தர்மபுரி மாவட்டம்… பாப்பாரப்பட்டி… ஒரு போலி மருத்துவரைக் கைது செய்தது காவல்துறை. இது நடந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை. அவர் பெயர் ரேணுகா. அதே பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த வனிதா ஒரு ஸ்கேன் சென்டரில், கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனப் பார்த்திருக்கிறார். பெண் குழந்தை என்று தெரிந்தது. அந்தக் கருவைக் கலைக்க வனிதா முடிவு செய்ய, கலைத்திருக்கிறார் ரேணுகா. ரேணுகா, வெறும் பத்தாம் வகுப்பு வரைதான் படித்தவர். சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்த தகவல்.
இதன் தொடர்ச்சியாக இன்னொரு நிகழ்வு நடந்திருக்கிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருக்கும் ஒரு ஸ்கேன் சென்டரில் ரெய்டு நடத்தியது காவல்துறையின் சிறப்புப் பிரிவு. ஸ்கேன் செய்து, கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதைச் சொன்னதாக குற்றம் சுமத்தப்பட்டு ஸ்கேன் சென்டரின் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் ஸ்கேன் சென்டருக்கும் போலி மருத்துவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, கருவில் பெண் சிசு இருப்பது தெரிந்தால் சிலர் அதைக் கலைக்க விரும்புவார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பது போலி மருத்துவர்களின் வேலை. ரேணுகா கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் திருப்பத்தூர் ஸ்கேன் சென்டரில் ரெய்டு நடந்திருக்கிறது. உரிமையாளர் சுகுமாரும், உதவியாக இருந்த மருத்துவர் உஷாவும் தலைமறைவு ஆகிவிட்டார்கள். அவர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது காவல்துறை. இன்னும் பல ஸ்கேன் சென்டர்களில் சட்டத்துக்குப் புறம்பாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைச் சொல்வதாகவும், கருக்கலைப்புக்கு மறைமுகமாக உதவுவதாகவும் விசாரணையில் சொல்லியிருக்கிறார் ரேணுகா.
இந்தக் கொடுமையான காரியம் தர்மபுரியில் மட்டும் நடக்கவில்லை. வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களிலும் நடப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது காவல்துறை.
ஸ்கேன் சென்டருக்கு வரும் தம்பதியை உற்று கவனிப்பார்கள். அவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கிறதா என்று விசாரிப்பார்கள். இன்னொரு பெண் குழந்தையை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாரா என்பதை பேசிப் பேசித் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் வேண்டாம் என்கிற மனநிலைக்கு வரும்போது, கருக்கலைப்பு செய்ய வழிகாட்டுவார்கள். இது பல ஸ்கேன் சென்டர்களில் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் செயல்.
இந்த ரெய்டு நடவடிக்கை தொடரும் என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை காவல்துறை. ஸ்கேன் சென்டர்களை கூர்மையாக கண்காணிக்கச் சொல்லி சுகாதாரத்துறைக்கு கடிதமும் எழுதியிருக்கிறது. பெண் சிசுக்களுக்கு நீதி கிடைத்தால் சரி.
– ஆனந்த பாரதி
தொடர்புடைய பதிவு…