இறைவி

iraivi2ஒரு பொக்கே!

நல்லவர்களைப் பார்ப்பது ஓட்டல் சாம்பாரில் காயைத் தேடுவதுபோல கஷ்டமான வேலையாகிவிட்டது. இப்படி ஒரு காலத்திலும் யாராவது நல்லது செய்தால் அவர்களைத் தேடிப் பிடித்தாவது பாராட்டுவதுதான் அவர்களுக்கு இன்னும் ஊக்கமாகவும், மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கும்.

பீப் ஸாங் போன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தப் பெரும்பாலானோர் தவறுவதில்லை. ஆனால்… நல்லது நடக்கும்போது மட்டும் பாராட்ட மறந்துவிடுகிறோம்… அல்லது அதை ரசித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம்.

ஆமாம்…
‘இறைவி’ கார்த்திக் சுப்புராஜ் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்..

iraivi3

படத்தின் நிறைகுறைகளை விமர்சிப்பதற்கெல்லாம் பல சினிமா நிபுணர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவருக்கு ரெட் கார்ட் போட்டது பற்றி ஆராயவும் பலர் இருக்கிறார்கள் என்பதால் நாம் அதைப் பேச வேண்டியதில்லை.

இதில், நாம் குறிப்பிட விரும்பும் விஷயம்… சமீபகாலத்தில் பெண்களை அவமானப்படுத்தாத, அசிங்கப்படுத்தாத படம் எதுவும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலானவை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ வகையறாவாக இருப்பதாகத்தான் ஞாபகம். இதற்காக வரலாறை எல்லாம் புரட்ட வேண்டியது இல்லை. ‘இறைவி’யுடன் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் கூட பெண்களைத் திட்டி ஒரு பாடல்… பல டபுள் மீனிங் வசனங்கள்… இன்னும் ஓர் ஆபாச பாடல்.. ‘புஷ்பா புருஷன்’ என்று அருவருப்பான கேரக்டர் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது.

ஒரு படத்தை ஆரம்பிக்குபோதே, ‘ஒரு டாஸ்மாக் ஸாங் சார்… அதுல பொம்பளைங்களத் திட்டுறோம்… கானா பாலாகிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்’ என்றுதான் டிஸ்கஷனே நடத்துவார்கள் போல. அந்த அளவுக்கு சமீபகாலத்தில் பெண்களை அசிங்கப்படுத்தாத பாடலோ படமோ இல்லை என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம்.

iraivi1

இந்த மாதிரி ஒரு ஆபாச சூழலில், பெண்களைத் திட்டாத படம் என்பதற்காகவே ‘இறைவி’க்கு பொக்கே தரலாம். நம்முடைய அம்மா, சகோதரி, தோழி என தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பெண்களின் துயரங்களைப் பேசியிருப்பது இதுவரை தமிழ்சினிமாவில் நாம் பார்த்திராத ஓர் அதிசயம். அதிலும் பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வெகுஜனப் படம் என்பது எல்லா இறைவிகளும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இத்தனைக்கும் அவர் டாக்குமெண்ட்ரி சினிமா எடுக்கிற ஆள் இல்லை. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என இரண்டு ப்ளாக்பஸ்டர்கள் கொடுத்த ஒரு வெகுஜன இயக்குநர். மூன்றாவது படமான ‘இறைவி’யில் மிகவும் எதிர்பார்க்க வைத்த இயக்குநர். தன்னுடைய சினிமா மார்க்கெட் ஸ்டிராங்காக இருந்தும் இதுபோல பெண்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஒரு படம் எடுத்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய பொக்கேவே தரலாம்.

iraivi4

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் அதிதீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். வாட்ஸ் அப் ப்ரொஃபைலிலேயே தன்னுடைய போட்டோவுக்குப் பதிலாக ரஜினி போட்டோவை வைத்திருக்கும் தீவிரவாதி அவர்.

அதனால், ‘கபாலி’ ஸ்டைலிலேயே கடைசியாக ஒரு வார்த்தை…
மகிழ்ச்சி!

  • ஜி.ஸ்ரீவித்யா

iraivi5