திரைவானின் நட்சத்திரங்கள் – 14

Marilyn-Monroe-Frisur1

கதாநாயகி… நம்பர் ஒன்!

திரையில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகுப் பதுமை யார்? ஒரு காலத்தில் உலகம் முழுக்க, பல லட்சம் ரசிகர்கள் யோசிக்காமல் சொன்ன பெயர் ஒன்று இருந்தது.

‘மர்லின் மன்றோ’.

இத்தனைக்கும் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் மர்லின் மன்றோ. தன் அழகு, நடிப்பு, பாடலால் பல லட்சம் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்.

நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் வேதனை நிரம்பியதாகத்தான் இருக்கும். அவர்களின் அந்தரங்க வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவும் ஊடகங்களால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும். காலாற ரோட்டில் நடந்து போக முடியாது. ஒரு ரெஸ்டாரன்டில் தனியாக அமர்ந்து காபி சாப்பிட முடியாது. வேறு எந்த ஆணோடு பேசினாலும், அடுத்த நாளே அவரோடு இணைத்துப் பேசப்பட்டு, ஒரு ‘கிசுகிசு’ செய்தி பத்திரிகையில் வெளியாகும். கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், எங்கே போனாலும் ஒரு கூட்டம் பின்னாலேயே ஓடி வரும்… இப்படி அடுக்கிக் கொண்டே போக நடிகைகளுக்கான பிரச்னைகள் ஏராளம்.

இது போன்ற பிரச்னைகளை அதிகம் எதிர்கொண்டவர் மர்லின் மன்றோ. அதையும் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மோசமான சம்பவங்களை சந்தித்தவர். அவருடைய மரணமே கூட சர்ச்சைக்கு உரியதாகத்தான் இன்று வரை இருக்கிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அதிகமாக போதை மருந்து எடுத்துக் கொண்டதால் இறந்து போனாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. ஆனால், அதிகாரபூர்வமான அறிவிப்பு என்னவோ அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் என்பதாகத்தான் இருக்கிறது.

***

1926 ஜூன் 1ம் தேதி அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிறந்தார் மர்லின் மன்றோ. பிறந்த போதே குழந்தையின் அப்பா யார் என்கிற பெரிய சர்ச்சையைச் சுமந்து கொண்டுதான் பிறந்தார். அம்மா கிளாடிஸ் பியர்ல் பேக்கர் (Gladys Pearl Baker) மர்லின் மன்றோவுக்கு வைத்த பெயர் ‘நோர்மா ஜீன் மார்டென்சன்’ (Norma Jean Mortenson). அவருடைய பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் ‘மார்ட்டின் எட்வர்ட் மார்டென்சன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மார்டென்சன் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதோ, முகவரியோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அமெரிக்காவில் குழந்தையின் பெயரோடு தந்தையின் குடும்பப் பெயரை சேர்த்து அழைப்பது வழக்கம். அந்த வகையில் நோர்மாவின் பெயர் ‘நோர்மா மார்டென்சன்’ என்று இருக்க வேண்டும். அம்மா கிளாடிஸ் ஒரு காரியம் செய்தார். நோர்மாவின் பெயருக்குப் பின்னால் ‘பேக்கர்’ என்ற தன் அப்போதைய கணவரின் குடும்பப் பெயரைச் சேர்த்தார். இதனாலேயே நோர்மாவின் உண்மையான தந்தை யார் என்கிற குழப்பம் பிற்காலத்தில் எழுந்தது.

Birth_Certificate1924ல் கிளாடிஸ், மார்ட்டின் எட்வர்ட் மார்டென்சனைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கிளாடிஸ் கருவுறுவதற்கு முன்பாகவே இருவரும் பிரிந்துவிட்டார்கள். பின் எதற்காக அவர் தன் கணவரின் பெயராக, மார்டென்சன் பெயரை மருத்துவமனையில் பதிவு செய்தார்? சட்ட விரோதமாக குழந்தை பிறந்ததாக களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கிளாடிஸ், முதலில் தன் முன்னாள் கணவரின் பெயரைப் பதிவு செய்திருக்கலாம் என்கிறார்கள் பிற்காலத்தில் மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்கள். 85வது வயதில் மார்ட்டின் மரணம் அடைந்த பிறகுதான் அவரும் கிளாடிஸும் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களும் மர்லின் மன்றோவின் பிறப்புச் சான்றிதழும் கிடைத்தன. ஆனாலும், தன் வாழ்நாள் முழுக்க மார்ட்டின் தன் தந்தையல்ல என்றே சொல்லி வந்திருக்கிறார் மன்றோ.

‘‘என் அம்மா என் சிறு வயதில் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, ‘இதுதான் உன் தந்தை’ என்று சொல்லியிருக்கிறார். அவர் உருவம் என் மனதில் அப்படியே பதிந்து போய்விட்டது. அவர் சார்லஸ் ஸ்டேன்லி கிளிஃபோர்டு. அவருடைய அரும்பு மீசை இன்னமும் என் நினைவில் இருக்கிறது. பார்ப்பதற்கு கிளார்க் கேபிளைப் (Clark Gable) போலவே இருப்பார். அதனால் கிளார்க் கேபிள்தான் என் தந்தை என்று வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன்’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மர்லின் மன்றோ. (கிளார்க் கேபிள் அப்போது பிரபலமாக இருந்த அமெரிக்க நடிகர்).

***

Marilyn_Monroe‘புயலிலே ஒரு தோணி’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், அவஸ்தை தோணிக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும்தான் தெரியும். அப்படி ஓர் அவஸ்தையை குழந்தை நோர்மா அனுபவித்தாள். வீட்டில் வறுமை… ஆண் துணை இல்லை… குழந்தைக்குக் கொடுக்க சத்தான ஆகாரங்கள் இல்லை. இவற்றை எல்லாம்விட அம்மா கிளாடிஸ் மனநிலை பிறழ்ந்தவர். ஒரு குழந்தைக்கு இதைவிடப் பெரிய இன்னல் வேறு என்ன வேண்டும்?

அவரால் குழந்தை நோர்மாவை சரியாகப் பார்த்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில், கலிபோர்னியாவுக்கு குழந்தையை அனுப்பி வைத்தார் கிளாடிஸ். அங்கே ஆல்பர்ட்-இடா போலெண்டர் தம்பதி நோர்மாவின் வளர்ப்புப் பெற்றோர் ஆனார்கள். அவர்களின் அன்பான அரவணைப்பில் ஏழு வயது வரை அவர்களுடனேயே வாழ்ந்தாள் நோர்மா. நல்ல உணவு, உடைகள்… கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கை. அந்த நிம்மதியைக் குலைக்க அம்மா கிளாடிஸின் உருவில் வந்தது விதி.

ஒருநாள் திடுதிப்பென்று வீட்டுக்குள் நுழைந்தார் கிளாடிஸ். இடா அவரை வரவேற்றார். குழந்தை நோர்மாவை வாரி எடுத்துக் கொஞ்சினார் கிளாடிஸ். வழக்கமான உபசரிப்புகள் நடந்து முடிந்தன. அதுவரை அமைதியாக இருந்த கிளாடிஸ் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் நோர்மாவை கூட்டிட்டுப் போறேன்.’’

‘‘எங்கே?’’

‘‘என் வீட்டுக்கு.’’

‘‘ஏன்? அவ இங்கே நல்லாத்தானே இருக்கா?’’

‘‘இல்லை. எனக்கு அவ வேணும்…’’

உரையாடல் நீண்டுகொண்டே போனது. வார்த்தைகள் தடித்தன. காரசாரமான விவாதம். குழந்தை தனக்கே உரித்தான ஒரு பொருள் என்பது போல கிளாடிஸ் பேச, மனநலம் குன்றியவருடன் குழந்தை வாழ்வது சரியல்ல என்பதை உணர்ந்த இடா குழந்தையை அனுப்ப மறுக்க… சண்டை வலுத்தது. அப்போதுதான் அது நடந்தது. எதிர்பாராத கணத்தில் இடாவைப் பிடித்து முற்றத்தில் தள்ளினார் கிளாடிஸ். சட்டென்று வீட்டுக்குள் ஓடி, கதவை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார்.

பதறிப்போன இடா, கதவை பலமாகத் தட்டிப் பார்த்தார்… கூச்சல் போட்டார்… ‘யாராவது வந்து என் குழந்தையைக் காப்பாத்துங்களேன்!’ என்று உதவிக்கு ஆட்களை அழைத்தார். அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவருடைய உதவிக்கு வர கணவர் ஆல்பர்ட்டும் அப்போது வீட்டில் இல்லை. கதவைத் தட்டித் தட்டி சோர்ந்து போனவராக இடா அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தார். சில நிமிடங்கள் கழிந்தன. என்ன செய்வது என்பது தெரியாமல் அழுது கொண்டிருந்தார் இடா.

கதவு திறந்தது. கிளாடிஸ் வெளியே வந்தார். அவர் கையில் ஒரு பெரிய பேக். அது ராணுவத்தினர் பயன்படுத்தும் வகையைச் சேர்ந்தது. அதன் ஜிப் மூடியிருந்தது. அதற்குள்ளேயிருந்து குழந்தை நோர்மாவின் குரல்…

‘‘அம்மா… அம்மா! என்னை வெளிய விட்டுடுங்கம்மா… ப்ளீஸ்மா..!’’

அவ்வளவுதான். கொஞ்சமும் தாமதிக்கவில்லை இடா. கிளாடிஸை வழிமறித்தார். அவர் கையில் இருந்த பேக்கை பறிக்க முயற்சி செய்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளினார்கள். இந்த தள்ளுமுள்ளுவில் கிளாடிஸின் கையில் இருந்த பேக் கீழே விழுந்தது. எப்படியோ ஜிப்பைத் திறந்து கொண்டு குழந்தை நோர்மா வெளியே வந்தாள். சத்தம் போட்டு அழுதாள். அதைத் தாங்க முடியாத இடா, நோர்மாவை வாரி அணைத்து எடுத்து, வீட்டுக்குள் தள்ளி கதவைச் சாத்தினார். அன்றைக்கு வீட்டைவிட்டு வெறுங்கையோடு திரும்பினார் கிளாடிஸ். ஆனால், பிரச்னை அத்துடன் தீர்ந்துவிடவில்லை.

1933. கிளாடிஸ் புதிதாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கியிருந்தார். உதவிக்கு சில ஆட்களை அழைத்துக் கொண்டார். நேராக ஆல்பர்ட் வீட்டுக்கு வந்தார். இந்த முறை இடாவுக்கு, நோர்மாவை அனுப்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ‘குழந்தையைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ என்று வாக்குக் கொடுத்துவிட்டுத்தான் கிளாடிஸ் அழைத்துப் போனார். உண்மையில் அது நடக்கவில்லை.

மனநலம் பிறழ்ந்த தாய்… அவரிடம் வளரும் குழந்தை. சினிமாவுக்கு ஒன்லைன் தருவது போல சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், குழந்தைக்கு அது நரக வேதனை. வலி மிகுந்த நாட்கள் அவை. அந்த வேதனை காலம் முழுக்க அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டே இருந்தது. தன் குழந்தையையே படாதபாடு படுத்தியிருந்தார் அந்தத் தாய். அது நோர்மாவின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல விபரீதங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கிளாடிஸின் நிலைமை மிகவும் மோசமாகிவிட அவரை ஒரு மனநல மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். பின்னாளில் மர்லின் மன்றோ தன் சுயசரிதையில் தன் தாயைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘எப்போதும் அளவுக்கு அதிகமாக சிரிக்கும் முகம் அல்லது எல்லை மீறிய அலறல் குரல்… இதுதான் என் தாயை நினைத்தால் என் நினைவுக்கு வருவது’’.

***

marilyn_monroe_3அமெரிக்காவில் ‘வார்டு ஆஃப் தி ஸ்டேட்’ (Ward of the State) என்று ஒரு நடைமுறை உண்டு. ஆதரவற்றவர்கள், தனியாக வாழும் முதியோர், பெற்றோர் துணை இல்லாத குழந்தைகளை நீதிமன்றம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும். இவர்களுக்காக பொருத்தமான காப்பாளர் (Guardian) ஒருவரை நியமித்து அவர் பொறுப்பில் இவர்களைக் கொடுத்து பராமரிக்கச் சொல்லும். அப்படிப் பொறுப்பில் நியமிக்கப்படும் நபர் கிட்டத்தட்ட வளர்ப்புப் பெற்றோராகவே கருதப்படுவார்கள்.

நோர்மாவுக்கு அப்படி கார்டியனாக நியமிக்கப்பட்டவர் கிரேஸ் மெக்கி (Grace Mckee)… கிளாடிஸின் நெருங்கிய தோழி. நோர்மாவின் மனக் காயங்களுக்கு மருந்திடுவதாக இருந்தது கிரேஸின் துணை. சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்… ஆலோசனை சொல்வார்… எதைச் செய்வதற்கும் ஊக்கம் கொடுப்பார். எதிர்காலம் குறித்த கனவுகளையும் விதைப்பார். கிரேஸ், நோர்மாவிடம் அடிக்கடி ஒன்று சொல்வார்… ‘‘பார்த்துகிட்டே இரேன்… நீ ஒருநாள் ஹாலிவுட்ல பெரிய ஸ்டாரா ஆகப் போறே…’’

கிரேஸ் மெக்கியுடன் வாழ்ந்த போதுதான் ஜீன் ஹார்லோவின் அறிமுகம் கிடைத்தது நோர்மாவுக்கு. ஜீன் ஹார்லோ நடிகை… 1930களில் அமெரிக்க சினிமா உலகில் லட்சக்கணக்கான ரசிகர்களின் தேவதையாக வலம் வந்தவர். ஜீன் ஹார்லோவுக்கு நோர்மாவைப் பார்த்த முதல் கணத்திலேயே பிடித்துப் போய்விட்டது. பரிதாபமான முகத்தோடு அதுவரை வலம் வந்த அந்தக் குழந்தையின் அழகை மெருகூட்டக் கற்றுக் கொடுத்தார். சில நாட்களிலேயே தானாகவே மேக்கப் போடும் அளவுக்கு முன்னேறிவிட்டாள் நோர்மா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வெளியே அழைத்துப் போவார் ஜீன் ஹார்லோ. சிகையலங்காரக் கடைக்கு அழைத்துப் போய் சுருள் சுருளான அவள் முடியை அழகுபடுத்துவார்.

நெருக்கம் அதிகமானது. இருவரும் சேர்ந்து சினிமாவுக்குப் போக ஆரம்பித்தார்கள். திரைப்படங்களின் மீதும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் மீதும் நோர்மாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடு வர ஆரம்பித்தது. ஆர்வமாக நோர்மா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார் ஜீன் ஹார்லோ. ஹாலிவுட்டும் சினிமாவும் அழுத்தமாக நோர்மாவின் மனதில் பதிய ஆரம்பித்தன.

1935. அப்போது நோர்மா ஜீனுக்கு 9 வயது… மர்மக் கதைகளில் வரும் திடீர் திருப்பம் போல, கிரேஸ், எர்வின் சில்லிமேன் காட்டார்டு (Ervin Silliman ‘Doc’ Goddard) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்தச் சின்னஞ்சிறு வயதில் அங்கும் இங்குமாக பந்தாடப்பட்ட அந்தக் குழந்தை ‘லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்ல’த்துக்கு (பிறகு ‘ஹோலிகுரோவ்’ என்றழைக்கப்பட்டது) அனுப்பி வைக்கப்பட்டது.

(தொடரும்)

பாலு சத்யா

Image courtesy:

http://dshenai.files.wordpress.com/

http://upload.wikimedia.org/

http://www.schwarzkopf.co.uk/

Monroe

BornNorma Jeane Mortenson
June 1, 1926
Los Angeles, California, U.S.DiedAugust 5, 1962 (aged 36)
Brentwood, Los Angeles, California, U.S.

Cause of death

Barbiturate overdose

Resting place

Westwood Village Memorial Park CemeteryWestwood, Los AngelesOther names

  • Norma Jeane Baker
  • Norma Jeane Dougherty
  • Norma Jeane DiMaggio
  • Marilyn Monroe Miller

OccupationActress, model, singer, film producerYears active1945–62Notable work(s)NiagaraGentlemen Prefer BlondesRiver of No Return,The Seven Year ItchSome Like It HotThe MisfitsReligion

Spouse(s)

Golden Globe Awards

AFI AwardsAFI’s 100 Years…100 Stars
1999Signature

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

பேட்ரிஸியா நீல்

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

மோபெல் நார்மண்ட்

திரைவானின் நட்சத்திரங்கள் – 13

நகைச்சுவை நாயகி!

Image

மேபெல் நார்மண்ட் (Mabel Normand). இந்தப் பெயர் இன்றைக்கு ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் பலபேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. திரைத்துறையில் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் மாற்றம் என்கிற வெள்ளத்தில், புதுமை அலையில் அவர் பெயரும் அடித்துப் போகப்பட்டதில் ஆச்சரியமும் இல்லை. ஹாலிவுட்டில், பேசாப் படங்கள் காலத்தில் ‘நம்பர் ஒன்’ நாயகி அவர். திரைத்துறையில், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு பணியாற்றிய ஆரம்பகாலப் பெண்களில் அவரும் ஒருவர்.

கறை, துணிகளுக்கு ஆகாது. களங்கம், மனிதனுக்கு ஆகாது. அதிலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பிரபலமானவர்கள் வாழ்க்கையில் சின்னக் கரும்புள்ளி விழுந்தால்கூட, அது மெல்ல மெல்லப் பெரியதாகி, அவர்களை இருளில் மூழ்கடித்து, அட்ரஸ் இல்லாமல் செய்துவிடும். மேபெல்லுக்கு அதுதான் நடந்தது.

1892, நவம்பர் 9ம் தேதி நியூ யார்க்குக்கு அருகே இருக்கும் நியூ பிரைட்டோனில் பிறந்தார் மேபெல். அப்படி ஒன்றும் வசதியான குடும்பமும் அல்ல. அம்மா, ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அப்பா, கிளாட் நார்மண்ட் (Claud Normand) பிரெஞ்ச் கனடியன். சாதாரண தச்சுத் தொழிலாளி. சின்னச் சின்ன கேபினெட்டுகள் செய்வது, மேடை அலங்காரப் பணிகளைச் செய்வதுதான் வேலை. அவ்வப்போது, துறைமுகத்தில் கப்பல்களில் வேலை பார்ப்பதும் உண்டு.

மேபெல் நார்மண்ட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த போது அவருக்கு வயது 16. அதற்குக் காரணமாக இருந்தவர் மேக் சென்னட் (Mack Sennet) என்கிற பிரபல இயக்குநர். அவர், மேபெல்லை மற்ற நடிகைகளைப் போலத்தான் பார்த்தார். தன் முதல் படத்தில்கூட ஓர் அழகுப் பதுமையாகத்தான் சித்தரித்தார். ஆனால், ஒரு படைப்பாளியான அவருக்கு மேபெல்லிடம் இயல்பாகவே இருந்த துறுதுறுப்பும் நகைச்சுவை உணர்வும் யோசிக்க வைத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களுக்கு இந்தப் பெண் பொருத்தமானவள் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. பின்னாளில், ‘கீ ஸ்டோன் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்த போது தன்னுடனேயே மேபெல்லை அழைத்துக் கொண்டார் மேக்.

ஹாலிவுட்டில் பேசாப் படங்கள் வெளி வந்த காலத்தில் பிரபலமாக இருந்த சார்லி சாப்ளின், ரோஸ்கோ ‘ஃபேட்டி’ ஆர்பக்கிள் (Roscoe ‘Fatty’ Arbuckle) போன்ற பிரபல நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு மேபெல்லுக்குக் கிடைத்தது. எல்லாமே குறும்படங்கள். ஆனால், பெரிய அளவுக்கு மேபெல்லை மக்களிடம் அடையாளப்படுத்தின. சார்லி சாப்ளின் தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவருடன் நிறைய படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார் மேபெல். கூடவே, திரைக்கதை எழுதுவார், இணை இயக்குநராகப் பணியாற்றுவார், டைரக்‌ஷனும் செய்வார். பல சமயங்களில் இவர் செய்யும் இந்தக் காரியங்கள் சாப்ளினுக்கு தொந்தரவாக இருந்தன. அவருடைய நடிப்பாற்றலை வெளிக்காட்ட முடியாமல், நினைத்ததைச் செய்ய முடியாமல் தடை போட்டன என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

Image

1914ல் சார்லி சாப்ளினின் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான ‘டில்லி’ஸ் பங்ச்சர்டு ரொமான்ஸ்’ (Tillie’s Puctured Romance) வெளியானது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேபெல். 1918ல் மேக் சென்னெட்டுக்கும் அவருக்கும் இருந்த உறவு முடிவுக்கு வந்தது. சாமுவேல் கோல்ட்வின் என்பவருடன் புதிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவருடன் பணியாற்றக் கிளம்பிவிட்டார் மேபெல். அப்போது, அவருடைய சம்பளம் வாரத்துக்கு 3,500 டாலர்.

***

வாழ்க்கை ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது. பல புதிய நடிகைகள் களமிறங்க, மேபெல்லுக்கு மவுசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் அவருக்கு அறிமுகமானார் வில்லியம் டெஸ்மாண்ட் டெய்லர். நடிகர், இயக்குநர். ஹாலிவுட்டில் மிக முக்கியமான இயக்குநர். 59 பேசாப்படங்களை இயக்கியவர். புத்தகப் பரிமாற்றத்தில் ஆரம்பித்தது இருவருக்குமான நட்பு. டெய்லரிடம் பல அரிய புத்தகங்கள் இருந்தன. புத்தகத்தை இரவல் வாங்குவது, படித்துவிட்டுத் திருப்பிக் கொடுப்பது என்று தொடர்ந்தது இருவருக்குமான நட்பு. அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் கிரோக்ஸ் (Robert Giroux), ‘‘டெய்லர், மேபெல் நார்மண்டை உயிருக்கு உயிராக நேசித்தார். உண்மையில், மேபெல் ‘கோக்கெய்ன்’ என்ற போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். அதிலிருந்து தன்னை விடுவிக்க ஏதாவது செய்யும்படி டெய்லரை அணுகியிருந்தார் மேபெல்’’ என்று தன் நூல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Image

நடிகைகளின் மன அழுத்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதிர்ஷ்டக் காற்று வீசும்போது, உயரத்தில் பறப்பார்கள். திடீரென்று திரும்பிப் பார்க்க யாரும் இல்லாமல், காய்ந்த சருகாக தெருவில் விழுந்து கிடப்பார்கள். பல வருத்தங்களையும் துயரங்களையும் மென்று விழுங்க, அவர்களுக்கு ஏதாவது தேவைப்படத்தான் செய்கிறது. அந்தக் காரணத்துக்காகக் கூட மேபெல்லுக்கு கோகெய்ன் எடுத்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அந்தப் பழக்கம் மிகப் பெரிய அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

***

பிப்ரவரி 1, 1922. இரவு 7:45 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ். ஆல்வரேடோ வீதியில் இருக்கும் டெய்லரின் பங்களா. டெய்லர் கொடுத்திருந்த ஒரு நல்ல புத்தகத்துடன், மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார் மேபெல். இருவரும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். மேபெல்லை காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தார் டெய்லர். டெய்லரை உயிரோடு கடைசியாகப் பார்த்தது தான்தான் என்பது அப்போது மேபெல்லுக்குத் தெரியாது.

அடுத்த நாள் காலை. மணி 7:30. டெய்லரின் பக்கத்து வீட்டுக்காரர், ஏதோ காரியமாக வந்தவர் டெய்லர் கீழே கிடப்பதைப் பார்த்தார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்தார். டெய்லரை சோதித்துப் பார்த்த ஒரு டாக்டர், அவர் வயிற்றில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உயிரிழந்துவிட்டதாகச் சொன்னார். நேற்று வரை நன்றாக இருந்த மனிதர், திடீரென்று இறந்தார் என்றால் எப்படி? பலபேரின் சந்தேகம், டெய்லரின் உடலை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தது. சோதித்த, தடய அறிவியல் நிபுணர்கள், டெய்லரை யாரோ துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள், அது மிகச் சிறிய காலிபர் பிஸ்டலாக இருக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், அவர் இருந்த பங்களாவிலோ, சுற்றுப்புறத்திலோ அந்த பிஸ்டல் கிடைக்கவில்லை.

டெய்லரின் இறுதிச் சடங்கில் கட்டுப்படுத்த முடியாத துயரத்தோடு, சடங்கு முடியும் வரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் மேபெல். டெய்லரின் மரணம், வேறொரு பிரச்னையை மேபெல்லுக்குக் கொண்டு வந்தது. ஏற்கனவே சினிமா வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. புகழ் என்கிற வெளிச்சம் இருந்த இடம் தெரியாமல் மங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையிலும் ஆதரவாக இருந்தவர் டெய்லர் ஒருவர்தான். ஆனால், அவருடைய மரணமே மேபெல்லின் மேல் தீராத பழியைக் கொண்டு வந்து போட்டுவிட்டது. ஏனென்றால், டெய்லரை கடைசியாக உயிரோடு பார்த்திருந்தவர் மேபெல் ஒருவர்தான்.

லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மென்ட், மேபெல்லை குடைந்து எடுத்தது. பல கேள்விகளைக் கேட்டது. வெடித்துக் கிளம்பும் அழுகையுடன் திரும்பத் திரும்ப தனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதைத் தவிர மேபெல்லுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆதாரங்கள், சாட்சிகள் எதுவும் இல்லாமல் பழி மட்டும் போட்டால் எப்படி? மேபெல்லை விடுவித்தது காவல்துறை.

டெய்லர், இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னால் மத்திய குற்றவியல் தடுப்புப் பிரிவை அணுகியிருந்தார். மேபெல்லுக்கு கோகெய்ன் சப்ளை செய்யும் சிலரை அடையாளம் காட்டி, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட கோகெய்ன் வியாபாரிகள், கூலிப்படையினரை அனுப்பி, டெய்லரின் கதையை முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றுவரை டெய்லரின் மரணத்துக்கான காரணம் தெளிவாகவில்லை. கொலையாளி என ஒருவரையும் குற்றம் சாட்டவும் முடியவில்லை. அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவே இல்லை.

***

Image

‘பட்ட காலிலே படும்’. பழைய பழமொழி. ஆனால், அது உண்மை என்பதை நிரூபிப்பதைப் போலத்தான் மேபெல்லின் வாழ்க்கை அமைந்தது. டெய்லரின் இழப்பு, பல சந்தேகங்களை மேபெல்லின் மேல் விதைத்துவிட்டுப் போயிருந்தது. அதோடு, சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து பின்னடைவு. ஆனால், வாழ வேண்டுமே! பற்றிக் கொண்டு மேலேற அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை சினிமாதானே! சில வாய்ப்புகள் வருவது, சில கிடைக்காமல் போவது. கிடைத்தாலும் திறமையை வெளிப்படுத்தும்படியான கேரக்டர் அமைவதில்லை. இந்தப் போராட்டத்துக்கிடையில்தான் அது நடந்தது.

1924. மேபெல்லின் காரோட்டி ஜோ கெல்லி (Joe Kelly), ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சுடப்பட்டவர் கோர்ட்லாண்ட் எஸ். டைன்ஸ் என்கிற மிகப் பெரிய புள்ளி. கோடீஸ்வரர், எண்ணெய்த் தரகர், பொழுதுபோக்குக்காக கோல்ஃப் விளையாடுபவர். இதில் சிக்கல் என்னவென்றால் டைன்ஸ் சுடப்பட்டது மேபெல்லின் துப்பாக்கியால். இது மட்டும் பிரச்னை இல்லை. டைன்ஸுக்கும் எட்னா புர்வியான்ஸ் (Edna Purviance) என்ற நடிகைக்கும் பழக்கம் இருந்தது. எட்னா, மேபெல்லின் தோழி. மேபெல்லைப் போலவே சார்லி சாப்ளினுடன் பல படங்களில் நடித்திருப்பவர். முக்கியமாக, இறந்து போன டெய்லரின் பக்கத்துவீட்டுக்காரர். போதாதா? மறுபடியும் புரளி கிளம்பியது. டைன்ஸ் மரணத்தோடு மேபெல்லைத் தொடர்புபடுத்திப் பேசினார்கள். அவர் மனதைக் காகிதம் போலக் கசக்கி, கிழித்துப் போட்டார்கள். இந்த நிகழ்வுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதால், அவதூறுகளை இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தார் மேபெல்.

அப்போது ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த ‘ஹால் ரோச் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். இயக்குநர் எஃப்.ரிச்சர்ட் ஜோன்ஸ் இயக்கிய ‘ரேஜடி ரோஸ்’ (Raggedy Rose) படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் நான்கு படங்களில் நடித்தார்.

1926ல் லியூ கோடி (Lew Cody) என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டார். லியூ ஏற்கனவே மேபெல்லுக்கு அறிமுகமானவர்தான். 1918ல் வெளியான ‘மிக்கி’ என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அது என்னவோ மண வாழ்க்கை ருசிக்கவில்லை. கொஞ்ச நாள்தான் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். பிறகு, பீவர்லி ஹில்ஸில் அருகருகே இருந்த தனித்தனி வீடுகளில் வசித்தார்கள்.

60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் மேபெல். பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவரின் வாழ்க்கை, சில அவதூறுகளாலும், வீண் பழியாலும் தடைபட்டது. உதவ ஆள் இல்லை. ஏற்றிவிட ஏணி இல்லை. ஆதரவாக இருக்க, பேச உண்மையான துணை இல்லை. உடலும் அவருக்கு ஒத்துழைக்க மறுத்தது. காசநோய் வாட்டி வதைத்தது. கலிபோர்னியாவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல், 1930, பிப்ரவரி 23ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது வெறும் 37.

இலக்கியமாகட்டும்… திரைப்படமாகட்டும்… நகைச்சுவைதான் மிகக் கடினமான களம். அதை மௌனப்படக் காலத்திலேயே சாத்தியமாக்கியவர் மேபெல் நார்மண்ட். சொல்லப் போனால், இன்றைய நடிகைகளுக்கு ஓர் முன் மாதிரி. சார்லி சாப்ளின் என்ற மிகப் பெரிய மேதையுடன் இணைந்து நடித்த மேபெல், தன் இறுதி நாள் வரை நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர். ஆனால், அவருடைய நிஜ வாழ்க்கையில் நகைச்சுவைக்கு இடமே இல்லை என்பதுதான் குரூரமான உண்மை.

– பாலு சத்யா

***

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

பேட்ரிஸியா நீல்

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

Mabel Normand

Born Mabel Ethelreid Normand
November 9, 1892
New Brighton, Staten Island, U.S.
Died February 23, 1930 (aged 37)
Monrovia, California, U.S.
Cause of death Tuberculosis
Resting place Calvary Cemetery
Nationality American
Other names Mabel Normand-Cody
Occupation Actress, director, screenwriter, producer
Years active 1910–1927
Spouse(s) Lew Cody (m. 1926–1930)

திரைவானின் நட்சத்திரங்கள் – 12

வாழ்ந்து பார்க்கலாம்…

Image

* நான் ஒரு அடங்காப்பிடாரி, அவ்வளவுதான். 

முன்பொரு காலத்தில் தமிழ் நடிகைகளுக்கு சில அடையாளங்கள் இருந்தன. ‘‘அய்யய்யோ… அந்தம்மா நடிச்ச படமா? ஒரே அழுவாச்சியா இருக்கும்பா. ஆள வுடு… நான் வர்ல’’ என்று பழைய வண்ணாரப்பேட்டை பக்கம்கூட சர்வ சாதாரணமாக சில நடிகைகளின் பெயர்களைச் சொல்லிப் பேசிக் கொள்வார்கள். அது திரையில்தானே தவிர, நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்த நடிகைகள் அவர்கள். உண்மையில், திரைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் தங்கள் வாழ்நாள் முழுக்க துயரத்தை மட்டுமே அனுபவித்த நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பேட்ரிஸியா நீல் (Patricia Neal). திரைக்குப் பின்னால் அவர் அனுபவித்த துயரம்… அம்மம்மா… வெற்று வார்த்தைகளில் விவரித்துவிடக் கூடிய காரியம் இல்லை அது! இத்தனைக்கும் அவர் ஒன்றும் சாதாரண மனுஷி கிடையாது. உலகம் முழுக்க எத்தனையோ நடிகைகள் தங்களுடைய லட்சியம் என்று கருதியிருக்கும் ஒரு விருதை அனாயசமாகப் பெற்றிருப்பவர். அது, ஆஸ்கர் விருது!

ஜனவரி 20, 1920. அமெரிக்காவிலுள்ள கென்டகி மாகாணத்தில் இருக்கும் பேக்கார்ட் என்கிற சின்னஞ்சிறு ஊரில் பிறந்தார் பேட்ரிஸியா நீல். அப்போது அவருக்கு பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர் ‘பேட்ஸி’. அப்பாவுக்கு நிலக்கரிச் சுரங்கமொன்றில் வேலை. அம்மா மருத்துவர். டென்னஸியில் இருக்கும் நாக்ஸ்வில்லியில் (Knoxville) வளர்ந்தார் பேட்ரிஸியா. கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் உள்ள குடும்பம். அது, கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். பேட்ரிஸியாவுக்கு பத்து வயது. குழந்தைகள், கிறிஸ்துமஸ் பரிசாக எது கேட்டாலும் கிடைக்கும். கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) கொண்டு வந்து கொடுத்துவிடுவார். இந்த நம்பிக்கை கிறிஸ்தவ குழந்தைகளுக்கு ஆழமாக உண்டு. பேட்ரிஸியாவுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பேட்ரிஸியா, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்… ‘‘ஐயா வணக்கம். இந்த வருடம் கிறிஸ்துமஸுக்கு எனக்கு கவர்ந்திழுக்கும் பொம்மைப் பொருட்களோ, வாயும் மனதும் நிறையும் அளவுக்கு சாக்லெட்டுகளோ, கேக்குகளோ வேண்டாம். நான் நாடகம் பயில வேண்டும். இது கிடைத்தால் போதும். இந்த வருடத்திய கிறிஸ்துமஸ் எனக்கு மகிழ்ச்சியாகக் கழியும்’’.

ஒரு சின்னஞ்சிறுமியின் எளிய கோரிக்கை. கிறிஸ்துமஸ் தாத்தா மனது வைத்தாரோ என்னவோ… நாடகத்தைப் படிக்கும் பிரிவில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. அது மட்டுமல்ல… அந்த வருடம் டென்னஸி மாகாண அளவில், பள்ளிகளுக்கு இடையே நடந்த நாடகம் வாசிப்பதற்கான பிரிவில் முதல் பரிசை வென்றார் பேட்ரிஸியா. நார்த் வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் இரண்டு வருடங்கள் நாடகப் பயிற்சி பெற்ற பிறகு, நியூ யார்க்குக்குப் போனார். பிரபல ‘பிராட்வே’ தயாரிப்பில் பயில முதல் வாய்ப்பு. ‘தி வாய்ஸ் ஆப்ஃ தி டர்ட்டில்’ என்கிற அந்த நாடகத்தில் அவர் நடித்தபோது அவருடைய பெயரும் மாறியது. என்ன காரணமோ, கம்பெனிக்காரர்கள் அவர் பெயரை ‘பேட்ஸி’ என்பதில் இருந்து ‘பேட்ரிஸியா’ என்று மாற்றினார்கள். அதற்கு அடுத்து அவர் நடித்தது ‘அனதர் பார்ட் ஆஃப் தி ஃபாரஸ்ட்’ என்ற நாடகத்தில். அதற்கு மிகச் சிறந்த நடிகைக்கான ‘டோனி’ விருது கிடைத்தது. மெல்ல மெல்ல ஒரு நடிகையாக அறியப்பட ஆரம்பித்தார்.

‘இந்தப் பெண் யார்? இவளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே!’ என்கிற எண்ணம் ஒரு நிறுவனத்துக்கு வந்தது. அது சாதாரண நிறுவனம் இல்லை. ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘வார்னர் பிரதர்ஸ்’. ஆளனுப்பினார்கள். அழைத்தார்கள். ஏழு வருடங்களுக்கு தங்கள் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார்கள். அட்வான்ஸ் கொடுத்தார்கள். பிறகு கொஞ்சம் பிசியாகிவிட்டார் பேட்ரிஸியா. வரிசையாகப் படங்கள். 1949ல் அவர் நடித்த ‘தி ஹேஸ்டி ஹார்ட்’ அதில் முக்கியமான ஒன்று. அதில் நடித்தவர் ரொனால்ட் ரீகன். பின்னாளில் அமெரிக்காவின் அதிபராகப் பதவி ஏற்றவர். அதே ஆண்டு, அதற்கு அடுத்து நடித்த படம்தான் அவர் வாழ்க்கையை மாற்றிப் போட்டது. ‘தி ஃபவுண்டெய்ன் ஹெட்’.

—-

Patricia Neal Hud

* கேரி கூப்பர் மிக வசீகரமான மனிதர்.

சிலருக்கு சில நேரங்களில் சிலரைப் பிடித்துப் போகும், அதுவும் பார்த்த கணத்தில். ஜென்ம ஜென்மாந்திரமாக ஒரு பந்தம் இருவருக்கும் இருந்தது போல ஓர் உணர்வை ஏற்படுத்திவிடும். அந்த உணர்வு, அந்தப் படத்தில் நடித்த கேரி கூப்பரை (Gary Cooper) பார்த்தபோது பேட்ரிஸியாவுக்கு ஏற்பட்டது. அப்போது அவருக்கு வயது 21. கூப்பருக்கு வயது 46. திருமணம் ஆகியிருந்தது. அவருக்காக எதையும் செய்ய சித்தமாக இருந்தார் பேட்ரிஸியா. நட்பு, காதலாக மாறியது. ஒருவருடம், இரண்டு வருடம் அல்ல… 3 வருடம் துரத்தித் துரத்திக் காதலித்தார்.

விதி, பேட்ரிஸியாவின் வாழ்க்கையில் முதன் முறையாக மூக்கை நுழைத்தது. ‘இதோ பார்… நான் இருக்கேன். நீ நினைச்சதெல்லாம் நடந்துட்டா, அப்புறம் நான் என்னத்துக்கு?’ கொக்கரித்துச் சிரித்தது விதி. பிஸியாக, ஒரு ஷூட்டிங்கில் இருந்தபோது கூப்பருக்கு ஒரு தந்தி வந்தது. அனுப்பியிருந்தவர் அவர் மனைவி வெரோனிகா. ‘என்ன செய்யப் போறீங்க? நான் வேணுமா, அவ வேணுமா? முடிவு உங்க கையில’. அவ்வளவுதான். கூப்பரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பேட்ரிஸியாவை அழைத்தார். விவரத்தைச் சொன்னார்.

‘ஏங்க… உங்களுக்குத் தெரியாதா? நான் உங்க கருவை சுமந்துகிட்டு இருக்கேன்’.

கூப்பர் ரொம்ப கூலாக சொன்னார்… ‘கலைச்சிடு’.

இது பேட்ரிஸியாவின் வாழ்க்கையில் விழுந்த முதல் அடி. சாதாரணப் பெண்கள் எழுந்து நிற்கவே முடியாத அடி. அதிலிருந்தும் மீண்டு எழ முயற்சித்தார். வாழ்க்கை அவரை பயமுறுத்திப் பார்த்தது. ‘ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்’ தயாரிப்பில் வெளியான ஒரு படத்தில் நடித்தார். ‘தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ என்ற படம். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் அவருக்குத் தடை போட முடியவில்லை. ஆனால், அவர் மேல் வேறொரு பிம்பம் சினிமா துறையில் அழுத்தமாக விழுந்தது. வார்னர் பிரதர்ஸின் ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே அவர் மற்றொரு கம்பெனியில் நடித்ததாலோ என்னவோ, அவருடைய சினிமா வாழ்க்கை தேங்கிப் போனது. கைவசம் படங்கள் எதுவும் இல்லை. ஆனால், வாழ்க்கை நீண்டு, பெருத்து ‘வா… வா!’ என்று சிரித்து அழைத்தது. நடிகை. சினிமாவாக இருந்தால் என்ன… நாடகமாக இருந்தால் என்ன…? நாடகத்தில் நடிக்கப் போனார் பேட்ரிஸியா. அப்போது நாடக உலகில் பிரபலமாக இருந்த ‘ஹெல்மேன்’ என்பவரின் படைப்பு. ‘தி சில்ட்ரன்ஸ் ஹவர்’ என்ற அந்த நாடகம் பரவலான வரவேற்பைப் பெற்றது. 1953ல் ரோல்ட் டால் (Roald Dahl) என்ற எழுத்தாளரைச் சந்தித்தார். பேசி, முடிவெடுக்கக் கூட அவகாசம் இல்லை என்பது போல இருவரின் திருமணமும் நடந்தது.

‘நான் விரும்பவே இல்லை என்றாலும்கூட அவரைத் திருமணம் செய்து கொண்டேன்’ என்று தன் சுயசரிதைக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார் பேட்ரிஸியா. 30 வருட இல்வாழ்க்கையில் அவர்களுக்கு 5 குழந்தைகள்.

—-

Image

* அடிக்கடி என் வாழ்க்கையிலும் கிரேக்கக் கதைகளில் வருவது போல துயரச் சம்பவங்கள். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை எனக்குள் இருக்கும் நடிகை ஏற்க மறுக்கிறாள்.

சினிமா, நாடகம் இரண்டிலும் மாறி மாறி நடித்தார் பேட்ரிஸியா. எதில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். 1961ல் அவர் நடித்த ‘பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃபானிஸ்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினார்கள். அதற்கடுத்து அவர் நடித்த படம் ‘ஹட்’. அவருக்கு இணையாக நடித்தவர் ஹாலிவுட்டின் அப்போதைய பிரபல ஹீரோ பால் நியூமேன். வசூலில் சக்கை போடு போட்ட அந்தப் படம் ‘சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை’ அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

இதற்கிடையில் 1960ல் அது நடந்தது. கணவர் டால் நான்கு வயது மகன் தியோவோடு ரோட்டில் நடந்து போனபோது ஒரு டாக்ஸி அவர்கள் மேல் மோதியது. அதில் குழந்தை தியோவுக்கு மூளை குழம்பிப் போனது. இது நடந்து இரண்டு வருடத்தில் மற்றொரு இடி பேட்ரிஸியாவுக்கு. மூத்த மகள் ஒலிவியா என்கிற அழகு மகள், அம்மை நோய் வந்து இறந்து போனாள். அப்போது அவளுக்கு 7 வயது.

இன்னல்கள் தொடர்ந்து வந்தாலும் அவரின் நடிப்பு வாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. துயரம் என்கிற பழிகாரனும் அவளை விடுவதாக இல்லை. பின் தொடர்ந்தது. 1965. கருவுற்றிருந்தார் பேட்ரிஸியா. அவருக்கு திடீரென்று பக்கவாத நோய். அப்போது பீவர்லி ஹில்ஸில் இருந்த வீட்டில் இருந்தார். மனைவியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் டால். டாக்டர்கள் 14 மணி நேரம் விடாமல் சிகிச்சை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 3 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். மீண்டு வந்தபோது பேச முடியவில்லை. வார்த்தைகள் குழறின. நடக்க முடியவில்லை. சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்கள் நிற்க முடியவில்லை. அந்த நோய் வந்ததாலேயே அவருக்கு வந்த சினிமா வாய்ப்புகள் நழுவிப் போயின. அவற்றில் ஒன்று, ‘தி கிராஜுவேட்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பு. இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலும் சுகப்பிரசவம். லூஸி என்கிற மகளைப் பெற்றெடுத்தார். ஆனால், பக்கவாதத்திலிருந்து மீண்டெழுவது அத்தனை சுலபமானதாக இல்லை.

வீட்டுக்கு வந்துவிட்டாலும் டால், பேட்ரிஸியாவைப் பாடாகப் படுத்தினார். ‘பேச்சு சிகிச்சை எடு!’, ‘உடற்பயிற்சி செய்!’, ‘நீ சுயமாக உன் காலில் நிற்கப் பழகு!’ என்றெல்லாம் சொல்லி பல பயிற்சிகளுக்குக் கட்டாயப்படுத்தினார். அதற்கு வேண்டியதையும் செய்தார். பயிற்சி… பயிற்சி… பயிற்சி… இடைவிடாத பயிற்சி.  படிப்படியாக, நடக்கவும் பேசவும் ஆரம்பித்தார் பேட்ரிஸியா.

Image

1967ல் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாலை விருந்தில் கலந்து கொண்டார். ‘ஒரு கட்டத்தில் நான் என் கணவர் ரோல்ட் டாலை திட்டித் தீர்த்தேன். எந்தப் பாடாவதி தண்ணீரில் இருந்து எழுந்து வந்தேனோ, அதிலேயே என்னை இவர் மூழ்கடிக்கப் பார்க்கிறாரே என்று வாயில் வந்ததையெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் திட்டி அழுதேன்’’ என்று அங்கே பேசியபோது குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபடியும் திரைப்படத்தில் பிரமாதமாகக் கோலோச்ச முடியவில்லை. என்றாலும் அவ்வப்போது வந்த வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். 1968ல் ‘தி சப்ஜெக்ட் வாஸ் ரோசஸ்’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பைப் பார்த்தவர்கள் அசந்து போனார்கள். ஆஸ்கர் விருதுக்கு அவர் பெயர் இரண்டாவது முறையாக நாமினேஷன் செய்யப்பட்டது. விருது கிடைக்கவில்லை என்றாலும், அந்தப் படத்தில் அவர் நடித்ததற்காக இன்றளவும் நினைவுகூரப்படுகிறார்.

மறுபடியும் சொந்த வாழ்க்கையில் பிரச்னை. 30 வருட மண வாழ்க்கையில் முறிவு. அது 1983ம் வருடம். கணவர் டாலுக்கு தன் சினேகிதி ஃபெலிசிட்டி க்ராஸ்லேண்டோடு நெருக்கம் என்று அறிந்தார். கலங்கினார். கதறி அழுதார். இப்படிக் கூட நடக்குமா என்று கடவுளைக் கேள்வி கேட்டார். கணவரைப் பிரிந்தார். அதே வருடம் டால், க்ராஸ்லேண்டை திருமணம் செய்து கொண்டார். மனம் சஞ்சலப்பட்டவராக கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினார் பேட்ரிஸியா.

வாழ்க்கை விரட்டுகிறதே… தொடர்ந்து சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்தார். எல்லாமே சின்னச் சின்ன ரோல்கள். சின்னதோ, பெரியதோ… எந்தப் பாத்திரமாக இருந்தாலும் முழுவீச்சோடு, முழுத் திறமையை வெளிப்படுத்தி நடித்தார். தன் செலவு போக கிடைக்கும் வருமானத்தில் சேமிக்க ஆரம்பித்தார். அதைக் கொண்டு ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பித்தார். அதற்குப் பெயர், ‘பேட்ரிஸியா நீல் ரீஹேபிலிட்டேஷன் சென்டர்’. அங்கே சிகிச்சை பெற்றவர்கள் இளைஞர்கள், குழந்தைகள். எல்லோருமே மூளையில் காயம்பட்டவர்கள், பாதிப்படைந்தவர்கள்… அவரைப் போலவே! தன்னைப் போலவே அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார் பேட்ரிஸியா. அதற்காக என்ன செய்யவும் சித்தமாக இருந்தார். அவர் ஆசைப்பட்டபடியே அவருடைய மறுவாழ்வு மையத்திலிருந்து மீண்டெழுந்து வந்தவர்கள் பலர்.

தனது 84வது வயதில், 2010, ஆகஸ்ட் 8ம் தேதி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவர் இறந்த போது சொன்ன கடைசி வாக்கியம்… ‘எனக்கு அற்புதமான வாழ்க்கை வாய்த்திருந்தது’.

– பாலு சத்யா

* பேட்ரிஸியா நீல் சொன்னவை.

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

Patricia Neal

Born Patsy Louise Neal
January 20, 1926
Packard, Kentucky, U.S.
Died August 8, 2010 (aged 84)[1]
Edgartown, Massachusetts, U.S.
Cause of death Lung Cancer
Resting place Abbey of Regina Laudis
Residence Edgartown, Massachusetts
Nationality American
Education Knoxville High School
Alma mater Northwestern University
Occupation Actress
Years active 1949–2009
Home town Knoxville, Tennessee
Spouse(s) Roald Dahl (1953–1983; divorced)
Partner(s) Gary Cooper
Children Olivia Twenty (1955–1962)
Chantal Tessa Sophia (b. 1957)
Theo Matthew (b. 1960)
Ophelia Magdalena (b. 1964)
Lucy Neal (b. 1965)

திரைவானின் நட்சத்திரங்கள் – 11

Image

ஒரு கதைசொல்லியின் கதை!

உலக வரைபடத்தை விரித்துப் பார்த்தால், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு ஆமையை குறுக்கு வாட்டில் படுக்கப் போட்டது போல ஒரு நாடு இருக்கும். அது நைஜீரியா! ஆப்பிரிக்காவை கருப்பின மக்கள் ஒரு பெண்ணாகத்தான் பாவித்து வந்திருக்கிறார்கள். வரைபடத்தில் தெரிவதோ ஆரோக்கியமான பெண்மணி. எல்லா வளங்களும் இருந்தும் இன்று வரை ‘ஆப்பிரிக்கா’ என்கிற அந்த திடகாத்திரமான பெண்மணியால் மற்ற நாடுகளோடு போட்டி போட்டு மேலே ஏறி, மீடேற முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்களும் பொருளாதார வல்லுனர்களும் ‘உள்நாட்டுப் பிரச்னை, இன மோதல்கள், படிப்பறிவின்மை’ என்று எத்தனையோ காரணங்களைச் சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. காலனியாதிக்கம்… கோடிக்கணக்கான கருப்பின மக்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட இன்னொரு சரித்திரம்தான் இன்றைய நிலைக்குக் காரணம் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த சரித்திர நிகழ்வுகளுக்குள் நாம் இப்போது போகப் போவதில்லை. ஆனால், ‘கோஸி ஆன்வுரா’வைப் (Ngozi Onwurah) பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்தப் பின்னணி அவசியம் என்று தோன்றுகிறது.

‘கோஸி ஆன்வுரா’ நைஜீரியாவில் பிறந்தவர். பத்திரிகையாளர்களும் சினிமா விமர்சகர்களும் ஓர் இயக்குநர் என்பதையும் தாண்டி, அவரை ‘சிறந்த கதைசொல்லி’ என்றுதான் வர்ணிக்கிறார்கள். இத்தனைக்கும் பாதாள உலகம், ஒற்றைக்கண்ணுடனும் ஒன்பது தலையுடனும் உலகை மிரட்டும் அரக்கன், விண்வெளியில் பெயர் தெரியாத கிரகத்தில் வாழும் விந்தை மனிதர்கள் பற்றியெல்லாம் அவர் தன் படைப்புகளில் சொல்லவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் அனுபவித்த இன்னல்களை தெளிவாகப் பதிவு செய்தார். அதன் காரணமாகவே கொண்டாடப்பட்டார். கொண்டாடப்பட்டு வருகிறார்.

‘பிறப்பதற்கு ஒரு பூமி, பிழைப்பதற்கு ஒரு தேசம்’ என்கிற கொடுமையான வரம் வாங்கி வந்த கோடானு கோடிப் பேர்களில் கோஸி ஆன்வுராவும் ஒருவர். 1966ல் நைஜீரிய கருப்பினத் தந்தைக்கும் ஸ்காட்லாந்திய வெள்ளையின அம்மாவுக்கும் பிறந்தார் கோஸி ஆன்வுரா. ஏற்கனவே பிரச்னை பூமி. உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. சரித்திரத்தில் வர்ணிக்கப்படும் ‘பயாஃப்ரா போர்’ (Biafra War). இனிமேலும் அங்கே வாழ முடியாது என்கிற சூழ்நிலையில் கோஸி ஆன்வுராவின் தாய் மேட்ஜே, இடம் பெயரலாமா என யோசித்தார். தந்தை வர மறுத்தார். தந்தைக்கு போரில் கொஞ்சம்… அல்ல… தீவிர ஈடுபாடு.

மேட்ஜே, வேறொரு நாட்டில் போய்க் குடியேறுவதில் தீவிரமாக இருந்தார். அவருக்குக் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமாகப் பட்டது. எப்போதும் மனிதர்களின் வாழ்க்கை, தங்களோடு முடிந்து போய்விடுவதில்லையே! எந்த நாட்டுக்குப் போவது? அது, உலகம் முழுக்க இங்கிலாந்தின் மேல் ஈர்ப்புக் கொண்டிருந்த நேரம். அதுதான் சரி என்றும் மேட்ஜேவுக்குப் பட்டது. இங்கிலாந்துக்குக் குடியேற முடிவு செய்தார்.

கோஸியையும் அவர் சகோதரன் சைமனையும் அழைத்துக் கொண்டு இங்கிலாந்துக்குப் போனார். மேட்ஜே எதிர்பார்த்தது போல இங்கிலாந்து பூங்கொத்துக் கொடுத்து அவர் குடும்பத்தை வரவேற்கவில்லை. அங்கே பிரச்னை காத்திருந்தது. அவர்கள் எதிர்பார்க்காத புதுப் பிரச்னை. பின்னாளில் ஜெர்மன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடந்த ஒரு தருணத்தில் கோஸி ஆன்வுரா ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘போர்ச்சூழல் என்பதற்காகத்தான் நாங்கள் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே இன்னொரு சண்டை காத்திருந்தது. அது, எங்களுக்காக மட்டுமே காத்திருந்த பிரத்தியேகச் சண்டை’’.

அப்படி என்ன பிரச்னை? நிறப் பிரச்னை. கோஸியும் சைமனும் கருப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் இருந்தார்கள். அம்மா மேட்ஜே, வெள்ளை வெளேரென்று இருந்தார். அவர்கள் குடியேறியது ‘நியூ கேஸ்டில்’ என்கிற சின்னஞ்சிறு நகரத்தில் இருந்த ஒரு குடியிருப்புப் பகுதியில். அங்கே இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அதற்கு முன்பு கருப்பின மக்களை சந்தித்தது கிடையாது. அப்படி சந்தித்திருந்தவர்கள், கருப்பின மக்களோடு வாழ்ந்ததில்லை. அதுதான் பிரச்னை. இந்த இனப் பிரச்னை பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் அதிகம் பாதித்தது. கோஸி ஆன்வுராவின் சகோதரர் சைமன் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

‘டேய் கருப்பு நாயே… வெளியே வாடா!’ என்று வாசலில் குரல் கேட்கும். வெளியே வந்து பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். எந்தக் காரணமும் இல்லாமல் சாத்தியிருக்கும் கதவின் மீதும் ஜன்னல்களின் மீதும் கற்கள் எறியப்படும். தெருவில் இறங்கி நடந்தால் பின்னால் கேலி, கிண்டல்களும், அசிங்கமான சொற்களும் காற்றில் பறந்து வரும்.

இதற்கு முடிவு கட்ட முடியாமல் பிள்ளைகள் திணறினார்கள். அம்மா மேட்ஜே, மௌனமாக கண்ணீர் வடித்தார். அவரால் அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதல்லவா?! கருப்பினர்கள் வாழும் நாடு என்றால் அவர்களுக்குள்ளேயே பிரச்னை. அதற்கு பயந்து வெளியே வந்தால் வேறொரு பிரச்னை. நாம் கருப்பாக இருப்பதால்தானே இப்படியெல்லாம் நடக்கிறது? கோஸியும் சைமனும் ஒரு முடிவெடுத்தார்கள். தங்கள் நிறத்தை எப்படியாவது வெள்ளையாக மாற்றுவதென்று! மிக உசத்தியான சோப்பை குளிப்பதற்கு உபயோகித்தார்கள். உடல் முழுக்க ப்ளீச்சிங் செய்து பார்த்தார்கள். ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை. அவர்கள் இயற்கை நிறத்தை மாற்ற எந்த ரசாயனமும் உதவவில்லை. பின்னாளில், தன்னுடைய ‘காஃபி கலர்டு சில்ட்ரன்’ படத்தில் இதை ஒரு காட்சியாகவே வைத்திருந்தார் கோஸி ஆன்வுரா.

Image

வன்முறையாளர்களுடன் பழகிப் பழகி கோஸிக்குள்ளும் ஒரு வன்மம் குடி கொள்ள ஆரம்பித்தது. கோபம் என்கிற குணத்தையும் தாண்டிய வன்மம். நிறத்தால் பட்ட அவமானம், அவருக்குள் மெல்ல மெல்ல கொழுந்து விட்டு எரியத் தொடங்கி வன்மமாக, அதுவே படைப்பாக கருக் கொண்டது.

கோஸி வளர்ந்தாலும் நிறப் பிரச்னை அவரை விட்டு விலகுவதாக இல்லை. அந்தப் பகுதியை விட்டே போய்விடலாமா என்றுகூட யோசிக்க ஆரம்பித்தார் மேட்ஜே. இந்தப் பிரச்னையில் சிக்கி, சோர்ந்து போயிருந்த கோஸிக்கு பதினைந்தாவது வயதில் ஒரு வாய்ப்பு! அப்போது அவர் ஒரு ரயிலில் லண்டனுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். யாரோ ஒரு மனிதர், கோஸியையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். வெகு நேரம் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோஸியின் அருகே வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

‘வணக்கம். நான் ஒரு மாடலிங் ஏஜென்ட். நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். உங்கள் அழகு என்னை மிகவும் பாதித்துவிட்டது. என்னுடன் பணியாற்ற உங்களுக்கு விருப்பமா?’’

கோஸி, ஒரு கணம்தான் யோசித்தார். ஒப்புக் கொண்டார். அப்போதைக்கு அதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. மாடலிங் பெண்ணாக மாறினார் கோஸி.

Image

கோஸி, வெற்றிகரமான மாடலாக இருந்தாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அது, அவர் உடல் பருமன். அவருக்கு சாதாரணமான உடல்வாகு கிடையாது. மற்றவர்களைவிட இரு மடங்கு. மாடலிங்குக்கு அந்த உடல் ஒத்து வராது. உடல் பருமனைக் குறைக்க கொஞ்சமாகச் சாப்பிட வேண்டியிருந்தது. பெரும்பாலும் பட்டினி! அவருக்கு சினிமாவில் ஈர்ப்பு அதிகமிருந்தது. மாடலிங் செய்யும் நேரம் போக, மீதி நேரத்தில் அதற்காகவே படித்தார். லண்டனில் இருந்த ‘செயின்ட் மார்ட்டின் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்’டிலும் ‘தி நேஷனல் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஸ்கூல்’லிலும் சேர்ந்தார். படிப்பை முடித்தார். எத்தனை நாட்கள்தான் உடலை வறுத்தி, மாடலிங் செய்வது? சினிமாவில் இறங்கலாம் என முடிவெடுத்தார்.

1988ல் அவருடைய முதல் குறும்படம் ‘காஃபி கலர்டு சில்ட்ரன்’ வெளியானது. பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றியும் பெற்றது. கூடுதலாக விருதுகள்! பி.பி.சி.யின் சிறந்த குறும்படத்துக்கான முதல் பரிசு, சான்ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் ‘கோல்டன் கேட் விருது’, ‘நேஷனல் பிளாக் ப்ரோக்ராமிங் கன்சார்டியமின் ப்ரைஸ்டு பீஸஸ் விருது’ என்று அள்ளிக் குவித்தது அந்தக் குறும்படம். மொத்தம் பதினைந்தே நிமிடங்கள் ஓடும் அந்தக் குறும்படத்தில் தானும் சகோதரன் சைமனும் அனுபவித்த கொடுமையைத்தான் பதிவு செய்திருந்தார் கோஸி. ‘‘நான் பள்ளிக்கூடத்தில் அனுபவித்த கொடுமைகளையும் இன்னல்களையும் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறேன். இப்படிச் செய்தால் எனக்குக் கிடைப்பது ஒன்று சிறையாக இருக்கும் அல்லது நான் ஒரு திரைப்பட இயக்குநராக இருக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவே வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நான் இயக்குநராகிவிட்டேன். என் கோபத்தை என் திரைப்படத்தில் வெளிப்படுத்தினேன்’’.

அதிர்ஷ்டம் கோஸி ஆன்வுராவின் பக்கம் இருந்தது. தொடர்ந்து குறும்படங்கள் இயக்கினார். எல்லாமே அவர் அனுபவித்த, கோடிக்கணக்கான கருப்பின மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைப் பேசும் படங்கள். 1991ல் அவர் இயக்கிய ‘தி பாடி பியூட்டிஃபுல்’ அவருக்கும் அவர் அம்மாவுக்குமான உறவுமுறை பற்றியது. ‘‘என் அம்மா அவர். என்னைப் பெற்றெடுத்தவள். ஆனால், எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் வெள்ளை நிறம். நான் பழுப்பும் கருப்பும் கலந்த நிறம். இதில் இருக்கும் பல பிரச்னைகளை நான் பதிவு செய்ய வேண்டியிருந்தது’’ என்று ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார் கோஸி. அந்தப் படத்துக்கு மெல்போர்ன் மற்றும் மாண்ட்ரியலில் நடந்த திரைப்படவிழாவில் பரிசுகள் கிடைத்தன. அது மட்டுமல்ல, உலக அளவில் இருக்கும் பல பல்கலைக்கழகங்களில் திரைப்படப் பிரிவில் பாடமாகவும் வைக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், நியூ யார்க் பல்கலைக்கழகம், மிட்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் இவற்றிலெல்லாம் கோஸி, விரிவுரை ஆற்றவும் இந்தப் படம் ஒரு காரணமாக அமைந்தது.

Image

1994ல் கோஸி ஆன்வுரா தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கினார். ‘வெல்கம் II தி டெரர்டோம்’ என்பது படத்தின் பெயர். அது மிக அதிகமாக கவனம் பெற்றது. அதற்குக் காரணமும் உண்டு. இங்கிலாந்தில் முதன் முதலில் ஒரு கருப்பினப் பெண்ணால் இயக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் அது. அதிலும் இனப்பாகுபாட்டை மையப்படுத்தியிருந்தார் கோஸி. ஒரு பத்திரிகை விமர்சனம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘முகத்தில் அடித்தது மாதிரி இருந்தது’ என்று விமர்சனம் எழுதியிருந்தது. அது 1652ல் தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் கருப்பின மக்களுக்கு நடந்த ஓர் நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். கருப்பின மக்களுக்கும் வெள்ளையினத்தவருக்கும் இடையே நிகழும் இன வேறுபாட்டை வெகு சாமர்த்தியமாக, அதே சமயம் நுட்பமாக பதிவு செய்திருந்தது அந்தத் திரைப்படம்.

மொத்தம் ஒரு டஜன் படங்களை இயக்கியிருந்தாலும் கோஸிக்கு படம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. கருப்பினப் பெண் என்கிற ஒரே காரணத்துக்காகவே தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த தொகையைக் கொடுத்தார்கள். அவ்வளவு போதும் என்பது அவர்களின் மனப்பான்மை. தொலைக்காட்சிகளில் கூட கருப்பினம் சார்ந்த படைப்புகளுக்கு ப்ரைம் டைமில் ஸ்லாட் கிடைப்பதில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் கோஸி. அதற்கெல்லாம் குறைந்த பார்வையாளர்கள்தான் இருப்பார்கள் என்பது தொலைக்காட்சி நடத்துபவர்களின் எண்ணமாக இருந்தது. ‘கருப்பின மக்கள் படம் எடுத்தால் அது அவர்களைப் பற்றிய படமாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்ன மோசமான மனநிலை?’ என்று வருத்தத்தோடு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் கோஸி.

Image

ஆல்வின் கச்லர் (Alwin Kuchler) என்ற ஒளிப்பதிவாளரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோடும் ஒரே மகளோடும் லண்டனில் வசிக்கிறார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாம் ட்ராட்மேன், ‘இந்த உலகத்தைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லக்கூடியவர் இந்த சிறந்த கதைசொல்லி. அவை எல்லாமே வலியையும் வேதனையும் தரக்கூடிய கதைகள்’ என்று கோஸியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘சிறந்த கதைசொல்லி’ என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் கோஸி மெதுவான குரலில் சொல்வதெல்லாம் ஒன்றுதான்… ‘‘ஆப்பிரிக்கர்கள் மிகச் சிறந்த கதைசொல்லிகள். இப்போது நான் நைஜீரியாவுக்குத் திரும்பிப் போனால், என் அன்புக்குரிய வயதான உறவினர் யாராவது வருவார். என் அருகே அமர்வார். கதை சொல்ல ஆரம்பிப்பார். அது 400 வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கே இருந்தோம் என்கிற அற்புதமான கதையாக இருக்கும். ஆப்பிரிக்கர்கள் மிகச் சிறந்த கதைசொல்லிகள்…’’.

– பாலு சத்யா

 

Ngozi Onwurah
Born Nigeria, West Africa.
Education Film -St. Martin’s School of Art, The National Film (UK), The Television School (UK)
Occupation Director, Producer, Model, Lecturer
Spouse(s) Alwin Kutchler
Children 1 daughter

திரைவானின் நட்சத்திரங்கள் – 10

Image

தொட்டும்விடும் தூரத்தில் இல்லை வானம்!

அந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்கு மூத்தவள். அவள் பிறந்த போது அம்மாவுக்கு 16 வயது. அப்பாவுக்கு 17 வயது. பால்ய விவாகம் இங்கிலாந்திலும் நடந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்! அவள் சிறுமியாக இருந்தபோது இன்னொரு துயர சம்பவமும் நடந்தது. சேர்ந்து வாழப் பிடிக்காமல், அப்பாவும் அம்மாவும் பிரிந்து போனார்கள். அம்மா, தனி மனுஷியாக நான்கு குழந்தைகளையும் வளர்த்தார். பின்னாளில் அந்தப் பெண் வளர்ந்து, ஆளாகி ஒரு குறும்படம் இயக்கினார். ‘வாஸ்ப்’ (Wasp) என்ற அந்தக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஆண்ட்ரியா ஆர்னால்ட் (Andrea Arnold).

அவரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார்… ‘‘இது உங்கள் சொந்தக் கதை போல தெரிகிறதே?’’

‘‘நான் மிகச் சாதாரணமான உழைக்கும் வர்க்கக் குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால், எனக்குத் தெரிந்ததைத்தான் கதையாக எழுதியிருப்பேன், அதைத்தான் திரைப்படமாக இயக்கியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கலாம் என்று நான் கருதுகிறேன்’’. இப்படி ஆண்ட்ரியா பதில் சொல்லியிருந்தாலும்கூட அந்த நிருபர் கேட்டதில் அர்த்தம் இருந்தது. ‘வாஸ்ப்’ கதைக்களன் அப்படி. நான்கு குழந்தைகளுடன் தனியாக வாழும் ஒரு தாய். முன்னாள் பாய் ஃப்ரெண்ட் ஒருவனை சந்திக்கிறாள். இருவருக்குள்ளும் நேசம் மலர்கிறது. குழந்தைகளை விடவும் முடியாமல், தன் பாய் ஃப்ரெண்டை தொடரவும் முடியாமல் தவிக்கிறாள். கிட்டத்தட்ட ஆண்ட்ரியாவின் அம்மா நிலையும் அதுதான்.

Image

தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் கென்ட் பகுதியில், டாடர்ட்ஃபோர்டில் (Dartford) 1961, ஏப்ரல் 5ம் தேதி பிறந்தார் ஆண்ட்ரியா. சிறுமியாக இருந்த போதே படிப்பதிலும் எழுதுவதிலும் தீராத ஆர்வம் அவருக்கு. அந்த வயதிலேயே மனித வாழ்க்கையின் கறுப்புப் பக்கங்களை எழுதினார். பத்து வயது இருக்கும் போது ஒரு திகில் கதை எழுதினார். அடிமை வியாபாரத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை. அதைப் படித்துவிட்டு ஆண்ட்ரியாவின் அம்மா உருகிப் போனார்.

ஒரு நடனப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் ஆண்ட்ரியா. சக மாணவிகள் பாப் இசை கேட்டுக் கொண்டோ, நடனப் பயிற்சியை செய்தபடியோ இருப்பார்கள். ஆண்ட்ரியா, ஆன் ஃபிராங்க்கின் டைரிக் குறிப்பை எடுத்து வைத்துக் கொள்வார். அறைக்குள் அங்கும் இங்கும் உலவியபடி, சத்தம் போட்டுப் படிப்பார். ஆசிரியர்கள், ‘இந்தப் பெண் மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பள்ளிப் படிப்பை முடித்த போது ஆண்ட்ரியாவுக்கு வயது 16. அடுத்தது என்ன? அவரின் குடும்பச் சூழ்நிலை மேற்படிப்புப் படிக்க அவருக்கு உதவவில்லை. இனி பிழைத்தாக வேண்டும். சொந்தக் காலில் நின்றாக வேண்டும். முக்கியமாக சம்பாதித்தாக வேண்டும். அதற்கு சிறந்த வழி நடிப்பது. ஒரு நடிகையாக தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார் ஆண்ட்ரியா.

நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? கென்ட்டை விட்டு கிளம்ப வேண்டும் என முடிவு செய்தாலும், மேலும் இரண்டு வருடங்கள் கழித்துதான் அவரால் லண்டனுக்குச் செல்ல முடிந்தது.

அவருக்கு அப்போது 18 வயது. லண்டனிலும் உடனே அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தொலைக்காட்சிதான் அவரை வரவேற்றது. அவருடைய முதல் வேலை நடனமாடுவது. அவர் கற்றுக் கொண்ட நடனப் பயிற்சி அதற்குக் கை கொடுத்தது. ‘டாப் ஆஃப் தி பாப்ஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார் ஆண்ட்ரியா. 1980ல் இன்னொரு வாய்ப்பு அவருக்குத் தேடி வந்தது. குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடரில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேலை. அவ்வப்போது நடிக்கவும் செய்யலாம். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பெயர் ‘நம்பர் 73’. அதன் மூலம் கொஞ்சம் பிரபலமானார். 1990ல் இளைஞர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சியில் தோன்றினார். ‘எ பீட்டில் கால்டு டிரெக்’ (A Beetle called Derek) என்ற அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. ஆனாலும் என்ன… வயதைப் போலவே வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களைத் தொலைக்காட்சியில் தொலைத்திருந்தார் ஆண்ட்ரியா. இப்படியே போனால் என்ன ஆவது என்று தோன்றியது அவருக்கு. போதும், விட்டுவிடலாம் என முடிவெடுத்தார். ‘‘தொலைக்காட்சி என்பது மிகப் பெரிய வேடிக்கை. அதன் ஓட்டத்தோடு நானும் சேர்ந்து போய்க் கொண்டிருந்தேன். ஆனால், கேமராவின் முன்னால் நிற்கும் போதெல்லாம் என்னால் ஒருபோதும் சௌகரியமாக உணர முடிந்ததில்லை’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஆண்ட்ரியா.

Image

பல வருடங்களாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் தோன்றியவருக்கு ‘எ பீட்டில் கால்டு டிரெக்’ புதிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தியிருந்தது. தனக்குத் தெரிந்ததையெல்லாம், தன்னிடம் இருக்கும் கதைகளையெல்லாம் திரைப்படம் ஆக்க வேண்டும் என்று விரும்பினார் ஆண்ட்ரியா. அதற்கு முதலில் முறையாக சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அவருக்குப் புரிந்தது. ‘அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ பள்ளியில் சேர்ந்தார். இயக்கத்தை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது. படைப்பாற்றலை வெளிப்படுத்தும் திரைக்கதையையும் முறையாகப் படிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அந்தப் படிப்பு முடிந்ததும் சொந்த ஊரான கென்ட்டுக்குத் திரும்பினார். அங்கே ‘பி.ஏ.எல். லேப்ஸ்’ல் (PAL Labs) திரைக்கதை எழுதுவது தொடர்பான படிப்பில் சேர்ந்தார்.

தவம் இருப்பது போல முயற்சி செய்து முன்னேறுவது ஒரு வகை. ஆனால், அதற்குக் கூட வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைய வேண்டும். ஆண்ட்ரியா மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பற்றிக் கொள்ள ஆதாரங்கள் இல்லை. தானாகத் தவழ்ந்து, நடை பழகி, மெல்ல ஓடி, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஓட்டப் பந்தய மைதானம் வரை வருவதற்கே படாதபாடு பட வேண்டி இருந்தது.

Image

தன்னுடைய 37வது வயதில், 1998ல் ‘தி மில்க்’ என்ற முதல் குறும்படத்தை இயக்கினார். ஊடகங்களின் வெளிச்சம் அவர் மீது லேசாக விழுந்தது. பிறகு மூன்று வருடங்கள் இடைவெளி. 2001ம் ஆண்டு ‘டாக்’ என்ற மற்றொரு குறும்படம். ஏதோ புதிதாகச் செய்கிறாரே என்று எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். 2003. அவர் இயக்கிய ‘வாஸ்ப்’, ஒட்டுமொத்த உலகத் திரையுலகினரின், ஊடகங்களின் கவனத்தையும் பெற்றது. அதற்குப் பிறகு ‘ரெட் ரோட்’ (2006), ‘ஃபிஷ் டேங்க்’ (2009), ‘உதரிங் ஹெய்ட்ஸ்’ (2011) (Wuthering Heights) என மூன்று முழுநீளத் திரைப்படங்களை இயக்கிவிட்டார் ஆண்ட்ரியா. ‘ரெட் ரோட்’ திரைப்படத்துக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது, ‘பாஃப்டா விருது’ (BAFTA Award),  ‘ஃபிஷ் டேங்க்’ படத்துக்கு பிரிட்டிஷ் இண்டிபெண்டென்ட் ஃபிலிம் விருது, கேன்ஸ் திரைப்படவிழாவில் ஜூரி விருது,  ‘பாஃப்டா விருது’, ‘உதரிங் ஹெய்ட்ஸ்’ படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான ‘கோல்டன் ஒசெல்லோ விருது’ எனப் பல விருதுகளைப் பெற்றுவிட்டார்.

‘உதரிங் ஹெய்ட்ஸ்’ படத்தைத் தவிர மற்ற எல்லாமே அவருடைய சொந்தக் கதைகள். ‘உதரிங் ஹெய்ட்ஸ்’கூட எமிலி ப்ரான்டே என்கிற பிரபல ஆங்கில எழுத்தாளரின் நாவல். அந்தப் படத்தில் திரைக்கதைக்கு மட்டும் தன் பங்களிப்பைச் செலுத்தியிருந்தார் ஆண்ட்ரியா.

இப்போது இங்கிலாந்தில் நீண்ட கால நண்பரான அலெக்ஸுடன் வசித்து வருகிறார். பல வருடப் போராட்டத்துக்குப் பின் திரையுலகில் நுழைய முடிந்தாலும் ஆண்ட்ரியாவின் சாதனையைக் குறைத்து மதிப்பிட முடியாது. திரைத்துறையில் கால காலத்துக்கும் அவர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ள ஆஸ்கர் விருது பெற்ற ‘வாஸ்ப்’ குறும்படம் ஒன்று போதும்.

– பாலு சத்யா 

Andrea Arnold

Born 5 April 1961 (age 52)
DartfordKentEngland
Occupation Film director and actress

திரைவானின் நட்சத்திரங்கள் – 9

Image

இன்ஸ்பெக்டர் என்ன செய்திருப்பார்?

மையாஸா! (Myassa) அதுதான் அந்தப் பெண்ணின் பெயர். பகல் முழுக்க வேலை பார்த்தக் களைப்பு. அலுப்புடன் வீடு திரும்புகிறாள். அன்று அவளுக்கு ஒரு பிரச்னை. அதற்குக் காரணம் ஓர் ஆண். அவள் குடியிருக்கும் அபார்ட்மென்ட் பகுதியில் வைத்து அவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யத் துணிகிறான். அவள் எப்படியெல்லாமோ போராடுகிறாள். ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போய்விடுகிறது. அவனுக்கு ஆண்மைக் குறைபாடா அல்லது வேறு பிரச்னையா என்று தெரியவில்லை. பலாத்காரம் நிகழவில்லை. அவன் அவளை விட்டுவிடுகிறான். அடுத்த நாள் மையாஸாவிடம் இருந்தது இரு வாய்ப்புகள். ஒன்று, அவள் காவல்நிலையத்துக்குப் போவது. அங்கே அவளுக்கு நடந்த பலாத்கார நிகழ்வை புகார் கொடுப்பது. இரண்டாவது வாய்ப்பு… அவள் மேல் பாலியல் பலாத்கார முயற்சி நடந்ததை அப்படியே மறந்துவிடுவது. அவள் என்ன செய்வாள்?

எங்கோ, எப்போதோ நடந்திருந்தாலும் அன்றாடம் பல பெண்கள் உலகம் முழுக்க எதிர்கொள்கிற பிரச்னை. இந்த நிகழ்வை ‘லிம்ப்லி, (சாஃப்ட்லி) ஒன் சாட்டர்டே மார்னிங்’ என்ற குறும்படமாகப் படைத்திருக்கிறார் அல்ஜீரிய இயக்குநர் சோஃபியா ஜாமா (Sofia Djama). ‘‘இது ஆண்களுக்கு எதிரான படம் அல்ல. அல்ஜீரியாவில் இளைய தலைமுறை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் அடையாளம். இங்கே இருக்கும் தோல்வி அடைந்த, இயந்திரத்தனமான ஓர் ஒழுங்குமுறையை வெளிக்கொண்டு வர நான் முயற்சித்திருக்கிறேன். இங்கே இளைஞர்களுக்கு வேலை இல்லை. சுதந்திரமாக தங்கள் உணர்வுகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத் தேவையான களம் இல்லை. எல்லோரும் வீட்டில் பெற்றோருடன் வசிக்க நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதன் விளைவாக, ஏதாவது ஒரு அடையாளம் தேவை என்பதற்காகவே குடும்பம், பாரம்பரியம், பழக்க வழக்கம் என்று பழமையில் ஊறித் திளைத்துவிடுகிறார்கள். இங்கே அரசு, இளைஞர்களை கவனிப்பதில்லை. அதனாலேயே அவர்களுக்குள் வெறுப்பும் வன்முறையும் தொற்றிக் கொண்டு விடுகிறது. இதைத்தான் என் படத்தில் வெளிக் கொண்டு வர நினைத்தேன். என்னைப் பொறுத்தவரை பலாத்காரத்துக்கு ஆளான பெண், பலாத்காரம் செய்த ஆண் இருவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான்’’. தெளிவாக ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜாமா.

Image

ஜாமா அடிப்படையில் எழுத்தாளர், இலக்கியவாதி. அல்ஜீரியாவில் இருக்கும் ஓரனில் (Oran) 1979, பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். பெஜய்யா (Bejaia) என்கிற ஊரில் வளர்ந்தார். பெஜய்யா பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் இலக்கியம் படித்தார். முதுகலைப் படிப்புக்காக அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீர்ஸுக்கு வந்தார். அங்கே இருக்கும் ‘பௌசாரியா பல்கலைக்கழகத்தில்’ (Bouzareau) சேர்ந்தார். அல்ஜீயர்ஸுக்கு வந்த பிறகு அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகமானது. சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். தலைநகர் வாழ்க்கை அவரை மிகவும் பாதித்தது. அதை மையமாக வைத்தே ஒரு சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட முடிவு செய்தார். எழுதினார். ‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ என்கிற தலைப்பும் வைத்துவிட்டார். ‘பர்ஸாக்’ என்கிற பதிப்பகத்தின் வெளியீடாக அது வர இருந்தது. என்ன காரணமோ, சிறுகதைத் தொகுப்பு வெளியாகவில்லை.

வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஒரு அட்வர்டைசிங் ஏஜென்சி நிறுவனத்தில் அக்கவுன்ட் எக்ஸிகியூட்டிவாகச் சேர்ந்தார் ஜாமா. சிறிது காலம் கணக்குப் பார்க்கும் வேலை பார்த்ததற்குப் பிறகு அது பிடிக்காமல் அந்த நிறுவனத்திலேயே ‘திட்டமிடுதல் துறை’க்கு (Planning Department) மாறினார். அதுவும் பிடிக்காமல் ‘படைப்பாற்றல் துறை’யில் (Creative Department) காப்பி எடிட்டராக சேர்ந்தார். செக்கு மாடு போல காலையில் வேலைக்குப் போவது, மாலையில் வீட்டுக்குத் திரும்புவது என்கிற இயந்திரத்தனமான வாழ்க்கை ஜாமாவுக்குப் பிடிக்கவில்லை. தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை எந்த வழியிலாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார். ‘லே டெம்ப்ஸ்’ (LE TEMPS) என்ற வார இதழில் ஃப்ரீலேன்ஸ் எழுத்தாளராக நிறைய எழுதினார். இணையதளத்திலும், வேறு சில பத்திரிகைகளிலும் விமர்சனங்கள் எழுதினார். ‘க்ரைசாலைடு’ (CHRYSALIDE) என்கிற கலாசார அமைப்பில் இணைந்து சினிமா, நாடகம் என்று பல தளங்களில் செயல்பட்டார். ஜாமா இயக்கிய முதல் படம் ‘தி ஹண்ட்ரட் ஸ்டெப்ஸ் ஆஃப் மிஸ்டர் எக்ஸ்’.

அல்ஜீரியாவில் சட்டத்துக்கும் சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி அதிகம் என்று நினைத்தார் ஜாமா. ‘‘ஒருவேளை மையாஸா காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். இன்ஸ்பெக்டர் என்ன செய்திருப்பார்? சிரித்திருப்பார்’’ என்கிறார் ஜாமா. ‘‘ஒரு வகையில் பார்த்தால் நான் இங்கே மிகவும் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். நான் ஸ்கர்ட் அணியலாம், பீச்சுக்குப் போகலாம். சட்டம் என்னைத் தடுக்காது. ரமலான் சமயத்தில் நான் நோன்பு இருக்கவில்லையா? சட்டம் எனக்கு உதவி செய்யாது. சமூகப் பார்வையில் இது மன்னிக்க முடியாத செயல்’’.

Image

‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ குறும்படம் மரியாதைக்குரிய இரண்டு விருதுகளை ஜாமாவுக்குப் பெற்றுத் தந்தது. ‘க்ளெர்மான்ட்-ஃபெர்ராண்ட் சர்வதேச குறும்பட விழா’ (Clermont-Ferrand international short film festival) உலக குறும்பட விழாக்களில் மிக முக்கியமான ஒன்று. அதில் கலந்து கொண்டு இரண்டு பரிசுகளை வென்றது ஜாமாவின் குறும்படம். சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன அவமானங்களையும் ஏமாற்றங்களையும் மிக அழகாகப் பதிவு செய்ததுதான் ஜாமாவின் குறும்படம் வெற்றி பெற்றதற்குக் காரணம்.

அல்ஜீரியா திரைப்படத்துறை இன்னமும் குழந்தையாகவே இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஜாமா. அவருடைய சொந்த மண்ணில் திரைப்படப்பள்ளிகள் இல்லை. திரைப்படம் எடுக்கப் போதுமான வசதிகள் இல்லை. அதன் காரணமாகவே அல்ஜீரிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து படம் எடுக்க முடியாத சூழ்நிலை. ‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ திரைப்படத்தை ஐரோப்பிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன், ஐரோப்பிய நிதி உதவியுடன்தான் தயாரிக்க முடிந்தது. அப்படி இருக்கும் போது அவருடைய குறும்படம் அல்ஜீரியாவில் எப்படி வரவேற்கப்படும் என்பது அவருடைய கேள்வி.

ஆனால், ‘அல்ஜீரியன் பிரெஸ் சர்வீஸ்’ என்கிற பத்திரிகையாளர்கள் சங்கம் அவருக்கு உதவியது. அவருடைய படம் ரிலீசாவதை வெகு சிறப்பாக செய்திகளில் இடம்பெறச் செய்தது. எப்படியோ சென்சாரின் கைகளில் போய் மீண்டு வந்தது அவருடைய குறும்படம். இப்போது பாரீஸில் வசிக்கிறார் ஜாமா. எழுதுவதிலும் அடுத்த பட முயற்சியிலும் தீவிரமாக இருக்கிறார். அவருடைய ‘எ கிளாஸ் டூ மச்’ என்ற படைப்பை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

தனக்கு சர்வதேச அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஜாமா. ‘‘நான் முழுக்க முழுக்க ஆப்பிரிக்க குடிமகள் அதே நேரம் மக்ரேபியும் (Maghrebi) கூட. எனக்கு அரபு மற்றும் இஸ்லாம் இரண்டு பாதிப்பும் இருக்கிறது. அதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்’’ என்கிறார்.

அல்ஜீரியா, தன் சொந்த நாட்டு திறமைசாலிகளுக்குக் கூட உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை. அந்த வருத்தம் மிக அதிகமாக ஜாமாவுக்கு இருக்கிறது. 2012ல் ஒலிம்பிக் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்றவர் அல்ஜீரிய தடகள வீர தவுஃபிக் மக்லோஃப் (Taoufik Maklouf). அந்த ஓட்டப் பந்தய நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சிகளில்கூட ஒளிபரப்பப்படவில்லை. அவர் நாடு அவருக்கு எந்தவிதத்திலும் ஆதரவு தரவில்லை.

ஜாமா இப்படிக் குறிப்பிடுகிறார்… ‘‘அல்ஜீரியாவில் கதாநாயகர்கள் இல்லை. தியாகிகள்தான் இருக்கிறார்கள்’’

– பாலு சத்யா

Sofia Djama

Born in Oran (Algeria) on the 10th of February 1979. Raised in Bejaia, after two years at the Department of Literature of the University of Bejaia, in 2000 she moves to Algiers to finish her master at the University of Bouzarea.

Limply, a Saturday morning

திரைவானின் நட்சத்திரங்கள் – 8

Image

ஆசிட் வீச்சைத் தாங்குமா அழகிய முகம்?

பாகிஸ்தான். பரபரப்புக்குப் பஞ்சமில்லாத நாடு. ஆப்கானிஸ்தானோடு பிரச்னை, தீவிரவாதிகள் ஊடுருவல், வெடிவிபத்து, அரசியலில் தடாலடி மாற்றங்கள்… என்று எப்போதும் சர்ச்சைகளுடன் ஒவ்வொருநாள் பொழுதையும் தொடங்கும் பூமி. கடந்த ஆண்டு, இவை, எல்லாவற்றையும் இடது கையால் ஓரம் கட்டிவிட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார் ஷர்மீன் ஓபெய்ட் சினாய் (Sharmeen Obaid Chinoy).

காரணம், இவரும் டேனியல் ஜங் என்கிற அமெரிக்க இயக்குநரும் இணைந்து இயக்கியிருந்த ‘சேவிங் ஃபேஸ்’ (Saving Face) என்ற ஆவணப் படத்துக்கு, சிறந்த டாகுமென்டரிக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருந்தது. அதோடு, பாகிஸ்தானிலிருந்து முதன்முதலாக ஆஸ்கர் விருது பெறுபவர் என்கிற பெருமையையும் தட்டிக்கொண்டு போயிருந்தார் இவர். இத்தனைக்கும் ஒரு வெடிவிபத்தில் ஏழு பேர் பலியாகி, முதலமைச்சர் மயிரிழையில் உயிர் பிழைத்த சம்பவமும் அன்றைக்கு நடந்திருந்தது. ஆனாலும், ஷர்மீன் ஓபெய்ட் சினாய் தலைப்புச் செய்திகளில்…

Image

ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்கள்தான் இந்த டாகுமென்டரியின் முக்கிய களம். ரக்‌ஷனா, ஜாகியா இருவரும் அப்படி ஒரு தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அந்தப் பெண்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது அந்த நிகழ்வு. அவர்களுக்கு சிகிச்சை தருவதற்காக லண்டனில் இருந்து பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரான டாக்டர். முகமது ஜாவத் என்பவர் வருகிறார். அவருடைய பயணத்தையும் அவரிடம் சிகிச்சை பெறும் பெண்களையும் சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளோடு நகர்கிறது படம்.

வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆசிட் வீச்சுக்கு ஆளாவது பாகிஸ்தானில் தொடர்கதையாகிப் போன ஒரு நிகழ்வு. அவர்களில் பலர் அற்பக் காரணங்களுக்காகவும், காரணமே இல்லாமலும்கூட அந்தக் கொடுமைக்கு ஆளானவர்கள். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான பிரச்னையை ஆவணப்படுத்தவேண்டும் என்று நினைத்ததற்காகவே ஓபெய்ட் சினாயை மனதாரப் பாராட்டலாம். பாகிஸ்தானில் இருந்துகொண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு மிகப் பெரிய சமூகப் பிரச்னையை ஆவணப்படமாக எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் அதுகூட அவருக்குப் பிரச்னை இல்லை. ஓபெய்ட் சினாய் வேறுவிதமான சிக்கல்களை அனுபவிக்கவேண்டி இருந்தது.

“படப்பிடிப்பின் போது, நானோ எங்கள் குழுவில் இருப்பவர்களோ உடல்ரீதியான எந்த அபாயத்தையும் எதிர்கொள்ளவில்லை. யாரும் எங்களுக்கு எதிராக உரத்த சத்தத்தைக்கூட எழுப்பவில்லை. ஆனால், இதுபோன்ற உச்சகட்ட வன்முறையைக்கூட சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்கிற மக்களின் மனநிலையை எதிர்கொள்வதுதான் சிரமமாக இருந்தது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வன்முறைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் ஷூட்டிங்குக்குப் போன இடம் செராய்க்கி பெல்ட் (Seraiki Belt) என்கிற ஊர். பருத்தி விளையும் பூமி. பாகிஸ்தானிலேயே மிகக் குறைந்த படிப்பும், மிக அதிகமான அளவில் வறுமையும் தாண்டவமாடும் பகுதி. அந்த மக்களோடு பணியாற்றுவதுதான் சிரமமான காரியமாக இருந்தது. ‘பாகிஸ்தானி’ என்கிற முறையில், ஓர் ஆண், சகல உரிமைகளையும் அனுபவிக்கிறான். இஷ்டத்துக்கு வாழ்கிறான். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பெண்களின் பிரச்னையைப் புரிய வைப்பது கடினம்’’ என்று ஆஸ்கருக்கு நாமினேஷன் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டிருந்தார் அவர்.

****

Image

ஓபெய்ட் சினாய், 1978ம் ஆண்டு கராச்சியில் பிறந்தார். நன்றாக உருது பேசத் தெரிந்த, உருது மொழியிலேயே ஊறிய குடும்பம்.  பள்ளிப் படிப்பை கராச்சியில் முடித்த பிறகு, அமெரிக்காவில் உள்ள ஸ்மித் காலேஜில் சேர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். இன்டர்நேஷனல் பாலிஸி ஸ்டடீஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

அவர் இந்தத் துறையில் ஈடுபடுவதற்குக் காரணமே ஒரு சோகமான கதை! அப்போது பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தார் ஓபெய்ட் சினாய். பாகிஸ்தானில் வாழும் ஆப்கன் அகதிக் குழந்தைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. நேரில் போனார். பல குழந்தைகளைப் பார்த்தார். அவர்களுடைய கொடுமையான வாழ்க்கைக் கதைகளைக் கேட்டதும் நொந்துபோனார். ‘இதை வெறும் கட்டுரையோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆவணப்படமாக எடுத்தால் உலகம் முழுக்கக் கொண்டு போகலாமே!’ என்கிற எண்ணம் அப்போதுதான் அவருக்குத் தோன்றியது. கட்டுரை முயற்சியை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்தார்.

வந்தவர் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கவில்லை. ‘ஸ்மித் காலேஜு’க்கும், ‘நியூ யார்க்ஸ் டைம்ஸ் டெலிவிஷன் டிவிஷனு’க்கும் முதல் காரியமாக ஒரு அப்ளிகேஷன் போட்டார்.  தன்னுடைய ப்ராஜக்டுக்கு நிதி உதவி கோரினார். அவர் அனுப்பியிருந்த உருக்கமான கடிதத்தைப் பரிசீலித்த இரண்டு அமைப்புகளுமே அவருக்கு நிதி உதவி தருவதற்கு ஒப்புக்கொண்டன. அதோடு, அவர் ஆவணப்படம் எடுப்பதற்குத் தேவையான உபகரணங்களையும் பயிற்சியையும் கொடுத்தன. இப்படி ஆரம்பித்த அவருடைய பயணத்துக்குப் பலன் இல்லாமலும் போகவில்லை.

‘டெரர்ஸ் சில்ட்ரன்’ என்கிற பெயரில் அவர் எடுத்த ஆவணப்படம்  பரவலாகப் பேசப்பட்டது. ‘ஓவர்சீஸ் பிரஸ் கிளப் விருது’, ‘அமெரிக்கன் வுமன் அண்ட் ரேடியோ அண்ட் டெலிவிஷன் விருது’, ‘சவுத் ஏஷியன் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் விருது’ என்று மூன்று விருதுகளைப் பெற்றுவிட்டது அந்தப் படம். மொத்தம் 16 ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார் ஷர்மீன் ஓபெய்ட் சினாய். பல உலகப் படவிழாக்களில் அவர் படங்கள் பங்கேற்றன. விதவிதமான விருதுகளை வாங்கிக் குவித்தன. அவற்றில் ஒன்று ‘எம்மி’ விருது.

கிட்டத்தட்ட ஆஸ்கர் விருதுக்கு சமமாகக் கருதப்படும் எம்மி விருது, தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்படும் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படுவது. ‘பாகிஸ்தான்: சில்ட்ரன் ஆஃப் தலிபான்’ என்கிற டாகுமென்டரி படத்துக்காக ஓபெய்ட் சினாய்க்கு எம்மி விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் தலிபான் அமைப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர்கள், அவர்களுடைய மனநிலை, வாழ்வாதாரமே ஆட்டம் காணும் சூழ்நிலை என எல்லாவற்றையும் அழகாக அந்தப் படத்தில் சித்தரித்திருந்தார் ஓபெய்ட் சினாய்.

Image

ஆஸ்கர் விருது பெற்ற பிறகும் கூட அடுத்த களப்பணி என்ன என்பதிலேயே அவருடைய எண்ணம் எல்லாம் இருந்தது. ஆஸ்கர் விருது பெற்றது குறித்து அவர் பத்திரிகையில் பேட்டி அளித்தபோது குறிப்பிட்டது, அவர் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. “இந்த விழாவில் நம்முடன் இருக்கும் டாக்டர் முகமது ஜாவத்திலிருந்து, பாகிஸ்தானில் என்னுடன் பணியாற்றிய அத்தனை கதாநாயகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இது போன்ற பெண்களுக்கு சிகிச்சை தருவதுதான் டாக்டர் முகமது ஜாவத்தின் முக்கியப் பணி. இந்தப் படத்தின் முக்கியமான அங்கமாக இருந்தவர்கள் ரக்ஸனாவும் ஜாகியாவும். அந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தப் படத்தில் பணியாற்றிய தைரியத்தையும் வேதனையையும் ஈடுபாட்டையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஒரு மாற்றத்துக்காகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் பெண்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்களுடைய கனவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். இந்த விருது உங்களுக்காக’’.

ஆஸ்கர் விருது கிடைத்த அன்று டிவிட்டரில் பதிவு எழுதிய ஓபெய்ட் சினாய் இப்படி எழுதினார்: “பாகிஸ்தானின் பிரதிநிதியாக பெருமைக்குரிய ஓர் உலக மேடையில் நான் ஏறியதற்காகப் பெருமைப்படுகிறேன். இன்னும் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. வெற்றி, தோல்வியைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நான் திரும்ப வருவேன்.”

உலகம் முழுக்க இருந்து ஓபெய்ட் சினாய்க்கு பாராட்டுகள் குவிந்தன. ஆஸ்கர் விருது பெற்ற பிறகு, பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், இணையதளங்களிலும் ‘சேவிங் ஃபேஸ்’ பற்றிய பேச்சுத்தான். பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர், ‘ஜாகித் சுல்ஃபிகார் அலி பூட்டோ இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’யில் ஃபேகல்டி உறுப்பினர், ‘தி சிட்டிஸன்ஸ் ஆர்ச்சிவ் ஆஃப் பாகிஸ்தான்’ அமைப்பின் தலைவர் போன்ற பல பதவிகளோடு மகுடமாக இந்த ஆஸ்கர் விருதும் அவருக்குச் சேர்ந்திருந்தது.

****

‘சேவிங் ஃபேஸ்’ ஷூட்டிங்கில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றும் ஓபெய்ட் சினாய்க்கு நடந்தது. அதில் முக்கிய பாத்திரங்களில் ஒருவராக நடித்த ரக்ஸனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரக்ஸனா தன் குழந்தைக்குப் பெயர் சூட்டினார். பெயர்: முகமது ஜாவத். பல பேர் ரக்ஸனாவிடம், “குழந்தையின் அப்பா பெயரையே வைத்திருக்கலாமே?” என்று கேட்டார்கள்.

அதற்கு ரக்ஸனா சொன்னார்: “என் பையன் வளரும்போது டாக்டர். ஜாவத் மட்டும்தான் அவனுக்கு ரோல் மாடலாக இருக்கவேண்டும். அவன் அப்பாவாக இருக்கக்கூடாது. ஏனென்றால், என் முகம் இப்படி ஆனதற்குக் காரணமே அவன் அப்பாதான்.”

****

Image

காய்த்த மரம் கல்லடி படும். இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஓபெய்ட் சினாய்க்கு மிகப் பொருத்தம். எந்தப் பெண்ணை முன்னிலைப்படுத்தி ஆவணப்படம் எடுத்தாரோ, அந்தப் பெண்ணே எதிராகக் கிளம்பினார். ரக்ஸனா வழக்குப் போட்டார். ‘‘இந்தப் படத்தில் நடித்தால் எனக்குப் பணமும், குடியிருக்கப் புது வீடும், என் முகத்தை மாற்றியமைக்க பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து தருவதாக உறுதி அளித்தார் ஓபெய்ட் சினாய்’’ என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். கோர்ட்டில் தன் கணவன் தன்னை விட்டுப் போய்விட்டதாகவும், தான் சார்ந்திருந்த மொத்த சமூகமே தன்னை ஒதுக்கிவிட்டதாகவும் முறையிட்டார். ஓபெய்ட் சினாய், தன் மீது சுமத்தப்பட்ட பழிகளை கடுமையாக ஆட்சேபித்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. ரக்ஸனாவை பின்னால் இருந்து இயக்குவது ஜாவத் என்கிற உண்மை. வெறுத்துப் போனார். மனதளவில் புழுக்கத்துக்கு ஆளானார். ஆனாலும் அவர் மீது சுமத்தப்பட்ட கறையைப் போக்க வழி பிறக்கவில்லை. ரக்ஸனாவும் ‘ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிர் பிழைத்தோர் அமைப்பு’ம் (The Acid Survivors Foundation) இணைந்து வழக்குப் போட்டன. ‘சேவிங் ஃபேஸ்’ படத்தை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது. அதனால் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்கள் திரும்பவும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. தலை வணங்கி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார் ஓபெய்ட் சினாய். அவரைப் பொறுத்தவரை இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு. போதும்!

ஆனால், அவர் பயணம் நிற்கவில்லை. சமூகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், சாமான்யர்கள் என்று தேடித்தேடி பல மறைக்கப்பட்ட பக்கங்களை ஆவணப்படுத்தினார். அவர் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் நெடுங்காலத்துக்குத் தொடரும் என்றுதான் தோன்றுகிறது.

– பாலு சத்யா

****

Obaid-Chinoy
Born 12 November 1978
KarachiPakistan
Residence KarachiPakistan
Nationality Pakistani
Occupation Documentary filmmaker
Known for Saving Face (2012)
Pakistan’s Taliban Generation/ Children of the Taliban (2009)
Afghanistan Unveiled/Lifting the Veil (2007)
Iraq: The Lost Generation (2008)
First Pakistani to win an Oscar.
Religion Islam
Website
Official website

திரைவானின் நட்சத்திரங்கள் – 7

Image

இரும்புப் பெண்மணி!

மெரில் ஸ்ட்ரீப். “இந்தப் பெயர் கொஞ்சம்கூடப் பொருத்தமே இல்லை. பேசாமல் ‘விருது மங்கை’ என்று மாற்றி வைத்துக்கொள்ளலாம்” என்று அவர் காதுபடவே முணுமுணுத்தவர்கள் ஏராளம். இது போல எந்தப் பேச்சைக் கேட்க நேர்ந்தாலும், தன் ‘பளிச்’ புன்னகையை உதிர்த்துவிட்டு, பேசாமல் நகர்ந்து போய்விடுவார் மெரில் ஸ்ட்ரீப் (Meryl Streep).

பின்னே! 17 முறை ஆஸ்கர் விருதுக்காக இவர் பெயர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் மூன்றுக்கு விருது. 27 முறை கோல்டன் குளோப் விருதுக்காக இவர் பெயரில் நாமினேஷன். அவற்றில் எட்டுக்கு விருது. மேலும், இரண்டு எம்மி விருதுகள், ஐந்து முறை கிராம்மி விருதுக்காக நாமினேஷன் செய்யப்பட்டவர், கேன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதை ஒரு முறை பெற்றவர்… இப்படி பக்கம் பக்கமாக எழுத வேண்டிய பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலகில், வேறு எந்த நடிகரும், நடிகையும் எட்ட முடியாத உயரத்தை அலட்சியமாகக் கடந்து அடைந்தவர். பல நடிகர்கள் பெற்ற ரெகார்டுகளை உடைத்தவர். இதற்கெல்லாம் அடிப்படை, அவருடைய உழைப்பு, உறுதி, தொழில்பக்தி.

கடந்த 2012ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நடித்ததற்காக மெரில் ஸ்ட்ரீப்புக்கு கிடைத்தது. அதில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ‘மார்கரெட் தாட்சர்.’ ‘இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி’ என்று போற்றப்படும் மார்கரெட் தாட்சர், இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர். தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர். ‘அயர்ன் லேடி’ படத்தில் கிட்டத்தட்ட மார்கரெட் தாட்சராகவே மாறியிருந்தார் மெரில் ஸ்ட்ரீப். அந்த அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்புத்தான் அவருக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது.

Image

1949, ஜூன் 22. அமெரிக்காவில், நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள சம்மிட் என்கிற இடத்தில் பிறந்தார் ஸ்ட்ரீப். அம்மா மேரி வோல்ஃப் ஓவியர். அப்பா ஒரு மருந்து கம்பெனியில் எக்ஸிகியூட்டிவ். ‘டேனா டேவிட்’, ‘மூன்றாம் ஹாரி வில்லியம்’ என்று இரண்டு சகோதரர்கள். பாரம்பரியப் பெருமை உள்ள குடும்பம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த பரம்பரை. மெரிஸ் ஸ்ட்ரீப்பின் அம்மாவும் அயர்லாந்தில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அமெரிக்காவில் பென்சில்வேனியாவை உருவாக்கிய வில்லியம் பென்னுக்கு ஸ்ட்ரீப் குடும்பத்துக்கு தூரத்துச் சொந்தம் என்றெல்லாம் சொல்வார்கள்.

நியூ ஜெர்சியில் இருக்கும் பெர்னார்ட்ஸ் வில்லியில் வளர்ந்தார் ஸ்ட்ரீப். அவருக்கு நடிப்பில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவர் சென்று சேர்ந்த இடம் நியூ யார்க்கில் இருக்கும் வாஸ்ஸர் காலேஜ். அங்கே அவருக்கு நடிப்பின் முக்கியமான நுட்பங்களைக் கற்றுக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. கூடவே, அப்போது புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த நடிகை ஜீன் ஆர்தரிடம் விளக்கமாக நடிப்பைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது.

நாடகத்தில் பி.ஏ. முடித்தார் ஸ்ட்ரீப். அத்தோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிடாமல் ‘யேல் ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் சேர்ந்து, நாடகத்தில் எம்.எஃப்.ஏ. பட்டமும் பெற்றார். யேலில் படித்தபோது அவர் நிறைய நாடகங்களில், விதவிதமான பாத்திரங்களில் நடித்தார். அந்த அனுபவங்கள்தான் அவருடைய நடிப்புத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றின.

Image

நடிகைகளுக்கே உண்டான வாழ்க்கை பிரச்னைகள் அவரையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்ப கால வாழ்க்கையில் அவ்வளவு வேதனைகளை சந்தித்தார். யேல் (Yale) கல்லூரியில் இருந்து வெளி வந்தபிறகு, பல மேடை நாடகங்களில் நடித்தார். நாடகங்களுக்கேயான ‘பிராட்வே’ அவரை அரவணைத்துக் கொண்டது. கிட்டத்தட்ட ஸ்டார் அந்தஸ்தும் கிடைத்துவிட்டது. அந்தச் சமயத்தில் அறிமுகமானவர்தான் ஜான் கேஸேல் (John Cazale). அறிமுகம், நட்பானது. நட்பு காதலாக மாறியது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கேஸேலோடு சேர்ந்து வாழ்ந்தார் ஸ்ட்ரீப்.

நடிப்புத் துறையில் பலருடைய அலட்சியத்தையும் அவமானத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு படத்தின் ஆடிஷனுக்காகப் போயிருந்தார் ஸ்ட்ரீப். அது புகழ்பெற்ற ‘கிங் காங்’ திரைப்படம். அதன் தயாரிப்பாளரான டினோ டே லாரன்டீஸுக்கு (Dino De Laurentis) என்ன காரணமோ, ஸ்ட்ரீப்பைப் பிடிக்கவில்லை. தன் மகனை அழைத்தார். ஸ்ட்ரீப்புக்கு இத்தாலி தெரியாது என்ற நினைப்பில் அந்த மொழியிலேயே மகனைத் திட்டித் தீர்த்தார். “இவளைப் பாக்கவே அருவெறுப்பா இருக்கு. எதுக்கு இவளை இங்க கூட்டிட்டு வந்தே?” இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் ஸ்ட்ரீப் நிதானத்தை இழக்கவில்லை. மிக மென்மையான குரலில், தெளிவான இத்தாலியில் டினோவுக்கு பதில் சொல்லிவிட்டு வெளியேறினார். 

நடிப்பு… இதுதான் வாழ்க்கை என்கிற தீர்மானம் அழுத்தமாக அவருக்குள் விழுந்திருந்தது. சின்ன கதாபாத்திரமோ, கதாநாயகி வேடமோ நிறைவாகச் செய்ய வேண்டும் என்கிற உறுதி அவருக்குள் இருந்தது. கூடு விட்டுக் கூடு பாய்வது போல் பாத்திரமாக மாறும் கலை மெல்ல மெல்ல அவருக்கு வசப்பட ஆரம்பித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன்டன் செகாவ், பெர்டோல்ட் பெர்க்ட் நாடகங்களில் எல்லாம் நடித்தார். 1976ல் ‘சிறந்த நாடக நடிகை’க்கான ‘டோனி விருதை’யும் பெற்றார். இது போல மேலும் சில விருதுகளும் நாடகத்தில் நடித்ததற்காக அவருக்குக் கிடைத்தன.

ஸ்ட்ரீப் நடித்த முதல் படம், ‘ஜூலியா.’  ஒருவழியாக 1977ல் வெளியானது. மிகச் சிறிய பாத்திரம். ஆனாலும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருந்தார். நியூ யார்க்கில் தன் காதலன் கேஸேலோடு தங்கிக்கொண்டே வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார். கேஸேலுக்கு எலும்பு கேன்ஸர். உடம்பு படுத்தி எடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கேஸேல் ஒரு படத்தில் நடிக்க வேண்டிய சூழல். ‘தி டீர் ஹன்ட்டர்’ என்பது படத்தின் பெயர். அந்தப் படத்தில் நடிக்க ஸ்ட்ரீப்புக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காரணம், அவர் சிறந்த நடிகை என்பதற்காக அல்ல; அதில் கேஸேல் நடிக்கிறாரே! அதற்காக.

பிறகு, ‘ஹோலோகாஸ்ட்’ என்கிற ஒரு சிறிய தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு. பிடிக்கவே இல்லையென்றாலும் நடித்தே ஆகவேண்டிய சூழல். காரணம் பணம். அது ஸ்ட்ரிப்புக்கும் கேஸேலுக்கும் வாழ்வாதாரத்துக்கு மிகவும் தேவையாக இருந்தது.

ஒரே இடத்தில் தங்கியிருந்தால், தேங்கிப் போய்விடுவோம் என்று நினைத்தார் ஸ்ட்ரீப். கேஸேலை தனியாக விட்டுவிட்டு, ஆஸ்திரியா, ஜெர்மனிக்கெல்லாம் நடிப்பு வாய்ப்புத் தேடிப் போனார். பிரமாதமாக ஒன்றும் அமையவில்லை. திரும்பி வந்தபோது கவலைக்கிடமான நிலையில் இருந்தார் கேஸேல். 1978, மார்ச் 12ம் தேதி கேஸேல் மறைந்தார். அவர் மரணத்தைத் தழுவும் வரைக்கும், கூடவே இருந்து ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வது போலப் பார்த்துக்கொண்டார் ஸ்ட்ரீப்.

கேஸேல் இறந்த பிறகு, ஸ்ட்ரீப் தன் கவனம் முழுவதையும் நடிப்பில் திருப்பினார். ‘ஹோலோகாஸ்ட்’ அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. அதில் நடித்ததற்காக சில விருதுகளும் அவரைத் தேடி வந்தன. அவற்றுள் ஒன்று, பிரைம் டைம் எம்மி விருது. அதே சமயம், ‘தி டீர் ஹன்ட்டர்’ ரிலீஸானது. அதில் சிறப்பாக நடித்திருந்ததற்காக, ஸ்ட்ரீப்பின் பெயர், சிறந்த துணை நடிகை பரிசுக்காக ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதற்குப் பிறகும்கூட வாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை. துணைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புத்தான் ஸ்ட்ரீப்புக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்படித்தான் ‘மன்ஹாட்டன்’ படத்தில் வுட்டி ஆலனோடு சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இயக்குநர், ஸ்ட்ரீப்பிடம் ‘நீங்களாக எதுவும் செய்யக்கூடாது’ என்றார். சொல்லிக் கொடுக்கிற வசனத்தைத் தாண்டி ஒரு துணையெழுத்துக்கூட வாயிலிருந்து வரக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். பல்லைக் கடித்துக்கொண்டு நடித்தார் ஸ்ட்ரீப்.

‘க்ராமர் வெஸர்ஸ் க்ராமர்’ (Kramer Vs Kramer) படத்திலும் அவருக்குத் துணை நடிகை வேடம்தான். ஆனால், அங்கே முழுச் சுதந்திரம் கிடைத்தது. அவருக்காக ஸ்கிரிப்டையே மாற்றி எழுதினார் இயக்குநர். ஒரு சராசரிப் பெண்மணி கதாபாத்திரம். அந்தப் பெண் வீட்டில் எப்படி இருப்பார், என்ன செய்வார், எப்படியெல்லாம் மற்றவர்களோடு நடந்து கொள்வார் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடிவு செய்தார் ஸ்ட்ரீப். காரணம் படிப்பும் நடிப்பும் அவரை வீட்டிலிருந்து தள்ளியே வைத்திருந்தன. அம்மாவுடன் வீட்டிலேயே நாள் கணக்கில் செலவழித்தார். அம்மா எப்படி வீட்டு வேலைகளைச் செய்கிறார், எல்லோருடனும் எப்படியெல்லாம் பழகுகிறார் என்று கவனித்தார். சிலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அம்மாவில் ஆழ்ந்து போனார். கற்றுக் கொண்டதை தன் நடிப்பில் கொண்டு வந்தார் ஸ்ட்ரீப். அவருடைய உழைப்புக்குப் பலன்… சிறந்த துணை நடிகைக்கான பல விருதுகள்… அவற்றில் கோல்டன் க்ளோப் அவார்டும், ஆஸ்கர் விருதும் அடக்கம்.

Image

அதற்குப் பிறகு, வாழ்க்கை முழுக்க வேகம்தான். ‘பிரெஞ்ச் லெப்டினெண்ட்ஸ் வுமன்’ படத்தில் பிரதானமான பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்த ஒன்று மட்டுமல்ல… அன்றிலிருந்து இன்றுவரை அவர் நடித்ததெல்லாமே பிரதான கதாபாத்திரங்கள்தான். பார்ப்பவர்களை பிரமிக்க வைத்த பாத்திரங்கள். தேர்ந்தெடுத்து, கதை கேட்டு, அதை உள்வாங்கி அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்திய பாத்திரங்கள். ‘என்ன பிரமாதமான நடிப்புப்பா!’ என்று ‘அட!’ போட வைத்த அற்புதங்கள் அவை!

1978ல் டன் கம்மர் என்கிற சிற்பியைத் திருமணம் செய்து கொண்டார். நான்கு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் இருவர் அம்மாவைப் போலவே நடிகைகள். ஒருவர் இசையமைப்பாளர்.

மதம் தொடர்பான பல பாத்திரங்களில் நடித்திருந்தார் ஸ்ட்ரீப். அது தொடர்பான ஒரு கேள்விக்கு இப்படி பதிலும் சொல்லியிருந்தார்… ‘‘நான் எந்த மதக் கொள்கையையும் பின்பற்றுபவள் அல்ல. நான் எந்த சர்ச்சையோ, கோயிலையோ, ஆசிரமத்தையோ சார்ந்தவளும் அல்ல. நான் எப்போதும் நம்பிக்கையில் ஆர்வம் வைத்திருக்கிறேன். ஏனென்றால், மதங்களின் மொத்தக் கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பது அமைதி. அதைத் தருவது நம்பிக்கை’’.

அறுபதைத் தாண்டிய வயதில் இன்னும் வெற்றிப் படிகளில் ஏறிக்கொண்டே இருக்கிறார் ஸ்ட்ரீப். அவரைப் பொறுத்தவரை வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை. 2013 டிசம்பரில் வெளி வர இருக்கும் ‘ஆகஸ்ட்: ஓசேஜ் கவுண்டி’ படத்திலும் நடித்திருக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என்று ஆவலோடு ஒரு சிறுமியைப் போலக் காத்திருக்கிறார். கடைசியாக 2012ல் வெளி வந்த ‘ஹோப் ஸ்ப்ரிங்ஸ்’ படத்தில் நடித்ததற்காக ஒரு விருதையும் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில், “விருதுகள், திரைப்படங்களில் நான் பார்த்த வேலைக்கு அங்கீகாரத்தையும் பாராட்டையும் தருபவையாக இருக்கின்றன. அது எனக்குப் பரவசத்தைத் தருகிறது. உலகத்தின் உயரமான இடத்தில் நான் இருப்பதாக என்னை உணரச் செய்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரைப் போலவே, உலகெங்கும் இருக்கும் எத்தனையோ சினிமா விமர்சகர்களும் “இவங்க இன்னும் எத்தனை விருது வாங்குவாங்கப்பா?“ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை மார்கரெட் தாட்சரோ, சாதாரண குடும்பப் பெண்மணியோ அவர்கள் பேசுவதைப் போலவே பேசுவதும், அவர்களைப் போலவே ஸ்ட்ரீப் மாறுவதும்தான். இது எப்படி சாத்தியம்? இந்தக் கேள்விக்கு அவர் சொல்லும் பதில்… ‘‘நான் கவனிக்கிறேன்.’’  

– பாலு சத்யா 

Meryl Streep
Born June 22, 1949 (age 64)[1]
SummitNew Jersey, U.S.
Alma mater Vassar College
Yale School of Drama
Occupation Actress
Years active 1971–present
Title Doctor of Fine Arts (honorary) of Princeton University
Spouse(s) Don Gummer
(1978–present)
Partner(s) John Cazale
(1976–1978, his death)
Children Henry Wolfe Gummer
Mamie Gummer
Grace Gummer
Louisa Gummer

திரைவானின் நட்சத்திரங்கள்! – 5

ஹாலிவுட் ரொம்ப உயரம்!

Image

வெற்றியாளர்களை நினைவுகூர்வது அவசியம். அதைவிட தோல்வி அடைந்தவர்களின் வாழ்க்கையை அலசுவதும் ஆராய்வதும் மிக மிக அவசியம். அதிலிருந்துதான் எங்கே தவறு, எப்படிச் சரி செய்வது, தடைகளை எப்படித் தாண்டுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியும். நடிகை பெக் என்ட்விஸ்லேயின் (Peg Entwistle) வாழ்க்கை, திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமே பாடம்!

‘ஹாலிவுட்’ என்றதும் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது எது? அங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஸ்டூடியோக்களோ, பிரபல நடிகர்களோ, நடிகைகளோ, இயக்குநர்களோ அல்ல. லாஸ் ஏஞ்சல்ஸில், மவுன்ட் லீ மலையின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் ‘HOLLYWOOD’ என்ற எழுத்துகள்தான். அந்த மலையும் எழுத்துகளும் ஹாலிவுட் என்கிற பிரம்மாண்டத்தின், கனவுத் தொழிற்சாலையின் அடையாளம்! அந்த மலையின் மீது கஷ்டப்பட்டு ஏறி, அதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் பெக் என்ட்விஸ்லே.

Image

1908, பிப்ரவரி 5ம் தேதி இங்கிலாந்து, வேல்ஸில் இருக்கும் போர்ட் டால்பாட் (Port Talbot) நகரில் பிறந்தார் பெக். அப்பா ராபர்ட் சைம்ஸ் என்ட்விஸ்லே நாடக நடிகர். அம்மா, எமிலி என்கிற மில்லிசென்ட் லில்லியன் என்ட்விஸ்லே. சிறு வயதிலிருந்தே பெக் என்ட்விஸ்லேவுக்கு ஒரு கனவு இருந்தது. நடிகை ஆகவேண்டும் என்கிற கனவு. திரையில் தோன்றி, ஆடவும் பாடவும் வேண்டும், பாராட்டுகளையும் கைதட்டல்களையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்ற கனவு. அது வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவர் கூடவே வந்தது. பெக்கின் ஆரம்ப நாட்கள் லண்டனில் இருக்கும் வெஸ்ட் கென்ஸிங்டன்னில் கழிந்தது.

சின்னஞ்சிறு பெண்ணாக பெக் இருக்கும் போதே அம்மா எமிலி இறந்து போனார். அது பெக் சந்தித்த முதல் இழப்பு, பேரிழப்பு. அம்மாவின் அரவணைப்பில்லாமல் வளரும் குழந்தை சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும் எதிர்கொண்டார் பெக். அப்பா ராபர்ட் எஸ். என்ட்விஸ்லே, பிழைப்புக்காக பெக்கை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குக் கிளம்பினார். சின்சினாட்டி, ஓஹியோ, நியூ யார்க் என்று எங்கெங்கேயோ வாழ்ந்தார்கள். ராபர்ட் அமெரிக்காவில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. நாடகங்களுக்குப் பிரபலமாக இருந்த பிராட்வே பகுதியில் சில நாடகங்களில் ராபர்ட் நடிக்க, அந்த வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

டிசம்பர் 1922. பெக்கின் வாழ்க்கையில் மற்றொரு இடி விழுந்தது. நியூ யார்க்கில் இருக்கும் பார்க் அவென்யூவுக்கு அருகில் நடந்த கார் விபத்தில் ராபர்ட் என்ட்விஸ்லே இறந்து போனார். பெக்கின் சித்தப்பா ஹெரால்டு, குழந்தைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனார். அவர், அப்போது பிராட்வேயின் பிரபல நாடக நடிகர் வால்டர் ஹேம்டனிடம் மேனேஜராக இருந்தார். பெக்கின் வாழ்க்கையில் கலை உலகம் மெல்ல அறிமுகமானது.

Image

1925. பெக், பாஸ்டனில் இருந்த ஒரு நாடகக்குழுவில் சேர்ந்தார். ‘ஹென்றி ஜுவட்’ (Henry Jewett) என்ற அந்தக் குழு அமெரிக்க அளவில் பிரபலமாக இருந்த நேரம் அது. பெக், தீவிரமாக நடிப்புக் கற்றுக் கொண்டார். மேடையில் தோன்றினார், சின்னச் சின்ன வேடங்களில். வால்டர் ஹேம்டன், பெக்கின் திறமையைப் பார்த்து தான் நடிக்கும் ‘ஹேம்லட்’ நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அரசருக்கு விஷத்தைக் கொண்டு வந்து தரும் கதாபாத்திரம்!

***

அமெரிக்காவில் அப்போதெல்லாம் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நாடக நடிகர்களும் புகழ் பெற்றிருந்தார்கள். பிராட்வேயில் இருந்த சிறந்த நாடக நடிகர், நடிகைகளை ஹாலிவுட் அள்ளிக் கொண்டு போனது. அப்படி ஒரு வாய்ப்பு தனக்கு வராதா என்று காத்திருந்தார் பெக்.

நியூ யார்க்கில் அப்போது பிரபலமாக இருந்த ‘தியேட்டர் கில்ட்’ நாடக நிறுவனம் பெக்கை வேலைக்குச் சேர்த்துக் கொண்டது. அங்கே சேர்ந்த பிறகு, ‘மேன் ஃப்ரம் டொரண்டோ’ நாடகத்தில் ‘மார்த்தா’ என்ற கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார். 28 முறை அரங்கேறியது அந்த நாடகம். 1932 வரை, ‘தியேட்டர் கில்ட்’ தயாரித்த 10 நாடகங்களில் நடித்தார். ‘டாமி’ என்கிற நாடகம்தான் அவருக்குக் கொஞ்சம் பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. 238 முறை மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தின் மூலம்தான் வெளி உலகுக்குக் கொஞ்சம் அறிமுகமானார் பெக். பத்திரிகைகள் அவரைப் பற்றியும் சிறு குறிப்பு வரைந்தன.

Image

‘தியேட்டர் கில்ட்’ குழுவினர் நடிகர்களை அடிக்கடி எங்கேயாவது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். வாரா வாரம் நடிகர்களின் கதாபாத்திரங்களை மாற்றுவார்கள். அப்பாவி, நகைச்சுவை நடிகை, குணச்சித்திர வேடம்… என்று தான் ஏற்ற எல்லா பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் பெக். நாடகங்களில் நடித்தாலும் ‘ஹாலிவுட் கனவு’ அவரை விடாமல் துரத்தியபடி இருந்தது.

1927ல் ராபர்ட் கெய்த் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு நடிகர். என்ன… மேடையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் நடித்தவர். அது தெரிந்தபோது அதிர்ந்து போனார் பெக். ராபர்ட் கெய்த்துக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகனும் இருந்தான். இதை மறைத்துவிட்டார் கெய்த். விஷயம் கேள்விப்பட்டு துடித்துப் போனார் பெக். 1929ல் கெய்த்திடம் இருந்து விவாகரத்துப் பெற்றார். முதல் மனைவி இருப்பதை மறைப்பது சட்டப்படி குற்றம். முதல் தாரம், வழக்குப் போட்டால் கெய்த் சிறைக்குப் போக வேண்டியதுதான். பெக்கின் நல்ல மனம், கெய்த்தைக் காப்பாற்றியது. தன்னிடம் இருந்த பணத்தை முதல் தாரத்துக்கு ஜீவனாம்சமாகக் கொடுத்து, வழக்கு நடக்காமல் காப்பாற்றினார்.

1932ன் முற்பகுதி. பிராட்வேயில் பெக் நடித்த நாடகம் ‘ஆலிஸ் சிட் பை தி ஃபயர்’ அரங்கேறியது. அந்த நாடகத்தை எழுதியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜே.எம்.பேரி. நாடகத்தில் நடித்த ‘லாரட் டெய்லர்’ பிராட்வேயில் புகழ்பெற்ற நடிகை. அவருடைய குடிப்பழக்கத்தால், இரண்டு முறை நாடகம் நின்று போனது. பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம். நாடகக்குழு நிர்வாகம், மேலும் நாடகத்தை நடத்த விருப்பமில்லாமல் நடிகர்களை வீட்டுக்கு அனுப்பியது. அதற்காக பெக்குக்கும் மற்றவர்களுக்கும் தரப்பட்டது ஒரு வாரச் சம்பளம்!

***

அது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை (Great Depression) நிலவிய காலம். நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதே அரிதாக இருந்தது. நாடகங்கள் தொடர்ந்து நடந்தால்தானே வாய்ப்புக் கிடைக்கும்? பிராட்வேயில் அதற்கு மேலும் காலம் கழிக்க முடியாது என்று தெரிந்து போனது. பெக், லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போக முடிவு செய்தார். பக்கத்திலேயே ஹாலிவுட். நடிக்க வாய்ப்புக் கிடைக்காமலா போகும்?

Image

1932, ஏப்ரல் மாதம் ஹாலிவுட்டுக்கு வந்தார் பெக். அங்கே பெண்களுக்காகவே இருக்கும் ‘ஹாலிவுட் ஸ்டூடியோ கிளப்’பில் அறை எடுத்துத் தங்கினார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்  கேட்டு அலைந்தார். அறை வாடகையே தாறு மாறாக இருந்தது. வேளா வேளைக்கு வயிறு பசிக்காமல் விடுகிறதா? அதற்கு வேறு தீனி போட்டாக வேண்டுமே! பெக் என்ட்விஸ்லேவுக்குத் தெரிந்த ஒரே வேலை நடிப்பு. வாடகை கொடுக்க முடியாமல்,  சித்தப்பாவின் துணையுடன் ‘பீச்வுட் கேன்யான் டிரைவ்’ என்ற ஓட்டலுக்கு இடம் பெயர்ந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புத் தேடி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார்.

பெக்குக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமாவில் அல்ல. நாடகத்தில். மறுபடியும் நாடகமா? அயர்ந்து போனார். ஆனால், அவருக்கு அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ‘தி மேட் ஹோப்ஸ்’ என்ற நாடகம் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் மேடை ஏறியது. பத்திரிகையில் விமர்சனங்கள் எல்லாம் நல்லவிதமாக வந்தாலும் 12 நாட்களுக்கு மேல் ஓடவில்லை. மறுபடி பிரச்னை. பணத் தேவை. பெக் இறுக மூடப்பட்ட ஹாலிவுட் கதவுகளை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்கிற உத்வேகத்தோடு மோதிப் பார்த்தார்.

பலன் கிடைத்தது. சினிமாவில் நடிக்க முதல் வாய்ப்பு! பெக்கின் கனவு நிறைவேறுவதற்கான முதல் படி. துள்ளிக் குதித்தார். தாரை தாரையாக கண்ணீர் வந்தது. அது ‘தேர்ட்டீன் வுமன்’ என்கிற மர்மப் படம். ‘ரேடியோ பிக்சர்ஸ்’ (RKO) என்ற தயாரிப்பு நிறுவனம், பெக்கை அந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது. மிகச் சிறிய கதாபாத்திரம்தான். ஆனால், உற்சாகமாக நடித்தார். அந்தப் படம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பினார். இனிமேல் தடையே இல்லாமல் மளமளவென்று வெற்றிப் படிகளில் ஏறிவிடலாம் என்றுமனக் கோட்டை கட்டினார். அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பெட்டிக்குள் முடங்கியது.

Image

படத்துக்கான அடிப்படை வேலைகள் முடிந்தன. திரையுலக வழக்கப்படி ‘தேர்ட்டீன் வுமன்’ சிறப்புக் காட்சி முக்கியமானவர்களுக்காக திரையிடப்பட்டது. அதைப் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனம் தயாரிப்பாளர்களை முகம் சுளிக்க வைத்தது. ‘என்னாங்க… இப்பிடி எடுத்திருக்கீங்க?’ என்ற கேள்வியால் தயாரிப்பாளர்கள் திணறிப் போனார்கள். திரைப்படத்தை திரும்ப எடிட் செய்தார்கள், இசைக் கோர்ப்பை லேசாக மாற்றினார்கள். ஆனால் திருப்தியாக இல்லை. ‘தேர்ட்டீன் வுமன்’ திரைப்படம் ரிலீஸாவது தள்ளிப் போனது. நொறுங்கிப் போனார் பெக். எத்தனை வருடப் போராட்டத்துக்குப் பின் வந்த முதல் வாய்ப்பு! இனிமேல் அவ்வளவுதானா? எல்லாம் முடிந்துவிட்டதா?!

1932, செப்டம்பர் 16. இரவு சாப்பாடு முடிந்தது. பெக், தன் சித்தப்பாவிடம், ‘‘அப்பிடியே பீச்வுட் பக்கம் ஒரு வாக் போயிட்டு, அங்கே இருக்குற மருந்துக் கடையில என் ஃபிரெண்ட்ஸையும் பார்த்துட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பாதி தூரம் போனதும் அவர் பாதை மாறியது. ‘HOLLYWOOD’ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் மவுன்ட் லீ மலையில் ஏற ஆரம்பித்தார். அந்த எழுத்துகளுக்கு அருகே வந்து நின்றார். ஒவ்வொன்றும் 45 அடி உயரம், 30 அடி அகலம் கொண்டவை. தன் மேல் கோட்டை அழகாக மடித்து கீழே வைத்தார். பக்கத்தில் தன் பர்ஸையும் வைத்தார். அந்த போர்டை பராமரிக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஏணியில் ஏறி ‘H’ என்ற எழுத்தின் உச்சிக்குப் போனார். காற்று சில்லென்று அடித்தது. அதிலிருந்து தரையைப் பார்த்தார். குதித்தார். தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு வயது 24.

இது நடந்து இரண்டு நாள் கழித்து, ஹாலிவுட் லேண்டில்  பெண்ணின் பிணம் ஒன்று கிடப்பதாக ஒரு பெண்மணி போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ் வந்தது. பெக் விட்டுப் போன கோட்டும் பர்ஸும் கிடைத்தன. நேர்த்தியாக உடை அணிந்த, நீலக் கண்களை உடைய, அழகான கூந்தலுடன் கூடிய பெக்கின் பிணம் கிடைத்தது. பெக்கின் சித்தப்பா கதறியபடி அடையாளம் காட்டினார். பிரேத பரிசோதனையில் இடுப்பெலும்பு முற்றிலுமாக நொறுங்கிப் போய் பெக் மரணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image

பெக், இறப்பதற்கு முன்பு தன் பர்ஸில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதை அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்தன. ‘ஒரு கோழையாக இருப்பதை நினைத்து நான் பயப்படுகிறேன். எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதை நான் வெகு காலத்துக்கு முன்பே செய்திருந்தால், நிறைய வலிகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்’.

நிறைய படங்களில் நடிக்கவில்லை, பெரும் புகழும் பணமும் சம்பாதிக்கவில்லை. ஒரே ஒரு படம்தான். ஆனால், இன்றும் ஹாலிவுட்டில் மறக்க முடியாத ஒரு பெயராக இருப்பது ‘பெக் என்ட்விஸ்லே’. எவ்வளவோ போராடிப் பார்த்தவர் இன்னும் சில காலம் காத்திருந்திருக்கலாம் என்பதுதான் காலம் அவருக்கு சொன்ன தீர்ப்பு.

அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, ‘தி பீவர்லி ஹில்ஸ் ப்ளேஹவுஸ்’ நிறுவனத்திடம் இருந்து பெக்கின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை சித்தப்பா ஹெரால்ட் வாங்கிப் பிரித்தார்.

‘மிஸ் பெக் என்ட்விஸ்லே அறிவது. நாங்கள் அடுத்து ஒரு திரைப்படம் தயாரிக்க இருக்கிறோம். அதில் நடிப்பதற்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். கதா பாத்திரம் என்னவென்றால், மன உளைச்சலால் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்…’

இதை என்னவென்று சொல்வது? விதியா? எப்படி இருந்தாலும் பெக் இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்திருக்கலாம்.

– பாலு சத்யா  

Peg Entwistle

Born – Millicent Lilian Entwistle, 5 February 1908, Port TalbotWales

Died – 16 September 1932 (aged 24), HollywoodCalifornia, U.S.

Cause of death – Suicide

Resting place – Oak Hill Cemetery

Nationality – English

Occupation – Actress

Years active – 1925–1932

Spouse(s) – Robert Keith (m. 1927–1929)

திரைவானின் நட்சத்திரங்கள் – 4

Image

வாழ்க்கை சிலரை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும். வாய்ப்புகளை வாரி வழங்கும். கிடுகிடுவென்று வெற்றிப் பாதையில் ஏறி மேலே மேலே போய்விடுவார்கள்.

பலருக்கோ கரடு முரடான மலைப்பாதையாக இருக்கும். பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றி என்கிற கனியைப் பறிக்க முடியும்.

இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் மார்த்தா மெஸ்ஸாரோஸ் (Marta Meszaros). ஹங்கேரியின் மிக முக்கியமான பெண் இயக்குநர்… ஹங்கேரிய சினிமா வரலாற்றில் முதல் பெண் இயக்குநர். இந்த உயரத்தை அடைய அவர் பட்ட சிரமங்கள் ஒரு தனி நூலாக எழுதப்பட வேண்டியவை.

ஹங்கேரியில் இருக்கும் புத்தாபெஸ்டில் பிறந்தார் மார்த்தா. அப்பா ஒரு சிற்பி. சரியான வருமானம் இல்லை. வறுமை தீர வேண்டுமே? 1935ல் ரஷ்யாவுக்கு இடம் பெயர்ந்தது மார்த்தாவின் குடும்பம்.

மார்த்தாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவருடைய அம்மா இறந்து போனார். சோவியத் ரஷ்யாவின் அதிபராக ஸ்டாலின் இருந்த காலம் அது. அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் எதிராக இருந்தவர்கள் களையெடுக்கப்பட்ட நேரம். மார்த்தாவின் அப்பா, லாஸ்ஸியோ மெஸ்ஸாரோஸ் (Laszio Meszaros) அந்த லிஸ்டில் இருந்தார். கைது செய்யப்பட்டு, கிர்கிஸ்தான் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிறையில் இரண்டு ஆண்டுகள் இருந்த அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இறந்த தகவல்கூட பல ஆண்டுகள் கழிந்த பிறகுதான் மார்த்தாவுக்குத் தெரியும்.

மார்த்தா உறவினர் ஒருவரால் வளர்க்கப்பட்டார்.

மாஸ்கோவில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஹங்கேரிக்குத் திரும்பினார் மார்த்தா. ஆனாலும் அவர் நினைத்ததைப் படிக்க முடியாத அளவுக்குப் பல கட்டுப்பாடுகள். அப்பா ஒரு கலைஞர் என்பதாலோ என்னவோ அவருக்கு நாடகத்திலும் சினிமாவிலும் அப்படி ஓர் ஈடுபாடு இருந்தது. படிப்பதற்காக மறுபடியும் மாஸ்கோவுக்கே போனார் மார்த்தா.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் மாஸ்கோவில் இருந்த ஒரு திரைப்படப் பள்ளியில் (The Russian State Institute of Cinematography) சேர்ந்தார். ‘‘என்னால் ஹங்கேரியில் இருக்கும் திரைப்படப் பள்ளியில் சேர முடியவில்லை. அங்கே பெண்கள் இயக்குநர் படிப்புப் படிக்க முடியாது. எனக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் மாஸ்கோவில் இருந்த திரைப்படப் பள்ளியில் சேர்ந்தேன். 50களில் ரஷ்யாவில் நிறைய படங்கள் தயாரிக்கப்படவில்லை. வெளிவந்த ஓரிரு படங்களும் அரசு சார்ந்த படங்களாக இருந்தன. நான் சேர்ந்த பள்ளியில் மிக மிகத் திறமையான, சுவாரஸ்யமான ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால், பிராக்டிக்கலாக எதுவும் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கான பண வசதி பள்ளியில் இல்லை. பண்பாட்டையும் இலக்கியத்தையும் கற்றுக் கொள்ளவும், நிறைய சினிமா பார்க்கவும் ஏற்ற இடம். எப்போதாவது புகைப்படம் எடுப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். அவ்வளவுதான்’’ என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மார்த்தா.

Image

1956ல் ஹங்கேரிக்குத் திரும்பினார். அரசுக்கு எதிராக புரட்சி நடந்து கொண்டிருந்த நேரம். ஆவணப்படங்கள் எடுக்கலாம் என்று நினைத்தார். எதைப் பற்றி எடுப்பது என்கிற கேள்வி வந்த போது வறுமையில் வாடும் மக்களைப் பற்றி எடுக்கலாம் என முடிவு செய்தார். ஆனால், சென்சார் அதிகாரிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது. ‘‘கம்யூனிச ஆட்சியில் ஏழைகளா? சான்ஸே இல்லை’’ என்று மறுத்தார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு 4 குறும்படங்களை இயக்கினார் மார்த்தா.

அப்போதெல்லாம் கேமராவைத் தூக்கிக் கொண்டு படமெடுக்க இஷ்டத்துக்கு வெளியே போக முடியாது. ஸ்டுடியோவில்தான் படம் எடுக்க வேண்டும். அதற்காகவே தனியாக ஸ்டுடியோக்கள் இயங்கின. ‘புத்தாபெஸ்ட் நியூஸ் ரீல் ஸ்டுடியோ’வில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே இருந்தபோதுதான் தன்னுடைய முதல் நான்கு ஆவணப்படங்களை எடுத்தார். பிறகு, ரோமேனியாவில் இருக்கும் ‘அலெக்ஸாண்ட்ரு சாஹியா’ (Alexandru Sahia) ஸ்டுடியோவில் இரண்டாண்டுகள் வேலை பார்த்தார். ஏனோ மனம் ஒட்டாமல் ஹங்கேரிக்கே திரும்பினார். 1968 வரை அங்கே இருந்தவர் பல குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கினார். பிறகு ‘மாஃபிலிம் 5’ என்ற நிறுவனத்துடன் இணைந்தார். தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்க அவர் 1968 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

‘‘மற்ற நாடுகளைப் போல ஹங்கேரி அவ்வளவு மோசமானதில்லை. உதாரணமாக போலந்தில் சென்சார் மிகக் கடுமையாக இருக்கும். ஹங்கேரியில் அப்படி இல்லை’’ என்று ஒரு பேட்டியில் மார்த்தா குறிப்பிட்டிருந்தாலும் தன் சொந்த நாட்டில் வேறு விதமான பிரச்னைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஸ்டுடியோவை அரசே நடத்தி வந்தது. ஒரு திரைப்படத்துக்கான கதை, வசனத்தை எழுதி முடித்தவுடன் அதை ஸ்டுடியோவுக்கு அனுப்ப வேண்டும். அங்கே அதைப் பரிசீலிப்பதற்காகவே இருக்கும் குழு முழு ஸ்க்ரிப்டை அக்குவேறு, ஆணிவேராக அலசும். அந்தக் குழுவுக்கு கதையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றினால் குறிப்பிடுவார்கள். உரிய மாற்றங்களைச் செய்த பிறகு ஸ்கிரிப்டை ஸ்டுடியோ இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். அவர்தான் இந்தக் கதையைப் படமாக எடுக்கலாமா, அதற்கு எவ்வளவு பணத்தை ஒதுக்கலாம் என்பதையெல்லாம் தீர்மானிப்பார். அத்தோடு விஷயம் முடிந்துவிடுவதில்லை.

அதற்குப் பிறகு ஸ்கிரிப்டை ஸ்டுடியோ இயக்குநர், பண்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். அங்கே மறுபடியும் ஒரு குழு, வரி வரியாக திரைக்கதை, வசனத்தைப் படிக்கும். பல நேரங்களில் பல காட்சிகள் உருவப்படும். சில நேரங்களில் சில வசனங்கள் நீக்கப்படும். ‘‘பண்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் ஸ்க்ரிப்டுகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் மார்த்தா. இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு, படத்தைத் தயாரிக்க அனுமதி கிடைக்கும்.

Image

படம் தயாரித்த பிறகு உடனே ரிலீஸ் செய்துவிட முடியாது. ஸ்டுடியோவில் இருப்பவர்கள், திரைப்படத்தை பார்வையிடுவதற்காகவே இருக்கும் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகளுக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காட்ட வேண்டும். அவர்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அதை சரி செய்ய வேண்டும்.

Image

இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் ஹங்கேரி திரைத்துறையில் கால் பதித்த மார்த்தா மெஸ்ஸாரோஸ் செய்த சாதனை அளப்பரியது. 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், பல குறும்படங்களை இயக்கினார். பல விருதுகளை பெற்றன அவருடைய படங்கள். இத்தனைக்கும் இயக்கத்துக்காக அவர் கோடிக்கணக்கிலோ, ஏன்… லட்சக்கணக்கிலோ கூட சம்பளம் பெறவில்லை. எல்லாமே சொற்பத் தொகை. காரணம், சம்பளத்தை வழங்கியது அரசு. அவருடைய படம் நூறு நாடுகளில் விநியோகஸ்தர்களால் திரையிடப்படும். வருமானம் அரசுக்குக் கிடைக்கும். ஆனால் அவருக்கு ஒரு பைசா கிடைக்காது.

மார்த்தாவும் பல இயக்குநர்களும் இந்தப் பிரச்னைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இறங்கி வந்த அரசு, ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏதாவது ஒரு திரைப்படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பானால், இயக்குநருக்கு தொலைகாட்சி நிலையம் கணிசமான தொகையை வழங்க வேண்டும். இந்தத் திட்டம்கூட ஹங்கேரியில் மட்டும்தான் செல்லுபடியாகும். பக்கத்தில் இருக்கும் போலந்து நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் ஒரு பைசாகூட இயக்குநருக்குக் கிடையாது. இந்த மாதிரியான சூழலில்தான் பல சிறந்த படங்களை இயக்கினார் மார்த்தா.

மார்த்தாவின் படங்கள் அவர் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களைப் பல வழிகளில் பேசின. ஏழ்மை, குழந்தைகள், பெண்கள் என பலரை முன்னிறுத்தி அந்த அனுபவங்கள் படைப்புகளாயின. சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்தது, ஆதரவற்ற வாழ்க்கை, புரட்சிக்குப் பின்பான ஹங்கேரி சூழ்நிலை எல்லாமே அவர் படங்களில் பதிவு செய்யப்பட்டன. கிழக்கு ஐரோப்பா மறந்துவிட்ட பல யதார்த்தங்களைப் படம் பிடித்தன. பெண்கள் நிலை, கிராமத்துக்கும் நகரத்துக்கும் நடுவே நிலவும் பண்பாட்டு பிரச்னை, மதுப் பிரச்னை, தலைமுறை இடைவெளி, முதலாளி-தொழிலாளி சிக்கல்கள், குழந்தைகள் நிலை என பல களங்களைக் கொண்டவை அவர் திரைப்படங்கள்.

‘டயரி ஃபார் மை மதர் அண்ட் ஃபாதர்’ (Diary for my Mother and Father) அவர் இயக்கத்தில் 1990ல் வெளியான திரைப்படம். ஒரு மாணவியின் பார்வையில் படம் விரிகிறது. அந்த மாணவி, கம்யூனிச சூழலில் வளர்ந்தவள். ஹங்கேரிக்கு வந்தால் அது வேறு விதமாக இருக்கிறது. மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வீட்டிலோ அவளுடைய சகோதரியே அவளை சேர்க்க மறுக்கிறாள். மாணவி, திருமணமான ஒருவனைக் காதலிக்க, அவனோ போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவுகிறான். கடைசியில் வேலைநிறுத்தத்தில் போராடும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறான்.

அரசு, அதற்கு எதிரான கிளர்ச்சி இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படம் மார்த்தாவின் உண்மை வாழ்க்கையின் அடையாளம் என்றே சொல்லலாம்.

Image

மார்த்தாவின் குடும்ப வாழ்க்கை மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலையாகத்தான் இருந்தது. 1957ல் லாஸ்லோ கார்டா (Laszlo Karda) என்ற இயக்குநரை மணந்தார். இரண்டே வருடங்கள்… இருவரும் பிரிந்தார்கள். 1960ல் மிக்லோ ஜேன்ஸ்கோ (Miklo Jansco) என்ற இயக்குநரை மணந்தார். 1973ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு மிக்லோ ஜேன்ஸ்கோ ஜூனியர், நைக்கா ஜேன்ஸ்கோ (Nyika Jansco) என இரண்டு பிள்ளைகளும், காஸியா ஜேன்ஸ்கோ (Kasia Jansco) என்ற மகளும் பிறந்தார்கள். இரு பிள்ளைகளுமே ஒளிப்பதிவாளர்கள். மார்த்தாவின் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். மார்த்தா, போலந்து நடிகர் ஜேன் நோவிக்கியை (Jan Nowicki) மணந்தார். 2008ல் அந்த மணவாழ்க்கை முறிந்தது.

கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு தேசத்தில் முதல் பெண் இயக்குநர் என்கிற முத்திரை பதித்தவர் மார்த்தா. கடந்த 2012ம் ஆண்டு வரை அவர் இயக்கிய திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. இன்னமும் திரைப்படத்தின் மேல் தீராத காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சமூகத்தையும் மனிதர்களையும் அந்த அளவுக்கு நேசித்ததுதான் அவர் திரைப்படத்துறையில் ஈடுபடக் காரணம். ஒரு பேட்டியில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்… ‘‘எனக்கு வாழ்க்கையைப் பிடிக்கும். வாழ்வது பிடிக்கும். இன்றும் உணர்சிகரமான தருணங்களை அனுபவிக்கிறேன். ஒரு நல்ல மனுஷியாக நான் வாழ வேண்டும் என விரும்புகிறேன். பேசுவது, படிப்பது, சண்டை போடுவது எல்லாம் எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றையும் விட மனிதர்களை எனக்குப் பிடிக்கும்’’.

– பாலு சத்யா

Márta Mészáros
Born 19 September 1931 (age 81)
BudapestHungary
Occupation Film director
Screenwriter
Years active 1954 – present