குழந்தை

Image

குழந்தையின் தளர் நடையை இறைஞ்சிப்பெறவே 

நடன தேவதை தவங்கிடக்கிறாள்.

 

குழந்தையின் மழலை மொழியின்முன் 

இசையின் சாம்ராஜ்யமே மண்டியிடுகிறது.

 

குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது 

பந்தினைப் பூமியுருண்டையாக்கவும் 

பூமியுருண்டையைப் பந்தாக்கவும்.

 

நிலாவைக் காட்டிச் சோறூட்டிவிட்டதாக 

சாமர்த்தியம் பேசுகிறோம் 

குழந்தை 

நிலாவை உண்டுவிட்டதை 

அறியாத நாம்.

 

விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாகிப்போன 

வனதேவதையும் கடல் கன்னியும் ஆகாய ராஜனும் 

குழந்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் 

குழந்தைகள் கட்டிய மணல்வீடு முகாம்களில் 

குடியிருக்க.

 

பெரியவர்கள் 

இதயத்தைப் பொம்மையாய் வைத்திருக்கிறார்கள் 

குழந்தைகளோ 

பொம்மைக்கும் இதயத்தைப் பொருத்திவிடுகிறார்கள்.

 

பெரியவர்களிடம் 

அடம்பிடித்து அழுதுவாங்க 

குழந்தைகளுக்கு ஏராளமானவை இருக்கின்றன 

பலூன்கள்…சாக்லேட்டுகள்…

ஐஸ் கிரீம்…பொம்மைகள்…

குழந்தைகளிடம் யாசிக்க 

பெரியவர்களுக்கு 

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது…

“மனசு”

– நா.வே.அருள்

Image Courtesy: http://edfromct.files.wordpress.com

பால் குடிங்க! – கர்ப்பிணிகளுக்கு ஓர் அறிவுரை!

Image

‘கர்ப்ப காலத்தில் பெண்கள் எது சாப்பிடுவது நல்லதோ, இல்லையோ போதுமான பால் குடிப்பது ரொம்ப நல்லது’. இதை தனி நபர்கள் சொல்லவில்லை. மருத்துவர்கள் சொல்லவில்லை. நிபுணர்கள் சொல்லவில்லை. முக்கியமான ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது. கருவுற்ற காலத்தில் பெண்கள் சுத்தமான பாலை, தேவையான அளவு சாப்பிடுவதால் குழந்தையின் இளமைப் பருவம் வளமாக இருக்கும்… முக்கியமாக, பிறக்கும் குழந்தை உயரமாக வளரும்… என்கிறார்கள். ‘க்ளினிக்கல் நியூட்ரிஷன்’ என்ற ஐரோப்பியப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்கள் 150 லிட்டருக்கும் அதிகமான பாலைக் குடித்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை வளர் இளம் பருவத்தில் (டீன் ஏஜ்), உயரமாக வளர்வார்களாம். இது, ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் பொருந்தும். அதே நேரம், 150 லிட்டருக்குக் குறைவான பாலை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அந்த அளவுக்கு உயரமாக வளர்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஒருநாளைக்கு 250 மி.லி. பாலாவது குடிக்க வேண்டும்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் குழு ஒன்று ஈடுபட்டது. 1980ன் பிற்பகுதியில் பிறந்த குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளின் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களின் உயரம் கணக்கிடப்பட்டது. அவர்கள் கருவிலிருந்த காலத்தில், அவர்களின் தாய்மார்கள் எவ்வளவு பால் அருந்தினார்கள் என்பதையும் கணக்கிட்டார்கள். டென்மார்க்கில் இருக்கும் 809 பெண்கள், 1988லும் 1989ம் ஆண்டும் பிறந்த குழந்தைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். ஆய்வின் முடிவில், குழந்தைகள் உயரமாக வளர்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த வருடம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஓர் ஆய்வில் இன்னொன்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்ப்ப காலத்தில் அதிகமாக பால் அருந்தும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் மிக அதிகமாக இருக்குமாம். அதற்குக் காரணம் பாலில் அயோடின் அதிகமாக இருப்பதுதானாம்.

***

Photo courtesy: http://admin.mommypage.com/

மேலும் பல கர்ப்ப கால செய்திகள், அரிய தகவல்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஆலோசனைகள் ‘குங்குமம் தோழி’ – செப்டம்பர் 16-31 (மகப்பேறு ஸ்பெஷல்) இதழில்…   

குழந்தையின்மைக்குக் காரணமாகும் கருக்குழாய் அடைப்பு

குழந்தையின்மைக்கான காரணங்களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமான பிரச்னை இது. கருக்குழாய் அடைப்பு பற்றிய விழிப்புணர்வோ, அதைக் கவனிக்க வேண்டிய அவசரமோ, அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகளோ பலருக்கும் இல்லை.

Image

கருக்குழாயின் மிக முக்கிய செயல் என்ன தெரியுமா?
கருத்தரித்தலுக்கு உதவுவதுதான்.இந்தக் கருக்குழாய்கள் சிலருக்கு இயற்கையிலேயே, அதாவது பிறவியிலேயே அரிதாக இல்லாமல் இருக்கலாம். அதாவது 10 ஆயிரத்தில் 5 பெண்கள் இப்படி இயற்கையிலேயே சினைக்குழாய் இல்லாமல் பிறக்கலாம். ஆணின் அணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து ஒரு சிசுவை உண்டாக்கும் முக்கிய பாலம்தான் கருக்குழாய் எனப்படுகிற 2 சினைக்குழாய்களும். இது கர்ப்பப்பையின் இடது பக்கம், வலது பக்கம் என இரண்டு பக்கங்களிலும் 8 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மெல்லிய குழாய்களாக இருக்கும். சினைக்குழாயின் ஒரு பக்கம், கர்ப்பப்பையினுள் திறந்த நிலையில் இருக்கும். மறு பக்கம் கருமுட்டைப்பையின் அருகில் இருக்கும். இவற்றில் கர்ப்பப்பையின் வாயில் உள்ள பகுதி குறுகலாகவும், கருமுட்டைப்பையின் அருகில் உள்ளது அகலமாக, கைவிரல் போன்ற திசுக்கள் கொண்ட, உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். கர்ப்பப்பையிலிருந்து உள்வரும் ஆண் அணுக்களை சினைக்குழாய் வழியாக கொண்டு சென்று, மாதாமாதம் வெடிக்கும் கருமுட்டையை கைவிரல் போன்ற மென்மையான ஃபிம்பிரியா (fimbriya) உறிஞ்சி, சினைக்குழாய்க்குள் எடுத்துக் கொள்கிறது. சிலியா போன்ற மென்மையான, மிக சன்னமான மயிரிழைகள் இந்தச் செயலைச் செய்கின்றன. அப்படி உண்டாகும் சிசுவை 48 மணி நேரத்துக்குள் சினைக்குழாயிலிருந்து கர்ப்பப்பை அறைக்குள் சேர்த்து விடுகிறது. கரு, கர்ப்பப் பையில் ஒன்றி, குழந்தையாக வளர ஆரம்பிக்கிறது.

அது சரி… இந்தக் கருக்குழாய் அடைப்பு அப்படி என்னதான் செய்யும்?
குழந்தையின்மைக்கான பிரதான காரணம் இந்தக் கருக்குழாய் அடைப்பு என ஏற்கனவே பார்த்தோம். அடுத்து கருக்குழாயில் கருத்தரிக்கும் சிசு, கருக்குழாயினுள் செல்ல இயலாமல், கருக்குழாயிலேயே தங்கி வளர்ச்சியடையவும் இது காரணமாகலாம். இது பெண்ணின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.
குழந்தை இல்லாத பிரச்னைக்கு இந்த சினைக்குழாய்கள் வேலை செய்யாததுதான் முக்கிய காரணம்.

அது அப்படி வேலை செய்யாமைக்கு என்னவெல்லாம் காரணங்கள்?
* கர்ப்பப்பைக்கும் கருமுட்டைக்கும் தொடர்பே இல்லாமல், இயற்கையிலேயே அடைப்பு இருக்கலாம்.
* சிறு வயதில் பிரைமரி காம்ப்ளக்ஸ் எனப்படுகிற டிபி கிருமிகள் அதிகம் தாக்கிய பெண்களுக்கு, தொற்று ஏற்பட்டு, புண்ணாகி கருக்குழாய்கள் அடைத்திருக்கலாம்.
* சுத்தமான பழக்க, வழக்கங்கள் இல்லாத பெண்களுக்கு, தொற்றுக்கிருமிகள் தாக்கி, வெள்ளைப்படுதல் அதிகமாகி, குழாய்களுக்குள் கிருமிகள் சேர்ந்தும் அடைப்பை உண்டாக்கலாம்.
* எஸ்.டி.டி. போன்ற நோய்களால் கிருமிகள் தாக்கி, குழாயின் தோல் பழுதடைந்து, புண்ணாகி, தழும்பாகி, அதன் விளைவான பாதிப்பாகவும் இருக்கலாம்.
* அப்பென்டிக்ஸ் அறுவைக்குப் பிறகான தொற்று, அடிவயிற்றில் டிபி தொற்று, சீழ் பிடித்தல் போன்று வயிற்றுக்குள் வரும் பொதுவான பிரச்னைகளின் பாதிப்பாகவும் அடைப்பு உண்டாகலாம்.
* குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை ரிங் மூலமோ அல்லது வெட்டி, தையல் போடும் முறை மூலமோ செய்யப் படுகிற போதும், குழாய்களில் அடைப்பு உண்டாகலாம்.

ஒரு மென்மையான உயிரையே உண்டாக்கும் முக்கியமான இந்தக் கருக்குழாய் நன்றாக வேலை செய்வதை எப்படிக் கண்டுபிடிப்பது?
குழந்தையில்லாத தம்பதிக்குப் பரிந்துரைக்கப் படுகிற மிக முக்கியமான சோதனைகளில் ஒன்று, கருக்குழாய் அடைப்புக்கான சோதனை. ஸ்கேன், எக்ஸ் ரே, லேப்ராஸ்கோப்பி மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் அடைப்பின்றி இருந்தாலும், சினைக்குழாய் செயல்திறன் இன்றி இருக்கலாம். சினைக்குழாயின் செயல்திறனைக் கண்டுபிடிக்கும் நவீன பரிசோதனை இப்போது பரவலாக வந்துள்ளது. லேப்ராஸ்கோப்பி மூலம் மிகத் துல்லியமாக குழாயின் வெளிப்புறத் தோலையும், அதன் நிலையையும் (கருப்பையின் அருகில் உள்ளதா) , கருப்பை, குடல் அல்லது மூத்திரப் பையில் ஒட்டியிருக்கிறதா என நேரடியாக லேப்ராஸ்கோப்பி மூலம் கண்டறியலாம். அப்படி ஒட்டியிருந்தால் லேப்ராஸ்கோப்பி மூலம் (adhesiolysis) அகற்றவும் செய்யலாம்.

சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி (tuboplasty) எனப் பெயர்.
இப்போது ஃபாலோஸ்கோப்பி (falloscopy) என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற என்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள சிலியா (cilia) இயக்கத்தையும் (மைக்ரோ மயிரிழைகள்) கண்டறியலாம்.

Image

இந்தப் பிரச்னையை எப்படி சரி செய்யலாம்?
* ஆரம்ப காலத்தில் கிருமியால் உண்டாகும் மிகக் குறைந்த அடைப்பு மற்றும் சினைக்குழாய் புண்களை (salphingtis) கிருமிகளுக்கு உண்டான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.
* ஹைட்ரோ சால்பிங்ஸ் (Hydro Salpinx) எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்கள் மருந்து மூலமும், Salphingostomy எனப்படுகிற லேசர் மைக்ரோ என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையிலும் குணப்படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம்.
* கார்னுவல் பிளாக் (Carnual Block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீனமான ஹிஸ்டெரோஸ்கோப்பி (hysteroscopy) எனப்படும் என்டோஸ்கோப்பி வழியாக கருப்பையின் உள் செலுத்தி சரியாக்கலாம் (hysteroscopic cannulation).
* சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாத நிலையில், சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்கலாம். உலகில் முதன்முறையாக சோதனைக்குழாய் சிகிச்சை முறை, சினைக்குழாய் அடைப்புள்ள பெண்களுக்கு கண்டுபிடிக்கப் பட்ட அற்புதமான சிகிச்சை. கணவன்-மனைவி இருவரது அணுக்களையும் உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் பொருத்தி, சிசு உண்டாக்கி, 2 முதல் 5 நாட்களுக்குள் கருவறைக்குள் நேரடியாக செலுத்தி, இயற்கையான குழந்தை போல வளர்த்து, பிரசவம் நிகழச் செய்கிற நிகழச்சியாகும். எனவே ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெறலாம்.

– ஆர்.வைதேகி