இணையம் இணைத்த இதயங்களும் கரங்களும்

வெள்ளக் களத்தில் தோழிகள்

sumitha1

சுமிதா ரமேஷ் – துபாய்

முகம் பார்க்க மறந்தோம்… நலம் கேட்க மறந்தோம்… தனித்தீவுகளானோம்… தனியாய் சிரித்தோம்…உறவுகள் தொலைத்தோம்..ஸ்மார்ட் போனுக்குள் கூடு கட்டி வசித்தோம். பேஸ்புக் அல்லது ட்விட்டரில் நீந்தினோம்…வாட்ஸ் அப்பில் வானம் அளந்தோம்…எல்லையற்றுப் பறந்தோம். ஏனோ அருகில் இருக்கும் மனிதர்களை சருகெனத் துறந்தோம்… கடல் கடந்த நண்பர்களிடம் கதைகள் கதைத்தோம்.

ஒரு வெள்ளம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டியது. சக மனிதர்களிடம் இருந்து நம்மைப் பிரித்த இணையம் உலகெங்கிலும் உள்ள தகவல்களை அள்ளி வந்து வெள்ளத்தில் சிக்கிய மனிதர்களை மீட்கும் வலையாக விரிந்தது. ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு… உதவும் கரங்களை அள்ளி வந்து ஃபேஸ் புக், வாட்ஸ்அப் என இணையமும் ஸ்மார்ட் போனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரணம் வழங்கும் பணியைத் துவங்கி இன்னும் விழிகளை மூடவில்லை. இணையத்தின் இமைகளாக மாறி, இதங்களாக உருவெடுத்து, கரங்களாக அணிவகுத்து… கண்ணீர் துடைக்கும் பணியில் துபாயில் இருந்து சுமிதா ரமேஷ் செய்திருக்கும் பணிகள் வியக்க வைக்கின்றன.

திருச்சியை சேர்ந்த சுமிதா திருமணத்துக்குப் பின்னர் கணவர் ரமேஷுடன் துபாயில் செட்டில் ஆனவர். ரமேஷ் சீமென்ஸ் நிறுவனத்தில் கமர்ஸியல் இயக்குனர். இரண்டு குழந்தைகள். கணிணி, கணித ஆசிரியையாக இருந்த சுமிதா, துபாயில் வெளியில் பணிக்குச் செல்வதற்கான சூழல் இல்லாத நிலையில் தனி வகுப்புகள் எடுத்துள்ளார். பேச்சாற்றலில் வல்லவரான சுமிதா விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்று தன்னை பேச்சாளராகவும் அடையாளம் கண்டவர்.

‘தமிழ் குஷி’ இணைய வானொலியின் ஆர்ஜேவாக பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். தற்பொழுது குழந்தைகளின் படிப்புக்காக வீட்டை கவனித்த படியே சுமிதா சென்னை, கடலூர் பகுதி வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க செய்திருக்கும் பணி அளவிட முடியாதது.

இனி சுமிதா…

‘‘சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடன் வெளி நாடுகளில் உள்ளவர்கள் அவர்களது உறவினர்களின் விவரங்களைக் கொடுத்து அவர்களின் நிலை என்ன என்று ஃபேஸ்புக்கில் பதிவுகளைப் போட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. நெட்டிசன் என்ற பெயரில் ஃபேஸ்புக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தோம். ஃபேஸ்புக் பதிவுகளைத் தொடர்ந்து உதவ முடிவு செய்தோம். எங்களது குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தனர். உதவி கேட்டு வந்த தொலைபேசி எண்கள் உண்மைதானா என்பதை ஒரு குழு நேரடியாக தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்தது. இன்னொரு புறம் தன்னார்வலர்களின் எண்களை தொடர்பு கொண்டு உதவி தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் உடனடியாக அனுப்பும் பணியை செய்யத் துவங்கினோம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்டர் நெட்டை விட வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்தது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை ஜே.பி.ஜி. ஃபைலாக ஆக்கி, எந்த வழியிலும் படிக்கும் வகையில் மாற்றி பதிவு செய்தோம். 2ஜி சேவை மட்டுமே இருந்த இடங்களிலும் தகவல் பரிமாற்றம் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக இது போல் தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றினோம். உதவி கேட்டு வந்த தகவல்களை உறுதி செய்து அதிகம் பேருக்கு ஸ்பிரெட் செய்தோம். உதவும் குழுக்களைப் பற்றிய டேட்டாக்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தோம். இதனால் உதவி கேட்ட சில நிமிடங்களில் தன்னார்வலர்களையும் படகுகளையும் அனுப்பி மீட்க முடிந்தது.

குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தோம் ! 250 குழந்தைகள் மீட்க, மீட்பு குழுவிற்கு தகவல் மற்றும் ஆர்மிக்கும் தகவல் தந்தோம்

குழந்தைகள் மீட்கப்பட்டதாக கிடைத்த முதல் உறுதிப்படுத்த ப் பட்ட தகவல் ஒரு தனி உத்வேகம் தந்து இன்னமும் வேகமாக இயங்க வைத்து , நிறைய மீட்புப்பணிக்கு உதவி செய்ய வைத்தது

மீட்புப் பணிகள் குறித்த அப்டேட்ஸ் தன்னார்வலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்து முடிந்த விஷயங்களை அதிகம் ஷேர் ஆகாதபடி டெலிட்ம் செய்தோம்.

ராமாபுரம் பகுதியில் தாய் இறந்துவிட்டதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். இன்னொருவர் தன் தந்தைஇறந்துவிட்டதாகவும் அதற்கு ஃப்ரிசர் பாக்ஸ் வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இவை கிடைத்த நேரம் நள்ளிரவு… கொட்டும் மழையில் செய்வதறியாது தவித்த நொடிகள்… கண்களில் நீர் வரவழைத்தது… மனம் இறைவா என அரற்றியது.

வயதானவர்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பட்டவர்கள், மருத்துவ மனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டும் பதிவுகள் வந்தன. இவர்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவும் வழி செய்தோம்.

போரூர் பகுதியில் ஒரு ஹாஸ்டலில் வட இந்தியப் பெண்கள் மாட்டிக் ெகாண்டு உதவி கேட்டனர். இது குறித்து கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தோம். ராணுவம் அவர்களை மீட்டது. வேளச்சேரியை சேர்ந்த சாருலதா, தானே படகில்சென்றுபலரையும்மீட்டதோடு, தன் மொபைல் நம்பரையும் தந்து, பின்னர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தப் பெண்களுக்கும், தன்னால் ஆன உதவியை செய்தபடி  இருந்தார் இந்தச் சின்னப் பெண்! அவரது பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஓ.எம்.ஆர். பகுதியில் ஐ.டி.ஐ. முதல்வர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து ெகாள்ள வந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தன்னார்வலர்கள் மூலம் தகவல் மீட்புப் பணிகளை விரைவு படுத்தினோம்.

துபாயில் இருந்து நானும், அமெரிக்காவில் கார்த்திக் ரங்கராஜன், வெங்கட்ராகவன் மூவரும் மிக வேகமாக நெட்டிசன் குரூப்பில் பணிகளை பிரித்துக் கொண்டு வேகமாக செயல்பட்டோம்.

தகவல்களை உறுதி செய்யும் பணியில் நண்பர்கள் குழு வேகமாக இயங்கியது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றி அதிகமாக ஷேர் செய்யும் பணி என்னுடையது. எந்த வாலண்டியர் அருகில் உள்ளார் , யாரால் இதனை செய்ய முடியும் என்று பார்த்து அவர்களிடம் உதவி கோருவதும் அதில் சேர்ந்திருந்தது.

பள்ளிக்கரணை, கோசாலை பசு, govt  doctors தான் அட்டெண்ட் செய்ய முடியும் என்ற நிலையால் , பெங்களூரு கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் அனுப்பி விட்டோம்.

இன்னும் பலப்பல பணிகள், அடுத்தடுத்து எங்களை ஆக்டிவாக வைத்திருந்தன என்றால் மிகையாகாது.

இன்னமும் தொடந்தபடியே இருக்கிறது… மேற்சொன்னவை நினைவில்வந்துஎட்டிப்பார்த்த சில துளிகளே…

தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் உதவிப் பொருட்கள் உள்ள இடங்களையும் தேவைக்கான இடங்களையும் மிகச்சரியாக இணைக்க இணையமும் சில இதயங்களும் உதவின. மனிதம் இன்னும் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இது.

தமிழ்நாட்டை விட்டு வந்த பின்னர் நான் நண்பர்களுடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முகம் தெரியாத தம்பிகள் நட்பிலும் இல்லாதவர்கள் என்னை அக்கா என அழைத்து பேசும்போது வெள்ளம் சேர்த்த உறவுகளாக எண்ணுகிறேன். சின்னச் சின்ன உதவிகளைக் கூட இணையத்தின் வழியாக செய்ய முடிகிறது. இணையம் இவ்வளவோ இதங்களையும் கரங்களையும் இணைத்து சாத்தியப்படுத்தியுள்ளது. ஒருவேளை நான் சென்னையில் இருந்திருந்தால் கூட இவ்வளவு பேரை இணைத்திருக்க முடியாது. இணைய வசதி உள்ள இடத்தில் இருந்ததால் வேகமாக செயல்பட்டு பல உயிர்களை மீட்க முடிந்தது. பலவித உதவிகளையும் தேவையானவர்களுக்கு கிடைக்கச் செய்ய முடிந்தது. நாங்கள் செய்திருக்கும் வேலை சிறுதுளியே’’ என்கிறார் சுமிதா.

சுமிதாவின் பதிவுகளைப் படிக்க:

சுமியின் கிறுக்கல்கள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 10

புடவை… ரொம்ப பெரிய தலைப்பு …
அழகாக மடித்து கொடுத்தால்
அருமையாக படிக்கலாம்!
 

IMG_7101
பால் நிலவு
பருத்தியை நூலாக்கி …
விண்ணில்  
தறி செய்து…
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க …
நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!
Sundari Silk_Day 2 -09
புடவை ,நம்ம எல்லோருக்கும் ரொம்பபிடிச்ச விஷயம்… பிடிச்ச விஷயத்தை பிடிச்ச மாதிரி நாம எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறோம்?

அதனால சேலை பற்றி கொஞ்சம் பேசுவோமே…

கடலில் இருக்கும் மீனை கூட எண்ணிவிடலாம்… பெண்கள் நம் மனதில் இருக்கும் புடவை பற்றிய ஆசைகளை மட்டும் எண்ணி விடவே முடியாது!

ஆதிகால  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பதில் ஒரு வரி வருகிறது ..

*பாத்து இல் புடைவை உடை இன்னா*

பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.

அப்போவே பாருங்க… நம்ம முன்னோரே சொல்லி இருக்காங்க.. சரியான முறையில் இல்லாத புடவை உடுத்துவது துன்பம் என்று.

அப்போவே அப்படி என்றால் இப்போ நாம எப்படி இருக்கணும்?

நாம்  கட்டுகின்ற தைக்கப்படாத உடையான புடவை  பல்லாயிரம்   ஆண்டுகளுக்கு முன்பே  பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் ஏதும்  இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் புடவைகள்  இருந்திருக்கின்றன.

Sundari Silk_Day 2 -03

புடவைகளின் வகைகள்

பட்டு, கைத்தறி ,சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் ,டிசைனர் எம்ப்ராய்டரி,  டிசைனர் பார்ட்வேர் ,  டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா , ஹாஃப் ஆம்ப்,  ஹாஃப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், டெனிம்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைகின்றன ..

img_02_black copy

புடவைகள் தேர்வு செய்யும் முறை

பொதுவாக நாம் கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை  விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். அவர் ஒன்னு ஒண்ணா எடுக்க எடுக்க நம்ம மனசுல  வரும் பாருங்க ஒரு சுனாமி பேரலை… இதை எடுப்போமா அதை எடுப்போமா என்று!

அங்கேதான் நாம கவனமா இருக்கணும்…. வெறும் கண்ணைப் பறிக்கும் அழகில் மயங்காம, நாம குடுக்கும் பணத்திற்கு வொர்த் இருக்கா? இதை நாம கட்டிய பின்னாடி நல்லா இருக்குமா ? துணியின் தரம் என்ன? இதையெல்லாம் நிதானமா யோசிச்சு தான் தேர்வு செய்யணும்.

எங்கே ப்ரியா. அதையெல்லாம் பார்க்க முடியுது ?? சுத்தி 10 கண்ணாடி வச்சு சேலையை தோளில் வச்சு நம்மை வாங்க வச்சு விடுறாங்களே என்று மட்டும் சொல்லாதிங்க… நம்ம பணம் நாமதான் பொறுமையா தேர்வு செய்யணும்!

தரம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்..

அதைப் போலவே நம்ம உடல்வாகு, நிறம்பொருத்தும் தேர்வு செய்யணும்.

ஒரு  புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது… எனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் ..

‘இந்த நினைவு மாறாது, யார் என்ன சொன்னாலும் , இதற்காக  நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்!

img_01 copy
புடவை  கட்டும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை

பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

சில புடவைகளில்  உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.

புடைவையின்  ஒரு முனையில் முந்தானையும் மறுமுனையில் சில சேலைகளில்  தைப்பதற்கான ப்ளவுஸ் துணியும் இருக்கும். ப்ளவுஸ் தைப்பதற்கான துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும். கட்டுவதற்க்கும் கனமாக இருக்கும்..

புதுப் புடவை  கட்டுவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் தேய்த்து   கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய  உதவி செய்யும் ..

_DSC4555
சற்று உயரமானவர்களுக்கான புடவை  முறைகள்

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.

அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.

கொஞ்சம் பருமனானவர்களுக்கு  மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்..

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.

பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

உயரம் குறைவான தோழிளுக்கு  புடவை முறைகள்

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.

டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.

கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஊடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லைட் வயலட், வெளிர் நீலத்தில் பூக்கள் இதெல்லாம் ஓகே.

ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.

சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்த வேண்டாம். மேலும் குண்டாகக் காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்…

_DSC4454l

புடவைகளை எப்படி பாதுகாப்பது?

ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்…

விலை உயர்ந்த புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

விலை உயர்ந்த உடைகளை வைக்கும் வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது வார்ட்ரோபின் வாசனையை தரும். ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது. பர்ஃப்யூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெளளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம்.

உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில்  கறை உண்டாக்கும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.

நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும்.

புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்..

பால் நிலவு   
பருத்தியை நூலாக்கி…
விண்ணில்  
தறி செய்து ..
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க…

நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!

 

– ப்ரியா கங்காதரன்

v1படங்கள்: சுந்தரி சில்க்ஸ்

ப்ரியங்களுடன் ப்ரியா – 6

காலத்தை காதலிப்போம்! 

time management

24 மணி நேரம்
போதவில்லை…

என் அவசர ஓட்டங்கள்
சிறு நடையாக 
நிறம் மாறி இருக்கும்…

என் சிந்தனைகள்
கொஞ்சம் இளைப்பாறி இருக்கும்…

என் வாசிப்புகள்,
மூச்சிரைக்காமல் முடிந்திருக்கும்…

இன்றைய மிச்சங்களை
நாளைக்காக
பொறுக்கி வைப்பதும்,
நாளைய கனவுகளை
இன்னோரிடத்தில்
நறுக்கி வைப்பதும்
இல்லாமல் இருந்திருக்கும்…

என்  மெல்லிய காலைத்
தூக்கம்  தொடர்ந்திருக்கும்…

என் பின் மாலைப்
பொழுதின் ஏக்கம்
இரவைத் தொட்டு முடிந்திருக்கும்…

என்
வீட்டு  ரோஜா
இதழ்களின் இளமை
இன்னும்
கொஞ்சம் நீண்டிருக்கும்…

என்னை விடவும்
ஏராளமாய்,
அந்த
ஈசல் பூச்சி மகிழ்ந்திருக்கும்…

‘என்ன எழுதலாம்?’ என்று எண்ணும்போதே எடிட்டோரியலிலிருந்து ஒரு எஸ்.எம்.எஸ்… ‘எண்ணியது எதுவாகினும் எழுதலாமே!’ என்று. இந்த எழுத்துத் சுதந்திரமே வினை  ஊக்கியாக எழுதத் தூண்டுகிறது. நேரமின்மையைக் காரணப்படுத்த எத்தனித்த போது, ஏன் ‘காலக் கையாளல்’ (அதாங்க… டைம் மேனஜ்மென்ட்) பற்றி கொஞ்சம் எழுதலாமே என்று தோன்றியது.

நம் அனைவருக்குமே  ஒரு நாள் என்பது 24 மணிநேரமாக  ஒதுக்கப்பட்ட ஒன்று. (பகல் இரவின் நேரம் பருவகாலம் தொட்டு மாறுப்பட்டாலும்,புவியமைப்பின் தன்மையால் சூரிய நேரம் மாறுப்பட்டாலும், ஒரு நாள் என்பது பூமியில் 24 மணிநேரம் மட்டுமே).

இந்த வரையறுக்கப்பட்ட மணித்துளிகளுக்குள் சிலர் மட்டும் வெற்றியாளராக வலம் வருவதற்கு, காலத்தை அவர்கள் கைக்குள் வைத்திருப்பதே காரணம்.

Good time management requires an important shift in focus from activities to results: being busy isn’t the same as being effective. (Ironically, the opposite is often closer to the truth.)

எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ‘A Good Start is Half Done’  என்று சொல்லுவார்கள் . ‘திட்டமிடப்பட்டு தொடங்கும் யாவும் வெற்றியை நோக்கியே பயணம் செய்யும்’ என்பது பிரபஞ்ச உண்மை .

time management 1

உலகப் புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை டைம்  மேனஜ்மென்ட்டுக்கு 10 டிப்ஸ் தந்திருக்கிறது. ‘வெற்றிபெற்ற மனிதர்கள் இதை மட்டுமே விரட்டிச் சென்றனர்’ என்று கூடவே குறிப்பும் சொல்லப்பட்டு இருக்கிறது.

  1. We often talk about not having enough time. Rather than focusing on that, and complaining to yourself or others about not enough time, think about what you do have enough time for. Start talking or thinking about that instead.
  1. Start within five minutes of sitting down at your desk and switching on your computer. Half an hour or an hour wasted here on procrastination or distractions is costly.
  1. Value your time and other people will do the same.
  1. When things get really pressurised and you’re tight for time, ignore email completely.
  1. We’re all equal when it comes to time.
  1. Get into the habit of switching off email whenever you can, even if this is only for 15 minutes or 30 minutes at a time.
  1. Use your time for the things that are worth it.
  1. Sleep.

நேரமில்லை என்று யார் வேண்டுமானாலும் அலுத்துக் கொள்ளட்டும். ஆனால், விவசாயி ,தொழில்புரிவோர் ,கல்வியாளர் (mentor), மருத்துவர் (doctor) இவர்களின் நேரமின்மை என்பது உடனே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாகும். ஏனெனில், இவர்களது நேரமின்மை என்பது எதிர்காலச் செயல்பாடுகளை முடக்கிவிடும். இதனால் பாதிக்கப்படுவது நாட்டின் வளர்ச்சிதான். ஆகவே, இதைக் களைவது முக்கியம்.

time-management-3

ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் இரண்டு. ஒன்று, வழக்கமான செயல்பாடுகள் (Routine Activities). மற்றொன்று, மேம்பாட்டு செயல்பாடுகள் (Business Development Activities).

பொதுவாக ஒரு நிறுவனம் வழக்கமான செயல்பாடுகளுக்கு 60 சதவிகித நேரத்தையும், மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு 40 சதவிகித நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? தவறான நேர ஒதுக்கீட்டுத் திட்டமிடல் காரணமாக, 100 சதவிகித நேரத்தையும் வழக்கமான செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டி இருக்கிறது. சில நிறுவனத் தலைவர்களுக்கு அதுவும் போதவில்லை. பிறகு எப்படி வளர்ச்சியைப் பற்றி தலைவர்கள் யோசிப்பது, திட்டமிடுவது, செயல்படுவது?

நேர ஒதுக்கீட்டை, இரண்டாகப் பிரிக்கலாம். செயல்பாடுகள் சார்ந்தது மற்றும் நபர்களைச் சார்ந்தது. முதலில் செயல்பாடுளை அடிப்படையாகக் கொண்ட நேர ஒதுக்கீட்டைக் காண்போம். உங்களது அனைத்துச் செயல்பாடுகளையும் வரிசையாக எண்கள் போட்டு எழுதுங்கள். இருபதானாலும் சரி, இருநூறானாலும் சரி. எழுதிவிட்டீர்களா? இப்போது அதை, கீழே உள்ளபடி வகைப்படுத்துங்கள்.

time management 2

  1. உடனே செய்ய வேண்டியது.
  2. பிறகு செய்துகொள்ளலாம்.
  3. எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
  4. முற்றிலும் நிராகரித்து விடலாம்.

இதன்படி வகைப்படுத்தி விட்டீர்களெனில், உடனே செய்ய வேண்டிய செயல்பாடுகள் அதாவது Aன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். முற்றிலும் நிராகரித்து விடக்கூடிய பணிகள் நிறைய இருப்பதையும் நீங்கள் உணரலாம். எதை, எப்போது செய்வது, எந்த C செயல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, எந்த செயல்களுக்கு முழுக் கவனம் செலுத்துவது என்ற திட்டமிடல் மட்டுமே நமக்கு நன்மை தரும்.

Corporate உலகில் யாரும் கடின உழைப்புக்கு மதிப்பளிப்பது இல்லை  என்பதே உண்மை. அதற்கான தேவையும் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. எல்லாம் எதிர்பார்ப்பது ஸ்மார்ட வொர்க். கொடுக்கப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக முடித்து கொடு, பின் உன்னைப் பற்றிக் கவலை இல்லை என்பதே அனைவரும் எதிர்பார்ப்பது.

எல்லோருக்கும் ஒரே மாதிரியாக 24 மணி நேரத்தைத்தான் கொடுத்திருக்கிறார் கடவுள். சிலர் அந்த நேரத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தி நிறைய விஷயங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். சிலரோ எல்லா வேலைகளையும் டென்ஷனோடு ஆரம்பித்து, சரியாக முடிக்கவும் முடியாமல் சொதப்பி விடுவார்கள். ஒரு சிலரால் முடிந்த விஷயம் ஏன் பெரும்பாலானவர்களால் முடியவில்லை என்று பார்த்தால், அவர்களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் சூட்சுமங்கள் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

சரி எங்கிருந்து இந்த டைம் மேனஜ்மென்ட்  பழக்கத்தைத் தொடங்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன? குழ்ந்தையில் இருந்தே தொடங்குதல் நலம். பெரும்பாலும் பெற்றோர் வளைப்பதாக நினைத்து உடைத்து அல்லவா விடுகிறோம், பல நேரங்களில். அதிகக் கட்டுபாடுகளுடன் வளர்த்தெடுக்கும் பிள்ளைகள் பிற்காலத்தில் ஒன்று அதி நல்லவனாகவோ அல்லது கட்டுப்பாடு அற்ற கயவர்கள் போல   மட்டுமே மாறுவதாக மனநல மருத்துவர்களின் கணிப்பு சொல்கிறது.

சின்னச் சின்ன அன்பாலும், பாராட்டுகளாலும் சொல்லப்படும் யாவும் குழ்ந்தைகளின் மனதில் பசுமரத்தாணி போல் பதியம் இட்டு வளரும். இவ்வளவு நேரம் படிப்புக்கும் விளையாட்டுகும் நேரம் ஒதுக்குதல் நலம் என்று சொல்லி புரியவைப்பதோடு, தேர்வு  முடிவுகள் வரும் போது அதை அவர்களுக்கு பாராட்டாகச் சொல்லுதல் நல்ல பலனைத் தரும்.

எந்தெந்த நேரங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?

காலை நேரத்துப் பரபரப்பு (குழந்தைகளை பள்ளிக்கு, கணவரை வேலைக்கு அனுப்பும் சமயத்தில் தலை கிறுகிறுத்துப் போகும்).

ஒர்க்கிங் வுமனாக இருந்தால் கணவர், குழந்தைகளை ஆபீசுக்கு அனுப்பிவிட்டு, தானும் ரெடியாகி அரக்கப் பரக்க பஸ் பிடிக்க ஓடும் நேரங்கள். இந்த இரண்டு பிரச்னைகளையும் அநேகமாக எல்லாப் பெண்களும் சந்தித்து வருகிறார்கள்.

time management 4

காலை நேரத்துப் பரபரப்பை எப்படி சமாளிப்பது?

திட்டமிடுங்கள். அதுதான் உங்கள் டென்ஷனை குறைக்க முதல் வழி. யூ.கே.ஜி. படிக்கும் பையன்,  பிஸினஸ் செய்யும் கணவர் இருவரையும் காலை ஒன்பதரை மணிக்குள் கிளப்ப வேண்டும். டி.வி. பார்த்துக் கொண்டே மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து விடுங்கள்.

சமைக்கும்போது குழப்பம் வரவே கூடாது. உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார் வைக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாறக் கூடாது. ஏனென்றால் காலை நேரப் பரபரப்பை குழப்பங்கள் ரொம்பவே அதிகப்படுத்திவிடும்.

அதேபோல் முதல் நாளே குக்கர் வைக்கத் தேவையான அரிசி, பருப்பைக்கூட தனித் தனியாக எடுத்து வைத்து விட்டால் சமையல் சுலபமாகிவிடும்.

கடாயில் கடுகை வெடிக்க விட்டு விட்டு கறிவேப்பிலை எடுக்க, கொத்தமல்லி எடுக்க என்று ஒவ்வொன்றுக்காகவும் ஃப்ரிட்ஜை நோக்கி ஓடி வருவதைத் தவிர்த்து விடுங்கள். நேர விரயத்தோடு கால்வலியும் வரும். அதனால் சமைக்கத் தேவையான அத்தனை பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமையுங்கள்.

வாட்டர் பாட்டில், ஷூ, சாக்ஸ், டிபன் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ் முதலியவற்றை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல், தாங்களே எடுத்துக் கொள்ளும்படி உங்கள் குழந்தைகளைப் பழக்குங்கள். ஏனென்றால் இது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள்தான் காலை நேரத்து டென்ஷனை அதிகப்படுத்தும்.

ஒவ்வொரு பொருளும் அதற்குரிய இடத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை எடுத்துப் பயன்படுத்திய பிறகும் மீண்டும் எடுத்த இடத்தில் அந்தப் பொருளை வைக்க வேண்டும்.

இந்த சூட்சுமத்தை சரியாகக் கையாண்டால் இல்லத்தரசிகள் கையில் எக்கச்சக்கமான மணித் துளிகள் தவழும்.

இதை திட்டமிடல் மூலம் லகுவாக சரி செய்யலாம்.

Business clock

Business clock

கிடைக்கும் நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு நாமே ஒரு திட்டமிடலை உருவாக்க வேண்டும்.

* என்னென்ன வேலைகளுக்காக எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்?

* தேவையில்லாமல் பொழுதை போக்கும் நேரங்கள்.

* தேவைக்கும் குறைவாக இருக்கும் நேரங்கள்.

* வருங்காலத் தேவைகள்.

* வருங்காலத்துக்காக தயாராக என்ன செய்யலாம்?

* தன்னிடம் குறைவாக இருக்கும் திறனை, கிடைக்கும் நேரத்தைக் கொண்டு எப்படி மேம்படுத்துவது?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய்ந்தால், நேர திட்டமிடல் குறித்த ஒரு தெளிவான வரையறைக்குள் வர முடியும். திட்டமிடல் குறித்த இந்த வரையறை எதிர்காலத்துக்கான முடிவுகளை எடுக்கும்போது மிகவும் துணை புரியும்.

ஏனெனில் உங்கள் மூளைக்குள் எப்பொழுதும் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் நீங்கள் முடிவுகளை எடுக்கும்பொழுது அது உங்களை வேகமாக இயங்க கட்டாயப்படுத்துகிறது.

நேர மேலாண்மையே சுறுசுறுப்பையும் செயல் திறனையும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கிடைக்கும் சுறுசுறுப்பும், தெளிவான திட்டமிட்ட செயல் வேகமும் நம்மை முன்னேற்றத்துக்கான வழியில் அழைத்துச் செல்லும்.

‘நேரத்தை வீணாக்குவது என்பது வேண்டாத செயலை செய்வது மட்டுமல்ல, வேண்டிய செயலை செய்யாமல் இருப்பதும்தான்.’

நேர மேலாண்மைப்பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், இப்போதைக்கு நேரம் அவ்வளவுதான்.

காலத்தை காதலிப்போம்!

– ப்ரியா கங்காதரன் 

Priya

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

ப்ரியங்களுடன் ப்ரியா – 4

ப்ரியங்களுடன் ப்ரியா – 5

Image courtesy:

http://www.hercampus.com

http://bitesizebio.s3.amazonaws.com

http://www.timelm.com

https://www.toppr.com

http://www.earlytorise.com/

ப்ரியங்களுடன் ப்ரியா – 4

பயணங்கள் முடிவதில்லை!

journey

பயணங்கள்

சுவாரஸ்யமானவை…

முடிவற்ற அன்பில்

உன்னை தேடித்

தொடர்கிறது என் நெடுவழிப் பயணம்!

யாருமற்ற சாலை… கதிரவனைத் தன் கிளைக்குள் 

மறைக்கும் அடர் மரங்கள்… அடிவானத்திலிருந்து மெல்ல 

கசிவது போல வெளிச்சம்… தலை கோதிச்செல்லும் காற்று

காற்றும் மெல்லிய வெளிச்சமும் ஏகாந்தமான வெளியும்

மரங்களும் என்னுடன் பயணிக்க 

நானும் பயணிக்கிறேன்.

சின்ன வயதில் மிகவும் ஆசைப்படும் விஷயங்கள், கிடைத்த பிறகு வெறுத்துப் போய்விடுவதுண்டு. ஆனால், எப்போதுமே எனக்கு வெறுக்காத விஷயம் பயணங்கள்.  பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். வெற்றுப் பையோடு கடைக்குச் செல்கின்றவர் திரும்பும்போது வாங்கும் பொருட்களையெல்லாம் அதில் அடைத்து வருவார். அதுபோல பயணத்தை மேற்கொள்கின்றவர் மனது நிறைய பல அனுபவங்களை  நிறைத்துக் கொண்டு திரும்பும் வாய்ப்புக் கிடைக்கிறது.  பயணம் என்பதே ஓர் இனிமையான அனுபவம்தான். அது பேருந்தாக இருந்தாலும் சரி, ரயிலாக இருந்தாலும் சரி. விமானமாக இருந்தாலும் சரி. ஆனாலும், பேருந்துப் பயணத்திலும், ரயில் பயணத்திலும் சந்திக்கும் விதவிதமான மனிதர்களையும், காணும் பல அற்புதக் காட்சிகளையும் விமானத்தில் செல்லும்போது நிச்சயம் காணமுடியாது.

Tamilnadu_Bus

பேருந்துப் பயணங்கள்

சிறு வயதில் பேருந்தில் செல்வதே அலாதியான இன்பம் தரும் அனுபவமாகத்தான் இருந்தது.  முதல்முறையாக தனியாகப் பேருந்தில் பயணம் செய்த போது ஏதோ மிகப் பெரிய சாதனையைச் செய்ததைப் போன்ற ஓர் ஆனந்தம். இத்தனைக்கும் அந்தப் பயணம் மிகப் பெரும் தொலைவெல்லாம் இல்லை. வெறும் 24 கி.மீ. மட்டுமே. ஆனால், அந்த 24 கி.மீ. தூரப் பயணத்தைப் பற்றி நாள் முழுக்கப் பேச விஷயங்கள் இருந்தன. கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தது முதல் தினமும் பேருந்துப் பயணம் செய்ய வேண்டியதாகிவிட்டது.  அந்த அரை மணி நேரப் பயணத்தில் பார்க்கும் நிகழ்வுகளை தனித்தனி சிறுகதைகளாகவே எழுதலாம்.   ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்தாலே எரிந்து விழும் நடத்துநர்களைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, நாலரை ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் சில்லரை கொடுத்த நடத்துநர்கள் ஆச்சரியமானவர்களாகத்தான் தெரிந்தார்கள்.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து ‘‘எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க’’ என்று கமென்ட் அடித்த  மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டுவிட்டு, கண்களை மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில்தான்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும், நடத்துநரோ அல்லது ஒரு நடுவயதுப் பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் காண்பதும் பேருந்துப் பயணங்களில்தான்.  இன்று  பேருந்தில் ஏறியவுடன் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பக்கத்தில் இருப்பவர் யார், என்ன என்கிற அக்கறை இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் இந்த நினைவுகள் எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருக்கின்றன.

train

ரயில் பயணங்கள்

காலம் பல கடந்தாலும் என்றும் சுகம் தரும் இனிமையான பயணம் ரயில் பயணமே.  எப்படித்தான் இந்த ரயிலுடன் சேர்ந்து மரங்களும் வேகமாக நகர்கின்றனவோ என வியந்த சிறுவயது பிராயத்தில்ஆரம்பித்தது  என் ரயில் சினேகம்.

ரயில் பயணத்தில் நள்ளிரவில் கண்  விழித்து,  இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ?

போட்டி  போட்டுக் கொண்டு ஜன்னலோர  இருக்கையில் அமர்ந்து வயல்வெளிகளையும் மலையையும் ரசிக்க ஆரம்பிக்கையில் தொடங்கியது இயற்கை மீதான காதல்.

காற்றை ரயில் பயணத்தின்  அருகாமையின்றி  உணர இயலாது. தலையைக் கோதிவிடும் காற்று. முகத்தில் விரல்களால் தடவிவிடும் காற்று. உடம்பின் மீது  பூ உரசுவது போல  உரசும்  காற்று. காது மடல்களில் கூச்சத்தை உண்டாக்கும் காற்று. நீருற்றுப் பீறிடுவது போல பொங்கி வழியும் காற்றின் அருகாமையில், ஒரு காகிதத்தைப்  போல நம்மைக்  காற்றிடம் ஒப்படைப்பது ரயில் பயணங்களில் மட்டுமே நிகழும் அற்புதம்.

சிறுவயது பயணம் ஒன்றில், பக்கத்து இருக்கை பயணி கொடுத்த நாவலை வரிவிடாமல் படித்ததில் தூவப்பட்டது வாசிக்கும் பழக்கத்துக்கான விதை. இப்படிப் பல வகைகளில் மனதுக்கு மிக நெருக்கமானதாகிவிட்டது ரயில் பயணம்.

நிசப்தமான நிசப்தம். வெளிச்சமற்ற விளக்கொளிகள். பறவைகள் இல்லாத முகில். யாரும் கடக்காத  பாதைகள். தனித்திருக்கும் பனைமரங்கள். மேகம் கவிழாத நீர்நிலைகள். பாறைகள். பரவிக் கிடக்கும் கற்கள். தெறித்த மண்பானையின் வயிற்றை நினைவுபடுத்தும் பாலத்தின் அடிப்பகுதி என இன்றும் நீள்கிறது ரயில் பயணங்களில்  குழந்தை போல் கும்மாளமிடும் மனது…

Plane landing by sunrise

விமான பயணங்கள்

விமானம்… எப்போதுமே எனக்கு ஓர் அதிசயம். அதிசயம் என்று சொல்வதைவிட பிரமிப்பு என்றுகூடச் சொல்லலாம். சிறு வயதில் எங்கள் ஊரில் விமானம் பறப்பதை எப்போதோ ஒருமுறை பார்த்ததால் வந்த பிரமிப்பா என்று தெரியவில்லை. விமானச் சத்தம் கேட்டாலே வீட்டுக்குள் இருந்து அவசரமாக வெளியில் ஓடி வந்து பார்த்த காலங்கள் இன்றும் மனதில் நினைவுகளாக  இனிக்கின்றன.

முதன்முதலில் எதைச் செய்தாலும் அது ஒரு புதிய அனுபவம்தான். நான் முதன் முதலில் விமானத்தில் செல்லப் போகிறேன் என்று தெரிந்தவுடன் என் மனம் ஆகாயத்தில் பறந்தது. சின்ன வயதில் இருந்து அண்ணாந்து பார்த்த ஒன்றில் அமர்ந்து செல்ல போகிறோம் எனும் போது மனம் பறக்காதா என்ன?

நான் கற்பனையில் நினைத்ததைவிட மிகவும் சிறிய விமானம். உள்ளே போகும் போதே விமான பணிப்பெண்கள் காலை வணக்கம் சொன்னார்கள். அந்த நிமிடம் முதல் விமானம் தரை இறங்கும் வரை அவர்களின் புன்சிரிப்பு ஒரு மில்லி மீட்டர்கூட கூடவோ, குறையவோ இல்லை. ஐந்து நிமிடங்களில் விமானம் கிளம்ப ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்த ஜன்னல் ஓர இருக்கையே கிடைத்தது.

ஓடுகளத்தில் மெதுவாக ஓடிய விமானம் திடீரென வேகம் பிடித்தது. மெதுவாக மேலே செல்லச் செல்ல, காதினுள் ‘கொய்ய்ய்’ என்று ஒரு சத்தம் மட்டுமே கேட்டது.

காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு புதிதாக ஓடிப் பழகும் சிறு பறவை போல மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கையிலேயே, உள்ளந்தனில் புதியதாக உத்வேகமொன்று பிறந்தது போல, சற்று வேகமாக ஓடத் தொடங்கி, வானில் ஜிவ்வென்று சுதந்திரமாக சிட்டெனப் பறந்திட சிறகுகள் விரித்துப் பறக்கத் தொடங்கியது விமானம்.

‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது’ என்று சொல்வார்கள். ஆனால், இந்த இயந்திரப் பறவை உயரே போகப் போக ஊர் கட்டிடங்களெல்லாம் குருவி மாதிரி தெரிய ஆரம்பித்தன. ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குப் பிறகு வெறும் மேகம் மட்டும்தான் தெரிந்தது.  என்ன இருந்தாலும் பகல் நேர விமானப் பயணம் போல ஓர் இனிமையான பயணம் வேறில்லை.

விமானம் வானில் ஏற ஏற, விதவிதமான  உணர்வலைகள். ஏதோ திடீரென வாய்க்கும் வயிற்றுக்கும் இடையே பெரிய காற்றுப் பந்தொன்று ஏறி இறங்குவது போல், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளில் இருந்து விடுபட்டு, ஆகாயத்திலிருந்து பூமியைக் கண்டால் எழில் ஓவியமாகக் காட்சியளிக்கிறது. விடிகாலை மின் விளக்குகளின் ஒளியில், பூவுலகே ஜோதி வடிவமாகக் காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களின் ஒளியும், அவற்றின் அணிவகுப்பும் ஏதோ விழா அணிவகுப்புப் போலத் தெரிகிறது. பகல் பொழுதினிலோ, இதுவரை ஓவியர் எவரும் வரைந்திடாத எழில் ஓவியமென காட்சியளிக்கிறது. மலைகள், ஓடைகள், நதிகள் என இறைவனின் கைவண்ணத்தில் உருவான பூரணத்துவம் வாய்ந்த இயற்கையின் அழகை இன்பமாக  உணரச் செய்தது.

தரையிலிருப்பதெல்லாம்  காண்பதற்கு  சிறு சிறு கடுகாக  மாறிப் போக, ஆகாயத்தின் எழில்  மனதைக் கொள்ளை கொள்கிறது. விமானம் இன்னும் சற்று உயர ஏறி  மேகக் கூட்டங்களின் மீது மிதக்கையில் பஞ்சுப் பொதிகளென வானில் மிதக்கும் மேகங்களை  சிறிது  கைகளில்  அள்ளிக் கொண்டுவிட்டால் என்ன என்று எண்ணுமளவுக்கு கொள்ளை அழகுடன் விளங்கின மேகக் கூட்டங்கள்.

பகலவன் துயில் கலைந்து தன் மேகப் போர்வையை விலக்கிச் சென்றானோ அல்லது தனது கடமையை செவ்வனே முடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றானோ மனசு அறியவில்லை. வான் வெளியில் மங்களகரமாக  பொன் மஞ்சள் வண்ணத்தில் அழகான பட்டுக் கம்பளம் விரித்து இருப்பதைக் காணும் பொழுது குழந்தையாக துள்ளிக் குதித்தது மனது.

பயணங்கள்

சுவாரஸ்யமானவை

முடிவற்ற அன்பில்

உன்னை தேடித்

தொடர்கிறது என் நெடுவழிப் பயணம்…

பயணங்கள் முடிவதில்லை!

– ப்ரியா கங்காதரன்

pp1

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

Image courtesy:

http://cdn2.itpro.co.uk

https://upload.wikimedia.org

http://www.railpictures.net

http://www.righttobe.ca

விலாமிச்சை வேரும் மருத்துவ குணங்களும்!

water-pot

வெயில் நாட்களில் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அந்த மாதிரி  குடிக்கும்போது இன்னொன்றையும் செய்தால் பலன் அதிகம். ‘விலாமிச்சை வேர்’ என்றொரு வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சுத்தப்படுத்தி, லேசாக நசுக்கி, நல்ல காட்டன் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி அதைத் தண்ணீர் பானையில் போட்டு வைத்து விடவேண்டும். இதனால் தண்ணீர் நறுமணத்துடனும், குளிர்ச்சியாகவும், நல்ல மருத்துவகுணம் நிறைந்ததாகவும் இருக்கும்.

vilamichai verr

இதன் மருத்துவ குணத்தை ‘அற்புத சிந்தாமணி’ என்ற நூலில் உள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அது குளிச்சியையும் நறுமணத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் என்னென்ன வியாதிகளையெல்லாம் குணப்படுத்துகிறது என்று பட்டியலே போட்டிருக்கிறது.

‘‘மேகம் விழியெரிச்சல் வீறிரப் பித்தமொடி

தாகமத மூர்ச்சை பித்தஞ்சார் மயக்கம் –- சேகஞ்

சிரநேரமிழவயேகுஞ் செய்ய விலாமிச்சக்

கெரி கிரமு மின்றென்றிசை.’’

– அற்புத சிந்தாமணி.

இதனால் மேகநீர் கண் எரிவு, உதிரபித்தம், தாகம், மூர்ச்சை, பித்தம், அதனால் ஏற்படும் மயக்கம், கோபம், தலைவலி, தீச்சுரம் போகுமாம்.

வெயில் காலங்களில் மண்பானை வாங்கி தண்ணீர் வைத்து பயன்படுத்துபவர்கள் சிலர் அதன்மீது பெயின்ட்டையும் வேறு சில பல வண்ணக்கலவைகளையும் அலங்காரம் என்ற பெயரில் அடித்து விடுவார்கள். இதன் மூலம் மண்பானையில் தண்ணீரை எதற்காக வைத்துப் பயன்படுத்துகிறோம் என்ற தத்துவத்தையே மாற்றிவிடுகிறார்கள்.

மண் பானையின் மேல் உள்ள நுண்துளைகள் அடைபடக்கூடாது. இதன்மூலம் உட்செல்லும் காற்று ஆவியாக மாறும்போது தண்ணீரில் உள்ள வெப்பம் தணிந்து தண்ணீர் குளிர்விக்கப்படுகிறது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி நம் பண்டைய தமிழர்கள், இரண்டடுக்குக் கொண்ட மண்ணால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை ஊற்றி வைத்து, குளிர்சாதனப் பெட்டி போல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது போன்ற மண்பானைகள், கெடிலம் ஆற்றங்கரையில் அகழ்வராய்ச்சியின் போது கிடைத்துள்ளது. நம் பண்டைய நாகரிகம் ஆரோக்கியம் குறித்தான முன்னோரின் அக்கறைக்குச் சான்று.

– ‘மாங்குடி’ மும்தாஜ்.

Image courtesy:

http://www.maligairaja.com

https://fieldpoppy.files.wordpress.com

 

அருணா செய்த தவறு என்ன?

Aruna-Shanbaug

கடந்த 42 ஆண்டுகளில் அருணா ஷன்பாக் என்ற பெயர் இந்திய ஊடகங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்திய பெயர். அருணாவுக்குப் பார்வை கிடையாது. பேச முடியாது. நடக்க இயலாது. எதையும் புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும், மருத்துவமனையின் சின்னஞ்சிறு அறைக்குள் இருந்து கொண்டு இந்தியப் பெண்களின் நிலையையும் இந்திய நீதியின் ஓட்டைகளையும் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு, மனசாட்சியை உலுக்கிக்கொண்டே இருந்தார். அருணாவின் போராட்டத்துக்கு நியாயம் கிடைத்ததா? 

ர்நாடகாவில் உள்ள ஹால்டிபூர் கிராமத்தில் பிறந்தவர் அருணா. ஏராளமான சகோதர, சகோதரிகள் கொண்ட ஏழ்மையான பெரிய குடும்பம். அருணாவுக்குப் படிப்பு மீது ஆர்வம் அதிகம். அந்தக் காலத்தில் பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே படிக்க வந்தனர். பள்ளி இறுதி முடித்தபோது அவர் வயதுப் பெண்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அருணா மருத்துவம் படிக்க நினைத்தார். ஏழ்மை காரணமாக மருத்துவம் படிக்க வைக்க இயலாது என்று கூறிவிட்டார் அவரது சகோதரர். மருத்துவர் எண்ணத்தைக் கைவிட்டு செவிலியர் படிப்பில் சேர விரும்பினார். ஆனால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு பெண் வெளியில் சென்று படிப்பதில் விருப்பம் இல்லை. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி படிக்கச் சென்றார் அருணா.

பள்ளியிலும் கல்லூரியிலும் தன்னுடைய ஏழ்மையை நினைத்து அவர் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. எப்பொழுதும் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். பெண் என்ற காரணத்தாலோ, ஏழ்மை என்ற காரணத்தாலோ தன்னுடைய திறமை முடங்கிப் போய்விடக்கூடாது என்று நினைத்தார். எளிய ஆடைகளில் அத்தனை வசீகரமாக இருப்பார் அருணா.

மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியர் வேலை கிடைத்தது. எந்த விஷயத்தையும் வேகமாகக் கற்றுக்கொள்வார் அருணா. நாய்களை வைத்து மருத்துவ ஆராய்ச்சி செய்யும் துறைக்கான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அந்தத் துறை பிடிக்காவிட்டாலும் வேறு துறையைக் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லை. வேலையில் மிகவும் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் செயல்படுவார். கெம் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் ஒருவர்  அருணாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். சாதி வேற்றுமையைக் காரணம் காட்டி, அவரது குடும்பத்தினர் மறுத்தனர். ஆனாலும் தன்னுடைய திருமணத்தில் உறுதியாக இருந்தார் அருணா.

அருணாவின் கண்காணிப்பில் இருந்த துறையில் சோஹன்லால் பர்தா வால்மிகி என்பவன் வார்டு பாயாக வேலை செய்து வந்தான். வேலையில் காட்டிய அசிரத்தை, திருடு போன்ற காரணங்களுக்காக அருணாவால் கண்டிக்கப்பட்டான். இறுதியில் அவன் செய்த ஒரு குற்றத்துக்காக அருணா மெமோ வழங்கினார். அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. ஒருநாள் இரவு உடை மாற்றும் அறையில் அருணாவை நாய்ச் சங்கிலியால் கழுத்தை நெரித்தான். பிறகு பாலியல் பலாத்காரம் செய்தான். மோதிரம், தோடு போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அருணா சுயநினைவிழந்தார். மறுநாள் காலைதான் அருணாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அருணாவின் திருமணம், எதிர்காலம் குறித்த அச்சம் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் கொலை முயற்சி, திருடு போன்ற குற்றங்களை மட்டும் சோஹன்லால் மீது சுமத்தியது. இயல்பான முறையில் உடல் உறவு கொள்ளாததால் அவன் மீது பலாத்கார குற்றத்தை மருத்துவர்கள் சுமத்தவில்லை. இறுதியில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவனுக்குக் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்து டெல்லி சென்றவனைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அருணாவின் திருமணம் நின்று போனது. மருத்துவர் வேறு திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் அருணா பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதை ஒருபோதும் குறிப்பிட்டுச் சொன்னதில்லை. காலப்போக்கில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டார் அருணா.

அருணாவுக்குப் பார்வை பறிபோயிருந்தது. பேசும் சக்தியை இழந்திருந்தார். நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. வலி என்ற ஓர் உணர்ச்சியை மட்டுமே அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. யாரையும் சார்ந்து வாழாமல், தன்னுடைய முயற்சியால் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்று கனவு கண்டு, லட்சியத்தை நிறைவேற்றி, பலனை அனுபவிக்க இருந்த வேளையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் பிறரின் உதவியை நாடும் பெண்ணாக மாறிப் போயிருந்தார் அருணா. உடலில் உயிர் இருந்ததே தவிர, அவர் உயிருள்ள ஒரு பெண்ணாக இருக்கவில்லை.

அடிக்கடி வலிப்பு வரும். பிற உபாதைகள் வாட்டும். முனகலும் கண்ணீரும் அவர் வலியால் துடிப்பதை வெளிப்படுத்தும். அருணாவின் கொடுமையான வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார் பிங்கி விரானி. அருணாவுக்குக் கட்டாயமாக உணவு கொடுப்பதை எதிர்த்து, கருணைக்கொலைக்கு அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2011ம் ஆண்டு கருணைக்கொலைக்கு அனுமதி மறுத்தது நீதிமன்றம்.

அன்றைய அருணாவிலிருந்து இன்றைய நிர்பயா வரை பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள், நம் சமூகத்தில் நிலவும் பெண்களைப் பற்றிய பிற்போக்கான எண்ணங்களுக்கே பலியாகியிருக்கின்றனர். ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்யும் ஆண், தன்னுடைய தவறைக் கண்டிக்கும்போது ஆண் என்ற ஈகோவை உரசிப் பார்ப்பதாக நினைத்துக்கொள்கிறான். அருணா செய்ததை ஓர் ஆண் செய்திருந்தால் அதிகப்பட்சம் மனத்துக்குள் திட்டியிருப்பான். இல்லை என்றால் வேலையை விட்டு ஓடியிருப்பான். வழி இல்லை என்றால் மன்னிப்புக் கேட்டிருப்பான். ஆணுக்குக் கீழ் பெண் என்று காலம் காலமாகச் சொல்லிலும் செயலிலும் பின்பற்றி வந்த ஒரு சமூகத்தில் சோஹன்லால் போன்றவர்கள் அலுவலக விஷயத்துக்குத் தனிப்பட்ட முறையில் பழிவாங்கத் துடிக்கின்றனர். திருமணம் நடக்க இருக்கும் ஒரு பெண்ணுக்கு பலாத்காரம் என்பது வாழ்நாள் தண்டனையாக இருக்கும் என்று எண்ணி வெறிச் செயலில் ஈடுபட்டிருக்கிறான். எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத, ஒரு பெண் அவள் நண்பனுடன் பேருந்தில் பயணம் செய்ததையே ஏற்றுக்கொள்ள இந்திய ஆண்களின் மனம் ஒப்புக்கொள்ளாதபோது, 42 வருடங்களுக்கு முன் சோஹன்லால் தனிப்பட்ட வெறுப்பைக் காட்டியதில் வியப்பில்லை.

Aruna 2

ஏழ்மை நிலையில் தன் சொந்தத் திறமையால் முன்னேறத் துடித்த ஒரு புத்திசாலிப் பெண், முட்டாள்தனமான இந்திய ஆண்களின் வக்கிர எண்ணத்துக்கு அநியாயமாகப் பலியாகிவிட்டார். சோஹன்லாலால் தண்டிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, நீதிமன்றத்தாலும் புறக்கணிக்கப்பட்டு, தன் வாழ்நாள் முழுவதும் வலியால் துடித்து துடித்து உயிர் துறந்த அருணா செய்த தவறுதான் என்ன?

சஹானா

***

Image courtesy:

http://nasheman.in

http://www.hindustantimes.com/

அடுப்புகள்… சில நினைவுகள்!

சில நாட்களுக்கு முன் ‘குங்குமம் தோழி’ இதழில் தீபா நாகராணி சமையல் செய்யும் அடுப்பு, ஸ்டவ் பற்றி விரிவாக எழுதி இருந்தார். மிக அருமையான பதிவு அது. பல மலரும் நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது அந்தக் கட்டுரை. இத்தனை வருட வாழ்வனுபவத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் அடுப்புடனான உறவு தொடர்ந்து வந்திருக்கிறது என்று நினைப்பதே சுகமாக இருக்கிறது. சமையலறையில் புழங்கிய ஒவ்வொரு அடுப்பும் கண்முன் நிழலாடுகிறது.

விறகு அடுப்போடு ‘டாலி’ எனும் அடுப்பையும் உபயோகிப்பார் எனது அம்மா. தங்க வேலை செய்யும் ஆச்சாரிகள் இது போன்ற அடுப்பைத்தான் பயன்படுத்துவார்கள். அது, மூன்று குமிழ் வைத்த சட்டி போலிருக்கும். அதன் அடியில் ஜன்னல் போல மூன்று கண் ஓட்டை இருக்கும். அட்டாச்மென்ட்டாக அடியில் ஒரு சட்டி மாதிரி இருக்கும். நெருப்பு சாம்பல் பூத்தால், தட்டினால் அது அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்து விடும். விறகை எரிக்கும்போது நெருப்பை எடுத்து நீர் ஊற்றி வைப்பார்கள். அந்த கரி டாலி அடுப்புக்கு உபயோகமாகும். மெலிதான தீயில் பருப்பு வேக வைக்கலாம்… பால் காய்ச்சலாம். இப்படி நம் தலைமுறையிலேயே எத்தனையோ விதமான அடுப்புகளை நாம் உபயோகித்திருக்கிறோம்.

சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள என் மகள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஒருநாள் கொழுக்கட்டை செய்யலாமே என்ற எண்ணம் வந்தது. எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை + வெல்லம் கலந்த பூரணம் வைத்துக் கொழுக்கட்டை செய்தால்தான் பிடிக்கும்.

Microwave oven

அங்குள்ள காயில் மின் அடுப்பில் சமைப்பது சற்று சிரமம். என் மகள், ‘ஒரு பீங்கான் தட்டில் வேர்க்கடலையை வைத்து, மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு வெளியே எடுத்து, திருப்பிவிட்டு மேலும் 3 நிமிடங்கள் வைத்தால் போதும். கடலை நன்கு வறுபட்டிருக்கும்’ என்றாள். ‘பழைய வழக்கங்களிலிருந்து புதுசுக்கு ஏன்தான் மாற மாட்டேன் என்கிறீர்களோ!’ என்று என் பெண்கள் அடிக்கடி சொல்வார்கள். அன்றைக்கும் வேர்க்கடலையை மின் அடுப்பில் வறுப்பதுதான் சரி என்று எனக்குத் தோன்றியது. என் மகள் அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன் அதை அவளிடமும் சொன்னேன். சிரித்தபடியே போய்விட்டாள்.

‘வேர்க்கடலை வறுப்பதில் நிறைய டெக்னிக்ஸ் இருக்கிறது’ என்பார் என் அம்மா. சிறிது சிறிதாக போட்டுத்தான் வறுக்க வேண்டும்… தீ நடுநிலையில் (medium fire) தான் இருக்க வேண்டும்… வாயில் போட்டுப் பார்க்கும் போது சரியாக இருக்கிறதே என்று நினைத்தால் தீய்ந்து போயிருக்கும், அதனால் சற்று முன்பே இறக்கிவிட வேண்டும்… போன்ற டெக்னிக்ஸ்! வேர்க்கடலையை வறுத்தெடுக்க குறைந்தது 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும்.

எனக்கென்னவோ அன்றைக்கு மகள் சொன்னபடியே மைக்ரோவேவ் அவனில் முயற்சி செய்யலாமே என்று தோன்றியது. அவள் சொன்னபடியே மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தேன். வேர்க்கடலை சூப்பராக வறுபட்டிருந்தது. கை வலிக்க வறுக்க வேண்டிய சிரம்ம் இல்லை. அதற்கடுத்து உளுத்தம் பருப்பை வறுக்க வேண்டி இருந்தது. அதையும் வேர்க்கடலைக்கு செய்த்தைப் போலவே தட்டில் வைத்து, 4 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து புரட்டிப் போட்டு வைத்ததில் நன்கு வறுபட்டிருந்தது.

என் மகள் வந்ததும் உளுத்தம் பருப்பையும் அவனில் வறுத்ததைச் சொன்னேன். ‘பரவாயில்லையே! மைக்ரோவேன் அவனில் சமைக்கிற அளவுக்கு specialist ஆகிடுவீங்க போல இருக்கே… சபாஷ்!’ என்றாள். அந்தக் கணத்தில் என் மனம் பின்னோக்கி அசை போட ஆரம்பித்தது.

Trad Stove 4

என் தாயார் எந்தெந்த அடுப்புகளிலோ சமைத்திருக்கிறார். அவற்றை என் மகள்களிடம் காட்ட ஒரு மாடல் கூட இப்போது இல்லையே என்கிற வருத்தம் பிறந்தது. எனக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து என் பள்ளிப் பருவம் வரை வீட்டில் விறகு அடுப்புதான். அப்போதெல்லாம் விறகுகளை வெட்டி, கட்டுகளாக்கி விற்பார்கள். விறகுகளில் சவுக்கு மரம்தான் நிதானமாக எரியும். அதனால் மரத்தொட்டிக்குச் (விறகுக் கடை) சென்று அதை வாங்கி வந்து, காய வைத்து, அடுக்கி வைத்துக் கொள்வோம்.

அப்போது நாங்கள் இருந்தது ஓட்டு வீடு. சமைப்பதற்காக விறகு எடுக்கச் சென்ற சமயங்களில் அம்மாவின் கையை, விறகுக்குள் மறைந்திருக்கும் தேள் பதம் பார்த்திருக்கிறது. அம்மா வலியால் துடிப்பார். என்ன மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டாலும் 24 மணி நேரத்துக்குப் பிறகுதான் தேள்கடி குணமாகும். விறகு அடுப்பைப் பற்ற வைக்க ‘வரட்டி’ அல்லது ‘எருமுட்டி’ என்றழைக்கப்படும் ஒன்று தேவைப்படும். சாணியை உருட்டி, வைக்கோல் தூள் கலந்து, பின் சுவற்றில் தட்டி காய்ந்தபின் எடுத்து உலர்த்தி விற்பனை செய்வார்கள். ஒவ்வொரு வரட்டியும் இரு கை அளவுக்கு இருக்கும். அதை உடைத்து, அதில் சிறிது கெராசினை ஊற்றி பற்ற வைப்பார் அம்மா. அதற்குப் பிறகு அதில் இரு விறகுக் கட்டையை வைப்பார். நன்கு பற்றிக் கொண்ட பின் விறகு எரிய ஆரம்பிக்கும். அம்மா வெளியே சென்றிருக்கும் நேரத்தில் விறகை சற்று உள்ளேத் தள்ளி வைப்பது எங்கள் வேலையாக இருக்கும்.

viragu aduppu

விறகு அடுப்பில் சில நுணுக்கங்கள் உண்டு. ஈர விறகாக இருந்தால் எரியாது. சாதமோ, பாலோ பொங்கி வழிந்து விறகில் பட்டு விட்டாலும் எரியாது. அது போன்ற நேரங்களில் ஒரு பேப்பரை எடுத்து அடுப்புக்குள் விறகின் மேல் வைத்து, ஊதுகுழலால் விறகு பற்றிக் கொள்ளும் வரை ஊத வேண்டும். புகை கிளம்பி, நம் கண்களில் எரிச்சலெல்லாம் ஏற்படும். இது ஒரு கஷ்டமான, சிக்கலான வேலை.

சமையல் முடிந்ததும் அடுப்புக்குள் இருந்து விறகுக் கட்டையை எடுப்பார் அம்மா. விறகின் எரிந்த பகுதியில் நீரை ஊற்றுவார். எரிந்த பகுதி கரியாகி இருக்கும். அந்த கரித்துண்டுகளை உலர்த்தி வைத்துக் கொள்வார். அவை தண்ணீர் காயவைக்கும் பாய்லரில் உபயோகிக்கப் பயன்படும்! விறகு அடுப்பின் கீழே சாம்பல் மேடிட்டிருக்கும். அதற்கு மேல் விறகை வைத்து எரித்தால்தான் ஜ்வாலை எளிதில் மேலெழும்பி வைத்திருக்கும் பாத்திரம் சூடாக உதவும். அடுப்பின் அடியில் சாம்பல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் விறகு எரிய அதிக நேரம் பிடிக்கும். ஒருநாள் அம்மா இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், சமையல் முடிந்ததும் நான் அடுப்பை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதாவது, கீழ்ப் பகுதியில் தேங்கியிருந்த சாம்பல் மொத்தத்தையும் வழித்து எடுத்துவிட்டேன். விளைவு, விறகு அதிகம் செலவானது.  ஊரிலிருந்து வந்த அம்மா சொன்னார்… ‘சாம்பலை எடுத்ததால நான் ஒரு மாசம் வச்சு எரிக்கிற விறகை பத்து நாள்ல காலி பண்ணிட்டியேம்மா!’

விறகு வைத்து சமைப்பதால் எழும் புகை சமைப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளைத் தந்ததால் அரசு விறகு அடுப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அடுப்பில் ஒரு நீண்ட குழாயைப் பொருத்தினால் புகை அதன் வழியே வெளியே சென்று விடும். மிகச் சில கிராமங்களில் இந்த அடுப்பு பயன்பாட்டுக்கு வந்தது.

விறகு அடுப்புக்கு அடுத்ததாக மரத்தூள் அடுப்பை அம்மா பயன்படுத்தினார். அது நிறைய பேருக்கு அறிமுகமில்லாத ஒரு வகை அடுப்பு. இதில் பயன்படுத்த ‘ரம்பத்தூள்’ எனப்படும் மரத்தூைள மரம் அறுக்கும் கடையில் மூட்டையாக வாங்கி வருவார்கள். இது மண்ணால் ஆன அடுப்புதான். ஆனால், வாய்ப்புறத்தில் ஒரே ஒரு விறகு கட்டையைத்தான் வைக்க முடியும். அதைப் பயன்படுத்துவது ஒரு வகையான டெக்னிக். பழகினால்தான் அதில் சமையல் செய்ய முடியும்.

Marathool aduppu

இந்த அடுப்பைப் பயன்படுத்தும் போது, அம்மா கீழே அமர்ந்து கொள்வார். அடுப்பில் விறகுக்கட்டையை வைக்கும் இடத்தை ஒரு சிறு துணியால் அடைப்பார். பிறகு அரை சாண் அகலமுள்ள ஓர் ஊதுகுழலை நடுவில் வைத்து, அதை ஒரு கையால் பிடித்துக் கொள்வார். அதைச் சுற்றி மரத்தூளை சிறிது சிறிதாக கொட்டுவார். மரத்தூளை மத்து போன்ற ஒன்றைக் கொண்டு லேசாக அழுத்துவார். பார்பதற்கு ஏதோ ஒரு மாஜிக் நிகழ்த்துவது போலத் தெரியும். பின்னாளில் இதை எப்படி நாம் செய்யப் போகிறோம் என்கிற கவலை வரும். (கேஸ் அடுப்பில்தான் சமைக்கப் போகிறோம் என்று ஜோசியமா தெரியும்?) அடுப்பில் மரத்தூள் நிரம்பியதும் உள்ளே இருக்கும் குழலை மெதுவாகத் தூக்குவார் அம்மா. இப்போது நடுவில் ஓட்டை ஒன்று நீளமாக ஏற்பட்டிருக்கும். கீழே வைத்திருந்த துணியை மெதுவாக வெளியே இழுப்பார். ஒரே ஒரு விறகின் நுனியில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து உள்ளே வைத்தால், அந்த்த் தீயில் மெதுவாக தூள் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். இதில் விறகு செலவு குறைவு. ஊத்த் தேவையில்லை. அடுப்பு எரிவதே பார்க்க அழகாக இருக்கும். அக்காலத்தில் எரிபொருள், நேரம் சேமிப்பு தந்த அற்புதம் அது! மரத்தூள் அடுப்பைப் பற்ற வைத்துவிட்டால் ‘கண கண’ என்று எரிந்து கொண்டே இருக்கும். நடுவில் நிறுத்த முடியாது. முழுச் சமையலையும் செய்து முடிப்பதுதான் உசிதம்.

stove 3

அடுத்ததாக வீக்கோ அடுப்பு வந்தது. இது ‘டாலி’ என்கிற மண் அடுப்பு மாதிரி இரும்பு அடுப்பாலானது. இதைப் பற்ற வைப்பது சற்று கடினம். பற்றிவிட்டால் ‘கண கண’ என நெருப்பு ஒளிர எரியும். பார்ப்பதற்கு சூரிய உதயத்திலும், அந்தியிலும் ஒரு நிறம் தெரியுமே, அப்படி இருக்கும்.

gummitti aduppu

பற்ற வைப்பது பிரம்மப் பிரயத்தனமே! முதலில் தேங்காய் நார்களை பிரித்து, அடுப்பில் போடுவார் அம்மா. அதில் சிறிது கெரசின் விட்டு பற்ற வைப்பார். பிறகு அதில் நாட்டுக்கரியைப் (விறகு எரிந்தால் கிடைப்பது) போட்டு அடுக்குவார். உள்ளே காற்றுப் புகும்படி crosswiseஆக அடுக்க வேண்டும். பற்ற ஆரம்பித்த்தும் அதன் மேலே வீக்கோ கரியை (ெநய்வேலியின் உபயம்) அடக்குவார். கனமாக இருக்கும். கரி பற்ற 10 முதல் 15 நிமிடம் ஆகும். அம்மா ஒரு விசிறி எடுத்து பற்றிக் கொள்ளும் வரை விசுறுவார். பற்றிக் கொண்டால் வேகமாக நடக்கும் சமையல்.

வீக்கோ கரியை பாய்லரில் வெந்நீர் போடவும் உபயோகித்துக் கொள்வோம். சமையல் முடிந்ததும் கரியை வெளிேய எடுத்து, அதன் மேல் ஒரு பாத்திரத்தைப் போட்டு கவிழ்த்து விடுவார். நாங்கள் பள்ளி முடிந்து வந்து மாலையில் திறந்து பார்த்தால், கறுப்புத் தங்கமான நிலக்கரி வெந்நிற திருநீறு போல மாறி இருக்கும். இதை அடுத்த நாளும் உபயோகிக்கலாம்.

thiri stove thiri stove 2

பிறகு மண்ணெண்ணெய் ஸ்டவ் புழக்கத்துக்கு வந்தது. இதில், திரி மாற்றுவது கடினமான வேலை. திரிகளை ஒரே அளவாக, சீராக வெட்டி வைக்க வேண்டும். திரிகளைத் துடைத்து எடுக்கும் போது கையெல்லாம் கெரசின் நாற்றம் அடிக்கும். வார விடுமுறை நாளில் அம்மா ஸ்டவ்வை சுத்தம் செய்து வைப்பார். அடுத்துதான் கேஸ் ஸ்டவ் புழக்கத்தில் வந்தது. அதன் பிறகு பம்ப் ஸ்டவ், சைடில் சிலிண்டர் வைத்த ஸ்டவ்வெல்லாம் பயன்பாட்டுக்கு வந்தன.

pump stove

stove 2

அதிகமாகக் காற்றடித்தால் பம்ப் ஸ்டவ் வெடித்துவிடும். அந்தக் காலத்தில் வீட்டில் ஸ்டவ் வெடித்து பெண் இறந்து போனால், மாமியார்-மருமகள் சண்டை என்பார்கள். சினிமாக்களிலேயே கூட ஸ்டவ் வெடிப்புச் சம்பவங்கள் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. அதன் பின் கேஸ் ஸ்டவ், இண்டக்‌ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் அவன் என்று நீண்டு கொண்டிருக்கிறது அடுப்புகளின் பட்டியல்! அடுப்புகள் மாறினாலும் அம்மாக்கள் சமைப்பது மட்டும் நின்ற பாடாக இல்லை.

gas stove

மகளும், அக்கா மகளும் விடுமுறைக்கு என் அம்மா வீட்டுக்குச் செல்வது வழக்கம். வரும் போது அங்கிருக்கும் பிடித்த பாத்திரங்கள், பொருட்களை அள்ளிக் கொண்டு வருவார்கள். ஊருக்குக் கிளம்பும் நாள் வந்த போது, என் 4 வயது மகள் ‘பாட்டி, இந்த ஸ்டவ் பார்க்க புதுசா இருக்கு. எடுத்து வைங்க. நான் அம்மாவோட வர்றப்போ எடுத்துட்டுப் போறேன். எங்க வீட்டுல இந்த மாதிரி ஸ்டவ்வே இல்லை’ என்று சொல்லியிருக்கிறாள். அம்மாவோ, ‘அப்படியா! அது என்ன அப்படிப்பட்ட அருமையான ஸ்டவ்? காட்டு’ என்று சொல்லியிருக்கிறார். என் மகள் காட்டியது வீட்டின் மூலையில் இருந்த பழைய கெரசின் ஸ்டவ்!

அ.ப.மலர்க்கொடி பலராமன் 

Malarkodi balaraman

Image courtesy:

http://www.hedon.info/

http://cdn.indiabizclub.com

http://www.immt.res.in/i

http://pimg.tradeindia.com

http://foodslice.blogspot.in

upload.wikimedia.org

https://vegetarianirvana.files.wordpress.com

http://www.parasptk.com/

http://www.electricstoveheater.net/

ப்ரியங்களுடன் ப்ரியா!

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = ? 

றந்து திரிந்த பள்ளிக்காலம் முடிந்து வாழ்வின் வாசலான கல்லூரி நோக்கிப் பயணம் செய்யும் செல்ல சிட்டுகளுக்கு…

ஒவ்வொருவரும் தான் பெற்ற மதிப்பெண்ணை வைத்து மதிப்பீடு செய்வதை மறந்துவிட்டு, வாழ்வின் அடுத்த நிலையை நோக்கிச் செல்லும் பருவம் இது.

மதிப்பெண்தான் ஒருவரை நிர்ணயம் செய்யும் என்றால்… அப்படி நல்ல மார்க் எடுத்துத்தான் ஒருவர்  முன்னேற முடியும் என்றால் வருடத்துக்கு  இரண்டு பேர், ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்டேட் செகண்ட் கணக்கு வைத்து இப்போது வரைக்கும் 60 வருடக் கல்வித் திட்டப்படி 120 பேர்கள் மட்டுமே நன்றாக வந்திருக்க முடியும்.

college students

அப்படி என்றால் நாட்டில் நன்றாக வாழும் எல்லோரும் மனிதர்கள் இல்லையா? அதனால் அதைத் தொலைவில் வைத்து விட்டு, அருகில் இருக்கும் வாழ்கையை ரசிக்க வேண்டும்… படித்து ரசிக்க வேண்டும், ஜெயித்து ரசிக்க வேண்டும்.

எந்தப் படிப்பை படித்தால் வாழ்கையில் வெல்லலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும் எந்தப் படிப்பை படித்தால் வாழ்க்கையை வாழலாம் என்று தீர்மானம் செய்ய வேண்டிய காலக்கட்டம் இது. கல்லூரி என்றதும் நிறைய பேருக்கு சினிமாவில் பார்ப்பது போலத்தான் கல்லூரி காலங்கள் கனவில் நிழலாடும். இஷ்டப்படி போகலாம்… வரலாம்… என்பது போல உருவகம் செய்த சினிமாக் காட்சிகள் கண்முன்னே வந்து போகலாம். நிழல் வேறு… நிஜம் வேறு.

கல்வி (Education) என்றால் என்ன? நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் இருந்து புதிய அறிவும் (Knowledge) செயலாற்றலும் (Skill) மனோபாவத்தில் (Attitude) மாற்றமும் பெற்றால் அதையே கல்வி என்கிறோம். (Change in the behaviour is education).

college students 2

கல்விக் கூடம் சென்று கற்பது மட்டும்தான் கல்வி என்பதன்று. ஒருவன் எந்தக் காரியத்தில், தொழிலில், பதவியில் அல்லது வணிகத்தில் வெற்றி பெற எண்ணுகிறானோ அதில் வெற்றிபெறத்தக்க அளவுக்கு சிறப்பாக அந்தத் துறை தொடர்பான அறிவையும் செயலாற்றலையும், (Skill and experience) உரிய மனோபாவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் எந்த மாதிரிச் சூழலில் கல்லூரிக்குப் போகிறோம் என்பதை! இந்த 3 அல்லது 4  ஆண்டுகளே நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும்… நம்மைப் பெற்றவர்களையும் தலை நிமிரச் செய்யும்.  ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே‘ என்று புறநானூறும்,

“தந்தை மகற்காற்று நன்றி யவையத்து

முந்தி இருப்பச் செயல்” என்று வள்ளுவரும் கூறியுள்ளனர். இதன் பொருள்… கற்றவர் கூடிய அவையில் எல்லோருக்கும் முன்னவனாக இருக்கத்தக்க வகையில் தம் மக்களை  கல்வியில் மேம்பட்டவனாக்குவதே தந்தை தன் மகனுக்குச் செய்யும் உதவியாகும்.

நம் கல்லூரி காலக்கட்டம் சிக்கலுக்குரியதாக உள்ளது. பழமையும் புதுமையும் சங்கமமாகிறது. இந்தியக் கல்வியும் , மேலைநாட்டுப் பாரம்பரியமும் நம் கல்லூரி வாழ்வில்  ஊடுருவத்  தயராக இருக்கின்றன. தகவல் தொடர்பின் வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது. உலகம் ஓர் கிராமம் ஆகிவிட்டது. எல்லாக் கலாசாரங்களும் எல்லா இடங்களிலும் விரவி நிற்கின்றன. இது ஒருபுறம்.

போட்டிகள் எல்லாத் துறைகளிலும் பெருகி வருகின்றன. குறிப்பாக கல்வி துறையில்…  (Struggle for existence – The fittest will survive). ‘வாழ்வுக்கானப் போராட்டம் – வலுவுள்ளது வாழும்’ என்ற காலக்கட்டம் இன்னொருபுறம்.

கல்வியிலும்  மாபெரும் வளர்ச்சி  விரைந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஈடு கொடுக்க மாணவச் செல்வங்கள் தயாராக வேண்டும்.

மாணவர்களை  சீர்குலைக்கச் செய்பவை இரண்டு. ஒன்று கோபம். மற்றொன்று பயம். ‘கோபம் உண்டான மனதில் குழப்பம் உண்டாகும்; குழப்பம் உண்டானால் சிந்தனை தடுமாறும்; சிந்தனை தடுமாறும்போது தவறான முடிவுகளே உருவாகும்; தவறான முடிவுகளால் தவறான செயல்கள் உண்டாகும்; தவறான செயல்களினால் அழிவு ஏற்படும்’ என்கிறது பகவத்கீதை.

பயம் நம்மை நெருங்குவது, நாய் துரத்துவதைப் போன்றது. பயந்து ஓடிக்கொண்டேயிருந்தால் நம்மை மேலும் துரத்திக் கொண்டேயிருக்கும். தைரியத்துடன் எதிர்கொண்டால், திரும்பி ஓடிவிடும்.

கோபத்தின் போது சில நடைமுறைகளைக் கையாளலாம்…

  • பிறரிடம் பேசுவதைத் தவிர்த்தல்.
  • எந்த முடிவையும் செய்யாமை.
  • அவசியமாகச் செய்ய வேண்டியதாக ஏதாவது இருந்தால், அதை மறக்காமல் முடித்து விடுதல்.
  • நல்ல நண்பர்கள் அல்லது ஆலோசகர்களை கலந்தாலோசித்தல்.
  • தற்காலிகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுதல்.
  • தனியறை கிடைத்தால் படுத்து, ஆழ்ந்து மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுதல். அமர்ந்தபடியேயும் மூச்சை இழுத்து வெளிவிடலாம்.

உடலில் கோபத்தின்போது அதிகமான அளவில் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதால், அதன் பாதிப்பைத் தவிர்க்க எளிய உடற்பயிற்சிகளை (நேராக நின்று, பின் குனிந்து தரையைத் தொடுதல்) சுமார் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

இவை இரண்டிலும் இருந்து விடுபட்டாலே போதும்… வாழ்வை வென்றுவிடலாம். தினமும் புதிய சிந்தனைகள்… மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது. மனதில் மாற்றம் நிகழும் போது சிந்தனையில் மாற்றம் மலர்கிறது. சிந்தனை மாறும்போது செயலும் வாழ்க்கை முறையும் மாறுதல்களைச் சந்திக்கிறது. இத்தகைய மாற்றமே முன்னேற்றத்தின் முகாந்திரமாக அமைந்து விடுகிறது. மேலும், மாற்றத்தைத் தோற்றுவிக்கும் ஆக்க சிந்தனையின் உறைவிடமாக உங்கள் மனம் திகழும்போது எந்தப் பிரச்சனையையும் சந்தித்துத் தீர்க்கும் ஆற்றல் உங்களுக்கு வருகிறது.

கனவு காணுங்கள்… கைக்கெட்டிய தூரம் வரை எனது உலகம் என்று! வெறும் கல்லூரிப் படிப்பு மட்டுமே நம்மை வெல்லத் தயார் செய்யாமல் விழித்திருக்கும் போது கற்பனை செய்ய வேண்டிய கனவு. விழிப்புணர்வுடன் உங்கள் எதிர்காலம் பற்றி கற்பனை செய்ய வேண்டிய கனவு. உங்கள் பெற்றோருக்காக கற்பனை செய்ய வேண்டிய கனவு. வெற்றி பெற்ற அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை  என்ன தெரியுமா? அவர்கள் அனைவருமே இந்த வெற்றியைப் பற்றிக் கனவு கண்டவர்கள் என்பதுதான்.

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = நிச்சயமான வெற்றி!

கனவு மெய்ப்படும்…

உன் சிறகை விரிக்கும் வரை

நீ எட்டும் உயரம் யாரறிவார்?

பற… இன்னும் பற… வானமே எல்லை…

கல்லூரி செல்ல இருக்கும் அனைத்து தேன் சிட்டுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!  வாழ்க வளமுடன் !

ப்ரியா கங்காதரன் 

15

***

பெற்றோரின் கனிவான கவனத்துக்கு…

இந்த நிலையில் பெற்றோரான நமக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

நமது குழந்தைகளை எந்த ஒரு நிலையிலும் பிற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமை எங்காவது ஒளிந்து இருக்குமே தவிர திறமை இல்லாதக் குழந்தைகள் இல்லவே இல்லை. தேடி எடுக்க வேண்டியது நமது கடமை. நாம்தான் தேடி எடுத்து, செப்பனிட்டு, புடம் போட்ட தங்கமாக உருவாக்க வேண்டும்.

பள்ளிக் கல்வி வரை ஒரே சீருடை… ஒரே வாகனம்… ஒன்றாக இருந்து கற்ற நமது பிள்ளைகள்… கல்லூரிக்குச் செல்லும் போது உணரும் சூழல் வேறு. ஏழை-பணக்காரன்… விதவிதமான உடைகள்… கார், பைக், பாக்கெட் மணி என அனைத்திலுமே வேறுபாடுகளைக் காணும் பருவம்! இந்த நிலையில் நமது வழிகாட்டல் மட்டுமே இந்த ஏற்ற தாழ்வுகளைக் கடந்து நமது பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர உதவும். அதற்கு அவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். வெல்லும் தொலைவை வரையறை செய்து ஓட வைக்க வேண்டும். வென்றால்தானே வாழ்க்கை! அதைப் புரிய வைக்க வேண்டும். மனதை அலைபாய விடாமல் அன்பால் கட்டிப் போட வேண்டும். இதெல்லாம் பெற்றோரான நம்மால் மட்டுமே முடியும்.

நமது  குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக உருவாக்குவோம். தன்னம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிக்கு வழி தேடுவார்கள்… வெற்றியை நேசிப்பார்கள்… வெற்றி பற்றிக் கனவு காண்பார்கள்.

Image courtesy:

http://www.blacknet.co.uk/

http://www.eplindia.org

ஸ்டார் தோழி – 20

11185755_942133792487388_13225070_n

புவனா ஸ்ரீதர் – ஒரு தோழி பல முகம்

நான்

Trichyட்

பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சியில். பொறியியலில் டிப்ளமோ, சைக்காலஜியில் டிகிரி. அப்பா குடும்பத்தில் முதல் பேத்தி, பெற்றோரின் தலைமகள், கணவரின் அன்பான மனைவி, என் மகள் மற்றும் மகனின் பொறுப்பான தாய், புகுந்த வீட்டின் கடைசி மருமகள்… இப்படி எல்லா நிலைகளிலும் நல்லவர்கள் என்னைச் சுற்றி இருப்பதே வரம்.
பள்ளி

ஐந்தாம் வகுப்பு வரை மேட்டூரிலும், பின்பு ஸ்ரீரங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். ‘படிப்பில் கெட்டி பள்ளியில் சுட்டி’ என்று பெயர் எடுத்ததால் கிளாஸ் லீடர் ஆகவும் பொறுப்பேற்ேறன். எந்த நெருக்கடியும் இல்லாத பட்டாம்பூச்சி வாழ்க்கையாக என் நட்புகளுடன் அமைந்தது என் பள்ளி வாழ்க்கை. இன்றும் என் பள்ளிக் கல்லூரி தோழமைகளுடன் நட்பு தொடர்கிறது.
குடும்பம்

கணவர் ஸ்ரீதர் வங்கியில் தலைமை மேலாளர். மகள் கல்லூரியில் நுழைகிறாள். மகன் 11ம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறான். என் குழந்தைகள் இருவரையும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் மனிதநேயத்துடனும் வளர்த்து வருகிறேன்.
ஊரும் பேரும்

திருமணத்துக்குப் பிறகு கணவரின் பணி இடமாற்றம் காரணமாக முதலில் மும்பை, பிறகு கள்ளக்குறிச்சியில் கூட்டுக்குடும்பம், பின் கோயம்புத்தூர், பாலக்காடு, கிருஷ்ணகிரி, இப்பொழுது செங்கல்பட்டில்… ஒவ்வோர் ஊரிலும் புதுப்புது வீடு, அனுபவம், மனிதர்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது.
பொழுதுபோக்கு

பலவகை ஓவியங்கள், Soft toys, க்வில்லிங் காதணிகள், செயற்கை ஆபரணம் செய்தல், மணப்பெண்களுக்காக டிசைனர் பிளவுஸ் செய்தல் ஆகிய கலைகளை கற்றுள்ளேன். ஃபேஸ்புக்கில் ‘ஸ்ரீவிஜா ஆரி டிசைனர்ஸ்’ பேஜ் நடத்தி வருகிறேன். ஆன்லைன் டிேரடிங்கும் செய்வதுண்டு.
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்

பள்ளி, கல்லூரி நட்புகள், மறந்தே போன குடும்ப உறவுகள் அனைவரையும் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் தொடர்பு நீடிக்கவும் ஃபேஸ்புக்கே காரணம். பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் இதில் நிறைய விஷயங்களை கற்றும் கொள்ளலாம்.
வீடு

ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமான வீட்டில் வசித்துள்ளோம். சொந்த வீட்டில் வசிக்க முடியவில்லையே என்ற எண்ணமே வராத அளவுக்கு ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. விதவிதமான மனிதர்கள், கலாசாரம், சமையல் என்று குழந்தைகளும் நானும் புதுப்புது அனுபவங்களைப் பெற்று வருகிறோம்.
மனிதர்கள்

அப்பா, அம்மா, நான், தங்கை என்று சிறிய குடும்பத்தில் பிறந்தேன். படிப்பு, நட்பு என்று பட்டாம்பூச்சியாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. திருமணத்துக்குப் பிறகுதான் மனிதர்களைப் புரிய ஆரம்பித்தது. பொறாமைக்காரர், நம்பிக்கை துரோகிகள், புறம் பேசுபவர்களைக் கண்டால் இன்றும் அலர்ஜிதான்…  ஒதுங்கிவிடுகிறேன்.
புத்தகம் 

vedathiri maharishi

பள்ளிக் காலத்திகல் இருந்தே ஒரு புத்தகமும் விடாமல் படிப்பேன். ‘அம்புலி மாமா’ முதல் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள் வரை ஆர்வமுண்டு. இறையன்பு, சுகிசிவம், வேதாத்ரி மகரிஷி போன்றவர்களின் ஆன்மிக நூல்களை விரும்பிப் படிப்பேன். சைக்காலஜி படித்ததால் டாக்டர் ஷாலினியின் மருத்துவக் கட்டுரைகள், வலைத்தளங்களும் வாசிப்பதுண்டு.
வாழ்க்கை

வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வதே மன நிம்மதியைத் தரும். எந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தைத் தரும். ஒவ்வொரு நிமிடமும் வரமே. மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்து ஒவ்வொரு நொடியையும் வாழ வேண்டும்.
பிடித்தப் பெண்கள்

நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே எனக்குப் பிடித்தவர்களே. குடும்பத்துக்காக படிப்பைத் துறந்த பெண்கள், கணவன் சரியில்லாமல் தைரியமாக குடும்பத்தைச் சுமக்கும் பெண்கள் என்று தன்னம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொரு பெண்ணுமே பிடித்த பெண்தான். என் அப்பா வெளிநாட்டில் வாழ்ந்தபோதும் தனியாளாக இரண்டு பெண்களை வளர்த்த என் அம்மாவே நான் வணங்கும் தலைமைப் பெண்.
இசை 

m-s-subbulakshmi1

காலை நடைப்பயிற்சியில் ஆரம்பித்து இரவு தூங்கும்வரை இசையுடனே வாழ்வது நிம்மதி தரும். இசை இன்றி அமையாது இவளுலகு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் ‘குறையொன்றும் இல்லை’ பாடலைக் கேட்டாலே மனம் அமைதி கொள்ளும்.

உடலும் மனமும் 

yoga

அளவான உணவு, நடைப்பயிற்சி, நிறைய தண்ணீர், மனதை சந்தோஷ நிலையில் வைத்துக் கொண்டாலே போதும்… யோகா செலய்வதும் உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக்கும். வெறும் அரிசி உணவை மட்டும் உண்ணாமல் சிறுதானிய உணவுகளையும், நிறைய பழம் மற்றும் காய்களையும் உண்டு வந்தாலே உடல் எடை குறைந்து இளமையாகக் காட்சியளிக்கலாம்.
சமையல் 

meen_fish_kuzhambu

nandu gravy

திருமணத்துக்குப் பிறகுதான் கற்றுக் கொண்டேன். கோயம்புத்தூரின் அரிசிம் பருப்பு சாதம், பச்சைப் பயறு கூட்டு, மும்பையின் பாவ் பாஜி, கிருஷ்ணகிரியின் சிறுகீரைத் தொக்கு என ஒவ்வோர் ஊரிலும் பலவித சமையலைக் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் மீன் குழம்பு, நண்டு கிரேவி என் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். கேழ்வரகு உருண்டையுடன் மீன் குழம்பு எனக்குப் பிடித்த உணவு.
இயற்கை

பள்ளி விடுமுறைக் காலத்தில் கிராமத்திலுள்ள தாத்தா வீட்டுக்குச் சென்று விடுவோம். தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, ரோஜாப்பூ தோட்டம், மல்லிகைத் தோட்டம், என்றுமே வற்றாத ஆறு என்று சித்தி, மாமா பசங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாட்டம்தான். கிராமத்தின் அத்தனை குறும்புகளும் விளையாட்டுகளும் கலந்த அழகிய நாட்கள் எங்கள் குழந்தைப் பருவம். கணவரும் குழந்தைகளும் விடுமுறையில் எங்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பலவகை மரக்கன்றுகள் நடுவது, உரமிடுவது என ஆர்வத்தோடு இறங்கி விடுவார்கள். என் அப்பாவுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஜீவாமிர்தம், அமிர்த கடைசல் என்று அவரே தயார் செய்து செடிகளுக்கும் மரங்களுக்கும் இடுவார். இயற்கையை ரசிக்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கும். விடுமுறையில் குடும்பத்துடன் மலைப்பிரதேசங்களுக்கும் சென்று வருவோம்.
மரம் வளர்த்தல், மரங்களை அழியாமல் காத்தல், பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் மண்வளத்தை காப்பாற்றுவது போன்றவற்றை நாமும், நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்தும் வாழ்வோம். இயற்கையையும் சுற்றுசூழலையும் காப்பதும் நம் கடமை என்று உணர்வோம்.
தண்ணீர் 

Water-Saving

பிறந்து வளர்ந்தது காவிரிக் கரையோரம் என்பதால் தண்ணீர் பிரச்னை என்றால் என்ன என்று கூட்த் தெரியாமல் வளர்ந்தேன். ஊர் மாறும் போதுதான் நீரின் அருமை புரிந்தது. தண்ணீர் கஷ்டம் இல்லாத வீடாக அமைய வேண்டும் என்று வேண்டுதலே வைக்கிறேன். தண்ணீரின் அவசியம், தண்ணீர் சிக்கனம் போன்றவற்றை இளைய தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டியது நம் கடமை. பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைத்தாலே ஆறு, ஏரி, குளம் போன்றவை மாசுபடாமல் காத்து, அவற்றில் மழைக்காலத்தில் தண்ணீரை சுத்தமாக சேமித்து வைக்கலாம். துணிப்பைகளை உபயோகிப்பதால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை விட்டொழிக்க முடியும். நாம் ஒவ்ெவாருவரும் செய்யும் இந்த முயற்சிகூட கணிசமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைக்கும். நம்மால் இயன்ற வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கலாம். மரங்களை நடலாம். மழை பெறலாம். நீரின்றி அமையாது உலகு.
புகைப்படக்கலை

சிறுவயதில் இருந்தே புகைப்பட கலையில் ஆர்வம் அதிகம். கோயில்கள், குளங்கள், மலைப்பிரதேசம், பூக்கள், சூரியன், பறவைகள், விலங்குகள் என்று நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தும் வருகிறேன்.
அழகென்பது

அழகென்பது தன்னம்பிக்கை, நேர்மை, மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டாலே அழகு தானே கூடிவிடும்.

நேர நிர்வாகம்… 

சரியான திட்டமிடல் இருந்தாலே போதும்… நிச்சயமாக நிறைய நேரத்தை மிச்சபடுத்தலாம். ‘நான் ரொம்ப பிஸி… நேரமே இல்லை’ என்று புலம்பவே வேண்டாம். முதல் நாள் இரவில், தூங்கப் போவதற்கு முன்பே மறுநாள் வேலை என்னென்ன… எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாலே போதும்… மறுநாள் காலை முதல் டென்ஷன் இல்லாமல், நிதானமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

பிடித்த ஆளுமைகள் 

diana

இந்திரா காந்தி, மதர் தெரசா, டயானா. மூன்று தலைமுறைகளையும் தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் மனோரமா ஆச்சியும் எனக்குப் பிடித்த ஆளுமையே.

சினிமா 

Jyothika_Sadanah_Wallpaperjpg_qllbl_Indya101(dot)com (1)

ரஜினி படத்தை மட்டும்தான் தியேட்டருக்குச் சென்று பார்ப்போம். இப்போது சூர்யா பசங்களின் சாய்ஸ். எல்லா நல்ல படங்களையும் தியேட்டருக்குச் சென்று பார்க்கிறோம். ஜோதிகா மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. அவர் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.

கடந்தது வந்த பாதை

புது அனுபவங்களையும் பக்குவத்தையும் படிப்பினையும் தந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய இருக்கிறது. கற்ற ஒவ்வொரு பாடத்தையும் படிக்கட்டுகளாக எண்ணி பயணம் செய்கிறேன்.

பிடித்தவை

இயற்கையை ரசிக்கவும் இசை கேட்கவும் பிடிக்கும். தொலைதூர பயணம்… அதில் மெலடி பாட்டுகள், தோழிகளுடன் மணிகணக்கில் அரட்டை மிகவும் பிடித்தவை.

வாழ்க்கை

நட்புகள், உறவுகள் மனநிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. வருவதை அப்படியே ஏற்று நதி போல ஓடிக்கொண்டே இருப்போம். இந்த நிமிடம் அழகு என்று ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்வோம். வாழ்க்கை வாழத்தானே!

11028968_862442367154003_2615257940376410732_o

***

Image courtesy:

http://www.trichypress.com

http://raviyolimathi.blogspot.in/

rlalitha.files.wordpress.com

http://www.landofyoga.com

http://cdn.awesomecuisine.com

http://ennsamaiyal.blogspot.in

http://www.sparkenergy-blog.co.uk

http://media-1.web.britannica.com

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 18

ஸ்டார் தோழி – 19

காதல் ஓவியங்கள்!

கட்டுத்தனமான, உயர்ரகக் காதல்களை சினிமாவில் பார்த்து சலித்துப் போய்விட்டோம்… நாளைக்கு ஒன்றாக பத்து வருடங்களுக்கு காதல் இணைக்கு மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதுவதுதான் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்… ஒருவருக்காக மற்றொருவர் உருகுவதும், உயிர் விடுவதும் கூட இதில் அடக்கம். ஒருவரின் மொத்த வாழ்க்கையையும் மற்றொருவரின் பின்னால் அடகு வைப்பதே காதல் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கொரிய பெண் ஓவியர் புவ்வாங்கின் (Puuung) கருத்தோ வேறாக இருக்கிறது.

‘‘ஒவ்வொருவரோடும் தொடர்புபடுத்தக் கூடிய ஏதோ ஒன்றுதான் காதல். நம் தினசரி நடவடிக்கைகளில், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் காதல் வரும் வழிகளை வெகு சுலபமாக கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதனால்தான் நம் அன்றாட வாழ்க்கையில் காதலுக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க நான் முயற்சி செய்தேன். அவற்றை ஓவியமாக வடித்தேன்.’’ இப்படிச் சொல்லும் புவ்வாங் வெகு சாதாரணமாக வரைந்த ஓவியங்கள் உலகம் முழுக்க வெகு பிரபலம். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களில் காதல் எப்படியெல்லாம் ஒளிந்திருக்கிறது என்பதை அந்த ஓவியங்கள் பேசுகின்றன.

இவருடைய காதல் ஓவியங்களை http://www.grafolio.com இணையதளத்தில் காணலாம். இங்கே சில ஓவியங்கள் தோழிகளின் பார்வைக்கு…

1

 

3

4

5

6

 

8

9

10

11

12

13

14

15

16

17

 

19

20

21

 

***