இறைவி

iraivi2ஒரு பொக்கே!

நல்லவர்களைப் பார்ப்பது ஓட்டல் சாம்பாரில் காயைத் தேடுவதுபோல கஷ்டமான வேலையாகிவிட்டது. இப்படி ஒரு காலத்திலும் யாராவது நல்லது செய்தால் அவர்களைத் தேடிப் பிடித்தாவது பாராட்டுவதுதான் அவர்களுக்கு இன்னும் ஊக்கமாகவும், மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கும்.

பீப் ஸாங் போன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தப் பெரும்பாலானோர் தவறுவதில்லை. ஆனால்… நல்லது நடக்கும்போது மட்டும் பாராட்ட மறந்துவிடுகிறோம்… அல்லது அதை ரசித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம்.

ஆமாம்…
‘இறைவி’ கார்த்திக் சுப்புராஜ் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்..

iraivi3

படத்தின் நிறைகுறைகளை விமர்சிப்பதற்கெல்லாம் பல சினிமா நிபுணர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவருக்கு ரெட் கார்ட் போட்டது பற்றி ஆராயவும் பலர் இருக்கிறார்கள் என்பதால் நாம் அதைப் பேச வேண்டியதில்லை.

இதில், நாம் குறிப்பிட விரும்பும் விஷயம்… சமீபகாலத்தில் பெண்களை அவமானப்படுத்தாத, அசிங்கப்படுத்தாத படம் எதுவும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலானவை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ வகையறாவாக இருப்பதாகத்தான் ஞாபகம். இதற்காக வரலாறை எல்லாம் புரட்ட வேண்டியது இல்லை. ‘இறைவி’யுடன் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் கூட பெண்களைத் திட்டி ஒரு பாடல்… பல டபுள் மீனிங் வசனங்கள்… இன்னும் ஓர் ஆபாச பாடல்.. ‘புஷ்பா புருஷன்’ என்று அருவருப்பான கேரக்டர் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது.

ஒரு படத்தை ஆரம்பிக்குபோதே, ‘ஒரு டாஸ்மாக் ஸாங் சார்… அதுல பொம்பளைங்களத் திட்டுறோம்… கானா பாலாகிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்’ என்றுதான் டிஸ்கஷனே நடத்துவார்கள் போல. அந்த அளவுக்கு சமீபகாலத்தில் பெண்களை அசிங்கப்படுத்தாத பாடலோ படமோ இல்லை என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம்.

iraivi1

இந்த மாதிரி ஒரு ஆபாச சூழலில், பெண்களைத் திட்டாத படம் என்பதற்காகவே ‘இறைவி’க்கு பொக்கே தரலாம். நம்முடைய அம்மா, சகோதரி, தோழி என தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பெண்களின் துயரங்களைப் பேசியிருப்பது இதுவரை தமிழ்சினிமாவில் நாம் பார்த்திராத ஓர் அதிசயம். அதிலும் பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வெகுஜனப் படம் என்பது எல்லா இறைவிகளும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இத்தனைக்கும் அவர் டாக்குமெண்ட்ரி சினிமா எடுக்கிற ஆள் இல்லை. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என இரண்டு ப்ளாக்பஸ்டர்கள் கொடுத்த ஒரு வெகுஜன இயக்குநர். மூன்றாவது படமான ‘இறைவி’யில் மிகவும் எதிர்பார்க்க வைத்த இயக்குநர். தன்னுடைய சினிமா மார்க்கெட் ஸ்டிராங்காக இருந்தும் இதுபோல பெண்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஒரு படம் எடுத்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய பொக்கேவே தரலாம்.

iraivi4

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் அதிதீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். வாட்ஸ் அப் ப்ரொஃபைலிலேயே தன்னுடைய போட்டோவுக்குப் பதிலாக ரஜினி போட்டோவை வைத்திருக்கும் தீவிரவாதி அவர்.

அதனால், ‘கபாலி’ ஸ்டைலிலேயே கடைசியாக ஒரு வார்த்தை…
மகிழ்ச்சி!

  • ஜி.ஸ்ரீவித்யா

iraivi5

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு அஞ்சலி!

Rajam

தமிழில் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்… சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்… நாவலைக் கூட கள ஆய்வு செய்து எழுதியவர்… வாழ்நாள் முழுக்க பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்… விளிம்புநிலை மக்களோடு வாழ்ந்து அவர்கள் பிரச்னைகளை அவர்களின் குரலாகவே எழுத்தில் பிரதிபலித்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். உடல் நலக் குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அக்டோபர் 20ம் தேதி இரவு காலமானார்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி அவருக்கு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அது தொடர்பான கட்டுரை மார்ச் 1-15, 2014 ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியானது. அதை இங்கே மறுபிரசுரம் செய்கிறோம்.

***

வேருக்கு நீர்!

ராஜம் கிருஷ்ணனுக்கு 90 வயது. நடமாட்டமில்லை. படுக்கையிலேயே வாசம். தலையை மட்டுமே அசைக்க முடிகிறது. அந்த நிலையில் இருப்பவரை ஸ்ட்ரெச்சரிலேயே வைத்து மேடைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள் பேராசிரியர் கே.பாரதி, கல்பனா, கே.எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட நண்பர்கள். கூடவே அவரை பராமரித்து வரும் சென்னை, ராமசந்திரா மருத்துவமனை மருத்துவர், ஊழியர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

IMG_1314

ராஜம் கிருஷ்ணனுக்குக் குழந்தைகள் இல்லை. கணவர் கிருஷ்ணன் இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் நண்பர்களும் சில எழுத்தாளர்களும் அவரை விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு, கடந்த 5 வருடங்களாக அவரைப் பராமரித்து வருகிறது ராமசந்திரா மருத்துவமனை.

இந்த நிகழ்ச்சியில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘பாதையில் பதிந்த அடிகள்’ நாவலில் இருந்து ஒரு பகுதியை சில பெண்கள் வாசித்துக் காட்டினார்கள். ‘மணலூர் மணியம்மாள்’ குறித்த இந்த நாவலின் சில பகுதிகளைப் படிக்கும் போது அரங்கில் கரவொலி! அதைக் கேட்டு, புரிந்தும் புரியாமலும் தேம்பித் தேம்பி அழுதார் ராஜம் கிருஷ்ணன்.

விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான கே.பாரதி அறிமுக உரையில் இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘ராஜம் கிருஷ்ணனை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வரவே எங்களுக்கு தைரியமில்லை. ராமசந்திரா மருத்துவமனை உத்தரவாதம் கொடுத்த பிறகுதான் அழைத்து வந்தோம். அவரை மேடை ஏற்றவும் ஒரு காரணம் உண்டு. அவரை தோல்வி அடைந்த ஒரு மனுஷியாக சில ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. அவர் ஒரு வெற்றி பெற்ற மனுஷி, சாதனையாளர் என்பதை மீண்டும் நினைவுபடுத்துவதற்காகவே மேடைக்கு அழைத்து வந்தோம். மிக சுத்தமான சூழலில், சத்தான உணவு கொடுத்து அவரைப் பார்த்துக் கொள்ளும் மருத்துவமனை ஊழியர்களையும் பாராட்ட நினைத்தோம். அதனால்தான் இந்த விழாவை ஏற்பாடு செய்தோம்’’.

IMG_1302

பேராசிரியர் வசந்திதேவி, 1982ல் ராஜம் கிருஷ்ணன் அறிமுகமான காலத்திலிருந்து இருவருக்கும் இடையில் தொடர்ந்த நட்பு அனுபவங்களை நினைவு கூர்ந்தார். ‘‘அப்போது நான் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தேன். என் துறை மாணவிகள் ஒரு கண்காட்சி வைத்திருந்தார்கள். ‘வரலாற்றுப் பார்வையில் பெண்ணின் நிலை’ என்பதுதான் கண்காட்சியின் உள்ளடக்கம். மார்ச் 8, பெண்கள் தினத்தன்று தொடங்க இருந்தது. அதைத் திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று யோசித்தோம். ராஜம் கிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். ஒருபுறம் தயக்கமாக இருந்தது. அது ஒரு சிறிய விழா. ஒரு துறை சம்பந்தப்பட்ட சிறிய நிகழ்வு. அதற்கு அவர் வருவாரா என்பது சந்தேகம்… ஆனால், விஷயத்தைச் சொன்னதுமே வர ஒப்புக் கொண்டார். அவரை அழைக்க ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருந்தேன். மலர்ந்த முகம், துறுதுறுப்பு, கம்பீரம்… பார்த்ததுமே அவர் பால் அன்பும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டது. காரில் ஏறியவர், நிறுத்தாமல் பேசித் தள்ளிவிட்டார். பெண் நிலை, எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனம் என்று பேச்சு எங்கெங்கோ போனது. வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் அம்மாவை அறிமுகப்படுத்தினேன். அம்மா, மதம் மாறித் திருமணம் செய்தவர் என்று கேள்விப்பட்டதுமே அவர் முகம் பரவசப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய புரட்சி. கண்காட்சியில் ஏங்கெல்ஸ் தியரி, 8 மணி நேர வேலைக்கான போராட்டம் உட்பட பல அரிய வரலாற்றுத் தகவல்களை விளக்கங்களும் படங்களுமாக வைத்திருந்தோம். அவர் ஒவ்வொன்றாக உன்னிப்பாகப் பார்த்தார். மாணவிகளிடம் குழந்தை போன்ற ஆர்வத்துடன் சந்தேகங்கள் கேட்டார். அவருக்காக நாங்கள் நிகழ்ச்சி நேரத்தையே மாற்ற வேண்டி வந்தது. காலை பத்தரை மணிக்கு நடக்க இருந்த நிகழ்ச்சியை மதியம் 2:30க்கு மாற்றினோம். பேசும் போது, ‘இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் நடக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அதே கண்காட்சியை சென்னையில் வைத்திருந்தோம். அங்கே எங்களுக்கு சிறிய இடம்தான் கொடுத்திருந்தார்கள். முழுமையாக எல்லாவற்றையும் வைக்க முடியவில்லை. அங்கும் வந்திருந்தார் ராஜம் கிருஷ்ணன். முழுவதுமாக இல்லையே என்று வருத்தப்பட்டார், கோபப்பட்டார். நான் பணி செய்த எல்லா இடங்களுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பாதி நாளாவது பேசாமல் வந்தது கிடையாது. என் அம்மாவைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை’’.

‘‘வாழும் காலத்தில் ஒரு படைப்பாளிக்கு நாம் செய்கிற மரியாதை’’ என்று பாராட்டினார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தே.முத்து.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன், ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் குறித்து விரிவாக உரையாற்றினார். ராஜம் கிருஷ்ணனின் ‘காலம்தோறும் பெண்மை’, ‘அலைவாய்க் கரையில்’, ‘கரிப்பு மணிகள்’ உள்ளிட்ட பல படைப்புகளை முன் வைத்துப் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜம் கிருஷ்ணன் குறித்த பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்… ‘‘அவரை மருத்துவமனையில் போய் இருமுறை பார்த்தேன். அவருக்கு நினைவு மறந்துவிட்டது. ஆளை உற்றுப் பார்த்து புரிந்து கொள்கிறார். அவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தைரியமும் வீரமும் கொண்டவர். கொடுமைகளைக் கண்டால் தட்டிக் கேட்கும் மன உறுதி படைத்தவர். ஏழை, உழைக்கும் மக்களின் மேல் அக்கறை கொண்டவர். பெண்களிடம் புரட்சிகரமான மாற்றம் வர வேண்டும் என்று பாடுபட்டார். தன் படைப்புக்காக அவர் கள ஆய்வு செய்வதை நான் நேரில் பார்த்தவன். தன்மானம் மிக்க ஒரு பெண்மணி. மரியாதைக் குறைவு ஏற்பட்டால் அவருக்குக் கோபம் வரும். அவர் எழுதிய ‘அலைவாய்க்கரையில்’தான் மீனவர்களைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்’’.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகும் ராஜம் கிருஷ்ணனின் கேவலும் அழுகையும் காதில் ஒலித்தபடியே இருந்தன.

***

ராஜம் கிருஷ்ணனை பல வருடங்களாக நன்கு அறிந்தவர் கவிஞர் க்ருஷாங்கினி. விஸ்ராந்தியில் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து ராமசந்திராவுக்கு இடம் பெயர்ந்த பிறகும் தொடர்ந்து அவரைப் போய் பார்த்து வருபவர். அவர் சொல்கிறார்… ‘‘ஆண் எழுத்தாளர்கள் வீட்டுக்கு யாராவது போனா அவருடைய மனைவியோ, மகளோ வந்தவங்களை உபசரிப்பாங்க. பெண் எழுத்தாளர் வீட்டுக்குப் போனா அந்த எழுத்தாளரேதான் எல்லாத்தையும் செய்ய வேண்டி இருக்கும். ராஜம் கிருஷ்ணன் வீட்டுக்கு யார் போனாலும் வந்தவங்களுக்குப் பிடிச்சதா பார்த்து பார்த்து சமைச்சுப் போடுவாங்க. ‘மணல்வீடு’ இதழின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் இன்னிக்கும் அவங்க கையால சாப்பிட்ட ரசத்தை புகழ்ந்து சொல்வார். தாம்பரத்தில் இருந்த போது, ராஜம் கிருஷ்ணன் வீட்டைச் சுத்தி மரம் வளர்த்தாங்க. ஒவ்வொரு மரத்துலயும் என்ன காய்க்கும், ருசி எப்படி, எங்கேருந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு எல்லாத்தையும் விரிவா சொல்வாங்க. அப்படிப்பட்ட வீட்டை விக்கற நிலைமை வந்தது. அவங்ககிட்ட முனியம்மாள்னு ஒருத்தங்க வேலை பார்த்தாங்க. வீட்டை வித்த பணம் வந்ததும் ராஜம் கிருஷ்ணன் அந்தப் பெண்மணியைக் கூப்பிட்டாங்க. ‘என்கிட்ட 20 வருசத்துக்கும் மேல வேலை பார்த்துட்டே. உனக்குன்னு ஒரு வீடு வேணாமா?’ன்னு சொல்லி சில லட்சங்கள் செலவழிச்சு ஒரு வீடே வாங்கிக் குடுத்துட்டாங்க. இந்த மனசு யாருக்கு வரும்?’’

பாலு சத்யா

படங்கள்: சதீஷ்

தி.க.சி., சுடலை மாடன் தெரு, திருநெல்வேலி: ஓர் இலக்கிய முகவரி

Image

காகவி பாரதியைத் தன் ஆதர்ச குருவாக வரித்துக் கொண்டு இலக்கிய வாழ்வைத் தொடங்கியவர் மதிப்பிற்குரிய இலக்கிய ஆளுமை தி.க.சி என்கிற தி.க.சிவசங்கரன். இதனாலும் அவர் மீது என் பிரியம் அளவு கடந்திருக்கலாம். மகாகவி பாரதி என் மானசீக குரு. இளம் வயதில் கனவுகளில் மகாகவியுடன் வாழ்ந்திருக்கிறேன். அதே கருப்புக் கோட்டுடன் காட்சியளித்திருக்கிறான்.

கையெழுத்துப் பிரதியிலேயே ‘ஆயுதம்’ என்கிற எனது கவிதைத் தொகுப்பு முதல் பரிசுக்குத் தேர்வாகியிருந்தது. கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொள்ள நண்பர் ஜெயராமனுடன் எட்டயபுரம் போயிருந்தேன். மகாகவியின் கருவறை எட்டயபுரம் ஆயிற்றே! அந்த மண்ணில் முதல் விருது பெறுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மகாகவியின் வீட்டில் நாங்கள் இருவரும் மண்ணில் விழுந்து புரண்டோம்.

எட்டயபுரத்துக்கு அடுத்து திருநெல்வேலிதானே!

விருதுப் பட்டயங்களைச் சுமந்தபடியே திருநெல்வேலி போனோம். திருநெல்வேலி என்றால் பலருக்கும் அல்வா. உங்களைப் போலவே எங்களுக்கும் திருநெல்வேலி என்றால் தி.க.சிவசங்கரன். நாங்கள் அனைவரும் வீட்டுக்குப் போயிருந்தோம். மேசை நிறைய புத்தகங்கள். ஒரு ஓரத்தில் தொலைபேசி என்பதாக ஞாபகம். வெள்ளை நிறம் என்று நினைக்கிறேன். எதிரில் ஒரு நாற்காலி. நாற்காலியின் மூலையில் தி.க.சி. அண்ணன் வண்ணதாசன் எங்கள் வருகையைத் தந்தைக்குச் சொல்கிறார். ஒரு குழந்தையைப் போல குதூகலமாக வரவேற்கிறார் தி.க.சி. அப்போது எனக்குத் தோன்றியது இதுதான்… இந்த இமயமலைக்குள் எத்தனைக் கூழாங்கற்கள்!

‘கல்கியிலும் வண்ணக்கதிரிலும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்… தொடர்ந்து எழுதுங்கள்’. முதுகு இல்லாதவர்களைக் கூடத் தட்டிக்கொடுக்க அவரால்தான் முடியும்!

அவரைப் பற்றிப் பேச ஆரம்பிப்போம்… அவர் நம்மைப் பற்றியும் இலக்கிய உலகத்தைப் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பார்.

அப்போது அவரது துணைவியார் உடல்நலமின்றி இருந்தார். அண்ணன் வண்ணதாசன் அம்மாவுடன் இருக்க, தி.க.சி இடையில் போய்ப் பார்த்துவிட்டு வந்து மறுபடியும் தன் மனைவியின் உடல்நிலை, இலக்கிய உலகத்தின் சுகாதாரம், நாம் பணியாற்றவேண்டிய திசைவழி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.

வண்ணதாசன் எங்களைப்பற்றித் தன் தந்தையிடம் சொல்கிற விதம் ரொம்ப நன்றாயிருக்கும். முதலில் சொல்கிறபோது காதில் விழுந்திருக்காது… அல்லது கவனம் சிதறி இருக்கும். அடுத்துக் கொஞ்சம் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்கிற போது வண்ணதாசனின் முகபாவமும் வார்த்தைகள் வெளிவந்த பிறகு மௌனம் ஆகும் உதடுகளும் பார்க்கப் பரவசமாக இருக்கும். அப்போதும் ஒரு தீவிர அரசியல்வாதியாகவும் இலக்கியவாதியாகவும் பேசிக்கொண்டே இருப்பார் தி.க.சி.

அடுத்து, எங்கள் இலக்கு பத்தமடை தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பார்ப்பதாக இருந்தது. தி.க.சியிடம் சொன்னோம். உடனே ச.தமிழ்ச்செல்வன் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அத்தோடு தமிழ்ச்செல்வன், அவர் சார்ந்திருக்கும் இலக்கிய அமைப்பு, அதன் செயல்பாடு என்று அவர் பேச்சு விரிய ஆரம்பித்துவிட்டது.
எழுத்தாளர் சங்க மாநாடுகளுக்குத் தவறாமல் வருவார் தி.க.சி. ஓரிரு நிமிடங்கள்தான் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்றாலும் உணர்வு பூர்வமாகப் பேசுவார். உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை சொல்லியபடியே இருப்பார்.

ஒருமுறை தினமணிக் கதிரில் ‘இலக்கியப் பஞ்ச சீலம்’ என்கிற கருத்தாக்கம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார். தலித்தியம், தமிழியம், பெண்ணியம், சூழலியம், மார்க்சியம் என்று குறிப்பிட்டு இலக்கியத்தின் நோக்கம் இவற்றைச் சுற்றி இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அதற்கு இலக்கியரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதினேன். சென்னையில் “இலக்கியப் பஞ்ச சீலம்” என்ற தலைப்பில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். அரங்கம் கொள்ளாதக் கூட்டம். என்னைப் பொறுத்தவரை இன்னும் அந்தக் கூட்டம் முடிந்ததாகத் தெரியவில்லை. இப்போதும் அந்த அரங்கில் தி.க.சி. பேசிக் கொண்டிருக்கிறார். அதுதான் தி.க.சி.

இத்தனை பெரிய கூட்டம் இருந்தும் வெறிச்சோடிக் கிடக்கிறது சுடலை மாடன் தெரு.

– நா.வே.அருள்
Image courtesy: nanjilnadan.com