டெல்லி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிற்து டெல்லி நீதிமன்றம். அதே சமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் பட்டியலை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆதாரபூர்வமாக, அழுத்தம் திருத்தமாக அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘மாநில குற்றப் பதிவு செயலகம்’ (State Crime Records Bureau – SCRB) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.
கடந்த 2012ம் வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை மாதம் வரை பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளைவிட, 50% அதிகமாக 2013ல் பதிவாகியிருக்கின்றன. அதாவது, அதே ஜனவரி – ஜூலைக்கு இடைப்பட்ட காலத்தில். 2013ல், ஏழு மாத காலத்தில், காவல்துறையில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 436. 2012ல் பதிவானவை 291. அதிலும் சென்னையில்தான் அதிகம். 42 வழக்குகள். கணவர் மற்றும் உறவினர்களால் குரூரமாகத் தாக்கப்பட்ட வழக்குகளிலும் சென்னைக்கே முதலிடம். மொத்தம் 1,130 வழக்குகள். அவற்றில் 118 வழக்குகள் சென்னையில்.
மாநில குற்றப் பதிவு செயலகத்தின் அறிக்கைப்படி…
ஜனவரி – ஜூலை காலத்தில் பதிவானவை
2012 2013
பாலியல் பலாத்காரம் 291 436
பாலியல் தொந்தரவு 708 585
கடத்தல் 756 698
கணவரால் தாக்குதல் 860 1,130
அதிக அபாயமுள்ள பகுதிகள்…
பலாத்காரம் சீண்டல் கடத்தல் கணவரால் தாக்கப்படுதல்
சென்னை 42 33 24 118
விழுப்புரம் 32 47 73 33
கோவை 11 5 2 22
மதுரை 9 13 18 51
திருச்சி 7 13 6 18
தமிழகத்தில் பாலியல் சீண்டல், கடத்தல் ஆகியவை எண்ணிக்கையில் சற்றுக் குறைந்திருந்தாலும் பெண்களின் மேல் கணவர் மற்றும் உறவினர்களின் தாக்குதல் அதிகமாகியிருக்கிறது. இது கிட்டத்தட்ட 32 சதவிகிதம் அதிகம். வழக்குப் பதியாமல், சம்பவம் நடந்ததையே மறைத்துவிடாமல் காவல்துறையும் நம்பகத்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதே நேரம், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் காவல்துறைக்கு இருக்கிறது.
பரவலாகிவரும் குடிப்பழக்கமும் போதைப் பொருள் பழக்கமும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘இப்போதெல்லாம் பெண்களுக்கும் தங்களுக்கு பாலியல் தொந்தரவோ, வன்முறையோ நிகழ்ந்தால் அதை காவல்துறை வசம் புகாராகத் தெரிவிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட ஒரு காரணம்’ என்று குறிப்பிடுகிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பதும் கணிசமாக இதே காலத்தில் உயர்ந்திருக்கிறது. ஜனவரி-ஜூலை 2013 காலக்கட்டத்தில் சென்னையில் 23 வழக்குகளில் 12 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
கிராமப்புறங்களில் இன்னமும் கூட பல பாலியல் பலாத்கார சம்பவங்களும், சீண்டல் சம்பவங்களும் பதியப்படாமல் வருவது குறிப்பிடத்தக்கது. பஞ்சாயத்து மூலமாகவோ, உறவினர்களைக் கொண்டோ, பயமுறுத்தியோ பல சம்பவங்கள் தீர்த்து வைக்கப்படுகின்றன. சில இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருமணம் செய்து, சமாதானப்படுத்துவதும் நடக்கிறது.
எந்தக் காரணம் சொல்லப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவது கலக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
– மேகலா பாலசுப்ரமணியன்