ப்ரியங்களுடன் ப்ரியா – 9

முதுகு வலி… ஏன்? எப்படி? தீர்வுகள்..! 

back pain 2

பறவைகள் எல்லாம்  பறந்து போக 

பாட்டி வைத்த மரத்தில் முதுகு சாய்த்து 

ஓய்வாக மிதக்கும் ஒற்றை மேகத்தை வெறிக்க 

இன்னும் வலிக்குதாம்மா என்ற 

அன்னையின் குரலில் 

வலுக்கட்டாயமாய் என் சிறகுகளைப் 

பிடுங்கி ஆரவாரம் செய்த முதுகுவலி 

புறமுதுகிட்டுச் சிதறுகிறது 

மெல்ல மெல்ல… 

லாரம் வைத்து  பரபர சமையல், ஸ்கூல், ஆபீஸ் வழியனுப்பல்கள் முடிந்து வாகனப் பயணம். அலுவலகத்தில் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்ததில் இருந்து ஷட்-டவுன் பண்ணும் வரை  சேரில் சுழன்றபடி வேலை. ‘சும்மா இருக்கேன்’ என்ற வார்த்தையை இப்போது மைக்ரோ ஒலி வாங்கி வைத்துக் கேட்டாலும் கிடைக்காது. எல்லோரும் எப்பொழுதும் பிஸி. உடல் என்ற மெஷினில் எங்காவது வலிக்கும் வரை அப்படி ஒரு மெஷினைப் பயன்படுத்துகிறோம் என்ற உணர்வுகூட மிஸ்ஸிங். வீட்டுப் பொறுப்புகள் முடித்து அக்கடா என்று ரிமோட்டைத் தட்டி வீட்டு சோபாவில் அமரும் இரவு 11 மணிக்கு முதுகு வலி பின்னியெடுக்க, சரியாக தூக்கம் பிடிக்காமல் விடிகிறது அடுத்த காலை. நம்மைப் போன்ற பெண்களுக்கும்  முதுகு வலிக்கும் அவ்வளவு நெருக்கம்!

ஏன் வருகிறது முதுகு வலி ?

நம் உடல் இயக்கத்தில் எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இந்த சிஸ்டத்தில் பிரச்னை வருவதுதான் உடல் நோயாகிறது. ஜவ்வு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் பேக் பெயினை உருவாக்கும். அளவுக்கு அதிகமான எடையைக் குனிந்து தம் கட்டித் தூக்குவதால் வரலாம். தொப்பை பெரிதாகிக் கொண்டே போகும் போது அதை தாங்கிக் கொண்டிருக்கும் முதுகு எலும்பு வளைகிறது. இதனாலும் பேக் பெயின் வரும். 30 வயதைத் தாண்டிய பலரும் பேக் பெயின் பேஷன்ட்தான். கூன் போட்டு உட்கார்ந்தபடி பலமணி நேரம் இருப்பதும் இப்பிரச்னையை உருவாக்கும். பின்புறம் குறைந்த அளவு சாய்வு மற்றும் சாய்வே இல்லாத சேர்களை பயன்படுத்துவதும் பேக் பெயினை உருவாக்கும்.

முதுகு வலியின் முதல் அறிகுறிக்கு அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, செயலற்றுப் போகும் போதோ, சிறுநீர், மலம் வெளியேறுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தியும், வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்க நிலையில் எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்னை உள்ளதென்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும். பெரும்பாலான முதுகுவலிகள், சில நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல்வதை விட, சில நாட்கள் பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம்.

back pain 3

முதுகு வலிக்கும் நமக்கும்  அப்படி என்ன நெருங்கிய உறவு?

பொதுவாக முதுகு வலி  பெண்களுக்குத்தான்  அதிகம் வருகிறது. பூப்பு எய்திய பின்னர் பீரியட்ஸ் டைமில் எலும்புகளில் வலி பின்னியெடுக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் உளுந்துக் கஞ்சி, உளுந்தங்களி உணவில் சேர்க்கப்பட்டது. ஆனால், இப்போது இருக்கிற டீன்ஏஜ்கள் உளுந்துக் கஞ்சி என்றால் ‘உவ்வே’ சொல்கிறார்கள்.  இதையெல்லாம் சேர்க்காவிட்டால் இளம் வயதிலேயே பேக் பெயின் இலவசமாகக் கிடைக்கும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. குழந்தைப் பேற்றின் போது இடுப்பு எலும்புகள் விலகிக் கொடுத்து,  பின்னர் பழைய நிலைமைக்குத் திரும்பும். அந்த சமயத்திலும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்க உளுந்து சார்ந்த உணவுகள் அவசியம். 35 வயதுக்கு மேல் எலும்பு தேய்மானம் ஆரம்பமாகும். அப்போது கால்சியம் மற்றும் புரதச்சத்துள்ள உணவுகள் மூலமாக எலும்புக்கு வலு சேர்க்கலாம். நாற்பது வயதுக்கு மேல் உணவில் கேழ்வரகு, பாசிப் பருப்பு, வெந்தயக்கீரை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை கட்டாயம் சேர்க்க வேண்டும்.

காரணங்கள் 

முதுகெலும்புக் கோளாறுகள் இடுப்புப் பிடிப்பைத் தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும். இதனால் ஸியாடிகா (Sciatica) ஏற்படும். இதர முதுகெலும்புக் கோளாறுகளும் இதற்கு முக்கியக் காரணங்கள். அதிக எடை தூக்கி நடப்பது, ஓடுவது, மாடிப் படிகள் ஏறுவது ஆகியவை வலியை அதிகமாக்கும்.

ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்புப் பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம். சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும். ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவற்றையும் காரணங்களாகச் சொல்லலாம்.

எலும்புக்கு பிடித்த டயட்

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். சில குழந்தைகள் பால் குடிப்பதைத் தவிர்க்கும். பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மற்றும் ஐஸ்க்ரீமாக கொடுக்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும்… நாமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் எலும்பு உறுதிக்கும் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்துடன் வைட்டமின் டி சேர்க்கவும். உணவில் கிடைக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கிடைக்கிறது. குட்டிக் குட்டி மீன் முட்களில் கால்சியம் இருக்கிறது. அதை அப்படியே மென்று சாப்பிடும் போது உடலுக்கு கால்சியம் கிடைக்கும். வெஜிடபிள் ஆயிலில் வைட்டமின் டி உள்ளது. சோயா பீன்ஸ் ஆயிலையும் பயன்படுத்தலாம்.

milkfish

தீர்வு என்ன?

உங்கள் வேலை நேரம், வேலையின் தன்மை ஆகியவற்றைக் கண்காணித்து பேக் பெயின் வருவதற்கான தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும். கொஞ்ச நேரம் நடப்பது, சிறிய ஓய்வு என வழக்கத்தை மாற்றிக் கொள்ளவும். உங்கள் டயட் சார்ட்டை செக் பண்ணவும்.  எலும்புகள் வலுப்படுவதற்கான உணவுகளைச் சேர்க்கவும். வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் உள்ள அத்தனை பொறுப்புகளையும் தங்களது தோள்களில் சுமப்பதற்கு பதிலாக கணவர், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு கிடைப்பதுடன் பேக் பெயின் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். தொப்பை விழாத அளவுக்கு வெயிட்டை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப முக்கியம்.

சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை வீட்டில் செய்யலாம்.

உதாரணம்: நன்றாக நிமிர்ந்து படுக்கவும். படுத்த நிலையில் முட்டியை மடக்காமல் உடலை மேலே தூக்கவும். படுத்த நிலையில் நிலத்தில் இரண்டு கால்களையும் மடக்கி இடுப்பை மட்டும் மேலே தூக்கவும். இதே போல் குப்புறப் படுத்த நிலையில் தலையை மேலே தூக்குவது, இடுப்பையும் வயிற்றையும் மேலே தூக்குவது ஆகிய பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஐந்து முறை செய்வதன் மூலம் பேக் பெயினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

heels

முடிந்த வரை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். பேக் பெயின் உள்ளவர்கள் குப்புறப் படுத்து உறங்குவதைத் தவிர்க்கலாம். மல்லாந்துபடுப்பதை விட ஒருக்களித்துப்படுப்பதே நல்லது. உடல் என்னும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்தால்தான் சந்தோஷச் சிகரங்களில் சறுக்கி விளையாட முடியும். உடலை கவனித்தால் உற்சாகமாக வலம் வரலாம்.

வீட்டு வைத்தியம்

  • விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
  • 5 பூண்டு பற்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணெயில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
  • புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
  • சூடான நல்லெண்ணை + உப்பு சேர்த்து மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாகச் செய்யவும்.
  • விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணை 1 டீஸ்பூன் + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 டீஸ்பூன் – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.
  • ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 டீஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளவும்.

ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தீர்வுகள்…

  • முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்புப் பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
  • இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.
  • முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
  • மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.
  • ஒரு நாள் எண்ணெயை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சைதான் கடிவஸ்தி.
  • உணவு கட்டுப்பாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த-வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள் 

  • முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.
  • குப்புற படுக்கக் கூடாது.
  • நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்துக்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
  • நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இருக்காமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள். உங்கள் பணியின் காரணமாக நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுகளையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.
  • இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
  • ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.
  • ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயற்சி செய்யுங்கள்.
  • படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஓரத்துக்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
  • நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

walking

  • பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.
  • தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.
  • தரையிலுள்ள பொருட்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பிறகு தூக்குங்கள்.
  • கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். தவறினால் அது முதுகு வலியில் போய் முடியலாம்.
  • உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.
  • பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • முதுகு வலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வரக் காரணம் மலச்சிக்கல். இதைத் தவிர்க்கவும்.

உணவு முறை

குளிர் உணவு / பானங்களைத் தவிர்க்கவும். ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை தவிர்க்கவும். பழைய உணவுகளை தவிர்க்கவும். கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் ஆகியவற்றைத் தவிர்க்கவும். எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும். இரண்டு டீஸ்பூன் சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலைப் பருகவும். இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியைக் குறைக்கும். இஞ்சியும் மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்…

உணவு முறைகளிலே முதுகு வலியை நாம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

வைஷு என்னிடம் ‘‘ஏம்மா உன் பாட்டிக்கு 80 வயசு வரை முதுகு வலி இல்லை. என் பாட்டிக்கு 55 வயசு வரை முதுகு வலி இல்லை. உனக்கு இப்போவே வந்திரிச்சு. எனக்கும் சீக்கிரம் வந்துடுமா?’’ என்று கேட்டாள். அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் யோசித்தால் புரியும்… என் பாட்டி, அம்மா காலத்து உணவு முறைகள் இப்போது இருக்கின்றனவா? இல்லை. அதுதான் காரணம். சரியான உணவு முறைகளை நாமும் பின்பற்றி நம் செல்லங்களுக்கும் கற்றுக் கொடுத்து முதுகு வலியைப் புறமுதுகிடச் செய்வோம்!

பறவைகள் எல்லாம்  பறந்து போக 

பாட்டி வைத்த மரத்தில் முதுகு சாய்த்து 

ஓய்வாக மிதக்கும்  ஒற்றை மேகத்தை வெறிக்க 

இன்னும் வலிக்குதாம்மா என்ற 

அன்னையின் குரலில் 

வலுக்கட்டாயமாய் என் சிறகுகளைப் 

பிடுங்கி ஆரவாரம் செய்த முதுகுவலி 

புறமுதுகிட்டு சிதறுகிறது 

மெல்ல மெல்ல…

– ப்ரியா கங்காதரன் 

p2

***

ப்ரியாவின்பிறபதிவுகள்

ப்ரியங்களுடன்ப்ரியா – 1

ப்ரியங்களுடன்ப்ரியா – 2

ப்ரியங்களுடன்ப்ரியா – 3

ப்ரியங்களுடன்ப்ரியா – 4

ப்ரியங்களுடன்ப்ரியா – 5

ப்ரியங்களுடன்ப்ரியா – 6

ப்ரியங்களுடன் ப்ரியா – 7

ப்ரியங்களுடன் ப்ரியா – 8

Image courtesy:

http://medflicks.com

http://cdn.womensunitedonline.com

http://www.mineravita.com

http://www.captureimagery.co.uk

http://grigoletti.blogspot.in/

http://www.barkhamofficefurniture.co.uk

http://www.active.com