நூல் அறிமுகம் – 10 – கவர்னரின் ஹெலிகாப்டர்

kavarnarin helicopter

து உரையாடலோ, எழுத்தோ… சுற்றி வளைத்து, நீட்டி முழக்கிச் சொல்லாமல் நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்வதில் முக்கியமான சிரமம் ஒன்று இருக்கிறது. கேட்பவருக்கோ, படிப்பவருக்கோ அந்த நேரடித் தன்மை அல்லது எளிமை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவை கவனிக்கப்படாமல் கடந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. எந்த மொழியாக இருந்தாலும், இலக்கியத்தின் எந்த வடிவமாக இருந்தாலும் ஒரு படைப்பு எளிமையாக, அதி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் போதுதான் மக்களைச் சென்றடைகிறது… எழுதிய படைப்பாளனும் மக்களால் கொண்டாடப்படுகிறான். அந்தக் கலை இந்நூலாசிரியர் எஸ்.கே.பி. கருணாவுக்கு இயல்பாகக் கை வந்திருக்கிறது.

‘ஒரு கர்பிணிக்கு பேருந்தில் தன் இருக்கையை விட்டுக் கொடுத்தது’, ‘விவசாயியின் விளைந்த நிலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பிரம்மாண்ட பைப் விழுந்தது’, ‘படிக்கிற காலத்தில் சைக்கிள் தொலைந்து போனது’, ‘ஆஸ்திரேலியாவுக்குப் போய் திமிங்கிலத்தைக் கடலில் பார்த்தது’… இப்படி இந்நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா கட்டுரைகளையுமே ஒற்றை வரி கருக்களுக்குள் சுருக்கிவிடலாம். அதையும் தாண்டி அந்தச் சம்பவங்கள் தரும் தரிசனம், நாம் அருகில் இருந்து பார்ப்பது போல, நமக்கே நடந்தது போல உணர வைக்கும் சொல்லாடல் தன்மை, நிகழ்வுகள் ஆகியவையே இத் தொகுப்பை மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கின்றன.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா கட்டுரைகளும் கடினமான கட்டுரைத்தன்மையைக் கொண்டிராமல், புனைவுக்கான வடிவத்தைக் கொண்டிருப்பது இதன் மற்றொரு சிறப்பு. உண்மைச் சம்பவங்களை அவற்றுக்கான அழுத்தம் குறையாமல் ஆசிரியர் தன் மனவோட்டத்தோடு கூடிய அழகு தமிழில், வாசகனை வெகு எளிதாக ஈர்த்துவிடும் மொழியில் முன் வைக்கிறார். படிக்கப் படிக்க பக்கங்கள் வேக வேகமாகப் புரள்கின்றன. சிலோனிலிருந்து (இலங்கை) திருவண்ணாமலைக்கு வந்த ‘சண்டைக்காரர்கள்’, ‘சைக்கிள் டாக்டர்’, ‘பிரியாணிக்காக பின்னால் சுற்றும் ஹெட்கான்ஸ்டபிள்’, ‘எழுத்தாளர் சுஜாதா’, ‘கவர்னரின் பைலட்’, ‘புரொபசர் பசவராஜ்’, ‘கையில் கசங்கிய பத்து ரூபாய் நோட்டை அழுத்திவிட்டுப் போன மூதாட்டி’… என நூலைப் படித்து முடித்த பிறகும் ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். உச்சக்கட்டமாக ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்று இரு அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள்… ஒரு சாமானியனுக்கும் அரசு இயந்திரத்துக்கும் இடையிலான இடைவெளியை அப்பட்டமாகாச் சொல்லிச் செல்கின்றன.

எளிமைதான் தன் எழுத்தின் அடிநாதம் என்றாலும், எஸ்.கே.பி.கருணா, வாழ்க்கையின் யதார்த்தமான பக்கங்களைச் சொல்லும் போது வெகு அநாயசமாக சில வரிகளைக் கையாள்கிறார். உதாரணமாக, ‘ஆகிஸிடெண்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், எனக்கு நெஞ்சமெல்லாம் பரவசம் வந்து நிறைத்தது’. இந்த வரியைப் படிக்கும் போது அதிர்வைக் கொடுத்தாலும், ‘மதுரை வீரன்’ என்கிற ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது அதற்கான நிறைவு நமக்குக் கிடைத்து விடுகிறது. ‘அது எப்படி மனைவியும், மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே நம்முடைய வீடுகள் வாழுமிடம் என்பதிலிருந்து வெறுமனே வசிப்பிடமாக மாறி விடுகிறது?’ என்ற வரி குடும்பஸ்தர்கள் அனைவருக்குமாக எழுதப்பட்ட பொது வரியாக உருக்கொள்கிறது.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் நம்மை நாமே சுயமாக சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள, அவற்றுக்கான விடைகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அலசி ஆராய, ஒரு புதிய யதார்த்தத்தை அறிந்துகொள்ளத் தூண்டுபவை. யாரோ ஒருவர், தன் மன ஓட்டத்தை தன் பார்வையில் முன் வைத்த கட்டுரைகள் என ஒதுக்கித் தள்ள முடியாதவை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு புதிய படிப்பினை, அனுபவம் வாசகருக்குக் கிடைக்கும் என்று உத்தரவாதமளிக்கும் தொகுப்பு இந்நூல். சரளமான, சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தரும் ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்ற இந்நூல் எஸ்.கே.பி. கருணாவுக்கு பரந்த இலக்கியப் பரப்பில் அவர் எடுத்து வைத்த முதல் அடி என்றே தோன்றுகிறது. அவர் புனைவும் கட்டுரைகளுமாக நிறைய எழுத வேண்டும்… அவற்றை எதிர்பார்த்து, வாசித்துத் தீர்க்கும் பேரார்வத்துடன் நிறைய வாசகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம்.

  • பாலு சத்யா

நூல்: கவர்னரின் ஹெலிகாப்டர்

ஆசிரியர்: எஸ்.கே.பி.கருணா

வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை – 606 601.

தொலைபேசி: 9445870995, 04175-251468.

விலை: ரூ.200/-.

பிற நூல்கள்…

நூல் அறிமுகம் – 1 

நூல் அறிமுகம் – 2

நூல் அறிமுகம் – 3

நூல் அறிமுகம் – 4

நூல் அறிமுகம் – 5

நூல் அறிமுகம் – 6 

நூல் அறிமுகம் – 7

நூல் அறிமுகம் – 8

நூல் அறிமுகம் – 9

நூல் அறிமுகம் – 1

சாகசக்காரி பற்றியவை 

Image

னிதநேயப் பண்புகளும் முற்போக்கான சிந்தனைகளும் அவற்றுக்கான செயற்பாடுகளும் மிகுந்த கவிஞர் தான்யா புலம் பெயர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருபவர். தான்யாவின் புதிய கவிதைத் தொகுப்பு ‘சாகசக்காரி பற்றியவை’. 2009ல் வெளி வந்த ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண்கள் கவிதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர் இவர்.

புலம்பெயர் வாழ்வில் புலம்பெயர்ந்த மனிதர்கள் எதிர்கொள்ளும் தாய்நிலம் பிரிந்த ஏக்கம், கலாசார-நிற வேறுபாடு, மண்ணுக்குரியவர்களால் அந்நியராக மதிக்கப்படுகின்ற நிலை, புலம்பெயர்ந்து வாழும் நிலத்தில் மனதோடு ஒட்டிக் கொள்ளாத வாழ்வு, இன்னபிற நிலைகளைக் கடந்தும், உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மனிதரின் நல்வாழ்வும் – தமிழ்கூறும் நல்லுலகத்தின் வளர்ச்சியும் உயர்ச்சியும் நாடி நிற்கின்ற சமூக அக்கறையும் ஆண்-பெண், உயர்வு-தாழ்வு கலைந்த சமநிலை வேண்டுகின்ற சமூக மாற்றமும், ஆளுமையும், போர்க்குணமும் இயல்பாகவே உள்ள பலநூறு ஈழப் பெண்களில் ஒருவராவார் கவிஞர் தான்யா.

புத்தாயிரத்திலிருந்து எழுதி வரும் கவிஞர் தான்யா தனது கவிதைகளில் மனிதர்களுக்குச் சில வேளைகளில் தோன்றக்கூடிய சூழலோடும், சூழ்நிலைகளோடும் ஒன்றிப் போகாத, ‘‘கூட்டத்தோடு இருக்கும் போது தனிமையில் இருப்பதாகவும், தனிமையில் இருக்கும் போது கூட்டத்தோடு இருப்பதாகவும்’’ எண்ணக் கூடிய மனப் பிறழ்வு நிலையை பல்வேறு இடங்களில் பதிவு செய்கிறார். உலகில் சரிபாதியாக இருக்கின்ற, பேராற்றல் கொண்ட பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றுகிறது, தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்ட்த்துக்குள் சுற்ற வைக்கிறது. அத்தகைய சூழ்நிலைகளிலிருந்து வெளியே வர எத்தனிக்கும் போராடிக் கொண்டிருக்கும் ‘சாகசக்காரி(கள்) பற்றியவை’ இக்கவிதைகள். நன்னல வாழ்வை நோக்கிய முன்னகர்த்தலாக, வாசிப்பில் பெரிதுவக்கும் இந்நூலை ‘வடலி வெளியீடு’ பதிப்பித்துள்ளது.

தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் சில…

மூச்சுக் காற்றுக் கூட

எட்டாத தொலைவில்

வாழ்வு.

***

திகார சமனற்ற வாழ்வை

ஏற்றுக் கொண்டு

நினைவில் முட்டி

மோதித் தெறிக்கும்

இயலாமையின் கனத்தோடு

நாட்கள் நகரும்

 

உள்ளிடும் வார்த்தைகளின்

அழுத்தத்தில்

மொழி இழந்த மௌனம்

 

காலையும் மாலையும்

எழுதலும் மறைதலுமாய்

சூரியன்

 

விருப்பு வெறுப்பு தன்னம்பிக்கை

இவற்றை

பற்ற விழையும்

ஒரு சிறுமிக்கு

 

ஏது இயல்பு

***

ங்கிருக்கிறாய் என் அன்பே

எரிந்துபோன கட்டிடங்களிலா

தொலைந்துபோன நாகரிகங்களிலா

எங்கு உன் வாழ்வு

மறைந்து கிடக்கிறது

ஓயாது அலையும் கடலிடமும்

ஈரக் காற்றிடமும்

மறக்க முடியாத உன் நினைவைச் சொன்னேன்

அவை உன்னையும்

உன் தேச(க)த்தின் நினைவையும்

அடித்து வந்தன.

***

த்தனை குழந்தைகள்

பதிலற்ற கேள்வியாய்

நூறாயிரம் கால்களுடன்

என்னை வந்தடைகின்றது

ஓசையின்றி வரும் எரிச்சலை

என்னுள் அழித்துக் கொள்கின்றேன்

வெளியில்

மத்த்தின் பெயரால்

மனிதாபிமானமாய்

‘‘குழந்தைகளைக் கொல்லாதீர்’’

என்கின்ற கோசங்கள்.

பிரசவங்கள் பற்றி

எடுத்தெறிந்த கர்ப்பப்பை பற்றி

கருச்சிதைவு பற்றி,

கர்ப்பப்பை அற்றவர்கள் பற்றி

கருக்கலைப்பு கர்ப்பத்தடை பற்றிப்

புரியாதவர்கள்

எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்

இன்னும் பிரசவங்களை

***

வெளியீடு: வடலி வெளியீடு

விலை: ரூ.50/-.

முகவரி: 8A, அழகிரி நகர் 4வது தெரு,

லட்சுமிபுரம்,

வடபழனி, சென்னை – 600 026.

மின்னஞ்சல்: sales.vadaly@gmail.com

இணையத்தளம்: http://www.vadaly.com

***

விற்பனை மற்றும் தொடர்புகளுக்கு…

தமிழ்நாடு: +91 – 97892 34295

கனடா: +1 64789 63036

***

நூல் பற்றிப் பகிர…

sakasakkari@gmail.com

***

 

தி.க.சி., சுடலை மாடன் தெரு, திருநெல்வேலி: ஓர் இலக்கிய முகவரி

Image

காகவி பாரதியைத் தன் ஆதர்ச குருவாக வரித்துக் கொண்டு இலக்கிய வாழ்வைத் தொடங்கியவர் மதிப்பிற்குரிய இலக்கிய ஆளுமை தி.க.சி என்கிற தி.க.சிவசங்கரன். இதனாலும் அவர் மீது என் பிரியம் அளவு கடந்திருக்கலாம். மகாகவி பாரதி என் மானசீக குரு. இளம் வயதில் கனவுகளில் மகாகவியுடன் வாழ்ந்திருக்கிறேன். அதே கருப்புக் கோட்டுடன் காட்சியளித்திருக்கிறான்.

கையெழுத்துப் பிரதியிலேயே ‘ஆயுதம்’ என்கிற எனது கவிதைத் தொகுப்பு முதல் பரிசுக்குத் தேர்வாகியிருந்தது. கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொள்ள நண்பர் ஜெயராமனுடன் எட்டயபுரம் போயிருந்தேன். மகாகவியின் கருவறை எட்டயபுரம் ஆயிற்றே! அந்த மண்ணில் முதல் விருது பெறுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மகாகவியின் வீட்டில் நாங்கள் இருவரும் மண்ணில் விழுந்து புரண்டோம்.

எட்டயபுரத்துக்கு அடுத்து திருநெல்வேலிதானே!

விருதுப் பட்டயங்களைச் சுமந்தபடியே திருநெல்வேலி போனோம். திருநெல்வேலி என்றால் பலருக்கும் அல்வா. உங்களைப் போலவே எங்களுக்கும் திருநெல்வேலி என்றால் தி.க.சிவசங்கரன். நாங்கள் அனைவரும் வீட்டுக்குப் போயிருந்தோம். மேசை நிறைய புத்தகங்கள். ஒரு ஓரத்தில் தொலைபேசி என்பதாக ஞாபகம். வெள்ளை நிறம் என்று நினைக்கிறேன். எதிரில் ஒரு நாற்காலி. நாற்காலியின் மூலையில் தி.க.சி. அண்ணன் வண்ணதாசன் எங்கள் வருகையைத் தந்தைக்குச் சொல்கிறார். ஒரு குழந்தையைப் போல குதூகலமாக வரவேற்கிறார் தி.க.சி. அப்போது எனக்குத் தோன்றியது இதுதான்… இந்த இமயமலைக்குள் எத்தனைக் கூழாங்கற்கள்!

‘கல்கியிலும் வண்ணக்கதிரிலும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்… தொடர்ந்து எழுதுங்கள்’. முதுகு இல்லாதவர்களைக் கூடத் தட்டிக்கொடுக்க அவரால்தான் முடியும்!

அவரைப் பற்றிப் பேச ஆரம்பிப்போம்… அவர் நம்மைப் பற்றியும் இலக்கிய உலகத்தைப் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பார்.

அப்போது அவரது துணைவியார் உடல்நலமின்றி இருந்தார். அண்ணன் வண்ணதாசன் அம்மாவுடன் இருக்க, தி.க.சி இடையில் போய்ப் பார்த்துவிட்டு வந்து மறுபடியும் தன் மனைவியின் உடல்நிலை, இலக்கிய உலகத்தின் சுகாதாரம், நாம் பணியாற்றவேண்டிய திசைவழி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.

வண்ணதாசன் எங்களைப்பற்றித் தன் தந்தையிடம் சொல்கிற விதம் ரொம்ப நன்றாயிருக்கும். முதலில் சொல்கிறபோது காதில் விழுந்திருக்காது… அல்லது கவனம் சிதறி இருக்கும். அடுத்துக் கொஞ்சம் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்கிற போது வண்ணதாசனின் முகபாவமும் வார்த்தைகள் வெளிவந்த பிறகு மௌனம் ஆகும் உதடுகளும் பார்க்கப் பரவசமாக இருக்கும். அப்போதும் ஒரு தீவிர அரசியல்வாதியாகவும் இலக்கியவாதியாகவும் பேசிக்கொண்டே இருப்பார் தி.க.சி.

அடுத்து, எங்கள் இலக்கு பத்தமடை தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பார்ப்பதாக இருந்தது. தி.க.சியிடம் சொன்னோம். உடனே ச.தமிழ்ச்செல்வன் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அத்தோடு தமிழ்ச்செல்வன், அவர் சார்ந்திருக்கும் இலக்கிய அமைப்பு, அதன் செயல்பாடு என்று அவர் பேச்சு விரிய ஆரம்பித்துவிட்டது.
எழுத்தாளர் சங்க மாநாடுகளுக்குத் தவறாமல் வருவார் தி.க.சி. ஓரிரு நிமிடங்கள்தான் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்றாலும் உணர்வு பூர்வமாகப் பேசுவார். உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை சொல்லியபடியே இருப்பார்.

ஒருமுறை தினமணிக் கதிரில் ‘இலக்கியப் பஞ்ச சீலம்’ என்கிற கருத்தாக்கம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார். தலித்தியம், தமிழியம், பெண்ணியம், சூழலியம், மார்க்சியம் என்று குறிப்பிட்டு இலக்கியத்தின் நோக்கம் இவற்றைச் சுற்றி இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அதற்கு இலக்கியரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதினேன். சென்னையில் “இலக்கியப் பஞ்ச சீலம்” என்ற தலைப்பில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். அரங்கம் கொள்ளாதக் கூட்டம். என்னைப் பொறுத்தவரை இன்னும் அந்தக் கூட்டம் முடிந்ததாகத் தெரியவில்லை. இப்போதும் அந்த அரங்கில் தி.க.சி. பேசிக் கொண்டிருக்கிறார். அதுதான் தி.க.சி.

இத்தனை பெரிய கூட்டம் இருந்தும் வெறிச்சோடிக் கிடக்கிறது சுடலை மாடன் தெரு.

– நா.வே.அருள்
Image courtesy: nanjilnadan.com