தரையில் விளையாடிய காலம் மறந்து
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் …
கூட்டாளிய சேத்துகிட்டு
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய்
சடுகுடுவாடி
மன சைக்கிள் ஏறி
போகததேசம் போய் வந்து
சலிக்காமல் சோர்வாகி
வீடு சேர்ந்து
கோலி குண்டும் கில்லி
தட்டியும் ஆயுதமாய்
கபடி கபடி என பாட்டு
பாடி
சரடிழுத்து பம்பரம் சுத்தும்
கைகள் அதை கண்டு
உற்சாகமும் பம்பரமாய்
சுத்தும் !
பெண் குழந்தைகள் எல்லாம்
பாண்டி ஆடும் ! இல்லை
கால்கள் பாடியே ஆடும் !
பல்லாங்குழியில் முத்திட்டு
தொட்டாங்கல்லில்
கைகள் தாளமிடும் !
எழூரு எழுகடல் தாண்டி
ஒழிஞ்சிருக்கும்
முட்டையெடுக்க
கண்ணா மூச்சியாடும்
அதற்கு கண்ணனையே
துணையாக தேடும்
என அத்தனையும் இரையானது
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு…
கையளவு திரையில் காரே ஓட்டலாம்
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே
தொலைத்தவைகளை தேடி
மீண்டுமொரு பால்யம் வேண்டி …
வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றாற் போன்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம் இயந்திரம் போல…
இளைப்பாற சற்று அமரலாம் என்று நினைக்கும் போது துரத்தி வரும் வாழ்க்கையை வெல்ல மீண்டும் ஓட்டம் என வட்டமாகி போன பின்னர் மறந்து போன பால்ய விளையாட்டுகள் எல்லாமே கானல் நீர் ஆகி விட்டது…
பெண்ணுரிமை போற்றிய மகாகவி பாரதியை ரசிக்கும் நாமே
ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரியை மறந்து போனோமா அல்லது கடந்து போனோமோ என்று தெரியவில்லை…
இப்போ இதை படிக்கிற எத்தனை பேர் நம்ம குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாட அனுப்புறோம் ??
இல்லை பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி சொல்லி குடுத்து இருக்கோம் ??
நம்ம குழந்தைகளுக்கு நாகரிக உலகில் விளையாட கூட நேரமில்லீங்க… புழுதித் தெருக்களில், புரண்ட நாம்தான் இன்னைக்கு குழந்தைகளை கான்கிரீட் ரோடுகளில் பாதம் பதியாமல் செருப்போடும், வாகனத்துடன் தான் நடத்துகிறோம்..
விலைமதிப்பிட முடியாத பண்பாட்டுப் பொக்கிசங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் கிராமத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடிய விளையாட்டுக்கள் கூட சமூக அக்கறை சார்ந்ததாக இருந்தது. உழைப்பவர்களின் செல்வத்தை ஏகாதிபத்தியத்தின் வலிய கரங்கள் கவர்ந்து கொள்ளும் காரியம் காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கேரளாவில் நான் பாட்டி வீட்டில் இருந்த போது பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை ஒரு மூலையில் போட்டுவிட்டு தோட்டத்திற்கு விளையாட சென்று விடுவேன் !
நிறைய விளையாட்டுக்கள் விளையாடுவோம்
ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது , கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி , சிறிய சாமான்களை வைத்து சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம்.
இதில் ஒவ்வொரு விளையாட்டும் நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் ..
ஓடிபிடிப்பது – ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை – வலிமை சேர்க்கும் , மணல் வீடு – சோறு பொங்குதல் போன்றவை சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை உணர்த்தும், பல்லாங்குழி – சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும் இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம் அதன் பெயர் கூட்டாஞ்சோறு அதாவது ஒவ்வொருவரும் அவரது வீட்டில் செய்த உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய வீட்டிலாவது வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் ! தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில் விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை வளர்க்கும்.
நொண்டி,பச்சை குதிரை, மேடு பள்ளம், கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் என நாம் மறந்து போன, மறைந்து போன குழந்தைப் பருவ விளையாட்டுகள் ஏராளம்.
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது. கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம் தன்னந்தனியாக. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு என சீர்படுத்தி, அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று வகைப்படுத்தி நம்மவர்கள் இதிலும் புத்திசாலித்தனத்தை ஆழமாக பதித்தவர்கள்.
கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி மகிழ்ந்தவர்கள் 1990 முன்னர் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டு நாளுக்கு நாள் மாற்றத்தை பரிசளித்து, நமது நினைவுகளை பேரழிவுக்குள்ளாக்குகிறது. மாற்றம் மட்டுமே மாறாதது என்ற போதிலும். இந்த அதிவேக மாற்றங்கள் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கின்றன…
வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம்..
இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?
இப்படி எல்லாத்தையும் தொலைசிட்டு நம்ம பிள்ளைங்களுக்கு வேற எதை சேர்த்து வைக்க போறோம் ?
முதலில் பிள்ளைங்க மனநிலையை நாம்தான் மாற்றனும்.
விளையாட்டில் வியர்வை வெளியேறினால் உடம்புக்கு என்னன்னா நன்மைகள் என்று நாம்தான் சொல்லி குடுக்கணும்..
அவங்களை விளையாட அனுமதிக்கணும்.
இவ்வாறான விளையாட்டுக்கள் இப்போது அழிய காரணம் புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், என ஒரு புறம் இருந்தாலும் சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய வந்தபின் தான் குழந்தைகள் பள்ளி விட்டவுடன் குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம் என அவங்க வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது.
இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டை ஆரம்பிப்போம்!
தரையில் விளையாடிய காலம் மறந்து
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்..
கூட்டாளிய சேத்துகிட்டு
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய்
சடுகுடுவாடி
மன சைக்கிள் ஏறி
போகததேசம் போய் வந்து
சலிக்காமல் சோர்வாகி
வீடு சேர்ந்து
கோலி குண்டும் கில்லி
தட்டியும் ஆயுதமாய்
கபடி கபடி என பாட்டு
பாடி
சரடிழுத்து பம்பரம் சுத்தும்
கைகள் அதை கண்டு
உற்சாகமும் பம்பரமாய்
சுத்தும் !
பெண் குழந்தைகள் எல்லாம்
பாண்டி ஆடும் ! இல்லை
கால்கள் பாடியே ஆடும் !
பல்லாங்குழியில் முத்திட்டு
தொட்டாங்கல்லில்
கைகள் தாளமிடும் !
எழூரு எழுகடல் தாண்டி
ஒழிஞ்சிருக்கும்
முட்டையெடுக்க
கண்ணா மூச்சியாடும்
அதற்கு கண்ணனையே
துணையாக தேடும்…
என அத்தனையும் இரையானது
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு
கையளவு திரையில் காரே ஓட்டலாம்
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே
தொலைத்தவைகளை தேடி
மீண்டுமொரு பால்யம் வேண்டி …
- ப்ரியா கங்காதரன்