வரம் கிடைக்காத குழந்தைகள்!

Image

(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)

உலகிலேயே மிகக் குறைந்த காலத்துக்கு தாய்ப்பால் வரம் கிடைக்கப் பெற்ற குழந்தைகள் வாழும் நாடு, இங்கிலாந்து. ‘இங்கிலாந்தில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தாய்மார்கள், பிரசவத்துக்குப் பிறகு 6 வாரத்துக்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதில்லை’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதனால் அவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் மேல் அக்கறையில்லை என்று அர்த்தமில்லை. தாய்ப்பாலின் அருமை அவர்களுக்குப் புரியவில்லை என்றுதான் அர்த்தம்.

‘உலகம் முழுக்க சத்துக் குறைபாடு காரணமாக, 5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 கோடியே பத்து லட்சம். அந்தக் குழந்தைகளில் பாதி முதல் நான்கு வாரத்துக்குள் (28 நாட்களில்) இறந்து போகின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறது யுனிசெஃப் அறிக்கை ஒன்று. தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு ஏற்படாது. பல உடல்நலக் கோளாறுகள் நெருங்காது. இதை பழைய பதிவுகளில் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டோம். நல்ல விஷயத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்தானே!

பல பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் ஆதாரச் சிக்கல், பயம்! அழகு குறைந்து போகும், நம் சக்தி போய்விடும் என்கிற பயம். சில பெண்களுக்கு போதுமான அளவுக்குப் பால் இருக்குமோ, இருக்காதோ என்கிற நம்பிக்கை இன்மை. இவர்களுக்கெல்லாம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு இல்லை. சரியான வழிகாட்டுதல் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் மருத்துவரையோ, செவிலியரையோ அணுகினால் போதும், சந்தேகங்களைத் தீர்த்து வைத்து உதவுவார்கள்.  

பிரசவத்துக்குப் பிறகு கட்டாயமாக 6 மாத காலத்துக்கும், அதன் பின் 2 வயது வரைக்கும் மற்ற சத்தான உணவுகளுடனும் தாய்ப்பாலை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் புகட்டுவது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைக்கும் அம்மாவுக்கும் இடையே ஒரு ஆழமான நெருக்கத்தையும் பிரிக்க முடியாத பந்தத்தையும் ஏற்படுத்துவது தாய்ப்பால்தான்.

Image

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (American Academy of Pediatrics) அமைப்பு, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் சில நன்மைகளைப் பட்டியலிட்டிருக்கிறது. அவை…

  • காது தொற்று நோய்கள் (Ear Infections) ஏற்படாது.
  • வயிற்றுப் போக்கு வராமல் தடுக்கும்.
  • நிமோனியா காய்ச்சல், மூச்சுத் திணறல், மூச்சு நுண்குழாய் அழற்சி (Bronchiolitis) வராது.
  • இரைப்பை, குடல் அழற்சி நோய்கள் (Gastrointestinal) நெருங்காது.
  • சிறுநீர்ப்பை தொற்று நோய்கள் (Urinary Tract infections) உண்டாகாது.
  • மூளைக்காய்ச்சல் (Meningitis) நோயும் மற்ற பாக்டீரியா,  வைரஸ் தொற்று நோய்களும் ஏற்படாது.
  • ரத்தத்தில் நச்சுப் பொருட்களோ, சீழோ (Sepsis) ஏற்படாமல் தடுக்கும்.
  • பிற்காலத்தில் ‘டைப் – 1’ மற்றும் ‘டைப் – 2’ நீரிழிவு நோய் ஏற்படாது.
  • நிணநீர் திசுக்கட்டி (Lymphoma), வெள்ளணுப்புற்று (Leukemia) நோய்கள் ஏற்படாது.
  • குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிக எடை, உடல் பருமன் பிரச்னைகள் நெருங்காது.
  • அம்மாக்களுக்கு…
  • பிரசவத்துக்கு முன்பிருந்த அதே அளவுக்கு கருப்பை வெகு விரைவாகத் திரும்பும்.
  • மாதவிலக்கு தாமதமாகி, தாயின் உடலில் இரும்புச்சத்து சேருவதற்கு உதவும்.
  • வெகு விரைவிலேயே பிரசவத்துக்கு முந்தைய எடைக்குத் தாய் திரும்ப முடியும்.
  • எலும்புகள் வலுவடையும்.
  • மார்பகப்புற்று நோய், மற்றும் கருப்பைக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்படும்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றும், குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும் தாய்ப்பால், ‘அமுதம்’ என்பதில் சந்தேகமில்லை. தாய்ப்பாலின் மகத்துவத்தை ஒவ்வொரு அன்னைக்கும் உணர்த்துவோம். அந்த அமுதத்தைப் போற்றுவோம்! 

Image Credit: kootation.com

–  பாலு சத்யா 

அமுதம் – 6

தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா?

Image

(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)

பிரசவத்துக்குப் பிறகு சில தாய்மார்கள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில்லை. ‘பால் இல்லை’, ‘நான் வேலைக்குப் போகிறேன். அதனால் நேரமில்லை’ என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். சிலர் எங்கே அழகு குறைந்து போய்விடுமோ என்கிற பயத்தினாலேயே தவிர்த்து விடுவார்கள். இவர்களைப் போன்றவர்கள் தாய்ப்பாலுக்கு மாற்றாக கடைகளில் விற்கும் சில பால் பொருட்களை வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கப்படுத்துவார்கள்.

‘குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்தை எங்கள் பொருள் கொடுக்கும்’ என்று வலை விரிக்கும் சில நிறுவனங்களின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பலரும் வாங்கிவிடுகிறார்கள். ‘குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு மற்ற சத்தான உணவுகளுடன் 2 வருடங்களுக்கு தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO). கடைகளில் விற்கப்படும் பால் பொருள்களை மனத்தில் கொண்டு சில பெண்கள் மூன்று மாதங்களிலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். உண்மையில் இது போன்ற பொருட்களால் குழந்தைக்கு அதிக நன்மை இல்லை.

mother and baby 2

இது போன்ற மாற்று (Substitute) பொருட்களை விற்பதற்குப் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியிருக்கின்றன. சில சமயங்களில் வாங்குபவர்களுக்கு, ‘இது சிறந்ததா, அது சிறந்ததா?’ என்று குழப்பம் ஏற்படுகிற அளவுக்கு இந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் கவனம் ஈர்க்கின்றன. சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களைப் போல ஆகிவிட்டது குழந்தைகளுக்கான பால் பொருட்கள் விற்பனை. குளிர் பானங்களில் நிறமும் சேர்க்கப்படும் ஃபிளேவரும்தான் வேறு வேறானவை. மற்றபடி எல்லா குளிர்பானங்களும் ஒன்றுதான். அது போலத்தான் குழந்தைகளுக்காக விற்கப்படும் பொருட்களும். பயன்படுத்துபவர்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பது, பேறுகாலத்துக்குப் பின் ஏற்படும் ரத்தப்போக்கைக் குறைக்கும். தாய்க்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். கருப்பை சார்ந்த புற்று நோய் வராமல் தடுக்கும். தாய்ப்பால் கொடுப்பதால் மிக அதிக அளவில் உடலில் கலோரி குறையும். தாயின் உடல் படிப்படியாக பழைய நல்ல நிலைக்குத் திரும்பும். இது போன்ற எத்தனையோ நன்மைகள் தாய்ப்பால் கொடுப்பதால் உண்டு. இந்த நன்மைகள் தாய்ப்பாலுக்கு மாற்றாகக் கொடுக்கப்படும் பொருட்களில் கிடைக்காது. குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் போக்கு, நிமோனியா காய்ச்சல் போன்றவற்றை இந்தப் பொருட்களால் சிறிதளவு கூடத் தடுக்க முடியாது. மேலும், குழந்தையின் வளர்ச்சியைக்கூட பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால்தான் உலக அளவில் பல சுகாதார நிபுணர்களும் மருத்துவர்களும் ஆணி அடித்தது போல ஒரே குரலில் சொல்கிறார்கள்… ‘தாய்ப்பாலுக்கு ஈடான மாற்று இல்லவே இல்லை’.

– பாலு சத்யா

அமுதம் – 5

செலவில்லாத மருந்து!

Image

(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7) 

புதிதாக இந்த உலகத்தைக் காண வரும் பிஞ்சுக் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்? மருத்துவர்கள் வலியுறுத்துவது தாய்ப்பால். ஆனால், பழமையில் ஊறிய பலரும் கொடுப்பது, தேன், கோயில் தீர்த்தம் அல்லது சர்க்கரைத் தண்ணீர்.

பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுப்பதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘குழந்தைக்கு செரிமானம் ஆகாது’. இந்த நம்பிக்கையிலேயே குழந்தை பிறந்த சில நாள்களுக்கு தண்ணீரையோ, தேனையோ மட்டும் கொடுப்பார்கள். வட இந்தியாவில் முதல் மூன்று நாட்களுக்குக் கோயிலில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை மட்டுமே குழந்தைக்குக் கொடுக்கிற சில குடும்பங்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர வைப்பது மிகவும் கடினமான காரியம்.

mother-and-child

‘2011ல் உலக அளவில் 6 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய 5வது பிறந்தநாள் வருவதற்குள் இறந்திருக்கிறார்கள். இந்த இறப்புகளில் 98 சதவிகிதத்துக்கும் அதிகமான குழந்தைகள் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இப்படி இந்தியாவில் மட்டும் ஒரு கோடியே 6 லட்சம் குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளி விவரம். குழந்தைகள் நல மருத்துவர்களும், ஆரோக்கிய நிபுணர்களும் ‘பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் புகட்டினால், இது போன்ற இறப்புகளைத் தவிர்த்துவிடலாம்’ என்கிறார்கள். ‘ஒரு குழந்தையின் ஆயுளைப் பாதுகாப்பதற்கு மிகச் சிறந்த, செலவே இல்லாத வழி தாய்ப்பால் கொடுப்பது’ என்கிறது யூனிசெஃப் (The United Nations Children’s Fund) அமைப்பு.

‘‘குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் புகட்டத் தொடங்குவது, ரத்தத்தில் நஞ்சு சேருதல் (Sepsis), மார்ச்சளிக் காய்ச்சல் (Pneumonia), வெப்பக் குறைபாடுகள் (Hypothermia), வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்னைகளால் குழந்தை இறப்பதை 22 சதவிகிதம் தடுக்கிறது’’ என்கிறார்கள் யூனிசெஃப் அமைப்பின் நிபுணர்கள்.

‘தாய்ப்பால் குழந்தையின் கற்றல் திறனை வளர்க்க உதவுகிறது. உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கிறது. பிற்காலத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். உண்மையில், இந்தியாவில் 34% குழந்தைகளுக்கு மட்டும்தான் பிறந்த 1 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகட்டப்படுகிறது.

இந்தியாவில், நகரங்களிலும் ஏன்… கிராமங்களிலும் கூட சில நாட்களுக்கு மட்டும் குழந்தைக்குத் தாய்ப்பால், பிறகு, பசுவின் பாலைக் கொடுத்துப் பழக்குகிறார்கள். ‘குழந்தை பிறந்த 12 மாதங்களுக்கு, புகட்டுவதற்கு ஏற்றதல்ல பசுவின் பால்’ என்கிறார்கள் மருத்து ஆய்வாளர்கள்.

‘குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குக் கட்டாயம் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். குழந்தை தாய்ப்பால் குடிக்கப் பழகும் வரை ஸ்பூனால் புகட்டலாம். தாய்ப்பாலோடு எந்த உணவையோ, நீர்ப்பொருளையோ சேர்க்கக்கூடாது. தண்ணீரைக்கூட சேர்க்கக்கூடாது’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். கேட்க வேண்டியவர்களின் காதில் விழுந்தால் சரி.

Image credit: http://blog.yeeshungga.com

– ஆனந்த பாரதி

அமுதம் – 4 

ஒரு வாய் கடல்

Image(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)

உலக விஞ்ஞானத்தின்

மொத்த சூட்சுமத்தையும்

கருப்பைக்குள் அடைகாக்கிறாள் தாய்

 

தாய்

குழந்தையைப் பெற்றெடுத்தாலும்

குழந்தைதான் தாயை வளர்த்தெடுக்கிறது

 

தாய்க்கு

மொத்தம் மூன்று இதயங்கள்

இரண்டில் பால் கசிகின்றன

ஒன்றில் அன்பு…

Image

மண்ணுக்கு மழைநீர்

மழலைக்குத்  தாய்ப்பால்

 

தாய்ப்பால்…

கடலில் அல்ல

உடலில் கடைந்த உயிரமுதம்

 

யாருக்கு வாய்க்கும் இலவச சத்துணவு

குழந்தைக்குத்தான்

மடியில் படுத்துண்ணும்

மாபெரும் பாக்கியம்

 

அறுநூறு வகை உயிரிகள்

இருநூறு வகை இனிப்புப் புரதங்கள்

உண்டால் உறக்கம்

மச  மச  கிறக்கம்

ஆயுள் முழுக்க நோய்கள் மரிக்கும்

போஸான் அணுத்துகளே … புரியவில்லையே

தரணியே அதிசயிக்கும்

இந்த தசை “பாட்டில்” தயாரிப்பு

மார்பகமா…மருந்தகமா ….

சமூக மனசாட்சியின் மீது சந்தேகம் கொண்டு

இயற்கை தந்த சீதனம்தான்

அன்னைக்கு இரண்டு அமுதசுரபிகள்!

 

தாய்ப்பாலுக்கு

மனிதர்கள் கொண்டாடுவது

வார விழா

குழந்தைகளுக்கு

தாய்ப்பால் கொண்டாடுவதோ…

ஆயுள்விழா!

– நா.வே.அருள் 

அமுதம் – 3

Photo Courtesy:  Mr. & Mrs. J. William Meek III. ©2006 Will Barne

வேலையா, குழந்தையா? – அல்லாடும் பணிபுரியும் பெண்கள்!

Image

உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1-7) 

குடும்ப நிர்வாகிகளுக்கு வீட்டு வேலை என்பது பெரிய சுமை. அதே நேரம், பணிபுரியும் பெண்களுக்கு இரட்டைச் சுமை. வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதில் குழந்தை பிறந்துவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம். தாய்ப்பாலின் அருமையை உணர்ந்திருந்தாலும், பணிபுரியும் பெண்களால் குழந்தைக்கு பால் ஊட்டுவது பல நேரங்களில் இயலாத காரியமாகவே ஆகிவிடுகிறது.

அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் சலுகைகள் உள்ளன. ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரையின்படி ‘கர்ப்பகால விடுமுறையாக 6 மாதங்கள் எடுத்துக் கொள்ளலாம். குழந்தையை கவனித்துக் கொள்ள 2 வருடங்கள் வரைகூட விடுமுறையை நீட்டிக்கலாம்’. வருடத்துக்கு மூன்று முறை குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக குறைந்தது 15 நாள்கள் வரை, குழந்தையின் வயது 18ஐ நெருங்கும் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் என்ன செய்வார்கள்? ஒன்று வேலையை துறக்க வேண்டும். அல்லது சம்பளத்தை இழக்க வேண்டும். பல தனியார் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் இணக்கமாக இருப்பதில்லை.

சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அந்தப் பெண். கை நிறைய சம்பளம். பிரசவத்துக்காக 3 மாதங்கள் விடுமுறை எடுத்தார். ஆனால், அந்த விடுமுறை நாள்கள் அவருக்குப் போதுமானதாக இல்லை. குழந்தைக்குப் பாலூட்ட வேண்டிய கட்டாயம். எனவே, நிறுவனத்துக்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்துக் குடியேறினார்.

ஒருநாள் அவருடைய மேலாளர் அவரை அழைத்தார். ‘‘ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவை சீட்ல இல்லாமப் போயிடுறீங்களே… எங்கே போறீங்க?’’

‘‘வீட்ல பச்சைக் குழந்தை இருக்கு சார். பக்கத்துலதான் வீடு. அதான் ஒரு அஞ்சு நிமிஷம் ஓடிப் போய் பால் குடுத்துட்டு வந்துடுறேன்’’.

‘‘இனிமே வேலை நேரத்துல வெளியே போகக் கூடாது. இது மத்தவங்களுக்கும் வழிகாட்டுற மாதிரி ஆயிடும்.’’

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? வேலையை விட்டுவிட்டார். இவர் மட்டுமல்ல, இது போலப் பல பெண்கள், குழந்தையை கவனித்துக் கொள்ளவும் தாய்ப்பால் கொடுக்கவும் வேலையை விட்டுவிடுகிறார்கள். சில நிறுவனங்களில் பிரசவகால விடுமுறை 3 மாதங்கள். ஆனால் அது தாய்மார்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. மேற்கொண்டு 2 மாதங்களோ, 3 மாதங்களோ விடுமுறை எடுத்தால் அந்த விடுமுறை நாட்களில் சம்பளம் கிடைக்காது. வெகு சில நிறுவனங்களே குழந்தைகள் நலத்தில் அக்கறை காட்டுகின்றன. அலுவலகத்திலேயே குழந்தைகளளைப் பராமரிக்க தனி இடங்களை (Creche) அமைத்திருக்கின்றன.

Image

பெங்களூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் அவர். அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. இருந்தாலும், கருவுறுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் பிரசவத்துக்குப் போதுமான அளவுக்கு விடுமுறை தராததே காரணம். மேலும், நான்கைந்து வருடங்கள் ஆன பிறகும் அதே நிலைதான். இப்போது அவரால் வேலையை விட முடியாத, ஒருநாள்கூட விடுமுறை எடுக்க முடியாத நிலைமை. சில கடன்களை அவர் அடைக்க வேண்டி இருந்தது. அதற்கு அவர் தன் சம்பளத்தைத்தான் நம்பியிருந்தார்.

பணிபுரியும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதற்காகவே டாக்டர்கள் சொல்லும் சில யோசனைகள் உண்டு. ‘பம்பிங் அண்ட் மில்க் ஸ்டோரேஜ்’ (Pumping and milk storage) எனப்படும் ஒருமுறை. இந்த வகையில் தாய்ப்பாலை எடுத்து 6 மணி நேரம் வரை பாதுகாத்துப் பயன்படுத்தலாம். ஆனால், போகும் இடங்களுக்கெல்லாம் கையோடு அதற்கான பம்பையும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இது சாத்தியமல்ல.

பணிபுரியும் பெண்கள், தாய்ப்பால் கொடுப்பதில் இருக்கும் பிரச்னைகளை நிறுவனங்கள் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். உரிய நேரத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க போதிய வசதிகளை நிறுவன வளாகத்துக்குள் செய்து தர வேண்டும். சில நாடுகளில் கர்ப்ப கால விடுமுறையாக, ஒரு வருடம் வரை தருகிறார்கள். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், கருணை அடிப்படையில் இந்த விடுமுறையை நீட்டிக்கலாம். புதிதாக இந்த உலகத்துக்குள் அடி எடுத்து வத்திருக்கும் சிசுவுக்கு தாய்ப்பால் மிக அவசியம். இதைப் புரிந்துகொண்டு பணிபுரியும் பெண்களுக்கு உதவ நிறுவனங்களும் முன் வரவேண்டும் என்பதே நம் ஆதங்கம்.

– ஆனந்த பாரதி

அமுதம் – 2

அமுதம் – 1

Image

உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 – 7)

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு வழங்கப்படும் ‘தேவர்களின் அமுதம்’. அது கொடுக்கும் சக்தியைப் போல, வேறு எந்தப் பாலுக்கும் சக்தியில்லை. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. பச்சிளம் குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மிக சத்தான உணவு. அதுதான் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பாதுகாக்கிறது.

குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள், பிற்காலத்தில் அதிக எடைப் பிரச்னைக்கோ, உடல் பருமனுக்கோ ஆளாவதில்லை. இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அவர்கள் நீரிழிவு என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதிக்குள் விழுவதில்லை; அதோடு அறிவுபூர்வமான பரீட்சைகளில் மிகச் சிறப்பாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், உலக அளவில் 38 சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. அதுவும் ஆறு மாதங்களுக்கு என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

இந்தியாவில் 46 சதவிகிதக் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் கிடைக்கிறது. அதுகூட தாய்ப்பாலுக்கு இணையான வேறு எந்த ஆகாரமும் குழந்தைக்குக் கிடைக்காத காரணத்தால்தான். ‘‘கிட்டத்தட்ட எல்லா தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்கத் தகுதியானவர்களே! தாய்ப்பால் குறித்த மிகத் துல்லியமான தகவல்களும், ஆதாரங்களும் கிடைத்தால் அவர்களால் அது முடியும். ஆனால், பல இடங்களில் தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தாய்மார்கள் தடுக்கப்படுகிறார்கள். ‘மார்க்கெட்டில் புழக்கத்தில் இருக்கும் பல பால் பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். அதுவே குழந்தைகளின் வாழ்க்கையைத் தொடங்க மிகச் சிறந்தது’ எனத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் தாய்மார்கள்’’ என்கிறார் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சித்துறையின் நிபுணர் கேர்மென் கேஸனோவாஸ் (Carmen Casanovas).

Image

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துணவுகளும் தாய்ப்பாலில் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். அது பாதுகாப்பானது. அதில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருக்கிறது. அதனால் குழந்தைப்பருவத்தில், குழந்தைக்கு ஏற்படும் அடிப்படை நோய்களில் இருந்து தாய்ப்பால் குழந்தையைக் காப்பாற்றுகிறது.

தாய்ப்பால், தாய்மார்களுக்கும் நன்மை தருகிறது. மிக முக்கியமாக கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Photo Credit: UNICEF India

– தீபா வெங்கடகிருஷ்ணன்