இன்ஸ்பெக்டர் என்ன செய்திருப்பார்?
மையாஸா! (Myassa) அதுதான் அந்தப் பெண்ணின் பெயர். பகல் முழுக்க வேலை பார்த்தக் களைப்பு. அலுப்புடன் வீடு திரும்புகிறாள். அன்று அவளுக்கு ஒரு பிரச்னை. அதற்குக் காரணம் ஓர் ஆண். அவள் குடியிருக்கும் அபார்ட்மென்ட் பகுதியில் வைத்து அவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யத் துணிகிறான். அவள் எப்படியெல்லாமோ போராடுகிறாள். ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போய்விடுகிறது. அவனுக்கு ஆண்மைக் குறைபாடா அல்லது வேறு பிரச்னையா என்று தெரியவில்லை. பலாத்காரம் நிகழவில்லை. அவன் அவளை விட்டுவிடுகிறான். அடுத்த நாள் மையாஸாவிடம் இருந்தது இரு வாய்ப்புகள். ஒன்று, அவள் காவல்நிலையத்துக்குப் போவது. அங்கே அவளுக்கு நடந்த பலாத்கார நிகழ்வை புகார் கொடுப்பது. இரண்டாவது வாய்ப்பு… அவள் மேல் பாலியல் பலாத்கார முயற்சி நடந்ததை அப்படியே மறந்துவிடுவது. அவள் என்ன செய்வாள்?
எங்கோ, எப்போதோ நடந்திருந்தாலும் அன்றாடம் பல பெண்கள் உலகம் முழுக்க எதிர்கொள்கிற பிரச்னை. இந்த நிகழ்வை ‘லிம்ப்லி, (சாஃப்ட்லி) ஒன் சாட்டர்டே மார்னிங்’ என்ற குறும்படமாகப் படைத்திருக்கிறார் அல்ஜீரிய இயக்குநர் சோஃபியா ஜாமா (Sofia Djama). ‘‘இது ஆண்களுக்கு எதிரான படம் அல்ல. அல்ஜீரியாவில் இளைய தலைமுறை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் அடையாளம். இங்கே இருக்கும் தோல்வி அடைந்த, இயந்திரத்தனமான ஓர் ஒழுங்குமுறையை வெளிக்கொண்டு வர நான் முயற்சித்திருக்கிறேன். இங்கே இளைஞர்களுக்கு வேலை இல்லை. சுதந்திரமாக தங்கள் உணர்வுகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத் தேவையான களம் இல்லை. எல்லோரும் வீட்டில் பெற்றோருடன் வசிக்க நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதன் விளைவாக, ஏதாவது ஒரு அடையாளம் தேவை என்பதற்காகவே குடும்பம், பாரம்பரியம், பழக்க வழக்கம் என்று பழமையில் ஊறித் திளைத்துவிடுகிறார்கள். இங்கே அரசு, இளைஞர்களை கவனிப்பதில்லை. அதனாலேயே அவர்களுக்குள் வெறுப்பும் வன்முறையும் தொற்றிக் கொண்டு விடுகிறது. இதைத்தான் என் படத்தில் வெளிக் கொண்டு வர நினைத்தேன். என்னைப் பொறுத்தவரை பலாத்காரத்துக்கு ஆளான பெண், பலாத்காரம் செய்த ஆண் இருவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான்’’. தெளிவாக ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜாமா.
ஜாமா அடிப்படையில் எழுத்தாளர், இலக்கியவாதி. அல்ஜீரியாவில் இருக்கும் ஓரனில் (Oran) 1979, பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். பெஜய்யா (Bejaia) என்கிற ஊரில் வளர்ந்தார். பெஜய்யா பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் இலக்கியம் படித்தார். முதுகலைப் படிப்புக்காக அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீர்ஸுக்கு வந்தார். அங்கே இருக்கும் ‘பௌசாரியா பல்கலைக்கழகத்தில்’ (Bouzareau) சேர்ந்தார். அல்ஜீயர்ஸுக்கு வந்த பிறகு அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகமானது. சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். தலைநகர் வாழ்க்கை அவரை மிகவும் பாதித்தது. அதை மையமாக வைத்தே ஒரு சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட முடிவு செய்தார். எழுதினார். ‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ என்கிற தலைப்பும் வைத்துவிட்டார். ‘பர்ஸாக்’ என்கிற பதிப்பகத்தின் வெளியீடாக அது வர இருந்தது. என்ன காரணமோ, சிறுகதைத் தொகுப்பு வெளியாகவில்லை.
வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஒரு அட்வர்டைசிங் ஏஜென்சி நிறுவனத்தில் அக்கவுன்ட் எக்ஸிகியூட்டிவாகச் சேர்ந்தார் ஜாமா. சிறிது காலம் கணக்குப் பார்க்கும் வேலை பார்த்ததற்குப் பிறகு அது பிடிக்காமல் அந்த நிறுவனத்திலேயே ‘திட்டமிடுதல் துறை’க்கு (Planning Department) மாறினார். அதுவும் பிடிக்காமல் ‘படைப்பாற்றல் துறை’யில் (Creative Department) காப்பி எடிட்டராக சேர்ந்தார். செக்கு மாடு போல காலையில் வேலைக்குப் போவது, மாலையில் வீட்டுக்குத் திரும்புவது என்கிற இயந்திரத்தனமான வாழ்க்கை ஜாமாவுக்குப் பிடிக்கவில்லை. தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை எந்த வழியிலாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார். ‘லே டெம்ப்ஸ்’ (LE TEMPS) என்ற வார இதழில் ஃப்ரீலேன்ஸ் எழுத்தாளராக நிறைய எழுதினார். இணையதளத்திலும், வேறு சில பத்திரிகைகளிலும் விமர்சனங்கள் எழுதினார். ‘க்ரைசாலைடு’ (CHRYSALIDE) என்கிற கலாசார அமைப்பில் இணைந்து சினிமா, நாடகம் என்று பல தளங்களில் செயல்பட்டார். ஜாமா இயக்கிய முதல் படம் ‘தி ஹண்ட்ரட் ஸ்டெப்ஸ் ஆஃப் மிஸ்டர் எக்ஸ்’.
அல்ஜீரியாவில் சட்டத்துக்கும் சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி அதிகம் என்று நினைத்தார் ஜாமா. ‘‘ஒருவேளை மையாஸா காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். இன்ஸ்பெக்டர் என்ன செய்திருப்பார்? சிரித்திருப்பார்’’ என்கிறார் ஜாமா. ‘‘ஒரு வகையில் பார்த்தால் நான் இங்கே மிகவும் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். நான் ஸ்கர்ட் அணியலாம், பீச்சுக்குப் போகலாம். சட்டம் என்னைத் தடுக்காது. ரமலான் சமயத்தில் நான் நோன்பு இருக்கவில்லையா? சட்டம் எனக்கு உதவி செய்யாது. சமூகப் பார்வையில் இது மன்னிக்க முடியாத செயல்’’.
‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ குறும்படம் மரியாதைக்குரிய இரண்டு விருதுகளை ஜாமாவுக்குப் பெற்றுத் தந்தது. ‘க்ளெர்மான்ட்-ஃபெர்ராண்ட் சர்வதேச குறும்பட விழா’ (Clermont-Ferrand international short film festival) உலக குறும்பட விழாக்களில் மிக முக்கியமான ஒன்று. அதில் கலந்து கொண்டு இரண்டு பரிசுகளை வென்றது ஜாமாவின் குறும்படம். சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன அவமானங்களையும் ஏமாற்றங்களையும் மிக அழகாகப் பதிவு செய்ததுதான் ஜாமாவின் குறும்படம் வெற்றி பெற்றதற்குக் காரணம்.
அல்ஜீரியா திரைப்படத்துறை இன்னமும் குழந்தையாகவே இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஜாமா. அவருடைய சொந்த மண்ணில் திரைப்படப்பள்ளிகள் இல்லை. திரைப்படம் எடுக்கப் போதுமான வசதிகள் இல்லை. அதன் காரணமாகவே அல்ஜீரிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து படம் எடுக்க முடியாத சூழ்நிலை. ‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ திரைப்படத்தை ஐரோப்பிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன், ஐரோப்பிய நிதி உதவியுடன்தான் தயாரிக்க முடிந்தது. அப்படி இருக்கும் போது அவருடைய குறும்படம் அல்ஜீரியாவில் எப்படி வரவேற்கப்படும் என்பது அவருடைய கேள்வி.
ஆனால், ‘அல்ஜீரியன் பிரெஸ் சர்வீஸ்’ என்கிற பத்திரிகையாளர்கள் சங்கம் அவருக்கு உதவியது. அவருடைய படம் ரிலீசாவதை வெகு சிறப்பாக செய்திகளில் இடம்பெறச் செய்தது. எப்படியோ சென்சாரின் கைகளில் போய் மீண்டு வந்தது அவருடைய குறும்படம். இப்போது பாரீஸில் வசிக்கிறார் ஜாமா. எழுதுவதிலும் அடுத்த பட முயற்சியிலும் தீவிரமாக இருக்கிறார். அவருடைய ‘எ கிளாஸ் டூ மச்’ என்ற படைப்பை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
தனக்கு சர்வதேச அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஜாமா. ‘‘நான் முழுக்க முழுக்க ஆப்பிரிக்க குடிமகள் அதே நேரம் மக்ரேபியும் (Maghrebi) கூட. எனக்கு அரபு மற்றும் இஸ்லாம் இரண்டு பாதிப்பும் இருக்கிறது. அதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்’’ என்கிறார்.
அல்ஜீரியா, தன் சொந்த நாட்டு திறமைசாலிகளுக்குக் கூட உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை. அந்த வருத்தம் மிக அதிகமாக ஜாமாவுக்கு இருக்கிறது. 2012ல் ஒலிம்பிக் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்றவர் அல்ஜீரிய தடகள வீர தவுஃபிக் மக்லோஃப் (Taoufik Maklouf). அந்த ஓட்டப் பந்தய நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சிகளில்கூட ஒளிபரப்பப்படவில்லை. அவர் நாடு அவருக்கு எந்தவிதத்திலும் ஆதரவு தரவில்லை.
ஜாமா இப்படிக் குறிப்பிடுகிறார்… ‘‘அல்ஜீரியாவில் கதாநாயகர்கள் இல்லை. தியாகிகள்தான் இருக்கிறார்கள்’’
– பாலு சத்யா
Sofia Djama
Born in Oran (Algeria) on the 10th of February 1979. Raised in Bejaia, after two years at the Department of Literature of the University of Bejaia, in 2000 she moves to Algiers to finish her master at the University of Bouzarea.
Limply, a Saturday morning