சிறுகதை

காவிரிக்கரை பெண்ணே…

புவனா ஸ்ரீதர்

ilayaraja

வருடம் 1990.  ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.  தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். நீங்க ரெண்டு பேரும் எந்திருங்க, போன வருசம் போலவே நீ கிளாஸ் லீடர், தேவி அஸிஸ்டெண்ட் லீடர் சரியா?

போச்சுடா மனசுக்குள் சொல்லிட்டு சரி மிஸ் என்றேன். வேற வழி!

காரணம் மிஸ் ஸ்கூலுக்கு வரவே மாட்டாங்க பாதி நாள் நாங்களே தான் படிச்சுக்குவோம். இப்போ நாங்க 10 வது வேற, என்ன பண்ண போறாங்களோ தெரில…

கிளாஸ் முடிஞ்சதும் நீ மட்டும் என்ன வந்து பாரு.

சரி மிஸ்.

என்னவா இருக்கும்டி தேவி மெதுவா கேட்டா. தெரிலடி. வகுப்பு முடிந்ததும் போனேன்.

மிஸ்…

ம்…..வா. என் பையன் இப்போ 12 வது போறான் அவன் கூட நான் இருக்கனும். நான் அப்பப்போ வருவேன் நீ தான் கிளாஸ் சத்தம் வராம பாத்துக்கனும். சரியா?

ம்..சரி மிஸ்.

அரசு பெண்கள் பள்ளியில் இவரும், பக்கத்து காம்பவுண்ட்ல ஆண்கள் பள்ளியில் அவர் கணவரும் ஆசிரியர்கள். யாரும் ஒன்றும் பண்ண முடியாது.

எங்க வகுப்பில் நான்கு குரூப்கள். அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.

எங்க குரூப்ல நானு, முத்துலட்சுமி, ரமா, தேவி, ரஷிதாபேகம். அஞ்சு பேரும் ஒண்ணாவே சுத்துவோம். தேவிக்கு சிம்ம குரல் கணீர்னு பாடுவா. எல்லாரும் உக்காந்து மணிக்கணக்குல அவ பாடறத கேப்போம்.

போர் அடிக்குது பாடுடி…

“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே”….

துளி சத்தம் இல்லாம அமைதியா கேப்போம்.

முத்துலட்சுமி மட்டும் கமல் பாட்டுதான் கேப்பா. கமல் பைத்தியம். பானு ரஜினி ரசிகை. முத்துவ வம்பிழுப்பதே பானுக்கு வேலை.

எதாவது கேட்டா கூட கமல் பாட்டு வரிகள்ல இருந்தே தான் பதில் சொல்லுவா. அவ எப்பவும் கிளாஸ்க்கு லேட்தான். 3 கிமீ நடந்து வருவா.

ஏன் லேட் வெளிய நில்லு.

‘பொன் மானே கோபம் ஏனோ?’

பாடாம வெளியவே நில்லு. எப்ப பாரு கமல் பாட்டா பாடிட்டு.

‘காவல் காப்பவன் கைதியா நிற்கிறேன் வா… பொன் மானே…’

சரி உள்ள வந்து தொல.

‘மங்கை உன் மனதினை கவருது, மாறன் கணை வந்து மார்ப்பினில் பாயுது, இதழில் கதை எழுதும் நேரமிது…”

சரி போய் உக்காரு.

ஏ அவ கமல் பொண்டாட்டிடி.. பானு வம்பிழுப்பா.

அவளுக்கு என்னடி நதியா மாதிரி அழகா தானே இருக்கா, நான் மட்டும் பையனா இருந்தா இவள கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன் … தேவி எப்பவும் முத்துக்குதான் சப்போர்ட் பண்ணுவா.

பானுக்கு முத்து மேல லேசா பொறாமை கூட உண்டு.

எப்படியோ படிச்சு ஒரு வழியா 10வது முடிச்சோம். ரிசல்ட் வந்தது. ரமாவும் நானும் மட்டும் 400 மதிப்பெண் மேல. மத்தவங்க பாஸ்.

நான்  பாலிடெக்னிக் சேர போறேன்டி. முத்து நீயும் வரியா?

எங்க வீட்ல படிக்க வைக்க மாட்டாங்கடி எனக்கு ஸ்ரீரங்கம் ஸ்கூல் தான் கடைசி வரை.

நீ நல்லா படி.

ம் சரிடி.

அவ இன்ஜினியரம்மாடி… பானு சத்தமா கத்த எல்லாரும் சிரிக்க, பிரிய மனமின்றி பிரிந்தோம்.

———————————————————————–

நானும் புது பிரண்ட்ஸ், புது இடம் பிசியாகிட்டேன். செமஸ்டர் லீவ்ல ஸ்கூல் போய் எல்லார் கூடவும் பேசிட்டு, முத்துவோட கமல் பாட்டு கேட்டுட்டு வருவேன்.

அடுத்த செம் லீவ்ல ஸ்கூல் போக முடியல. அவளுங்களும் 11 வது முடிந்து 12 வது வந்துடாங்க. 6 மாதம் கழித்து ஸ்கூலுக்கு போனேன். முத்து மட்டும் சோகமா இருந்தா.

என்னாச்சுடி?

ஒன்னுமில்ல… சொல்லும் போதே அழுதா.

பானுதான் சொன்னா, தினமும் ஸ்கூல் போகும் போது யாரோ ஒருத்தன் இவள பார்த்து இருக்கான். போன வாரம் ஒரு கர்சீப்ல, ‘காவிரி கரை பெண்ணே’னு ஆரம்பிச்சு லவ் லெட்டர் எழுதி முத்துக்கு கொடுத்துருக்கான். அத அவ சித்தப்பா பாத்துட்டார். கர்சீப்பை தீ வச்சு எரிச்சுட்டார். வீட்ல ஒரே பிரச்னை. அதான் அழறாடி.

இதில் இவ தப்பு ஒன்னும் இல்லயே பின்ன எதுக்கு பிரச்சனை பண்றாங்க – நான் கேட்கவும், முத்து பேச ஆரம்பிச்சா…

அதான் எனக்கும் புரியல. எப்பவும் வீட்ல ஒரே திட்டு. உறவுக்காரப் பையனுக்கே என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா பேசிக்கறாங்க. இனி ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு தோனுது… – சொல்லிட்டு திரும்ப அழுதாள்.

உனக்கு 17 வயசு தானே ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா, நீ ஒத்துக்காதடி.

என்னை யாரும் மதிக்கறதே இல்லடி அவங்க இஷ்டப்படி கல்யாண ஏற்பாடு நடக்குது. இன்னும் 2 மாசத்துல கல்யாணம்னு சொல்றாங்க.12வது கூட படிக்க மாட்டேன் போல. என் விதி அவ்ளோதான்…

தேம்பி தேம்பி அழுதவளை பரிதாபமா எல்லோரும் பார்த்தோம்.

————————————————————————–

கொஞ்ச நாள் கழித்து பானு தான் சொன்னா, முத்துக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. யாரையும் கல்யாணத்துக்கு கூப்டலடி. பாவம் எப்படி இருக்கான்னு தெரிலடி.

அவ சொல்லவும்…

யார் யாருக்கு என்ன வேஷமோ னு எங்கயோ பாட்டு சத்தம் கேட்டுச்சு.

தேர்வு, படிப்புன்னு நாள் ஓட ஆரம்பிச்சுது. 12 வது முடிச்சு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் SRC காலேஜ் சேர்ந்தாங்க. நானும் அப்பப்போ போய் எல்லாரையும் பார்த்துட்டு வருவேன். முத்து என்ன ஆனான்னு மட்டும் தெரியவே இல்ல.

நாட்கள் வருடங்களா வேகமாக ஓடிடுச்சு. கல்லூரி முடித்ததும் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆச்சு. யார் கூடவும் தொடர்பு இல்லாம போச்சு.

குடும்பம், குழந்தைகள் னு தனி உலகத்துல வாழ பழகியாச்சு. அப்பப்ப முத்து நினைவு வரும்.

————————————————————————

20 வருடம் ஓடியாச்சு. ஒரு நாள் போன் வந்தது.

நான் முத்து பேசறேன்டி.ஸ்ரீரங்கம் கோயில் வரீயா உன்ட பேசனும்.

நிஜமா கனவா?

ம்.. வரேன்டி எப்படி என் நம்பர் கிடச்சுது?

எல்லாம் நேர்ல பேசலாம் வா.

ஸ்ரீரங்கம் பெருமாள் ஒய்யாரமா படுத்துகிட்டுகூட்டத்தில் முண்டியடிச்சு வரும் பக்தர்களை பார்த்து அருள்பாலித்து கொண்டிருந்தார்.

முத்துவும் அவள மாதிரியே ஒரு பொண்ணும்…

பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். என்னென்னவோ பேசனும் நினச்சு ஒண்ணும் பேசாம ஒரு பெரிய மௌனம்.

எங்கடி போன? என்ன ஆன? எவ்ளோ நாள் உன்ன பத்தி கவல பட்டோம் தெரியுமா?

ம்… கல்யாணம் முடிந்ததும்  அவர் கூட மைசூர் போய்ட்டேன். கூட்டுக் குடும்பம். சமைக்க, மகள கவனிக்க, உறவுகாரங்கட்ட நல்ல பேர் எடுக்க போராடியே என் வாழ்க்கை ஓடிடுச்சுடி.

ம்… மேற்கொண்டு எதுவும் படிக்கலயா?

இல்லடி. இப்பவும் ஆரம்பிச்ச இடத்துலதான் நிக்கறேன். சரி விடு… இவதான் என் ஒரே பொண்ணு.

ஹலோ ஆன்ட்டி நான் சிந்து. அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.

அழகாகச் சிரித்தாள்.

ஹாய் சிந்து உன் அம்மா மாதிரியே இருக்கயே. என்ன படிக்கற?

அவ தோள் மேல கை போட்டேன்.

நான் அம்மா மாதிரிதான். ஆனா ரொம்ப போல்ட் ஆன்ட்டி. சிஏ முடிக்கப் போறேன். அடுத்து ஆபிஸ் போடனும்.

படபடன்னு பேசினா.

ஓ… சூப்பர்மா. கலக்கு. அட்வான்ஸ் விஷ்ஷஸ்!

பெருமை பொங்க முத்து பார்த்தாள்…

இவள நல்லா படிக்க வச்சுட்டேன். இவ மனசுக்குப் பிடிச்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டா என் வேல முடிந்ததுடி.

முத்து சொல்ல சொல்ல சிந்து வேற எங்கயோ வேடிக்கை பார்த்தா.

அதான் உன் அம்மா சொல்லிடாளே உன் மனசுக்கு பிடிச்ச பையன் யாராவது இருக்கானா?

இருக்கு, ஆனா இல்ல!

புரியலயே தெளிவா சொல்லும்மா.

ஆன்ட்டி நான் ஒரு பையன லவ் பண்ணே. அவனும் நல்லவன்தான். ஆனா, இங்க நிக்காத, இத பண்ணாத, அங்க போகாதன்னு ஒரே டார்ச்சர். எனக்கான ஸ்பேஸ் கொடுக்காதவன் கூட எப்படி ஆயுசு முழுசும் வாழ முடியும்? அதான் பிரேக்கப் பண்ணிட்டேன் ஆன்ட்டி.

எதுவும் பேசாம முத்துவும் நானும் நின்னோம்.

ஏனோ தெரியல காவிரிகரை பெண்ணேனு எழுதுன கர்சீப்பும், தேம்பி தேம்பி அழுத அந்த 17 வயசு முத்து முகமும் நினைவில் வந்து போனது.

Painting Credit: Artist Ilayaraja

Bhuvana

அன்னையர் தின சிறப்புச் சிறுகதை!

ஒரு நாளுக்கான வேலை! 

பால் சக்காரியா

தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ

பால் சக்காரியா 

paul zacharia

கேரளா, கோட்டயம் மாவட்டத்திலுள்ள உருளிக்குன்னத்தில் 1945ல் பிறந்தவர். இவருடைய படைப்புகள் ஆங்கிலத்திலும், தமிழ் உள்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘ஓரிடத்து’ என்ற சிறுகதைக்காக ‘கேரள சாகித்ய அகாடமி விருதை’ 1979ல் பெற்றவர். 2004ல் தன் ‘சக்காரியோடே கதைகள்’ படைப்புக்காக ‘சாகித்ய அகாடமி’ விருதைப் பெற்றார். இவை தவிர, ‘முட்டத்து வர்க்கி விருது’, ‘பத்மராஜன் விருது’, ‘ஓ.வி.விஜயன் இலக்கிய விருது’ ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். படைப்புகளுக்காக பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்றாலும் தொடர்ந்து எழுதி வருபவர். தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

கே.வி.ஜெயஸ்ரீ 

Jayashri

மொழிபெயர்ப்பில் தீராத ஆர்வமும் வேட்கையும் கொண்டவர். மூல மொழியின் அனைத்துத் தரவுகளோடு முழுமையாக, அதே நேரத்தில் வாசிப்பு சலித்துவிடாதபடியும் மொழிபெயர்ப்பு அமைய வேண்டும் என்ற முனைப்புள்ளவர். எழுத்தாளர் பால் சக்காரியாவின் ‘இதுதான் என் பெயர்’, ‘இரண்டாம் குடியேற்றம்’, ‘அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’, ‘யேசு கதைகள்’, ‘பால் சக்காரியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ (சாகித்ய அகாடமி வெளியீடு) ஆகிய படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த மலையாள கவிஞர் ஷ்யாமளா சசிகுமாரின் ‘நிசப்தம்’ தொகுதிக்கு கலை இலக்கிய பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்திருக்கிறது. மேலும், அந்த நூல் திருப்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்பில் பாட நூலாகவும் உள்ளது. இவருடைய மொழிபெயர்ப்பில் வெளியான ஏ.அய்யப்பனின் ‘வார்த்தைகள் கிடைக்காத தீவில்’ கவிதைத் தொகுப்புக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்திருக்கிறது. இவர் மொழிபெயர்ப்பில் சந்தோஷ் ஏச்சிகானத்தின் சிறுகதைகள் ‘ஒற்றைக்கதவு’ என்ற மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி, நல்லி திசையெட்டும் விருதைப் பெற்றிருக்கிறது. ஷௌக்கத் எழுதிய பயணக்கட்டுரை தொகுப்பை ‘இமாலயம்’ என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு சிறந்த பெண் எழுத்தாளருக்கான ‘அங்கம்மாள் முத்துசாமி நினைவு இலக்கிய விருது’ கிடைத்திருக்கிறது. தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

****

ஒரு நாளுக்கான வேலை!

செல்வி ஆனி வர்க்கி, 

ஹோம் நர்ஸ், 

மைலாடும் குன்று வீடு,

குருவாயூர் (அஞ்சல்).

அன்பான ஆனி,

என் விளம்பரம் தொடர்பாகத் தாங்கள் தகவல் கேட்டு அனுப்பிய கடிதத்துக்கு நன்றி. வேலையைப் பொறுத்து கீழ்க்காணும் விவரங்களைத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

SONY DSC

  1. எர்ணாகுளம் வைட்டிலயில் ‘ஹெவன்ஸ் கிஃப்ட்’ அபார்ட்மென்டின் 702ம் எண் பிளாட்டில்தான் நாங்கள் (இப்போது எங்களுடைய அம்மா மட்டும்) வசிக்கிறோம். நானும் என் மனைவியும் பத்து வருடங்களாக டெஹ்ரானில் இருக்கிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். நிஷா… ஒன்பது வயது. நிக்கி… ஆறு வயது. என் மனைவியின் பெயரும் ஆனிதான்.
  1. நாங்கள் இருண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவுக்கு வருவோம். இந்தமுறை ஆகஸ்டு 15 முதல் செப்டம்பர் 14 வரைதான் எங்களுக்கு விடுமுறை உள்ளது. திரும்பப் போவதற்குள்அம்மாவுக்கு ஒரு ஹோம் நர்ஸை ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எங்களின் விருப்பம்.
  1. பிளாட்டின் வசதிகள்: நான்கு படுக்கையறைகளும் எல்லாவித நவீன வசதிகளும் கொண்ட பிளாட் இது. ஒவ்வொரு படுக்கையறையிலும் டி.வி. செட் இருப்பதோடு அம்மாவுக்காகத் தனியாக டிஜிடல் ஹோம் தியேட்டரும் உள்ளது. அம்மாவின் அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. காண்டஸ் காரும் டிரைவரும் உண்டு. சமையல் செய்ய ஒரு பெண்மணியும் (அம்மு அம்மாள்) மற்ற வீட்டுத் தேவைகளுக்கு இரண்டு வேலைக்காரர்களும் இருக்கிறார்கள் (தங்கம்மா, மணியன்), அம்மாவுக்கு உதவுவதற்காக ஒரு பெண் (சோசாம்மா) இருக்கிறாள். அம்மாவின் அறைக்கு அடுத்திருக்கும் படுக்கையறை ஹோம் நர்ஸுக்கானது.
  1. ஹோம் நர்ஸின் சம்பளமும் சலுகைகளும்:

சம்பளம்: மாதம் ரூ. 300/-. உணவும் தங்கமிடமும் இலவசம். வருடத்துக்கு ஒருமுறை 2 வார விடுமுறை. ஆனால், பதிலுக்கு ஒரு நர்ஸை எங்களுடைய அனுமதியுடன் ஏற்பாடு செய்த பிறகுதான் விடுப்பில் போக முடியும். வேலை நேரம் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரமும். ஆனால், சோசாம்மாவிடம் முன்னரே சொல்லிவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆறுமணி நேரமும் வேறு ஏதாவது ஒரு நாள் மூன்று மணி நேரமும் வெளியே போகலாம். ஹோம் நர்ஸுக்குப் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது. டெலிபோன் வசதி அம்மாவின் தேவைகளுக்கு மட்டுமேயானது. கார் வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

  1. அம்மாவின் பெயர்: எலிசபெத் கோரா பிலிப். ‘ஏலிக்குட்டி’ என்றும் அழைப்பார்கள். ‘அம்மம்மா’ என்றோ ‘அம்மச்சி’ என்றோ ஹோம் நர்ஸ் அழைக்கலாம்.
  1. அம்மாவின் வயது 86. உயரம் 5’4. எடை 47 கிலோ கிராம்.
  1. உடல்நிலை: நடக்க முடியாவிட்டாலும் கேள்வித் திறனிலோ, பார்வைத் திறனிலோ குறை ஒன்றும் இல்லை. குறிப்பிடும்படியான வியாதியொன்றும் இல்லை. வியாதி ஒன்றும் வராமல் கவனித்துக் கொள்ள வேண்டியதுதான் ஹோம் நர்ஸின் தலையாய பொறுப்புகளில் ஒன்று.
  1. ஞாபகம்: பல நேரங்களில் குறைவது.
  1. அம்மாவுக்கும் எனக்குமான உறவுநிலை: அம்மாவின் ஆறு குழந்தைகளில் கடைக்குட்டி நான். என்னுடைய ஒரு சகோதரி திருமணம் முடித்து அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் வாழ்கிறாள். இன்னோரு சகோதரி கன்னியாஸ்தீரியாகவும், இமாலயத்தின் தேஹ்ரி கத்வார் பிரதேசத்தில் ஒரு பள்ளிக் கூடத்தின் தலைமையாசிரியையுமாக இருக்கிறாள். எல்லோருக்கும் பெரிய அண்ணன் எகிப்தில் அலெக்ஸாண்ரியாவில் இன்ஜினியர். இரண்டாவது அண்ணன் ஆப்பிரிக்காவின் எரிட்ரியாவில் ஊழியும் செய்யும் பாதிரியார். மூன்றாமவர் சுவிட்சர்லாந்தின் சூரிக்கில் பல்கலைக்கழக நூலகத்தில் உயர்பதவியில் இருக்கிறார். எங்கள் அப்பா இறந்து 11 வருடங்களாகின்றன. எனக்கு அம்மாவிடமும் அம்மாவுக்கு என்னிடமும் அளவற்ற நேசமுண்டு. கடைக்குட்டியான என்னை அம்மா மிகவும் செல்லமாக வளர்த்தாள். எங்களின் மதிப்பிட முடியாத சொத்து அவளே. எல்லோருக்குமாக நான்தான் அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் குழந்தைகளும் இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.
  1. இனி, அம்மாவைப் பராமரிக்கும் முறை பற்றிச் சில விளக்கங்கள்:

காலை 9 மணி: அம்மாவை மென்மையான குரலில் அழைத்து எழுப்ப வேண்டும். உலுக்கி எழுப்பக் கூடாது. அதற்கு பதிலாக உள்ளங்கையிலோ, நெற்றியிலோ மிருதுவாகத் தடவிக் கொடுக்க வேண்டும். விழித்த பிறகு அம்மா நர்ஸைப் புரிந்து கொள்ளும்போது புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளத் தாமதித்தால் புன்னகையுடனேயே சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கட்டிலின் தலைப்பக்கத்தை சோசாம்மாவின் உதவியுடன் உயர்த்தி, அம்மாவைத் தலையணையில் சாய்த்து உட்கார வைக்க வேண்டும். இடுப்புக்கு மேல் உள்ள பாகத்தை மெதுவாக முன்னால் கொண்டுவந்து தோளையும் முதுகையும் மென்மையாகத் தடவிவிட வேண்டும். அதற்குள் சோசாம்மா கம்மோடு கொண்டு வந்திருப்பாள். நர்ஸ் தனியாகவோ சோசாம்மாவின் உதவியுடனோ அம்மாவை எடுத்துக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் நர்ஸ் புன்னகை புரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஏனெனில், விழித்தவுடன் அம்மாவுக்கு அன்பான ஒரு தழுவல் கிடைப்பது என்பது அம்மாவின் தளர்ச்சியுற்ற மனதும் உடலும் புத்துணர்வு பெற அவசியமானது. அம்மா கம்மோடில் உட்கார்ந்திருக்கும்போது  நர்ஸ் அம்மாவின் இரண்டு கைகளையும் தன் கைகளில் எடுத்து மிருதுவாகத் தடவுவதையோ, முதுகில் கைவைத்துத் தாங்கிக் கொண்டிருப்பதையோ செய்யலாம்.

9.20: அம்மாவைத் துடைக்க வேண்டும். இதைச் செய்யும்போது அம்மாவோடு பேசிக் கொண்டிருக்க மறக்கக் கூடாது. பேசுவதற்குத் தகுந்த சில விஷயங்கள்: நர்ஸின் வாழ்க்கையின் சில நல்ல அனுபவங்கள்; சகோதர, சகோதரிகளுண்டென்றால் அவர்களைப் பற்றிய விஷயங்கள்; முதல்நாள் வாசித்த பத்திரிகையின் மகிழ்ச்சியான செய்திகள்; மனதுக்கு ஆனந்தம் தரும் கிறித்தவ ஆன்மீகக் கதைகள் ஏதாவது தெரியுமென்றால் அவை; பிள்ளைகளான எங்களைப் பற்றியும் எங்களுடைய குழந்தைகள் பற்றியுமான அன்பான உரைகள்.

9.35: அம்மாவின் முகத்தை, அதற்காகத் தனியாக வைக்கப்பட்டுள்ள துண்டினால் மெதுவாக ஒற்றியெடுத்துப் பவுடர் போட வேண்டும். கழுத்து, கக்கங்கள், முலைகளுக்கடியில், முதுகு, பிருஷ்டம், அந்தரங்க பாகங்கள், கால் பாதங்கள் என்று எல்லா இடங்களிலும் பவுடர் போட வேண்டும். இந்நேரத்தில் நர்ஸ் ஹம்மிங் செய்வதையோ, சின்னக் குரலில் வாய் திறந்து பாடுவதையோ செய்யலாம். பழமையான ஆன்மிகக்  கீதங்களாயிருந்தால் மிகவும் நல்லது. இது ஏதும் தெரியாதெனில் நர்ஸுக்கு விருப்பமான, ஆனால் இனிமையான ஏதாவது பாடல்களைப் பாடலாம். பிறகு துவைத்தெடுத்து வைத்திருக்கும் கவுனை அம்மாவுக்கு அணிவிக்க வேண்டும்.

9.45: அம்மாவைச் சக்கர நாற்காலிக்கு மாற்ற வேண்டும். சோசாம்மா கம்மோடை உருட்டி நகர்த்தி அதன் வாளியைக் காலி பண்ணிக் கழுவிச் சுத்தமாக்கி வைக்க வேண்டும். அவிழ்த்தெடுத்த கவுனையும், நனைந்த துண்டுகளையும் அழுக்குக் கூடையில் போட வேண்டும். நர்ஸ் சக்கர நாற்காலியை அம்மாவின் மேசைக்குப் பக்கத்தில் தள்ளிக் கொண்டு போக வேண்டும்.

9.48: அம்மா மேசைக்கருகில்: அம்மா நாற்பது வருடங்கள் ஆசிரியையாயிருந்ததால் இந்த வாசிப்பு மேசைக்கு அருகில் வந்தமர்வது அவர்களுக்கு மிக விருப்பமான ஒன்று. மேசை மீது பைபிள், நிகண்டு, அம்மாவின் டைரி, இங்க் பாட்டில், பேனா, பூதக்கண்ணாடி, அம்மாவின் திருமணத்தின்போது கிடைத்த சிலுவை உருவம் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும். இவை மட்டுமின்றி பிள்ளைகளான எங்களை உயர்ப் படிப்பு படிக்க வைப்பதற்காக அம்மா டியூஷன் எடுத்த வருடங்களில் பயன்படுத்தியிருந்த மெலிதான பிரம்பும் மேசையின்மீது அம்மாவின் இடதுபுறமாக இருக்க வேண்டும். இந்த மேசையின் முன் அமர்ந்துதான் அம்மா உணவு உட்கொள்வார்கள். நாப்கின்கள் விரித்து அதன் மீது மேலே சொன்ன பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

9.49: சாப்பிடும் நேரம்: கட்ட வேண்டிய துவாலையை அம்மாவின் கழுத்தில் கட்ட வேண்டும். பல்செட்டை எடுத்து சுத்தமான நீரில் கழுவி வாயில் திரும்பவும் பொருத்திவிட வேண்டும். அம்மாவின் இடது கையை ஹேண்ட் வாஷ் பயன்படுத்திக் கழுவிவிட வேண்டும். அம்மா இடது கைப்பழக்கம் உள்ளவர். அவர் தன் கையாலேயே உணவு எடுத்து சாப்பிட முடியுமென்றால் அதற்கு அனுமதிக்கலாம். இல்லையென்றால் நர்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடலாம். மென்று விழுங்கிவிட்டார்கள் என்பதைத் தெரிந்த கொண்ட பிறகுதான் அடுத்த ஸ்பூன் ஊட்ட வேண்டும். முக்கியமான உணவு வகைகள்: ஓட்ஸ் கஞ்சி… நன்றாக வேகவைத்துக் குழைத்தது. நன்றாக பழுத்தப் பப்பாளிப் பழத்தின் நான்கில் ஒரு பகுதி சிறு துண்டுகளாக்கியது. மூன்று ஆரஞ்சுகளின் பிழிந்தெடுக்கப்பட்ட சாறில், மலம் இளகுவதற்கான இஸபகோல் பொடி ஒரு ஸ்பூன் மட்டும் போட்டுக் கலந்தது. ஓட்ஸ் கஞ்சியில் கொஞ்சம் வெண்ணெயும், மேப்பிள் சிரப்பும், கொஞ்சம் கல் உப்பு கலந்த தண்ணீரும் சேர்க்கலாம். இவற்றை அம்மு அம்மாள் சரியாகத் தயாரிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மா சுயமாமாகவே உணவு உட்கொள்வதானால் அந்த நேரத்தில் நர்ஸ் பைபிளிலிருந்து இப்போது வாசிக்கலாம் என்று தோன்றும் ஏதாவது ஒரு பகுதியை வாசிக்க வேண்டும். உணவை ஊட்டி விடுவதானால் நர்ஸ் புன்னகையுடன் அம்மாவிடம் பள்ளி, கல்லூரி கால மகிழ்ச்சியான அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். அம்மா புன்முறுவல் பூக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். புன்முறுவல் பூப்பதாக தெரிந்தால் அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே வாஞ்சையுடன் கன்னத்தில் தடவிக் கொடுக்க வேண்டும்.

10.15: அம்மாவின் உதடுகளையும் தாடையையும் துடைத்துச் சுத்தமாக்கி மேல்துண்டை எடுத்துவிட்டு, இடது கையைக் கழுவித் துடைத்துச் சக்கர நாற்காலியைக் கட்டிலுக்கருகில் தள்ளிச் செல்ல வேண்டும். அதற்குள் சோசாம்மா கட்டிலைத் தாழ்த்தி படுக்கையிலும், தலையணைகளிலும் சலவை செய்த பெட்ஷீட்டும், உறைகளும் போட்டிருப்பார்கள். போர்வைக்கடியிலுள்ள ரப்பர் ஷீட்டில் எறும்புகளோ, துர்நாற்றமோ இல்லையென்று நர்ஸ் சுயமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அம்மாவைச் சக்கர நாற்காலியிலிருந்து கட்டிலுக்கு மாற்றிப் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்திவிட வேண்டும். அம்மாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே மேலும் ஒருமுறை புன்முறுவல் பூப்பதும், கன்னத்தில் தடவுவதும் அவசியம்.

10.20: அம்மாவின் துணிகளும் போர்வைகளும் மற்றவையும் சோசாம்மா வாஷிங் மெஷினில் போட்டு மெஷின் ஸ்டார்ட் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

11.10: வாஷிங் மெஷினிலுள்ள துணிகளை வெளியே எடுத்துக் கொடியில் காயப்போட வேண்டும் – இதைச் சோசாம்மா செய்வார்கள்.

12.30: அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். அதில் உட்கார்ந்திருக்கும்போது செய்ய வேண்டியவற்றை முன்பே சொல்லியிருக்கிறேன்.

12.40: அம்மாவைச் சக்கர நாற்காலிக்கு மாற்றி நாற்காலியைப் பால்கனிக்குக் கொண்டு போகவேண்டும். அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டு முகத்தில் பொருத்த வேண்டும். பால்கனியிலிருந்து பார்க்கும்போது தெரியும் நகர பாகங்களைப் பற்றி இந்த நேரத்தில் அம்மாவோடு பேசலாம். அங்கேயிருந்து பார்த்தால் மலயாட்டூர் தேவாலயம் பார்க்கலாம் என்று எப்போதாவது சொல்லலாம். மலயாட்டூர் மலை ஏற வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் ஆசை. இந்நேரத்தில் கல்உப்பு கலக்கிய ஒரு ஸ்பூன் தண்ணீரை மாதுளம்பழச் சாற்றில் கலந்து, அதை அம்மாவுக்கு ஊட்டி விடலாம்.

13.30: அம்மாவை மத்தியான உறக்கத்துக்காகக் கட்டிலில் படுக்க வைக்க வேண்டும். மத்தியானத் தூக்கம் என்று அம்மாவின் காதில் சொல்ல வேண்டும்.

15.00: அம்மு அம்மாள் அம்மாவின் இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரவு உணவின் வகைகள்: குழையக் குழைய வேகவைத்த கோதுமைக் கஞ்சி, சிறிது பால் சக்கரை சேர்த்தது; தெளிவான கோழியிறைச்சி சூப்; ஒரு சிறு பழம் (முடியுமானால் பூவன் பழம் மட்டும்) மெல்லிய வட்டங்களாக அரிந்து அதில் கல்லுப்பு கரைத்துத் தண்ணீர் தெளித்தது.

16.00: அம்மாவைத் தூக்கத்தினின்று எழுப்ப வேண்டும். இந்நேரத்தில் காலையில் எழுப்பும்போது செய்ய வேண்டியது எனக் குறிப்பிட்ட காரியங்களை மீண்டும் செய்ய வேண்டும். மீண்டும் கம்மோடில், பிறகு சக்கர நாற்காலியில் உட்கார்த்தி மேஜைக்கருகில்.

16.20: மேல்துண்டைக் கட்டவும். இடது கையைக் கழுவவும். பல்செட்டைக் கழுவி வாயில் பொருத்த வேண்டும். இரவு உணவு அளிக்க வேண்டும்.

16.50: உணவு உண்ட அம்மாவைச் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்குச் சௌகரியமுள்ள மேற்குப் பக்க பால்கனிக்குத் தள்ளிச் செல்லவும், சக்கர நாற்காலியின் சக்கரங்களைப் பூட்டிவிட்டு அம்மா முன்பக்கமாகச் சாய்ந்து விடாமலிருப்பதற்கான கம்பியை அதனிடத்தில் பொருத்திவிட்டு அவர்களைத் தனிமையில் விடவும் வேண்டும்.

18.15: காய்ந்த துணிகளைச் சோசாம்மா மடித்து வைத்தாயிற்று என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அம்மாவை மீண்டும் உட்கார வைக்க வேண்டும். திரும்பவும் சக்கர நாற்காலிக்கு.

18.30: அம்மாவின் சக்கர நாற்காலி டிஜிட்டல் ஹோம் தியேட்டர் ஸ்கிரீனுக்கு முன்னர் இருக்க வேண்டும். அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்றாகத் துடைத்துவிட்டுப் பொருத்தவும். ஹியரிங் எய்டைக் காதில் பொருத்தவும். இதன் பிறகு அம்மாவுக்காகக் படம் போடலாம். அது நர்ஸும் பார்க்க விருப்பமுள்ள படமாகலாம்.

19.30: படத்தை நிறுத்த வேண்டும். ஹியரிங் எய்டையும் மூக்குக் கண்ணாடியையும் மாற்றி விடவும். அம்மாவைக் கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். அந்நேரத்தில் அம்மாவோடு பேச வேண்டும். வெறுப்பு உண்டாக்காத விதத்திலும் ஆவலைத் தூண்டும்படியாகவும் விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மறுநாள் பார்க்கப்போகும் திரைப்படத்தை பற்றிப் பேசலாம். இல்லையென்றால் மக்கள் பயன்படுத்தும்படி கடைத்தெருவில் புதிதாக, விற்பனைக்கு வந்துள்ள ஏதேனும் பொருட்களைப் பற்றிப் பேசலாம். (குறிப்பு: நிறுத்தி வைத்திருக்கும் திரைப்படத்தின் மீதி பாகத்தை அம்மா படுத்தபிறகு நர்ஸ் சன்னமான ஒலியில் பார்க்கலாம்).

Nurse

19.40: அம்மாவின் சக்கர நாற்காலி கட்டிலுக்கருகில் அம்மா பிரார்த்தனை செய்யும்போது, நர்ஸும் பிரார்த்திக்க வேண்டும். இந்த நேரத்தில் நர்ஸ், மண்டியிடுவதோ, அம்மாவின் அருகில் நாற்காலியில்  அமர்வதோ எனத் தன் விருப்பம்போல் செய்து கொள்ளலாம். நாங்கள் சிரியன் ரோமன் கத்தோலிக்கர் என்பதால் ஐம்பத்து மூன்று மணி ஜபம்தான், இரவு பிரார்த்தனைக்கு. நர்ஸும் இதே பிரிவைச் சார்ந்தவரெனில் பிரார்த்தனையைத் தாங்களே உரக்கச் சொல்லலாம். இல்லையென்றால் சோசாம்மாவும், தங்கம்மாவும் பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும். திருத்தியமைக்கப்பட்ட பிரார்த்தனை முறையைவிடப் பழைய பிரார்த்தனை முறைதான் அம்மாவின் விருப்பம். பிரார்த்தனை முடிந்ததும் அம்மாவின் மேஜையில் இருக்கும் சின்னச் சிலுவை உருவத்தை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவின் உதடுகளில் ஒற்றிவிட்டுத் திரும்பக் கொண்டுபோய் வைக்க வேண்டும்.

20.15: அம்மா படுப்பதற்கான ஏற்பாடுகள்: கடைசியாக ஒருமுறை கம்மோடில் உட்கார வைக்க வேண்டும். பல்செட்டை நீக்க வேண்டும். கிளீனிங் லிக்விட் உள்ள பாத்திரத்தில் அவற்றைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு ஹேர்பலாக்ஸ் மாத்திரையின் பாதியை ஒரு டம்ளர் தண்ணீருடன் அம்மாவுக்குக் கொடுக்கவும். படுக்கையையும் ரப்பர் ஷீட்டையும் மறுபடியும் பரிசோதிக்கவும். சுருக்கங்களை நீக்கவும்.

20.30: அம்மாவைப் படுக்கையில் படுக்க வைத்துப் போர்வையால் மூடிவிட வேண்டும். அம்மாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே புன்முறுவல் செய்ய வேண்டும். “குட்நைட். ஸ்வீட் டிரீம்ஸ்” என்று சொல்ல வேண்டும். அம்மா புன்முறுவல் கொள்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். புன்முறுவல் பூத்தாலும் இல்லையென்றாலும் அம்மாவின் நெற்றியிலும் கன்னத்திலும் உதடுகளிலும் ‘என் பிரியமான அம்மச்சீ’ என்று சொல்லிக்கொண்டே எங்கள் ஆறு பேருக்காகவும் ஒவ்வொரு இனிமையான முத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வளவும் செய்தால் நர்சின் அன்றைய நாளின் வேலை முடிவடைகிறது. இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதானால் நேர்காணலுக்கு வருவதற்குச் சௌகரியமான ஒரு தேதியைக் குறிப்பிட்டு உடனே பதில் அனுப்புங்கள்.

நன்றியுடன்

பிரியமான

கோராபிலிப் ஜான்.

Image courtesy:

http://images.elephantjournal.com

https://jparadisirn.files.wordpress.com

காலத்தை வென்ற கதைகள் – 35

லஷ்மி கண்ணன் (காவேரி)

Lakshmi Kannan2

கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். தன் படைப்புகளை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக எழுதும் வல்லமை படைத்தவர். தமிழில் ‘காவேரி’ என்ற புனைப்பெயரில் படைப்புகளை எழுதி வருகிறார். இதுவரை 21 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றில் ஆங்கிலத்தில் வெளியான நான்கு கவிதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளும் அடக்கம். காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்த இவருடைய நாவல், ‘ஆத்துக்குப் போகணும்’ மூன்றாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. இவருடைய மொத்த சிறுகதைகளையும் ‘காவேரி கதைகள்’ என்ற பெயரில் தொகுத்து, இரண்டு பாகங்களாக ‘மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ்’ வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய சிறுகதைகளை இவரே ஆங்கிலத்தில் ‘Nandanvan & Other Stories’ மற்றும் ‘Genesis: Select Stories’ என்ற தலைப்புகளில் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு நூல்களும் டெல்லி, ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சர்வதேச அளவில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் சாகித்ய அகாடமியிலும் ஆய்வு நல்கை (Resident Fellowship) பெற்றவர். இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், அமெரிக்கா-கலிபோர்னியாவில் இருக்கும் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் சேன் ஜோஸ் மாகாண பல்கலைக்கழகம், லண்டனின் ‘தி இன்ஸ்டிடியூட் ஆஃப் காமன்வெல்த் ஸ்டடீஸ்’ ஆகியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளிலும் மாண்ட்ரியல், டொரண்டோ, ஹாலந்து, ஆகிய இடங்களில் நடந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சிகளிலும் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்; பல ஆய்வுக் கட்டுரைகளை வாசித்திருக்கிறார். ஆங்கிலத்தில் பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.

ஓசைகள்

brush-painting-water-lily

கல்பூரா மனிதர்களைத் தணலாய்த் தகித்து சுட்டபின், ஏதோ பிராயச்சித்தம் செய்வது போல மாலையில் சென்னை கடல், காற்றைக் குளுகுளுவென்று அள்ளி வீசியது. மூதுரை வழியாய் வந்த மாலை மயக்கம், உஷ்ண தேசமான இந்தியாவில்தான் சூரியன் முழுகினவுடன் வரும் இந்த நேரம். எப்படி விசேஷமான ஒரு நேரமாக மனதுக்கு ரகசியமாக, திருடிக் கொண்டு வரது. பிறகு எவ்வளவுதான் அதைப் பிடித்து வைத்துக் கொள்ள முற்பட்டாலும் இந்த நேரம் விரைவாக கையிலிருந்து வழுக்கிக் கொண்டு இரவின் இருட்டுடன் சேர்ந்து மறைந்து விடுகிறது. கண்களை மெத்தென்று ஆக்கி, சருமத்தைக் குளுமைப்படுத்தி, கோபத்தை அகற்றி…

கபாலீச்வரர் கோயில் மூன்றாம் ஜாமப் பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. கோயிலை நெருங்கும்போதே தூரத்தில் ஒலிக்கும் மணியோசை காதில் விழுந்தது. அதனுடன் கலந்துகொண்ட வேறு சில ஓசைகள். வெளியே ரிக்‌ஷா வண்டிகளின் மணியோசைகள். ஏன், நடந்து வரும் வழியெல்லாம் இப்படித்தான் மாலைக்கே பிரத்தியேகமான சில ஓசைகள். சென்னைக்கும் வெளியே பொதுவாக இட்டுச் செல்லும் மாலையின் முழக்கம் மனதினுள் நினைவுகளைத் தட்டியெழுப்பும் நேரம். இன்னும் சில இடங்களில் மாலை என்ற இந்த பிரார்த்தனை நேரம்.

சங்கு ஊதி அதனால் கிளம்பிய நீண்ட, ஆழமான ஒலி, ஊதுவோரின் அடிவயிற்றிலிருந்து வரும் பிரயாசமும் ஆயாசமும் மூன்று மடங்கு பெரிதாக்கப்பட்டு வெளிவரும். ‘நமாஸ்’ செய்து, குனிந்த தலையை நிமிர்ந்து சொல்லும் முஸ்லீமின் ரீங்காரமிடும் த்வனி அலை அலையாய் பரவும். அதற்குள் நுழையும் பாட்டு, தம்பூரா மீட்டலுடன் இழைந்து வரும். காலை, பகல் முழுக்க வெவ்வேறு போராட்டங்களுடன் வேலை செய்து உரம் ஏறிய உடம்பையும் இறுகிய மனதையும் நெகிழ வைக்கும் ஓசைகள் அடங்கிய மாலையின் ஒருமிப்பு… மற்ற எல்லாப் புலன்களையும் அடக்கி, காதை மட்டும் தீட்டிக்கொண்டு சப்தங்களைக் கேட்கத் தூண்டியது.

Mylapore_Kapaleeshwarar_temple_facade

கபாலீசுவரர் கோயிலுக்கு அண்மையில் இருந்த ஒரு அரசமரத்தின் இலைகளைக் காற்று அளைந்து, கோதிவிட்டு எழும்பியது, ஒரு ஐம்பது பேர் சேர்ந்தாற்போல கை தட்டினாற் போல், வந்த ‘படபட’வென்ற ஓசைகள். கோயிலுக்கு வெளியே செருப்பைக் கழட்டி தேங்காய் புஷ்பங்களை வாங்கும்போது இந்தப் பொதுவான ஓசைகளுடன் சேர்ந்து வந்தது. திருப்பி, திருப்பி பாடப்பட்ட வரிகள். சுற்றிலும் குழந்தைகளின் ஆரவாரிக்கும் குரல்கள். பெண்களின் கீச்சுமூச்சு சப்தங்கள். பூக்காரர்களின் கூக்குரல்கள்.

கோயிலுக்குள் நுழைந்து முதல் புஷ்ப பொட்டலத்தைப் பிள்ளையாருக்கு அர்ப்பணித்து, வணங்கி நிமிர்ந்தபோது, மண்டபத்தின் மேலேயிருந்த இரண்டு குரங்குகளின் சர்ச்சை பலமாக முற்றியது. ஒரு குரங்கு வலது கன்னம் உப்பி, கொய்யாவையோ, மாங்காயையோ அடைத்து வைத்துக் கொண்டு அந்த நிலையிலும் இன்னொரு குரங்கைப் பார்த்து உறுமியது. குருக்களின் தீபாராதனை மணி கணீரென்று ஒலிக்க, கோபமாக இருந்த குரங்கும் ஒரு கணம் சட்டென்று கீழே பார்வையை வீசியது. சண்டை, உறுமல், அதன் சீறல் பாதியில் நிற்க, அந்த வெண்பாவின் ஒலிகள் மறுபடியும் அயராமல் தூரத்திலிருந்து தேய்வுடன் வந்தன. ஒரே மாதிரி பிசிரில்லாத தாள கட்டுடன் மேலே, மேலே எழும்பி ஓய்ந்தன. அந்த ஒலிகளை ஸ்வரமாக வடிகட்டினால், பத நீஸ…. பத நீ…. பத நீஸ…. என்று வெண்பாவின் ஒவ்வொரு வரியையும் முடிக்கலாம்.

குங்குமம், விபூதியை வாங்கிக் கொண்டு முருகன் சன்னதி அடைந்தேன். திரும்பத் திரும்ப வரும் அர்ச்சனை ஆர்டர்களை ஏற்றுக் கொண்ட சலிப்பை அடக்கி மறைத்துக் கொண்ட அர்ச்சகரின் முகம், கை, கால்களில் ஓர் இயந்திரத்தின் இயக்கம் தெரிந்தது. அர்ச்சகரின் வேகமான உச்சாடனத்தின் நடுவே பளீரிட்ட, மெல்லிய ‘உஸ்’, ‘உஸ்’ ஒலி கிளப்பும் ஸ்லோங்களைச் சின்ன பாம்பு சீறல்கள், ஒலி மாறிய இரும்புகள் மோதும் சப்தங்களில் லேசான கொடூரம் இழைந்தோடியது. அந்த அவசர அர்ச்சனை முடிந்து, தீபாராதனையின் தட்டு முருகனின் முகத்தை சுற்றிச் சுற்றி வந்து, பக்கவாட்டில் ஏந்தியிருந்த வேலின்மீது விளக்கு பட்டு பிரகாசப்படுத்தியது. கணகணவென்று மணியோசை, அதற்கும் பின்னால் தொலைவிலிருந்து மிதந்து வரும் அந்த அயராத பத நீஸ… பத நீ… அப்பா, என்ன பொறுமையான உச்சரிப்பு!

மீதி இரண்டு புஷ்பப் பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு சிவலிங்க சன்னதியில் நின்றேன். இங்கே நல்ல கும்பல். விதவைக் கோலம் பூண்ட பிச்சைக்காரிகள் – ஏண்டியம்மா, கொழந்தே, அறுபத்து மூவரைப் பற்றித் தெரியுமோ? இந்த நவகிரகங்களைப் பற்றித் தெரியுமோ? அதனால் என்ன? இப்படி வா. நா சொல்லித் தரேன்… ஏதோ கொஞ்சம் கையிருப்பாக இரண்டு ரூபாயா தரயா? பஸ் பிடிச்சு மாம்பலம் வரை போகணும்…

நெரிசலை நீக்கி, ஓரமாக நின்று, எட்டிப் பார்த்ததும் சிவலிங்க தரிசனம் கிடைத்தது. பளபளவென்று இந்த கறுப்புக்குத்தான் என்ன வழவழப்பு! மனிதர்களின் நெருக்கம் அழுத்தியது. வியர்வையின் நாற்றம் முகத்தில் சுளிப்பை வரவழைத்தது. சே! கோயிலுக்குக் கும்பலாக வரும் மனிதர்களைப் பார்த்து வெறுக்கக்கூடாது. அது பாவம். இது என்ன பிரமாத கும்பல், திருப்பதியை விடவா? திருப்பதி! மலையடியிலிருந்து திருமலை வரை வெறும் காலை பதித்து, பதித்து, ஊர்ந்து வரும் கோடிக்கணக்கான பெருமக்கள். ஏதோ ஒரு சக்தி அவர்கள் கீழிருந்து இழுக்க, மேலே இந்த பிரம்மாண்டமான மனித நம்பிக்கையின் சுமையைப் பயப்படாமல் தாங்கி நின்ற ஏழுமலை ஆண்டவன். அவர் ரொம்பப் பெரியவரா? அல்லது இந்த ஜனத்திரள் அவருக்குச் சக்தியளித்து, பெரியவராக்கியதா? கோழிக்குஞ்சா, முட்டையா எது முதலில் வந்தது? இங்கேயும் இந்தக் கும்பல், வியர்வை நாற்றம். பக்கத்தில் யாரோ கொண்டு வந்திருந்த பச்சை துளசி மாலையின் மணம். வியர்வை நாற்றத்தைத் துல்லியமாக விரட்டியது. பூவுடன் நாரும் சேர்ந்தால்..? அண்மையில் கிசுகிசுத்த பேச்சுக் குரல்கள். நசுங்கிய ஒரு குழந்தையின் அழுகை. பிறகு திருப்பி, திருப்பி ஒரு லயத்துடன் வரும் ஒலி, பிதற்றல் மாதிரி, என்ன? பிதற்றலா?

250px-தீரசங்கராபரணம்.svg

சூடம் காட்டி, தீர்த்தம் உள்ளங்கையில் வாங்கி, வாயில் விட்டுக் கொண்டதும், அதன் கற்பூர – துளசி வாசனை அம்பாக உள்ளுக்குள் பாய்ந்தது. அடைந்த காதுகள் தெளிவாகின. தாளக்கட்டுடன் ஒலிக்கும் இந்த ஓ. ஆ. ஔ. ஓ. அண்மையிலேயே இப்பொழுது கேட்டது. வெண்பா இல்லை. ஏதோ விகாரமான ஒலிகள், அப்போ, அந்த பத நீ ஸ… பத நீ ஸ? அது என்னவாயிற்று? இரண்டிற்கும் ஒரே தாளம். ஆனால், இது மட்டும் அபஸ்வரமாக ஒலிக்கிறதே?

கடைசியான புஷ்பப் பொட்டலத்துடன் தேவி சன்னதிக்கு வருவதற்குள் அந்த அபஸ்வர ஒலிகள் பயங்கரமாக நெருங்கின. சன்னதியின் இடது புறத்தில், கண்களை மூடியபடி, உடம்பைத் தலையை ஆட்டியபடி, ஔ… ஓ… அ… என்று எழுத்துகளை வக்கிரமாக, ஒழுங்கற்ற வரிசையில் போட்டபடி அவன் நின்றான். முப்பத்தைந்து – நாற்பது வயதிருக்கலாம். நிகுநிகுவென்ற தாம்பர கலர்மேனி. மேல் சட்டையில்லாமல் இடுப்பைச் சுற்றி ஈர ஜரிகை வேஷ்டி அணிந்திருந்தான். அதையும் சுற்றி கட்டிய சிவப்பு பட்டு. பாரிச வாயுவால் ஒரு பக்கம் முகமும் வாயும் கோணிப் போயிருந்தன.

ஒரு பக்கத்தில் கண், புருவம், மூக்கு நுனி எல்லாமே இழுத்துக் கொண்டிருந்தது. அதே பக்கம் கை உசிரேயில்லாமல் ஊசலாடியபடி தொங்கியது. அந்தப் பக்கத்து கால் சூம்பி தொளதொளவென்று பாதம் பதியாமல் தொங்க, ஒரு தூணில் ஒருக்களித்து, நல்ல கால் மேல் ஊன்றியபடி அவன் ஆடிக்கொண்டே இருந்தான். கண்கள் இரண்டும் இறுக மூடியிருக்க, நல்ல கையால் ஒவ்வொர முறையும் ஆள் காட்டி விரலால் உள்ளே இருக்கும் அம்பாளின் திசையைக் காட்டி ஒ… ஔ… ஆ…. என்றான். உருமாறிப்போன பத நீ ஸ… பத நீ, இந்த அரைமணியாய், ஏன் இதற்கும் முன்னதாகவே இவன் பாடிய வெண்பா! நாக்கு குழறி, வார்த்தைகள் இசைகேடாக சிதறி விழுந்தன.

l9800699

”பொட்டலத்தைக் குடுங்கோ. கோத்திரம் என்னவென்று சொன்னேள்?”

”ஊ…. ஔ…. ஆ….”

”உங்களைத்தான் கேட்டேன். கோத்திரம்?”

”ஆ… பாரத்வாஜம்.”

பொட்டலத்தை வாங்கிண்டு என் கண் பார்வையைக் கவனித்த அர்ச்சகர் சொன்னார்… ”நல்ல பெரிய வீட்டு பையன்தான். வீடே பாட்டு ஞானத்தில் தோய்ந்திருக்கும். பாவம். பாரிச வாயு இவர் வாயை அடித்து, முடமாக்கி வைத்திருக்கு. தினமும் வீட்டில் இவரை இப்படி அனுப்பி வைக்கிறாங்க. ஒரு நம்பிக்கையில்…. எல்லாமே நம்பிக்கைதானே?”

அர்ச்சகரின் ஸ்தோத்திரங்கள் அந்த ஓலமிடும் ஒலிகளுடன் சேர இரண்டும் மோதிக் கொண்டன. வயிற்றினுள் சின்னதொரு குளிர் நடுங்கி, என் உடம்பை ஒருமுறை ஆட்டியது. கண்களை அவன் ஒரு கணமாவது திறப்பானே என்று திரும்பிப் பார்த்தேன். இறுகப் போர்வை போலப் போர்த்திய கண் இமைகளுக்குள் வியாபித்திருக்கும் இருட்டில் நம்பிக்கை விதைக்குமா? அவன் உடம்பு பிடிப்பில்லாமல் ஆட்டம் கண்டிருந்தது.

பிரதட்சணமாய் வலம் வந்து, வணங்கி, எழுந்தபின் கடைசியாக அவனை ஒரு முறை பார்த்தேன். வெளியே வரும் வழியெல்லாம் இந்த ஒ… ஔ… ஆ… துருத்திக் கொண்டு வந்து ஆக்கிரமித்தது. அம்பாளிடம் முறையிடும் அவன் பிரார்த்தனை ஒரு நிந்தா ஸ்தோத்திரமாய், கோபமும், ஏமாற்றமும் ஆவேசமுமாய்த் தாளம் போட்டு ஒலித்தன. குழறும் நாக்கிற்குத்தான் இப்படி கூசாமல் வசவுகளை வாரி இறைக்க இறைக்க உரிமை உண்டோ?

ஏன் இப்படி பண்ணே நீ

உனக்கு கண் இல்லே?

நான் இப்படி கத்தறேனே

உனக்குக் காது இல்லே?

மாலையின் மென்மையான அமைதியைக் கந்தல் துணியாகக் கிழித்தெறிந்த ஓசைகள். தூங்கும் கடவுளின் பள்ளியெழுச்சி!

(‘ஓசைகள்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து… காவ்யா வெளியீடு, பெங்களூரு, 1984)

spore-musical-notes-2019

***

Image Courtesy:

http://flowerpics.net

http://www.tamilvu.org

http://www.freestockphotos.name

http://upload.wikimedia.org/

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

சரஸ்வதி ராம்நாத்

எம்.ஏ.சுசீலா

கீதா பென்னட்

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 34

சரஸ்வதி ராம்நாத்

S.ramnath

தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்தவர். சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். கோவை மாவட்டம் தாராபுரம் சொந்த ஊர். 1925, செப்டெம்பர் 7ம் தேதி பிறந்தார். இந்தியில் வித்வான் பட்டம் பெற்றவர். ‘கேந்திரிய இந்திய சன்ஸ்தான் விருது’, ‘இந்திய சன்ஸ்தான் விருது’, ‘பாரதீய அனுவாத் பரிஷத் துவிவாகிஷ் புரஸ்கார் விருது’ ஆகியவற்றைப் பெற்றவர். தி.ஜானகிராமன், தொ.மு.சி.ரகுநாதன், அகிலன், ஜெயகாந்தன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்ற பல எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் நாவலையும் இந்தியில் மொழிபெயர்த்தவர். 1990ல் ‘சர்வதேச பெண்கள் ஆண்டு’ கொண்டாடப்பட்டபோது, ‘இந்திய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 19 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1999, ஆகஸ்ட் 2ம் தேதி காலமானார். ஆரம்ப காலத்தில் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். பிறகு முழு மூச்சாக மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார். இவருடைய மொழிபெயர்ப்புப் பணி மகத்தானது.

இதுதான் வாழ்க்கை

 mother-and-child-mustafa-zumruttas

ஜானுவின் அலறல் இரவின் நிசப்தத்தின் நடுவே பயங்கரமாக ஒலித்தது. பரிதாபமான அதன் ஓலம் சங்கரனின் காடாந்திர நித்திரையைக் கூடக் கலைத்து விட்டது போலும். அவன் புரண்டு படுத்தான். ஆனால் எழுந்திருக்கவில்லை. குழந்தையின் அலறல் மேலும் மேலும் உச்ச ஸ்தாயியை அடைந்த பிறகுதான் கண்ணைத் திறந்தான்.

தூளியிலிருந்து, தலை கீழே தொங்க, அலறிக் கொண்டு இருந்தாள் ஜானு. தூக்க மயக்கம் தெளியாத சங்கரனின் விழிகள் அறையின் நாற்புறமும் துழாவின.

‘காமாக்ஷி எங்கே?’ என்றது மனது. ஆனால் அதைப்பற்றி சிந்தனையை மேலே ஓடவிடாது காதுகளை நாராசமாய்த் துளைத்தது அழுகுரல். போர்வையை உதறிவிட்டு எழுந்து முணுமுணுத்தவாறே தூளி அருகில் சென்றான்.

குனிந்து அதை எடுக்கக் கை நீட்டியவன், அருவெறுப்புடன் பின் வாங்கியவாறே, ”ஏ காமாக்ஷி!” எனக் குரல் கொடுத்தான் பலமாக. கரப்பான் சிரங்கால் மேல் எல்லாம் அழுகிச் சொட்டும் குழந்தையை அவன் எடுப்பானா என்ன? அவன் குரலுக்குப் பதில் வரவில்லை. ஆத்திரத்துடன் தூளிக் கயிற்றைப் பிடித்து வீசி ஆட்டினான் சங்கரன். டணார் என்ற சப்தத்துடன் குழந்தை சுவரில் மோதியது. ரோதனம் இன்னும் பலமாகியது. ஜானு நெஞ்சே பிளந்து போகும்படி வீறிட்டாள்.

மறுவினாடி நிலைப்படி அருகே நிழலாடியது. சங்கரன் தலை நிமிர்ந்து பார்த்தான். காமாக்ஷி கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள். தலைமயிர் கலைந்து அலங்கோலமாய்க் கிடந்தது. புடவைத் தலைப்பு அவிழ்ந்து தரையில் புரள மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து நடந்து வந்து கொண்டு இருந்தாள். ரத்தப் பசையற்று வெளுத்துக் கிடந்த அவள் முகத்தில் தோன்றிய பாவம், கண்ணில் மிளிர்ந்த கோபத்தின் சாயை, சங்கரனைக் குற்றவாளியைப் போல் தலை குனியச் செய்தன. அவன் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. சங்கரன் தன் தவறை மறைக்க விரும்பியவன் போல், ”சனியன், பிடிவாதத்தைப் பாரு; ஒரு நாள் கூட நிம்மதியாய்த் தூங்க விடுவதில்லை” என்றான். அவள் வாயே திறக்காமல் கதறும் குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு ஆசுவாசப் படுத்தலானாள்.

”பசிக்கிறதோ என்னவோ? ஏதாவது கொடேன்.” அவள் தலை நிமிரவில்லை. சுவரோடு சாய்ந்து கொண்டாள். மெல்லப் பஞ்சினால் புண்களை ஒற்றியவாறே, ”மாவு நேற்றே தீர்ந்து விட்டது” என்றாள் மெல்லிய குரலில். தாயின் ஆதரவான அணைப்பில் குழந்தை விசும்பிக் கொண்டு இருந்தது.

சங்கரன் பழையபடி படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

”என்னிடமும் பால் இல்லை. மாதம் ஆகி விட்டதோ இல்லையோ.” காதில் விழாதவன் போல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

சில வினாடி மௌனம் நிலவியது.

”காலமேயிருந்து எனக்குக்கூட உடம்பு சரியில்லை. இடுப்பை ரொம்ப வலிக்கிறது.”

அவளுடைய வார்த்தைக்குப் பதில் அளிப்பது போல் லேசான குறட்டைச் சப்தம் கேட்டது.

காமாக்ஷி நீண்ட பெருமூச்செறிந்தாள். அவள் இதய வேதனை காற்றோடு கலந்தது.

குழந்தை, தாயின் வறண்ட மார்பைச் சுவைத்தவாறே தூங்கி விட்டது. காமாக்ஷியால் உட்கார முடியவில்லை. நெளிந்து கொடுத்தாள். சுற்றும் ஒரே காடாந்திர மௌனம் பரவி நின்றது. கைவிளக்கின் மங்கலான ஒளியிலே கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி 12. சங்கரன் லேசாகக் குறட்டை விட்டுக் கொண்டு இருந்தான். சுற்றிலும் கால்மாடு தலைமாடாக, அவர்களைப் ‘புத்’ என்ற நரகத்தில் விழாமல் காப்பாற்ற வந்த செல்வங்கள் படுத்துக் கிடந்தனர்.

கோபு, லஷ்மி, கிருஷ்ணன், பஞ்சு, இதோ மடியில் ஜானு… இவர்கள்தான் அவர்களுடைய 10 வருஷ தாம்பத்திய வாழ்வின் சின்னங்கள். கால் மரத்துப் போகவே குழந்தையை மெல்லக் கீழே விட்டு விட்டுக் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டாள் காமாக்ஷி.

அவளால் உட்கார முடியவில்லை. புழுக்கமோ என்னவோ வியர்வை வெள்ளமாகப் பெருகிற்று. மெல்ல எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். முற்றத்துக் கம்பத்தடியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே வானத்தை அன்னாந்து பார்த்தாள்.

பௌர்ணமி கழிந்து-ஐந்தாறு நாட்கள் இருக்கும். கீழ் வானில் சந்திரிகை தன் பால் ஒளியைப் பரப்பியவாறே ஊர்ந்து கொண்டு இருந்தது. ஆங்காங்கே வாரி இறைத்தாற் போல் நட்சத்திரங்கள் மினுமினுத்தன. கிணற்றங்கரை அருகிலிருந்த வேப்ப மரம் ஜிலுஜிலுவென்ற காற்றை வீசியது. பறவைகளின் சரசரவென்ற சப்தம்கூட இல்லை. அந்நிசி வேளையில் காமாக்ஷி கண்களை மூடியவாறு சிந்தனையில் லயித்துப் போனாள்.

கவிழ்ந்திருந்த இமைகளிலிருந்து கண்ணீர் முத்து முத்தாய் உருண்டோடலாயிற்று.

இன்னும் மாதம் கூடப் பூர்த்தியாகவில்லை. அதற்குள் ஏன் இப்படி… ஒரு வேளை… ஏதோ ஒரு விதமான திகில் அவள் மனதில் கவிழ்ந்து கொண்டது. பளீர் என இடுப்பை ஓர் வெட்டு வெட்டியது. வேதனை ஒவ்வொரு நரம்பையும் சுண்டி இழுத்தது. யாரையாவது ஆதரவாகப் பற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. திரும்பிப் பார்த்தாள். சங்கரன் அயர்ந்த நித்திரையில் இருந்தான். ஓர் வினாடி அவள் உள்ளத்தில் கோபம் குமுறி எழுந்தது. ”காலையிலிருந்து துடிக்கிறேன். ஏன் என்றாவது கேட்டாரா? அவருக்கென்ன வந்தது? தன் சுகம், சௌகரியம் குறையாமல் நடந்தால் சரிதான். குழந்தைகளோடு அதுவும் வியாதிக்காரக் கைக் குழந்தையோடு அல்லல் படுகிறேனே ராவும் பகலும். துளியேனும் இரக்கம் உண்டா… இந்தப் புருஷர்களே…”

மறுவினாடியே அவள் உள்ளத்தில் பச்சாதாபம் மேலிட்டு நின்றது. ‘பாவம்!’ என் கஷ்டத்திற்கு அவர் என்ன செய்வார்! என்னைக் கல்யாணம் செய்து கொண்டுதான் என்ன சுகம்! நாய் மாதிரி காலையிலிருந்து இருட்டும்வரை ஓடியாடி உழைத்து ஓடாய்ப் போகிறார். என்ன சுகம்? தினமும் இதே பல்லவி, உடம்பு சரியாயில்லை. குழந்தைக்கு ஜுரம்… பிரசவம்… செலவு… வைத்தியம்… அவரைப் போலப் பொறுமைசாலியை அளித்த பகவான்…

மறுபடியும் பளீர் என ஒரு வலி. இம்முறை காமாக்ஷியால் தாங்க முடியவில்லை. வாய் விட்டு அரற்றினாள். மெல்ல எழுந்திருக்க முயன்றாள், கால்கள் நடுங்கின. கண் இருட்டியது. எங்கோ ஆகாயத்தில் லேசாகப் பறப்பது போல் ஓர் உணர்ச்சி.

மறுவினாடி தடால் என காமாக்ஷி நிலைப் படி அருகில் தலைகுப்புற வீழ்ந்தாள். போட்ட கூக்குரல் அவனை ஓர் உலுக்கு உலுக்கியது. போர்வையை உதறிவிட்டு எழுந்து ஓடி வந்தான். ”காமாக்ஷி, காமாக்ஷி.” காமாக்ஷி நினைவிழந்து கண்களைச் செருகியவாறே கிடந்தாள். கையும் காலும் சில்லிட்டு… சங்கரனால் அவளைத் தூக்க முடியவில்லை. மிக்க சிரமப்பட்டுப் படுக்கையில் கொண்டு விட்டான். அவன் தூக்கம் பறந்தோடிவிட்டது. முகத்தில் ஜலம் தெளித்து விசிறலானான்.

பத்து நிமிடம் கழிந்துதான் கண் திறந்தாள். அவனை எதிரே கண்டதும் கைகளைப் பிடித்துக் கொண்டு விசும்பலானாள். அவள் மெலிந்த கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள் சங்கரன்.

அவளை என்ன கேட்பது? என்ன செய்ய வேண்டும்? ஏன் இப்படி? ஒன்றுமே புரியவில்லை. ஜந்து குழந்தைகளுக்குத் தந்தையாகியும் கூச்சம் அவனைப் பேச விடவில்லை. கடைசியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு,

”லேடி டாக்டரைக் கூட்டி வரட்டுமா?” என்றான்.

”பணத்திற்கு எங்கே போவது?”

அதைப் பற்றி உனக்கு என்ன கவலை?”

காமாக்ஷி பலமாகச் சத்தமிட்டாள். ”எனக்குப் பயமா இருக்கே.” அவள் விழிகள் பயங்கரமாகச் கழன்றன.

”சீச்சீ! அசடு! பயப்படாதே…” சங்கரன் பரபரப்புடன் எழுந்து நின்றான்.

விளக்கைத் தூண்டிவிட்டு, பர்ஸைக் கவிழ்த்தான். சில்லரை நாணயங்கள் நாற்புறமும் சிதறி ஓடின. அவற்றைத் திரட்டி ஜேபியில் போட்டுக் கொண்டு கதவைத் திறந்து வெளியே நடந்தான்.

***

”கேஸ் ரொம்ப சீரியஸாக இருக்கிறது. இங்கே வீட்டில் வைத்துக் கொள்ள சவுகரியப் படாது, மிஸ்டர். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய வேண்டும். தெரிகிறதா? குழந்தை உயிருடன்தான் இருக்கிறது… ஆனால் தாயை ரொம்பக் கவனிக்க வேண்டும். ஒரு வேளை நாளையே குழந்தையை எடுத்துவிட வேண்டும். எதற்கும் காலையில் 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள்” என்று தடதடவெனப் பொழிந்தாள் லேடி டாக்டர் லட்சுமி.

கைதிக் கூண்டிலிருந்து, ஜட்ஜின் வாயிலிருந்து என்ன தீர்ப்பு வருமோ எனப் பதைபதைக்கும் உள்ளத்துடன் அவரைப் பார்க்கும் மனிதனைப் போன்ற நிலையில் இருந்தான் சங்கரன். குழந்தைகள் மூலைக்கு ஒருவராய் மலர மலர விழித்துக் கொண்டு நின்றனர்.

”அப்பா, அம்மா ஏம்பா பேச மாட்டேன் என்கிறா?” என மழலையைக் கொட்டியவாறே கால்களைப் பிடித்துக் கொண்டாள் பஞ்சு. சற்றே பெரியவனான கிருஷ்ணனோ அரைத் தூக்கத்தில் விழித்துக் கொண்டதால் மூலையில் ராகம் இழுத்துக் கொண்டே இருந்தான். கோபுவும் லக்ஷ்மியும் வாய் திறவாது உட்கார்ந்து விட்டார்கள்.

டாக்டர் ஒர் இன்ஜக்‌ஷன் செய்தாள். காமாக்ஷியின் சலனமற்றுக் கிடந்த உடலில் சிறிது அசைவு ஏற்பட்டது. வலியால் புருவத்தைச் சுளித்துக் கொண்டாள்.

”இப்போ ரெஸ்டாய் தூங்குவதற்கு மருந்து கொடுத்து இருக்கிறேன். இந்த நர்ஸு இங்கே இருப்பாள். காலையில் சரியாக 8 மணிக்கு வந்து விடுங்கள்…” என்று கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள் டாக்டர்.

”டாக்டர்…” என ஆரம்பித்தான்.

”பயப்படாதீங்க. நான் இருக்கேன்!” என தன் வெண்ணிறப் பற்களைக் காட்டினாள் நர்ஸ்.

”நமஸ்காரம். வரட்டுமா?” என்றாள் டாக்டர்.

சங்கரன் அவசரமாக ஜேபியில் இருந்த சில்லரை நாணயங்களை எடுத்து நீட்டினான்.

***

மணி 8 அடித்து விட்டது. சங்கரன் நடையின் வேகத்தை துரிதமாக்கினான். அவன் கையிலிருந்த பையின் கனம் வேகத்தை சற்றுத் தளர்த்தினாலும், சங்கரனின் மனமும் நினைவும் ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்து கொண்டு இருந்தன.

காமாக்ஷியை முன்னதாகவே டாக்ஸியில் பாட்டியுடன் அனுப்பி விட்டான். வீட்டில் குழந்தைகளைக் கவனித்து விட்டு, பிறகு மருந்துக்கும் பணத்திற்குமாக அலைந்து அலைந்து சுற்றிவரவே நேரமாகி விட்டது. அவள் எப்படி இருக்கிறாளோ?

பத்தாம் நம்பர் பஸ்ஸுக்காகத் தவம் நின்றான் சங்கரன். இரவெல்லாம் தூக்கமின்மையும் கவலையும் அவனைப் பத்து வருஷங்கள் வயது அதிகமானவன் போல் தோற்றுவித்தன.

களுக் எனச் சிரிக்கும் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

இரு சிறு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டு நின்று இருந்தார்கள். குதூகலம், இளமையின் எக்களிப்பு, நாகரிகத்தின் உச்சத்திலே திளைத்துக் கொண்டிருந்த அந்த யுவதிகளைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. நகத்தைக் கடிப்பதும், மையிட்ட விழிகளைச் சுழற்றுவதும், கலகலவென நகைப்பதுமாய் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தனர்.

சங்கரன் ஓரக் கண்ணால் அவர்களை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான்.

மஞ்சள் வாயிலில் சிவப்புப் பூக்கள் அச்சிடப்பட்ட புடவையை ஸ்டைலாக உடுத்தி தலைப்பை நீளமாக விட்டிருந்தாள். புதிய மோஸ்தர் பாடியும் சோளி ரவிக்கையும் அவளுடைய அங்க சௌந்தர்யத்தை எடுத்துக் காட்டின. விழி நிறைய மை. பவுடர் வாசனை ஸ்டாண்டில் நிற்பவர்கள் மூக்கைத் துளைத்தது. இன்னொரு பெண் பச்சை நிறக் கரைப்புடவையைத் தலைப்பை மடித்துக் கட்டி இருந்தாள். ஒன்று இரண்டு ஆபரணங்களும், நாகரிக அலங்காரமும், இருவரையும் அழகிகளாக எடுத்துக் காட்டின.

பெண்… சங்கரனின் மனத் திரையில் காமாக்ஷியின் உருவம் தோன்றிற்று.

காமாக்ஷி நல்ல உயரம். வாளிப்பான தேகம். நல்ல சூழ்நிலையில் வளர்ந்ததினால் வியாதி, பலஹீனம் இல்லாமல் மதமதவென்று வளர்ந்திருந்தாள்.

”மதமதவென்று வளர்த்தியைப் பாரு! தீட்டு தீட்டு என்ற நடையையும் பலத்தையும் பார்த்தாலே பயமாயிருக்குடா” என்று அவன் விவாகத்தின் போது யாரோகூடச் சொன்னார்கள்.

பட்டணத்தின் நோஞ்சலான, இளைத்துக் கன்னம் ஒட்டிய பெண்களை அலங்காரப் பொம்மைகளாக நினைத்து வெறுத்ததால்தான், காமாக்ஷியை விவாகம் செய்து கொண்டான்.

மாநிறமானாலும் களையான முகம்; பாவம் நிறைந்த குறுகுறுத்த விழிகள். எப்பொழுதும் சோர்வே தட்டாத முறுவல் நெளிந்தோடும் முக விலாசம். எந்த உழைப்பிற்கும் பின்வாங்காத சுறுசுறுப்புடன், அவள், வாழ்வில் கரும்பைப் போன்ற இனிய சுவையுடன், தென்றலைப் போன்ற சலசலக்கும் இனிமையுடன், அவனுக்கு மலர்ச்சியூட்ட, அவன் வாழவிலே விளக்கேற்றி வைத்தொளி பரப்ப 12 வருஷங்களுக்கு முன் அவன் கைப் பிடித்தாள்.

ஆனால்… இன்று… காமாக்ஷி… இளைத்து உலர்ந்து எலும்பெடுத்து, ரத்தமற்ற சோகையால் வெளுத்து… ஏன்? எதனால்?…

அவளை விவாகம் செய்து கொண்டு அவன் வாழ்க்கை இன்பத்தை அனுபவித்து விட்டான். அவனுக்காகத் தன்னையே தியாகம் செய்து உழைத்து ஓடாகிப் போன அவள் இன்று சக்கையாகி விட்டாள். அவனைக் கைப் பிடித்த அவள் என்ன சுகம் கண்டாள்? குறைந்த வருமானம், போஷாக்கு இல்லாமல், இரண்டு வருடத்திற்கு ஓர் குழந்தை… இடையிலே இரண்டு குறை பிரசவம்… வியாதி பிடித்த குழந்தைகளைப் பராமரிக்கும் சக்திக்கு மீறிய வறுமை.

இள வயதில் வறுமையில் அவள் உழன்ற நாட்களில் வாய் திறந்து ஏதாவது கேட்டிருக்கிறாளா? இளமையின் முறுக்குடன் வாழ்வில் பிரவேசித்தவள். தாய்மைச் சுமை பிரதி வருஷமும் ஏற, சொல்லொணா வேதனை விழிகளில் சுடர்விட, இதயத்தின் எண்ணங்கள் குமுற, களைத்து… துவண்டு துடிக்கும் இன்றும்தான் அவள் வாய் திறந்து ஏதாவது கேட்கிறாளா!

சங்கரன் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. வெடித்துக் கொண்டு வரும் துயரத்தை ‘‘பகவானே!…” என்ற பெருமூச்சுடன் வெளியிட்டவாறே பஸ்ஸுக்காக முண்டி அடித்துக் கொண்டு ஓடினான்.

***

டாக்டர் லஷ்மி தயாராக ஆபரேஷன் கவுனை அணிந்து கொண்டு ஸ்டவ் எதிரே நின்றாள். நர்ஸ் பாக்கியம் ஆயுதங்களை கொதிக்க வைத்துப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். டாக்டர் லஷ்மி அறையில் குறுக்கிலும் நெடுக்கிலுமாய் உலாவாலானாள். அவளுடைய நிச்சலனமான முகத்தில் சிந்தனை பரவி நின்றது.

”ஏ பாக்கியம்! உனக்கு என்ன தோணுது?”

பாக்கியம் ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கும் காமாக்ஷியை அவநம்பிக்கையோடு ஏற இறங்கப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினாள்.

டாக்டர், காமாக்ஷியின் நாடியைப் பிடித்துப் பார்த்தாள். விழிப்பும் தூக்கமும் அற்ற நிலையில் காமாக்ஷி புரண்டு கொடுத்தாள். டாக்டரைக் கண்டதும் உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயன்றாள்.

அவள் அருகில் குனிந்து, ”உனக்கு என்னம்மா வேணும்?” என்றாள் டாக்டர்.

”ஒரு முறை அவரை…”

”யாரை அம்மா? பாட்டியைக் கூப்பிடட்டுமா?”

காமாக்ஷி வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.

”உன் புருஷரையா?” டாக்டர் நர்ஸிடம் ஜாடை காட்டினாள்.

”ஊம். குழந்தைகளை ஒரு தரம்…” மேலே அவளால் பேச முடியவில்லை. பலமான வலி அழுத்தியது. சோர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள். டாக்டர் லட்சுமி அன்புடன் அவள் தலையைக் கோதியவாறே, ”பயப்படாதே, அம்மா. எல்லாம் கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும். இதோ கை நீட்டு, பார்க்கலாம்” என்றாள்.

ரத்தமற்ற எலும்பெடுத்த கையிலே ஊசியை ஏற்றினாள் டாக்டர். உடல் முழுமையும் ஏதோ விறுவிறுவென ஏறுவது போல் இருந்தது காமுவுக்கு. அவள் விழிகள் வாயிற்படியை வட்டமிட்டன.

நர்ஸுடன் உள்ளே நுழைந்த சங்கரனைக் கண்டதும், அவள் முகம் மலர்ந்ததையும், உதடுகளில் முறுவல் நெளிந்தோடியதையும் கண்ட டாக்டர் லட்சுமி மனதிற்குள் வியந்து கொண்டாள்.

‘அடி அசட்டுப் பெண்ணே, உனக்குத்தான் உன்னை இந்தப்பாடு படுத்தி வைக்கும் புருஷன் பேரில் எத்தனை பிரியம்! எவ்வளவு அன்பு!’

”பயப்படாதே காமு… நான் இருக்கிறேன்!” என்றான் சங்கரன். அவன் குரல் நடுங்கியது. கை கால்கள் உதறலெடுத்தன.

”குழந்தைகள்… ஜானு… அவளை என்ன பண்ணி…” மேலே பேச முடியாது குளோரபாரத்தின் நெடி மெல்ல ஏறியது. காமாக்ஷிக்குத் தன்னை யாரோ அணு அணுவாக அந்தகாரத்தில் இழுத்துச் செல்லுவது போல் தோன்றியது. ஒரே இருட்டு. கண்களை விழிக்க முயன்றாள்… இயலவில்லை. கை காலை அசைக்க முடியவில்லை. மனதில் திகில் சூழ்ந்து கொண்டது குழுந்தைகள் ஒவ்வொருவராக அவள் நினைவில் தோன்றினர்.

”பாவம்! குழந்தைகள் என்ன திண்டாடுகிறார்களோ! கோபு எச்சுவாவது பரவாயில்லை… ஜானு… பால் மனம் மாறாத குழந்தை… என்ன செய்வாள்? சிரங்கு அரிக்கத் துடித்தும் போவாளே!… இவருக்கு ஒன்றுமே பழக்கமில்லையே?…. பகவானே! குழந்தை… வீறிட்டால்…”

எல்லாம் மறைந்துவிட்டது. உடலை, விரலைக் கூட அசைக்க முடியவில்லை. காமாக்ஷி நினைவிழந்து விட்டாள்.

சங்கரன் வெளியே வந்தான். கதவு தாழிடப்பட்டது. வெளி ஹாலில் நிசப்தம் பரவி நின்றது. அவனைப் போன்று ஒரிருவர் மோட்டு வளையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர். சங்கரன் பெஞ்சில் சாய்ந்து கொண்டான். குறுக்கும் நெடுக்கும் டக்டக் என பூட்ஸ் ஒலி எழுப்ப நடை போடும் நர்ஸுகளையும், பரபரப்புடன் அலையும் வார்ட் பையன்களையும் பார்த்து அலுத்த சங்கரன் கண்களை மூடிக் கொண்டான். மருந்து வாசனை நெடி அவன் வயிற்றைக் கலக்கியது.

உள்ளே ஒலிக்கும் சிறு சப்தம் கூட அவன் சிந்தனையை கலைத்தது. ஆயுதங்கள் வைக்கப்படும் ஓசை, தடதடவென்று பைப் தண்ணீர் கொட்டும் சப்தத்தைக்கூடக் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டான். ஒவ்வொரு வினாடியும் மெள்ள மெள்ள ஊர்வது போலத் தோன்றியது மனதிற்கு.

மிகுந்த அயர்வால் சங்கரன் இமைகளைத் தூக்கம் அழுத்தியது. பெஞ்சில் சாய்ந்தவாறே கண் அயர்ந்து விட்டான்.

விழிப்பிலே, மனம் விவரமறிந்திருக்கும் நிலையிலே ஓடிய சிந்தனைகள் தொடர்ந்து எழுந்தன. பஸ் ஸ்டாண்டில் கண்ட பெண்களின் யௌவனப் படபடப்பும் குதூகலமும் உற்சாகமும் காமாட்சியிடமும் நிறைந்திருந்ததே, அதெல்லாம் எங்கே? அதற்குத்தான் முன்பே பதில் சொல்லியாகி விட்டதே. அவன் சேவையில் அவ்வளவையும் செலவழித்து விட்டாள். அவன் அதையெல்லாம் அனுபவித்துத் தீர்த்து விட்டான். சீ! நீ என்ன மனிதன். அவளைப் பற்றி, பலாபலன்களைப் பற்றி நினைவேயில்லாமல் நிலை கண் குருடனாக வாழ்ந்தாய்! உனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பத்திரப்படுத்தி, அளவோடு பயன்படுத்தி, நீடித்து நிலைத்து நிற்கச் செய்து கொள்ள வேண்டு மென்ற நினைவே இல்லாமல் பாழாக்கிவிட்டாய்… கரும்பை வேருடன் பிடுங்கி விட்டாய்…

இல்லை… இல்லை… இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்… அவள் இந்தப் பூட்டுக்குத் தப்பி வந்து விடுவாள். அவள் உடலில் ரத்தம் ஊற, பலம் ஏற, டானிக்குகள் வாங்கிக் கொடுக்க வேண்டும். குடும்ப வேலையில் அவள் சக்தி விரயமாகி விடாமல் பாதுகாக்க வழிகோல வேண்டும்…

திடீர் எனக் குழந்தை வீறிட்டது. சங்கரன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். காமாக்ஷியிருந்த அறைக்குள் கசமுசவென்று பேச்சு. கதவருகில் சென்று நின்றான்.

women and child

குழந்தை மறுபடியும் வீறிட்டது. ”ஆம்புளைப் பிள்ளை!” என்று நர்ஸ் கூறியது காதில் விழுந்தது. சங்கரன் முகம் விரிந்தது. ‘‘அப்பாடா!” என்று பெருமூச்செறிந்தான். நிச்சயம் பிள்ளையாருக்குப் பத்துக் காய் சூறை போட வேண்டும். இந்தக் கண்டத்திற்குத் தப்பி விட்டாள்! இனிமேல்… இனிமேல் அவளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா! நான் பெரிய முட்டாள்! பாவம்!.. அவளை ரொம்பக் கஷ்டப்படுத்தி விட்டேன்.

மறுவினாடி கதவு திறக்கப்பட்டது. அவனைத் தள்ளிக் கொண்டு நர்ஸ் வெளியே ஓடினாள். அவள் முகத்தில் ஏன் அத்தனை பரபரப்பும் கலவரமும்!

குழப்பத்துடன் அறைக்குள் எட்டிப் பார்த்தான். ஆபரேஷன் மேஜைமேல் காமாக்ஷி முகம் வெளிறி, கண்மூடிக்கிடந்தாள். லேடி டாக்டர் மும்முரமாக ஏதா இஞ்சக்‌ஷன் ஏற்றிக் கொண்டிருந்தாள். குழந்தை வீறிட்டு அலறிக் கொண்டேயிருக்கிறது.

அவனுக்குக் காரணம் புரியவில்லை. ஆனால் ஒரு பெரிய பயம் அவனைப் பிடித்து நெருக்கி அழுத்தியது. மூச்சு முட்டுவது போலிருந்தது. நர்ஸ் அவனைத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் நாலைந்து டாக்டர்கள் வந்து உள்ளே போனார்கள்.

சங்கரன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். ” டாக்டர்… இதைக் கொஞ்சம் பாருங்கள்…” என்று உள்ளே வந்த ஒரு டாக்டரிடம் சொன்னாள் டாக்டர் லஷ்மி. ”ஹோப்லஸ்கேஸ். சீரியஸ் ஹெமரேஜ் (ரத்த நஷ்டம்). நாம் என் செய்ய முடியும்?” என்றாள் தொடர்ந்து.

புதிய டாக்டர் நாடியைப் பார்த்து விட்டு, ” நம்முடைய உதவிக்கும் சக்திக்கும் மீறிவிட்டது!” என்று காமாட்சியின் கையை விட்டாள். கை தொப்பென்று கீழே விழுந்தது.

சங்கரனை யாரோ மண்டையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. ”ஐயையோ, டாக்டர்!” என்று வீறிட்டான்.

குழந்தையும் வீறிட்டது. ”என்னையும்தான் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய் விட்டாள்!” என்று சொல்லி அலறியது போல இருந்தது அதன் வீறிடல்.

(1950)

(‘கலைஞன் பதிப்பகம்’ வெளியிட்ட ‘மணிக்கொடி இதழ் தொகுப்பு’ பாகம் மூன்று புத்தகத்தில் இடம் பெற்ற சிறுகதை).

Image courtesy:

http://www.thoguppukal.in

http://www.sweet-sprout.com

http://fineartamerica.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

எம்.ஏ.சுசீலா

கீதா பென்னட்

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 33

எம்.ஏ.சுசீலா 

M A SUSILA-CBE-13

சிறுகதை, பெண்ணிய ஆய்வு எனும் இருதளங்களிலும் இயங்கி வரும் இவர் 1949ல் காரைக்குடியில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். அதே பாத்திமா கல்லூரியில் இடையே இரண்டாண்டு காலம் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் 1979ல் எழுதிய முதல் சிறுகதையே ‘கல்கி’ வார இதழில் முதல் பரிசைப் பெற்றுத் தந்தது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் இவருடைய 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய சில கதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ‘கண் திறந்திட வேண்டும்’ என்ற சிறுகதை இயக்குநர் பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளிவடிவம் பெற்றிருக்கிறது. சொற்பொழிவுகளில் ஈடுபாடு கொண்டவர். 150க்கும் மேற்பட்ட வானொலி சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகும் எழுத்தாளுமை இவருடையது. தாஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஊர்மிளை 

sita-raji-chacko

ருள் பிரியாத புலர் காலைப் பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன்அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்று கொண்டிருந்தது. சீதையின் வரவைஎதிர்நோக்கியபடி சாரதிக்கு அருகே இறுகிய முகத்தோடு லட்சுமணன்.

“அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்!இன்னும் உறக்கம் கலைந்தபாடில்லை. நேற்றுப் பகல் முழுவதும் ஏதோ உளைச்சலோடும்வேலைப் பளுவோடுமே இருந்தார்…’’

‘‘அதனால் வலுக்கட்டாயமாக எழுப்பி விடைசொல்லிக் கொள்ள எனக்கும் மனம் வரவில்லை. அதனாலென்ன…அவர்தான் நேற்று மாலையேவிடை கொடுத்துவிட்டாரே…நாம் கிளம்பலாம் வா…” என்றபடி கலகலப்பான உற்சாகமானமனநிலையுடன் வெளிப்பட்டு வருகிறாள் சீதை.

அந்தப்புர அடைசலிலிருந்து விடுபட்டு வெளிக்காற்றின் சுவாசத்தை மீண்டும்நுகரவிருக்கும் பரிசுத்தமான ஆனந்தம் ஒன்று மட்டுமே அவளுக்குள் நிரம்பித்தளும்பிக் கொண்டிருக்கிறது. அவளோடு இயல்பாகப் பேச முடியாமல் தயங்கித்தடுமாறும் லட்சுமணன்,“பார்த்து ஏறுங்கள் அண்ணி” என்று மட்டுமே மெல்லிய குரலில் முனகுகிறான்.

மீண்டும் ஒரு சிறிய சலசலப்புக் கேட்கிறது. சற்றும் எதிர்பாராத ஒருதருணத்தில் ஊர்மிளையும் அங்கே வந்து சேர்கிறாள். சலனமே காட்டாத இயல்பானபாவனைகளுடன் ஏதோ ஏற்கனவே பேசி வைத்துக் கொண்டதைப் போல தேரில் ஏறி,சீதையின் அருகே அமர்கிறாள். அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத லட்சுமணன், லேசாகத் துணுக்குற்றுப் போகிறான். ஆனாலும் கூட லேசான ஓர் ஆறுதலின் நிழல்அவனுள் படர்கிறது. சீதையின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டேதனியாகப் பயணம் செய்ததாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது அவனுக்கில்லை..!ஒருக்கால் தன் தர்மசங்கடம் புரிந்துதான் தன் உதவிக்காக வந்திருக்கிறாளோஅவள்? நன்றி உணர்வோடு ஊர்மிளையை அவன் ஏறெடுத்துப் பார்த்தபோது சீதை அவளோடுஏதோ பேசிக் கொண்டிருக்கிறாள்.

“அட…ஊர்மிளையா? பார்த்தாயா…உன்னையும் உடன் அழைத்துக்கொண்டு போகலாமென்றுஎனக்குத் தோன்றவே இல்லை! இந்த லட்சுமணனுக்கும் கூடத்தான் அதுதோன்றவில்லை. இந்தப் பயணத்தில் நீயும் என்னோடு வருவது எனக்கு எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? அது இருக்கட்டும்… நீ இப்போதுவந்திருப்பது எனக்காகவோ…இல்லையென்றால் இனிமேலும் லட்சுமணனை விட்டுப்பிரிந்திருப்பது சாத்தியமில்லை என்பதாலா? உண்மையைச் சொல்…”

குறும்புச் சிரிப்புடன் கேட்டபடி அவளது கரங்களைப் பற்றிக் கொண்ட சீதை குழந்தையைப் போல குதூகலிக்கிறாள்.

ஒப்புக்கு முறுவலித்தாலும் ஊர்மிளையின் புன்னகை உயிரற்ற வறட்சியுடன்இருப்பது, வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதைக்கு அப்போதுஉணர்வாகியிருக்கவில்லை.

“ஒரு தடவையாவது கங்கை நதி தீரத்தை…அதில் தவழும் அலையின் வீச்சுக்களைஆசைதீரப் பார்த்தபடி குளிரக் குளிர அதில் நீராட வேண்டும் ஊர்மிளை. ஆனால்,நம்மைப் போன்ற அரசகுலப் பெண்களுக்கெல்லாம் அது அத்தனை சுலபமாகசாத்தியமாகிவிடுமா என்ன? கைகேயி அத்தையால் அந்தப் பேறு எனக்கு வாய்த்தது.அவர்கள் பெற்ற அந்த வரம்..! ஊராரின் பார்வையில் அது ஒரு சாபமாகக் கூடஇருக்கலாம். ஆனால் எனக்குப் பல பொன்னான வாசல்களை அது திறந்து வைத்தது.அரண்மனையிலேயே இருந்திருந்தால் அரச கடமைகளே அவரை விழுங்கிவிட்டிருக்கும்.ராவணனின் கையில் சிக்கும் வரை எந்தக் குறுக்கீடும், எவரது இடையீடும்இல்லாமல், வினாடி நேரம் கூட அவரை விட்டுப் பிரியாமல் வாழ்வது எனக்குவாய்த்திருக்குமா என்ன?”

வாய் மூடாமல் பேசிக்கொண்டிருந்த சீதைக்கு இந்தக் கட்டத்தில் தன்பேச்சில் ஏதோ ஓர் அபசுரம் தட்டுவது புலனாக, சற்றே இடைவெளி விடுகிறாள்.இலக்குவனுக்கும் ஊர்மிளைக்கும் கண்கள் வழி நடந்தேறும் கருத்துப் பரிமாற்றம்அவளைத் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.

“ஆனாலும் நீ ரொம்பத்தான் மோசம் லட்சுமணா! அண்ணன் மீது என்னதான் பாசம்என்றாலும் கட்டிய மனைவியை விட்டுப் பதினான்கு ஆண்டுகளா பிரிந்திருப்பது? அவசர ஆவேசத்துடன் காட்டுக்குக் கிளம்பியபோது இவளைப் பார்த்து விடைபெறவேண்டும் என்று கூட உனக்குத் தோன்றவில்லை இல்லையா? வன வாசத்தில்இதைப் பற்றி எத்தனை முறை நாம் பேசியிருக்கிறோம்?” என்று செல்லமாக அவனைக்கடிந்து கொண்டு விட்டு ஊர்மிளையின் பக்கம் திரும்புகிறாள்.

“பதினான்கு ஆண்டுகள் ஐயாயிரத்துக்கும் மேலாக நீண்ட பகல்களும்இரவுகளும்..! எப்படித்தான் அந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டாய் ஊர்மிளை..? அசோகவனத்து நாட்களே என்னை ஆட்டி வைத்துவிட்டன..! ஆனால், அத்தனை நாளும் இவன்தூக்கத்தையும் சேர்த்து நீ தூங்கியதாகத்தான் ஊரார் பேசிக்கொள்கிறார்களாம்..! பேசுபவர்களுக்கு என்ன? தங்களுக்கென்று வந்தால்தானே எந்தநோவின் வலியும் தெரியும்!”

“ஊர்…ஊர்…ஊர்… எப்போதும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும் ஊரைப் பற்றியகவலை ஒன்றுதான். அதன் நாற்றமடிக்கும் வாயில் விழாமல் என்னைக்காத்துக்கொள்வதற்காகவே வெளி வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தேன் சீதா..! நல்லது கெட்டது என்று எதற்கும் எந்தக் காரணத்துக்காகவும் நான் வெளியே வரவேஇல்லை. அதற்குத்தான் இந்தப் பட்டம்…”

வறண்ட புன்னகையோடு விரக்தியான தொனியில் விடையளிக்கிறாள் ஊர்மிளை.

“சரி விடு ஊர்மிளை…அதற்காக நீ லட்சுமணனை வெறுத்துவிடாதே.அண்ணாவுக்குப் பணிவிடை செய்த நேரம் போக பாக்கியிருந்த நேரம் முழுக்க அவன்மனதுக்குள் நீயும், உன் நினைவுகளும் மட்டும்தான் நிறைந்து கிடந்தன.பர்ணசாலை வாசலில் வில்லைப் பிடித்துக் கொண்டு எங்களுக்காக அவன் காவலிருந்தஅந்த நெடிய இரவுகளில் அவன் கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர் உன்நினைவுகளின் ஈரத்தையும் சுமந்து கொண்டுதான் ஓடியிருக்கிறது. அப்போது அவன்தன்னை எவ்வளவுதான் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அது சாத்தியமாகாதபடிஅவன் உதடுகள் உன் பெயரைத்தான் உச்சாடனம் செய்து கொண்டிருந்தன. இந்தஉண்மையை அவனோடு துணைக்கிருந்த குகன் என்னிடம் சொல்லியிருக்கிறான்.சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தபோது அவன் கொண்டிருந்த மூர்க்காவேசம் கூட உன்மீது அவன் வைத்திருந்த காதலின் வேகத்தால் விளைந்ததுதானே…”

Lakshmana 2அந்தப் பேச்சின் ஓட்டத்தை திசை மாற்ற முயல்கிறாள் ஊர்மிளை. “போதும்…போதும்…இப்போது வேறு ஏதாவது பேசலாம் சீதா. நாம் இருவருமாகச்சேர்ந்து அபூர்வமாக ஒன்றாக வந்திருக்கிறோம். நம் வழியில் தென்படும்காட்சிகளோடு பிணைந்திருக்கும் உன் அனுபவ முடிச்சுக்களை ஒவ்வொன்றாகஅவிழ்த்துச் சொல்லிக்கொண்டே வாயேன், கேட்கிறேன். அங்கே மாளிகையில் உனக்கோஎனக்கோ அதற்கான அவகாசமே கிடைத்ததில்லை.”

அந்த ஒரு வார்த்தைக்காகவே காத்துக்கொண்டிருந்த சீதை, “சஞ்சலமானசூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும்அனுபவங்களும் பின்னாளில்அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப்பார்த்தாயா ஊர்மிளா…” என்று தொடங்கி, சித்திரகூடம், தண்ட காரண்யம், அசோகவனம் என்று தன் நினைவுச் சேமிப்பின் பக்கங்களைப் பிரித்து மலர்த்தஆரம்பித்துவிடுகிறாள்.

ராவண வதம் முடிந்து, அயோத்தியில் மறுவாழ்க்கையைத் தொடங்கி அவள்கருவுற்ற நாள் தொட்டு அந்தப் பழைய பாதைகளுக்குள் ஒரு முறை பயணித்து வரவேண்டும் என்பதே அவளது கனவாக இருந்து வந்திருக்கிறது. முந்தைய சுமைகளும்மனக்குழப்பங்களும் நீங்கப் பெற்ற புதிய நிறைவுகளின் பெருமிதத்தோடு, அதேஇடங்களுக்குள் உலவி வர வேண்டுமென்ற தன் தாகத்தை அவ்வப்போது ராமனிடம் அவள்பகிர்ந்து கொண்டுமிருக்கிறாள். அவனும் உடன் வந்திருந்தால் இன்னும்கூடமகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும். அது முடியாமல் போனாலும் தனது நுட்பமானவிருப்பத்தைக் கூடச் சரியான தருணத்தில் நிறைவேற்றித் தந்திருக்கும் கணவனைஎண்ணி, அவள் உள்ளம் ஒரு கணம் கசிகிறது.

அந்தப் பேதை உள்ளம் போட்டு வைத்திருக்கும் கணக்கு லட்சுமணனின் உள்ளச்சுமையை இன்னும் கூட்டுகிறது. அதை இறக்கி வைக்கும் தவிப்புடனும்தாகத்துடனும் அவன் ஊர்மிளையை நிமிர்ந்து நோக்கியபோது அவள் கண்களின்வெறுமையான பார்வையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் மர்மமான ஏதோ ஒருபுதிரும் அவனுக்குள் கலவரத்தைக் கிளர்த்துகின்றன. சீதையின் பேச்சைஆர்வமுடன் கேட்பதுபோல அவள் காட்டிக் கொள்வதும் கூட ஒரு பாவனை போலவேஅவனுக்குப்படுகிறது.

நேற்றை இரவின் கணங்கள் அவனுக்குள் ஊர்ந்து நெளிகின்றன.

***

நினைவு மலரத் தொடங்கிய நாள் முதலாக அண்ணனின் சொல்லுக்கு அடுத்த சொல்இல்லாமல் வாழ்ந்து பழகி விட்டிருந்தாலும் அன்று…அந்தக் கணம்…ராமன் தந்தஅதிர்ச்சியைத் தாங்கும் வல்லமை இலக்குவனுக்கு இருந்திருக்கவில்லை.நீர்ப்பந்து போல முண்டியடித்துக்கொண்டு மேலெழும்பி வரும் எதிர் வார்த்தைகள்வலுக்கட்டாயமான மனோதிடத்துடன் பிடித்தழுத்தி உள்ளத்தின் பாதாளஆழங்களுக்குள் தள்ளிவிட்டுக்கொண்டே ஒரு மௌனச் சிலை போல அண்ணனின் முன்புபாறையாய் இறுகி நின்று கொண்டிருக்கிறான் அவன்.

lakshmana 1“இந்தக் காரியத்தை நான் என் உள் நெஞ்சின் ஒப்புதலோடு செய்துகொண்டிருப்பதாகத்தான் நீயும் கூட நினைக்கிறாயா தம்பி” தழுதழுத்துத்தள்ளாடும் ராமனின் சொற்களை அதற்குமேல் பொறுத்துக் கொள்ள ஆற்றாமல்வெடித்துச் சிதறுகிறான் லட்சுமணன்.

“மணிமகுடம் என்ற முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள், உள்நெஞ்சின் வழிகாட்டுதலோடு மட்டுமே எப்போதும் இயங்கிவிட முடிவதில்லைலட்சுமணா! ஆயிரம் திசைகளை நோக்கி நீளும் ஆயிரம் வழிகாட்டும் நெறிகள்அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாரத்தை அன்றே பரதன்ஏற்றுத் தொடர்ந்திருந்தால் என் உள்ளம் சொல்வதை மட்டுமே நான் கேட்கும்வாழ்வு எனக்கு வாய்த்திருக்கும்.”

மறுமொழியாக, அபிப்ராயமாக, ஆலோசனையாகச் சொல்ல நினைத்த ஒரு சிலவார்த்தைகளையும் அண்ணனின் கண்ணீர் கரைத்துவிட, ‘‘தங்களின் ஆணையை நாளைகட்டாயம் நிறைவேற்றி விடுகிறேன் அண்ணா…” என்று மட்டுமே சுருக்கமாகச் சொல்லிமுடித்துவிட்டுச் ‘சட்’டென்று வெளியேறித் தன் அந்தப்புரம் வந்துச்சேர்கிறான் லட்சுமணன்.

உணவு பரிமாறும் வேளையில் அவனது முகக் குறிப்பிலிருந்தே அவன் நெஞ்சின்நெருடலை இனம் கண்டுவிட்ட ஊர்மிளை அவன் தலையை ஆதரவாய்க் கோதியபடியே இவ்வாறுகேட்கிறாள், “இன்று உங்கள் அண்ணா…என்ன சுமையை உங்கள் தலையில் ஏற்றிவைத்திருக்கிறார்?”

இந்தக் கேள்வி லட்சுமணனை எரிச்சலூட்டி மெல்லிதான ஒரு கோபத்தையும்அவனுள் படரவிட்டபோதும் தன் உள்ளத்தை இத்தனை துல்லியமாக அவளால் படிக்கமுடிந்திருப்பது அவனுக்கு வியப்பூட்டுகிறது. அந்த வியப்பினூடே சிறுமகிழ்ச்சியும்கூட! திருமணமாகிச் சில நாட்களிலேயே அவளை விட்டுப் பிரிந்துபோய் அகழி போல் நீண்ட கால இடைவெளி அவர்களுக்கிடையே திரையிட்டிருந்தபோதும்தங்கள் மனங்கள் இன்னும் முற்றாக விலகி விட்டிருக்கவில்லை என்பது அவனுக்குலேசான ஆறுதலை அளிக்கிறது.

ஊராரின் ஒரு வார்த்தைக்காக உள்ளத்தின் தடையையும் மீறிக்கொண்டு அண்ணியைக்கானகத்தில் கொண்டுபோய் விட்டாக வேண்டிய கட்டாய நிர்பந்தத்தில் அண்ணனின்ராஜநீதி அவனுக்குப் போட்டு வைத்திருக்கும் கைவிலங்கு பற்றிக்கழிவிரக்கத்தோடு அவளிடம் விவரிக்கிறான் அவன்.

ஒரே கணம் அதிர்ந்து போகும் ஊர்மிளை, அடுத்த நொடியே சமநிலைக்கு மீண்டு விடுகிறாள்.

“அரச பதவி அளிக்கப்படுவதே முறையில்லாத வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிப்போடுவதற்கும் தவறான நீதிகள் அரங்கேறி விடாமல் தடுக்கவும்தான் என்பதை உங்கள்அண்ணா என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறார்..?”

“அண்ணாவை குற்றம் சொல்லாதே ஊர்மிளை. அந்த இடத்தில் இருந்து பார்த்தால்மட்டுமே என்னென்ன நெருக்கடிகள் எங்கிருந்தெல்லாம் எதிர்ப்படும் என்பதைப்பூரணமாகப் புரிந்துகொள்ள முடியும்.”

“போர்ப்பகை என்ற ஒன்று மட்டுமே புறப்பகையாகி விடுமா என்ன? அதை மட்டும்விரட்டுவதுதானா ஒரு மன்னனின் கடமை..? என்றோ எவரோ போட்டு வைத்த சட்டங்களின்மீது மண்டிக்கிடக்கும் களைகளை வேரறுத்து அதில் படிந்து போன தூசிகளைத்துடைத்துத் தூர் வார வேண்டிய கடமை அவனுக்குக் கிடையாதா என்ன? சரி… அதெல்லாம்போகட்டும். தெரியாமல்தான் கேட்கிறேன். செய்யாத ஒரு குற்றத்துக்கு இரண்டுமுறை தண்டனை என்பது எந்த நியாயப் புத்தகத்தின் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது?”

“இதைப் பற்றி இனிமேல் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை ஊர்மிளை. நாளைஅண்ணியிடம் இதை எப்படிச் சொல்வது? அதைத் தொடர்ந்து அவளுடைய வேதனையை எப்படிஎதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே இப்பொழுது என்னைத் தின்று கொண்டிருக்கிறது.”

“அப்படியானால் அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள்…”

“வேறு வழி?”

“வெறுமே ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன். நாளை இதே போல வேறொருநெருக்குதல் நேரும்போது…சரயு நதியில் மூழ்கி உங்கள் உயிரை நீங்களேமாய்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் தமையனார் கட்டளையிட்டால்..?”

‘‘அதையும் கூட நான் நிறைவேற்றுவேன் ஊர்மிளை…” ஏதோ அவசர வேலையிருப்பது போலஅவன் கரங்களின் பிடியிலிருந்த தன் விரல்களை மெல்ல விடுவித்துக்கொண்டு உள்ளேநகர்ந்து போகிறாள் ஊர்மிளை.

***

தேர், சீதை இறங்க வேண்டிய இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மலைஅடுக்குகளும்குன்றுகளும் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் பச்சை மரகதமாய்மினுங்கிக் கொண்டிருக்க, இடையிடையே கீற்று வேய்ந்த ஓலைக்குடில்கள்தென்படுகின்றன. துல்லியத் தெளிவுடன் சலசலக்கும் சிற்றோடை நீர்ப்பரப்புகள், தாமரை பூத்த தடாகங்கள், விட்டு விடுதலையாகிச் சிறகடிக்கும் புள்ளினங்களின்கலவையான ஒலி, எழும்பித் துள்ளும் பந்து போன்ற லாகவத்துடன் கால் தூக்கிஅநாயாச வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் மான்கள்…

“இந்த இடம் கண்ணுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் இங்கே இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா லட்சுமணா?”

சீதையின் கேள்வியில் அவளே அறியாதபடி தொக்கி நிற்கும் முரண்நகையின் விசித்திரம் லட்சுமணனை மேலும் வேதனைக்கு ஆளாக்க…“அப்படியே செய்யலாம் அண்ணி” என்று மட்டுமே விடையளிக்கிறான்.

ஓடை நீரைக் கால்களால் அளைந்தபடி ஊர்மிளையிடம் சலிக்காமல்பேசிக்கொண்டிருக்கும் சீதையிடம், காலப் பிரக்ஞையெல்லாம் எப்போதோ கழன்றுபோய்விட்டிருக்கிறது. பொழுதடையும் நேரம் நெருங்குவதை உணர்ந்த லட்சுமணன்அவர்களின் அருகே செல்கிறான்.

sita“அந்த மானைப் பார்த்தாயா தம்பி..? முன்பு வந்த பொன்மானைப் போலவேஇருக்கிறதல்லவா? பயந்து விடாதே, அதைத் தொடர்ந்து போகச் சொல்லி நான் ஒன்றும்உன்னை அனுப்பிவிட மாட்டேன்.”

“அதை வலுவில் சென்று பிடிக்க வேண்டிய தேவையே இல்லை அண்ணி. இங்கேஅருகிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றித்தான் இங்குள்ளமான்கள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும்.”

“என்ன…வால்மீகி மாமுனியா? ஊர்மிளை! நாம் போய் அவரைத் தரிசித்துவிட்டு வந்தாலென்ன?”

“தரிசிப்பதற்கென்று தனியாகப் போக வேண்டியதில்லை அண்ணி. இனிமேல் நீங்கள் தங்கப் போகும் இடமே அதுதான்…இது…அண்ணனின் விருப்பம்…”

எந்த உணர்வையும் இம்மியளவு கூடக் கலந்துவிடாமல் பசையற்ற இயந்திரத்தொனியில், உயிரின் சக்தி அனைத்தையும் ஒன்று கூட்டித் தயக்கத்தோடு இதைச்சொல்லி முடித்தபோது லட்சுமணனின் உயிரே உலர்ந்து போய்விட்டது.

நச்சுப் பாம்பின் கொடும் விஷப் பல்லொன்று உக்கிரமாய்த் தீண்டியதைப் போலவினாடிக்கும் குறைவான நேரம் துடித்துப் போகும் சீதை அடுத்த கணமேநிதானத்துடன் நிமிர்கிறாள்.

“இது…இப்படி…நிகழாமல் இருந்திருந்தால் மட்டுமே நான்ஆச்சரியப்பட்டிருப்பேன். அவர் முகத்தில் மண்டியிருந்த இருளுக்கான காரணம்இப்போது புரிகிறது! உடன் வந்து ஆசிரமம் வழியைக் காட்டவாவது அண்ணாவின்அனுமதி உனக்கிருக்கிறதா இல்லையா லட்சுமணா?”

நடைப்பிணமாய் தளர்ந்து துவண்டபடி…முனிபுங்கவரின் குடிலுக்கு வழிகாட்டச் செல்கிறான் லட்சுமணன்.

குடிலின் வாயிலை அணுகும் நிமிடத்தில்…

“இனிமேல் உன் உதவி தேவைப்படாது. நீ விடை பெற்றுக் கொள்ளலாம்…” என்று உறுதியான தொனியுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொள்கிறாள் சீதை.

கழுவாய் தேடிக்கொள்ளவே வழியில்லாத பாவம் ஒன்றைச் செய்துவிட்டபரிதவிப்புடன் திரும்பியே பார்க்காமல் தேர் நின்ற திசையை நோக்கி விரையத்தொடங்கிய லட்சுமணனின் உள்ளத்தில் ஊர்மிளையின் நினைவு குறுக்கிட, அவளைஉடனழைத்துச் செல்வதற்காகக் திரும்புகிறான். அதற்குள் அவளே அவனை நோக்கிவருகிறாள்.

“நீங்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நான் சீதைக்குத் துணையாகஇங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவனது எந்தமறுமொழிக்கும் காத்துக் கொண்டிருக்காமல், சீதையின் கரத்தை இறுகப் பற்றியபடிவால்மீகியின் ஆசிரமத்துக்குள் நுழைகிறாள் ஊர்மிளை.

தேர்த்தட்டில் லட்சுமணனின் பயணம் தொடங்கியபோது செம்பிழம்பாய் இருந்தமாலைச் சூரியன், வானத்துக் கருமேகங்களுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ளமுயன்று கொண்டிருந்தான்.

***

Image Courtesy:

http://www.krishnasmercy.org/

http://imagination-chariot.blogspot.in/

http://solusipse.edublogs.org/

http://images.fineartamerica.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கீதா பென்னட்

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 32

கீதா பென்னட் 

Image

சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் மகள். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவர். அமெரிக்காவில் வசிக்கிறார். உலகின் பல பாகங்களில் இசை நிகழ்ச்சிகளும் இசைப் பயிற்சியும் அளித்து வருகிறார். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிடமிருந்து தன் இசைக்காக விருதுகளைப் பெற்றிருக்கிறார். பல பிரபல பத்திரிகைகளில் இவருடைய நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ‘வேலைக்குப் போகும் மருமகள்’ என்ற இவருடைய சிறுகதை இலக்கிய சிந்தனை விருது பெற்றிருக்கிறது. இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய ‘ஆதார சுருதி’ சிறுகதைத் தொகுப்பு கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 

***

அதையும் தாண்டி புனிதமானது

பெட்டி, படுக்கையுடன் ஜானகி வீட்டுக்குள் நுழைந்தபோது அப்பா, அம்மா, சீதா எல்லோரும் டெலிவிஷனில் மூழ்கியிருந்தார்கள்.

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அம்பயர் கைகள் இரண்டையுமே மேலே தூக்கி, ‘அவுட்’ கொடுக்க, ரசிகர்களின் கூச்சல் காதைப் பிளந்தது. கேமரா மெல்ல நகர்ந்து சில சந்தோஷ முகங்களைக் காட்டிவிட்டு, இரண்டு அரை நிஜார் பெண்களின் வெள்ளை வெளேர் ஆஸ்திரேலியக் கால்களில் போய்த் தயங்கி நின்றது.

ஜானகியை இன்னும் யாரும் கவனிக்கவில்லை. சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு, ‘ம்…’ என்று கனைத்தாள்.

‘‘தாங்க் காட்! அம்பயர் இப்பவாவது அவுட் கொடுத்தானே!’’ என்ற சீதாதான் முதலில் அவளைப் பார்த்தாள். ‘‘அம்மா யார் வந்திருக் கான்னு வந்து பாரேன்…’’

சீதாவின் குரல் கேட்டு அம்மா அடுக்களையிலிருந்து வெளியே வர, ஈஸிசேரில் சாய்ந்திருந்த அப்பாவும் ஜானகியை வியப்புடன் பார்த்தார். ‘‘வா கொழந்தே’’என்றார்.

‘‘அட ஜானகியா? வா, வா. என்ன இப்படித் திடுதிப்புனு லெட்டர் கூடப் போடாம வந்து நிக்கறே? மாப்பிள்ளை கூட வரலையா?’’ அம்மாவின் முகத்தில் இப்போது தெரியும் அப்பட்டமான மகிழ்ச்சி, இன்னும் சில விநாடிகளில் அழிந்துவிடப் போகிறது. ‘‘என்னடி, மொகமே சொரத்தாயில்லை? குளிச்சிட்டு இருக்கியோன்னோ? சாதாரணமாக இப்படி வர மாட்டியே? சண்டை போட்டுட்டு வந்திருக்கியா?’’ அம்மா மறுபடி கேட்டாள்.

‘‘எனக்குத் தெரியும், நீ ஏன் இங்கே வந்துட்டேன்னு. அத்திம்பேர் மேட்ச் பார்த்திட்டு உட்கார்ந்திருப்பார். நீ உன்னைக் கவனிக்கலைன்னு கோச்சிட்டு ஓடி வந்திருப்பே. மேட்ச் முடியற வரைக்கும் இங்கதானே டேரா’’சீதா சீண்டினாள்.

‘‘மேட்ச் முடியற வரைக்கும் மட்டும் இல்லை. இனிமே என்னிக்குமே இங்கதான் டேரா.’’

Image

ஜானகி, சீதாவுக்கு பதில் சொல்ல, அம்மா திகைத்து நிற்க, அப்பாதான்  ‘‘மொதல்லே அவளை உள்ளே அழைச்சிட்டுப் போய் வயத்துக்கு ஏதாவது ஆகாரம் கொடு. கொழந்தை பசியாயிருப்பாள்’’ என்று அம்மாவிடம் சொன்னார்.

அம்மா தளிகை உள்ளுக்கு ஜானகியை அழைத்துப் போய் தோசை வார்த்துப் போட்டாள். காப்பியைக் கலந்து கொடுக்கும் போது மறுபடி கேட்டாள்.

‘‘அவரோட சண்டை போட்டுட்டு வந்திருக்கியா என்ன? இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைக்கணும்னு ஊரே அவரைக் கொண்டாடறது. அப்படி இருக்கும்போது நீ நிரந்தரமா இங்க வந்துட்டேன்னு சொல்லித் தலையிலே கல்லைத் தூக்கிப் போடறியேடி? நாலெழுத்துப் படிச்சுட்டா இப்படித்தான் திமிரெடுத்து அலையணுமா?’’

‘‘அம்மா ப்ளீஸ்… கொஞ்சம் தொண தொணக்காதேயேன். நான் உன் வயித்தில பொறந்த பொண்ணு. எது செஞ்சாலும் யோசிக்காத செய்யமாட்டேன்னு உனக்குத் தெரியாதா? நான் விவரமா எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன். இப்ப கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.’’

அம்மா ஒன்றும் பேசாமல் புடவைத் தலைப்பால் கண்களை மட்டும் துடைத்துக் கொண்டாள். ஜானகி மாடிக்குப் போய் அறைக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள்.

ஊரே மெச்சுகிற மாப்பிள்ளை! அம்மா பாராட்டுகிறாள். உண்மைதான். அப்பாவின் மீது அவளுக்கிருக்கும் பக்தியும் அன்பும் ராகவனுக்கும் இருக்கிறது என்றுதான் உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது.

அப்பா தஞ்சாவூர் அருகே இருக்கும் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். பண வரவு எதிர்பார்க்காது தமிழுக்குத் தொண்டு செய்பவர் என்றால் அவர்தான் முன்னணியில் நிற்பார். இவர் பாடம் சொல்லித் தரும் நேர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு ராகவன் வார இறுதிகளில் மதுரைக்கு அவரை வரவழைத்தான்.

ராகவன், மீனாட்சி சுந்தரம் என்று இரண்டு பேரோடு ஆரம்பித்த தமிழ் வகுப்பு, சில மாதங்களிலேயே குபுகுபுவென முப்பது பேராக வளர்ந்துவிட்டது. கம்பராமாயணம், தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருப்புகழ், காவடிச்சிந்து என்று வகுப்பு எடுத்து, பல மதுரை இளைஞர்களிடையே தமிழ் வெறியை வளர்த்தார். ரயில் செலவுக்கு மட்டும் ராகவன் பணம் கொடுத்துவிடுவான். அதற்கு மேல் ஒரு பைசா வரவு இல்லை.

அப்பாவோடு அடிக்கடி ஜானகியும் மதுரை போய் வந்ததில் அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அதை அப்பாவும் நோக்கினார். பைசா குறைச்சலில்லாமல் வரதட்சணை கொடுத்து அவளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

Image

ஆனால், ஏனோ தெரியவில்லை. அவர்கள் திருமணம் ஆகி ஒருமுறைதான் அப்பா வகுப்பு எடுக்க மதுரை வந்தார். ஜானகி மட்டும் அடிக்கடி தஞ்சாவூர் போவாள். ராகவன் எப்போதாவது கூட வருவான். கல்யாணம் ஆன பின் மாமனார் மாப்பிள்ளை உறவால் அவர்கள் நட்பு இன்னும் விரியும் என்று நினைத்தவளுக்கு இருவரிடையும் ஒரு திரை விழுந்துவிட்டது புரிந்தது.

‘‘ஒருவேளை மாப்பிளையானதுக்கு அப்புறம் முன் மாதிரி ஃப்ரீயாப் பழக முடியாமத் தவிக்கிறார் போல. எப்படியிருந்தாலும் மொதல்லே எனக்கு அவர் ஆசான். அப்புறம்தான் மாமனார்’’என்றான்.

அதற்கப்புறம் இரண்டு வருடங்களில் அப்பா ரிடையராகிச் சென்னை வந்துவிட்டார். வருடத்துக்கு ஒருமுறை ஜானகி அவரை வந்து பார்ப்பாள். நான்கு நாட்கள் தங்குவாள். அவ்வளவுதான்.
ஆனால், இந்த முறை?

அன்றிரவு எல்லோரும் படுத்துக் கொண்டாகி விட்டது. ஜானகிக்குத் தூக்கம் வரவில்லை. ஊரடங்கிவிட்டது. அம்மாவின் குரல் அவள் தலைமாட்டருகே ஒலித்தது. ‘‘ஜானகி, அப்பா உன்னை மொட்டை மாடிக்கு வரச் சொல்கிறார்’’.

அவளும் சத்தம் போடாமல் எழுந்து மேலே போனாள்.

அங்கே ஓரிரு நிமிடங்கள் ஏதும் பேச்சு இல்லை. அம்மாதான் முதலில் திருவாய் மலர்ந்தாள்.

‘‘பெர்மனென்டா இங்கியே வந்துட்டேன்னு இப்படித் திடீர்னு தலையிலே கல்லைத் தூக்கிப் போடறேயேடி ஜானகி…’’

‘‘ச்… அழாதே. ஜானகியைப் பேச விடு’’சொன்ன அப்பாவின் முகத்தையே ஓரிரு கணங்கள் உற்று நோக்கினாள் ஜானகி.

அவருக்குத் தெரியாதா நடந்தது என்ன என்று? இருந்தாலும் அவர் முகத்திலிருந்து என்றைக்குத்தான் அவர் உணர்ச்சிகளை அறிய முடிந்திருக்கிறது?

‘‘அம்மா, காரணம் ரொம்ப சிம்பிள்.ஊரே மெச்சற உன் மாப்பிள்ளை ஒரு ஃப்ராட். அப்படிப்பட்டவரோடு என்னால குடித்தனம் பண்ண முடியாது.’’

‘‘ஏன்? அப்படி என்ன ஃப்ராட் பண்ணிட்டாராம்?’’ அம்மா அவசரப்பட்டாள்.

‘‘அப்பாகிட்டே மதுரையிலே படிச்சாரே மீனாட்சி சுந்தரம்னு, ஞாபகம் இருக்கா?’’

‘‘ஆமாம். செக்கச் செவேல்னு, வக்கீல் புதுத்தெருவிலே இருந்தாரே? சமீபத்திலே கான்ஸர்லே போய்ட்டார் இல்லியோ?’’

‘‘ஆமாம். அவர்தாம்மா. போறதுக்கு ரெண்டு நாள் முன்னாலே என்னைப் பார்க்கணும்னு சொல்லியனுப்பினார். ஆஸ்பத்திரியிலே போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்தவுடன் ‘ஓ’ன்னு அழுதுட்டார்.’’

‘‘என்னடி ஜானகி? இந்தக் கதையெல்லாம் எதுக்கு?’’ அம்மா கேட்க, ஜானகி அவளைக் கையமர்த்தினாள்.

ஆஸ்பத்திரியில் உயிருக்குப் பேராடிக் கொண்டிருக்கும் ஒருவரது வாக்குமூலம்தான் ஜானகியை ராகவனைவிட்டு வரச் செய்தது, மீனாட்சிசுந்தரம் தன்னிடம் சொன்னதை அப்படியே சொன்னாள்.

‘‘உங்கப்பா எங்களுக்கெல்லாம் தெய்வம் மாதிரி ஜானகி. அவர் பத்து வருஷமா வெய்யில், மழை, பனி பார்க்காமே ரயில் பயணம் பண்ணி எங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார்.

ஒருநாள் க்ளாஸ் முடிஞ்சு எங்கிட்டே வந்து தனியாப் பேசணும்னு சொன்னார். ‘உங்ககிட்ட கேட்கிறதுக்கு வெட்கமா இருக்கு மீனாட்சி சுந்தரம். ராகவன் ஏதோ அவசரம்னு போயிட்டார். அதனாலே வழக்கம் போல ரயில் சார்ஜ் கொடுக்கலை. என்கிட்டே சில்லறை பத்தாது. அடுத்த முறை கொடுத்திடறேன்’என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். ‘ஏன் சார்? ராகவன் உங்களுக்கு ரயில் சார்ஜ் மட்டும்தான் கொடுப்பாரா?’ என்று கேட்டேன்.

‘ஆமாம். பத்து வருஷமா ஒருமுறை கூடத் தவறியதில்லை. இன்னிக்கு என்ன அவசரமோ’என்றார்.

‘என்ன சார் இது அநியாயம்? நாங்க இருபத்து அஞ்சுபேரும் இத்தனை வருஷமா க்ளாஸுக்கு முப்பது ரூபாய்னு ராகவன்கிட்டே கொடுத்திட்டு வரோமே, உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டேன்.

உன் அப்பா அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டார். ‘அப்படியா?’ என்றார். அவ்வளவுதான்.

என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. ‘வாரம் எழுநூத்து அம்பது ரூபாய்னா, மாசம் மூவாயிரம் ரூபாய். பத்து வருஷத்துக்கு எவ்வளவு ஆச்சு? அம்மாடியோவ்! அத்தனையையும் ராகவன் தன் பையிலே போட்டுக்கிட்டு, ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி தன் பாக்கெட்டிலிருந்து ரயில் சத்தம் கொடுக்கிற மாதிரி பாவனை பண்ணிக்கிட்டு இத்தனை வருஷம் உங்களை மட்டும் இல்லை சார். எங்களையும் இல்லே ஏமாத்திக்கிட்டிருக்கான்? அவனை மொதல்லே போலீஸிலே சொல்லணும்.’

துடித்த என்னைத் தடுத்தார் உன் அப்பா. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அப்புறம் இது பத்தி யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு என்கிட்டே கேட்டுக்கிட்டார். அவனைத் திட்டலை. இப்படி நல்லவனா நடிச்சு முதுகிலே குத்திட்டியேடான்னு இன்னிவரைக்கும் அவனைக் கேட்கலை. அவர் என்ன மனுஷரா, இல்லை மகானா? அது மாதிரி மன்னிக்கிற குணம் எவ்வளவு உசத்தி? அவருக்கு மகளாப் பொறக்க நீ எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கணும்? நான் சாகறதுக்குள்ளே நடந்ததை உனக்குச் சொல்லணும்னு துடிச்சேன்.”

சமீபத்தில் இறந்து போன மீனாட்சிசுந்தரம் தன்னிடம் சொன்னதை ஜானகி மூச்சு விடாமல் ஒப்பித்தாள்.

‘‘இப்ப சொல்லும்மா. நான் தெய்வமா நினைக்கிற அப்பாவை ஏமாத்தினவரோடு என்னாலே எப்படிம்மா வாழ முடியும்?’’

அம்மா அதற்குப் பதில் சொல்லவில்லை. அப்பா இப்போது நிதானமாகப் பேசினார்.

‘‘உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்போது இந்த விஷயம் எனக்குத் தெரியாதும்மா. நான் ஏதோ இலவசமாத் தமிழ் சேவை செய்யறேன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, உண்மை தெரிஞ்சப்போ கதிகலங்கிட்டுது. சரி. ராகவனைக் கேட்கிறதாலே என்ன நடக்கும்னு யோசிச்சேன். இன்னிக்குக் கிரிக்கெட் மேட்சிலே பார்த்தோமே, அம்பயர் கொடுக்கும் தீர்ப்பைத்தானே நாம் ஏத்துக்க வேண்டியிருக்கு? அது மாதிரி நமக்கும் மேலே ஒரு அம்பயர் இருக்கான். அவன் தீர்ப்புக்கு விட்டுட்டேன்.”

‘‘அப்பா, நீங்க அவருக்கு தண்டனை தராம இருந்திருக்கலாம். ஆனா, என்னாலே அது முடியாது. ராகவனைப் பிரியறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதுதான் நான் அவருக்குத் தரக்கூடிய தண்டனை’’இப்போது அப்பாவின் மடியில் முகம் புதைத்து அழுதாள் ஜானகி.

அப்பா, அவள் முடியைக் கோதிவிட்டார். வெகு நேரம் பேசாமல் இருந்தார். அவள் அழுது முடித்த பிறகு நிதானமாக, ஆனால், அழுத்தமாகப் பேசினார்.

‘‘ஒவ்வொரு ப்ராப்ளத்துக்கும் ஒண்ணுக்கும் மேற்பட்ட தீர்வு உண்டு ஜானகி. உனக்கு எது சரியோ அதைத்தான் செய்யணும். என் நிலையிலே யாருமே கோபத்தில் ராகவனோடு சண்டைதான் போட்டுருப்பாங்க. ஆனா, நான் எதுவும் கேட்கலை. நடந்தது எனக்குத் தெரிஞ்சு போச்சுன்னு அவனுக்குத் தெரியும். சண்டை போட்டிருந்தா ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரத்தோடு அவன் அதை மறந்திருப்பான். ஆனா, இப்போ அவனோட குற்றமுள்ள மனம் ஒரு நிமிஷமாவது அவனைச் சும்மா விடுமா? அதுவே தண்டனைதானே. யோசிச்சுப் பார்.’’

Image

அவள் பதில் பேசாமல் இருக்க, அப்பா தொடர்ந்தார்.

‘‘எப்பவுமே எல்லாருக்கும் எது நல்லதோ அதைத்தான் செய்யணும். சுயநலமா உன்னை மட்டும் நினைச்சுப் பார்க்கக் கூடாது ஜானகி.’’அப்பாவின் பார்வை இப்போது அம்மாவிடம் இருந்தது.

அப்பா சொன்ன வார்த்தைகளையே அங்கே தங்கியிருந்த நான்கு நாட்களும் அசை போட்டு விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாய் மதுரை திரும்பினாள் ஜானகி.

‘‘ஏன் திடீர்னு கிளம்பிப் போயிட்டே? என் மேலே ஏதாவது கோபமாடா? நான் என்ன தப்பு செஞ்சேன்னு சடுதியிலே என்னை விட்டுட்டுப் போயிட்டே?’’ முகத்தில் நாலு நாளைய தாடியும், சரியான சாப்பாடில்லாமல் வற்றிப் போன முகமுமாய் ராகவன் கேட்டான்.

அவள் நேரடியாக அதற்குப் பதில் சொல்லவில்லை. ‘‘இனிமே அப்பாவுக்கு மாசா மாசம் எழுநூத்தம்பது ரூபாய் அணுப்பணும். அதற்கான ஏற்பாடு செய்யுங்க’’என்றாள்.

‘‘ஏன், ஏன்? எதுக்கு மாசம் அவருக்கு அவ்வளவு பணம்? நம்ம வீட்டுத் தோட்டத்தில் காய்ச்சு வீணாறதா?’’

ஜானகி ஓரிரு கணம் அவன் முகத்தையே ஏறிட்டாள். பின் மெதுவான குரலில் சொன்னாள். ‘‘உங்களுக்கு மனைவி என்கிற உறவை விட அவருக்கு மகள் என்கிற ஸ்தானத்தைத்தான் நான் புனிதமாக நினைக்கிறேன். ராகவன் நான் விரும்பினா, கோர்ட்டிலே மனு போட்டால் போதும். உங்களுடைய மனைவிங்கிற பட்டத்தை ரொம்பச் சீக்கிரம் இழந்துடுவேன். அதுக்கான தைரியமும் எனக்கிருக்கு. இவ்வளவு விளக்கம் உங்களுக்குச் சொன்னா போறும்னு நினைக்கிறேன்.’’

ராகவன் அதற்கு மேல் பதில் சொல்லவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

அவன் போகுமிடம் தபால் ஆபீஸ்தான் என்று ஜானகிக்குத் தெரியும்.

– ஜூன் 2001

Image courtesy:

http://wallpapers-mobilewallpapers.blogspot.in/

http://www.geethabennett.net/

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

ருக்மிணி பார்த்தசாரதி

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 31

ருக்மிணி பார்த்தசாரதி

1957ம் ஆண்டு முதல் நாவல்கள், குறுநாவல்கள், கதைகள் எழுதி வந்தவர். நூல்களின் எண்ணிக்கை 8. மனித நேயம், பெண்ணியம், உயர்ந்த சிந்தனை போன்ற கருத்துகளை படைப்பின் களனாகக்கொண்டு எளிமையான நடையில் கதைகளை எழுதியவர்.

சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனை பரிசு, அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி முதல் பரிசு, கலைமகள் பரிசு உள்ளிட்ட பரிசுகளை பெற்றுள்ளவர்.

‘விபுவா’ தெலுங்கு இதழ் நடத்திய அனைத்திந்திய பன்மொழிச் சிறுகதைகளுக்கான போட்டியில் தமிழ்ப் பிரிவில் பரிசு வென்றவர். இவர், எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் சகோதரி.

கோகிலா நைட்டிங்கேல் 

Image

மையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது. நேற்று மாலை கோகிலாவை யாரோ பெண் பார்க்க வந்திருந்தார்களே! ஏதாவது நற்செய்தி இருக்குமோ? விசாரித்துப் பார்க்கலாமே!

இரண்டு வீடுகளுக்குமிடையே ஒரு தாழ்வான சுவர். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நின்றுகொண்டால் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்.

கமலம் சுவரருகே வந்து நின்றுகொண்டாள்… அவளைக் கண்டதும் கோகிலா தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டுத் தானும் சுவரருகே வந்தாள். ஒரு கண மௌனத்துக்குப் பிறகு ”எனக்குக் கோபம் கோபமாக வருது!” என்றாள்.

”ஏன்?” என்றாள் கமலம், மிருதுவாக.

”பின்னே என்ன, மாமி? நேற்று மறுபடியும் பெண் பார்க்கும் கேலிக் கூத்து நடந்தது. இந்தத் தடவை வந்தவர்கள் மூன்று பேர்தான். அப்பா, அம்மா, மகன்… நான் பட்டுப் புடவையும், நகைகளும், பின்னலும் பூவும் மையும் பொட்டுமாக அலங்காரம் பண்ணிண்டு வந்தேன்… எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணினேன். அந்தக் காலத்தில் அடிமைகளை வாங்குவது போல ஏற இறங்கப் பார்த்தார்கள். வாயைத் திறக்கச் சொல்லிப் பல்லைப் பார்ப்பதற்குப் பதில் பாடச் சொன்னார்கள். நானும் பாடினேன். ரவா கேசரி, பஜ்ஜி இரண்டும் வழக்கம் போல் ஸ்வாஹா… மாமி, பெண் பாக்கும் படலம் நடக்கும் ஒவ்வொரு தடவையும் இந்த ரெண்டு ஜடமும் காணாமல் போகும் வேகத்தைப் பார்த்தால், ‘இவர்கள் பகாசுரன் பரம்பரையோ’னு தோணும். அத்தனை ஸ்வீட்…பின் காபி குடிக்கும் கட்டம்… வழக்கம் போல், ”டிபன் காபி ஏ.ஒன்.” என்கிற சர்டிஃபிகேட். அதற்கு அப்பா, ”எல்லாம் எங்க கோகிலா பண்ணதாக்கும்!” என்று வாய் கூசாமல் பொய்… பின், ”போய் டிஸ்கஸ் பண்ணி கடிதம் எழுதறோம்!” என்ற ரொடீன் வார்த்தைகள். கோபம் எப்படி வராமலிருக்கும், சொல்லுங்கள்!

”பையனுக்கு உன்னைப் பிடிச்சிருந்ததா?”

”தெரியாது!”

”உனக்குப் பையனை?”

”பிடிக்கலை… எனக்கு யாரையுமே பிடிக்கலை… இந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் அவமானப்படறது கட்டோடு பிடிக்கலை. உங்களுக்குத் தெரியுமா மாமி? நேற்று வந்த ‘பார்ட்டி’ என்னைப் பெண் பார்க்க வந்த பத்தாவது ‘பார்ட்டி’. நேற்று நான் பத்தாவது தடவையாக அதே பாட்டைப் பாடினேன். பத்தாவது தடவையாக அம்மா பஜ்ஜி, கேசரி பண்ணி அதை நான் பண்ணதாக அப்பா பொய் சொன்னார். எனக்குக் கோபம் கோபமாய் வருது மாமி… கூடவே துக்கம் துக்கமாக வருது…”

உறவு எதுவுமில்லை, வெறும் பக்கத்து வீட்டுக்காரிதான் என்றாலும் கமலத்துக்குக் கோகிலாவிடம் அன்பும் பரிவும் பெருமளவுக்கு இருந்தன. கமலத்துக்கு ஐம்பத்தைந்து வயது… ஒரே மகனும் அவன் மனைவியும் வேலைக்குப் போகிறவர்கள். அவர்கள் வீட்டுச் சமையலறையிலிருந்து பார்த்தால் பக்கத்து வீட்டுச் சமையலறை தெரியும்.

கோகிலாவும் தன் பெற்றோருக்கு ஒரே குழந்தைதான். வயது இப்போது பத்தொன்பதுதான் என்றால் நம்பத்தான் முடியவில்லை. அதற்குள் எவ்வளவு கோபம், அலுப்பு! ”அவள் இடத்தில் யார் இருந்தாலும் அவளத்தனை, இல்லாவிட்டால் அவளுக்கு மேலேயே, அலுத்துக்கொள்வார்கள்!” என்று நினைத்துக்கொள்வாள் கமலம்.

கோகிலா பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவள் ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோசியர் அவள் தந்தையிடம் கூறினாராம், ”உங்கள் பெண்ணுக்குப் பதினெட்டு வயதுக்குள் கல்யாணமாகிவிடும்!” என்று. ”பதினெட்டு வயசுக்குள் கல்யாணம் என்றால் மாப்பிள்ளை தானே வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டி, ”எங்கே என் வருங்கால மனைவி?”ன்னு கேட்பானா என்ன? நாம் இப்போதிலிருந்தே வரன் பார்த்தால்தான் நல்லது. ஜாதகம் ஒரு பக்கம் ”காரண்டி” தந்தாலும், நாமும் ஓடி ஆடி மாப்பிள்ளை தேடறதுதான் புத்திசாலித்தனம்” என்றாராம் கோகிலாவின் தந்தை. பலன் – பள்ளிப் படிப்போடு கோகிலாவின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பெண் பார்க்கும் படலம் தொடங்கிற்று, தொடர்ந்து வந்து போனவர்கள் எல்லாருமே ஒரே மாதிரி பதில் சொன்னார்கள். ”பெண் பளிச்சென்று இல்லை. பையனுக்கு விருப்பமில்லை!”

”பளிச்சென்று இல்லை” என்பதற்கு என்ன அர்த்தம்? கோகிலா பேரழகி என்னவோ இல்லைதான். மாநிறத்துக்குச் சற்றுக் குறைவான நிறம். கண்கள், மூக்கு, வாய் உடல்வாகு, எல்லாமே மிகமிகச் சாதாரணம். கோகிலாவே ஒரு நாள் கமலத்திடம் கேட்டாள். ”ஏன் மாமி, நான் பார்க்க நன்றாயில்லையா? கதையில் வருமே ‘அக்லி டக்லிங்’ அந்த ரகமா நான்?” இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? கோகிலாவின் கண்களில் கருணை இருக்கிறதே! அவள் முறுவலில் இதம் இருக்கிறதே! நிறத்திலும் உருவத்திலும் கவர்ச்சி இல்லை என்றால் அழகே இல்லை என்று அர்த்தமா?

பதினெட்டு வயதுக்குள் கட்டாயம் மணமகளாவாள் என்று ஜோசியர் ‘காரண்டி’ கொடுத்தும், பத்தொன்பது வயதில் கோகிலா கன்னியாகத்தான் இருந்தாள். பள்ளிப் படிப்போடு கல்வி நின்று போனதுதான் கைமேல் பலன்.

கடைசியாகப் பெண் பார்க்க வந்தவர்களும் ”பையனுக்கு விருப்பமில்லை!” என்று எழுதினபோது அவள் தந்தை, ”கோகிலாவுக்காக ஒருவன் இனிமேலா பிறக்கப் போறான்? அவன் எங்கேயோ இருக்கத்தானே இருக்கான்?” என்று பதிலளிக்க முடியாத கேள்விகளாகக் கேட்டார். கோகிலாவுக்குக் கோபமும் அலுப்பும் மட்டுமல்லாமல் சிரிப்புக்கூட வந்தது.

Image

ன்று காலை பத்தரை பணியிருக்கும். கோகிலா வழக்கம்போல் அழுக்குத் துணிகளும் வாளியுமாகக் குழாயடிக்கு வந்தபோது பக்கத்துவீட்டு வேலைக்காரி ஓடி வந்தாள். ”பெரியம்மா பாத்ரூமில் விழுந்துட்டாங்க. அழுதுகிட்டே உட்கார்ந்திருக்காங்க!”

”அம்மா! கமலம் மாமி விழுந்துட்டாளாம்! நான் போய்ப் பார்க்கிறேன்!” என்று கூவியவாறே பக்கத்து வீட்டுக்கு விரைந்தாள் கோகிலா. குளியலறை தரையில் கமலம் பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள். ”எழுந்திருக்க முடியலை, கோகிலா! வலது காலைக் கீழே வைக்க முடியலை!” என்றவள் பச்சைக் குழந்தையைப் போல் வாய்விட்டு அழுதாள்.

வேலைக்காரியின் உதவியோடு அவளைத் தூக்கி நிறுத்தி, இடது காலை மட்டும் ஊன்றச் சொல்லித் தாங்கிப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்தாள் கோகிலா. ஒரு வலி நிவாரிணி மாத்திரையைக் கொடுத்துவிட்டுத் தொலைபேசி மூலம் மாமியின் மகனுக்கும், பின் மருமகளுக்கும் விஷயத்தைச் சொன்னாள். அவர்கள் வரும்வரை கமலத்தின் அருகே அமர்ந்திருந்தாள்.

டாக்சியில் உட்கார்ந்து ஆஸ்பத்திரிக்குச் சென்ற கமலம் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி ஆஸ்பத்திரி வேனில் திரும்பினாள். வலது காலைச் சுற்றி கனமான இரும்பு வளையம் பொருத்தப்பட்டிருந்தது. ”ஐந்து கிலோவாவது இருக்குமே! இதை எதற்கு மாமியின் காலோடு இணைத்திருக்கிறார்கள்? இதோடு எப்படி நடக்க முடியும்?” என்று கோகிலா யோசித்தபோது மாமியின் மகன் நிலைமையை விளக்கிச் சொன்னார்.

கமலத்தின் வலது கால் இடுப்போடு சேரும் இடத்தில் எலும்பில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளையாக முறிவு இல்லாமல் விரிசலோடு தப்பித்துவிட்டாள். அதனால் ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில வாரங்களில் விரிசல் கூடிவிடும். அதுவரை காலை அசைக்கக் கூடாதாகையால் அசைக்க முடியாதபடி இரும்பு ஃப்ரேம் ஒன்றைக் காலைச் சுற்றிப் பொருத்தியிருக்கிறார்கள். இனி சில வாரங்கள் படுக்கையோடு படுக்கையாக இருக்கவேண்டும்.

கமலம் அழுதுகொண்டே இருந்தாள். ”என்ன பாவம் பண்ணினேனோ! இப்படி படுக்கையிலேயே சகலமும்…”

”பொறுத்துக்கோ அம்மா… உனக்குன்னு ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணறேன்… நாங்கள் ஆபீஸ் போறதுக்கு முன் வர மாதிரி, திரும்பி வரும்வரை இருக்கிற மாதிரி” என்றான் மகன்.

”நடக்கிற காரியமா இது? வீட்டையும் என்னையும் முன்பின் தெரியாதவள் தயவில் ஒப்படைச்சால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்…”

”நான் ரெண்டு மாசம் லீவுக்கு அப்ளை பண்ணறேன். கவலைப்படாமல் இருங்கள், அம்மா!” என்றாள் மருமகள்.

”என்னால் எல்லாருக்கும் எத்தனை கஷ்டம்!” என்று கமலம் ஓயாமல் அழுதாள். கோகிலாவால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை…

”நான் உங்களோடு இருக்கேன் மாமி… உங்கள் பிள்ளையும் மாட்டுப் பொண்ணும் கவலையில்லாமல் ஆபீஸ் போகட்டும். இருவருமே வீட்டிலில்லாத நேரங்களில் நான் உங்களோடு இருக்கேன். நான் பழகினவள் என்கிறதால் உங்களுக்குக் கூச்சமாக இருக்காது!”

”நிஜமாகத்தான் சொல்கிறாயா?” என்று கமலமும் அவள் குடும்பத்தினரும் ஆச்சரியப்பட, கோகிலாவின் பெற்றோர் திகைத்தார்கள். மகளைத் தனியே அழைத்துச் சொன்னாள் கோகிலாவின் தாய். ”நீ புத்தி சுவாதீனத்தோடுதான் பேசறியா? ஒரு கிழவிக்கு நர்ஸ் வேலை பார்க்கிறது சுலபம்னு நினைச்சியா?”

”இதில் என்ன கஷ்டம், அம்மா? நான்கூட இருந்தால் மாமி நிம்மதியாயிருப்பார்… கால் நன்றாகக் குணமாகும்.”

”மாமியின் சகல தேவைகளையும் கவனிக்கணும். அசிங்கம் பார்க்கக் கூடாது… அவருடைய முணுமுணுப்பையும் புலம்பல்களையும் சகிச்சுக்கணும்!”

”நான் முகம் சுளிக்காமலிருந்தால் மாமி ஏன் முணுமுணுக்கவோ புலம்பவோ போகிறார்?”

”நீ ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி, ‘நான் உதவறேன்’னு உளறிக் கொட்டினாய்?”

”ஏன்னா, மாமிக்கு இப்போது உதவி தேவை. அந்த உதவியை என்னால் தர முடியும்!”

”நீ ஒரு அரைப் பைத்தியம், கோகிலா!”

”அப்படியா?”

வாக்குக் கொடுத்தபடியே கமலத்தின் மகனும் மருமகளும் அலுவலகம் சென்ற பிறகு அவளைக் கவனித்துக்கொள்ள கோகிலா ஆஜரானாள். மாமியின் தேவைகளை உணர்ந்து அவற்றைப் பூர்த்தி செய்வதில் அவள் எந்தவித அருவருப்பையும் அடையவில்லை. துயரப்படும் ஒரு மனிதப் பிறவியின் துயர் களையும்போது, அந்த முகத்தில் நிம்மதியும் மலர்ச்சியும் தோன்றுகின்றனவே, இந்தக் காட்சிக்கு ஈடாக ஒரு காட்சி இருக்க முடியுமா? பொறுமைக்கும் சேவைக்கும் இதைவிட சிறந்த பரிசு கிடைக்க முடியுமா?

நாள் மேல் நாளாக நழுவிற்று… கமலம் இப்போதெல்லாம் அழுவதில்லை… கோகிலாவின் சேவையில் மென்மையும் இதமும் இருந்ததை உணர்ந்தவள், தான் சிரித்த முகமாக இருப்பதுதான் நன்றி கூறும் ஒரே வழி என்று உணர்ந்தாள். தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும், தன் சிறுமிப் பருவத்தின் சிறுசிறு சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும் அழகழகான கதைகள் சொன்னாள். ஹாஸ்யமும் சிரிப்புமாக நாட்கள் நகர்ந்தன.

எதிர்பார்த்தபடியே எலும்பிலிருந்த விரிசல் சில வாரங்களில் மறைந்து விட்டது. காலில் இரும்பு வளையத்தோடு ஆஸ்பத்திரி சென்ற கமலம் அது இல்லாமல் சக்கர நாற்காலியில் வீடு திரும்பினாள். இனி அவள் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பிக்கலாம். தன்னம்பிக்கை வரும்வரை கோகிலா உடனிருப்பாள் என்பதால் பிரச்சனையே இல்லை…

ஒரு நாள், நண்பகல் பொழுதில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கமலம் சொன்னாள். ”கோகிலா, நீ ஏதோ ஒரு ஜன்மத்தில் யாராகப் பிறந்திருக்க வேண்டும், தெரியுமா?”

”யாராக, மாமி?”

”ஃப்ளாரென்ஸ் நைட்டிகேல் என்ற நிகரற்ற நர்சாக!”

”இது என்ன திடீர் ஞானோதயம், மாமி?” என்றாள் கோகிலா, முறுவலித்தவாறு.

”உன் கண்களைப் பார்த்தால் மனம் அமைதி அடையறது… உன் புன்னகையைப் பார்த்தால் மனசில் தைரியம் பிறக்கிறது. உன் ஸ்பரிசத்தில் துயர் களையும் ஏதோ தன்மை இருக்கு… உடல் வலி குறைஞ்சு போறது… இதையெல்லாம் தவிர, உன் பெயரையே எடுத்துக்கொள்… கோகிலா… கோகிலம் என்கிற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘நைட்டிங்கேல்’ என்று ஆங்கிலத்தில் சொல்லும் பறவை… பொருத்தமாக இல்லையா?”

கோகிலா வாய்விட்டுச் சிரித்தாள்.  ”பொருத்தமோ இல்லையோ, எத்தனை அன்போடு சொல்கிறீர்கள்! அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி மாமி!”

Image

மாதங்கள் மறைந்தன.

”உங்கள் ரெண்டு பேருக்கும் தெரியுமா? கோகிலாவின் ஜாதகத்தைப் போன தடவை பார்த்து ஜோசியம் சொன்னானே, அவன் மகா மடையன்!” என்றார் கோகிலாவின் தந்தை, மனைவி மகளிடம்.

”எப்படி?” என்றாள் கோகிலாவின் தாய்.

”வேறொருவனிடம் அவள் ஜாதகத்தைக் காட்டினேன். இவன் கெட்டிக்காரன். பார்த்த உடனேயே ‘இந்தப் பெண்ணுக்கு இருபது வயசுக்கு மேல்தான் கல்யாணமாகும்’னு சொன்னான்!”

”இருபது வயசுக்கு மேல் எத்தனை வருஷம்?” என்றாள் கோகிலா.

”என்னது?”

”இருபத்தொண்ணு, இருபத்தாறு, முப்பது, நாற்பது எல்லாமே இருபதுக்கு மேல்தானே அப்பா!”

“வாயை மூடு, அதிகப் பிரசங்கி… என்ன தெரியறதோ, இல்லையோ, எதிர்த்துப் பேச தெரியறது!”

“பேசாமல் என்னை காலேஜில் சேர்த்துவிடுங்கள் அப்பா!”

”ஏன்? இன்னும் ஆவேசத்தோடு எதிர்த்துப் பேசவா?.. இப்போ நான் சொல்றதைக் கவனமாய்க் கேள். ஞாயிற்றுக்கிழமை உன்னைப் பெண் பார்க்க ஒரு ‘பார்ட்டி வரது… அடக்க ஒடுக்கமாய் நடந்துகொள்! புரியறதா?”

”அப்பா! இன்னுமா உங்களுக்கு இந்தக் கேலிக்கூத்து அலுக்கலே?”

”எது கேலிக் கூத்து? பெண் பார்க்கிறது நம் ஊர் சம்பிரதாயம்… இது கேலிக் கூத்துன்னா காதல் கல்யாணம்தான் சிறப்போ? ஏன்தான் உன் புத்தி இப்படிக் கோணல்மாணலாய் வேலை செய்யறதோ?”

கோகிலா பதில் சொல்லவில்லை. மற்றுமொரு பிள்ளை வீட்டார் விஜயம். மற்றுமொரு முறை ”விருப்பமில்லை” என்ற நிராகரிப்பு… தெய்வமே!

வெள்ளிக்கிழமை காலை கோகிலாவின் தாய் அவளிடம் ஒரு பெரிய பையையும் பணத்தையும் கொடுத்தாள். கூடவே நிறைய உபதேசமும் செய்தாள்.

”நேரே பஸ் ஸ்டாண்டுக்குப் போ… வழியில் யாரோடும் பேசாதே… பஸ் வரும்வரை பொறுமையாய்க் காத்திரு… பஸ்ஸில் எந்தத் தடியனாவது பல்லை இளித்தால், வேறு பக்கம் பார்… சாமான் வாங்கும், லிஸ்ட்டும் பணமும் பத்திரம்!”

”லிஸ்ட் என்ன… பிரமாத லிஸ்ட்? கேசரிக்கு ரவை, நெய், முந்திரி, திராட்சை, பஜ்ஜிக்குக் கடலை மாவு… இதெல்லாம்தானே?”

”ஆமாம்… இதெல்லாம்தான்!” அம்மாவின் குரலிலும் எரிச்சல், அப்பாவின் குரலைப் போல்.

பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் காத்திருக்க வேண்டாதபடி உடனேயே பஸ் வந்துவிட்டது. கோகிலா ஏறிக்கொண்டாள்.

கூட்டமான கூட்டம. உட்கார இடம் கிடைக்கவில்லை. ஒரு கையால் பையையும் மறு கையால் எதிர் சீட்டையும் பிடித்தபடி நின்றுகொண்டாள்… பஸ், கிளம்பிற்று… பஸ்ஸில் நாலைந்து இளைஞர்கள் பார்வையைப் பெண்கள் பக்கம் படர விட்டதைக் கவனித்தாள். தன் மேல் பட்ட பார்வை, சகஜமாக அகல்வதைக் கவனித்தாள். மற்ற பெண்கள் மேல் பார்வை பட்டு, அசிங்கமாகக் குத்தி நிற்பதையும் கவனித்தாள். அம்மாவின் உபதேசம் நினைவுக்கு வந்தது. ”எந்தத் தடியனாவது பல்லை இளிச்சால் வேறு பக்கம் பார்!”

சட்டென்று அவளுக்கு ஒர் உண்மை உணர்வாயிற்று… எத்தனையோ முறை அவள் பஸ்ஸில் பயணித்திருக்கிறாள், கூட்டத்தில் நின்று சாமான் வாங்கியிருக்கிறாள். யாருமே அவளைப் பார்த்துப் பல்லை இளித்ததில்லை. ”நான் அத்தனை குரூபியா?” என்று ஒரு கணம் எண்ணி மனம் நொந்தாள். ஆனால் சற்று யோசித்ததும் அந்த எண்ணம் அகன்றது. குரூபியான ஒருத்தியைக் கண்டால் காண்பவர்களின் முகத்தில், கண்களில், கொஞ்சமாவது அதிர்ச்சி தோன்றும். அவளைக் காண்பவர்களிடம் அந்த அதிர்ச்சி இல்லை. அவள்மேல் சாதாரணமாகப் படிந்த பார்வை, சாதாரணமாக அவளை ஆராய்ந்து, சாதாரணமாகவே விலகிற்று… அதில் அதிர்ச்சியுமில்லை, சுவாரஸ்யமும் இல்லை.

”என் தோற்றம் யாரையும் சலனப்படுத்தவில்லை, யாரையும் ஈர்க்கவில்லை. எந்தவிதமான விருப்பையோ வெறுப்பையோ தோற்றுவிக்கவில்லை!” என்று தெளிந்தபோது அடி மனத்தில் சட்டென்று ஒரு நிம்மதி படர்ந்தது.

ரோட்டில் யாரோ குறுக்கே பாயவே, பஸ் ஓட்டுனர் பிரேக்கை அழுத்தினார். பஸ் எதிர்பாராமல் குலுங்கி நின்றது. கோகிலா ஒரு கணம் தடுமாறினாள். ஆனால், விழாமல் சமாளித்தாள். கையிலிருந்த பை மட்டும் நழுவி விழுந்தது.

அவளருகே நின்றிருந்த ஒரு வாலிபன் குனிந்து அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

”ஓ… தாங்ஸ்!” என்று அதைப் பெற்றுக்கொண்டாள் கோகிலா.

”வெல்கம் ஸிஸ்டர்!” என்று அவன் மென்மையாய் முறுவலித்தான்.

மின்சாரம் பாய்ந்தாற்போல ஒரு கணம் சிலையாகிப் போனாள் கோகிலா. ஸிஸ்டர்! எத்தனை அழகான வார்த்தை இது!

அவள் பார்க்கப் பளிச்சென்று இல்லை.

வேண்டாம்… அவசியமே இல்லை.

அவளுடைய தோற்றம் காண்பவர்களின் மனத்தில் விருப்பு வெறுப்பைத் தோற்றுவிக்கவில்லை. கமலம் மாமி சொல்வது உண்மையென்றால், அவள் கண்களும் முறுவலும் ஒரு நோயாளிக்கு அமைதியையும் தைரியத்தையும் தருகின்றன. அவளுடைய ஸ்பரிசம் நோயுற்றவரின் துயர் களைகிறது, வலி மாற்றுகிறது.

இது ஒரு வரப்பிரசாதம். இதுவே பெரும் பாக்கியம்!

கோகிலா பஸ்ஸிலிருந்து இறங்கினாள். மற்றொரு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தாள், காலி பையோடு.

”சாமானெல்லாம் எங்கே?” என்றாள் அவள் தாய்.

”நான் வாங்கலே…”

”ஞாயிற்றுக்கிழமை பிள்ளை வீட்டார் வரும்போது மானம் போகணுமா?”

”ஞாயிற்றுக்கிழமை யாரும் வரப் போறதில்லை.”

”உளறாதே, கோகிலா…”

”உனக்குத் தெரியுமா அம்மா? நான் நர்ஸாகப் போகிறேன். சந்தோஷமாயிருக்கப் போகிறேன்!”

”பைத்தியமா உனக்கு? உன் அப்பா இதைக் கேட்டால் ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதிப்பார். வளர்ந்த பெண்ணுன்னு பார்க்காமல் கை நீட்டி அடிப்பார்.”

அவள் தாய் சொல்லிக்கொண்டே போனாள். ஆனால், கோகிலாவின் காதில் எதுவுமே விழவில்லை.

கற்பனை சிறகடித்துப் பறந்தது.

நர்ஸ் கோகிலா.

ஸிஸ்டர் கோகிலா.

கோகிலா நைட்டிங்கேல்!

***

Image Courtesy:

http://freeimagescollection.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

ஜி.கே.பொன்னம்மாள்

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 30

ஜி.கே.பொன்னம்மாள்

கேரளாவின் ஒரு கிராமத்தில் பிறந்து தமிழ் எழுத்தாளரானார் ஜி.கே.பொன்னம்மாள். ஆறு வயதிலேயே ஹார்மோனியம் வாசிக்கக் கற்றிருந்தார். பாடல்கள் இயற்றுவது, பாடுவது, நாடகம் தயாரிப்பது என பல்திறன் கொண்ட கலைஞர் இவர். பின்னணிப் பாடகியாக இருந்ததுடன், நிருத்தோதயா நடனப் பள்ளியில் நடனப் பயிற்றுனராகவும் இருந்தார். 350 சிறுகதைகளும், கட்டுரைகளும், நாவல்களும் எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கைச் சகடம்’ இவரின் முக்கிய நாவல்களில் ஒன்று.

யாரை நம்பி வந்தாய்?

ந்த ஆலமரத்து நிழலுக்கு வந்ததும் தார் ரோட்டில் நடந்து வந்த அலுப்புத் தீர நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சுடலைமுத்து. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் பளபளக்கும் தார் ரோடும், பளிச்சென்ற வெயிலும் அவன் கண்களைக் கூசச் செய்தன. அவனுடன் வந்த செல்லி பக்கத்தில் இருந்த குழாயடியில் முகத்தைக் கழுவிக் கொண்டு நாலு கை தண்ணீரையும் அள்ளிக் குடித்துவிட்டு, ”அப்பாடா! இந்தக் குழாய்த் தண்ணி கூடவா இப்படிக் கொதிக்கணும்?” என்றபடி அங்கிருந்த ஒரு கல்லில் உட்கார்ந்து புடவைத் தலைப்பால் வியர்வை வழியும் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ”ஏன், குழாய்த் தண்ணி மட்டுமா கொதிக்குது? என் மனசு கூடத்தான் கொதிக்குது. ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டு அவளைக் கலியாணமும் செய்து கொண்டு பட்டணத்துக்குப் பிழைக்க வந்து விட்டேன் பாரு. அந்த வயிற்றெரிச்சலை நினைச்சா என் மனசு கொதிக்குது. என் புத்தியைச் செருப்பாலடிக்கணும்” என்று வெறுப்புடன் பேசிக்கொண்டே மேல் துண்டை விரித்துச் சுடலைமுத்துவும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். செல்லி தன் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிற்றை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். என்ன கஷ்டம் வந்தாலும் மனத்துக்குப் பிடித்தவனை மணந்து கொண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சியே அவள் இதயத்தில் நிறைந்திருந்தது.

”என்ன மச்சான் இப்படிக் கோவிச்சுக்கறே? ஏதோ பட்டணத்துக்கு வந்துட்டோம். இத்தனை ஜனங்கள் பிழைக்கும் இடத்தில் நமக்கு மட்டும் இடமில்லாமல் போய்விடுமா?” என்று அவனைச் சமாதானம் செய்ய முயன்றாள் அவள்.

”எதையும் பேசி விடுவது சுலபம். பட்டணத்து வாழ்க்கை இங்கு வந்த பிறகல்லவா தெரியுது! இரண்டு நாட்களாகப் பட்டினி. கையில் காலணா இல்லை. இங்கு யாரு நமக்கு வேலை வைச்சிக்கிட்டு இருக்கா?” என்று பொரிந்தான் சுடலைமுத்து.

”யாரு தம்பீ அப்படி வாழ்க்கையை நொந்து பேசறது?” என்றது ஒரு குரல். சுடலை முத்துவும் செல்லியும் நாலா பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். மரத்துக்கு அருகே ஒரு சிறு பிள்ளையார் கோயிலைத் தவிர வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. பிள்ளையார் கோயில் என்பதற்கு அறிகுறியாக எண்ணெய் இல்லாத ஒரு விளக்கும், ஒரு பிள்ளையார் விக்கிரகமும்தான் அங்கிருந்தன. தென்னை ஓலையால் சிறு குடிசை போல் வேயப்பட்டிருந்தது அந்தக் கோயில். அந்த விநாயகரைப் பார்த்ததுமே செல்லிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ”கவலைப்படாதிங்க மச்சான். இதோ இந்தப் பிள்ளையார் அப்பனே நமக்கு வழி காட்டுவாரு. ஏதோ தெய்வவாக்குப் போல, ‘ஏன் வாழ்க்கையை நொந்துக்கிறீங்க?’ என்று ஒரு குரல் கேட்டது பாருங்க அதுவே நல்ல சகுனம்” என்றாள் செல்லி.

”தெய்வ வாக்கு ஒண்ணுமில்லே அம்மா. எல்லாம் மனுசன் பேசற பேச்சுத்தான். இப்படி இந்த மரத்துக்குப் பின்னாலே வந்து பாருங்க. நான் நீங்க பேசிக்கிறதையெல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். எனக்கு எழுந்து நடமாட முடியாது. வாங்க இப்படி” என்றது அந்தக் குரல்.

Image

மரத்துக்கு மறு பக்கம் சென்று பார்த்த செல்லியும் சுடலை முத்துவும் ஒரு கணம் திடுக்கிட்டுவிட்டார்கள். ஒரு கந்தல் கோணியில் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு ஓர் உருவம் படுத்திருந்தது. கை கால்கள் குறுகி, முறுக்கிக் கொண்டிருந்தன. எண்சாண் உடம்புக்குச் சிரசும் வயிறுமே பிரதானமாகக் காட்சியளித்தன. ஒரு தகரக் குவளையில் குடிக்கத் தண்ணீரும் விரித்திருந்த கந்தல் துணியில் நயா பைசா துட்டுகளும் கிடந்தன. ”ஏன் அப்படி மலைச்சுப் போயி நிக்கறீங்க? நானும் மனுசன்தான். உட்காருங்க அப்படி. நகர முடியாத நானே வாழ்ந்து கொண்டிருக்கும்போது உடல் பலம், இளமை இத்தனையும் இருக்க பிழைக்க மூக்கால் அழுகிறாயே தம்பீ!” என்றான். சுடலை முத்துவுக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. கிழவன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தான். சுடலை முத்துவுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. செல்லிக்கும் களைப்பு மிகுதியும், ஆலமரத்துக் காற்றும் சேரவே தூக்கம் கண்ணைச் சுழற்றியது. இருவரும் அந்த மரத்தடியில் அயர்ந்து போய்ப் படுத்து விட்டார்கள்.

அவர்கள் எத்தனை நேரம் தூங்கினார்களோ தெரியாது. ”டேய், யாரடா அது புது ஆள்? நம்ம இடத்திலே படுத்துத் தூங்கறது? எழுந்திருடா” என்று குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்ணை விழித்தாள் செல்லி. அப்பொழுது பொழுது நன்றாகச் சாய்ந்து இலேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. தெருவில் வண்டியும் காரும் ஓடிக்கொண்டிருந்தன. எங்கும் ஒரே சத்தம். தன்னைச் சுற்றித் தனக்குப் பழக்கமில்லாத யார் யாரோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது செல்லிக்குத் தெரிந்தது. மூன்று கல்லை வைத்து மூட்டிய அடுப்பில் ஒரு சட்டியில் கஞ்சி கொதித்துக் கொண்டிருந்தது. அடுப்பருகே உட்கார்ந்து பழைய காகிதம், குப்பை, இவைகளைப் போட்டு அடுப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளைச் சுற்றி நாலைந்து குழந்தைகள் அந்தக் கஞ்சிப் பானையைப் பார்த்தபடி இருந்தன. பீடியைப் புகைத்துக் கொண்டே வந்த பாம்பாட்டி ஒருவன் பாம்புக் கூடையைக் கீழே வைத்துவிட்டு, ”சனியன், இந்தப் பாம்பு என்ன கனம் கனக்கிறது? தோளில் போட்டுக் கொண்டு நாலு தெருவு சுத்தறதுக்குள்ளே தோள் வலி எடுத்து விடுகிறது. வரும்படியாவது கை நிறைய வருதா? இன்னிக்குக் கிடைத்தது நாலணாத்தான்” என்று கூறிச் சில்லறையை அடுப்பருகே இருந்த தன் மனைவியிடம் கொடுத்தான்.

”நீ என்னிக்கித்தான் என்னிடம் கை நிறையக் காசு குடுத்திருக்கே. எல்லாம் எனக்குத் தெரியும். மீதித் துட்டுக்கு அந்த ரௌடி நல்லகண்ணுகிட்டேயிருந்து திருட்டுச் சாராயம் வாங்கிக் குடிச்சிருப்பே” என்றாள் அவள் குரோதத்துடன்.

அப்பொழுது தள்ளாடியபடி அங்கு வந்த ஒரு கர்ப்பிணிப் பெண் ”அய்யே இது யாரு புது ஜோடி நம்ம இடத்துக்கு வந்திருக்கு? பார்த்தா கிராமத்து ஆளுங்க போல இருக்கு. வூட்டுக்குத் தெரியாமே இந்தப் பொண்ணு இவன் பின்னாலே ஓடிவந்திருக்கு போலிருக்கு” என்றாள் கேலிச் சிரிப்புடன்.

இந்தப் பேச்சைக் கேட்ட செல்லியின் மனம் துணுக்குற்றது. அவள் மான உணர்ச்சி பொங்கி எழுந்தது. துள்ளி எழுந்து உட்கார்ந்து கொண்டு, ”இந்தா பாரு, அப்படியெல்லாம் நாக்கிலே நரம்பில்லாம பேசாதே. இவரு என் புருஷன். தொட்டுத் தாலி கட்டியவர். சந்தேகமாயிருந்தால் பார்த்துக்க” என்று கழுத்திலிருந்த தாலிச் சரட்டைக் காட்டினாள்.

கபடு இல்லாமல் பேசும் அக்கிராமத்துப் பெண்ணை ஒரு கணம் முறைத்துப் பார்த்தாள் அந்தக் கர்ப்பிணி. பிறகு மெதுவாக வயிற்றில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த கந்தல் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டபடியே ”கோவிச்சுக்காதே தங்கச்சி. ஏதோ சந்தேகமாயிருந்தது கேட்டேன்” என்றாள். செல்லிக்கு அவள் செய்கை விநோதமாக இருந்தது. கர்ப்பிணி போல் வயிற்றில் கந்தல் துணிகளை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண். எதற்காக இப்படி ஒரு வேஷம்? அவள் நடந்து வரும்போது எப்படிக் களைத்து, முகம் வாடி, தள்ளாடியபடி ஒரு நிஜக் கர்ப்பிணிப் பெண் போல் நடந்து வந்தாள்? எல்லாம் நடிப்பா என்று நினைத்த செல்லியின் வியப்பைப் பார்த்துவிட்டு, படுத்திருந்த கிழவன், ”என்ன அம்மா இப்படி அதிசயப்படறே? இதெல்லாம் பிழைக்கும் வழி. இந்திராணி இப்படிக் கர்ப்பிணி வேஷம் போடுவதில் கெட்டிக்காரி. பஸ் ஸ்டாண்டு, சினிமாக் கொட்டகை என்று போய் நின்று பார்ப்பவர்கள் உள்ளம் உருகும்படி ”ஐயா, கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவுங்களேன். ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸுக்குக் காசில்லை” என்று கெஞ்சும்போது, எந்தக் கஞ்சனும் காலணா போடாமல் இருக்க மாட்டான். இந்திராணிக்கு அத்தனை திறமை. பார்க்கப் போனால் இந்த மரத்தடியிலே அதிகப் பணம் சம்பாதிப்பது இந்த இந்திராணிதான்” என்று கூறிக் கண்ணைச் சிமிட்டினான்.

வயிற்றில் இருந்து எடுத்த கந்தல் துணிகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு, ”ஏன் தாத்தா அப்படி வயித்தெரிச்சல் படறே? உனக்கு மட்டும் சம்பாத்தியம் வருவதில்லையா? உன் உருவமே உனக்குச் சாதகமாயிருககு. வாயாலே நீ பேசவே வேண்டாம். துட்டு தானாக உன்னைத் தேடி வருது. எனக்கு அப்படியா? பிழைப்புக்கு எத்தனையோ வேஷம் போட வேண்டியிருக்குது. அதோ பாரு ரோட்டிலே” என்று இந்திராணி செல்லியைத் தட்டிக் கூப்பிட்டு, ”அந்தக் காரைப் பார்த்தாயா? அதுதான் நீல நிறக் காரு! அதிலே ஒரு அம்மா போறாங்க பாரு. அவுங்க ஒரு பிரபல சினிமா நடிகை. ஒரு படத்துக்கு ஆயிரக் கணக்கா வாங்கறாங்க. அவுங்களும் வயிற்றுப் பிழைப்புக்குக் கர்ப்பிணி வேஷம் போடறாங்க” என்று கூறிச் சிரித்தாள். இதையெல்லாம் கேட்கக் கேட்கச் செல்லிக்கு விநோதமாக இருந்தது. இந்திராணி புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ”பசி வயிற்றைக் கிள்ளுகிறது. நாயர் கடைக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிப் போய் விட்டாள்.

பொழுது நன்றாக இருட்டி விட்டது. யாரோ ஒருவர் அந்தப் பிள்ளையார் கோயில் விளக்கில் சிறிது எண்ணெயை ஊற்றி ஏற்றி வைத்துவிட்டுப் போனார்.

”இந்தா பொண்ணு! எல்லாரும் சாப்பிடறாங்க. நீயும் உன் புருஷனும் மூணு நாளா பட்டினின்னு எனக்குத் தெரியும். இதோ கந்தல் துணியில் காசு கிடக்கு பாரு. எடுத்துப் போய் நாயர் கடையிலே ஏதாவது சாப்பிட்டுட்டு எனக்கு ஒரு தோசையும், ஒரு குவளை டீயும் வாங்கி வாங்க” என்றான் கிழவன். செல்லிக்கு எத்தனை பசி இருந்தாலும் அந்தக் கிழவனின் உதவியை நாட ஏனோ மனம் வரவில்லை. ”வேண்டாம் தாத்தா!” என்றாள் தயக்கத்துடன்.

கிழவன் மிகவும் வற்புறுத்தவே அவனிடமிருந்து எட்டணாவை எடுத்துக் கொண்டு இருவரும் நாயர் கடையை நோக்கி நடந்தார்கள். ஆளுக்கு இரண்டு தோசையும் டீயும் சாப்பிட்டுவிட்டு கிழவனுக்குப் பலகாரம் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.

வாயில் வாசனைப் பாக்கை மென்று கொண்டே பக்கத்தில் வந்து உட்கார்ந்த இந்திராணி ”ஆமாம், பட்டணத்திலே எப்படிப் பிழைப்பதாக உத்தேசம்?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

”எங்காவது வீட்டு வேலை செய்வது, இல்லே வீடு கட்டும் இட்த்திலே கல்லு மண்ணு தூக்கிக் கையாள் வேலை செய்வது இப்படி ஏதாவது செய்துதான் பிழைக்க வேண்டும்’’ என்றாள் செல்லி.

இந்திராணி சற்று யோசித்துவிட்டு, ‘‘உங்களுக்கு இங்கே வீடு கட்டும் மேஸ்திரி யாரையாவது தெரியுமா?” என்று குறுக்குக் கேள்வி கேட்டாள்.

”அதெல்லாம் எங்களுக்கு யாரையும் தெரியாது. இந்தப் பிள்ளையாரப்பனைத் தவிர. இவர்தான் எங்களுக்கு வழிகாட்டி உதவி செய்யணும்” என்றாள். இந்திராணி சிரித்தாள். ”இந்தக் கல்லுப் பிள்ளையாரை நம்பி வந்து விட்டாயாக்கும்? இவரே பிறர் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். யாராவது எண்ணெய் விட்டால்தான் விளக்கு எரியும். இந்தக் கோயில் முற்றத்தில் தண்ணீர் தெளித்துப் பெருக்கிச் சுத்தம் செய்வதற்கும் மனிதன்தான் வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு முழம் கதம்பம் வாங்கி இவர் கழுத்தில் போட்டால்தான் மாலை போட்டுக் கொள்ளுகிறார். இப்படி இந்தப் பிள்ளையாரே தம் வாழ்வுக்கு மனிதர்களை நம்பியிருக்கும்போது நீ அவரை நம்பி வந்திருப்பது வேடிக்கையாக இருக்கு” என்றாள் அவள். பேச்சு செல்லிக்குப் பிடிக்கவே இல்லை.

Image

மாதா கோயில் மணி எட்டு அடித்தது. இந்திராணி எழுந்து பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அந்த வளக்கிலிருந்து எண்ணெயை எடுத்துத் தன் தலையில் தடவிக் கொண்டாள்.

இதை பார்த்த செல்லிக்கு இதயம் பிளந்துவிடும் போலிருந்தது. கோபத்தை அடக்க முடியாமல் ”இந்தா அம்மா! இத்தனை நேரம் கடவுளைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டு அந்தக் கோயில் விளக்கு எண்ணெயை எடுத்துத் தலையில் தேய்த்துக் கொள்ள உனக்கு வெட்கமாக இல்லை? நீதான் எதுவும் கோயிலுக்குச் செய்யவில்லை. யாரோ புண்ணியவான் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் அந்த எண்ணெயை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டாயே!” என்றாள்.

இந்திராணி கலகலவென்று சிரித்துவிட்டு ”நீதான் கடவுள் கொடுப்பார் என்று சொன்னியே. எனக்குக் கடவுள் இப்படித்தான் கொடுக்கிறாரு. அவரோ கல்லுப் பிள்ளையாரு ‘இந்தா இந்திராணி, தலைக்கு எண்ணெய்’ என்று என் கையிலே கொண்டு வந்து கொடுக்க முடியுமா? மரத்தில் இருக்கும் பழம் ‘இதோ நான் இருக்கிறேன், என்னைச் சாப்பிடு’ என்று கையில் வந்து விழுமா? நாமாகப் பறித்துச் சாப்பிட வேண்டியதுதான். இதே நியதிப்படி கடவுளிடமிருந்து நானே எடுத்துக் கொண்டேன். கவலைப்படாதே. போ, படுத்துத் தூங்கு. நான் செய்யும் காரியங்களில் தலையிடாதே!” என்று கூறினாள்.

சற்றுத் தூரத்திலிருந்து யாரோ மெதுவாகச் ‘சீட்டி’ அடிக்கும் சத்தம் கேட்கவே இந்திராணி சொகுசாக அன்ன நடை நடந்து அந்தப் பக்கம் போனாள்.

”இந்தா பொண்ணு! ஏனம்மா அந்த இந்திராணிகிட்டே வார்த்தையாடறே? அவ பேச்சுக்குப் போகாதே. இந்த மரத்தடியில் அவள் வச்சதுதான் சட்டம். அவளுக்கு ஆள் பலம் அதிகம். இந்தப் பேட்டை ரௌடி நல்லகண்ணு அவளுக்காக எதையும் செய்யக் காத்திருக்கான். இந்திராணியைப் பகைச்சுக்கிட்டா நீ இந்த இடத்திலே வாழ முடியாது!” என்றான் கிழவன்.

எப்பொழுது செல்லி கண்ணயர்ந்தாளோ, தெரியாது. அவள் பொழுது விடிந்து கண்ணை விழித்தபோது சுடலைமுத்து குழாயடிக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தான். பட்டணத்தில் பணம் இல்லாமல் கிடைக்கும் ஒரே பொருளான குழாய்த் தண்ணீரை அள்ளி அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த சுடலைமுத்துவைப் பார்க்கச் செல்லிக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. பாம்பாட்டியும் அவன் குடும்பமும் எழுந்து போய் விட்டிருந்தார்கள். இந்திராணி எப்பொழுது திரும்பி வந்தாளோ முகத்தில் வெய்யில் படுவதுகூடத் தெரியாமல் புரண்டு புரண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். செல்லி தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையார் கோவிலைச் சுத்தம் செய்தாள். பிறகு முகம் கழுவிக் கொண்டு கிழவனுக்குத் தேநீரும் இட்டிலியும் வாங்கிக் கொடுத்து விட்டுக் கணவனுடன் வேலை தேடக் கிளம்பிளாள்.

யாருக்காகவும், எதற்காகவும் காத்திராமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது. சுடலைமுத்துவும் பட்டணத்தில் வாழக் கற்றுக் கொண்டுவிட்டான். எப்படியோ கூலி வேலை செய்து தன் வயிற்றையும் தன் மனைவி வயிற்றையும் கழுவலானான். செல்லியும் சளைக்காமல் வேலை செய்தாள். ஒவ்வொரு நாள் இரவும் தன் கணவனுக்குக்கூடத் தெரியாமல் மீதம் வைக்கும் பணத்தைப் பத்திரமாக ஒரு தகர டப்பாவில் போட்டு மூடி, பிள்ளையார் விக்கிரகத்துக்குக் கீழே மறைத்து வைத்து வந்தாள். இரவு எல்லோரும் தூங்கின பின் மெதுவாக தகர டப்பாவிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்துத் திருப்தியடைந்து வந்தாள்.

பக்கத்துத் தெரு மாயாண்டி நூறு ரூபாய்க்குத் தன் ரிக்‌ஷாவை விற்று விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். பணத்தைச் சேர்த்து அந்த ரிக்ஷாவை வாங்கிவிட்டால் தன் கணவனை அந்த மரத்தடியிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே போய்விடலாம் என்று நினைத்தாள் செல்லி.

அன்று வழக்கம்போல் பிள்ளையார் கோயில் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் செல்லி. யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அப்பொழுது நடந்தது. அங்கு வந்து நின்ற காரிலிருந்து ஒருவர் இறங்கி போலீஸ் துணையுடன் வந்தார். ”நீங்கள் எல்லோரும் இந்த இடத்தை விட்டு இன்னும் ஒரு வாரத்தில் போய்விட வேண்டும். இந்த நிலத்தை ஒருவர் விலைக்கு வாங்கிவிட்டார். இங்கு வீடு கட்டப்போகிறார். ஒரு வாரம் தந்திருக்கிறேன். அதற்குள் போகவில்லையென்றால் பலவந்தமாகப் பிடித்துத் தள்ளி விடுவோம்” என்று எச்சரித்து விட்டுப் போனார். அவர் போய் இரண்டு நிமிஷங்களுக்கு யாருமே எதையும் பேசவில்லை. கிழவன் மெதுவாக ”ஏன் கவலைப்படறீங்க? இது பிறர் இடம். அவுங்க ஏதோ கட்டிடம் கட்டப் போறாங்களாம். போகச் சொன்னால் நாம் போக வேண்டியதுதானே! நமக்கென்ன இதை விட்டால் இன்னும் எத்தனையோ மரத்தடி!” என்று சமாதானம் சொன்னான்.

”அதெல்லாம் நாம்ப ஒண்ணும் போக வேண்டியதில்லை. நம்மை யாரு விரட்டுறாங்க பார்க்கலாம். பிடித்துத் தள்ளி விடுவாராமில்லை; அதையும் பார்த்து விடறேன். நான் ரௌடி. நல்லகண்ணுவை அழைச்சிட்டு வர்றேன். நம்மைக் கிளப்ப வருகிறவங்களுக்கு அவன் பதில் சொல்லுவான்” என்றாள் இந்திராணி.

ன்று இரவு பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்ததும் இந்த எட்டு மாத காலத்தில் நூறு ரூபாய் சேர்ந்து விட்டதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டாள் செல்லி. சுடலைமுத்து புது ரிக்‌ஷாவைப் பார்த்ததும் எப்படி மனம் மகிழ்வான்? இந்த இனிய நினைவில் லயித்த செல்லி ‘பொழுது விடிந்ததும் பணத்தைக் கொடுத்து ரிக்‌ஷாவை வாங்கிவிட வேண்டும்’ என்ற முடிவுடன் படுத்தாள். தூக்கத்தில் கனவில்கூட ரிக்‌ஷாவைத்தான் கண்டாள். இரவு இரண்டு மணி இருக்கும். திடீர் என்று ‘ஐயோ பாம்பு… பாம்பு அடியுங்களேன்’ என்ற கூக்குரலைக் கேட்டு விழித்தாள் செல்லி. பிள்ளையார் விக்கிரகத்தருகே கையில், பணம் வைத்திருந்த டப்பாவுடன் ரௌடி நல்லகண்ணு நின்று கொண்டிருந்தான். அவன் காலைச் சுற்றி ஒரு பாம்பு இருந்தது. நல்லகண்ணு பதறியபடி டப்பாவைக் கீழேயே போட்டுவிட்டான். அந்த டப்பாவை ஒரு சிறு பூட்டினால் பூட்டியிருந்தாள் செல்லி. அதனால் அவனுக்கு அதைத் திறக்க முடியவில்லை. ”அய்யோ! என் பணம். பிள்ளையாரப்பா நீதான் பாம்பைக் காட்டி என் பணத்தைக் காப்பாற்றினாய். இல்லையேல், நான் சாப்பிடாமல் சேர்த்த பணம் திருட்டுப் போயிருக்கும்” என்றபடி டப்பாவைக் கையில் எடுத்துக்கொண்டாள். அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்திராணிக்கு எப்படியோ விஷயம் தெரிந்திருக்கிறது. நல்லகண்ணுவை விட்டுத் திருடச் சொல்லியிருக்கிறாள். அதை நினைக்க அவள் மனம் கொதித்தது.

”பாம்பை அடியுங்களேன்” என்ற கூக்குரலைக் கேட்டு விழித்துக்கொண்ட பாம்பாட்டி, ”அடாடா பயப்படாதே, ஐயா! அது என் பாம்புதான். நேற்று அவசரத்தில் சரியாகக் கூடையை மூட மறந்துவிட்டேன் போலிருக்கிறது. அது வெளியே வந்திருக்கிறது. நல்லவேளை! கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால் என் பிழைப்பிலே மண் விழுந்திருக்கும்” என்றபடி பாம்பை எடுத்துக் கூடைக்குள் போட்டு மூடினான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த இந்திராணி, ”அது சரி, அந்தப் பணத்தை இப்படிக் கொடு. அது என் பணம். நான் சேர்த்த பணம். பூனை மாதிரி இருந்துகிட்டுப் பணத்தை எடுத்துப் பிள்ளையார் விக்கிரகத்துக்கு அடியிலே மறைச்சு வசசிருக்கியே; உனக்கு எத்தனை தைரியம் இருக்கணும்? இதுக்குதான் பிள்ளையார் கோயிலைச் சுத்தம் பண்ணிக் கும்பிட்டுக்கிட்டிருந்தாயோ?” என்று கடிந்தாள். செல்லி நடுநடுங்கி விட்டாள். ”இப்படி ஒர் அபாண்டமா? கடவுளே, கை நோக, உடல் நோக, வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி நான் சம்பாதித்த காசு என் புருஷனுக்குக் கூடத் தெரியாமல் சேர்த்து வைச்ச காசு” என்று பதறினாள் செல்லி.

சுடலைமுத்து நடப்பதை ஒன்றும் நம்ப முடியாமல் சிலையாக நின்றிருந்தான்.

”நன்றாகத்தான் கதை ஜோடிக்கிறாய்! பணத்தை கொடு அம்மே! இல்லைன்னா போலீசுக்காரனைக் கூப்பிட்டுடுவேன்” என்றாள் இந்திராணி மிடுக்குடன்.

நல்லகண்ணு பீடியைத் தூர எறிந்து விட்டு ”அம்மே டப்பாவைக் குடுத்திடு. நான் பொல்லாதவன். வீணா வம்புக்கு வராதே” என்று மிரட்டினான்.

இதுவரையில் பேசாமல் இருந்த சுடலைமுத்து, ”செல்லி! அந்த டப்பாவை அவள்கிட்டே குடுத்திடு. எனக்கு ரிக்‌ஷாவும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். கோர்ட்டு, போலீசு என்று போகாமே மானமாக வாழ்க்கை நடத்தினால் போதும்” என்றான்.

”எப்படிங்க கொடுப்பேன்? என் உயிரை விட்டுச் சம்பாதிச்ச பணம். என் வாழ்வே இந்தப் பணத்தை நம்பித்தானே இருக்கு? இந்தப் பணம் என்னுடையது என்பதற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி” என்று கதறினாள் செல்லி. அதிகப் பேச்சுக்கு இடம் வைக்காமல் நல்லகண்ணு செல்லியின் கையிலிருந்த டப்பாவைப் பறித்தான்.

”புருஷனுக்கு ரிக்‌ஷா வாங்கணும் என்கிற ஆசையிலே திருடவும் துணிஞ்சுட்டே!” என்றபடி வெற்றிலையைக் காரி உமிழ்ந்தாள் இந்திராணி. நல்லகண்ணு டப்பாவை இந்திராணியிடம் கொடுத்தான். செல்லி வயிற்றில் அடித்துக்கொண்டு ”கடவுளே! இந்த அநியாயம் எங்காவது நடக்குமா?” என்று புலம்பினாள். இந்திராணி ஒரு கல்லை எடுத்துத் தட்டி டப்பாவைத் திறந்தாள். அதை பார்த்ததும் ”அய்யோ!” என்று அலறினாள் இந்திராணி. டப்பாவில் காகிதத் துண்டும் ஓட்டாஞ்சல்லியும்தான் இருந்தன. இதைப் பார்த்த செல்லியும் திகைத்து நின்றுவிட்டாள். இந்திராணி ஒரு நிமிஷம் யோசித்தாள். ஏதோ விஷயம் புரிந்தது போல் நல்லகண்ணுவை நோக்கி ”என்ன மச்சான்! நாடகத்துக்குள்ளே நாடகமாடறியா? முதல்லே பணத்தை எடுத்துக்கிட்டு வேஷம் போட்டு என்னை ஏமாத்தறியா? எடு பணத்தை” என்று மிரட்டினாள். நல்லகண்ணுவுக்கும் கோபம் வந்துவிட்டது.

”நீதான் என்னை ஏமாற்றினாய். இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்றான் நல்லகண்ணு.

இந்திராணி பெண் புலியாக மாறினாள். ”அட சீ! நீயும் ஒரு மனுஷனா? நீ மட்டும் என் பணத்தைக் குடுக்கல்லே, உன்னைச் சும்மா விடமாட்டேன். உன் வண்டவாளங்களைப் போலீசுக்குச் சொல்லி விடுவேன். இந்த இந்திராணியை என்ன என்று நினைத்தாய்?” என்று சீறினாள்.

”எனக்கு அப்பவே தெரியும்… பணம் யாரு சேர்த்தாலும் அது பகையிலேதான் முடியும் என்று” என்றான் கிழவன்.

”ஏ கிழவா நீ பேசாமல் இருக்க மாட்டே! உன்னை யாரு கூப்பிட்டாங்க? நடுவே புகுந்து பேசினே, அடித்து நொறுக்கி விடுவேன்” என்றான நல்லகண்ணு. பிறகு இந்திராணியிடம் ”என்ன அம்மே, எங்கிட்ட படிச்ச வித்தையை என்கிட்டேயே காட்டறியா? போலீசுன்னா எனக்குப் பயமா? ஒண்ணு நினைச்சுக்க… நான் போலீசுக்குப் போனால் நீயும் என் பின்னாலே வரவேண்டியதுதான். உன் பணத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் கண்டிப்பாக.

”சரி, இந்த இந்திராணியை யாரும் ஏமாத்த முடியாது. உங்கிட்ட பேசிப் பிரயோசனமில்லே. நான் போலீசாரை விட்டு உன்னைக் கவனிக்கச் சொல்றேன்” என்றபடி வேகமாக நடந்தாள் இந்திராணி. கீழே கிடந்த தகர டப்பாவைக் காலால் உதைத்து தள்ளிவிட்டு நல்லகண்ணுவும் அவளைப் பின்தொடர்ந்தான்.

”தாத்தா! நான் என்ன செய்வேன்? நீயே சொல்லு. நான் இந்திராணி பணத்துக்கு ஆசைப்படுவேனா?” என்றாள் செல்லி கிழவனிடம். கிழவனுக்கு அவளை எந்த விதத்திலும் தேற்ற முடியவில்லை. அழுது அழுது செல்லியின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்து விட்டன. எத்தனை கட்டுப்படுத்தியும் அவளால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுடலைமுத்து பொறுமையாக, ”ஏம் புள்ளே இப்படி வருத்தப்படறே? உயிரா போயிடுச்சு? பணம்தானே; போனால் போகட்டும். இனிமேலும் சம்பாதிக்கலாம்” என்றான்.

”இனிமேல் எப்படிச் சம்பாதிப்பது? வேர்வை சொட்ட வேலை செய்த காசைக் காரணமில்லாமல் அநியாயமாக இழப்பதென்றால் அதை என்னால் தாள முடியாது” என்றாள் செல்லி.

நொண்டிப் பிச்சைக்காரன் ஒருவன் அந்த இடத்தை விட்டே போய்விட நினைத்துத் தன் சட்டிப் பானைகளை மூட்டை கட்டிக் கொண்டிருந்தான். கிழவன் எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டும், உடல் உபாதை தாளமுடியாமல் முக்கி, முனகிக் கொண்டும் படுத்திருந்தான்.

Image

தன் மூட்டை முடிச்சுக்களைப் புது இடத்துக்குப் பெயர்த்து எடுத்துச் சென்ற பாம்பாட்டி திரும்ப மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கச் செல்லியிடம் வந்து, ”நான் நெனச்சது சரியாய்ப் போச்சு. நல்லகண்ணுவும் இந்திராணியும் சண்டை போட்டுக்கிட்டாங்க. நல்லகண்ணு கோபத்தில் இந்திராணியை அடித்துவிட்டான். இந்திராணி, நல்லகண்ணு திருட்டுச் சாராயம் காய்ச்சும் இடத்தைப் போலீசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டாள். இதை அறிந்த நல்லகண்ணு இந்திராணியை மேலும் உதைத்து அவள் வண்டவாளங்களையும் போலீசுக்குச் சொல்ல, போலீஸ் வண்டி வந்து, இந்திராணி நல்லகண்ணு சாராயம் காச்சும் பானை, துணை ஆட்கள், எல்லோரையும் ஏற்றிக்கொண்டு போய் விட்டது. இனிமேல் குறைந்தது ஆறு மாசம் அவுங்க சர்க்கார் விருந்தாளிதான்” என்றான். யாரும் எதையும் பேசவில்லை. வெகுநேர மௌனத்துக்குப் பிறகு, ‘யாரு ஜெயிலுக்குப் போனால் என்ன? என் பணம் போயிற்று’ என்றாள் செல்லி உடைந்த குரலில்.

கிழவன் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தான். ”செல்லி! இங்கே வா! இதோ பாரு, நீ உழைச்சுச் சம்பாதித்த பணம் எங்கும் போய்விடவில்லை. இதோ என் கந்தல் துணி மூட்டைக்குள் இருக்கிறது. எடுத்துக்கொள். நேற்று இரவு இந்திராணி நல்லகண்ணுவிடம் பணத்தைத் திருடும்படி சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டுவிட்டேன். உன் பணம் பறிபோவதை நான் விரும்பவில்லை. ஆகையால் அவர்களை முந்திக் கொண்டு பணத்தை எடுத்து மறைத்து வைத்துவிட்டு, காகிதத் துண்டையும் ஒட்டாஞ்சல்லியையும் வைத்து விட்டேன்” என்றான் கிழவன்.

பணத்தைப் பார்த்ததும் செல்லிக்கு மகிழ்ச்சியால் கண்ணீர் வந்துவிட்டது. ”தாத்தா! கடைசியாக நான் பாடுபட்டுச் சேர்த்த பணம் கிடைத்துவிட்டது. நான் நம்பி வந்த பிள்ளையார் என்னைக் கைவிடாமல் உன் உருவத்தில் வந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறது. கடவுள் எங்கே என்று தேட வேண்டாம். அவர் நல்லவர்கள் உள்ளத்திலும் இருப்பார் என்று தெரிந்து விட்டது” என்று கூறிய செல்லி, பிள்ளையாரை நோக்கி நன்றிப் பெருக்குடன் கரம் குவித்தாள். அந்த மரத்தடிப் பிள்ளையார் அப்பொழுதும் கல்லாகவே இருந்தார்!

***

Image courtesy: http://www.dharsanam.com/

http://www.photogalaxy.com/

http://r2rapps.files.wordpress.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கோமகள்

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி 

காலத்தை வென்ற கதைகள் – 29

Image

கோமகள்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி. பாரம்பரிய கருத்துகளில் முரண்படாது தன் எழுத்தை அமைத்துக்கொண்டவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொலைக்காட்சிக்காக நாடகங்களும் எழுதியிருக்கிறார். இவரின் ‘அன்னை பூமி’ நாவல் தமிழ்நாடு அரசின் விருது பெற்றது. இவரின் படைப்புகள் கல்லூரி மற்றும் பள்ளி மேல்நிலைப் பாடப் புத்தகங்களில் பாடமாக்கப்பட்டிருக்கின்றன.

பால் மனம்

டைப்பின் நேர்த்தி வெகு விசித்திரமானது. அதில் மனிதனின் ஆரம்பக்கட்டமான குழந்தைப் பிராயம்தான் எத்தனை அழகு படைத்த ஒன்று! பட்டை தீட்டாமலேயே ஜொலிக்கும் கட்டி வைரமாக எழில் சிந்தும் அந்தப் பருவம். மீட்டாமலேயே குரலிடும் மோகன வாத்தியமாக இசையிடும் நாதநயம் அதன் மழலை. லோகாயத லாப நஷ்டங்களை, சூதுவாதுகளைக் கற்ற பெரியவர்கள்கூட சின்னக் குழந்தையின் சிரிப்பில் சொக்கி நிற்கிறனர். பெருங்காற்றே தென்றலுக்குத் தலை சாய்ந்து நிற்பது போல்! எங்கள் வீட்டில் என் அண்ணாவின் முதல் குழந்தையாகக் கிருஷ்ணா பிறந்த போது நாங்கள் கடவுளின் கருணையை ஏற்று மகிழ்ந்தோம். எங்களிடையே கிருஷ்ணா வளர ஆரம்பித்தாள். இல்லை கிருஷ்ணாவை நாங்கள் வளர்க்க ஆரம்பித்தோம்!

”கிருஷ்ணா!” என்று குரல் கொடுத்தவாறே குழந்தையைத் தேடினாள் மன்னி.

பிஞ்சு விரல்களால் ஜன்னலைப் பிடித்தவாறே நின்று தெருவைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணா தன் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். ஈரம் பிதுங்கும் வெள்ளரிப் பிஞ்சாக முகம். சிறகுகளாகப் படபடக்கும் இமைகள். கண்ணாடி மணிகளாக உருளும் விழிகள். பூ நயம் போல் உதடுகள். ஒளியரும்புகளான பற்கள். நுங்கு நீரின் குளிர்ச்சியாகக் குரல். தெய்வ வடிவைச் சின்ன உடலில் சிறைப்பிடித்த களை. முகத்தில் எந்த நேரமும் உலகைப் புரிந்துகொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான ஒரு சிந்தனைச் சாயல்.

”என்னடி கண்ணு! தெருவிலே என்ன பார்க்கிறே?” என்று அவளை வாரி அணைத்துக் கொண்டாள் மன்னி.

”அம்மா! அதோ பாரம்மா, நாய்க்குட்டி!” அவள் பிஞ்சு விரல் சுட்டிய இடத்தில் குப்பைத் தொட்டியோரம் ஒரு சொறி நாய் படுத்திருந்தது.

”சீ! அது அசிங்கம்! நம்ம நாய்க்குட்டி ‘டாமி’யைப் பார். அழகாக சுத்தமாக…”

”அம்மா! அந்த நாய்க்கும் சோப்பு போட்டுக் குளிப்பாட்டினா என்னம்மா?”

”அது தெரு நாய். அதைத் தொடப்படாது.”

”ஏன், தொடப்படாது? நம்ம நாயை மட்டும் தொடலாமா?”

”அப்பா திட்டுவாங்க” என்று முத்தாய்ப்பு வைக்க முயன்றாள் மன்னி.

குழந்தையா விடுவாள்? ”அப்பா, திட்டாட்டா தொடலாமா அம்மா?” என்று தன் கேள்வியைத் தொடர்ந்ததும் நான் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்.

மன்னி என்னிடம் குறைப்பட்டுக் கொண்டாள். ”பாரேன் ராமு! இவள் கேள்விக்குப் பதில் சொல்லவே ஒரு தனி ஆள் போட வேண்டியதுதான்! உம்! நீ படி… இவள் இப்படிப் பேசினால் நீ படிக்கிறதெங்கே?.. வாம்மா, கிருஷ்ணா! உள்ளே போகலாம். சித்தப்பா படிக்கட்டும்.”

எனக்குப் படிக்க ஓடவில்லை. குழந்தைக்குத் தெரு நாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கா? அல்லது இத்தகு சந்தேகங்களின் மூலம் உலகை அறிய முயலும் ஆவலா?

Image

சதா ‘சலசல’வென்ற பேச்சு. சிலபோது அவசரத்துக்கு நினைத்தபடி பேச்சு வராமல் ஜாடைகள் காட்டும் அழகு கூடக் கூட எந்த வேலைக்கும் வந்துவிடும் சுறுசுறுப்பு. மன்னிக்குத் தெரியாமல் அரிவாள்மனையில் உட்கார்ந்து விரலைக் காயப்படுத்திக் கொண்டு அதை அம்மா பார்த்துவிட்டாளோ என்று ஓரக் கண்ணால் நோட்டமிட்டு அச்சத்தோடு தூர வந்துவிடும் குறும்பு. மூன்றே வயதை எட்டிய குழந்தை கிருஷ்ணா கேள்விகளின் சொரூபம்தான்! காலையில் அப்பாவிடம் பாடம் சொல்லிக் கொள்ளும்போது ஆரம்பிக்கும் கேள்வியை, இரவு அம்மாவிடம் படுக்கும் போதுதான் முடிப்பாள். இடையே அவள் சிரிப்பதைவிடச் சிந்திப்பதுதான் அதிகம் போல் தோன்றும்.

காலையில் கீரை கொண்டு வரும் பெண், ”குழந்தை!” என்றுதான் குரல் கொடுப்பாள். குழந்தை எங்கிருந்தாலும் ஓடிப்போகும்! கன்னத்தை வழித்து முத்தமிட்டு விட்டு அவள் தரும் கீரைக் கட்டை வாங்கி வருவதில் குழந்தைக்குத் தனி ஆசை. கீரைக்காரப் பெண் கல்யாணம் செய்து கொண்டு போய் விடவும், அவள் அம்மா கீரை சுமந்து வர ஆரம்பித்தாள். வயதானவள் அவள். நோய்க்காரி என்றும் தெரிந்தது. அவளைக் கண்டதும் கிருஷ்ணா உற்சாகத்துடன் ஓடினாள்.

”கிருஷ்ணா! கிழவியைப் போய்த் தொடாதே. உடம்பு சரியில்லாதவள்” என்று மன்னி கூவினாள்.

அவள் குரலிலிருந்த கண்டிப்பால் திகைப்படைந்த குழந்தை என்னைப் பார்த்தாள். ”அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடலியா சித்தப்பா?”

நான் கிருஷ்ணாவைத் தூக்கிக் கொண்டேன். ”சமர்த்தா அம்மா சொன்னபடி கேட்டா, சாயந்திரம் காந்தி மண்டபம் அழைச்சுக்கிட்டுப் போவேன்.”

”நிஜம்மாவா சித்தப்பா?”

”ஆமாம்!”

காந்தி மண்டபத்துக்குக் குழந்தையை அழைத்துப் போய்விட்டால், அவளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு எவ்வளவு விடைகள்! புல் தரையில் ஓடுவதிலிருந்து, செயற்கைத் தாமரைக் குளத்தில் தன் நிழலுருவத்தைக் கண்டு கை கொட்டுவது வரை எதிலும் ஆச்சரியதந்தான்! நேரு பூங்காவின் மிருகங்களிடம்தான் எத்தனை ஆசை! பயபக்தியான நேசமான பார்வை! எப்பொழுதும் பார்த்திருக்கும் பஞ்சவர்ணக் கிளியிலிருந்து, புதிதாக வந்த புலிக்குட்டி வரை எதைக் கண்டாலும், நேற்றுப் பார்த்த நேசப்பார்வையில் இம்மி மதிப்பும் குறைந்திருக்காது. குட்டி ரயிலில் குதூகல உருவமாய், மகிழ்வின் பனித்துளியாய்க் கையசைத்தவாறே செல்லும்போது ஒரு தனி சிலிர்ப்பு அவளுக்கு. ஊஞ்சலில் ஆடும்போதும் சறுக்கி விளையாடும் போதும் ஓர் ஆவேசக் குதூகலம் அவள் முகத்தில் ஏற்படும். வீட்டுக்குத் திரும்பும்போது தெருவில் எப்போதோ தென்படும் குதிரை வண்டி, ஓரத்தில் மேயும் ஆட்டுக்குட்டி ஆகியவற்றைக் கண்கொட்டாமல் பாப்பாள். ”குதிரையும் ஆட்டுக்குட்டியும் ஏன் நேரு பூங்காவில் இல்லை சித்தப்பா?” என்ற கேள்வி வேறு!

***

ன்று மாலை சொன்னபடியே கிருஷ்ணாவை காந்தி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். கை வண்டியை நிறைந்த பாரத்துடன் நெரம்பி இழுத்தவாறே சென்றுகொண்டிருந்தான் கூலியாள் ஒருவன்.

”சித்தப்பா! பாவம் அவன்! காலிலே செருப்பே போடலை சித்தப்பா! கல்குத்துமே, வெய்யில் சுடுமே! என்னோட செருப்பு அவனுக்குச் சின்னது! உன் செருப்பைக் குடுத்துடு சித்தப்பா! நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே..!”

குழந்தையின் குரலிலிருந்த உருக்கத்தையும் துன்பம் கண்டு பொறாத மனத்தையும் கண்டு நான் நெகிழ்ந்தேன். அவளை அப்படியே வாரி அணைத்துக்கொண்டேன். குழந்தையா பேசுகிறாள்?

‘‘செருப்பைக் குடுத்துடு சித்தப்பா.”

”அவன் தூரப் போயிட்டான். இன்னொரு நாள் குடுத்துக்கலாம்” என்று அவளைச் சமாதானப்படுத்தி விட்டுப் பேச்சை மாற்றினேன். ”இன்னிக்கு நம் வீட்டில் அடைதானே? உனக்கு ரொம்பப் பிடிக்குமில்லே?”

”அடை மொறு மொறுன்னு இருக்கும். ரொம்பப் பிடிக்குமே!”

குழந்தை மறதி! அதை உபயோகித்துதானே அவர்களைத் தன் நினைவிலிருந்து மாற்றி நம் உணர்வுக்கு அடிமையாக்கி விடுகிறோம்?

அன்று கிருஷ்ணாவுக்குப் பிறந்த நாள்! விசேஷமாகச் சர்க்கரைப் பொங்கலும் வடையும் செய்திருந்தாள் மன்னி. புதிய உடைகளைப் போட்டுக்கொண்டு குதித்தாள் குழந்தை. சாப்பிடத் தோன்றாத அளவு சந்தோஷம் அதில். அவள் பெயரில் தயாரான விருந்தை நாங்கள் எல்லாம் வயிறு புடைக்க உண்டோம்!

இரண்டு மூன்று தினங்களாக வராமல் இருந்த கீரைக்காரக் கிழவி அன்று வந்தாள்.

”சமையல் எல்லாம் காலையிலேயே ஆச்சு. இன்னிக்குக் கீரை வேண்டாம்” என்றாள் மன்னி.

”அம்மா!” வேண்டுகோளாக ஒலித்தது கிருஷ்ணாவின் குரல். ”அந்தக் கிழவிக்குச் சர்க்கரைப் பொங்கல் குடேன்.”

”அடி என் சமர்த்து! எனக்குக்கூட மறந்து போச்சே… டீ கிழவி! கொஞ்சமிரு, வரேன்…”

இலை நறுக்கில் உணவு வகைகளை வைத்துக் கிழவியின் கையில் இட்டாள் மன்னி. கிழவியின் நடுங்கும் கரங்கள் ஆவலோடு உணவை ஏந்தின.

”அம்மா! கிழவி கை ஏன் நடுங்கறது?”

”வயசானவள். பலமில்லை.”

”எனக்குப் பலம் வரணும்னுதானே டானிக் தரேம்மா. அந்த டானிக்கைக் கிழவிக்கும் குடும்மா!”

”இதோ பார், கண்ணு! எனக்கு எல்லாம் தெரியும். நீ பேசாமல் இருக்கணும்.”

கிழவி போகன்வில்லா கொடியருகே போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை தன் தாயருகே தயக்கத்தோடு போனாள்.

”அம்மா! பூச்செடிகிட்டே சொத சொதன்னு சேறாக கிடக்கும்மா!”

”அப்படித்தான் இருக்கும்.”

”கிழவி பாவம்மா! சேத்திலே உக்கார்ந்து சாப்பிடறாளே..!”

”அவளுக்கு அப்படித்தான் கண்ணு பழக்கம்.”

”அம்மா! கிழவிக்கும் மேஜையின் மேலே சாப்பாடு போடும்மா!”

”போடக்கூடாது. அப்பா வைவார்.”

”நம்ப மட்டும் ஏன் மேஜையின் மேலே சாப்பிடறோம்?”

”அப்படித்தான் சாப்பிடணும்.”

”போம்மா! கிழவி பாவம்!”

”உன்னைச் சீக்கிரமே கிண்டர் கார்டனிலே போட்டுடறேன், இரு, ஸ்கூலுக்கு போனாத்தான் நீ கேள்வி கேட்க மாட்டே!’’

‘‘ஓ! எனக்கு ஸ்கூலுக்குப் போகப் பிடிக்குமே… ‘யூனிபார்ம்’ போட்டுட்டுப் பெட்டி எடுத்திட்டு, பெரியம்மா வீட்டு அக்கா போற மாதிரி, நானும் பஸ்லே போவேனே!”

அவள் ஞாபகத்தை திசை திருப்பிவிட்ட திருப்தி மன்னியின் முகத்தில் விரிந்தது. தனக்கென்று ஏற்படும் தனித்த உணர்ச்சிகளை ஓர் உருவமாக்கிச் சேமிக்க முடியாத குழந்தை மனம், லேசான பஞ்சு போல் நாம் ஊதும் திசைக்கெல்லாம் பறந்தோடுகிறது. நாளைக்கே அவள் பெரியவளானால் தன் உணர்ச்சிகளைக் கடைப்படிக்க மாட்டாளா என்ன?

***

”திருமுலைப்பால் உற்சவத்துக்கு வரும்படி அக்கா எழுதியிருக்கிறாள்” என்று மன்னி ஆரம்பித்தாள்.

”இப்போது இருக்கிற வேலையில் சீர்காழி போகிறதாவது” என்று அண்ணா எடுத்ததுமே மறுத்து விட்டார்.

”நான் மட்டுமாவது போயிட்டு வரேனே. போகல்லேன்னா எனக்கு ஒரு குறையாவே இருக்கும்.”

”அடுத்த வருஷம் பார்த்தால் போச்சு”.

”அடுத்த வருஷம் அக்கா மாற்றலாகிப் போயிடுவாள்.”

”நமக்கே அந்த ஊருக்கு மாற்றலானால் பார்த்துக்கறது. இங்கிருந்தே மனசாலே சேவிச்சுடு இப்போது!”

மன்னி பதில் பேசவில்லை. அவளுக்கு இந்த விஷயத்தில் மனத்தாங்கல்தான் என்று காட்டிக்கொள்ளும் விதமாக, அழாமலிருக்கும் போதே, தூளியில் கிடந்த கைக்குழந்தை ரவியை ஆட்டிவிட்டாள்!

***

கோடை மழை கொட்டிக்கொண்டிருந்தது. தெருவெல்லாம் ஈர நசநசப்பு. மரங்களும், செடிகளும், மண்ணும் குளிர்ந்து கிடந்தன. இரவின் அமைதியை மழையும், சில்வண்டுகளின் ரீங்காரமும், தவளைகளின் சத்தமும் அவ்வப்போது கலைத்த வண்ணம் இருந்தன.

தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் நடுக்கத்தைக் குரலில் பிரதிபலித்தவாறு இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நின்றிருந்தன. ”ம்மே, ம்மே!” என்ற அவைகளின் குரல்களைச் சங்கீதமாக அனுபவித்து ரசித்தாள் கிருஷ்ணா. அவைகளின் பட்டுப்போன்ற உடல்களைத் தடவிப் பார்த்தாள். கொஞ்ச நேரம் பயந்த ஆட்டுக் குட்டிகள் அச்சம் தெளிந்து அவளுடன் விளையாட ஆரம்பித்தன. தூக்கம் கண்ணைச் சொக்கும் போதுதான் அவள் உள்ளே வந்தாள்.

இரவெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று பெய்கிறது. தெரு வராந்தாவில் ஒதுங்கியிருந்த ஆட்டுக் குட்டிகள் அங்கேயேதான் இருக்கின்றன என்பதற்கு அடையாளமாக அவற்றின் ஈனசுரமான குரல்கள் நடுங்கும் குளிரூடே மந்தமாகக் காதில் விழுந்துகொண்டேயிருக்கின்றன.

விடிந்த பொழுதூடே கைக்குழந்தையின் பசிக்குரல் ஓலமிடுவதும், மன்னி ஃபிளாஸ்க் வெந்நீரை எடுத்துப் பாலைக் கரைத்துப் புட்டியில் நிரப்புவதும் தெரிகிறது. குழந்தை ரவி புட்டிப்பாலை மெல்ல உறிஞ்சுகிறான். அப்போது தெருவில் பால்காரன் குரல் கொடுக்கிறான். மன்னி பால் புட்டியை ரவியின் வாயிலிருந்து எடுத்துக் கீழே வைத்துவிட்டுப் பால் வாங்கப் போகிறாள். சிறிது வயிறு நிறைந்த மகிழ்ச்சியில் கைகால்களை உதைத்துக் கொண்டான் அவன்.

பாலை வாங்கி வந்த மன்னியிடம் அப்போதுதான் விழித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா அதீத ஆவலோடு கேட்டாள். ”அம்மா! ஆட்டுக் குட்டி இருக்காம்மா?”

”இருக்கே. தெருவிலே போய்ப் பாரேன். ராத்திரியெல்லாம் மழையில் நனைஞ்சிருக்கும் போலிருக்கு பாவம்!”

கிருஷ்ணா ‘விருட்’டென்று எழுந்தோடினாள். தெருவில் அவள் மழலையுடன் ஆட்டுக் குட்டிகளின் நேச பாவமான குரல்களும் கலந்து ஒலித்தன.

சிறிது நேரத்தில் மன்னியின் குரல் பல் விளக்கிக் கொண்டிருந்த என்னை உசுப்பியது. ”எங்கே, கைக்குழந்தைகிட்டே இருந்த பால் புட்டியைக் காணோம்?”

”எங்கே போயிடும்?” என்ற அண்ணா தினசரியை விரித்தார்.

”எங்கேதான் போயிடும் பின்னே? பால் வாங்கணும்னு போனேன். இரண்டு வாய்ப் பால்தான் குழந்தை குடிச்சிருப்பான். புட்டியைக் கீழே வச்சிட்டுப் போயிருந்தேன். இங்கே காணோமே?”

எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. வாய் கொப்புளித்து விட்டு, தெருக் கதவருகே ஓசையிடாது எட்டிப் பார்த்தேன். என் ஊகம் பொய்யாகவில்லை. என்ன விந்தை! உணர்ச்சியைக் கூறு போட்டுக்கொள்ள அண்ணாவையும், மன்னியையும் ஓசையிடாது வரவழைத்து வீட்டுக் கேமராவையும் எடுத்து வந்தேன்.

மழைச் சாரலில் ஒன்றி நின்றதால் உரோமங்கள் நனைந்து கரும் பட்டாகப் படிந்திருக்க, இளம் குழவிகளாக நின்ற அந்த இரு ஆட்டுக் குட்டிகளில் ஒன்றின் வாயில் பால் புட்டியின் குமிழை வைத்துக் குழந்தை கிருஷ்ணா அதற்குப் பாலை ஊட்டிக் கொண்டிருந்தாள். அதன் ஈனக்கூச்சல் அடங்கி சந்தோஷ முனகல்கள், ஆனந்த உறுமல்கள் சூழ்ந்திருக்கின்றன. முன்னங்கால்களை ஊன்றி ஆட்டுக்குட்டி பாலைப் பருகும் விதம் கண்ணைக் கவர்கிறது. மற்றொரு ஆட்டுக் குட்டி நேசபாவத்துடன் கிருஷ்ணாவின் காதை நக்குகிறது. கூச்சத்தோடும் ஆமோதிப்போடும் முகம் சுளித்துக்கொண்டு சிரிக்கிறாள் குழந்தை. அவன் கண்களில் அருள் வெள்ளம். முகத்தில் அன்பு நிழல். மனத்திலோ பொங்கிப் பெருகும் கருணைப்பரிவு. அந்த இரு சின்ன உயிர்களுக்கும் அவள் ஒரு தாயாகி விட்டாளா? அந்த உணர்ச்சிக்கு வேறு என்ன பெயர் சூட்டலாம்?  வியப்புடன் நிற்கிறோம் நாங்கள். தெய்வ சந்நிதானத்தில் அருள் சுடர் தெறிப்பில் கட்டுண்டாற்போல்!

என் ‘ஃபிளாஷ்’ அந்தக் காட்சிக்கு நிரந்தர உருவம் தருகிறது. அப்போதும் குழந்தையின் ஈடுபாடு சிதறவில்லை.

”பார்த்தியா, சாவித்திரி? திருமுலைப்பால் உத்ஸவம் இன்னிக்குத்தானே? உனக்குக் குறையாகாம வைக்கத்தான் அதே உத்ஸவம் இங்கே நடக்கிறது! இது தெய்வ சந்நிதிடி! அம்பிகை அருள் சுரந்து ஞானசம்பந்தருக்குப் பாலூட்டியது போலத்தான் இங்கேயும் ஞானப்பால் ஊட்டறாள் நம்ப பெண்! நீ கும்பிடற தெய்வம்தான் உன் எதிர்த்தாப்பலேயே உனக்கு இதை நடத்திக் காட்டறது!”

அண்ணாவின் குரலில் கூடியிருந்த பெருமையும் பாசமும் மன்னியையும் பற்றிக்கொண்டன.

”பாவம்மா, ஆட்டுக்குட்டி! அதுக்கு யாரம்மா பால் தருவா? ராத்திரி பூரா சாப்பிடாமே இந்த ஆட்டுக்குட்டிக்கு ரொம்பப் பசிம்மா!”

”நீதான் இருக்கியேடி!” என்று கிருஷ்ணாவை ஆரத் தழுவிக் கொண்ட மன்னி அவள் கன்னங்களில் மாறி மாறி முத்த மழை பொழிந்தாள்.

குழந்தை கிருஷ்ணா தனக்கென்று பெற்றிருந்த இரக்க சுபாவம், கருணை மனம் இவற்றைக் கண்டு மன்னி ரொம்பவும் வருத்தப்பட ஆரம்பித்தாள். ஒரு நிமிட நேர நிகழ்ச்சியில் ஆட்பட்டு ஆட்டுக் குட்டிக்குப் பால் தந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். ‘‘இப்படியிருக்கிறாளே, தம்பிக்கு வைத்திருந்த பாலை வீணாக்குகிறோமே என்று தெரியவில்லையே, பாச உணர்வு வரவில்லையே… பிறத்தியார்கிட்டே மட்டும் கனிவா இருந்தால் போதுமா? எப்படி இந்த உலகத்திலே பேர் சொல்லப் போகிறாள்? ஓரொரு குழந்தை எத்தனை சமர்த்தாக இருக்கிறதுகள்!” என்று பேச ஆரம்பித்து விட்டாள்.

”ராமு! நீ ரொம்பச் செல்லம் தரே! தப்புன்னு படறதைக் கண்டிக்கணும். ‘பட்’னு ஒண்ணு குடுத்துடணும். போற போக்குக்கே விட்டு, அடிச்சு வளர்க்காத பிள்ளை உருப்படாது. அவளைப் புகழ்ந்து பேசிப் பேசி ரொம்பவும் ஏறி விட்டது. இனிமேல் அவளை மட்டம் தட்ட வேண்டியதுதான். ‘ஜீனியஸ்’ஸா வருவானள்னு கணக்கு வழக்கில்லாத புஸ்தகங்களையும் பொம்மைகளையும் வாங்கிப் போடறார் உன் அண்ணா. அவளும் அதைக் கொண்டா, இதைக் கொண்டா, அவனுக்குக் குடு, இவனுக்குக் குடுங்கிறாள். கொஞ்சம் கொஞ்சமா குழந்தை மனசை, பெரியவங்க கஷ்டத்தை உணரும்படி மாத்தணும். இல்லேன்னா பின்னாலே கஷ்டம். ரொம்ப வெகுளித்தனமா இல்லாமே, நம்ம வீடு, நம்ம அப்பா அம்மான்னு உணர வைக்கணும்… தன்னுடையது, தனக்கு வேணும்னு புரிய வைக்கணும்…”

”குழந்தைதானே அவள்! வளர்ந்தால் சரியாகிவிடும்” என்றேன் நான். மனத்துக்குள் மட்டும் அவளைப் பற்றிய பெருமிதம் ஓங்கியிருந்தது.

மனிதனின் ஆரம்பப் படைப்புருவம்தான் எத்தனை விநோதமானது! உள்ளதை உள்ளபடி உணர்வதுதானே குழந்தை மனம்! தன்னைப் போன்றே பிறரையும் எண்ணும் குழந்தை தனக்குத் தோன்றுவதையெல்லாம் செய்யும்படி கேட்கிறாள். என்னுடையது, என்னுடையதல்ல என்ற தனி மனிதப் பிரச்னையை அது உணர்வதில்லை. அந்தக் கல்மிஷத்தை நாம்தான் கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் ஏற்றுவதைப்போல் அந்த மனத்தில் நாளாவட்டத்தில் கலந்து விடுகிறோம்.

அண்ணாவும் சிறிது சிறிதாய் மன்னிக்குத் தலை அசைக்க ஆரம்பித்தார். ” நீ சொல்றதும் சரிதான் சாவித்திரி! குழந்தையை இப்படியே விடப்படாது. சாமர்த்தியக்காரர்கள் நிறைந்த சந்தை மாதிரி இந்த உலகம் ரொம்பப் பொல்லாதது. அதிலே ஏமாளியா இருக்கிறவனை, இரக்க மனம் படைச்சவனை, அயோக்கியன் ஜெயிச்சுடறான். இப்போதைய வாழ்க்கை முறையிலே கிருஷ்ணாவைப் போன்ற வெள்ளை மனம் படைச்சிருந்தால் வாழறது ரொம்ப சிரமம். அவளை மெள்ள மெள்ள மாற்ற வேண்டியதுதான்!”

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். எந்தப் பெற்றோரும் தன் பிள்ளை நல்லவனாக இருப்பதால் ஏமாந்துவிடுமோ என்று கவலைப்பட்டு, சாமர்த்தியசாலியாக வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றனர். அதற்கு என் அண்ணாவும் மன்னியும் மட்டும் விதிவிலக்கா என்ன?

***

காலப் பூங்காவில் ஐந்து வசந்தங்கள் வண்ண ஜாலம் செய்து மறைந்தன. அண்ணா ஊரூராக மாறிக்கொண்டிருந்தார். நான் சென்னையிலேயே தங்கி என் படிப்பை முடித்தேன். அதன்பின் வாழ்க்கைக்கு நிலைத்த ஒரு வருமானம் தரும் உத்தியோகத்தையும் ஏற்றேன். என் முதல் சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட நான், அதை என் அண்ணாவின் கையில் தந்து ஆசீர்வாதம் பெறத் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

முதலில் என் நினைவுக்கு வந்தவள் குழந்தை கிருஷ்ணா. கல்லூரி விடுமுறையில் கூடத் தட்டெழுத்தும், சுருக்கெழுத்தும் கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதால் இடையிடையே எப்போதோ வெளியூரில் தங்கியிருக்கும் அண்ணாவைப் பார்க்கப் போனேன். கிருஷ்ணாவோடு பழகும் நேரமும் மிகக் குறைச்சலாக இருக்கும். இப்போது எட்டு வயதிருக்குமே… பள்ளியில் படிப்பாள். எப்படிப் பேசுவாள்! எப்படி நடப்பாள்? என்னுள் இனிய கற்பனையாக அவள் நடையுடை பாவனைகள் பொங்கிப் பிரவகித்தன. என் டயரியில் பத்திரப்படுத்தியிருந்த அவள் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். என்ன அழகான காட்சி! குழந்தை கிருஷ்ணா ஆட்டுக் குட்டிக்குப் பாலூட்டும் காட்சி நேற்றே நடந்தாற்போல் தோன்றுகிறது.

கிருஷ்ணா என்னிடம் உடனே ஓடி வராமல் வெட்கத்துடன் நின்றிருந்தாள். என்னுடைய அழைப்பின் தூண்டுதலும், நான் வாங்கிப் போயிருந்த தின்பண்டங்களும் அவளை மெல்ல மெல்ல என் அருகே இழுத்து வந்தன. அவளுக்குச் சிறியவன் ரவியும் என்னருகே வந்தான். சிறிது நேரத்திலேயே பிரிந்திருந்ததால் ஏற்பட்ட வெட்கம் நீங்கப் பெற்றவளாய் சகஜ பாவத்துடன் என்னுடன் பழகினாள் கிருஷ்ணா.

அன்று மாலை கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு கடைத் தெருப்பக்கம் போனேன். தன் பள்ளியைப் பற்றி, கூடப் படிக்கும் மாணவிகளைப் பற்றி, அப்பாவும் அம்மாவும் வாங்கித் தந்த உடைகளைப் பற்றி என்று அவள் கலகலப்பாகப் பேசிக் கொண்டே வந்தாள். அப்போது ஒரு கிழப் பிச்சைக்காரியை, ஒரு சிறுமி பற்றியவாறே என்னருகே வந்து, ”சாமி! இந்தக் கிழவி வயசானவ சாமி! ரெண்டு நாளப் பட்டினி! ஏதாவது தர்மம் குடு சாமி?” என்று நலிந்த குரலில் கேட்டாள். பிறகு கிருஷ்ணாவைப் பார்த்து அவள் கையிலிருந்த பிஸ்கெட்டைக் கேட்டாள். கிருஷ்ணா பிஸ்கட்டை மறைத்துக் கொண்டாள். நான் நடந்தவாறே சில்லறை இருக்கிறதா என்று துழாவினேன். இதற்குள் பிச்சைக்காரச் சிறுமி என்னைத் தொட்டு மறுபடியும் பிச்சை கேட்டாள்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில் கிருஷ்ணாவிடமிருந்து ஒரு சீறல் கிளம்பியது. ”சீ! எங்க சித்தப்பாவைத் தொடாதே, போ. உனக்குக் காசு தரமாட்டோம்! பிஸ்கெட்டும் தர மாட்டோம்!”

”கிருஷ்ணா! அவள் பாவம்! போனால் போகட்டும். பசிக்குமில்லையா? இந்த அஞ்சு பைசாவை நீயே அவள்கிட்டே போடு, பார்க்கலாம்!”

கிருஷ்ணா நாணயத்தை வாங்கி வெறுப்போடு முகம் சுளித்தவாறே சிறுமியின் மேல் தன் கை பட்டுவிடாமல் தூக்கிப் போட்டாள். பிறகு இதுவரையில் பேசி வந்த குரலிலேயே இப்போதும் பேசினாள். ”நிறையப் பிச்சைக்காரங்க இருக்காங்க சித்தப்பா! எல்லாருக்கும் போட்டா நம்ப காசெல்லாம் ஆயிடும்! அவங்க அப்படித்தான் இருக்கணும்! பிஸ்கெட் வேணுமாம் அவளுக்கு! இது என்னோட பிஸ்கட். என்னோடது எனக்குத்தான்! இதை யாருக்கும் தரமாட்டேன்!” என்ன அழுத்தம்! அவள் குரலில் இயற்கையான கனிவில்லை. என்னுடையது, என்னுடையதல்ல என்ற தனி மனிதப் பிரச்னை எப்படி இந்தக் குழந்தை மனத்தில் புகுந்தது?

கிருஷ்ணா தொடர்ந்தாள். ”ரவியைப் பாரு, சித்தப்பா! பால் சாதத்தைத் தெரு நாய்க்குப் போடறான். நம்ப ‘டாமி’க்குத்தானே போடணும்?”

நான் குழந்தையைப் பார்த்தேன். அவள் வளர்ந்து விட்டாள். உலகைப் போலவே மற்றவர்களைப் பற்றி நினைக்கக் கற்றுக் கொண்டாள். ஆனால், என்னுள் மகிழ்ச்சி எழவில்லையே, ஏன்? நான் பெருமூச்செறிகிறேன். சிரிப்பதை விடச் சிந்திப்பதில் அதிகம் ஈடுபட்டிருந்த குழந்தை எப்படித்தான் மாறிவிட்டாள்? புதிய கருத்துகள் பழைய கனிவை வெள்ளமாக அழித்து விட்டனவா? பணத்தைச் சுயநல எண்ணத்தோடு இயக்கக் கற்றுத் தந்தாகி விட்டதே, இனி அந்தக் குழந்தை தெய்வமா என்ன? ஒரு குழந்தை சுயநலத்தை உணரும் சக்தி படைத்த பின்தான் அது மானிட ஜாதியைச் சேர்ந்ததாகி விடுகிறதே!

***

தெருவில் கிருஷணாவின் அட்டகாசச் சிரிப்பொலி கேட்கிறது. என்னவென்று எட்டிப் பார்த்தேன். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! கல்லடிபட்ட ஆட்டுக் குட்டி, ”ம்மே! ம்மே!’’ என்ற வேதனை முனகலோடு நொண்டியவாறே தத்தித் தத்தி ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கைக்கொட்டி நகைக்கிறாள் கிருஷ்ணா.

”கிருஷ்ணா! இப்படித்தான் ஆட்டுக் குட்டியைக் கல்லால் அடிக்கிறதா? நொண்டுகிறது பார்! முட்டாள்! இங்கே வா, சொல்கிறேன். சின்னக் குழந்தையில் இரக்கத்துடன் நடப்பாய். வளர வளர எல்லாம் போய் விட்டதா? உள்ளே போ!”

இயல்புக்கு மாறான சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டாற்போல் அவள் முகம் வாடியது. என்னுடன் கொண்ட சகஜ பாவத்தை முறித்துக்கொண்டு, அழுத்தமான விறைப்போடு உள்ளே போனாள். முன்பெல்லாம் அவள் ரசனையில் தெரிந்த இரக்கப் பண்பு எங்கே போயிற்று?

வாசலில் சாலை வேலை செய்யும் கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்கிறான். அவனைப் ‘போ போ’ வென்று விரட்டுகிறாள் கிருஷ்ணா. ”எப்பவும் இங்கேதான் கேட்பே, போ, நான் தரமாட்டேன்.”

நான் கண்டிக்கக் குரலெடுக்குமுன் மன்னியின் குரல் கேட்கிறது. ”நேத்திக்கு வந்தவன்தானே? தினமும் ஒரு ஆள் தண்ணீர் கொடுக்க நிற்க வேண்டியதுதான். வேறே வேலை இல்லை.”

”நான் விரட்டிட்டேன்மா!”

”அதுதான் சரி. சமர்த்து! உள்ளே வா!”

Image

குழந்தை தெய்வீக மனம் படைத்திருந்தபோது சலித்த தாயார், சாதாரண உணர்வை ஏந்தியதும் புகழ்கிறாள். மலையருவி இமயப் போர்வையிலிருந்து விடுபட்டு, பூமித் தூசியில் கலந்து விட்டதற்கு இத்தனை மகிழ்வா?

இப்பத்தான் சமர்த்தாமே! எம்மாதிரி பழக்குகிறோமோ அம்மாதிரிதான் பண்பு வளர்கிறது. இயற்கை உணர்வையே செயற்கை உணர்வாகத் திசை திருப்பிவிடும் நம் பழக்க வழக்கங்களுக்கு நாம்தான் பொறுப்பென்றால், நம்மை திசை மாற்றி அமைத்த நம் பெற்றோர், நம் சமூகம் எல்லாம் பொறுப்பேற்க வேண்டியதுதான். குழந்தைகள் குப்பைகள் கலவாத மாணிக்கங்கள்! அவற்றின் மனமொழி மெய்யைச் சூழலுக்கு ஏற்ப நாம்தான் திருத்தியமைக்கிறோம். பச்சை மெழுகாகக் கடவுள் தரும் குழந்தையை நமக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்கிறோம். அதன் இயற்கை உணர்வுகளைக் கொன்று புதிய உள்ளத்தை பிரதிஷ்டை செய்கிறோம். அப்படி மாறாதவர்களை வெகுளி, அசடு என்கிறோம். மாறியவர்களைச் சமர்த்து என்கிறோம். இறைவன் சிருஷ்டியை நம் இஷ்டப்படி மாற்றிவிட்டு, சமர்த்து என்று சொல்லிக் கொள்வதில்தான் எத்தனை பெருமைப்படுகிறோம்?

அன்று கீரைக் கிழவிக்குத் தன் பிறந்த நாள் உணவைப் படைக்கச் சொன்ன குழந்தை இன்று ஒரு பிச்சைக்காரச் சிறுமிக்கு ஐந்து பைசா போட வெறுக்கிறாள். ஆட்டுக்குட்டிக்குப் பசிக்குமே என்று பரிதாபப்பட்டு, தம்பிக்கு வைத்திருந்த பீடிங் பாட்டிலை எடுத்து ஊட்டிய குழந்தை இன்று அதைக் கல்லால் அடித்து அது நொண்டுவதைக் கண்டு கை கொட்டிச் சிரிக்கிறாள். தெரு நாயையும் குளிப்பாட்டலாம் என்றவள், அதற்கு ஏன் பால் சோறு, நம் நாய்க்கே போடலாம் என்கிறாள். செருப்பில்லாமல் வண்டி இழுக்கும் கூலியாளைக் கண்டு மனம் வெதும்பி என் செருப்பைத் தரும்படித் தூண்டியவள், சாலையில் வேலை செய்யும் தொழிலாளியின் தாகத்துக்குத் தண்ணீர் தராமல் விரட்டுகிறாள்.

அன்பில் விஷத்தை, அறிவில் ஆத்திரத்தை, பாசத்தில் பணத்தை, பண்பில் சுயநலத்தைக் கலந்து வைத்த உலக உணர்வுகள் ஒரு தெய்வீகமான குழந்தை உணர்வில் மனித உணர்வைக் கலந்து விட்டதை உணர்ந்து கொண்டேன். என்ன செய்வது? அது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான், காற்றில் தூசுகள் பறப்பதைப் போல்! எனக்கு அது ஒரு பெரிய குறை. வறுமை, நோய், முதுமை ஆகியவற்றைக் கண்டு கலங்கிய குழந்தையா இன்று எல்லா உணர்வுகளையும் ஜீரணித்துக் கொண்டு உலக உணர்வுகளோடு ஒன்றிவிட்டாள்?

இனி, மன்னி பயப்பட வேண்டாம்! கிருஷ்ணா தனியே பஸ்ஸில் பள்ளிக்கூடம் சென்று படித்து வருகிறாள். சின்ன டிபன் பாத்திரத்தில் ஓர் உருண்டை தயிர்சாதம் மட்டும் எடுத்துப் போய்ச் சாப்பிட்டுப் பசியை அடக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். இயந்திரமயமாக நாம் நிர்ணயித்த சட்ட திட்டங்களுக்குள் எவ்வித எதிர்ப்பும் இன்றி லயித்துக் கலந்து பழகிய பசுவாகிவிட்டாள்!

”நீ பார்த்ததுக்குக் கிருஷ்ணா ரொம்ப வளர்ந்துடலை? கெட்டிக்காரியாகி விட்டாள்!” அண்ணா பெருமைப்படுகிறார்.

அவளுடைய வளர்ச்சி எந்த ரூபத்தில் ஏற்பட்டுள்ளது? அருள் வடிவானவள் வெறும் லோகாயத சேற்றில் முளைத்த பூண்டாகி விட்டாளே… அதை வளர்ச்சி என்று எப்படி ஏற்பது?

நான் என் கிருஷ்ணாவை, எனக்குப் பிடித்த உணர்வுகளை ஏந்தி நின்ற குழந்தையை காண வந்தேன். அவளைக் காணமுடியாத ஏமாற்றத்தோடு திரும்பிப் போகிறேன். அப்படிப்பட்டவளை இனி காண முடியாது என்ற உண்மை, என் கண்டத்துள் ஒரு ரகசிய வேதனையாக முட்டுகிறது.

கடவுளின் பிரதிநிதியாகக் குழந்தை பூமியில் ஜனிக்கிறது! ஆனால், மனிதனின் பிரதிநிதியாக உலகை விட்டு நீங்குகிறது!

***

Image Courtesy:

http://barbarafoxwatercolors.blogspot.in

http://fin6.com

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

வசுமதி ராமசாமி

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 28

Image

வசுமதி ராமசாமி

(1917  – 2003)

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர். கல்கி அவர்களின் எழுத்தின் வசீகரத்தில் கவரப்பட்டு எழுதத ஆரம்பித்தார். இந்திய – பாகிஸ்தான் காஷ்மீர்ப் போரைப் பின்னணியாகக் கொண்டு, இவர் எழுதிய நாவல் ‘காப்டன் கல்யாணம்’ குறிப்பிடத்தக்க ஒன்று.

‘பாரத தேவி’, ‘ராஜ்ய லஷ்மி’ போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதியவர்.

எழுத்துப் பணிக்குச் சமமாக சமூக சேவையிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மாதர் சங்கத்தை நடத்தி, பெண்களுக்கு உதவுவதில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர்.

கண் திறந்தது 

Image

பெரியசாமியின் வீட்டில் அமைதி நிலவியது. வீட்டுக்கு முன்னால் இருந்த புளிய மரத்தடியில் எப்போதுமே பாறைகள் குவிந்து கிடக்கும். ஏன், இன்னும்தான் ஏதோ இரண்டொரு பாறைகள் கிடக்கின்றன. அவற்றின்மேல் புளியமரத்துப் பழுத்த இலையும், புளியும் ஓடும் உதிர்ந்து கிடக்கின்றன. கல்லைச் செதுக்கும் மங்கள ஒலி மறைந்து விட்டது. கல்லை உளி துளைக்கும் பொழுது பறக்கும் நெருப்புப் பொறிகள் அணைந்து விட்டன.

ஆட்கள் பாறைகளைச் சுமக்க முடியாமல் சுமந்து பாடிக்கொண்டே போவார்களே, அந்த ஒலி எங்கேயோ கேட்கிறது. பெரியசாமியின் வீட்டுக்கு அருகில் கேட்கக் காணோம். அவன் வீட்டிலிருந்து எத்தனை எத்தனை தெய்வங்கள் உயிர் பெற்றுக் கோயில்களில் குடிகொள்ளப் போயிருக்கின்றன! எத்தனை எத்தனை சிற்பங்கள் ஆலயங்களின் மேல் மண்டபத்தை அலங்கரித்திருக்கின்றன!

பெரிய பற்களைக் காட்டிக்கொண்டு வாய் திறந்து நிற்கும் சிங்கங்கள், யாளிகள், பின்னங்காலைச் சாய்த்து, முன்னங்காலை நீட்டிக்கொண்டு பாயும் குதிரைகள், அசைந்து வரும் யானைகள் இப்படி எத்தனையோ, பாருள்ள அளவும் விளங்கும் கற்கோயில்களாக இருக்கின்றன! பிரமனை வெற்றி  கொண்டவனல்லவா பெரியசாமி! பிரமனின் படைப்பிலாவது அழகும் உண்டு, அவலட்சணமும் உண்டு. பெரியசாமியோ எல்லையற்ற அழகுத் தெய்வங்களைப் படைத்து இருக்கிறான். எத்தனை லிங்கங்கள், அம்பிகை, நவக்கிரகம், கணபதி… எண்ணி முடியுமா? ஏட்டில் அடங்குமா? அவன் மற்றவர்களைப்போல் கோயில் பிரகாரத்தில் சிலை செய்யவில்லை. தொலைவில் உள்ள மற்ற ஊர்களுக்கும் கூடத் திருப்பணி வேலையை மேற்கொண்டிருந்ததால், அவன் வீட்டு வாயிலில் உள்ள புளிய மரத்தடியே அவனுக்குக் கல் பட்டறையாக இருந்தது.

இன்று சிற்பி பெரியசாமி மறைந்து விட்டானா? அப்படியிருந்தால் பரவாயில்லையே! அது இயற்கையின் நியதிதானே? அதே பெரியசாமி தளர்ந்த உடலுடன் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான். ஊர், உலகமெல்லாம் ‘பெரியவர், பெரியவர்’ என்று மரியாதை செலுத்தும் பெரியசாமி இன்று சிறுயவனாகி விட்டான். அந்த நினைப்பைப் பெரியசாமியினால் தாங்க முடியவில்லை. ‘எனக்கும் இப்படிச் சிறுமையா?’

சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு வரையில் அவன் இருபத்தைந்து வயதுக் காளையின் பலத்தோடுதான் இருந்தான். கல்லைக் கடவுளாக வடித்து, வானளாவிய கோயில்களுக்குக் கொடுத்த மேதையாகத்தான் திகழ்ந்தான். தெய்வம் பெரியசாமியைப் படைத்தது. பெரியசாமியோ நூற்றுக்கணக்கான சாமிகளைப் படைத்தான்.

இறுகிப் போய்க் கல்லாக வந்ததைக் கருணை நிறைந்த, கனிந்த கடவுளாக அமைத்துக் கொடுத்த பெரியசாமியின் பெருமையெல்லாம் எங்கே? எழுபது வயதை எட்டிப் பார்க்கும் அவனுக்கு இத்தனை காலமும் உடல் தளர்ச்சி என்பதே இல்லை. ஆனால், மூன்றே மாதங்களுக்குள் கல்லைச் செதுக்கிய, அவனது உருண்டு திரண்ட தோள்கள் சரிந்து விட்டன. கல்லில் கடவுளைத் தேடிய கண்கள் குழி விழுந்து, நீல மணிகள்போல ஒளி இழந்து இருந்தன. தெய்வத்தை வடித்து, காய்த்துப் போன விரல்கள் முரமுரத்துப் போய்விட்டன. மூன்று மாதங்களுக்குள் முப்பது ஆண்டுகளின் முதுமையை அடைந்து விட்டான்!

இன்றையச் சிறுமையான நிலையை அவனால் சிந்திக்க முடியவில்லை. அடுத்துக் கலா காமேசுவரி ஆலயத் திருப்பணி கோலாகலமாக நடக்கவிருக்கிறது… ஆனால்… துயரம் நெஞ்சைப் பிளந்தது. கையால் தடவிக் கொண்டு நிமிர்ந்தான். மனம் எழும்பியது. ”நான் வருந்த மாட்டேன், ஏன் இன்பத்தை இழக்க வேண்டும்? உங்களுக்கெல்லாம் என்னைப்போல் இன்பத்தில் லயித்திருக்கத் தெரியாது எனக்குச் சக்தியிருக்கிறது” என்று மற்ற உறுப்புகளைப் பார்த்து மார் தட்டியது மனம்.

மனவேகம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்றது.

கைலாஸபுரத்தில் ஆலகால சுந்தரர் கோயில் திருப்பணி. செட்டியார் குடும்பத்துக் கைங்கரியம், பெரியசாமியின் கைராசி பிரசித்தமானவை. முதலில் பூசை செய்து, கற்பூரம் ஏற்றி, பூசணிக்காய் உடைத்து, பெரியசாமி தன் சகாக்களுடன் வேலையை ஆரம்பிப்பதைப் பார்த்தாலே புல்லரிக்கும். பெரியசாமியின் முன்னோர் தமிழ்நாட்டின் கோயில்களைக் கல்லில் செதுக்கிய மேதைகள். அவன் நரம்புகளில் பரம்பரையாக வந்த தொழில் துடித்துக் கொண்டிருந்தது.

ஆலகால சுந்தரர் கோயில் நிர்மாணம் பெரியது. ஐந்து ஆண்டுகள் இரவும் பகலுமாகக் கற்கள் சிலைகளாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன. கல்யாண வயதை அடைந்த ஒரே மகனுக்குக் கால் கட்டுக் கட்ட எண்ணிய பெரியசாமியின் பெற்றோர் பிடிவாதமாக அவன் மாமன் மகள் வள்ளியை மணம் முடித்து வைத்தார்கள். காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஒன்று போக ஒன்று வேலை இருந்து கொண்டேயிருந்தது. தெய்வத்துடன் வாழ்ந்த பெரியசாமிக்குக் குடும்ப வாழ்க்கை நடத்த நேரம் இல்லை. வள்ளியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட அவனுக்குப் பொழுது இல்லை.

Image

வள்ளி அவன் பின்னால் ஆவல் ததும்ப வந்து நிற்பாள். இளம் உள்ளத்தில் எத்தனை எத்தனை இன்ப நினைவுகளோ?

”இதோ பாரு, வள்ளி! கல்லு நல்ல வாட்டமா இருக்குது. முருகப் பெருமானுடைய வள்ளி நாயகியை இதில் செதுக்கப் போகிறேன். அப்புறம், ஷண்முகநாதர், தெய்வயானை அம்மாள் இப்படி. போ, போ வள்ளி. வேலையைப் பாரு. உன்னோடு பேசினால் என் கை வேலை தடுமாறும்”. கல்லைப் பார்த்துப் பேசிய வண்ணமே பெரியசாமி வள்ளியைப் பாராமல் அனுப்பி விடுவான்.

இந்தக் காலத்துப் பெண் இல்லையே வள்ளி! கண்களில் நீர் முட்ட, தலைப்பை வருடிக்கொண்டு போய்விடுவாள். இப்படியே சில ஆண்டுகள் ஓடி விட்டன. திருநீலகண்டர் தாம்பத்தியம்தான்.

புது கண்டங்கிச் சேலை; அள்ளிச் செருகின கொண்டையில் பூ முடிந்திருந்தாள். காதிலே தண்டட்டி, காலிலே கொலுசு, கழுத்திலே கருகமணி.

”நான் எப்படி இருக்கேங்க?” இவ்வலங்காரத்துடன், பின்னால் வந்து நின்ற வள்ளி கேட்டாள்.

திரும்பினான் பெரியசாமி.

அப்பொழுதுதான் அவன் கண்களுக்கு வள்ளியின் அழகு தெரிந்தது. ஏற இறங்கப் பார்த்தான்.

”வள்ளி! தவத்தைக் கலைக்கிற மாதிரி நிக்கிறியே! ஓகோ! இன்னிக்கி தீபாவளி நாளா! ஆறாம் நாளு என்னப்பன் சூர சம்ஹாரம் செய்கிற நாள். அதுக்குள்ளார அவன் முழு உருவத்தையும் செதுக்கி விடணும். நீ இப்படித் தடங்கல் செய்யாதே வள்ளி!”

”இல்லீங்க!” வள்ளிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்த தைரியத்தையெல்லாம் எப்படியோ திரட்டிக்கொண்டு, ”என்னங்க, அந்தச் சிங்கார வேலனேகூட எப்பவும் இரண்டு பெண்சாதியுடன் இருக்கிறாரு. நீங்க என்னடான்னா இப்படி என் நெனப்பே இல்லாம இருக்கீங்களே!” என்றாள்.

பெரியசாமி திடுக்கிட்டான். வள்ளி சொல்வது உண்மைதானே? மனதில் ஒரு குழப்பம்.

அவனைப் புரிந்துகொண்ட வள்ளி ”எனக்கும் வயசு ஏறிக்கொண்டே போவுது. உங்க கையைப் பிடிச்சு மாமாங்கம் ஆச்சுது!” என்றாள்.

”இதோ பாரு, வள்ளி! குன்றக்குடி கோயில் முடிந்து வேலனை அற்புதமாகப் பிரதிஷ்டை செய்த பிறகுதான் எனக்குக் குடும்ப நெனப்பு…”

காய்ச்சி உருக்கிய இரும்பு, வார்த்த பிறகு இறுகுவது போல் பெரியசாமியின் இளகின மனம் மறுபடியும் இறுகுவதை உணர்ந்தாள் வள்ளி.

பெரியசாமி சொன்ன பிரகாரம் குன்றக்குடி வேலனும் கோயில் கொண்டான். பிரதிஷ்டை ஆகி விபூதி அபிஷேகம் ஆயிற்று. அர்ச்சகர் விபூதி அபிஷேகம் செய்து கண்களைக் கையால் துடைத்து விட்டார். கண்களில் கருணை வழிந்தது. திருவாயில் புன்னகை மலர்ந்தது.

பெரியசாமி மெய் மறந்தான். அவன் செதுக்கிய சிலை தெய்வ சாந்நித்தியம் பெற்றுத் திகழ்ந்தது.

கிணற்றில் விழுந்து மூழ்கின சாமானைத் தேடி எடுத்து வருபவன் தண்ணீர் மட்டத்துக்கு வந்ததும் ஒருமுறை தலையைச் சிலுப்பிக் கொள்வதுபோல் அவன் மனம் ஆழ மூழ்கி எழுந்தது. அவன் உடல் சிலிர்த்தது.

”குவா, குவா…”

கருங்கல்லும் இரும்பு உளியும் உராயும் ஒலியைத் தவிர வேறு ஒன்றையும் கேட்டறியாத அவன் செவிகளில் இந்த இனிய குரல் நிறைந்தது. உடம்பு புல்லரித்தது. வானை நோக்கிக் கரம் குவித்தான்.

வழக்கம்போல் சிலையை உருப்படுத்திக் கொண்டிருந்தான். பகல் நேரம். பக்கத்து வீட்டுப் பாட்டி, ”வள்ளிக்கு ஜன்னி கண்டுவிட்டது; வைத்தியரை அழைத்து வா” என்றாள். அவள் குரலில் ஒரே பதற்றம். பெரியசாமி பேந்தப் பேந்த விழித்தான். இவனைச் சொல்லிப் பயனில்லை என்று பாட்டி ஊர்க்காரர்களை ஏவி வைத்தியரை வரவழைத்தாள்.

மாலை மயங்கும் நேரம். கதிரவன் தன் சிவந்த மேனியை மறைக்கக் கடலும் வானமும் தொடுமிடத்தில் குதித்தான்.

பக்கத்து வீட்டுப் பாட்டி பரபரப்புடன் ஓடிவந்து, ”பெரியசாமி! உள்ளே வா, குடி முழுகிப் போச்சு! வள்ளி கல்லைப் புரட்டி விட்டாள்!” என்று கத்தினாள்.

‘‘கல்லைப் புரட்டினாளா? ஒவ்வொரு நாளும் நானல்லவா கல்லைப் புரட்டிப் போடுகிறேன்? உளியால் அடித்து உருவத்தைப் பொறிக்க, மாற்றி மாற்றிப் புரட்டுகிறேனே!’’ சிந்தனையுடன் பெரியசாமி உள்ளே நுழைந்தான்.

வெள்ளி போன்ற வள்ளி உடல்வாடிக் கிடந்தாள். பெரியசாமியின் கண்களால் அவளைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை. கண்களில் நீர் முட்டியது. அருகில் உட்கார்ந்து நெற்றியில் அலையும் அவள் தலை மயிரைக் கோதினான்.

”என்னங்க, குழந்தை நீங்க செய்கிற சிலை மாதிரியே அழகாக இல்லை?” அந்த நிலையிலும் இப்படிக் கேட்கும்போது வள்ளிக்கு வெட்கம்!

பெரியசாமி துக்கம் தொண்டையை அடைக்க, ”வள்ளி!” என்றான்.

”நான் வந்த வேலை முடிஞ்சு போச்சு, குழந்தையையாவது நல்லா கவனிச்சுக்குங்க” என்றாள் வள்ளி.

வந்த வேலை முடிஞ்சு போச்சா? இது என்ன தத்துவம்? பெரியசாமி ஒரு பக்கம் தூங்கும் குழந்தையை உற்றுப் பார்த்தான்.

கூடியிருந்தவர்கள் பெரிதாகக் கத்திய போதுதான் வள்ளி பறந்து விட்டாள் என்பதை அறிந்ததான். அன்று காலையில்தான் ஒரு பூ மலர்ந்தது. மாலையில் மற்றொன்று வாடிவிட்டது. ஒன்றைக் கொண்டுவர இன்னொன்று உயிரை இப்படித் தியாகம் செய்ய வேணுமா? இரண்டையும் சேர்த்து நினைக்கும்போது நினைவிழந்து விட்டான் பெரியசாமி.

இந்த நினைவிலிருந்து மனம் தாவியது. பிறகு எத்தனை எத்தனை கோயில்கள் நிர்மாணம் செய்தான்? ஆனால், ஒவ்வொரு தடவையும் வேலன் சிலை செய்யும்பொழுது மட்டும் வள்ளியின் உளியை விட்டெறிந்து விட்டு வெகுநேரம் வரையில் ஒன்றும் தோன்றாமல் உட்கார்ந்து விடுவான்.

குழந்தை வேலம்மாள் நடக்கும் பொற்சிலையாக இருந்தாள். நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பிறந்தவள், தாயில்லாக குழந்தை என்பதால் மட்டும் பெரியசாமி அவளைச் செல்லமாக வளர்க்கவில்லை. அவளது துறுதுறுத்த முகமும், மாணிக்கப் பரல்கள் உதிர்வது போன்ற மழலைப் பேச்சும், சிலை போன்ற அழுகும் பார்ப்பவர் மனத்தைப் பறிப்பவை. பெரியசாமி சிலையைச் செதுக்கும்போது, முழங்காலில் கையை ஊன்றிக் கொண்டு ஆர்வத்துடன் பார்ப்பாள்.

”தள்ளிப் போம்மா. கல்தூள் கண்ணி தெறித்துவிடும்.”

”உனக்கு மட்டும் தெறிக்காதாப்பா?” பெரியசாமி பதில் சொல்லமாட்டான். குழந்தையை வாரி அணைத்துக் கொள்வான். ஒவ்வொரு சிலையும் பூர்த்தியானதும் வேளை பார்த்து, நாழி பார்த்துப் பூஜை செய்து கண் திறப்பான்.

பெரியசாமியின் மனம் இன்னும் பின்னோக்கிச் சென்றது நினைத்ததையே நினைப்பது மனதுக்குப் பிடிக்காததுதானே? நாற்பது ஆண்டுகளுக்கு முன் அங்கயற்கண்ணி ஆலயத்தின் புனருத்தாரணப் பணி நடந்தது. அப்பொழுது கோபுரத்து பொம்மைகளையெல்லாம் புதுப்பித்தான். இலக்கியங்களையெல்லாம் நிறை போட்ட பொற்றாமரைப் படிகளைச் சீர்திருத்தினான். ஏன், மீனாட்சி – சொக்கநாதர் கோயில் நிர்மாணத்தையே தான் செய்யக் கொடுத்து வைத்தது போன்ற பெருமையில் மூழ்கினான். அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நிறைவேறியது. கோயில் நிர்வாகிகள் அவனுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமைப்படுத்தினார்கள். ‘மயன் போல் செய்திருக்கிறாய்’ எனப் பாராட்டினார்கள். இன்று கூட அந்தப் பொன்னாடை பெட்டியில்தான் இருக்கிறது. மக்கி விடவில்லை. ஏன், அந்த எண்ணமும் பசுமையாகத்தான் இருக்கிறது!

சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் அங்கயற்கண்ணி ஆலயத் திருப்பணியில் பெரியசாமியின் பாட்டனார்தான் சிற்ப வேலைகளெல்லாம் செய்தார். எந்தக் காலத்திலோ, எப்பவோ முக்குறுணிப் பிள்ளையாரைக் கூடப் பெரியசாமியின் முன்னோர்களேதான் செய்தனர் என்று அவன் பெருமிதம் அடைந்திருக்கிறான்.

ஆனால், இன்று கலாகாமேசுவரி ஆலயம் செப்பனிடப்பட்டுச் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கின்றது. அறுபத்துநான்கு கலைகளும் களியாடும் கலாகாமேசுவரி ஆலயத்தில் தன் கையால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே! முடியவில்லையே? இரண்டு கைகளையும் ஆத்திரத்துடன் உதறிக் கொண்டான்.

”பெரியசாமி! உனக்கு வயதாகிவிட்டது. உன் கையினால் வழக்கம்போல் ஆரம்பம் செய்து விடு. சிற்பக் கலையை முறைப்படி கற்றுத் தேறின ஓர் இளைஞன் வந்திருக்கிறான். அவன் நம் கோயில் மூர்த்திகளை அழகாகச் செய்து விடுவான்” என்றார் கோயில் நிர்வாகி.

”சாமி! என் உடலில் வலு இருக்கிறது. இந்தத் தடவை என் கையாலேயே செய்துவிடுகிறேன்.”

”வேண்டாம்பா. உனக்கு எல்லாம் பூர்த்தியான பிறகு சன்மானம் கொடுத்து விடுகிறோம். நீ இனிமேல் இந்த வேலை செய்ய வேண்டாம். வயதாகிக் கை நடுக்கம் கண்ட பிறகு உளியைப் பிடித்து, வேலை செய்தால் உருவத்தில் குறை ஏற்பட்டு விடும். அது ஊருக்குக் கெடுதல். நீ இதுவரையில் செய்ததே போதும்” என்றார் கோயில் நிர்வாகி.

பெரியசாமியின் மார்பில் சுரீர் என்ற வலி. கண்களிலிருந்து பொங்கிய கண்ணீர் சுடுநீர்ச் சொட்டுகளாகக் கைகளில் உதிர்ந்தன.

வேண்டாம் என்று சொன்னதுகூட அவன் மனதில் உறுத்தவில்லை. ‘உனக்குச் சன்மானத்தைக் கொடுத்து விடுகிறோம்’, அதைவிட ‘நீ செய்தால் ஊருக்குக் கெடுதல்’ இவை என்ன வெறும் சொற்களா? பொங்கிப் பொங்கி அழுதான். ”ஐயனே! எத்தனை கோயில்களில் நீ குடிகொண்டிருக்கிறாய்? இந்தக் கையால் எவ்வளவு உருவங்களைச் செதுக்கி இருக்கிறேன்? ஊரை வாழ வைக்கும் தெய்வமாக இருக்கிறாயே, அம்பிகே!” என்றெல்லாம் பொருமினான்.

உச்சி காலம். கோயில் மணி ஒலித்தது. இவ்வளவு காலமாக ‘ஓம்’ ‘ஓம்’ என்று ஒலித்த ஒலி இன்று அவனுக்காக அழுதது.

”அப்பா! இந்நேரமும் உச்சி வெயில்லே உட்கார்ந்திருக்கிறியே சாப்பிட வாப்பா” வேலம்மாளின் குரல் கேட்டு உணர்வு பெற்றான் பெரியசாமி.

‘கல் கல்’ என் கல் உளிச் சத்தம் காதுகளில் ரம்மியமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. வண்டி வண்டியாகப் பெரும் பாறைக் கற்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. எங்கே! பெரியசாமியின் வீட்டு வாசலிலா? இல்லை, புதிய சிற்பி பாலசுந்தரத்தின் வீட்டு வாசலில்! கலாகாமேசுவரியின் ஆலயத் திருப்பணி மும்முரமாகத் தொடங்கிவிட்டது. பெரியசாமி புறக்கணிக்கப்பட்டு விட்டான்.

அந்த ஏக்கமே அவன் கை கால்களைச் சோர வைத்துவிட்டது, மனத்தைக் கலங்க அடித்து விட்டது.

இரவு பத்து மணியிருக்கும். பால் பொழிவது போன்ற முன்னிலவு. அந்த நேரம் கற்பாறையின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். ஆறுமுகம் சிலை முடிந்து விட்டது. கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.

‘‘ஐயா..!’’ பாலசுந்தரம் திரும்பினான். வேலம்மா இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மிடுக்காக நின்றாள்.

பாலசுந்தரம் வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்தான். அந்தப் பால் நிலவில் அவள் மோகினி போல் தோன்றினாள். கொஞ்ச தூரத்தில் போடப்பட்டிருந்த கல்லின் மேல் இரண்டு பேர் படுத்துக் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

வேலம்மா இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக்கொண்டு ”ஏன் அப்படிப் பார்க்கிறே? தலைமுறை, தலைமுறையாய்ச் சிலை செய்த எங்க குடும்பம் இருக்கும்போது இங்கே ஏன்யா வந்தே? பெரியவர் மனசு நோக அடிச்ச பாவம் உன்னை விடுமா?” என்று கேட்டாள்.

”இதோ பாரு நான் இந்தத் தொழிலைக் கற்றுக்கிட்டேன். செய்யறேன். உங்கப்பாவின் மனதை நோகச் செய்யணும்கிற நோக்கம் எனக்கு இல்லை. அவர் ஓய்ந்த மனிதர். ஐம்பது வருஷமா தொழிலை நடத்திட்டாரு. இனிமேல் சின்னவங்க பிழைக்கணும்னு விட்டுக் கொடுக்கலாம் அல்லவா?” – பாலசுந்தரம் அமைதியாகக் கேட்டான்.

வேலம்மா சீறினாள்: ”என்ன எங்கப்பா தொழிலா நடத்தினாரு? கல்லையெல்லாம் கடவுளா ஆக்கினாரு. அவரா ஓய்ந்த மனிதர்? நீயும் சாமி செய்யறியே? எங்கப்பா செய்யறதுக்குக் காலிலே கட்டி அடிக்கணும்!” ஆத்திரத்தில் வேலம்மா சொற்களைக் கொட்டிவிட்டாளே தவிர, பாலசுந்தரம் செய்த சிலைக்குத்தான் என்ன குறைச்சல்? அழகு சொட்டுகிறது! அவள் மனத்தில் இப்படி ஓர் எண்ணமும் தலை தூக்கியது.

மறுநாள் முன்னிரவு. காற்று வீசியது. உயர்ந்த தென்னை மரங்கள் ஆட்டமாய் ஆடின. பாலசுந்தரத்தின் மனம் அலை பாய்ந்தது. அன்று ஷண்முகநாதன் கண்கள் திறக்கப்பட்டன. ஆனால், முகம் பயங்கரமாகிவிட்டது. ஏற்றத் தாழ்வான விழிகள்! கருணை பொங்க வேண்டிய கண்களில் கனல் வீசியது. சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணைப் போல் இருந்தது.

பாலசுந்தரத்தின் மனதில் இனம் தெரியாத சங்கடம். கோயில்காரர்கள் வந்து பார்த்தால் இந்தச் சிலையை ஒத்துக்கொள்ள மாட்டார்களே! நேற்று வரையில் எழில் பொங்கி வழிந்த சிலையில், இன்று இப்படிப்பட்ட அவலட்சணமா? உளியை வீசி எறிந்தான். கையைத் தேய்த்துக் கொண்டான். தன்னை மறந்து தனக்குத் தானே பேசினான்.

”முருகன் சிலையா, பத்ரகாளி உருவமா?” என்ற குரலைக் கேட்டதும் திடுக்கிட்டான். வேலம்மாள் ஏளனச் சிரிப்புடன் அலட்சியமாக நின்றாள். பாலசுந்தரத்தின் உடல் அவமானத்தினால் குன்றியது.

”நேற்று வரையில் அழகாய்த்தான் இருந்தது. நீ கொடுத்த சாபந்தான் இப்படி ஆகிவிட்டது.”

அவன் பேச்சில் இருந்த வேதனையும் குறையும்… வேலம்மாளின் மனமே கரைந்தது. பாலசுந்தரத்தின் கவலையில் தனக்குப் பங்கு உண்டு என்ற உணர்வு முதன் முதலாக ஏற்பட்டது. ஒருவர் கஷ்டப்படும்போது குத்திக் காட்டலாகாது என்று நொண்டிச் சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் தன் மனம் மாறுகிறது என்பதை அவளால் ஏற்க முடியவில்லை. ”கோயிலில் சிலையைக் கொண்டு வைக்க இன்னும் எவ்வளவு நாள் இருக்கு?”

”இன்னும் ஒரு பொறையில் வைக்கணும். ஏன், நீ செய்து கொடுத்து விடுவியோ?” என்று சற்று ஏளனமாகவே கேட்டான் பாலசுந்தரம்.

”ஆமாம். நீங்க நல்லா செய்வதற்கு உதவியாக இருப்பேன்.”

”சாபம் கொடுக்கமாட்டேல்ல? அதுவே போதும்.”

”நடக்கிற வேலையைப் பாருங்க. அதோ ஒரு கல்லு தெரியுதே, அதை இப்பவே இந்த நிலவிலேயே செதுக்க ஆரம்பியுங்க.”

பாலசுந்தரம் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது போல் உளியை எடுத்துக்கொண்டு போய்க் கல்லின் மேல் உட்கார்ந்தான்.

பன்னிரண்டு நாட்கள் ஓடின. பாலசுந்தரம் இரவு தூக்கத்தைத் துறந்தான். சாப்பாட்டை மறந்தான். கல் செதுக்கும் சத்தம்தான்.

வேலம்மா இரண்டு வேளையும் வந்து பாலசுந்தரம் வேலை செய்வதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். பாலசுந்தரத்துக்கு வேலம்மா நின்று பார்ப்பதே யானை பலமாக இருக்கும்.

பதினான்காம் நாள் இரவு. சிலை முடிந்து விட்டது. இரவு இருள் கவிந்து கொண்டிருந்தது. அதனிடையே கருங்கல்லை வெண்கல்லாக ஆக்கி, அதிலே முருகனின் திரு உருவம் அழகெல்லாம் உருவெடுத்து வந்ததுபோல் இருந்தது. ”வேலம்மா! நாளைக் காலையிலே கண் திறக்கப் போகிறேன். நீ வந்து பாரு.”

”ஆமா, நாளைக்கு நிறைஞ்ச நாளு அமாவாசை. தேங்காய் உடைச்சு, கற்பூரம் ஏற்றிப் பூசை செய்து சாமியின் கண்களைத் திறங்க! ‘உங்க அந்தக் கருணைக் கண்கள் உலகத்தையெல்லாம் காப்பாத்தணும்’னு வேண்டிக்குங்க.”

”வேலம்மா! அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கல் கொத்தர்கள் முன் காலத்தில் கண் திறக்கணும்னு ரூபாயை வாங்கிச் சாப்பிடுவார்கள்! இந்த மூடப் பழக்கமெல்லாம் எனக்குப் பிடிக்காது.”

”என்ன சொன்னீங்க அன்று பூசை செய்யாமல் கண் திறந்ததால்தான் சிலையே பாழாய்ப் போயிடுச்சு.”

பாலசுந்தரத்துக்கு ஒரு நிமிஷம் அது உண்மையாகத் தோன்றியது. ஆனால், அதை மீறி ஆணவம் தலை எடுத்து மறுத்தது. ‘‘நான் அவசரப்பட்டுச் செய்துட்டேன். சின்ன உளி வைத்து இலேசாகத் தட்டியிருக்கணும். இந்தத் தடவை பாரு, பூசையும் வேண்டாம். இப்ப அது கல்தானே? கோயில்லே வைத்தால்தானே தெய்வம்?” என்றான்.

வேலம்மாளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பெரியசாமி சிலையைச் செதுக்கும்போதே எவ்வளவு பக்தியாகச் செய்வான்? அந்த சூழ்நிலையில் ஊறின அவளுக்குப் பாலசுந்தரத்தின் பேச்சு வேம்பாக இருந்தது. வேலம்மாவுக்கு இரவு முழுவதும் தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்தாள்.

மறுநாள் பகல் வேலம்மா ஆவலுடன் முருகன் சிலையைப் பார்க்கப் பாலசுந்தரத்தின் வீட்டுக்கு ஓடினாள்.

”வேலம்மா! எவ்வளவு அழகா இந்தச் சிலை அமைந்துவிட்டது?” என்று பெருமிதத்தோடு சொன்னான் பாலசுந்தரம்.

”ஆமாங்க, எல்லையற்ற அழகுதான். வேல் முருகன் வீரனல்லவா? கம்பீரமாக இருக்கிறான்.”

”வேலம்மா, எனக்கு ஓர் ஆசை. உங்கப்பாவை இன்று பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும். எவ்வளவு பெரியவங்க!”

”இத்தனை நாட்களும் இல்லாத திருநாளாக இன்றைக்கு அவர் உங்களுக்குப் பெரியவங்களாகத் தோன்றக் காரணம் என்ன?”

”அது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.”

ஆணவம் ஒலிக்கப் பேசியவனுக்கு ஆண்டவன் நினைப்பா? வியந்தாள் வேலம்மா.

”வீட்டுக்கு வாங்க. அவரைப் பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

”அப்பா, அவங்க வந்திருக்காங்க.”

”யாரம்மா?”

”அவங்கதான்.” – சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்தாள் வேலம்மா.

”வா, அப்பா! நீதான் பாலசுந்தரமா? முருகன் சிலை முடிந்து விட்டதா?

பெரியவர் குரலில் இருந்த கனிவு அவன் மனதை உருக்கியது.

‘‘ஆமாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான். உங்க வீட்டிலே இருக்கிற உயிர்ச்சிலைதான் அந்தச் சிலையை வடிக்க உதவி செய்தது. சிலையின் கண் திறந்த நேரத்திலே என் கண்களும் திறந்து கொண்டன.’’

பெரியவர் சிரித்தார். வேலம்மா விழித்தாள்.

”கஷ்டப்பட்டுச் செய்த சிலை பாழாகிவிடப் போகிறதே என்று உங்கள் மகள் செய்த பூஜைதான்…”

”முருகன் கண்ணைத் திறந்ததாக்கும்!”

”ஆமாங்க, அவள் தவறாமல் என் வீட்டுக்கு வருவதைப் பின்னாலே தொடர்ந்து தொடர்ந்து வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்த நீங்க எல்லாவற்றையும் புரிஞ்சுக்கிட்டீங்க.”

”அதனாலே என் கண் திறந்து கொண்டது! இதைத்தானே சொல்லப் போறே?”

”நீங்க எங்க இரண்டு பேருக்குமே தெரியாம உங்க ராசிக் கையால் உங்க ராசிக் கையாலே..” என்று சொன்னதையே சொல்லி வாக்கியத்தை முடிக்க முடியாமல் திண்டாடினான் பாலசுந்தரம்.

”போதும், தம்பி போதும்!” பேச்சை மடக்கி நிறுத்திய பெரியசாமியின் குரல் தழுதழுத்தது.

Image

சில நாட்களுக்குப் பிறகு கலா காமேசுவரி ஆலயத் திருப்பணி முடிந்து, மேள, தாளத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை ஒட்டிய அடுத்த நல்ல வேளையிலே வேலம்மா – பாலசுந்தரத்தின் திருமணமும் விமரிசையோடு நடந்தது. அன்று சிற்பிகளுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க வேண்டிய நேரத்திலே மாமனாருக்கும் மருமகனுக்கும் போட்டி. ”கண்ணைத் திறந்தவன் மருமகன். எனவே, அவனுக்குத்தான் பொன்னாடை போர்த்த வேண்டும்” என்றார் மாமனார். மருமகனோ, ”கண்ணைத் திறந்தவர் மாமனார்தான். அவருக்குத்தான் பொன்னாடை போர்த்த வேண்டும்!” என்றான்.

இருவர் கண்களையும் திறந்த கடவுள் கனிவு மலர்ந்த கண்களுடன், ”கலை முதுமை தட்டுவதில்லை, கலைச் சிற்பங்களைச் சமைப்பவனும் முதியவனாக முடியாது’ என்பது போல் முறுவலித்துக் கொண்டிருந்தார்.

***

Image Courtesy:

http://amudhasurabi-ithazh.blogspot.in

http://www.lotussculpture.com

http://southindianhandicrafts.co.in

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

கமலா விருத்தாச்சலம்

சரோஜா ராமமூர்த்தி

கு.ப.சேது அம்மாள்

குகப்ரியை

எம்.எஸ்.கமலா

கௌரி அம்மாள்

குமுதினி

கமலா பத்மநாபன்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

வை.மு.கோதைநாயகி அம்மாள்-3

வை.மு.கோதைநாயகி அம்மாள்-2

வை.மு.கோதைநாயகி அம்மாள்

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஜோதிர்லதா கிரிஜா

சிவசங்கரி

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி