தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் பலாத்காரம்… கலங்க வைக்கும் புள்ளிவிவரம்!

Image

டெல்லி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிற்து டெல்லி நீதிமன்றம். அதே சமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் பட்டியலை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆதாரபூர்வமாக, அழுத்தம் திருத்தமாக அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘மாநில குற்றப் பதிவு செயலகம்’ (State Crime Records Bureau – SCRB) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

கடந்த 2012ம் வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை மாதம் வரை பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளைவிட, 50% அதிகமாக 2013ல் பதிவாகியிருக்கின்றன. அதாவது, அதே ஜனவரி – ஜூலைக்கு இடைப்பட்ட காலத்தில். 2013ல், ஏழு மாத காலத்தில், காவல்துறையில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 436. 2012ல் பதிவானவை 291. அதிலும் சென்னையில்தான் அதிகம். 42 வழக்குகள். கணவர் மற்றும் உறவினர்களால் குரூரமாகத் தாக்கப்பட்ட வழக்குகளிலும் சென்னைக்கே முதலிடம். மொத்தம் 1,130 வழக்குகள். அவற்றில் 118 வழக்குகள் சென்னையில்.

மாநில குற்றப் பதிவு செயலகத்தின் அறிக்கைப்படி…

ஜனவரி – ஜூலை காலத்தில் பதிவானவை

                                            2012                   2013

பாலியல் பலாத்காரம்      291                    436

பாலியல் தொந்தரவு        708                     585

கடத்தல்                              756                     698

கணவரால் தாக்குதல்      860                  1,130   

 

அதிக அபாயமுள்ள பகுதிகள்…

                    பலாத்காரம்       சீண்டல்     கடத்தல்            கணவரால் தாக்கப்படுதல்

சென்னை       42                        33                  24                                   118

விழுப்புரம்      32                        47                 73                                      33

கோவை          11                          5                    2                                     22

மதுரை              9                        13                  18                                      51

திருச்சி              7                        13                    6                                      18

தமிழகத்தில் பாலியல் சீண்டல், கடத்தல் ஆகியவை எண்ணிக்கையில் சற்றுக் குறைந்திருந்தாலும் பெண்களின் மேல் கணவர் மற்றும் உறவினர்களின் தாக்குதல் அதிகமாகியிருக்கிறது. இது கிட்டத்தட்ட 32 சதவிகிதம் அதிகம். வழக்குப் பதியாமல், சம்பவம் நடந்ததையே மறைத்துவிடாமல் காவல்துறையும் நம்பகத்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதே நேரம், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் காவல்துறைக்கு இருக்கிறது.

பரவலாகிவரும் குடிப்பழக்கமும் போதைப் பொருள் பழக்கமும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘இப்போதெல்லாம் பெண்களுக்கும் தங்களுக்கு பாலியல் தொந்தரவோ, வன்முறையோ நிகழ்ந்தால் அதை காவல்துறை வசம் புகாராகத் தெரிவிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட ஒரு காரணம்’ என்று குறிப்பிடுகிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பதும் கணிசமாக இதே காலத்தில் உயர்ந்திருக்கிறது. ஜனவரி-ஜூலை 2013 காலக்கட்டத்தில் சென்னையில் 23 வழக்குகளில் 12 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் இன்னமும் கூட பல பாலியல் பலாத்கார சம்பவங்களும், சீண்டல் சம்பவங்களும் பதியப்படாமல் வருவது குறிப்பிடத்தக்கது. பஞ்சாயத்து மூலமாகவோ, உறவினர்களைக் கொண்டோ, பயமுறுத்தியோ பல சம்பவங்கள் தீர்த்து வைக்கப்படுகின்றன. சில இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருமணம் செய்து, சமாதானப்படுத்துவதும் நடக்கிறது.

எந்தக் காரணம் சொல்லப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவது கலக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

– மேகலா பாலசுப்ரமணியன் 

பெண் சிசுக்கொலை – புதிய புள்ளிவிவரம்!

Image 

‘கடந்த 2012ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலை நடக்கவே இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லவே இல்லை.’ இப்படி யாராவது சொன்னால் நம்புவீர்களா? வேறு வழியில்லை நம்பித்தான் ஆகவேண்டும். தரவுகளோடு அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare).

அந்தப் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு, பெண் சிசுக்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளோ, குற்றம் சாட்டப்பட்டவர்களோ, தண்டனை பெற்றவர்களோ ஒருவர் கூட தமிழ்நாட்டிலி இல்லை. அதே நேரம், மத்தியப் பிரதேசத்தில் 64, ஹரியானாவில் 28, ராஜஸ்தானில் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இந்தியா முழுக்க 210 பெண் சிசுக்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள் வெறும் எட்டுப்பேர் மட்டுமே!

தமிழ்நாட்டைப் போலவே வேறு சில மாநிலங்களிலும் கடந்த 3 ஆண்டுகளாக (2010ம் ஆண்டிலிருந்து) பெண் சிசுக்கொலை நடக்கவில்லை என்கிறது மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம். அவை, திரிபுரா, அருணாச்சலபிரதேசம், கோவா, அஸ்ஸாம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள். பெண் சிசுக்கொலை வழக்குகளில்  மத்தியப்பிரதேசத்துக்குத்தான் முதலிடம். 64 வழக்குகள்!

சமூக சேவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து வேறாக இருக்கிறது. ‘‘வழக்குப் பதிவு செய்யப்பட்டு, யார் மேலாவது குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால்தான் பெண் சிசுக்கொலை குறித்த விவரங்கள் வெளியே தெரியவரும். இந்தியாவில், வருடத்துக்கு 6 லட்சம் பெண் குழந்தைகள், பிறப்பதற்கு முன்பாகவே கருச்சிதைவுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். இதை இந்தப் புள்ளிவிவரம் விவரிக்கவில்லை. பல பெண் சிசுக்கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. இது போன்ற வழக்குகளுக்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதால் வெளியே வருவதில்லை. பிறகு எப்படி இந்த புள்ளிவிவரம் சரியானதாக இருக்க முடியும்?’’ என்கிறார்கள் சமூக சேவகர்கள். மேலும், குழந்தைகள் பாலின விகிதாசாரத்துக்கும் (Sex Ratio) பெண் சிசுக்கொலைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். 2011ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, ஹரியானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 819 பெண் குழந்தைகள். ஆனால், அந்த மாநிலத்தில் 2012ம் ஆண்டு பெண் சிசுக்கொலைக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வெறும் 28.

லேன்செட் மெடிக்கல் ஜர்னல் (Lancet Medical Journal) வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது… ‘இந்தியாவில் முதலாவதாகப் பிறக்கும் பெண் குழந்தையின் விகிதம் 1990ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 906 ஆக இருந்தது. 2005ல் 836 ஆகக் குறைந்திருக்கிறது’.

ஆக, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிறப்பது வரைக்கும் பலரும் காத்திருப்பதில்லை. கருவில் இருக்கும் பொழுதே பெண் சிசுவின் கதையை முடித்துவிடுகிறார்கள்! வழிமுறை ஒன்றுதான்… ஆயுதம்தான் வேறு.

பெண் சிசுக்கொலையை கருவிலேயே அழிப்பதைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஏற்கனவே, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சொல்லக்கூடாது என்கிற விதி இருக்கிறது. இருந்தாலும், ஸ்கேன் சென்டர்களில் இதைக் கடுமையாக்க வேண்டும். அரசு தீவிரமாக இதை நடைமுறைப்படுத்தி, ஸ்கேன் சென்டர்களை கண்காணித்தால் கருவில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது குறைய வாய்ப்பிருக்கிறது, ஒருவேளை!

– ஆனந்த பாரதி

இணைப்பு: மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் 

***