தலைக்கவசம்… நம் உயிர்க் கவசம்!

helmet

ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ‘கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ வெளியிட்டிருக்கும் அறிக்கை இது…
நம் நாட்டில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான அரசு நிர்வாகம் இவற்றை முறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றது. அவ்வப்போது மற்றொரு தூணாகிய நீதிமன்றங்களின் தலையீடு இதற்கு அவசியமாகிறது.

‘தலைக்கவசம்’ அணியும் சட்டம் இவற்றில் ஒன்று. இதனைக் கட்டாயப்படுத்தி அரசு ஆணைகள் பிறப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இதை நிர்வகிக்க வேண்டிய முறையைச் சுட்டிக் காட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணைகள் பிறப்பிக்க வேண்டியிருந்தது நமது துரதிருஷ்டமே. 

தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இதுபற்றிய வேண்டாத கருத்துகளைப் பரப்புவதற்கு ஒரு சாரார் முயற்சிப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

உலகிலேயே அதிக விபத்துகள் நடக்கும் இந்தியாவில், தமிழ்நாடு அதிலும் சென்னையில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சமயத்தில் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பதை ஆதாரத்துடன் பலர் நிரூபித்துள்ள நிலையில் சட்டத்தில் உள்ள ஒரு சில ஓட்டைகளை பெரிதுபடுத்தி ‘தலைக்கவசம்’ அணியும் வழக்கத்தை எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.

தலைக்கவசம் அணியாதவர்கள் உடனே வாங்கி அதற்கான ரசீதையும் காட்ட வேண்டும்’ என்ற ஒருசில உத்தரவுகள் கண்டிப்பாக அமல்படுத்த முடியாத ஒன்றாகும். இவற்றைக் கண்டித்து எங்களைப் போன்ற இயக்கங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். 

‘தலைவலி ஏற்படும்’, ‘பெண்களுக்கு உபத்திரவம்’ என்பதெல்லாம் அபத்தமான வாதங்கள். விபத்தில் நமது மூளை பாதிக்கப்படும்போது மரணம் (மூளைச்சாவு) ஏற்படுகின்றது. தரமான தலைக்கவசம் (ஐ.எஸ்.ஐ) நமது மூளையையும் தலையையும் காப்பாற்றும். 

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள NHTSAயின் அறிக்கை இருசக்கர வாகன விபத்துகளில் 40% தலையில் ஏற்படும் காயத்தால் மட்டுமே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறுகிறது. 

பூனேயில் உள்ள லோகமான்ய மருத்துவமனைத் தகவல்களின்படி 57% இருசக்கர வாகன விபத்துகளில் மூளை பாதிக்கப்படுகிறது. இதிலும் 68% பேர் 19 முதல் 46 வயதுக்குட்பட்டோர். நெடுஞ்சாலைகளில் மட்டுமே தலைக்கவசம் பயன்படுத்த வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். அதிக வேகம் எங்கு இருந்தாலும் ‘தலைக்கவசம்’ கட்டாயம் அணிய வேண்டும். 

விபத்துக்குள்ளானவர்களின் மூளைப்பகுதியை Scan செய்யும்போது `Glasgowcama Scale’ என்னும் கருவி அளவு 8 ஆக இருந்தது இது 15 ஆக இருக்க வேண்டும் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இது 12 ஆக இருந்தது. 

தலைக்கவசம் ஒரு தேவையற்ற பாரம் என நினைப்போர், அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்தின் பாரத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

போக்குவரத்துக்காவல் புரிபவர்களுக்கு இந்தச் சட்டம் பணம் பறிக்க ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம். ஆனால், சட்டத்தை நாம் மதித்தால் இவர்களால் எதுவும் செய்ய முடியாதே! 

அண்மையில் தகவல் அறியும் உரிமைச்சட்ட பதிவின்படி, ஆவணங்களின்றி பயணம் செய்யும் வாகன ஓட்டிகளை `SPOT FINE’ செய்வது விதிகளை மீறிய செயல் என்றும், 15 நாட்களுக்குள் கொண்டுவந்து காட்டச் சொல்வதே முறை என்றும் அறிய வருகிறது. ஆகவே, நம்மை மிரட்டினால் நாம் மிரளக்கூடாது. சட்ட விதிகள் அவற்றைப் பின்பற்றுவோருக்குத்தான். அதனை அமல்படுத்துவோர் அதனைக் காசாக்க முயற்சித்தால் எதிர்த்துக் குரல் கொடுப்பதே நுகர்வோரின் கடமை/ பொறுப்பு!
Consumers Association of India  

3/242. Rajendra Garden, Vettuvankeni,
Chennai – 600 115
Tel: 24494573/24494574/24494575/77
E-mail cai.india 1@gmail.com
web:www.caiindia.org.

Image courtesy:

http://s1.cdn.autoevolution.com/

ப்ரியங்களுடன் ப்ரியா – 4

பயணங்கள் முடிவதில்லை!

journey

பயணங்கள்

சுவாரஸ்யமானவை…

முடிவற்ற அன்பில்

உன்னை தேடித்

தொடர்கிறது என் நெடுவழிப் பயணம்!

யாருமற்ற சாலை… கதிரவனைத் தன் கிளைக்குள் 

மறைக்கும் அடர் மரங்கள்… அடிவானத்திலிருந்து மெல்ல 

கசிவது போல வெளிச்சம்… தலை கோதிச்செல்லும் காற்று

காற்றும் மெல்லிய வெளிச்சமும் ஏகாந்தமான வெளியும்

மரங்களும் என்னுடன் பயணிக்க 

நானும் பயணிக்கிறேன்.

சின்ன வயதில் மிகவும் ஆசைப்படும் விஷயங்கள், கிடைத்த பிறகு வெறுத்துப் போய்விடுவதுண்டு. ஆனால், எப்போதுமே எனக்கு வெறுக்காத விஷயம் பயணங்கள்.  பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். வெற்றுப் பையோடு கடைக்குச் செல்கின்றவர் திரும்பும்போது வாங்கும் பொருட்களையெல்லாம் அதில் அடைத்து வருவார். அதுபோல பயணத்தை மேற்கொள்கின்றவர் மனது நிறைய பல அனுபவங்களை  நிறைத்துக் கொண்டு திரும்பும் வாய்ப்புக் கிடைக்கிறது.  பயணம் என்பதே ஓர் இனிமையான அனுபவம்தான். அது பேருந்தாக இருந்தாலும் சரி, ரயிலாக இருந்தாலும் சரி. விமானமாக இருந்தாலும் சரி. ஆனாலும், பேருந்துப் பயணத்திலும், ரயில் பயணத்திலும் சந்திக்கும் விதவிதமான மனிதர்களையும், காணும் பல அற்புதக் காட்சிகளையும் விமானத்தில் செல்லும்போது நிச்சயம் காணமுடியாது.

Tamilnadu_Bus

பேருந்துப் பயணங்கள்

சிறு வயதில் பேருந்தில் செல்வதே அலாதியான இன்பம் தரும் அனுபவமாகத்தான் இருந்தது.  முதல்முறையாக தனியாகப் பேருந்தில் பயணம் செய்த போது ஏதோ மிகப் பெரிய சாதனையைச் செய்ததைப் போன்ற ஓர் ஆனந்தம். இத்தனைக்கும் அந்தப் பயணம் மிகப் பெரும் தொலைவெல்லாம் இல்லை. வெறும் 24 கி.மீ. மட்டுமே. ஆனால், அந்த 24 கி.மீ. தூரப் பயணத்தைப் பற்றி நாள் முழுக்கப் பேச விஷயங்கள் இருந்தன. கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தது முதல் தினமும் பேருந்துப் பயணம் செய்ய வேண்டியதாகிவிட்டது.  அந்த அரை மணி நேரப் பயணத்தில் பார்க்கும் நிகழ்வுகளை தனித்தனி சிறுகதைகளாகவே எழுதலாம்.   ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்தாலே எரிந்து விழும் நடத்துநர்களைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, நாலரை ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் சில்லரை கொடுத்த நடத்துநர்கள் ஆச்சரியமானவர்களாகத்தான் தெரிந்தார்கள்.

கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறும் இளம்பெண்ணைப் பார்த்து ‘‘எவனும் இடம் கொடுக்க மாட்டான். தூங்கற மாதிரி நடிப்பானுங்க’’ என்று கமென்ட் அடித்த  மனிதர் அவருக்கு இடம் கிடைத்ததும் ஜன்னலை இறக்கி விட்டுவிட்டு, கண்களை மூடிக்கொள்வதையும், அந்தப் பெண் உறங்கும் குழந்தையை தோளில் போட்டு நின்று கொண்டிருப்பதையும் காண முடிவது இத்தகைய பேருந்துப் பயணங்களில்தான்.

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும், நடத்துநரோ அல்லது ஒரு நடுவயதுப் பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் காண்பதும் பேருந்துப் பயணங்களில்தான்.  இன்று  பேருந்தில் ஏறியவுடன் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பக்கத்தில் இருப்பவர் யார், என்ன என்கிற அக்கறை இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் இந்த நினைவுகள் எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருக்கின்றன.

train

ரயில் பயணங்கள்

காலம் பல கடந்தாலும் என்றும் சுகம் தரும் இனிமையான பயணம் ரயில் பயணமே.  எப்படித்தான் இந்த ரயிலுடன் சேர்ந்து மரங்களும் வேகமாக நகர்கின்றனவோ என வியந்த சிறுவயது பிராயத்தில்ஆரம்பித்தது  என் ரயில் சினேகம்.

ரயில் பயணத்தில் நள்ளிரவில் கண்  விழித்து,  இருட்டில் ஒடும் மரங்களையும் நட்சத்திரங்கள் கவிழ்ந்து கிடக்கும் தொலைதூர கிராமங்களையும் பார்த்திருக்கிறீர்களா ?

போட்டி  போட்டுக் கொண்டு ஜன்னலோர  இருக்கையில் அமர்ந்து வயல்வெளிகளையும் மலையையும் ரசிக்க ஆரம்பிக்கையில் தொடங்கியது இயற்கை மீதான காதல்.

காற்றை ரயில் பயணத்தின்  அருகாமையின்றி  உணர இயலாது. தலையைக் கோதிவிடும் காற்று. முகத்தில் விரல்களால் தடவிவிடும் காற்று. உடம்பின் மீது  பூ உரசுவது போல  உரசும்  காற்று. காது மடல்களில் கூச்சத்தை உண்டாக்கும் காற்று. நீருற்றுப் பீறிடுவது போல பொங்கி வழியும் காற்றின் அருகாமையில், ஒரு காகிதத்தைப்  போல நம்மைக்  காற்றிடம் ஒப்படைப்பது ரயில் பயணங்களில் மட்டுமே நிகழும் அற்புதம்.

சிறுவயது பயணம் ஒன்றில், பக்கத்து இருக்கை பயணி கொடுத்த நாவலை வரிவிடாமல் படித்ததில் தூவப்பட்டது வாசிக்கும் பழக்கத்துக்கான விதை. இப்படிப் பல வகைகளில் மனதுக்கு மிக நெருக்கமானதாகிவிட்டது ரயில் பயணம்.

நிசப்தமான நிசப்தம். வெளிச்சமற்ற விளக்கொளிகள். பறவைகள் இல்லாத முகில். யாரும் கடக்காத  பாதைகள். தனித்திருக்கும் பனைமரங்கள். மேகம் கவிழாத நீர்நிலைகள். பாறைகள். பரவிக் கிடக்கும் கற்கள். தெறித்த மண்பானையின் வயிற்றை நினைவுபடுத்தும் பாலத்தின் அடிப்பகுதி என இன்றும் நீள்கிறது ரயில் பயணங்களில்  குழந்தை போல் கும்மாளமிடும் மனது…

Plane landing by sunrise

விமான பயணங்கள்

விமானம்… எப்போதுமே எனக்கு ஓர் அதிசயம். அதிசயம் என்று சொல்வதைவிட பிரமிப்பு என்றுகூடச் சொல்லலாம். சிறு வயதில் எங்கள் ஊரில் விமானம் பறப்பதை எப்போதோ ஒருமுறை பார்த்ததால் வந்த பிரமிப்பா என்று தெரியவில்லை. விமானச் சத்தம் கேட்டாலே வீட்டுக்குள் இருந்து அவசரமாக வெளியில் ஓடி வந்து பார்த்த காலங்கள் இன்றும் மனதில் நினைவுகளாக  இனிக்கின்றன.

முதன்முதலில் எதைச் செய்தாலும் அது ஒரு புதிய அனுபவம்தான். நான் முதன் முதலில் விமானத்தில் செல்லப் போகிறேன் என்று தெரிந்தவுடன் என் மனம் ஆகாயத்தில் பறந்தது. சின்ன வயதில் இருந்து அண்ணாந்து பார்த்த ஒன்றில் அமர்ந்து செல்ல போகிறோம் எனும் போது மனம் பறக்காதா என்ன?

நான் கற்பனையில் நினைத்ததைவிட மிகவும் சிறிய விமானம். உள்ளே போகும் போதே விமான பணிப்பெண்கள் காலை வணக்கம் சொன்னார்கள். அந்த நிமிடம் முதல் விமானம் தரை இறங்கும் வரை அவர்களின் புன்சிரிப்பு ஒரு மில்லி மீட்டர்கூட கூடவோ, குறையவோ இல்லை. ஐந்து நிமிடங்களில் விமானம் கிளம்ப ஆரம்பித்தது. நான் எதிர்பார்த்த ஜன்னல் ஓர இருக்கையே கிடைத்தது.

ஓடுகளத்தில் மெதுவாக ஓடிய விமானம் திடீரென வேகம் பிடித்தது. மெதுவாக மேலே செல்லச் செல்ல, காதினுள் ‘கொய்ய்ய்’ என்று ஒரு சத்தம் மட்டுமே கேட்டது.

காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு புதிதாக ஓடிப் பழகும் சிறு பறவை போல மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கையிலேயே, உள்ளந்தனில் புதியதாக உத்வேகமொன்று பிறந்தது போல, சற்று வேகமாக ஓடத் தொடங்கி, வானில் ஜிவ்வென்று சுதந்திரமாக சிட்டெனப் பறந்திட சிறகுகள் விரித்துப் பறக்கத் தொடங்கியது விமானம்.

‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது’ என்று சொல்வார்கள். ஆனால், இந்த இயந்திரப் பறவை உயரே போகப் போக ஊர் கட்டிடங்களெல்லாம் குருவி மாதிரி தெரிய ஆரம்பித்தன. ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குப் பிறகு வெறும் மேகம் மட்டும்தான் தெரிந்தது.  என்ன இருந்தாலும் பகல் நேர விமானப் பயணம் போல ஓர் இனிமையான பயணம் வேறில்லை.

விமானம் வானில் ஏற ஏற, விதவிதமான  உணர்வலைகள். ஏதோ திடீரென வாய்க்கும் வயிற்றுக்கும் இடையே பெரிய காற்றுப் பந்தொன்று ஏறி இறங்குவது போல், இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த உணர்வுகளில் இருந்து விடுபட்டு, ஆகாயத்திலிருந்து பூமியைக் கண்டால் எழில் ஓவியமாகக் காட்சியளிக்கிறது. விடிகாலை மின் விளக்குகளின் ஒளியில், பூவுலகே ஜோதி வடிவமாகக் காட்சியளிக்கிறது. சாலையில் வாகனங்களின் ஒளியும், அவற்றின் அணிவகுப்பும் ஏதோ விழா அணிவகுப்புப் போலத் தெரிகிறது. பகல் பொழுதினிலோ, இதுவரை ஓவியர் எவரும் வரைந்திடாத எழில் ஓவியமென காட்சியளிக்கிறது. மலைகள், ஓடைகள், நதிகள் என இறைவனின் கைவண்ணத்தில் உருவான பூரணத்துவம் வாய்ந்த இயற்கையின் அழகை இன்பமாக  உணரச் செய்தது.

தரையிலிருப்பதெல்லாம்  காண்பதற்கு  சிறு சிறு கடுகாக  மாறிப் போக, ஆகாயத்தின் எழில்  மனதைக் கொள்ளை கொள்கிறது. விமானம் இன்னும் சற்று உயர ஏறி  மேகக் கூட்டங்களின் மீது மிதக்கையில் பஞ்சுப் பொதிகளென வானில் மிதக்கும் மேகங்களை  சிறிது  கைகளில்  அள்ளிக் கொண்டுவிட்டால் என்ன என்று எண்ணுமளவுக்கு கொள்ளை அழகுடன் விளங்கின மேகக் கூட்டங்கள்.

பகலவன் துயில் கலைந்து தன் மேகப் போர்வையை விலக்கிச் சென்றானோ அல்லது தனது கடமையை செவ்வனே முடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றானோ மனசு அறியவில்லை. வான் வெளியில் மங்களகரமாக  பொன் மஞ்சள் வண்ணத்தில் அழகான பட்டுக் கம்பளம் விரித்து இருப்பதைக் காணும் பொழுது குழந்தையாக துள்ளிக் குதித்தது மனது.

பயணங்கள்

சுவாரஸ்யமானவை

முடிவற்ற அன்பில்

உன்னை தேடித்

தொடர்கிறது என் நெடுவழிப் பயணம்…

பயணங்கள் முடிவதில்லை!

– ப்ரியா கங்காதரன்

pp1

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

Image courtesy:

http://cdn2.itpro.co.uk

https://upload.wikimedia.org

http://www.railpictures.net

http://www.righttobe.ca

தினம் தினம் தந்தையர் தினம்

father

ஒவ்வொரு தந்தைக்குள்ளும்

ஒரு மகன்

ஒவ்வொரு மகனுக்குள்ளும்

ஒரு தந்தை

தந்தையல்ல மகன்

தந்தையினால் மகன்

அதே மண்தான்

தாவரம் வேறு

அதே கடல்தான்

அலை வேறு

அதே சூரியன்தான்

கிரணம் வேறு

அதே காற்றுதான்

மூச்சு வேறு

அதே ஆகாயம்தான்

அண்டம் வேறு

அணுவுக்குள் திணிந்த உயிர்ச்சங்கிலியை

உடல் மாற்றி

மூலவித்தின் முடிச்சவிழ்க்கும்

முன்மனிதன்

தாயின் கருப்பைக்கு உயிர்தானம் தந்து

தந்தையாகிறான்

தாயினும் சிறந்து.

  • நா.வே.அருள்

Image courtesy: http://ngm.nationalgeographic.com

என் எண்ணங்கள் – 5

தேவையா அயல்நாட்டு மோகம்? 

foreign job

பெரிய பெரிய கல்லூரிகளின் விளம்பரமாகட்டும்… சின்னச் சின்ன பாலிடெக்னிக்குகளின் டிப்ளமோ கோர்ஸுக்கான விளம்பரமாகட்டும்… அத்தனையிலும் சொல்லப்படும் விளம்பர வாசகம் ‘கை நிறைய சம்பளம்! வெளிநாட்டில் வேலை!’

அதாவது, ‘வெளி நாட்டில் போய் வேலை செய்வதுதான் உசத்தி’ என்று மக்கள் மனதில் விதைக்கிறார்கள். இது எந்த விதத்தில் சரி? வெளிநாட்டு வேலைக்குப் போகிறவர், உறவுகள் எல்லோரையும் பிரிந்து, வீட்டில் நல்லது கெட்டது எதிலும் கலந்து கொள்ள முடியாமல், உடல்நலம் இல்லாமல் இருக்கும் போதும் தனிமையில் இருந்து, ஒருவழியாக மீண்டு(ம்) வந்தாலும் குடும்பத்தோடு ஒன்ற முடியாமல், மனதளவில் அந்நியப்பட்டே நிற்க வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பணம் மட்டுமே எல்லோர் கண்களிலும் நிறைந்திருக்கும். அவர்களுக்கான மதிப்பைவிட அவர்களிடம் உள்ள பணத்துக்கே மதிப்பு அதிகம்.

நம் நாட்டைப் போல எல்லாவிதமான தட்பவெப்ப நிலைகளும் நிலவும், அனைத்து வளங்களும் நிறைந்த நாடு உலகளவில் இல்லவே இல்லை. ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் பெரிய பேரிடர்களும்கூட இங்கே கிடையாது. பல நாடுகள் தங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு வளத்தை மட்டுமே வைத்து முன்னேறி, மற்ற நாட்டு மக்களை வேலை ஆட்களாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து நிற்க, நம் நாடு மட்டும் இன்னும் வேலைக்கார நாடாவே இருக்கிறது. இதற்கு மக்களின் அறியாமையும் அரசியல்வாதிகளின் சுயநலமுமே பெரிய காரணங்களாக இருக்கின்றன.

farmer

நம்மிடம் இருக்கும் மிகப்பெரும் செல்வம் விவசாயபூமி. இங்கே இருக்கும் சீதோஷ்ண நிலை, தண்ணீர் வசதி, மண் வளம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு விவசாயத்தில் முழுகவனம் செலுத்தி இருந்தாலே போதும்… இந்நேரம் உலக நாடுகள் நம்மிடம் சாப்பாட்டுக்கு கை ஏந்தி இருக்கும்.

ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளுவது போலதான் நம் நாட்டு நிலைமை இருக்கிறது. படித்துவிட்டு, அடுத்தவனிடம் அடிமையாக வேலை செய்பவர்கள் அறிவாளிகள் போல விவசாயம் பார்க்கிறவர்களுக்கு வைத்த பெயர் ‘பட்டிக்காட்டான்.’

ஒரு விளம்பரத்தில் வரும் வாசகம்… ‘வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனதும் நடை உடை எல்லாம் மாறிடுச்சுல்ல!’ ஆக, இங்கே இருப்பது சரியில்லை. வெளிநாட்டுக்குப் போனால்தான் முன்னெற முடியும்’ என்று சொல்ல வருகிறார்கள். இதற்கெல்லாம் தடை போட வேண்டாமா?

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, படித்தவர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தருவது மாதிரியான திட்டங்களை நாடு முழுதும் அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். நம் பிரதமர் உலகம் முழுவதும் சுற்றிவிட்டு வந்து என்னென்னவோ திட்டங்களைக் கொண்டு வரப் போகிறார் என்ரறு நினைத்தால், யோகா பண்ணச் சொல்கிறர். மக்கள் என்னதான் செய்வது?

நம் மக்கள் வெளிநாட்டுக்குப் போகத்தான் வேண்டும்… பிழைப்புக்காக அல்ல, சுற்றுலாவுக்கு! அந்த நிலை நம் நாட்டில் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

மக்களின் மேலும் நாட்டின் மேலும் அக்கறை உள்ள அரசு வந்தால் மட்டுமே அது சாத்தியம்!

– ஷர்மிளா ராஜசேகர் 

Sharmila Rajasekar

வாசிக்க…

என் எண்ணங்கள் – 1

என் எண்ணங்கள் – 2

என் எண்ணங்கள் – 3

என் எண்ணங்கள் – 4

Image courtesy:

http://www.chinaforeignteachersunion.com/

http://indiaopines.com/

VITILIGO IS BEAUTIFUL – a photo documentary

Hello!

As a team of photographers, we bring out our maiden attempt at a photo documentary – VITILIGO IS BEAUTIFUL, for a social cause. Vitiligo is a chronic skin disease characterized by portions of the skin pigment. This documentary would tell more about their vision, thoughts, actions and goal.

We are very happy to present a photography exhibition in connection with the cause at SPACES, Besant Nagar on World Vitiligo Day (June 25) and it would be a great honor to have you for the inauguration. Kindly consider this as a personal invitation and grace the inauguration with your presence.

Team Discover

vitiligo

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

picture of happy mother with baby over white

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன… 

வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும்போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம்.

baby sleep

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதங்கள் வரை கொடுக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான தாய்க்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 850 மி.லி. அளவுக்கு பால் சுரக்கிறது. இதற்காக ஒரு தாய்க்கு 600 கலோரி அளவுக்கு சக்தி தேவைப்படுகிறது.  ஆக, சத்தும் சக்தியும் உள்ளத் தாய்க்குத்தான் முழுமையான தாய்ப்பால் சுரப்பு இருக்கும். பிரசவித்த முதல் மூன்று அல்லது ஏழு நாட்களுக்கு தாயின் மார்பகத்தில் நல்லக் கொழுப்பு அதிகமுள்ள சீம்பால் (Colostrum) சுரக்கிறது. இந்தச் சீம்பால் மிகவும் இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும். இதைப் பிறந்த குழந்தைக்குக் கொடுக்கும் போது, கருவறையில் சிசுவாக இருந்து குடித்த பனிக்குட நீர் அசுத்தங்களை வெளியேற்றி, வயிறு மற்றும் குடலைச் சுத்தமாக்கி, குழந்தைக்கு  நல்லப் பசியை உண்டாக்குகிறது. இதன் பின்னர் தாய்ப்பால் ஊட்டும் போது, குழந்தைக்கு முழுமையான செரிமானம் மற்றும் முழுமையான சத்து கிரகிப்பு நிகழ்ந்து விரைவாக வளர்தல் நிகழ்கிறது. எனவே, பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.

6ம் மாதம் 

ஆப்பிளின் தோலை சீவி, குக்கரில் வேக வைத்து, சிறிது நெய் சேர்த்துக் கொடுக்கலாம். சத்து மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது… குழந்தைக்கு ஒரு புது உணவைக் கொடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு வேறு எந்தப் புது உணவையும் அறிமுகப்படுத்தக் கூடாது. அப்போதுதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிகவும் கொஞ்சமாகவும் அடுத்த நாள் அளவை சற்றுக் கூட்டியும் தர வேண்டும்.

Happy baby laying on belly

7, 8ம் மாதங்களில்…

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சாதம், பால் சாதம், ஆப்பிள், வேகவைத்து மசித்த கேரட், உருளைக்கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து, உப்பு பிஸ்கெட் ஊற வைத்துக் கொடுக்கலாம். வெறும் பருப்பு சாதமாகக் கொடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுக்கவும். பருப்புடன் , கேரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுக்கலாம். பசும்பாலை அறிமுகப்படுத்தவும்.

9 ,10ம் மாதங்களில்… 

இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை போன்றவற்றைத் தரலாம்.

11, 12ம் மாதங்களில்… 

நம் வீட்டு நார்மல் சாப்பாட்டை குழந்தைக்குப் பழக்கப்படுத்தவும். உணவைக் கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் ஜீரணம் ஆகாது. பதிலாக இந்த அட்டவணையை கடைப்பிடித்துப் பாருங்கள்.

அட்டவணை

காலை

7:00 மணிக்கு குழந்தை எழுந்தால், எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்.

8:00 மணி – குளிக்க வைக்கலாம். இந்தப் பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்கள் குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.

8:30 – காலை உணவு – திட உணவாக இருக்கட்டும்.

10:30 – ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுக்கவும். அல்லது ஒரு பழம்.

மதியம்

12 :00 – திட உணவு.

4:00 மணிவரை எதுவும் தேவை இல்லை. பிறகு பால் கொடுக்கலாம். கூட இரண்டு பிஸ்கெட் அல்லது ஒரு ரொட்டித் துண்டு.

இரவு

7:30 மணிக்கு முழு திட உணவு கொடுக்கவும்.

9:00 மணிக்கு மீண்டும் பால்.

baby 3

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஈர்ப்பு குறையும். இந்தக் காலகட்டமும் இரண்டாம் உலகப் போரும் ஒன்று. (அம்புட்டு போராட்டம் நடக்கும்).

நாம்தான் பொறுமையாக குழந்தைகளுக்கு அவர்களின் மனநிலை அறிந்து பிடித்தவற்றை, பிடித்த சூழலில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போதே சாப்பாட்டின் அருமையையும் சேர்த்து ஊட்ட வேண்டும்.

உணவு விளையும் முறைகள்… சாப்பாடே கிடைக்காமல் இருக்கும் குழந்தைகள்.  எல்லாவற்றையும் சொல்லி உணவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் உணவின் மீது ஒரு மரியாதையை குழந்தைகள் உணர்வார்கள். உணவை வீண் செய்யக் கூடாது என்ற எண்ணமும் சேர்ந்து வளரும்.

சிந்தாமல் சாப்பிடச் செய்வது ஒரு கலை 

வைஷு குழந்தையாக இருக்கும் போது ஒரு முறை சொன்னேன்… ‘சிந்தாமால் சாப்பிடு வைஷு’ என்று.

‘பாப்பான்னாலே சிந்திதான் சாப்பிடும். இது கூட தெரியாதா உனக்கு மக்கு அம்மா’ என்று ஒரு போடு போட்டாள். அதுதான் குழந்தைகள். அவர்கள் உலகம்  விசித்திரமானது. சாப்பாட்டில் விளையாடுவார்கள். விளையாட்டை சாப்பாடு ஆக்கிவிடுவாகள்.

இந்தக் காலத்தில் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவதனால், அவர்களுக்கு துரித உணவுகளின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால், மற்ற நேரங்களில் துரித உணவு மீது ஆர்வம் போகாது. இதனால் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் எடைக் கூடுவதை தவிர்த்திடலாம்.

முடிந்த வரை ஒரு குறிப்பிட்ட வயது வரை உங்கள் நேரங்களை குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள். அது அவர்களின் மனதுக்கும் நல்லது… உடல் நலனுக்கும் நல்லது.

குழந்தைகள் தானே சாப்பிட ஆரம்பித்த பிறகு ஏற்படும் மன மாறுதல்கள்…

  1. குழந்தையின் சக்தி உருவாக உணவு மாற்றப்படுகிறது: குழந்தை தன் கையால் அள்ளிச் சாப்பிடும் போது அதன் கை வழி சக்தியால் உணவை அதன் உடல் உள் தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் உணவு சுலபமாக செரித்து கிரகிக்கப்படுகிறது.
  1. பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், மண்ணீரல் செரிமானம் சிறப்பாக நிகழ்கிறது.  மாவுச்சத்தின் உடனடி சக்தி குழந்தைக்கு கிடைத்து சுறுசுறுப்படைகிறது.
  1. பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை தன் இயல்புக்கு சாப்பிடுவதால் பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், முழுமையான செரிமானம் நிகழ்ந்து போதுமான  சக்தியும் தரமான சத்தும் கிடைக்கப் பெற்று ஆரோக்கியமாக வாழ்கிறது.
  1. உணவு மட்டுமே வீணாகிறது: குழந்தையின் விளையாட்டால் உணவு சிந்தப்பட்டாலும், குழந்தை, பசிக்கு சாப்பிடுவதால், குழந்தையின் ஆரோக்கியம்  கெடுவதில்லை. உணவு வீணானால்  பரவாயில்லை. குழந்தை வீணாகக்கூடாது.  இது கொஞ்சம் வருத்தம்தான்… உணவு வீணாவதில். ஆனால், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.
  1. பசிக்கு சாப்பிடுகிறது: பசிக்கு சாப்பிடப் பழகுவதால், பசியைத் தீர்க்கும் உணவுக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் நோய் வசம் சிக்காமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
  1. சுயமாகச் செயல்படக் கற்றுக் கொள்கிறது: தானே உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கமானது சுயமாக செயல்படுவதற்கு அற்புத வாய்ப்பாக அமைகிறது. இதனால், குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது.
  1. ஒழுக்கம் வளர்க்கப்படுகிறது: சுய ஒழுக்கம் வளர்க்கப்படுவதால் மேம்பாடு நிகழ்கிறது.

எதையும் சுயமாக செய்யப் பழக்கப்படுத்தப்படுவதால், அவரவர் பொறுப்பு உணர்த்தப்பட்டு, உறவு நிலை மேம்படுத்தபடுகிறது. இதனால், எதிர்பார்ப்பற்ற அன்பு நீடிக்கிறது.   ( நன்றி: டாக்டர் அனுராதா கிருஷ்ணன் – கோவை)  உங்கள் குழந்தை தானாக சாப்பிட வேண்டுமாயின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து  சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சரியாக எல்லா வகை உணவுகளையும்  ஆரோக்கியத்துக்காக சாப்பிடுவதை முன்னுதாரணமாக நம் குழந்தைகள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.  இவ்விதமாக நாம் கையாளும் போது நாம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். சிறுகச் சிறுகத்தான்  நம்  குழந்தைகள் மாறுவார்கள். நாம் நல்ல முன்னுதாரணமாக இருக்கும் வரை நம் குழந்தைகளும் கண்டிப்பாக  நல்ல வழிமுறைகளுக்கு வருவார்கள்.

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன … 

pri2

  • ப்ரியா கங்காதரன்

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

என் எண்ணங்கள் – 4

காக்கா முட்டை எனும் தங்க முட்டை! 

Kakka muttai 2

1.கோடி கோடியா சம்பளத்தைக் கொட்டிகொடுத்து, வெட்டி பஞ்ச் டயலாக் பேச வச்சு வெறுப்பேத்தாம, ரத்தம்… அருவானு அம்பது பேரை ஒரு ஆள் அடிச்சு ஜெயிச்சு பார்க்கறவங்களுக்கு தலைவலி வர வைக்காம, குத்தாட்டம்னு ஒண்ணு இருந்தாதான் ரசிகர்களை ஈர்க்க முடியும்னு நினைச்சு மோசமான ரசனையோட மக்களை எடை போடாம நல்ல படம் எப்படி எடுக்கறதுன்னு எல்லாரும் பார்த்து தெரிஞ்சுக்கணும்.

(தியேட்டர்ல போய் பாருங்க… எப்படி கைதட்டி ரசிக்கறாங்கன்னு. இப்போ ரசிகர்கள் மேல குறை சொல்லுங்க பார்ப்போம்!)

  1. தங்கள் குணத்துக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லாம நடிகர்கள் நடிக்க, அதுக்கு பாலாபிஷேகம், அடிதடி, முதல்நாளே பார்க்கணும்னு ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி அவங்களை உயர்த்திவிட்டு, இப்டில்லாம் இல்லாம, எப்படிப்பட்ட படத்தை ரசிக்கலாம்னு மக்கள் இந்தப் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கணும்.

(ரெண்டு பசங்களும் இன்னும் ரெண்டு படம் நடிச்சுட்டா ‘பெரிய காக்கா முட்டை ரசிகர் மன்றம்’, ‘சின்ன காக்கா முட்டை ரசிகர் மன்றம்’னு கொண்டு வந்துடாம இருந்தா சரி.)

  1. வர வர மக்களை யோசிக்க விடாம, எல்லா டி.வி. சானல்லேயும் மாத்தி மாத்தி கத்திட்டு (பேசிட்டு), அவங்கவங்க ரேட்டிங்கை ஏத்திக்க எவ்வளவு மோசமா இந்த மீடியா இருக்குன்னு புட்டு புட்டு வச்சுருக்காங்க. உள்ள பிரச்னைகளை, அதற்கான சரியான தீர்வை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல், இருக்கறதையும் குழப்பி விட்டுட்டே இருக்க மீடியாஸ்…

நாடு வீணா போறதுக்கு இவங்க எவ்ளோ மோசமான காரணமா இருக்காங்கன்னு இந்த டி.வி.காரங்க பார்த்து தெரிஞ்சுக்கணும்.

4 . எங்கே என்ன பிரச்னை முளைக்கும், எப்படி காசு பார்க்கலாம்னு அலையற அரசியல்வாதிகளையும் உயர்மட்ட ஆட்களையும் அப்படியே காட்சியாக கொண்டு வந்தது அசத்தல்!

அரசியல்வாதின்னா யாரு, எப்டின்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும்.

5 . இவ்வளவு நாளா அந்த மாதிரி பிள்ளைங்களை பார்க்கும் போது கையேந்துபவர்களாகவும், திருடர்களாகவும் மனதுக்குள் உருவகம் செய்து வைத்த ஒவ்வொருவர் மனநிலையிலும் மாற்றம் கண்டிப்பாக வந்திருக்கும், இந்தப் படம் பார்த்து வெளியில் வரும்போது. இனி அப்டி பிள்ளைங்களை பார்த்தா மறுபடியும் பார்க்கதான் தோணும்.

  1. ஆயா, அம்மா, அப்பா கேரக்டர்ஸ் ரியலா காட்டினது, அண்ணன் பின்னாடியே போகும் தம்பி கண்ணுக்குள்ளேயே இருக்கும் அழகான சிரிப்பு.
  2. ‘திருடுறோமா…’, ‘இல்ல, எடுக்கறோம்…’
    ‘உனக்கொண்ணு, எனக்கொண்ணு, காக்காக்கொண்ணு…’,
    ‘உனக்கு பிடிக்குதா…’, ‘ம்ஹும்… கொழ கொழன்னு… இதவிட ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு…’

கைதட்டும்படியாக நச்சுன்னு வசனம்…

படத்தைப் பாராட்ட இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்தத் தங்க முட்டையை ..!!

ஷர்மிளா ராஜசேகர் 

ஷர்மிளா ராஜசேகர்

ஷர்மிளா ராஜசேகர்

வாசிக்க…

என் எண்ணங்கள் – 1

என் எண்ணங்கள் – 2

என் எண்ணங்கள் – 3

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

sunlight3

அது ஒரு வெயில் காலம்…

ஓடு பிளந்து பாயும்
மின்சாரத்தைப் போல
வெயிலாயுதம் தாக்குகிறது…

கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்

தொடர்ந்து வரும் பெரும்புழுதி
பாதங்களின் சுவடுகளை
காகிதங்களெனக் கிழித்து வருகிறது…

கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் முன்பு கொஞ்சம் வெயிலின் நன்மைகளையும்  பார்போம்…

சூரியக் கதிர்  நம்மை பொறுத்த வரை. தலைமுடி காய வைக்க, துணி காய வைக்க, பெயின்ட் காய வைக்க, மின்சாரம் கிடைக்க, தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க, நெல் மற்றும் தானியங்களை காய வைக்க, உலர்த்த, அதிகமாக உள்ள தண்ணீர் வற்ற, உப்பளத்தில் உப்பு தயாரிக்க, பூக்கள் மலர மற்றும் நேரத்தைக் கணக்கிட இப்படிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும்தான் என்று நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

daylight 1

நமது  உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் 90 சதவிகித `வைட்டமின் டி’ சத்து சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதால்தான் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. நாம் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இதனால்தான் சுமார் 12 கோடி மக்கள் உலகம் முழுவதும் `வைட்டமின் டி’ சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பூமியில் அனைத்து இயக்கமும்  சூரிய ஒளி மூலமே! சூரிய ஒளி மட்டும் பூமிக்குக் கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை.

சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பலவிதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலெக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேஷன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவற்றின் வீரியத்துக்கேற்ப அவற்றின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.

sunlight 2

அதிக வெயிலை,  ‘சுட்டெரிக்கும் சூரியன்’ என்றுதான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள்

1). எக்ஸ்ரே கதிர்கள்

2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள்

3). இன்ஃபிராரெட் கதிர்கள்

இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும்(4) சூரிய ஒளிக்கதிரே!

ஆக சூரியக்கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்புச் சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும்.

இதைத்தான் நாம் `சன் பர்ன்’ அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதே போல மனிதர்களின் தோலிலுள்ள பிக்மென்ட்ஸை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றிவிடும். நான் ஏற்கனவே சொன்னபடி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள்தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதே கதிர்கள்தான் உடலில் `வைட்டமின் டி’ உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கின்றன. பத்து சதவிகிதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை. சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு `வைட்டமின் டி’ கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு `வைட்டமின் டி’ ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.

உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு `வைட்டமின் டி’ அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது.

வெயிலும் நல்லதே!

கோடைக் காலம் என்பது இயற்கையின் பரிசு. கோடையில்தான்  மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் பயிர்  நிலங்களில் விளையும்  பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன.

கோடை வெயில் நம் வீட்டு செல்லங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் அற்புதப் பருவம் அல்லவா அது.

உடல், இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்துவிடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாடு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும் வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில் கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

sunlitht

இந்த தருணத்தில் தான் நமக்கு  உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வரும்போது உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.

கோடைக் காலத்தில் அதிகாலை  எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது.

உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. நாம் உடுத்தும் துணிகளும் நம் மனநிலையை தீர்மானம் செய்யும் காலமே கோடை காலம்.

வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும். அதிக நீர் அருந்த வேண்டும். விட்டு  விட்டு நீர் அருந்துவது நல்லது.

– ப்ரியா கங்காதரன் 

IMG-20150610-WA0017

 

 

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

Image Courtesy:

https://nationaldaycalendar.files.wordpress.com

http://inhabitat.com/i

http://data.hdwallpapers.im/

Home

விலாமிச்சை வேரும் மருத்துவ குணங்களும்!

water-pot

வெயில் நாட்களில் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அந்த மாதிரி  குடிக்கும்போது இன்னொன்றையும் செய்தால் பலன் அதிகம். ‘விலாமிச்சை வேர்’ என்றொரு வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சுத்தப்படுத்தி, லேசாக நசுக்கி, நல்ல காட்டன் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி அதைத் தண்ணீர் பானையில் போட்டு வைத்து விடவேண்டும். இதனால் தண்ணீர் நறுமணத்துடனும், குளிர்ச்சியாகவும், நல்ல மருத்துவகுணம் நிறைந்ததாகவும் இருக்கும்.

vilamichai verr

இதன் மருத்துவ குணத்தை ‘அற்புத சிந்தாமணி’ என்ற நூலில் உள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அது குளிச்சியையும் நறுமணத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் என்னென்ன வியாதிகளையெல்லாம் குணப்படுத்துகிறது என்று பட்டியலே போட்டிருக்கிறது.

‘‘மேகம் விழியெரிச்சல் வீறிரப் பித்தமொடி

தாகமத மூர்ச்சை பித்தஞ்சார் மயக்கம் –- சேகஞ்

சிரநேரமிழவயேகுஞ் செய்ய விலாமிச்சக்

கெரி கிரமு மின்றென்றிசை.’’

– அற்புத சிந்தாமணி.

இதனால் மேகநீர் கண் எரிவு, உதிரபித்தம், தாகம், மூர்ச்சை, பித்தம், அதனால் ஏற்படும் மயக்கம், கோபம், தலைவலி, தீச்சுரம் போகுமாம்.

வெயில் காலங்களில் மண்பானை வாங்கி தண்ணீர் வைத்து பயன்படுத்துபவர்கள் சிலர் அதன்மீது பெயின்ட்டையும் வேறு சில பல வண்ணக்கலவைகளையும் அலங்காரம் என்ற பெயரில் அடித்து விடுவார்கள். இதன் மூலம் மண்பானையில் தண்ணீரை எதற்காக வைத்துப் பயன்படுத்துகிறோம் என்ற தத்துவத்தையே மாற்றிவிடுகிறார்கள்.

மண் பானையின் மேல் உள்ள நுண்துளைகள் அடைபடக்கூடாது. இதன்மூலம் உட்செல்லும் காற்று ஆவியாக மாறும்போது தண்ணீரில் உள்ள வெப்பம் தணிந்து தண்ணீர் குளிர்விக்கப்படுகிறது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி நம் பண்டைய தமிழர்கள், இரண்டடுக்குக் கொண்ட மண்ணால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை ஊற்றி வைத்து, குளிர்சாதனப் பெட்டி போல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது போன்ற மண்பானைகள், கெடிலம் ஆற்றங்கரையில் அகழ்வராய்ச்சியின் போது கிடைத்துள்ளது. நம் பண்டைய நாகரிகம் ஆரோக்கியம் குறித்தான முன்னோரின் அக்கறைக்குச் சான்று.

– ‘மாங்குடி’ மும்தாஜ்.

Image courtesy:

http://www.maligairaja.com

https://fieldpoppy.files.wordpress.com