நூல் அறிமுகம் – 2

வேண்டுவன நல்கும் விரத பூஜைகள் 

 book490 துன்பம் வரும் போது துவண்டு போகும் மனிதர்கள் சரணாகதி அடையும் இடம் இறைவன் சன்னிதானம். இன்னலில் சிக்கியிருக்கும் தருணங்களில் யார் என்ன சொன்னாலும் அதைச் செய்து பரிகாரம் தேட முயற்சிப்பார்கள். கடற்கரையோரக் கோயில், மலை மேல் அமைந்திருக்கும் முருகன் சன்னதி, நவக்கிரகத் தலங்கள் என்று எதையாவது சொல்லி, எந்தத் திசையில் கை காட்டினாலும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவார்கள்… மனமுருகப் பிரார்த்திப்பார்கள்… பூஜைகள் செய்வார்கள்… விரதமிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை துன்பம் அகல வேண்டும், இன்பம் சூழ வேண்டும்! அந்த வகையில் இந்துமத மரபில் விரத பூஜைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. முறையாக விரதமிருந்து, பூஜை செய்தால் அதற்கேற்ற உன்னத பலனும் உண்டு. இந்நூலில் ஐந்து விரத பூஜைகள், அவற்றுக்கான அடிப்படை, செய்யும் முறை அனைத்தையும் தொகுத்து விரிவாக விளக்கியிருக்கிறார் எழுத்தாளர் அனுராதா ரமணன்.

‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’, ‘கேதார கௌரி விரதம்’, ‘அகண்ட தீப பூஜை’, ‘ஆஞ்சநேய பூஜை’, ‘சந்தோஷி மாதா பூஜை’ என ஐந்து முக்கிய பூஜைகள் இந்நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ‘தடைகள் விலக, கல்வி சிறக்க, செல்வம் பெருக, மணப்பேறு வாய்க்க, மகப்பேறு கைகூட, தம்பதியர் ஒற்றுமை ஓங்க, பகைவர் நண்பராக எனக் கவலைகள் அனைத்துக்கும் உரிய பரிகாரங்களை உற்ற தெய்வத்துக்குச் செய்து பூஜித்தால் நிச்சயம் பலன் கிட்டும்’ என்று நூலின் முன்னுரையில் சொல்கிறார் இதன் ஆசிரியர்.

ஒவ்வொரு விரதத்துக்கும் அடிப்படையான ஒரு பின்னணி உண்டு. ‘கேதார கௌரி விரதம்’ அன்னை உமா மகேஸ்வரிக்கு கௌதம முனிவரால் உபதேசம் செய்யப்பட்டதாம். இது போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இந்நூலில் இடம் பிடித்திருக்கின்றன. எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் பூஜைகளும், அவற்றுக்கான விளக்கங்களும், முக்கியத்துவமும், பலன்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. விரத பூஜைகளைக் கடைப்பிடித்து வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோம்.

***

வேண்டுவன நல்கும் விரத பூஜைகள்

தொகுத்தவர்: அனுராதா ரமணன்

வெளியீடு: தங்கத்தாமரை பதிப்பகம்.

விலை: ரூ.25/-

முகவரி: 37, கால்வாய்க்கரைச் சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020.

தொடர்புக்கு: +91 73057 76099 / 044-2441 4441.

மின்னஞ்சல்: mail2ttp@gmai.com

காலத்தை வென்ற கதைகள் – 6

அனுராதா ரமணன்

Image

சமூகம், பெண்ணுரிமை, புதிய சிந்தனை இவற்றை மையக் கருத்துகளாகக் கொண்டு தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர். வெகுஜன இதழ்களில் அதிகமாக எழுதி வந்த இவருக்கு வாசகிகள் அதிகம். 1948 ஜனவரி 1ம் தேதி பிறந்தார். 18 வயதில் திருமணம். 28 வயதில் கணவர் ரமணன் இறந்து போனார். சுதா, சுபா என இரு மகள்கள். 1977ல் எழுதத் தொடங்கிய இவர் 1000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், எண்ணற்ற நாவல்களையும், தொடர்கதைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகள், ‘சிறை’, ‘கூட்டுப்புழுக்கள்’, ‘ஒரு மலரின் பயணம்’, ‘ஒரு வீடு இரு வாசல்’ போன்ற திரைப்படங்களாகவும் மலர்ந்தன. தொலைக்காட்சித் தொடர்களாகவும் இவர் கதைகள் ஆக்கம் பெற்றன. சிறந்த ஓவியர். சென்னை, எழும்பூர் ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். சில பத்திரிகைகளில் ‘லே அவுட்’ ஆர்டிஸ்டாக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 2000ம் ஆண்டு, மே மாதம் இவருக்கு இதய மாற்றுவழி அறுவை சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) செய்யப்பட்டது. தன் மரணத்துக்குப் பிறகு உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க விரும்பினார். ஆனால், பல ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் இறந்த பிறகு உடல் தானம் சாத்தியப்படவில்லை. கண்கள் மட்டும் தானமாக வழங்கப்பட்டன. தனது 62வது வயதில் மே 16, 2010 அன்று காலமானார்.

அக்னி              

யிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல…

காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் நாலு பேரும், தங்கள் தாயின் திதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்பாவைப் பட்டினிப் போட்டுவிட்டு, எப்பொழுதோ செத்துப்போன அம்மாவுக்கு வடை பாயசத்தோடு பரிந்து பரிந்து சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இது என்ன அக்கிரமம்…?

‘இவர்கள் இப்படிப் போடும் சோற்றை அவ சீந்துவாளோ. புருஷன் சாப்பிடாம, கை நினைக்காதவடா அவ… நான் சாப்பிட்டு விட்டுப்போன எச்சில் இலையில்தான் உட்காருவா… இன்னிக்கு என்னைப் பட்டினி போடறேளே… நியாயமா?’ ராமநாதன் தனக்குள் கேட்டுக் கொள்கிறார்.

வயசு திட்டத்தட்ட எழுபத்தைந்து ஆகிறது அவருக்கு… போதாக்குறைக்கு வியாதிகள் வேறு… பட்டினி கிடக்க முடியுமா…?

”கிழத்துக்கு இருப்பே கொடுக்கலை.”

– உள்ளே மூத்த மருமகள் லட்சுமி, அடுத்தவளான சுசீலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

”யார்பட்டினி கிடக்கச் சொன்னது? அப்பவே அவருக்கான கோதுமைச் சாதம் ஆயிடுத்து… தயிரைவிட்டுப் பிசைஞ்சு வாயில போட்டுக்க வேண்டியதுதானே? பிடிவாதம்… வடை பாயசத்தோடதான் சாப்பிடுவேன்கிற பிடிவாதம். கழுகுமாதிரி மூக்கு வியர்க்க உட்கார்ந்துண்டிருக்கார்… இவர் என்கிட்ட சொல்லிட்டார் – அப்பா அப்படித்தான் குழந்தை மாதிரி அடம் பிடிப்பார்… நீ எதையும் கொடுத்துடாதே… அப்புறம் அவஸ்தைப் படறது நாமதான்னு…”

இவர்களின் பேச்சு, ராமநாதனின் காதில் விழாது… பசியினால் காதடைக்கவில்லை… ஏற்கெனவே காது மந்தித்து வெகு காலமாகிறது. சர்க்கரை வியாதி முற்றியதில் கண்ணிரண்டும் சுத்தமாய் அம்பேலாகிவிட்டது.

சதை வற்றி, வெறும் எலும்புக் கூடாய்… ஈர்க்குச்சியை ஒடிப்பதுபோல நாலாய் ஒடித்து பொட்டலமாய் கட்டி விடலாம்… அப்படி ஒரு தேகம்…

Image

அறுபது வயசு வரையில் ராமநாதன், கஞ்சி போட்ட சட்டை போல எத்தனை விறைப்பாக இருந்தார்… அப்பொழுது மாத்திரம் இந்தச் சர்க்கரை வியாதியெல்லாம் இல்லையா…? இருந்ததே… ஆனால், அப்பொழுது மனைவி மங்களமும் இருந்தாள். இவருக்குச் சர்க்கரை கூடாது என்றான பின், தானும் இவர் சாப்பிடும் உணவையே சாப்பிட்டுக் கொண்டு…

அவள் இருந்தவரையில் அவருக்குச் சிரமம் தெரியவில்லை. அதே சமயத்தில் நாக்கை அடக்கியாளும் தெம்பும் இருந்தது.

சும்மா சொல்லக் கூடாது…

அந்தக் காலத்து ராமநாதன் மகா ஆசாரசீலராக இருந்தார். அதேபோல சரியான சாப்பாட்டு ராமனாகவும் இருந்தார்.

வீட்டில் கணபதி ஹோமமும், சத்ய நாராயண பூஜையும் அமர்க்களப்படும். ஒரு நாளைப்போல சாப்பிட பகல் ஒரு மணிக்கு மேலாகும்… பத்துப் பதினைந்து பேரோடு நுனி வாழையிலை போட்டு பாயசம் வடையுடன் சாப்பாடு.

ஓடி ஓடிச் செய்வாள் மங்களம். எல்லாவற்றையுமே ஒண்டியாய், தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.

இப்படி ரசித்துச் சாப்பிடும் ராமநாதன், செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, நாட்களில் பூரண உபவாசமும் இருந்திருக்கிறார். இவர் விரதமிருக்கும் தினங்களில், இவரெதிரில் எத்தனைதான் ருசியான பண்டத்தை வைத்தாலும் ஏறிட்டுப் பார்க்கமாட்டார்… அத்தனை வைராக்கியம்…

அப்படியெல்லாம் இருந்த மனுஷன் – இன்று அதிரசத்துக்கும் வடைக்கும் குழந்தைபோல அடம் பிடிக்கலாமோ…

ராமநாதன் உள்ளிருந்து வரும் வாசனையை நாசி நிறைய நிரப்பிக் கொள்கிறார். நாவில் நீர் ஊறுகிறது.

எத்தனை வேதம் படித்து என்ன… உபநிஷதத்தைக் கரைத்துக் குடித்து என்ன… நாக்குச் சபலத்துக்கு முன் எல்லாமே தூள் தூளாகிறதே…!

ராமநாதன் தூக்கம் பிடிக்காமல் எழுந்து உட்காருகிறார்.

பேசாமல் கோதுமைச் சோற்றை வாங்கித் தின்றுவிட்டு ‘சிவனே’யென்று படுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது.

அதே சமயத்தில் பிடிவாதத்தைவிட மனசு வரவில்லை.

இன்று நேற்றில்லை… என்றுமே அவர் வீம்புக்காரர்தான். மங்களம் இருந்தபோது கொஞ்சமாகவா திண்டாடியிருக்கிறாள்?

நினைத்தபோது சிநேகதிர்களைச் சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து சமைத்துப்போடச் சொல்லுவார்.

”அடியே… நாளைக்கு வருஷப் பிறப்பாச்சே… போளி உண்டோல்லியோ…”

”உம்… பண்ணிட்டா போச்சு…”

”அப்ப, என் சிநேகிதன் சுப்புணியையும் பத்மனாபனையும் நம்ம வீட்டுல சாப்பிட வரச் சொல்லட்டா…?”

”சொல்லுங்களேன்…”

மங்களம் மறுத்துப் பேசமாட்டாள். இத்தனைக்கும் ராமநாதனுக்கு ஒன்றும் பணம் கொட்டிக்கிடக்கவில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வேலைதான். ஆனால், இவர் சாப்பிடும்போதும், சிநேகிதர்களுக்குப் பரிந்து பரிந்து உபசரிக்கும்போதும் இவரை ஸ்கூல் வாத்தியார் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.

பாவம், மங்களம்! அரிசியும் வெல்லமும் நெய்யும் அவள் எப்படித்தான் அலுக்காமல் வாங்கிப் போட்டுச் சமாளித்தாளோ! ஒருதடவை ரசம் சரியாய் அமையவில்லையென்று நாலு பேர் முன்னிலையில் மானத்தை வாங்கிவிட்டாரே…

”என்ன… வழக்கமான டேஸ்ட் இல்லையே… ரசத்தை ஈயச்சொம்புலதானே வச்சே?”

தலை குனிந்து நின்றாள் மங்களம்.

என்னவென்று சொல்லுவாள்.. ‘ஈயச் சொம்பை விற்றுத்தான் அன்றைய சமையலையே செய்தேன்’ என்று எப்படிச் சொல்லுவாள்…?

அன்றைக்கு அவள் வாங்கிய வசவு கொஞ்ச நஞ்சமில்லையே…

இன்று அதெல்லாம் நினைப்புக்கு வந்து, ஒளியேயில்லாத கண்களில் கசிவை உண்டு பண்ண…

ராமநாதன் மறுபடியும் சுருண்டு படுக்கிறார்.

உள்ளே –

மணக்க மணக்க திரட்டிப்பால் கிளறுவது…

அம்மாடீ…! என்ன வாசனை…!

‘சனியன், உடம்புல எல்லா அங்கங்களும் பழுதுபட்டுப் போயாச்சு… இந்த மூக்குக்கு ஏதாவது ஒரு கேடு வராதோ… வயசாக ஆக, இது மாத்திரம் ஏன் இப்படித் தீர்க்கமா வேலை செய்யறது…’ – ராமநாதன் அலுத்துக் கொள்கிறார்.

வாசனைகளை ருசி பார்த்தே இந்த பத்து பதினைந்து வருஷ வாழ்க்கையைத் தள்ளியாயிற்று அவர்.

”அடுப்புல என்ன முருங்கைக்கா சாம்பாரா…? உப்பு போடல போல இருக்கே… வாசனை சொல்றதே…”- இப்படிச் சொல்வார் ஒரு நாள்.

‘ரசத்துல கொத்துமல்லியைக் கிள்ளிப்போட்டு ரொம்ப நேரம் கொதிக்கவிடக் கூடாது… பொங்கி வர்றச்சேயே பார்த்து இறக்கிடணும்… இல்லைன்னா வாயில வைக்க வழங்காது…’

– இப்படிச் சில நாள் தனக்குள் முனகிக் கொள்வார்.

”எது எப்படியிருந்தா இவருக்கென்ன… இவர் சாப்பிடறது கோதுமைச் சாதம், தயிர், ஒரு கப் கீரை… மத்தவா எப்படிச் சாப்பிட்டா என்ன இப்போ…” – ஓரொரு சமயங்களில் நாட்டுப் பெண்கள் இவர் காதுபட இரைந்து சொல்வதும் உண்டு.

”லோகத்துல எதுக்காகப் பொறந்தோம்… எதுக்காக மாடா உழைக்கறோம்… எல்லாம் இந்தச் சோத்துக்காகத்தானே. அதை வக்கணையா சாப்பிடணும். சமைக்கற பண்டத்தை வீணாக்காம சாப்பிடணும். நாம சாப்பிடறது மட்டுமில்லாம மத்தவாளுக்கும் வயிறு நிரம்ப சாப்பாடு போடணும். உபநிஷத் சொல்றது… சாப்பாட்டை இகழக் கூடாது. அது விரதம். எதை நாம் சாப்பிடறோமோ அது அன்னம்; சாப்பிடற நாம் அன்னாதம்… இதையெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது…”

கிழவர் சடக்கென தன் பேச்சை நிறுத்திக் கொண்டு தமக்குள் ஆழ்ந்து போவார்…

மருமகள்களின் கையால் விதவிதமாய் சமைத்துப் போட்டுச் சாப்பிடும் பாக்கியம் அவருக்கு இருந்ததேயில்லை. தன் மங்களத்தை விடவும் இவர்கள் உயர்த்தியாய் சமைப்பார்கள் என்று அவர் நினைக்கவும் இல்லை… அதுதான் சமையலின் மணமே சொல்கிறதே… போதாதா?

அப்படிப்பட்ட சாப்பாட்டுக்கு இந்த நாக்கு இன்று, இப்படி விவஸ்தை கெட்டு அலைய வேண்டாம்.

‘என்ன செய்ய… எல்லா உயிர்க்கும் அன்னம்தான் ஆதாரம். அன்னத்தாலே பிறந்த ஜீவராசிகள், அன்னத்தாலேயே உயிர் வாழ்ந்து, கடைசியிலே அன்னத்தாலேயே நாசமாகி, மண்ணோடு மண்ணாய்ப் போறதுகள், செத்துக் கிடக்கிற நாக்கு ஏதாவது கிடைச்சா போதும் போல இருக்கே.”

இன்று எப்படியும் வகை தொகையாய்ச் சாப்பிட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல கொலைப் பட்டினி கிடக்கிறார் கிழவர்.

நல்லவேளை, மங்களம் போய்ச் சேர்ந்தாள். அவள் இப்படி கௌரவமாய் போனதினால்தானே – இன்றைக்கு அவள் பெயரைச் சொல்லி வீட்டில் பாயசமும் பட்சணமும் அமர்க்களப்படுகிறது… இதுவே அவள் உயிரோடு இருந்து, மருமகள்களிடம், ‘எனக்கு மொறு மொறுன்னு வடை பண்ணித் தா’ என்று கேட்டால் இவர்கள் செய்திருப்பார்களோ…

செத்தவளுக்கு வருஷத்தில் ஒரு நாளாவது சோறு போடாவிட்டால், எங்கே ஆவியாய் வந்து, குடும்பத்தை நடுங்க வைக்கப் போகிறாளோ என்கிற பயம்… அந்த பயம்தான் இப்படி சமையலறையில் அதிரசத்தையும் வடையையும் வேர்க்க விறுவிறுக்கச் செய்து கொண்டிருக்கிறது; அந்த பயம்தான், ‘மாமியாருக்கு கறிவேப்பிலைத் துவையல் பிடிக்கும்’ என்று மாங்கு மாங்கென்று அம்மியைக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது; அந்த பயம்தான் பிள்ளைகளை ஆபீசுக்கு லீவு போட வைத்து, ஈர வேட்டியும் காய்ந்த வயிறுமாய், மந்திரங்களை உச்சரிக்க வைக்கிறது; அந்த பயம்தான் தங்களைவிட செல்வாக்கில் பல படிகள் கீழேயுள்ள புரோகிதரை பவ்யமாய் வணங்கி அவர் சொன்னபடி எல்லாம் ஆட வைக்கிறது…

‘நான் செத்தால், என் திதியின் போதாவது இவனுங்க எனக்குப் பிடிச்ச அயிட்டங்களைச் செய்வானுங்களோ…’

‘போறது… சர்க்கரை வியாதியில் செத்தவனுக்கு பாயசம், பட்சணம் வச்சு திவசம் பண்ணக் கூடாதுன்னோ, பிளட் பிரஷர்லே செத்தவனுக்கு உப்பே சேர்க்காம சமைச்சுப் போடணும்னோ யாரும் எழுதி வச்சுட்டுப் போகலை…’

‘ஆத்மாக்களிலேயும் இது மாதிரி டயபடீஸ் ஆத்மான்னும், கொலஸ்டிரால் ஆத்மான்னும் இல்லாமப் போச்சே… எல்லா எழவும் இந்த தேகத்துக்குத்தானே தவிர, ஆத்மாவுக்கு இல்லே போல இருக்கு…’

ராமநாதனின் வயிற்றில் தீ, ஜுவாலையாய்க் கொழுந்துவிட்டு எரிவது போல…

‘பெரிய இலை போட்டுண்டு சாப்பிடணும். சோத்தைக் கண்டதும் அல்பம் மாதிரி பறக்கக்கூடாது. இது என்ன மாசம்? சித்திரையா… முக்கனியும் கிடைக்குமே… இலையிலே மூணு பழமும் போட்டிருப்பான். அதெல்லாம் பெரியவன் இந்த மாதிரி சமயங்கள்லே நிறக்க செஞ்சு பேரைத் தட்டிண்டு போயிடுவான்…’

‘அது சரி… திங்கணும் திங்கணும்னு பறக்கறியே…பல் எங்கே இருக்கு…? மொத்தம் நாலு பல் இருந்தா அதிசயம். அதுவும் நீ, பலாச்சுளைய மெல்லறப்ப சேர்ந்து வயத்துக்குள்ளே போயிடும்…’

‘ஆ… பலாச்சுளைன்ன உடனே நினைப்புக்கு வர்றது… வீட்டுல தேன் இருக்கோ… பலாச்சுளைக்கும் தேனுக்கும்தான் ஏர்வை…’

இந்த நினைப்பு வந்தவுடன், உடனே எழுந்து போய் ஹாலில் பரிமாறப்பட்டிருந்த இலைகளில் பலாச்சுளைக்குத் தோய்த்துக் கொள்ள தேன் பரிமாறியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரவேண்டும் போல வேகம்…

எங்கே எழுந்திருப்பது… இங்கேதான் பாதத்தைத் தரையில் ஊன்றியிருக்கிறோமா, இல்லையா என்பதுகூடத் தெரியவில்லையே…

”அடேய்… எவன்டா அடேய்…!”

இங்கிருந்தபடியே குரல் கொடுக்கிறார்.

”என்ன?”

நாலு பிள்ளைகளில் எவனோ ஒருவன் மகா எரிச்சலுடன் எட்டிப் பார்க்கிறான்.

”பலாச்சுளைக்குத் தொட்டுக்க தேன் விட்டிருக்கியா…?”

”எல்லாம் விட்டிருக்கு. நீ சித்த சும்மாயிரு…” – அவன் கடுப்பு அவனுக்கு.

விடிகாலையிலிருந்து பகல் இரண்டு மணி வரையில் அவன் எத்தனை விஷயங்களை தியாகம் செய்திருக்கிறான்…!

நாலு கப் காபி… இரண்டு பாக்கெட் சிகரெட்… பத்து மணி சாப்பாடு… இன்னும் எத்தனையெத்தனை… இந்த மனிதருக்குத் தேன் இல்லையென்றுதான் கவலை.

மகனின் காய்ப்பு வருத்தத்தை உண்டு பண்ணினாலும், வீட்டில் தேன் இருக்கிறது என்பதே பரம சந்தோஷமாய்… ராமநாதன் மீண்டும் குருட்டுக் கண்களுக்குள் திருட்டுக் கனவுகளைக் காணத் துவங்குகிறார்…

‘இந்தப் பிள்ளைகள் – அம்மா கையாலே அத்தனை ருசியா சாப்பிட்டு, எப்படித்தான் இப்படி ரசனையில்லாமப் போனதுகளோ? எல்லாம் பெண்டாட்டிகள் செஞ்சு போடற அரை வேக்காட்டைத் தின்னு தின்னு நாக்கு மழுங்கிப் போயிருக்கும்…’

‘உஸ்… சும்மாயிரு. இன்னிக்கு அவனுங்க பெண்டாட்டிகள் சமைச்சிருக்கிற சமையலுக்குத்தான் நீ நாக்கை நொட்டை விட்டுண்டு காத்துண்டிருக்கே…’

‘ஆமா… அவா எனக்குப் போடமாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டா, என்ன பண்றது…?’

‘இன்னிக்கு ஒரு நாள் போட்டுடுங்கோ… தின்னுட்டு… சத்தியமா உங்க பிராணனை எடுக்க மாட்டேன். நானே செத்துடறேன்னு காரண்ட்டி லெட்டர் எழுதிக் கொடுத்துடலாமா?’

‘எழுதிக் கொடுத்துட்டாப்பல ஆச்சா… அப்படி சடார்னு கிளம்ப முடியும்னா இத்தனை நாள் எதுக்காக மண் மாதிரி இந்தக் கோதுமைச் சோத்தை தின்னுண்டு இருக்கணும்.’

‘சேச்சே…! கோதுமையானாலும் அதுவும் அன்னம்தான். ஆகாரம்தான். தூஷிக்கப்படாது. அப்புறம் அடுத்த பிறவியில இது கூட கிடைக்காமப் போயிடும்…’

‘அன்னம்தான் பூலோகத்துலேயே உசத்தி… அன்னத்தால பிராணனையும், பிராணனால பலத்தையும், பலத்தால தவத்தையும், தவத்தால சிரத்தையையும், சிரத்தையால புத்தியையும், புத்தியால மனசையும், மனசால சாந்தியையும், சாந்தியால சித்தத்தையும், சித்தத்தால நினைவையும், நினைவால ஸ்திர பிரக்ஞையையும், ஸ்திர பிரக்ஞையால விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால ஆன்மாவையும் பெறுவதால… உம்…அம்மாடி, மூச்சு வாங்கறது… அது என்ன வாசனை…? சேப்பங்கிழங்கு வறுவலா…!’

அவர் மீண்டும் பொறுமையிழக்கிறார்… அந்தப்பக்கம் ஓடிய பேரக் குழந்தைகளில் சற்றுப் பெரியவளான ஒருத்தியைத் தன்னருகில் அழைக்கிறார்.

”இந்தாம்மா… சாஸ்திரிகள் சாப்பிட்டாச்சா?”

”இன்னும் இல்லை… இப்பத்தான் இலை முன்னாடி உட்கார்ந்திருக்கா…”

எத்தனை நேரம்… எத்தனை நேரம்…

இவரது தவிப்பு இப்படியென்றால்… வாசற்புற ஹாலிலோ… ஒருத்தர் முகத்திலும் சுரத்தேயில்லை.

சாப்பிட வருகிற பேர்வழிகளுக்கு நன்றாய்ப் பசியெடுத்து, ஆர்வமாய்ச் சாப்பிட வேண்டாமோ…

ஒருத்தராவது ரசித்துச் சாப்பிடவே இல்லை. இந்த லட்சணத்தில் ஒருவர் பாதிச் சாப்பாட்டில் கையை உதறிவிட்டு எழுந்தே விட்டார்.

”ஐயையோ….! என்ன ஆச்சு…?”

மூத்த மருமகள் வாய்விட்டு அலற, மற்றவர்கள் பிரமை பிடித்தாற்போல நிற்க…

”என்னை மன்னிக்கணும். அது என்னவோ திடீர்னு வயித்தை வலிக்கிறது… ஒரு பருக்கை உள்ளே போகாது… உசிர் போயிடும் போல…”

என்ன செய்வது…? சகோதரர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க, அத்தனை பேருமே தவித்துப் போய் விட்டார்கள்.

‘இத்தனை வருஷத்தில் இதுபோல நடந்ததில்லையே… இது என்ன விபரீதத்திற்கு அறிகுறியோ…?’

‘அம்மா ஏன் நம்முடைய உபசரிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை?’

‘இது ஏதோ சாமி குத்தம்…’

அவர்கள் தங்களுக்குள் புலம்பியபடி வயிற்று வலிக்காரரை வண்டியிலேற்றிவிட்டு, மற்றவர்களுக்கு சஞ்சலத்துடன் பரிமாற….

”ஏண்டா டேய்… இன்னுமா அவா சாப்பிட்டு முடிக்கல்லே…”

கிழவரின் குரலில் தெறித்த நெருப்பு, அத்தனை பேரையும் சுட்டுப் பொசுக்க…

‘அப்பாவுக்கு வேண்டியதைப் போடலைங்கறதே அம்மாவுக்கு வருத்தமாயிருக்குமோ…’

மூத்தவனின் மனசில் இந்த நினைப்பு ஓடியதும், மனைவியை அவசரமாய் அழைக்கிறான்.

”அப்பாவுக்கும் இலை போடு… அவரும் சாப்பிட்டும்…”

”என்னது… நாளைக்கு அவர்…”

”நாளைய பத்தின கவலை நாளைக்கு… இன்னிக்குப் போடு… நான் அவரை மெதுவா தூக்கிண்டு வந்து இலை முன்னாடி உட்கார்த்தி வைக்கிறேன்…”

அதற்குமேல் எதிர்த்துப் பேச வழியில்லாத பெண்கள், பரபரப்புடன் இலையைப் போட்டுப் பரிமாற…

பெரியவன், அப்பாவின் தோளைத் தொட்டு அழைக்கிறான்.

”அப்பா, சாப்பிட வாங்கோ…”

”கோதுமைச் சாதமா…? நேக்கு வேண்டாம்…”

அப்பா சிறு குழந்தையைப் போல முறுக்கிக் கொள்கிறார். பிள்ளைக்கே என்னவோ போல இருக்கிறது.

”இல்லேப்பா… இலை போட்டு எல்லாம் பரிமாறியிருக்கு…”

”நிஜமாவா?”

”நிஜமாத்தான்…!”

‘‘பாயசம், வடை எல்லாமா?’’

”எல்லாம்தான்.”

”பலாச்சுளை உண்டோல்லியோ.”

”உங்களுக்கில்லாததாப்பா…”

”தேன்…”

”நீங்க சாப்பிட வாங்கோ… வேண்டிய மட்டும்… தேனென்ன, எல்லாம் போடறேன்.”

கிழவர், பொக்கைவாய் மலர, அந்தரத்தில் கைகளை விரித்துக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.

”நான் எப்படிடா வருவேன்.. என்னைத் தூக்கிண்டு போயேன்.”

இளையவன் கொஞ்சம் ஆகிருதியான தேகமுடையவன். அப்பாவை பத்து வயசு பாலகனைத் தூக்குவது போல தூக்கிக் கொள்கிறான். தந்தை, மகனின் கழுத்தை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பின்னிக் கொள்கிறார்.

”மெள்ள… மெள்ள… பார்த்து இறக்குடா.”

கூடத்தில் அப்பாவுக்காக மணை போட்டபடி மூத்தவன் சகோதரனிடம் சொல்ல.

இலை முன் உட்கார வைக்கப்பட்ட ராமநாதனின் தலை, ஒரு பக்கமாய்த் தொய்ந்து சாய்கிறது. முகத்தில் நன்றாய்ச் சாப்பிடப் போகும் ஆனந்தமும், மூடிய இமைகளுக்குள் இலையில் பரிமாறப்பட்டுள்ள உணவுகளைப் பற்றிய கனவுகளுமாய்…

”அப்பா… அப்பா…!”

பிள்ளைகளும் மருமகள்களும் அவர் நிரந்தரமாய் கண் மூடிவிட்டதை அறியாமல் அவரைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலையோரத்தில் பலாச்சுளையை நாலைந்து கறுப்பு எறும்புகள் மௌனமாய் சூழ்ந்து கொள்கின்றன.

‘உணவும் நானே… உண்பவனும் நானே… உணவுக்கும் உண்பவனுக்கும் உள்ள உறவை உண்டாக்கியவனும் நானே; உண்பவனை உண்ணும் உணவும் நானே; உலகனைத்துமாகி அதை அழிப்பவனும் நானே…’

கறுப்பு எறும்புகள் ரகசியமாய் தங்களுக்குள் உபநிஷத்தை முனகிக் கொள்கின்றனவோ.

ராமநாதனின் இதழ்கடையில் லேசான சிரிப்பு நிரந்தரமாக…

***

Painting Credit: Brad Schwede