செய்திக்குப் பின்னே… பிட்டுக்கு வேலை கிடைத்த கதை!

 

open-chitting-in-bihar

– ஷர்மிளா ராஜசேகர்

‘பீகாரில் பத்தாம் வகுப்புத் தேர்வின் போது பிள்ளைகளுக்கு பிட் கொடுத்த பெற்றோர்’… இச்செய்தியைப் படித்ததும் படம் பார்த்ததும் ஒரு ஜாலியான விஷயமாகவே முடிந்து போனது!

இதற்குப் பின் மறைந்துள்ள பாதிப்புகள்..?  

 

காலைல இருந்து நைட் வரைக்கும் நாள் முழுதும் ‘படி,படி,படி’ன்னு நம்ம ஊர் பிள்ளைங்க… இங்கே எக்ஸாம் எழுத எவ்வளவு ஸ்ட்ரிக்ட்…  படிக்கறதுக்காக எத்தன கோச்சிங் சென்டர் போய் நாள் முழுதும் புக் வச்சே காலத்தை தள்ளின எவ்வளவோ பேர்!

ஆனால், ஒண்ணுமே இல்லாம காப்பி அடிச்சு பாஸ் பண்ண வச்சு ஈசியா கவர்ன்மென்ட் ஜாப்ல செட் பண்ணி அனுப்பி வச்சுருக்கு அந்த கவர்ன்மென்ட்…

எவ்வளவோ படிச்சும் அறிவிருந்தும் சரியான வேலைக்கு போக முடியாம நிறைய பேரு பிரைவேட் கம்பனியிலேயும் வெளிநாட்டுக்கும் பிழைப்புக்காக ஓடிட்டு இருக்காங்க.

‘பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்ற செய்தி… வெளியில தெரிந்து போனதற்காக வந்த அறிக்கையே தவிர அவர்களுக்கு தெரியாத நிகழ்வு இல்லை. இதை சாதாரணமான விஷயமாக விட்டுவிட முடியுமா? முறையாக படித்தவர்களுக்கு வந்திருக்க வேண்டிய நிறைய வாய்ப்புகள்  களவாடப்பட்டிருக்கிறதுதானே?

இதைப் பற்றி முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் அறிவிப்பு… ‘என் ஆட்சியாக இருந்திருந்தால் பிள்ளைகளுக்கு இவ்வளவு கடினமாக இருக்காது. புக் கொடுத்தே அனுப்பி இருப்பேன்.’ (அவர் காலத்தில் நடந்ததை வாக்குமூலமாக சொல்லியிருக்கிறார்!)

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது நிறைய பீகாரீஸ் ரயில்வே துறையில் வேலையில் அமர்த்தப்பட்டனர் என்பது நினைவு கூறத்தக்கது.

எவ்ளோ பாசமான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்… புக் கொடுத்து பாஸ் பண்ண வச்சு எல்லா கவர்ன்மென்ட் ஆபீஸுக்கும் வேலைக்கு அனுப்பி பார்த்துக்கிட்டு இருக்காங்க… அங்கே மக்களுக்காக அரசு.

இங்கே உள்ள சட்ட திட்டம் எவ்வளவுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ‘சரியாக எழுதலைன்னா மார்க் வரலைன்னா தற்கொலை பண்ணிட்டு செத்துடு’ன்னு சொல்லாமல் சொல்ற மாதிரியான மனநிலைக்கு பிள்ளைங்கள கொண்டு வந்து விட்டு வச்சுருக்காங்க… இங்கே அரசுக்காக மக்கள்!

மேம்போக்காகப் பார்த்தாலோ, ‘இதிலென்ன’ என்று கூட நினைக்க தோணும். ஆனால், இது அதுக்கும் மேலே…

இப்படி ஒரு செய்தி வெளியில் தெரிந்ததும், ஏமாற்றி வேலைக்கு வந்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும். இனியாவது நம் அரசாங்கம் நம் மக்கள் நலனில் (முறையாக) அக்கறை செலுத்துமா?

ஷர்மிளா ராஜசேகர்

ஷர்மிளா ராஜசேகர்

***

மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் – இருநாள் கருத்தரங்கு

Image

மிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT), அதன் 8வது மாநில மாநாட்டையொட்டி இரண்டு நாள் கருத்தரங்கை நடத்த இருக்கிறது.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் கீழ்கண்ட அனைத்துக்குமான ஆலோசனைகளையும் பெறலாம்…

* தொழில் தொடங்குவது எப்படி?

* மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன?

* தொழில் தொடங்க எங்கு பயிற்சி பெற வேண்டும்? அதற்கான உதவித் திட்டங்கள் என்னென்ன?

* தொழில் தொடங்கத் தேவையான நிதி, இடம், மூலப் பொருட்கள், மார்கெட்டிங், ஏற்றுமதி ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை எங்கு பெறலாம்?

* மார்கெட்டிங் இணைக்கப்பட்ட தொழில்கள் எவை?

* வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி?

* மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள் மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் – அவற்றைப் பெறும் வழிமுறைகள்?

* ஒரு தொழிலைத் தொடங்கி அதில் தொடர்ந்து நீடித்திருப்பது எப்படி?

* பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், நிதி நிறுவன அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தனியார் துறை தொழில் அதிபர்கள், வெற்றிகரமாகச் செயல்படும் மகளிர் தொழில் முனைவோர்கள், இயற்கை சுற்றுப்புறச்சூழல் வேளாண் சார்ந்த கிராம வளர்ச்சிக்கான தொழில்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில்கள், நிதியைக் கையாளும் முறை, தொழிலில் நிலைத்திருக்க ஆலோசனைகள் பெறலாம்.

மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்துத் தகவல்களும் அடங்கிய மாநாட்டு மலர், கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். இலவச தொழில் ஆலோசனைகளும் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

கருத்தரங்கு நடைபெறும் நாட்கள்: ஜூன் 27 மற்றும் 28, 2014.

கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய முகவரி:

135-B, செயிண்ட்பால்ஸ் காம்ப்ளக்ஸ்,

பாரதியார் சாலை,

திருச்சிராப்பள்ளி – 1.

தொலைபேசி எண்: 0431-4200040, 9488785806.

Image courtesy: http://wallpoper.com/

தோழி நியூஸ் ரூம்

வாசிக்க… யோசிக்க…

21ம் நூற்றாண்டு? 

Image

மேற்கு வங்கத்திலுள்ள பிர்பும் மாவட்டம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கிருக்கும் காப் கிராமத்தில் 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடூரம் உலகையே உலுக்கி எடுத்திருக்கிறது. அந்தப் பெண் செய்த மாபெரும் தவறு(!) காதலித்ததே. அதுவும் வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை. இருவரையும் ஒருசேர பார்த்த சிலர் ஊர் மத்தியில் கட்டிப் போட்டார்கள். விசாரித்தார்கள். பெண்ணின் குடும்பத்தினருக்கு அபராதம் விதித்தார்கள்… 25 ஆயிரம் ரூபாய்! ‘அவ்வளவு பணம் எங்க கிட்ட இல்லை சாமி’ என்று கதறி அழுதிருக்கிறார்கள் குடும்பத்தினர். ‘அப்படியா? அவளை அந்தக் குடிசைக்கு தூக்கிட்டுப் போங்கடா!’ என்று கட்டளையிட்டிருக்கிறது பஞ்சாயத்து. ‘யார் வேண்டுமானாலும் அவளுடன் வல்லுறவு கொள்ளலாம்’ என்றும் பஞ்சாயத்துத் தலைவரால் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். விடிய விடிய நடந்தது இந்தக் கொடுமை. இறுதியில், ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என எச்சரிக்கப்பட்டு, விரட்டப்பட்டார் அந்தப் பெண். எப்படியோ தப்பித்து அவர்கள் காவல்துறையில் புகார் செய்ய, 13 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் கண்ணீர் மல்க சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்… ‘‘அவர்களில் சிலருக்கு என் தந்தையின் வயது…’’

சட்டம்… உயிர்… குழந்தை! 

Image

ந்தப் பெண்ணின் பெயர் மார்லைஸ் முனோஸ். அமெரிக்காவைச் சேர்ந்தவர். 33 வயது. 2013 நவம்பரில் மூளையில் ரத்தம் உறைந்து போனதன் காரணமாக கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மூளை செயல்பாடு முற்றிலும் இல்லாமல் போனது. இச்சூழலில் நோயாளி இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவரின் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவும் மாட்டார்கள். டெக்சாஸ் ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனை முனோஸுக்கோ தொடர்ந்து சிகிச்சை அளித்தது. காரணம், 14 வார கருவை சுமந்து கொண்டிருந்தார் முனோஸ். கருவைக் காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. முனோஸின் கணவர் எரிக், ‘சிகிச்சை தேவையில்லை… எங்கள் குடும்பத்தினர் யாரும் இதை விரும்பவில்லை’ என்றார். மருத்துவமனையோ ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குத் தொடர்ந்தார் எரிக். டெக்சாஸ் நீதிமன்றம் முனோஸுக்கு வழங்கப்படும் சிகிச்சையை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெர்மன் டாக்டர்கள் ஒரு படி மேலே போய், பழைய கேஸ் ஃபைல்களை புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இது போல 30 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் வரை உயிரோடு இருந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

சூப்பர் 50! 

Image

‘நடுத்தர வயதைக் கடந்த பெண்மணிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்கள்’ என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். அதற்கு உதாரணங்களும் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. லிஸ் டிமார்க்கோ வீன்மேன், நியூ யார்க்கை சேர்ந்தவர். 2001 செப்டம்பர் 11 அன்று, இரு விமானங்கள் வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதிய சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர். 2007ல், தன் 55வது வயதில் சுயதொழில் தொடங்க முடிவெடுத்தார், பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து கற்றுக் கொண்டார். இன்றைக்கு லிஸ் வெற்றிகரமான தொழில்முனைவோர். அமெரிக்காவில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் 55-64 வயதுக்குட்பட்டவர்கள் 23.4 சதவிகிதமாம். அவர்களிலும் பெண்களே அதிகமாம்… அப்படிப் போடுங்க!

கொஞ்சம் ‘கவனிங்க’ பாஸ்! 

Image

மெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று நம் தலைநகர் டெல்லிக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறது. ஆனால், அது பெருமைப்படும்படியான செய்தி அல்ல! ‘உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசு நிலவும் நகரம் டெல்லி’ என்கிறது அந்த ஆய்வு. சீனாவின் பீஜிங் நகரத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கே நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை அரசு நிறுவனங்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.

பசுமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 178 நாடுகளில் இந்தியா இருப்பது 155வது இடத்தில். டெல்லியின் காற்று மாசு, பீஜிங்கை விட இருமடங்கு அதிகம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு காற்று மாசு 44 சதவிகிதம் அதிகமாம். இப்படி அதிகமாவதற்குக் காரணம், வாகனங்களும் தொழிற்சாலைகளும் வெளியேற்றும் புகை. இந்த லட்சணத்தில், டெல்லி சாலைகளில் பவனி வரும் வாகனங்களோடு ஒவ்வொரு நாளும் 1,400 வாகனங்கள் புதிதாகச் சேருகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மை சீர்கெடுவது என்பது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். டெல்லியில், 5க்கு 2 பேர் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறார்களாம்.

மலாலாவின் மனம்! 

Image

‘நான் மலாலா’. பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதிய புத்தகம். கடந்த 28ம் தேதி, பெஷாவர் பல்கலைக்கழகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. என்ன காரணமோ, ‘எங்களால் போதுமான பாதுகாப்புக் கொடுக்க முடியாது’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இரண்டு அமைச்சர்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை தொடங்கி பல அரசு அதிகாரிகள் வரை நூல் வெளியீட்டை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி நிகழ்ச்சி நடத்த முயன்றபோதுதான் காவல்துறை, பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று கை விரித்திருக்கிறது. தலிபான்கள், புத்தக வெளியீடு நடக்கும் பகுதியில் இருக்கும் கடைக்காரர்களிடம் மலாலாவின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்களாம். ‘நான் மலாலா’ புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையும் விமர்சனமும் கிளம்பியுள்ளன.

கண் என்ப வாழும் உயிர்க்கு! 

Image

‘உலகில் உள்ள அத்தனை சிறார்களும் ஆரம்பக் கல்வி பெற வேண்டுமா? 70 வருசம் பொறுங்கப்பா!’ என்று ஒரு போடு போட்டிருக்கிறது யுனெஸ்கோ… ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பு. ‘உலக அளவில் 5 கோடியே 70 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள்’ என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. ‘ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசிப்பு, கணக்குப் போடுதல் திறன் இல்லை. உலகில், மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருக்கும் ஆசிரியர்களில், கால் பங்குக்கும் மேலானவர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானில், மூன்றில் ஒரு குழந்தைக்குத்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கவும், அடிப்படைக் கணக்குகளைப் போடவும் தெரிந்திருக்கிறது. இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா, தான்சேனியா போன்ற நாடுகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகளும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும்தான் குழந்தைக் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. வறிய நாடுகளில் கால்வாசிக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதே இல்லை’ என்று பல புள்ளிவிவரங்களை தெளித்திருக்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை.

 தொகுப்பு: பாலு சத்யா

தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க..!

குளிர்… அம்மாடி! 

Image

ற்கனவே குளிர் வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் உலகிலேயே அதிகக் குளிரான பகுதியை அடையாளம் காட்டி மேலும் உடம்பை உதற வைத்திருக்கிறது ஒரு செய்தி! அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த சாட்டிலைட், கிழக்கு அண்டார்ட்டிகாவில் இருக்கும் ஒரு இடத்தைப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. பனிக்கட்டிகளால் உறைந்து கிடக்கும் அந்தப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை மைனஸ் 93.2 டிகிரி செல்சியஸ். இதற்கு முன் அதே அண்டார்ட்டிகாவில் குளிர் தொடர்பாக ஓர் ஆய்வை செய்தது ரஷ்யாவின் ‘வோஸ்டாக் ரிசர்ச் ஸ்டேஷன்’. ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, ‘இதுதாம்ப்பா உலகத்துலயே ரொம்ப குளிரான இடம்’ என்றது. அங்கே நிலவிய வெப்பநிலை 89.2 டிகிரி செல்சியஸ். இது நடந்தது 1983ம் வருடத்தில். இப்போது 93.2 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியிருக்கிறது. குலை நடுங்கும் குளிர்… நம்பித்தான் ஆகவேண்டும்! 

அடங்காதா அமில மழை? 

Image

லூதியானாவில் மீண்டும் ஒரு தாக்குதல்… பெண் மீது ஆசிட் வீச்சு. அதுவும் மணப்பெண் மீது! அவர் பர்னாலாவைச் சேர்ந்தவர். திருமணக் கனவுகளுடன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக லூதியானா, சாராபா நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்குச் சென்றிருக்கிறார். தன் சகாக்களுடன் உள்ளே நுழைந்த ஓர் இளைஞன் அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசிவிட்டு, ஓடிப் போயிருக்கிறான். போனவன், ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றிருக்கிறான். அதில் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் உறவு இருப்பதாக எழுதியிருந்தது. போலீஸ் விசாரணையில் அது பொய் என்பது தெரிய வந்திருக்கிறது. வழக்கை திசை திருப்புவதற்காக அந்தக் கடிதம். உண்மையில், ஆசிட் வீசியவன் கூலிக்காக இந்தப் பாதகத்தைச் செய்தவன். மாப்பிள்ளையின் குடும்பத்தின் மேல் கோபம் கொண்ட மற்றொரு உறவினரின் குடும்பம்தான் இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞன் உட்பட ஆறு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. மிக ஆபத்தான நிலையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்தப் பெண். ஆசிட் விற்பனைக்குக் கெடுபிடி… பல புதிய விதிமுறைகள்… அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பெண்கள் மீதான இது போன்ற கொடூர தாக்குதல் இன்னும் குறைந்தபாடாக இல்லை. என்ன செய்யப் போகிறோம்?

விலையில்லா உயிர்கள்! 

Image

திர்ஷ்டவசமாக… இந்தச் சம்பவத்தை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் காவல்துறையால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். குண்டஸ் மாவட்டம்… டாஷ்ட்-ஐ-ஆர்ச்சி பகுதி… தலிபான்களின் ஆட்சி நடக்கும் பிராந்தியம். ஒரு பெண்ணின் மீது கணவனுக்கு எரிச்சல்… கோபம்… ஆத்திரம். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தலிபான்களிடம் மனைவி மீது புகார் தருகிறான். ‘என்னை ஏமாற்றிவிட்டாள்’. அவ்வளவுதான்… பெண்ணுக்கு தண்டனை கொடுக்கத் தயாராகிறது தலிபான் படை. என்ன தண்டனை? உயிரோடு கல்வீசித் தாக்கிக் கொல்லும் மரண தண்டனை. இரக்கமுள்ள அந்தப் பெண்ணின் உறவினர்கள் யாரோ காவல்துறைக்குத் தகவல் தர, அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கிறாள். காவல்துறை வந்ததும் தலைமறைவான தலிபான்களுடன் கணவனும் ஓடிப் போயிருக்கிறான். அந்தப் பெண் இப்போது காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார். இந்தக் கற்கால கொடுமைகளை நிறுத்தவே முடியாதா?

உடற்பயிற்சி… உறுதி! 

Image

டிமென்ஷியா (Dementia). முதுமைக் காலத்தில் வரும் மறதிக் குறைபாடு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு வராது என்று நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. டிமென்ஷியாவை தடுக்கும் முக்கியமான ஐந்து விஷயங்கள்… உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் இருப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் எடையைக் குறைவாக வைத்திருப்பது, மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பது! இந்தப் பழக்கங்களில் நான்கு அல்லது ஐந்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடும் டிமென்ஷியாவும் 60 சதவிகிதம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு. அதே நேரத்தில் இதையெல்லாம் கடைப்பிடிக்காதவர்களுக்கு நீரிழிவு பிரச்னை, இருதயக் கோளாறுகள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 70 சதவிகிதம் இருக்கிறதாம். ‘‘ஆரோக்கியமான வாழ்வியல் முறை பல நன்மைகளை உடலுக்குத் தருகிறது. மருத்துவ சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட உடற்பயிற்சி மிக நல்லது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒரு தனி மனிதனின் பொறுப்பு. ஆனால், பலபேர் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் வருத்தப்படக்கூடிய விஷயம். அதுவும் எங்கள் ஆய்வில் தெரிந்திருக்கிறது.’’ என்று சொல்கிறார் இந்த ஆய்வைத் தலைமை ஏற்று நடத்திய அமெரிக்கர் பீட்டர் எல்வுட்.

பேய்கள் உலாவும் பள்ளிகள்! 

Image

பாகிஸ்தானில் இருக்கும் பள்ளிக்கூடங்களை ‘பேய்ப் பள்ளிகள்’ (Ghost Schools) என்றுதான் வர்ணிக்கின்றன பல பத்திரிகைகள். சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பளிச்செனத் தெரியும் பள்ளிகளில் பலவற்றில்கூட பாடம் நடத்தப்படுவதில்லை. இருப்பதிலேயே வயதில் மூத்த சிறுமியோ, சிறுவனோ மற்ற குழந்தைகளை அதட்டி, மிரட்டிக் கட்டுப்படுத்தும் காட்சிதான் தினமும் அரங்கேறுகிறது. முக்கிய காரணம், ஆசிரியர்கள் இல்லை. தெற்கு பாகிஸ்தானில் உள்ள ‘சான்சர் ரெத்தார்’ கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘எங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. அவர்களுடைய பெயரை எழுதத் தெரியவில்லை. அதற்கான அர்த்தமும் தெரியவில்லை. ஆரம்பக் கல்விக்கான அடிப்படை எழுத்தைக் கூட அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை’. அரசும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க எந்த ஆர்வமும் காட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அரசு, பள்ளிகளுக்கு ஒதுக்கும் பணம் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டாலும் அதிகாரிகளின் கைகளுக்குத்தான் போய்ச் சேர்கின்றன என்கிறார்கள் பொது மக்கள். சில பள்ளிகளில் வேறொரு கொடுமை… பெயருக்குத்தான் கல்வி நிறுவனங்களே தவிர மாணவர்கள் யாரும் சேர்க்கப்படுவதில்லை. அந்தப் பள்ளிகளில் வேலை(!) பார்க்கும் ஆசிரியர்களுக்கு வீட்டுக்கே சம்பளப் பணம் போய்ச் சேர்ந்துவிடுகிறதாம். ‘பாகிஸ்தானில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்விக்குக் கூட அனுப்பப்படுவதில்லை’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ஒன்று. கடந்த ஆண்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பள்ளிகள் என்ற பெயரில் இயங்கும் கல்வி நிறுவனங்களை சோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த நவம்பரில் பள்ளிகளை ஆய்வு செய்த  முடிவுகளும் அறிக்கையாக வெளி வந்தது. அதில்தான் ‘பெயரளவு கல்வி நிறுவனங்கள்’ என்கிற அதிர்ச்சிகரமான உண்மை வெளி வந்திருக்கிறது. ‘எத்தனை மலாலாக்கள் தோன்றினாலும், அரசும் அதிகாரிகளும் மனது வைக்கவில்லை என்றால், கல்வி முன்னேற்றம் என்பது பாகிஸ்தானில் ஏற்பட வாய்ப்பே இல்லை’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பாகிஸ்தான் பள்ளிகளில், வராத ஆசிரியர்களுக்காக காத்திருக்கிறார்கள் பிள்ளைகள்.

தேவை பாதுகாப்பு! 

Image

‘இந்தியாவில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்திருக்கிறது’. இதைச் சொன்னது பத்திரிகையோ, சமூக ஆர்வலரோ அல்ல… மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத். பாராளுமன்றத்தில், எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 3 வருடங்களில், இது தொடர்பாக பெண்கள், மகளிர் ஆணையத்துக்கு அளித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேசிய மகளிர் ஆணையம், ‘ஒவ்வொரு துறையிலும் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. இதையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதியளித்திருக்கிறார் மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

தொகுப்பு: பாலு சத்யா

தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க…

Image

பரிசுக் கவலை தேவையா?

ஜும்பா லாஹிரி… இலக்கிய உலகில் பரபரப்பாகப் பேசப்படும் பெண்மணி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர். 2000ம் ஆண்டு புலிட்சர் பரிசு பெற்றதிலிருந்தே பிரபலமாகிவிட்டார். இந்த ஆண்டு ‘மேன் புக்கர் பரிசு’ அறிவிக்கப்பட இருந்த தருணம்… பட்டியலில் இருந்த புத்தகங்களில் ஜும்பா லாஹிரியின் ‘தி லோலேண்ட்’ நாவலும் இடம் பெற்றிருந்தது. அவருக்குத்தான் பரிசு என்று பல பத்திரிகைகள் செய்தியே வெளியிட ஆரம்பித்துவிட்டன. இலேனா கேட்டன் என்ற நியூசிலாந்து பெண் எழுத்தாளர் அந்தப் பரிசை தட்டிச் சென்றார். அந்த அலை ஓய்வதற்கு முன்பாகவே இன்னொரு பரிசு… புனைவுகளுக்காக அமெரிக்கா வழங்கும் ‘தேசிய புத்தக விருது’ ஜும்பா லாஹிரிக்குத்தான் என்கிற பேச்சு எழுந்தது. கடைசியில், ஜேம்ஸ் மெக்பிரைடு என்கிற அமெரிக்க எழுத்தாளருக்குப் பரிசு யோகம். இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை ஜும்பா லாஹிரிக்கு… தன் அடுத்த புத்தகத்துக்கான வேலையில் மேடம் பிஸி!

***

Image

வீடா… சிறையா?

‘அடிமைகள் இல்லை’ – சொல்வதற்கு நன்றாக இருக்கலாம். நிஜம் சுட்டெரிப்பதாக இருக்கிறது. தெற்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல… 30 வருடங்கள். மூவரில் ஒருவர், ‘ஃப்ரீடம் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனத்துக்குக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே அவர்களை மீட்பதற்கான வேலையில் இறங்கிய ஃப்ரீடம் நிறுவனம், காவல்துறை உதவியுடன் சமீபத்தில் காப்பாற்றியிருக்கிறது. மூவரில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர், இரண்டாமவர் அயர்லாந்துக்காரர், மூன்றாவது பெண் இங்கிலாந்துக்காரர். இவர்களில் அயர்லாந்துப் பெண்மணிக்கு 57 வயது. மலேசியப் பெண்ணுக்கு 69 வயது!

***

Image

பொறுப்புகளுக்குப் பொருத்தமானவர்!

‘சுந்தரம் க்ளேட்டன்’ (Sundaram Clayton), தமிழகத்தின் டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த பெரிய நிறுவனம். சமீபத்தில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, லட்சுமி வேணுவுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. லட்சுமி வேணு, இந்நிறுவனத்தின் ‘தொழில்நுணுக்க இயக்குனர்’ (Director – Starategy) பதவியில் இருக்கிறார். இந்தப் பதவி நிர்வாக இயக்குனர் பதவிக்கு ஈடானது. ‘உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும், தொழிலை விரிவுபடுத்தவும் லட்சுமிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கம்பெனியின் செலவைக் குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் நிதி மற்றும் பட்ஜெட் நடவடிக்கைகளை உடனிருந்து கண்காணிப்பார் அவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது இயக்குனர்கள் குழு.  கூடுதல் பொறுப்புகளைச் செய்ய வேண்டி இருப்பதால், லட்சுமி வேணுவின் ஊதியமும் உயர்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு புதிய ஊதியம் லட்சுமிக்கு வழங்கப்பட இருக்கிறது. மாதத்துக்கு 7.50 லட்ச ரூபாய்!

***

Image

மனதைக் கவரும் மாய(ம்) பாடல்கள்!

மாயம் மஹ்மூத் (Mayam Mahmoud). இதுதான் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணின் பெயர். ராப் இசைப் பாடகி. ‘அராப்ஸ் காட் டேலன்ட்’ என்ற டி.வி. நிகழ்ச்சியில் நடந்த ராப் பாடல் போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதிச் சுற்று வரை முன்னேறிவிட்டார். இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. பத்து வயதிலிருந்து பாடல்களைப் பாடி வருகிறார் மஹ்மூத். எல்லாமே எகிப்தில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட பாடல்கள்! மஹ்மூதின் தந்தை, ‘வழக்கமாக எல்லாரும் பாடுவதைப் போல் பாடாமல், புதிதாக எதையாவது முயற்சி செய்’ என்று ஒருமுறை சொன்னாராம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது இந்த இசைப் புயல். எகிப்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கையிலெடுத்தார். பாடலில் அதைக் கொண்டு வந்தார். இன்றைக்கு, ‘எகிப்தில் முக்காடு (Hijab) அணிந்து ராப் இசை பாடும் முதல் பெண்’ என்ற பட்டத்தையும் தட்டிக் கொண்டு போயிருக்கிறார்.

***

Image

உடலினை உறுதி செய்!

‘பெரியோர்களே… தாய்மார்களே! தயவு செய்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உடல் உறுதியில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்!…’ கெஞ்சாத குறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ‘எஜுஸ்போர்ட்ஸ்’ (EduSports) நிறுவனம். இது ஒரு உடற்கல்வி நிறுவனம். இந்நிறுவனம் நடத்திய, பள்ளிகளுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலுறுதி ஆய்வில் பள்ளிக்குச் செல்லும் பல குழந்தைகள் உடல் உறுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. 17 மாநிலங்கள்… 68 நகரங்கள்… 176 பள்ளிகள்… 7லிருந்து 17 வயதுக்குட்பட்ட 77,669 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிலைக் குறையீட்டு எண்ணில் மட்டும்தான் பெண் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். பையன்கள் 59 சதவிகிதம், பெண் பிள்ளைகள் 66 சதவிகிதம். மற்ற எல்லா உடல் உறுதியிலும் பெண் பிள்ளைகள் பின் தங்கியே இருக்கிறார்களாம். ஒரே இடத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மிகக் குறைவாக விளையாடுவது அல்லது விளையாட்டுப் பக்கம் திரும்பாமலே இருப்பது இவையெல்லாம்தான் காரணம் என்று ஒரு பட்டியலை வாசித்திருக்கிறது எஜுஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கை. பெரிய நகரங்களில் (Metro Cities) வசிக்கும் மாணவர்களைவிட, நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் உடல் உறுதியில் கொஞ்சம் பரவாயில்லை ரகமாம். அதாவது, அவர்களுக்கு விளையாட அவகாசம் கிடைத்திருக்கிறது, கொஞ்சமாவது ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுகிறார்கள் என்று அர்த்தம். மொத்தத்தில், பள்ளி செல்லும் பிள்ளைகளின் உடல் உறுதியில் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்த ஆய்வு.  

***

Image Courtesy: http://www.topnews.in

http://media.mlive.com

http://news.bbcimg.co.uk

தொகுப்பு: பாலு சத்யா

தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க…

இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகள்!

Image

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள்..! சில நாட்களுக்கு முன் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் பிசினஸ் பத்திரிகை ‘ஃபோர்ப்ஸ்’. 100 பேரில் 5 பேர் பெண்கள். அவர்களில் முதல் 50 இடங்களுக்குள் 2 பெண்களுக்கு மட்டுமே இடம்.  ‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலில் 14வது இடத்தைப் பிடித்திருப்பவர் ஜிந்தால் குரூப்பைச் சேர்ந்த சாவித்திரி ஜிந்தால். 2005ல் கணவர் ஓ.பி.ஜிந்தால் இறந்த பிறகு ஜிந்தால் குரூப்பின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர். 2012ல் இதே ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 84வது இடத்தைப் பிடித்திருந்தார். இப்போது ‘இந்தியாவின் முதல் பணக்காரப் பெண்மணி’ என்கிற புகழையும் தட்டிச் சென்றிருக்கிறார். சாவித்திரிக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பவர் இந்து ஜெயின். ‘பென்னெட் கோல்மென் அண்ட் கோ’ நிறுவனத்தின் தலைவர். பட்டியலில் 29வது இடம். மூன்றாவது, ‘தெர்மெக்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தை நடத்தி வரும் அனு அகா. பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 86. ‘பயோகான்’ நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிரண் மஜூம்தார் ஷா 4வது இடத்தில்… ‘ஃபோர்ப்ஸ்’ வரிசைப்படி 96. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நிறுவனத்தின் ஷோபனா பார்த்தியாவுக்கு 5ம் இடம். ‘ஹெச்.டி.மீடியா’வின் தலைவர், ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தினசரியின் ஆங்கிலம் மற்றும் இந்திப் பதிப்புகளுக்கு பதிப்பாளர் இவர்.

அசத்தல் தீர்ப்பு!

Image

பெற்றவர்களை, பிள்ளைகள் கைவிட்டால் என்ன செய்வது? ‘ஏதாவது ஆற்றிலோ, குளத்திலோ விழுந்து உயிரைவிட வேண்டியதுதான்’… அது அந்தக் காலம். கோர்ட் படிகளில் ஏறி நீதியைப் பெறுவது இந்தக் காலம். அதற்கு சமீபத்திய உதாரணம், லில்லி என்கிற ரோஸ்மேரி ஏஞ்சலினா. முதுமை… உடல்நலக் குறைவு. அவருடைய மகனோ வயதான அம்மாவையும் அப்பாவையும் கண்டு கொள்ளாதவராக இருந்தார். சரியான உணவு கொடுப்பதில்லை. மருத்துவம் பார்ப்பதில்லை. கொடுமைப்படுத்துவதுகூட நடந்தது. கணவர் இறந்த பிறகு லில்லியை வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க மறுத்தார். வேறு வழியில்லாமல் நீதியின் உதவியை நாடினார் லில்லி. சென்னை குடும்பநல நீதிமன்றம், லில்லியின் குடும்பச் செலவுக்கு 4 ஆயிரமும், மருத்துவச் செலவுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. ‘என் அம்மாவுக்கு ஃபேமிலி பென்ஷன் வருகிறது. பேங்க்கில் ஒரு லட்ச ரூபாய் வரை பணம் சேமித்து வைத்திருக்கிறார்’ என்றெல்லாம் வாதாடிப் பார்த்தார் மகன். ‘இந்தக் காலத்தில் இதெல்லாம் அற்பமான தொகை. 5 ஆயிரம் ரூபாய் ரோஸ்மேரி ஏஞ்சலினாவுக்குக் கொடுத்தே ஆகவேண்-டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். 

பிசினஸ் ராணி… நம்பர் ஒன்!

Image

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக இருப்பவர் சந்தா கோச்சார். அவரை இந்த ஆண்டும் உயர்த்திப் பிடித்திருக்கிறது ‘ஃபார்ச்சூன்’ பத்திரிகை. ‘இந்தியாவின் சக்தி வாய்ந்த பிசினஸ் பெண்மணிகளில் நம்பர் ஒன்’ பட்டத்தை அளித்து! தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சந்தா கோச்சார். ‘ஃபார்ச்சூன்’ பட்டியலிட்ட சக்தி வாய்ந்த 50 பிசினஸ் பெண்மணிகளில் ஆக்ஸிஸ் பேங்கின் ஷிகா ஷர்மா இரண்டாம் இடத்திலும், கேப்ஜெமினி இந்தியா நிறுவனத்தை நடத்தும் அருணா ஜெயந்தி மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். ‘இந்தியாவின் பிசினஸ் ராஜ்ஜியம் இப்போது பெண்கள் கையில்…’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறது ‘ஃபார்ச்சூன்’. தூள் கௌப்புங்க!

(இதன் இன்னொரு பக்கம் பற்றிய ஆய்வு இந்த மாத ‘குங்குமம் தோழி’ (நவம்பர் 16-30) இதழில்…)

முதல் பெண்கள் வங்கி!

Image

‘பாரதீய மஹிளா பேங்க்’. இந்தியாவில் பெண்களுக்காக செயல்பட இருக்கும் முதல் வங்கி. வரும் நவம்பர் 19ம் தேதி தொடங்க இருக்கிறது. மும்பையில் நடக்கும் தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதே நாளில், சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, லக்னோ, குவாஹத்தி ஆகிய நகரங்களில் வங்கியின் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட இருக்கின்றன. சென்னையில் ‘பாரதிய மஹிளா வங்கி’யின் கிளை அண்ணாசாலையில் திறக்கப்பட உள்ளது. டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்த வங்கி, டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கிளைகளைத் தொடங்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கே கிளைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. வரும் மார்ச் மாதத்துக்குள் நாடு முழுக்க 25 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு செயல்படப் போகின்றன!

அடடா அரேபியா!

Image

‘அரேபியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிக சிரமமான நாடு எகிப்து’. ஆய்வு ஒன்றை நடத்தி, சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறது பிரபல ‘தாம்ஸன் ரியூட்டர்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பு. பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் பலாத்காரம் போன்றவை அரேபியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட எகிப்தில்தான் அதிகம் என்றும் இந்த அமைப்பு ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 22 நாடுகளில் கடை நிலையில் இருக்கிறது எகிப்து. அரேபியாவில், ‘காமரோஸ்’ நாடு இந்த விஷயத்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. ஆய்வில், பெண்களை நடத்தும் விதத்தில் முதல் இடம் காமரோஸுக்கு. ‘சம உரிமை, வீட்டுக்குளேயே நல்லவிதமாக நடத்தப்படுதல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கு இவையெல்லாம் பெண்களுக்குக் கிடைத்தால்தான் அரேபியாவில் இந்த நிலை மாறும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் எகிப்தின் பிரபல பெண் பத்திரிகையாளர் மோனா எல்டா ஹாவி (Mona Eltahawy).

கருத்தரிப்புக்கு நீண்ட காலம்!

Image

‘ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுறுவதற்கு நீண்ட காலம் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு. டென்மார்க்கை சேர்ந்த பிஸ்பெப்ஜெர்க் பல்கலைக்கழக மருத்துவமனையைச் (Bispebjerg University Hospital) சேர்ந்த குழு இந்த ஆய்வை நடத்தியது. 41 வயதுக்குட்பட்ட 15,000 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆஸ்துமா பாதிப்பு, கருத்தரிப்பு ஏற்பட்ட நேரம் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. கூடவே, ஆஸ்துமா பாதிப்பு இல்லாதவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைகூட கணக்கெடுக்கப்பட்டது. சுருக்கமாக ஆய்வு முடிவில் ஆஸ்துமா நோய் குழந்தை கருத்தரிப்பு முறைக்கு எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறது இந்த ஆய்வறிக்கை.

தொகுப்பு: பாலு சத்யா

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்!

Image

குழந்தைப் பாதுகாப்பைப் பற்றி நாம் யோசிக்கிறோமா? ஆபத்து, அவசர காலத்தில் அவர்களுக்கு என்னென்ன முதலுதவி, சிகிச்சை தரவேண்டும் என்று கற்று வைத்திருக்கிறோமா? இப்படிக் கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில்   ‘இல்லை’. இன்றைய அவசர உலகில் அதற்குப் பலருக்கும் நேரமும் இருப்பதில்லை. அந்த அவசியத்தைப் பற்றி யோசித்திருக்கிறது ஒரு மருத்துவமனை. யோசித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை செயல்படுத்தவும் களத்தில் இறங்கியிருக்கிறது. அது, சென்னை அப்போலோ குழந்தைகள்  மருத்துவமனை.

அவசரநிலை நேர்வுகளின்போது குழந்தைகளுக்கு முதலுதவி மற்றும் அடிப்படை உயிர்காப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுபவர்கள் ஆசியர்களும் பெற்றோர்களும். அவர்களுக்கு அந்தத் திறனை கற்றுக் கொடுக்க, சென்னை மாநகரிலுள்ள பள்ளிகளை இலக்காகக் கொண்ட விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ‘உலக முதலுதவி தின’ அனுசரிப்பின்போது தொடங்கியது. இன்றைக்கு, அது தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், குழந்தைகள் காப்பகங்கள் உட்பட 40 பள்ளிகளில் இச்செயல்திட்டமானது ஆர்வத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் நேரடி பயிற்சி மற்றும் மேற்பார்வைகளின் கீழ் குழந்தைகளுக்கு அவசரநிலை மருத்துவ உதவி தேவைப்படும் முதல் 30 நிமிடங்களில் உயிர்காக்க அவசியமான முதலுதவியை வழங்க 600 ஆசிரியர்கள் பயிற்சியையும், அதற்கு உரிய சான்றிதழையும் பெற்றிருக்கிறார்கள்!

Image

குழந்தைகள் மருத்துவமனையில் இதற்காக நடைபெற்ற ஆண்டுதின நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் K.இராமானுஜம், ஐ.பி.எஸ்., D.சபிதா, ஐ.ஏ.எஸ்., அரசு முதன்மைச் செயலர், பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த பிரபல பிரமுகர்கள் பங்கேற்றனர். வீட்டில், சாலையில், பள்ளி வளாகத்துக்குள் குழந்தைகளை பாதிக்கின்ற, விரும்பத்தகாத விபத்துகள், நிகழ்வுகளை தவிர்க்கவும் உதவவும் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஊக்குவிப்பதாக இவர்களின் பங்கேற்பு அமைந்தது. குழந்தைகளுக்குக் காயங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக,  அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை தன் ஆதரவை வித்தியாசமான முறையில் தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துப் பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கும் சிபிஆர் சாதனத்தொகுப்பை வழங்கியது.

குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் நேர்வுகளில், அது நிகழ்ந்ததற்கு அடுத்த முதல் முப்பது நிமிடங்கள்தான் அவர்கள் உயிர் பிழைப்பது அல்லது மீட்கப்படுவதற்கான சாத்தியங்கள் நிறைந்த தருணம். குழந்தைகள் தொடர்பான விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில், பங்கேற்கின்ற பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையோடு சேர்ந்து அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், இத்தகைய அவசரநிலையை கையாள போதுமான அளவு தயாராக இருக்கிறார்கள். அதோடு, தொடர்புடைய நபர்களுக்கு கல்வியையும் பயிற்சியையும் வழங்குவதற்கான முயற்சியையும் மேற்கொள்கிறார்கள். பூச்சிக்கடிகள், தொண்டையில் ஏதாவது  சிக்கிக்கொள்வது, தீக்காயங்கள், அதிர்ச்சி மற்றும் விபத்து போன்ற நேர்வுகளில் உடனடியாக முதலுதவி நடவடிக்கையை விரைவாகச் செய்ய இது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு உதவும்.

Image

அவசரநிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக நாம் மேற்கொள்ள வேண்டிய உயிர்காப்பு நடவடிக்கைகள் சில இருக்கின்றன. அது தொடர்பான ஒரு சிற்றேடு, பயிற்சி பெற்ற நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு அவசரநிலை மற்றும் ஐசியு துறையின் முதுநிலை மருத்துவர் டாக்டர் இந்திரா ஜெயகுமார் இந்நிகழ்ச்சியில் பேசினார்.   “இச்செயல்திட்டத்தின் முதலாண்டானது, அதிக மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக இருக்கிறது.  சென்னையிலும் தமிழ்நாடு முழுவதிலும் இன்னும் அதிக பள்ளிகளை வருகின்ற மாதங்களில் இத்திட்டத்தில் ஈடுபடுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். வயது வந்த நபர் எதிர்கொள்கின்ற இதே போன்ற சிரமங்களோடு ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற காயங்கள் மாறுபட்டவை. வீடுகளில் பெற்றோர் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலுதவி வழங்குவதற்கு போதுமான வசதியிருப்பதையும் அவற்றை வழங்க ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப்பட்டிருப்பதையும் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கீழே விழுவதானால் ஏற்படும் ரத்தக் கசிவு அல்லது எலும்பு முறிவிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களை விழுங்கும்போது குழந்தைகளின் தொண்டையில் சிக்கிக்கொள்வது என அனைத்துமே ஆபத்தான நிகழ்வுகள். இவற்றைக் கையாள முதலுதவி செய்பவர்கள் தயார் நிலையில் இருப்பது அவசியம். விபத்து நேரத்திலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களிடம் குழந்தை கொண்டு சேர்க்கப்படும் வரை, முடிந்தவரை மிகக் குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போலோ நடத்திய இப்பயிற்சித் திட்டத்தால் பயனடைந்த பெற்றோர்களும் ஆசியர்களும், இத்தகைய சூழ்நிலைகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிறருக்கும் கற்பிக்க வேண்டும்.” என்று கூறினார்.

சென்னை மாநகரிலுள்ள குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்த ‘அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம்’ மேற்கொள்கிற சிறப்பான செயல்முயற்சியாக ‘குழந்தை
பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்’ இருக்கிறது. எல்லோருக்குமே இதில் பொறுப்பு இருக்க வேண்டியது அவசியமென்பதால் சென்னை போக்குவரத்து காவல்துறையின் ஆதரவோடு சாலை விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசர நிலையில் முதலுதவி வழங்குவதற்கான பயிற்சி திட்டங்களை அப்போலோ மருத்துவமனை நடத்திவருகிறது. பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வேன் ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மருத்துவ உதவி பணியாளர்களால் இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தைகளுக்கான அவசர நிலையைக் கையாள, காவல்துறையினருக்குப் பயிற்சியளிக்க தனியாக பி.எல்.எஸ். திட்டத்தை நடத்த இருக்கிறது அப்போலோ மருத்துவமனை. நல்ல திட்டம். வளரட்டும்!

பெண் சிசுக்கொலை – புதிய புள்ளிவிவரம்!

Image 

‘கடந்த 2012ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலை நடக்கவே இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லவே இல்லை.’ இப்படி யாராவது சொன்னால் நம்புவீர்களா? வேறு வழியில்லை நம்பித்தான் ஆகவேண்டும். தரவுகளோடு அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare).

அந்தப் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு, பெண் சிசுக்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளோ, குற்றம் சாட்டப்பட்டவர்களோ, தண்டனை பெற்றவர்களோ ஒருவர் கூட தமிழ்நாட்டிலி இல்லை. அதே நேரம், மத்தியப் பிரதேசத்தில் 64, ஹரியானாவில் 28, ராஜஸ்தானில் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இந்தியா முழுக்க 210 பெண் சிசுக்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள் வெறும் எட்டுப்பேர் மட்டுமே!

தமிழ்நாட்டைப் போலவே வேறு சில மாநிலங்களிலும் கடந்த 3 ஆண்டுகளாக (2010ம் ஆண்டிலிருந்து) பெண் சிசுக்கொலை நடக்கவில்லை என்கிறது மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம். அவை, திரிபுரா, அருணாச்சலபிரதேசம், கோவா, அஸ்ஸாம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள். பெண் சிசுக்கொலை வழக்குகளில்  மத்தியப்பிரதேசத்துக்குத்தான் முதலிடம். 64 வழக்குகள்!

சமூக சேவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து வேறாக இருக்கிறது. ‘‘வழக்குப் பதிவு செய்யப்பட்டு, யார் மேலாவது குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால்தான் பெண் சிசுக்கொலை குறித்த விவரங்கள் வெளியே தெரியவரும். இந்தியாவில், வருடத்துக்கு 6 லட்சம் பெண் குழந்தைகள், பிறப்பதற்கு முன்பாகவே கருச்சிதைவுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். இதை இந்தப் புள்ளிவிவரம் விவரிக்கவில்லை. பல பெண் சிசுக்கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. இது போன்ற வழக்குகளுக்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதால் வெளியே வருவதில்லை. பிறகு எப்படி இந்த புள்ளிவிவரம் சரியானதாக இருக்க முடியும்?’’ என்கிறார்கள் சமூக சேவகர்கள். மேலும், குழந்தைகள் பாலின விகிதாசாரத்துக்கும் (Sex Ratio) பெண் சிசுக்கொலைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். 2011ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, ஹரியானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 819 பெண் குழந்தைகள். ஆனால், அந்த மாநிலத்தில் 2012ம் ஆண்டு பெண் சிசுக்கொலைக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வெறும் 28.

லேன்செட் மெடிக்கல் ஜர்னல் (Lancet Medical Journal) வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது… ‘இந்தியாவில் முதலாவதாகப் பிறக்கும் பெண் குழந்தையின் விகிதம் 1990ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 906 ஆக இருந்தது. 2005ல் 836 ஆகக் குறைந்திருக்கிறது’.

ஆக, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிறப்பது வரைக்கும் பலரும் காத்திருப்பதில்லை. கருவில் இருக்கும் பொழுதே பெண் சிசுவின் கதையை முடித்துவிடுகிறார்கள்! வழிமுறை ஒன்றுதான்… ஆயுதம்தான் வேறு.

பெண் சிசுக்கொலையை கருவிலேயே அழிப்பதைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஏற்கனவே, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சொல்லக்கூடாது என்கிற விதி இருக்கிறது. இருந்தாலும், ஸ்கேன் சென்டர்களில் இதைக் கடுமையாக்க வேண்டும். அரசு தீவிரமாக இதை நடைமுறைப்படுத்தி, ஸ்கேன் சென்டர்களை கண்காணித்தால் கருவில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது குறைய வாய்ப்பிருக்கிறது, ஒருவேளை!

– ஆனந்த பாரதி

இணைப்பு: மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் 

***  

சாதிகள் உள்ளதடி பாப்பா!

Image

‘‘படிக்கிற பசங்களுக்கு எதுக்கு சாப்பாடு போடணும்?’’ என்ற கேள்விக்கு ஒருமுறை இப்படி பதிலளித்தார் காமராஜர்… ‘‘சாப்பாடாவது கிடைக்கட்டுமேன்னு நாலு பேரு புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பாங்கல்ல?’’

காமராஜர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல தலைவர்கள் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதற்குக் காரணம், வறுமைக் கோட்டில் உள்ள பல குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தமிழகம் மட்டுமல்ல… இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற உணவு, சுத்தமில்லாத தண்ணீர் இதுதான் பல இடங்களில் நிலைமை. ஆனாலும், அந்த உணவும் பல மாணவ, மாணவிகளுக்குத் தேவைப்படுகிறது என்பதுதான் கொடுமை. ‘பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலி… உணவில் பூச்சி மருந்து கலந்திருந்தது’, ‘சதீஸ்கரில் மதிய உணவு சாப்பிட்ட 35 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்’… தொடர்கிற செய்திகள் பீதியைக் கிளப்புவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது நாடாளுமன்றம் வரை எதிரொலித்து கலங்கடித்திருக்கிறது.  

பாராளுமன்றத்தில் இதற்காகவே இருக்கும் குழு (The Committee for the Welfare of Scheduled Caste and Scheduled Tribes) இந்தியாவில் பல இடங்களில் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை சுட்டிக் காட்டியிருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி பரிந்துரைத்திருக்கிறது. இந்தியாவில் ஒதுக்குப்புறமாக, உள்ளடங்கிய கிராமங்களிலும், கடலோரப் பகுதிகளிலும், முக்கியமாக ஒடிஸாவிலும் மதிய உணவின் போது தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக உணவு பரிமாறப்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மத்திய அரசு இதற்காகவே சிறப்பு குழுக்களை ஏற்படுத்தி, அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது அந்தக் குழு. கிட்டத்தட்ட 144 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

மாணவர்கள் மனதில் தீண்டாமை என்னும் விஷ விதையை விதைக்கும் சில பள்ளிகளும் ஆசிரியர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ‘தீண்டாமை ஒரு பாவச் செயல்’ என்று காந்தி சொன்னதை பாடங்களில் கற்பித்தால் மட்டும் போதாது. அதை பள்ளிகள் செயலிலும் நிரூபிக்க வேண்டும். ‘சாதிகள் இல்லையடி பாப்பா!’ என்று பாடம் நடத்திக் கொண்டே. அதற்கு நேர் எதிராக நடந்து கொள்ளும் சிலரை என்னதான் செய்வது?

– பாலு சத்யா 

Photo Credit: http://indiagiving.wordpress.com