – வனவிலங்குகளை, வனங்களைப் பாதுகாப்பது, வனவளத்தை அநியாயமாக திருடி வர்த்தகம் செய்வதை எதிர்ப்பது

வனவளம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

நம்மைப் போலவே இந்த பூமியில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு நம்முடன் இயைந்து வாழப் பிறந்தவை வனவிலங்குகளும், செடி கொடி, மரங்களும். அவற்றை வாழ வைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இங்கு நடப்பதென்ன?

சட்டவிரோதமாக வனவிலங்குகள் அவற்றின் இறைச்சி, தோல், உரோமம், மற்றும் தந்தம் போன்றவற்றிற்காக வேட்டையாடப்பட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சில விலங்குகள் அவற்றின் இரத்தத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் கொல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த வியாபாரத்தால் நமது பூமியின் பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. இயற்கை வளங்கள் திருடப்படுகின்றன. பல விலங்கினங்கள் முற்றிலும் அழிந்தே போய்விடும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான விலங்குகள் சின்னச்சின்ன பூச்சிகள் அழிந்தே விட்டன. காட்டுவிலங்குகள் திருட்டுத்தனமாக கொல்லப்பட்டு, கடத்தப்படுவதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன் நமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. திட்டமிட்டக் குற்றங்கள், லஞ்ச லாவண்யங்களுக்கும் இவை வழிவகுக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மை உணரப்படுகிறது.

வனக்குற்றங்கள் பெருகுவதால், நாடுகளின் தனித்த அடையாளங்களான யானை, காண்டாமிருகம், புலி, கொரில்லா கடல் ஆமைகள் ஆகிய உயிரினங்கள் அருகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. காண்டமிருங்கங்களில் ஒருவகையான ஜாவன் ரைனோ இனம் 2011 ஆம் வருடம் வியட்நாமில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதே வருடம் கேமரூனில் கருப்பு காண்டாமிருகங்கள் அழிந்துவிட்டன. காம்பியா, பர்கினோ ஃபாஸோ, பெனின் டோகோ முதலிய நாடுகளிலிருந்து ஏப் எனப்படும் பெரிய மனிதக் குரங்குகள் மறைந்துவிட்டன. கூடிய சீக்கிரமே மற்ற நாடுகளிலிருந்தும் இந்த விலங்கினம் மறையக்கூடும். வெறும் விலங்கினங்கள் மட்டுமல்ல, மூங்கில் மற்றும் பூக்கள் கூட வன உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. ஆர்சிட் பூக்கள், ரோஸ்வுட் எனப்படும் மரங்களும் மறைந்து வருகின்றன. அதிகம் அறியப்படாத பல பறவையினங்களும் இதில் அடங்கும். கடல் ஆமைகள் அவற்றின் இறைச்சிக்காகவும் அவற்றின் மேல் கூடுகள் செயற்கை நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் செய்வதற்காகவும் வேட்டையாடப்படுகின்றன.

இந்தவகைக் குற்றங்களைத் தடுக்க மிகக்கடுமையான கொள்கைகளை அரசு அமல்படுத்தியிருக்கிறது. இது தவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சமுதாய பாதுகாப்பிற்கான முதலீடுகள், சட்ட அமலாக்கம் என்று பலவிதங்களிலும் நடவடிக்கை எடுத்ததில் சில சில வெற்றிகள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் பல உயிரினங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் காட்டு விலங்கினங்களை காப்பதை நம் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். நமது தொடர்ந்த முயற்சிகள் பல உயரினங்களை வாழவைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

image

செய்யவேண்டியவை:
தந்தத்தினாலும், விலங்குகளின் உரோமம் மற்றும் தோல் இவைகளினால் செய்த பொருட்களை வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இவைகளுக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வரவேற்பைக் கண்டு இதற்காக காட்டு விலங்குகளை நெஞ்சில் இரக்கமின்றிக் கொல்லும் கயவர் கூட்டம் இருக்கிறது. நமது தேவை குறையும்போது விலங்குகளும் அநியாயமாகக் கொல்லப்பட மாட்டா.
காடுகளை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்.
வீடுகளை அழகுபடுத்தவும் காகிதங்களுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. நகரத்தின் விரிவாக்கத்திற்காக சாலைகள் அமைக்கப்படும்போது அங்கு பல வருடங்களாக வளர்ந்து கிளை பரப்பி, நிழல் கொடுக்கும் பழைய, பெரிய மரம் தான் முதல் பலி ஆகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகளிலும் நிழல் தரும் மரங்களை அமைக்கவேண்டும். அரசு இயந்திரமே எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவ முன்வர வேண்டும்.

இலவசமாக நமக்கு கிடைக்கும் சூரியசக்தியை வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மாசுபடாத நதி நீர், சுத்தமான கடற்கரைகள், பனிமூடிய மலைகள், இயற்கை வளம் நிறைந்த காடுகள் இவை நமது அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும்படி செய்வது நம் கடமை.

image

பூமி கீதம் – இந்தியக் கவிஞர் திரு அபய் குமார் இந்த பூமி கீதத்தை இயற்றியிருக்கிறார். இந்தப் பாடல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான அரபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஹிந்தி மற்றும் நேபாளி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna
united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு இந்த நாளை முன்னிலையில் நின்று தனிச்சிறப்புடன்  கொண்டாடுகிறது. இந்த நாடு தனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளை எடுக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் அங்கோலா நாடு இந்த விழாவை முன்னெடுத்துக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் காடுகளில் வாழ்ந்து வரும் ஜயன்ட் சாபெல் ஆண்டிலோப் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. இந்த மானினத்தையும் மற்ற காடு வாழ் பிராணிகளையும் காக்க  அங்கோலா அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.

அரசு எத்தனைதான் சட்டதிட்டம் போட்டாலும், அவற்றில் உள்ள ஓட்டைகளை சாதகமாக எடுத்துக் கொண்டு மனிதம் குற்றம் புரிகிறான். மனிதனின் இந்த குணம் மாற வேண்டும். மனிதனும், விலங்குகளும் இணைந்து, இயைந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. இத்தனை வருடங்கள் இதை மறந்து இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி வருகிறோம். இனியாவது நமது பேராசைக்கு சற்று ஓய்வு கொடுத்து நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ எல்லாவகையிலும் தகுதி உள்ள உயிரினங்களை வாழ விடுவோம்.

இந்த உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை நாம் எல்லோரும் எடுப்போம்.

image

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in/

http://isaipaa.wordpress.com/

ப்ரியங்களுடன் ப்ரியா–16

சேமிப்பும் செல்லங்களும்!

sav5

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

sav3

இனிமையான இல்லறத் தலைவியின் பண்பாக அறியப்படும்

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்ற வள்ளுவனின் வரியை இன்றைய கால சூழலில் இவ்வாறுதான் கையாள வேண்டும் ,

தனது சொத்துகளையும் பாதுகாத்து தனது கணவனின் சொத்துகளையும் வளர்த்து , குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்கு வேண்டிய பாதுகாப்பை சோர்வில்லாமல் செயல் செய்பவளே நல்ல குடும்ப தலைவி.

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று பள்ளியில் படிக்கிற காலத்தில் ,மண்டையில் இடித்து, இடித்து சொல்லிக் கொடுத்துவிட்டு, படிப்பு முடிந்தபிறகு “ கடன் வாங்காத குடும்பம் கரையிலேயே நிற்கிற கப்பல்” என்று வாழ்க்கைக்கு தலைகீழ் பாடம் நடத்துவது யாருடைய தவறு? வரவுக்குள்ளாக செலவு செய்கிறபொழுது வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர , கஷ்டமா மாறாது ; வரவை மீறி , கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு கஷ்டம்  மட்டுமல்ல…  பெரும்பாலும் நஷ்டமே ..

இதை தடுக்க தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்.

sav1

சேமிப்பை முதலில் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்!

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின்  சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் நம்ம குழந்தைகளின் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்…

sav7

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.

ஏனெனில், நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.

sav2

‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது.

பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை” என்று (குறள் 759).

sav7

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.

(1) கஞ்சத்தனம்

(2) சிக்கனம்

(3) ஆடம்பரம்

(4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது  மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், ‘சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார், தாங்கள் ஏன்?‘’

உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!

”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாக அவற்றை இழந்துவிட நேரும்.

sav6

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…

Neither a borrower nor a lender be;
For loan oft loses both itself and friend,
And borrowing dulls the edge of husbandry.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு  வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன..

எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.

sav4

மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்…

பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்…

சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர … மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.

சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்!

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

  • ப்ரியா கங்காதரன்

20150414_093124

VITILIGO IS BEAUTIFUL – a photo documentary

Hello!

As a team of photographers, we bring out our maiden attempt at a photo documentary – VITILIGO IS BEAUTIFUL, for a social cause. Vitiligo is a chronic skin disease characterized by portions of the skin pigment. This documentary would tell more about their vision, thoughts, actions and goal.

We are very happy to present a photography exhibition in connection with the cause at SPACES, Besant Nagar on World Vitiligo Day (June 25) and it would be a great honor to have you for the inauguration. Kindly consider this as a personal invitation and grace the inauguration with your presence.

Team Discover

vitiligo

மகள்களைப் பெற்ற அம்மாக்களுக்காக!

fem_b

அதிதி குப்தா – மென்ஸ்ட்ருபீடியா

பெண் உடலைப் பற்றியும் மாதவிலக்கைப் பற்றியும் இத்தனை எளிதாகப் பெண் குழந்தைகளுக்குப் புரிய வைக்க முடியுமா எனத் தெரியவில்லை. திடீரென மகள்கள் எதிர்கொள்ளப் போகிற ரத்தப் போக்கைப் பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் அவர்களது உடலில் நிகழ்கிற மாற்றங்கள் பற்றியும் அதற்கு முன்னும் பின்னும் அவர்களது உடலில் நிகழ்கிற மாற்றங்கள் பற்றியும் அருஞ்சொற் பொருளுடன் விளக்கிச் சொல்வதென்பது அம்மாக்களுக்கே சவாலான காரியம்தான். அஹமதாபாத்தைச் சேர்ந்த அதிதி குப்தா, கணவருடன் இணைந்து தொடங்கியிருக்கிற menstrupedia.com என்கிற இணைய தளம், ஒவ்வொரு பெண் குழந்தையும் அம்மாவும் அவசியம் பார்க்க வேண்டியது!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காமிக்ஸ் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் வெற்றியையும் வரவேற்பையும் தொடர்ந்து, ‘மென்ஸ்ட்ருபீடியா காமிக்’ என்கிற புத்தகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

மென்ஸ்ட்ருபீடியா காமிக்ஸின் சாம்பிள் பக்கங்கள்…

Menstrupedia comic book_cover

910

13243638396582காமிக்ஸை பார்வையிடுபவர்கள்…

Educator at NGO using the comic prototype developed earlier

Girls reading the comic

அதிதி குப்தா…

Menstrupedia-Pic_new

அறிவியல் கற்றுத் தரும் தொழிற்சாலை

‘எதையும் புரிந்து படிப்பது நல்லது’… காலம் காலமாக வலியுறுத்தப்படும் வாசகம். அதைவிட முக்கியமானது படிப்பின் மேல் ஈடுபாடும் விருப்பமும் வருவது. எந்தப் பாடத்தையும் விரும்பிப் படித்தால் அதில் மாஸ்டர் ஆகிவிடலாம். ஆனால், பல மாணவர்களுக்கு அந்த ஈடுபாடு வருவதில்லை. காரணம், அதன் கடினத்தன்மை. அப்படி ஜுர மருந்து போல கசப்புத் தட்டும் பாடங்களில் ஒன்று அறிவியல்!அதையும் மாணவர்களுக்கு எளிமையாகக் கற்றுத் தருகிறது சென்னையில் உள்ள ‘சயின்ஸ் ஃபேக்டரி’ அமைப்பு. அதை நடத்தி வருபவர் சம்யுக்தா பாஸ்கர். பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர்… அறிவியலின் மேல் எழுந்த ஆர்வத்தின் காரணமாக வேலையை விட்டுவிட்டு முழு நேரத்தையும் ‘சயின்ஸ் ஃபேக்டரி’க்காக செலவழிப்பவர். தமிழகம் முழுக்க பல பள்ளிகளுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். 

_MG_0733

‘‘மாணவர்களுக்கு சின்ன வயசுல அறிவியல் புரியறது கொஞ்சம் கஷ்டம் தான். அதை சரியான முறையில நாம கத்துக் கொடுத்துட்டா போதும். ஈசியா புரிஞ்சுக்குவாங்க… அதுக்கப்புறம் அறிவியல்லதிறமைசாலியாயிடுவாங்க’’ என்கிறார் சம்யுக்தா பாஸ்கர்.

சின்னச் சின்ன செய்முறைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் மாணவர்களின் மனதில் அறிவியலை அழகாகப் பதிய வைக்கிறது ‘சயின்ஸ் ஃபேக்டரி’. குழுவாக மாணவர்கள் இந்த ஆய்வுகளைச் செய்யும்போது தங்கள் சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை மைலாப்பூரில் உள்ள சம்யுக்தா பாஸ்கரின் வீட்டில் அவரை சந்தித்தோம்.

‘‘ஸ்கூல்ல படிக்கிறப்பவே அறிவியல் பாடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அறிவியலை மனப்பாடமா படிக்கறதைவிட அர்த்தம் புரிஞ்சு படிக்கணும்னு நினைப்பேன். பள்ளிக்கூட சோதனைக் கூடத்துல மாணவர்களுக்கு கெடுபிடி அதிகமாக இருக்கும். ‘அதைத் தொடக்கூடாது’, ‘இதை எடுக்கக் கூடாது’ன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. நான் பிளஸ் ஒன் படிக்கிறப்போதான் லேபுக்குள்ளே போனேன். பியூரெட், வெர்னியர் காலிபர் இதையெல்லாம் கையால தொட்டுப் பார்த்தப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் அண்ணா பல்கலைக்கழகத்துல பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்ல சேர்ந்தேன். அதுக்கப்புறம் அகமதாபாத் ‘ஐஐஎம்’ல எம்.பி.ஏ. முடிச்சேன். ‘இன்ஃபோசிஸ்’, ‘மைக்ரோசாஃப்ட்’னு பெரிய நிறுவனங்கள்ல 14 வருஷம் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் சார்ந்த வேலைல இருந்தேன். இடையில என் பையன் ப்ரணவ் பிறந்தான். இப்போ அவனுக்கு 9 வயசு. அவனுக்கு வீட்டுல பாடம் சொல்லிக் கொடுக்குறது நான்தான்.

_MG_0757வளர வளர ப்ரணவோட கேள்விகள் அதிகமாகிட்டே போனது. நிறைய சந்தேகங்கள் கேட்டுட்டே இருப்பான். அவனோட சந்தேகத்தை தீர்த்து வைக்கறதுக்காக இன்டர்நெட்ல தேடவும்நிறைய புத்தகம் படிக்கவும் வேண்டியிருந்தது. அவனுக்கு ஒரு விஷயத்தை சரியா புரிய வைக்கறதுக்கான எல்லா முயற்சிகளையும் செஞ்சேன். சயின்ஸ்ல அவனுக்கு ஆர்வம் அதிகம். திடப்பொருள் திரவமாக மாறுவது, திரவம் திடப்பொருளாக மாறுவது எப்படிங்கறது உட்பட அறிவியல் தொடர்பான பல விஷயங்களை செயல்முறையாக கத்துக்க விரும்பினான். அதே நேரத்துல அறிவியலை எளிய முறையில அவனுக்குக் கத்துக் கொடுப்பது எனக்கு சிரமமாக இருந்தது. அப்போதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. இவனை மாதிரி அறிவியலை எளிமையாக புரிஞ்சுக்க முடியாத குழந்தைகள் எத்தனையோ பேர் இருப்பாங்க. அப்படிப்பட்டவங்கள்ல சில பேருக்காவது நாம கத்துக் கொடுக்கலாமேன்னு நினைச்சேன். ஐரோப்பிய நாடுகளில் அறிவியலை குழந்தைகளுக்குக் கத்துக் கொடுக்க ஏகப்பட்ட தனியார் மையங்களும் அமைப்புகளும் இருக்கு. சயின்ஸை விருப்பத்தோட கத்துக்கொடுக்கவும் கத்துக்கவும் நிறையபேர் ஆர்வமாக இருக்காங்க. அதே போல இங்கேயும் ஒரு முயற்சி செஞ்சு பார்க்கலாமேன்னு தோணிச்சு. என் ஃப்ரெண்ட் ரூபாவும் நானும் ‘சயின்ஸ் ஃபேக்டரி’ ஆரம்பிக்கறதுக்கான வேலைகளைத் தொடங்கினோம். அதற்கு என்னவெல்லாம் தேவைங்கிறதை பட்டியல் போட்டோம், அதையெல்லாம் சேகரிச்சோம், குழந்தைகளுக்குக் கத்துக் கொடுக்க எங்களையும் தயார்படுத்திக்கிட்டோம். அதோட பல சயின்டிஸ்ட்களை சந்திச்சு அவங்களோட அனுபவங்களையும் கேட்டோம். கெமிஸ்ட்ரி ஆய்வுகள் செய்ய தேவையான மூலப் பொருட்களை எங்கே வாங்கணும்? எந்தெந்த வயது மாணவர்களுக்கு என்னவெல்லாம் கத்துக் கொடுக்கலாம்?… இப்படி ஒரு நீளமான பட்டியல்… அதுக்கப்புறம்தான் சயின்ஸ் ஃபேக்டரி உதயமானது.

all kidsஎங்களோட முக்கியமான நோக்கம் அறிவியலை எளிமையாக மாணவர்களுக்குப் புரிய வைப்பது. பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்களை செயல்முறை மூலமாக விளக்கறது சயின்ஸ் ஃபேக்டரியின் வேலை. உதாரணமாக, மசித்த வாழைப்பழத்துல அசிட்டோன் மிக்ஸ் பண்ணினா பழத்தின் டி.என்.ஏ.வை கண்டுபிடிக்கலாம். அதை நேரடியாக செய்து காட்டி விளக்கும்போது மாணவர்களின் மனசுல பதியும். பாலில் புரோட்டீன் இருக்கறது எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதை நேரடியா பார்க்கறதுக்கு சிம்பிளான வழி ஒண்ணு இருக்கு. பாலில் வினிகரை கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்தால் புரோட்டீன் தனியாகப் பிரிந்து வரும். கிட்டத்தட்ட பனீர் மாதிரியே இருக்கும். இது மாதிரி சின்னச் சின்ன எக்ஸ்பரிமென்ட்டுகளை வீட்டுலயே செஞ்சு பார்க்குறப்போ மாணவர்களால ஈஸியா சயின்ஸை புரிஞ்சுக்க முடியும்.

Dry Ice Kids - 2இதுபோன்ற ஆய்வுகளை மாணவர்களின் வயது வாரியாக பிரிச்சு அவங்களோட கற்றல் திறனுக்கேற்ப கத்துக் கொடுக்கறோம். 4 வயசுல இருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கத்துத் தர்றோம். அறிவியல் அடிப்படையை கத்துக்கறதுக்கு இதுதான் ஏற்ற வயது. 4 -6 இடைப்பட வயசுள்ள குழந்தைகளுக்கு எளிமையான செயல்முறைகளை சொல்லித் தருவோம். ஒரு உடையாத பபிள்ஸ் எப்படி உருவாகுது, பலூனில் காற்று எப்படி நிற்குது? தண்ணீர் மற்றும் திரவங்களில் பொருட்கள் எப்படி மிதக்கின்றன?… இதையெல்லாம் சொல்லித் தர்றோம்.

10 வயசுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எலெக்ட்ரிகல் சர்க்யூட் இணைப்புகள், அவை செயல்படும் முறை என கத்துக் கொடுக்குறோம். குழந்தைகளுக்கு கத்துக்குற ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனா, அவங்களை இந்த மாதிரியான அறிவியல் பொருட்களை ஹேண்டில் பண்ண வைப்பது சுலபமான காரியமில்லை. சில குழந்தைகள் அளவுக்கதிகமான நுரை பொங்கி வந்தாலே பயந்துபோய் கையில வச்சிருக்கும் பொருளை கீழே போட்டுருவாங்க. பலூன் வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு பயப்படும் குழந்தைகளும் இருக்காங்க. குழந்தைகளுக்கு சயின்ஸ் கத்துக் கொடுப்பது சவாலான வேலை.

IMG_0395ஒரு சயின்ஸ் கிட்டை மாணவர்கள்கிட்ட கொடுத்துடுவோம். அதை வச்சு கிளாஸ்ல நாங்க கத்துக் கொடுக்கும் விஷயங்களை அவங்க வீட்டுலயும் செஞ்சு பார்த்துக்கலாம். மாணவர்களின் வயசுக்கேற்ற பொருட்கள் ஒவ்வொரு கிட்டிலும் இருக்கும். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற, பொருத்தமான கெமிக்கல்கள் இருக்கும். சின்னச் சின்ன ஆய்வுகள் செய்யத் தேவையான பொருட்கள் இருக்கும். சிட்ரிக் ஆசிட் தேவைப்பட்டா, அதுக்கு பதிலாக எலுமிச்சைப்பழசாற்றை பயன்படுத்தச் சொல்லுவோம். ஒவ்வொரு வகைக்கும் தகுந்த மாதிரி ரூ.300ல இருந்து ரூ.500 வரைக்குமான கிட் கிடைக்கும். பாதுகாப்பான அறிவியல் என்பது எங்களோட தாரக மந்திரம். சயின்ஸ் ஃபேக்டரி ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. தமிழகத்தின் முக்கியமான பள்ளிகளோட இணைந்து நாங்க வேலை பார்த்திருக்கோம். சென்னையில் டான்போஸ்கோ, வேலம்மாள் வித்யாலயா, எஸ்.பி.ஓ.ஏ. போன்ற பள்ளிகள்ல எங்க வகுப்புகளை நடத்தியிருக்கோம். பள்ளிகள்ல நிர்வாகத்தின் அனுமதியோட தினமும் ஒரு மணி நேரம் சொல்லித் தருகிறோம். இது தவிர கோடை விடுமுறையில ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறோம். இதற்கான அறிவிப்பை பள்ளி நிர்வாகத்தின் மூலம் கொடுத்து, மாணவர்களை ஒன்றிணைத்து வகுப்புகளை நடத்துவோம். பெற்றோர் ஒத்துழைப்புக் கொடுக்கறதால நிறைய மாணவர்கள் ஆர்வத்தோட கத்துக்கறாங்க. தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் எங்களிடம் அறிவியல் கத்துகிட்டு இருக்காங்க. ஏன்,எதுக்கு,எப்படிங்கிற கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாலே குழந்தைகளை அதிகப்பிரசங்கின்னு ஒதுக்கிடுறோம். அது தவறான விஷயம். கேள்வி கேட்கும் குழந்தைகள்தான் திறமை பெற்றவர்களாக வளர்ந்திருக்காங்க. குழந்தை கேள்வி கேட்டா பொறுமையாக பதில் சொல்லிப் பாருங்க. பதில் தெரியலன்னா தெரிஞ்சுக்கிட்டு விளக்குங்க. அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது’’என்கிறார் சம்யுக்தா.

‘சயின்ஸ் ஃபேக்டரி’ தொடர்பு கொள்ள…

செல்: 9884656600, 9884073425

இணையதளம்: http://www.facebook.com/pages/TheScienceFactory/130193843761340?fref=ts

– எஸ்.பி.வளர்மதி

படங்கள்: மாதவன்

தோழி நியூஸ் ரூம்

வாசிக்க… யோசிக்க…

21ம் நூற்றாண்டு? 

Image

மேற்கு வங்கத்திலுள்ள பிர்பும் மாவட்டம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கிருக்கும் காப் கிராமத்தில் 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடூரம் உலகையே உலுக்கி எடுத்திருக்கிறது. அந்தப் பெண் செய்த மாபெரும் தவறு(!) காதலித்ததே. அதுவும் வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை. இருவரையும் ஒருசேர பார்த்த சிலர் ஊர் மத்தியில் கட்டிப் போட்டார்கள். விசாரித்தார்கள். பெண்ணின் குடும்பத்தினருக்கு அபராதம் விதித்தார்கள்… 25 ஆயிரம் ரூபாய்! ‘அவ்வளவு பணம் எங்க கிட்ட இல்லை சாமி’ என்று கதறி அழுதிருக்கிறார்கள் குடும்பத்தினர். ‘அப்படியா? அவளை அந்தக் குடிசைக்கு தூக்கிட்டுப் போங்கடா!’ என்று கட்டளையிட்டிருக்கிறது பஞ்சாயத்து. ‘யார் வேண்டுமானாலும் அவளுடன் வல்லுறவு கொள்ளலாம்’ என்றும் பஞ்சாயத்துத் தலைவரால் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். விடிய விடிய நடந்தது இந்தக் கொடுமை. இறுதியில், ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என எச்சரிக்கப்பட்டு, விரட்டப்பட்டார் அந்தப் பெண். எப்படியோ தப்பித்து அவர்கள் காவல்துறையில் புகார் செய்ய, 13 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் கண்ணீர் மல்க சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்… ‘‘அவர்களில் சிலருக்கு என் தந்தையின் வயது…’’

சட்டம்… உயிர்… குழந்தை! 

Image

ந்தப் பெண்ணின் பெயர் மார்லைஸ் முனோஸ். அமெரிக்காவைச் சேர்ந்தவர். 33 வயது. 2013 நவம்பரில் மூளையில் ரத்தம் உறைந்து போனதன் காரணமாக கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மூளை செயல்பாடு முற்றிலும் இல்லாமல் போனது. இச்சூழலில் நோயாளி இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவரின் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவும் மாட்டார்கள். டெக்சாஸ் ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனை முனோஸுக்கோ தொடர்ந்து சிகிச்சை அளித்தது. காரணம், 14 வார கருவை சுமந்து கொண்டிருந்தார் முனோஸ். கருவைக் காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. முனோஸின் கணவர் எரிக், ‘சிகிச்சை தேவையில்லை… எங்கள் குடும்பத்தினர் யாரும் இதை விரும்பவில்லை’ என்றார். மருத்துவமனையோ ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குத் தொடர்ந்தார் எரிக். டெக்சாஸ் நீதிமன்றம் முனோஸுக்கு வழங்கப்படும் சிகிச்சையை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெர்மன் டாக்டர்கள் ஒரு படி மேலே போய், பழைய கேஸ் ஃபைல்களை புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இது போல 30 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் வரை உயிரோடு இருந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

சூப்பர் 50! 

Image

‘நடுத்தர வயதைக் கடந்த பெண்மணிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்கள்’ என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். அதற்கு உதாரணங்களும் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. லிஸ் டிமார்க்கோ வீன்மேன், நியூ யார்க்கை சேர்ந்தவர். 2001 செப்டம்பர் 11 அன்று, இரு விமானங்கள் வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதிய சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர். 2007ல், தன் 55வது வயதில் சுயதொழில் தொடங்க முடிவெடுத்தார், பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து கற்றுக் கொண்டார். இன்றைக்கு லிஸ் வெற்றிகரமான தொழில்முனைவோர். அமெரிக்காவில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் 55-64 வயதுக்குட்பட்டவர்கள் 23.4 சதவிகிதமாம். அவர்களிலும் பெண்களே அதிகமாம்… அப்படிப் போடுங்க!

கொஞ்சம் ‘கவனிங்க’ பாஸ்! 

Image

மெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று நம் தலைநகர் டெல்லிக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறது. ஆனால், அது பெருமைப்படும்படியான செய்தி அல்ல! ‘உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசு நிலவும் நகரம் டெல்லி’ என்கிறது அந்த ஆய்வு. சீனாவின் பீஜிங் நகரத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கே நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை அரசு நிறுவனங்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.

பசுமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 178 நாடுகளில் இந்தியா இருப்பது 155வது இடத்தில். டெல்லியின் காற்று மாசு, பீஜிங்கை விட இருமடங்கு அதிகம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு காற்று மாசு 44 சதவிகிதம் அதிகமாம். இப்படி அதிகமாவதற்குக் காரணம், வாகனங்களும் தொழிற்சாலைகளும் வெளியேற்றும் புகை. இந்த லட்சணத்தில், டெல்லி சாலைகளில் பவனி வரும் வாகனங்களோடு ஒவ்வொரு நாளும் 1,400 வாகனங்கள் புதிதாகச் சேருகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மை சீர்கெடுவது என்பது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். டெல்லியில், 5க்கு 2 பேர் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறார்களாம்.

மலாலாவின் மனம்! 

Image

‘நான் மலாலா’. பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதிய புத்தகம். கடந்த 28ம் தேதி, பெஷாவர் பல்கலைக்கழகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. என்ன காரணமோ, ‘எங்களால் போதுமான பாதுகாப்புக் கொடுக்க முடியாது’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இரண்டு அமைச்சர்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை தொடங்கி பல அரசு அதிகாரிகள் வரை நூல் வெளியீட்டை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி நிகழ்ச்சி நடத்த முயன்றபோதுதான் காவல்துறை, பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று கை விரித்திருக்கிறது. தலிபான்கள், புத்தக வெளியீடு நடக்கும் பகுதியில் இருக்கும் கடைக்காரர்களிடம் மலாலாவின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்களாம். ‘நான் மலாலா’ புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையும் விமர்சனமும் கிளம்பியுள்ளன.

கண் என்ப வாழும் உயிர்க்கு! 

Image

‘உலகில் உள்ள அத்தனை சிறார்களும் ஆரம்பக் கல்வி பெற வேண்டுமா? 70 வருசம் பொறுங்கப்பா!’ என்று ஒரு போடு போட்டிருக்கிறது யுனெஸ்கோ… ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பு. ‘உலக அளவில் 5 கோடியே 70 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள்’ என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. ‘ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசிப்பு, கணக்குப் போடுதல் திறன் இல்லை. உலகில், மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருக்கும் ஆசிரியர்களில், கால் பங்குக்கும் மேலானவர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானில், மூன்றில் ஒரு குழந்தைக்குத்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கவும், அடிப்படைக் கணக்குகளைப் போடவும் தெரிந்திருக்கிறது. இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா, தான்சேனியா போன்ற நாடுகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகளும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும்தான் குழந்தைக் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. வறிய நாடுகளில் கால்வாசிக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதே இல்லை’ என்று பல புள்ளிவிவரங்களை தெளித்திருக்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை.

 தொகுப்பு: பாலு சத்யா

அதிகம் படித்தால் குறைந்த சம்பளம்!

Image

‘‘அதிகம் படித்த பெண்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் வாங்கும் சம்பளத்துக்கும் ஆண்கள் வாங்குவதற்கும் நிச்சயம் அதிக வேறுபாடு இருக்கும். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ இப்படிச் சொல்லியிருப்பது யாரோ அல்ல… அகமதாபாத் ஐ.ஐ.எம். (Indian Institute of Management – Ahmedabad) கல்வி நிறுவனத்தில், இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட உறுப்பினர்கள் சொல்கிறார்கள்!

பெண் கல்வி வெகு அழுத்தமாக வலியுறுத்தப்படும் இந்தக் காலத்தில் இந்த ஆய்வு சொல்லியிருக்கும் கருத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அதிகம் படித்திருந்தாலும், பெண் என்கிற காரணத்துக்காகவே சம்பளம் குறைத்துக் கொடுக்கப்படுவதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அதிகம் படிக்காத பெண்கள் கூட, ஆண்களுக்கு சமமாகவோ, சில நேரங்களில் அவர்களை விட அதிகமாகவோ சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், படித்திருந்தாலோ நிலைமை தலைகீழ்!

அடிப்படைக் கல்வியோடு கொஞ்சம் கூடுதல் தகுதியோ, டிப்ளமோ படிப்போ படித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு சமமான கல்வித்தகுதி உடைய ஆண்களைவிட 10 சதவிகிதம் குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள். முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் நிலைமை இவர்களை விட மோசம். தங்களுக்கு சமமான தகுதியுடைய ஆண்களைவிட 40 சதவிகிதம் குறைந்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவில்தான் அதிகம். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலை செய்வது, வீட்டைப் பராமரிப்பது, சமைத்துப் போடுவது போன்றவை இந்தியப் பெண்கள் எந்தச் சம்பளமும் பெற்றுக் கொள்ளாமல் செய்யும் மகத்தான வேலைகள். உண்மையில் இவையெல்லாம் விலை மதிப்பிட முடியாத பணிகள். அதுவும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தேதான் இருக்கிறது. இந்த உணர்வுபூர்வமான வேலைகள் பெண்களைப் பெரும்பாலும் கட்டிப் போட்டே வைத்திருக்கின்றன. இந்த வேலைகளின் அடிப்படையில் பார்க்கப்படுவதால்தான் பெண்கள் பணிக்குச் செல்லும் இடங்களிலும் அவர்களுக்கான நியாயமான சம்பளம் மறுக்கப்படுகிறது. ஆனால், அடிமட்டக் கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஆண்களைவிட அதிகம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. உதாரணமாக, அடிப்படை கல்விகூட பெறாத பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதே தகுதியுடைய ஆண்கள் சம்பாதிப்பது வருடத்துக்கு சராசரியாக 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்தான்.

ஒரு பெரிய நிறுவனம்… அங்கே முக்கியமான பதவிக்குப் போட்டி. ஆண், பெண் இருவருமே விண்ணப்பம் செய்கிறார்கள். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தின் உரிமையாளர் பெண்களைவிட ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். வேலை கிடைப்பதற்கு முன்பாகவே பெண்கள் வடிகட்டப்படுவதும் இப்படி நடக்கிறது.

முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பெண்ணின் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். அதே முதுகலைப் பட்டம் பெற்ற ஆணாக இருந்தால், வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய். அதாவது சதவிகிதக் கணக்கில் ஆண், பெண்ணை விட 40.76% அதிகமாகப் பெறுகிறார்.

Image

இந்த ஆய்வு வேறொரு கோணத்திலும் பெண்களை அணுகியிருக்கிறது. பொதுவாக, பெண்கள் பயிற்சிகள் அதிகம் தேவைப்படும், நீண்ட நேரம் பணியாற்றும் வேலைகளை விரும்புவதில்லையாம். அந்த மாதிரியான பணிகளில் இருப்பவர்கள், திருமணம், தாய்மையடைதல் போன்ற காரணங்களால் சீக்கிரத்திலேயே வேலையை விட்டுவிடுகிறார்களாம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக, வேலைகளுக்கு இடைவெளி விடுகிறார்கள் அல்லது பகுதி நேர வேலைகளில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இது போன்ற காரணங்களால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநேரமாக வேலைக்கு வரும் பெண்களுக்குக் கிடைப்பது ஆண்களைவிட குறைந்த சம்பளமே!

சரி… தாய்மையடையாத பெண்கள்? அவர்களுக்கும் இதே நிலைமைதான். குழந்தை இல்லை என்பதற்காக அவர்களுக்கு சிறப்பாக எந்த முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. அவர்களை, ‘சீக்கிரமே அம்மாவாகப் போகிறவர்கள்’ என்று முத்திரை குத்தி அடையாளப்படுத்தியிருக்கிறது சமூகம்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மின் ’பேசெக் இந்தியா’ (Paycheck India) என்கிற ஆய்வுப் பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு தன்னார்வத் தொண்டு அமைப்பான ‘வேஜ் இண்டிகேட்டர் ஃபவுண்டேஷன் அண்ட் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ம்ஸ்டர்டாம்’ (Wage Indicator Foundation and University of Armsterdam) உதவியிருக்கிறது. இந்தியா முழுக்க இந்த ஆய்வு 21,552 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது… அதுவும் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள்!

ஆய்வு கிடக்கட்டும்… ஆண்களைவிட பெண்கள் எவ்வளவு குறைவாக வருமானம் பெறுகிறார்கள் என்பது நம் மனசாட்சிக்குத் தெரியாதா?

 

Photo Courtesy: http://freeimagescollection.com

http://www.employeerightspost.com/

– பாலு சத்யா

சாதிகள் உள்ளதடி பாப்பா!

Image

‘‘படிக்கிற பசங்களுக்கு எதுக்கு சாப்பாடு போடணும்?’’ என்ற கேள்விக்கு ஒருமுறை இப்படி பதிலளித்தார் காமராஜர்… ‘‘சாப்பாடாவது கிடைக்கட்டுமேன்னு நாலு பேரு புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பாங்கல்ல?’’

காமராஜர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல தலைவர்கள் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதற்குக் காரணம், வறுமைக் கோட்டில் உள்ள பல குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தமிழகம் மட்டுமல்ல… இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற உணவு, சுத்தமில்லாத தண்ணீர் இதுதான் பல இடங்களில் நிலைமை. ஆனாலும், அந்த உணவும் பல மாணவ, மாணவிகளுக்குத் தேவைப்படுகிறது என்பதுதான் கொடுமை. ‘பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலி… உணவில் பூச்சி மருந்து கலந்திருந்தது’, ‘சதீஸ்கரில் மதிய உணவு சாப்பிட்ட 35 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்’… தொடர்கிற செய்திகள் பீதியைக் கிளப்புவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது நாடாளுமன்றம் வரை எதிரொலித்து கலங்கடித்திருக்கிறது.  

பாராளுமன்றத்தில் இதற்காகவே இருக்கும் குழு (The Committee for the Welfare of Scheduled Caste and Scheduled Tribes) இந்தியாவில் பல இடங்களில் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை சுட்டிக் காட்டியிருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி பரிந்துரைத்திருக்கிறது. இந்தியாவில் ஒதுக்குப்புறமாக, உள்ளடங்கிய கிராமங்களிலும், கடலோரப் பகுதிகளிலும், முக்கியமாக ஒடிஸாவிலும் மதிய உணவின் போது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக உணவு பரிமாறப்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மத்திய அரசு இதற்காகவே சிறப்பு குழுக்களை ஏற்படுத்தி, அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது அந்தக் குழு. கிட்டத்தட்ட 144 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

மாணவர்கள் மனதில் தீண்டாமை என்னும் விஷ விதையை விதைக்கும் சில பள்ளிகளும் ஆசிரியர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ‘தீண்டாமை ஒரு பாவச் செயல்’ என்று காந்தி சொன்னதை பாடங்களில் கற்பித்தால் மட்டும் போதாது. அதை பள்ளிகள் செயலிலும் நிரூபிக்க வேண்டும். ‘சாதிகள் இல்லையடி பாப்பா!’ என்று பாடம் நடத்திக் கொண்டே. அதற்கு நேர் எதிராக நடந்து கொள்ளும் சிலரை என்னதான் செய்வது?

– பாலு சத்யா 

Photo Credit: http://indiagiving.wordpress.com

பெண்கள் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்?

Image

‘பெண்கள் பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, ‘பெண்கள் படிக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியைகள் நியமிக்கப்படுவார்கள். ஆண்கள் பள்ளிகளில் மட்டும் ஆசிரியர்களுக்கு அனுமதி. இருபாலரும் படிக்கும் பள்ளிகள் என்றால் அதில் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை என்றும் அரசு அறிவித்திருக்கிறது.

இந்த உத்தரவால் பெண்கள் பள்ளிகளில் மாற்றம் ஏற்படுமா? மாணவிகள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தப்பித்துவிடுவார்களா? பெண்கள் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கே…

Image

சந்தன முல்லை – குடும்ப நிர்வாகி 

பாலியல் தொந்தரவு என்ற ஒரே ஒரு விஷயத்துக்காக பெண் ஆசிரியர்களை நியமிப்பது எந்த விதத்திலும் சரியான தீர்வாகாது. ஏனென்றால், பெண் ஆசிரியர்களால் பிள்ளைகளுக்கு துன்புறுத்தல் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதற்கு ஒரு பெண் ஆசிரியர்தான் உடந்தை என்பது தெரிய வந்தது. இது போன்ற விஷயங்கள் நடக்கும்போது என்ன செய்ய முடியும்? பள்ளிகளில் ஆண்- பெண் என பிரித்து வைப்பது எந்த விதத்திலும் சரி இல்லை.

பள்ளிகளில் மட்டும் இந்த விஷயத்தை சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா? குழந்தைகள் டியூஷன் செல்லும் இடம், ஸ்பெஷல் கிளாஸ் – இங்கெல்லாம் ஆண்கள் இருந்தா என்ன செய்வது? அதற்காக பிள்ளைகளை அப்படியே விட்டுவிட முடியுமா? பெண்கள் வெளியில் வருவதால்தான்  பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று டெல்லி சம்பவம் நடந்தபோது சொன்னார்கள். இந்த மாதிரி பிற்போக்குத்தனமான அடக்குமுறைகளுக்கு பெண் குழந்தைகளை பழக்குவது நல்லதில்லை.

ஒரு நல்ல பள்ளியில் முறையான கண்காணிப்பு இருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பிருக்காது. பாலியல் பிரச்னைகளை விட பிள்ளைகளுக்கு மனரீதியான அழுத்தம்தான் அதிகம். அதைத் தீர்க்க எந்த நடைமுறைகளும் இருப்பது போல தெரியவில்லை. முதலில் நான் ஒரு தாயாக, என் பெண் நல்ல சூழலில் நிம்மதியாக படிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவேன். அதற்கு பெண் ஆசிரியர்கள்தான் தீர்வு எனச் சொல்ல மாட்டேன். முறையான விழிப்புணர்வு எல்லா ஆசிரியர்களுக்குமே அவசியம். குழந்தைகளை ட்ரீட் செய்யும் சைக்காலஜி தெரிந்தாலே போதும்… எந்த ஆசிரியராக இருந்தாலும் ஓகேதான். பெண்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் எல்லாருமே பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!

Image

ஜன்னத் – பள்ளி ஆசிரியை 

பள்ளிகள்ல பெண் ஆசிரியர்கள் நியமிக்கறதை வரவேற்கிறேன். ஏன்னா, பெண் ஆசிரியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். டீன் ஏஜ்ல இருக்குற பாய்ஸை ஹேண்டில் பண்றது ஆசிரியைகளுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயமும் கூட. இதனால டீச்சர்ஸுக்கும் மன உளைச்சல் ஏற்படும். ஆனா, அதுவே பெண்கள் பள்ளின்னு வரும்போது ரிலாக்ஸாக வேலை பார்க்கலாம். டீன் ஏஜ்ல இருக்குற பெண்கள், அவங்களுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டா ஆண் ஆசிரியர்கள்கிட்ட சொல்லத் தயங்குவாங்க. இனி அந்த பிரச்னைகள் கூட இருக்காது. பெண்கள் பள்ளிகள்ல பெண் ஆசிரியர்கள் என்பது ரெண்டு தரப்புக்குமே நல்ல விஷயம்தான். இந்த மாதிரி விஷயங்களைக் காரணம் காட்டி அரசு உத்தரவிட்டிருக்கலாம். பாலியல் தொந்தரவைக் காரணம் காட்டி இந்த உத்தரவை கொண்டு வந்திருப்பது சரியல்ல. ஏன்னா, ஏதோ ஒரு ஆண் தப்பு பண்றார் என்பதற்காக எல்லாரையும் அப்படி நினைப்பது தப்புதானே?

Image

விஜயா – கல்வியாளர் 

அரசின் இந்த உத்தரவை சோதனை முறைப்படி செய்து பார்ப்பதில் தவறில்லை. அதே நேரம், ‘பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் என்ற நடைமுறை வந்தால் ஆண்கள் எப்போதுதான் தங்களை சரி செய்து கொள்வார்கள்? ஆண் ஆசிரியர்களுக்கு முறையான கவுன்சலிங், பிள்ளைகளை ஹேண்டில் செய்யும் விதம் என எல்லாவற்றையும் முறையாக கற்றுத்தர அரசு முன்வர வேண்டும். ‘பெண் பிள்ளைகளிடம் 3 அடி தள்ளி நின்று பேச வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அவர்களிடம் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது. அவர்களை தொடுவது, அடிப்பது, உடல் பாகங்களைக் குறித்துப் பேசுவது உள்ளிட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது என முன்னரே சொல்லி, அதை அவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அரசின் உத்தரவுப்படி பார்த்தால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் பெண் ஆசிரியர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், சிறு பிள்ளைகளிடம்தான் இப்போது பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது. அவர்களால் யாரிடமும் சொல்லமுடியாது என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் அத்துமீறுகிறார்கள். அதனால், 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கும் முறையான கவுன்சலிங் தர வேண்டும். தவறான தொடுதல் போன்றவை நடக்கும்போது, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க மாணவர்கள் முன்வந்தால் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தவறுக்கு உரிய தண்டனை கிடைக்கிறது என்றால் அடிப்படை சரியாக அமைந்துவிடும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், மாணவர்களை கண்காணிக்க ஒரு குழு இருக்க வேண்டியது அவசியம்.

தொகுப்பு: எஸ்.பி.வளர்மதி

Image