ப்ரியங்களுடன் ப்ரியா-26

காதல்னா என்னங்க ?

woman1

காதல்னா என்னங்க ? ரெண்டு உசுரு ஒரு உசுரா மாறுவது தானே ??

அதிலே ஒரு உசுரை துடிக்க துடிக்க கொன்னுட்டு போறப்ப அதில் எங்கே காதல் என்ற வார்த்தை வருது ?

எங்கே செல்லும் இந்த பாதை …
யாரோ யாரோ அறிவார் …

கண்டிப்பா நாம அறியலாம் தோழிகளே…

எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டனர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது இப்போதைய உலகில் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது . ஆனால், இன்னமும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையே, அடிக்கடி நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டுகின்றன.

woman2

தயவுசெய்து இனி அதை  காதல் என்று சொல்லாதீங்க யாரும்…

தனக்கு இல்லாத ஒன்று  யாருக்கும் இல்லை என்ற மனநிலையில் இருப்பவன் மனதில் எப்படி காதல் என்ற ஒன்று இருக்கும் ?

ஒரு வேளை அந்த  சைக்கோக்களை அந்த பெண்கள் காதலித்தால் / திருமணம் செய்தால் தினம் தினம் செத்துதான் பொழைக்கணும்…

இதில் யாருடைய தவறு் என்று ஆராய ஆரம்பித்தால், ஒவ்வொரு நிகழ்விலும் செயலிலும் தவறுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

என்றைக்கு தவறான பாதையில் செல்லும் ஹீரோக்களை பொண்ணுங்க  காதலிச்சு திருத்துவதை விசில் அடிச்சு ரசிக்க ஆரம்பிச்சோமோ, அன்றைக்கே நமக்கு கேடுகாலம் ஆரம்பித்து விட்டது.

சினிமாவை சினிமாவாக பார்க்காமல் அதை வாழ்வியல் தத்துவம் போல உணர ஆரம்பித்த காலமே இந்த ஒருதலை காதல், தறுதலை காதல், கன்றாவி காதல் எல்லாமே…

செய்கிற அவ்வளவு அயோக்கியத்தனத்துக்கும் பின்னால் காதல் என்ற ஒற்றை வார்த்தையை அடைமொழியாக்கி விட்டால் நியாயம் ஆகிவிடுமா ?

இருக்கும் பஞ்சாயத்தில் இப்போ கொஞ்ச வருஷமா புதுசா ஒண்ணு…

சோசியல் மீடியா…

இருங்க இருங்க… உடனே கோபப்படாதிங்க… தத்தளித்த சென்னையை தமிழக அரசே சீர் செய்ய காலதாமதம் ஆன நிலையில், ஒற்றை போனும் 1 gb டேட்டாவும் வச்சு சரி செஞ்சதை இந்த உலகமே மறக்காது. அதுதான் சோசியல் மீடியா வின் பலம்… அதை சரியான பாதையில் பயன்படுத்துகையில் எல்லாமே சரியா இருக்கும்.

நான் எல்லோரையும் போல இங்கே உபதேசம் செய்யவில்லை… ‘கவனமா பயன்படுத்துங்க… சாட் செய்யாதீங்க… நம்பர் கொடுக்காதீங்க… போட்டோ போடாதீங்க… இரவு ரொம்ப நேரம் இருக்காதீங்க’ என்றெல்லாம்…

இணையம் பயன்படுத்துவது எப்படி உங்கள் உரிமையையோ, அதை விட முக்கிய கடமை உங்கள் குடும்பத்தை பாதுகாப்பது.

woman

ஒரு சிறிய தவறு நடந்தாலும் கூட இப்போது இருக்கிற தகவல் தொழில்நுட்ப உதவியில் 5 நிமிடத்தில் காவல்துறை உங்கள் இல்லம் வந்து கதவை தட்டும் வாய்ப்புகள் இருக்கிறது.

நம் சிறுசிறு விளையாட்டுகள், தவறுகள் எல்லாம் நம்மை மீறி நமது குடும்பத்தை தொடும்போது அங்கே அதன்பிறகு  நமக்கு கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கும் ?

நண்பர்கள் தேர்வு என்பது இனிமேல் வரப்போகிற மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் விட கடினமா இருக்கணும்.

இது பொதுவெளி… இது ஒரு நடைபாதை… எதிர் வர்றவங்க பிடிக்கலை என்றால் நாமே வழிவிட்டு இறங்கி விடுவோம்… தப்பே இல்லை.

எனக்கும் இங்கே நல்ல உறவுகள் நட்புகள் உண்டு. என்னோட 600 நண்பர் வட்டத்தில் ஒரு 10 இல் இருந்து 15 பேர் மட்டும்தான் வீடு வரை உள்ள நட்பாக இருக்காங்க.

அவங்க குடும்பத்தில் இருப்பவங்க எங்க வீட்டோடும்  நாங்க அவங்க வீட்டோடும் இணைந்து இருக்கோம்… அதான் நம்பிக்கை . அந்த நம்பிக்கையைப் பெறும் நட்புகள் கிடைப்பதும் வரமே.

அதற்காக மற்றவர்கள் யாரும் நட்பில்லை என்று அர்த்தம் அல்ல. எனக்காக, என் குடும்பத்துக்காக சற்று விலகி இருக்கேன் என்று மட்டுமே அர்த்தம்.

ஓர் அவசரத்துக்கு இரவு 12 மணிக்கு மேல் கூட, என் நண்பனின் மனைவிக்கு போன் செய்து, ‘அவனை எழுப்பி விடுமா’ என்று சொல்லி இருக்கிறேன்.

அதான் நட்பு… அந்த நட்பை இங்கே தேர்வு செய்வதில்தான் சில தடுமாற்றங்கள் எல்லோருக்கும்.

ஒருவருக்கு நல்லவராக இருக்கும் ஒருவர் மற்றவருக்கு கெட்டவராக இருக்கும் அபாயம் மிக அதிகம் உள்ள உலகம் இது… இணைய உலகில் அடிக்கடி நடப்பதும் இதுதான்…

ஒரு சிலரோட பதிவுகளில் அவர்களின் தவறான எண்ணங்களும் எழுத்தாக வரும்… அதைக் கடப்பதும் தவிர்ப்பதும் நாமே.

என் இப்படி எழுதுறீங்க என்று கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கே சில பேர் அப்படி எழுதுவாங்க. அவர்களைத் திருத்துவது நம் வேலை இல்லை.

நம்மையே மறந்து இங்கே நாம் இருக்கும் போதும்  நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைக்கும் ஒரே சக்தி நம் குடும்பம் மட்டும்தான்…  அதை நினைத்தாலே  போதும்… பல பிரச்னைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.

இப்போதெல்லாம் ஒரு சிறுகுற்றம் நடந்தாலே காவல்துறை உடனே கையில் எடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் சோசியல் மீடியா பதிவுகள் / இன்பாக்ஸ் / வாட்சப் / பரிமாற்றம் மட்டுமே.

எவனோ / எவளோ செய்த குற்றங்களுக்கு நாம் / நம்ம குடும்பம் என் அலைய வேணும்?

சரிங்க … போனதை பற்றி விவாதம் செய்ய வேணாம்… இனி அழ தெம்பு கூட இல்லை… நடப்பவற்றைக் காணும் பொழுது …

நம் எல்லோருக்குமே தோளுக்கு மேல வளர்ந்த பசங்க இருக்காங்க. நம்மைத்தான் நம்பி இருக்காங்க. நாம்தான் அவர்களுக்கு வலி இல்லாத உலகிற்கு வழி காட்டணும்.

24 மணிநேரமும் அவர்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்க வேணாம்.

கிடைக்கும் நேரத்தில் அவர்களுக்கு அவர்களின் விஷயங்களை நம்மோடு பகிர நேரம் ஒதுக்கினாலே போதும்… வேண்டாத விஷயம் எது…சரியான விஷயம் எது என்று அவர்கள் புரிந்துகொள்ள…

கலி காலம் என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா ?

நாம்தான் சரி செய்யணும்… செய்வோம்!

நல்லதே நடக்கும்… நடக்கணும்!

woman4

  • ப்ரியா கங்காதரன்

ப்ரியங்களுடன் ப்ரியா–25

th6

தைராய்டு

World Thyroid Day / May 25, 2016

உலக தைராய்டு தினம் / மே 25, 2016

th2

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல..

நான் ரொம்ப குறைவா டையட் உணவு தான் சாப்பிடறேன்.. ஆனாலும் உடம்பு வெயிட் போட்டுடுது.. யோகா வாக்கிங் எல்லாம் போறேன் ஆனாலும், உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.. அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்போ பார்த்தாலும் எதையாவது சாப்டுட்டே இருக்கா ஆனால் பாரு எவ்வளவு சாப்பிடாலும் உடம்பு வரவே இல்ல ரொம்ப ஒல்லியா வீக்கா இருக்கான்னு  சொல்லுவாங்க..

th7

இதுக்கெல்லாம் என்னங்க காரணம் ??

தைராய்டு தான் ..

தைராய்டு என்றால் என்னங்க ?? அதை எப்படி  பிரியா தெரிஞ்சுக்கலாம்னு  நீங்க கேட்பது புரியுதுங்க … கொஞ்சம் கவனமா படிங்க இதை .

30 வயதை தாண்டும் நமது நாட்டு பெண்களுக்கு  30 முதல் 45 சதவிதம் வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது ..

th4

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..நம் அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது..

நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.

th3

ஆரம்ப அறிகுறிகள் :

மோசமான தசை தொனி (தசைத் தளர்ச்சி)

களைப்பு

குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்

உளச்சோர்வு

தசைப்பிடிப்புக்கள் மற்றும் மூட்டு வலி

மணிக்கட்டு குகை நோய்

முன்கழுத்துக் கழலை

மெலிதல், விரல்நகங்கள் நொறுங்குதல்

மெலிதல், முடி நொறுங்குதல்

வெளிரிய தன்மை

குறைவான வியர்வை

உலர்ந்த, அரிக்கும் தோல்

எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம்

குறை இதயத் துடிப்பு (குறைவான இதயத்துடிப்பு வீதம் – நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்)

மலச்சிக்கல்

வெகுநாளான அறிகுறிகள் :

மெதுவான பேச்சு மற்றும் தொண்டை கட்டி, குரல் உடைதல் – மெல்லிய குரலையும் கேட்க முடிதல்

வறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்

கண் புருவங்களின் வெளிப்பகுதி மெல்லியதாதல் (சைன் ஆப் ஹெர்டோக்ஹி)

இயல்பற்ற சூதகச் சுழல்கள்

குறைவான உடல் அடிப்பகுதி வெப்பநிலை

குறைந்த பொதுவான அறிகுறிகள் :

பழுதடைந்த நினைவுத்திறன்

பழுதடைந்த புலனுணர்வு செயல்பாடு (தெளிவற்ற மூளை) மற்றும் கவனமின்மை

குறைந்த மின்னழுத்த சமிக்ஞைகளிலும் ECG மாற்றங்களுடன் குறைந்த இதயத்துடிப்பு வீதம். குறைவான இதய வெளியீடு மற்றும் குறைந்த சுருங்கு திறன்.

இரத்தசை சர்க்கரைக் குறைவு எதிர்ப்பு(அல்லது இரவு உணவு)

மந்தமான அனிச்சைகள்

முடியுதிர்தல்

அனீமியா ஏற்படுத்தும் பழுதான ஹீமோகுளோபின் தொகுப்பு (குறைந்த EPO அளவுகள்), பழுதான குடல்சார்ந்த இரும்புத்தாது மற்றும் பொலிக்கமில உறிஞ்சும் தன்மை அல்லது பித்தபாண்டுலிருந்து வரும் B12 குறைபாடு

விழுங்குவதில் சிரமம்

ஆழமில்லாத மற்றும் மெதுவான சுவாச அமைப்புடன் மூச்சுவிடுதலில் சிரமம்

தூக்கம் நேரம் அதிகரிப்பு

உறுத்தும் தன்மை மற்றும் மனநிலை நிலைத்தன்மையின்மை

பீட்டா-கரோட்டின்[15] விட்டமின் A ஆக மாற்றப்படும் மோசமான செயலால் தோல் மஞ்சளாதல்

குறைவான GFR உடன் மந்தமான சிறுநீரகச் செயல்பாடு.

அதிகரித்த வடிநீர் கொழுப்பு

கடுமையான உளப்பிணி (மிக்ஸெடிமா மேட்னெஸ்) என்பது தைராய்டு சுரப்புக் குறைக்கு ஒரு அரிதான அறிகுறியாகும்.

சுவை மற்றும் மணம் உணர்திறன் குறைவு (அனோஸ்மியா)

Th1

தைராய்டு பிரச்சனையை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.. அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்சேர் அளவுக்கு வந்து இருக்கிறது. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது. T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம்..

ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்..

T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..

th9

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்..

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது நல்லது..

th8

ஹைப்போ தைராய்டு

இரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.. இது பொதுவாக

வயது பெண்களையும் பாதிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால்,  அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

th5

ஹைப்பர் தைராய்டு

இரத்தத்த்இல் தைராக்சின் அதிக அளவில் சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு ஏற்படுகிறது.. பசி அதிகமாக இருக்கும், அடிக்கடி சாப்பிட்டாலும் உடல் மெலிந்து கொண்டே போகும், கை-கால்களில் நடுக்கம் இருக்கும்,சில சமயங்களில் உடல் முழுவதும் நடுங்கும்,காரணம் எதுவுமின்றி கோபம் வரும், அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும்,

தூக்கமின்மை,நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும்,மாதவிலக்குப் பிரச்னைகள்,கால் வீக்கம், மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் ஈடுபாடற்ற தன்மை தோன்றும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களால் முதலில் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு, அதில் அழற்சி ஏற்பட்டு, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மாவுப் பொருட்கள் போன்றவற்றை தங்களின் உணவில் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும், உங்களுக்கு உணவில் இனிப்புச்சுவை வேண்டுமானால், தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவைத் தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

கழுத்தில் கட்டி ஏற்பட்டால்…:

கழுத்தில் தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிய அளவில் கட்டி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலையில் வீக்கமும் விஷக் கட்டியும் ஏற்படும். இது நச்சுக் கழலை ஆகும்.

ஆரம்ப நிலையில் வலி இருக்காது. திடீரென கட்டி பெதாக வலிக்கத் தொடங்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பறி போகவும் வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், உணவில் இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து வர, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி வாக்கிங் மேற்கொள்வது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

ஒவ்வொருவரும் தினமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், நல்ல பாட்டுக்களை கேட்பது, நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பது என்று ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

நாம எவ்வளவு தான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் இழந்த உடல் நலனை மட்டும் எப்போவுமே திரும்ப பெற முடியாது ,,

அதனால சரியான உணவு முறை,  உடற்பயிற்சி முறை என நம் உடம்பையும் மனசையும் நாம சரியாய் வைத்து கொண்டால் வருமுன் காத்து நம்மை நாமே பேணலாமே…

வாழ்க வளமுடன் !

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151106-WA0049

 

ப்ரியங்களுடன் ப்ரியா–24

தரையில் விளையாடிய காலம் மறந்து
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் …

game4

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய் 
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

Game2

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 

game9
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும் 
என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு…
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

Game1

வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றாற் போன்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம் இயந்திரம் போல…

இளைப்பாற சற்று அமரலாம் என்று நினைக்கும் போது துரத்தி வரும் வாழ்க்கையை வெல்ல மீண்டும் ஓட்டம் என வட்டமாகி போன பின்னர் மறந்து போன பால்ய விளையாட்டுகள் எல்லாமே கானல் நீர் ஆகி விட்டது…

பெண்ணுரிமை போற்றிய மகாகவி பாரதியை ரசிக்கும் நாமே

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரியை மறந்து போனோமா அல்லது கடந்து போனோமோ என்று தெரியவில்லை…

இப்போ இதை படிக்கிற எத்தனை பேர் நம்ம குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாட அனுப்புறோம் ??

இல்லை பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி சொல்லி குடுத்து இருக்கோம் ??

Game3

நம்ம  குழந்தைகளுக்கு நாகரிக உலகில் விளையாட கூட நேரமில்லீங்க… புழுதித் தெருக்களில், புரண்ட நாம்தான் இன்னைக்கு  குழந்தைகளை கான்கிரீட் ரோடுகளில் பாதம் பதியாமல் செருப்போடும், வாகனத்துடன் தான் நடத்துகிறோம்..

விலைமதிப்பிட முடியாத பண்பாட்டுப் பொக்கிசங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் கிராமத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடிய விளையாட்டுக்கள் கூட சமூக அக்கறை சார்ந்ததாக இருந்தது. உழைப்பவர்களின் செல்வத்தை ஏகாதிபத்தியத்தின் வலிய கரங்கள் கவர்ந்து கொள்ளும் காரியம் காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கேரளாவில் நான் பாட்டி வீட்டில் இருந்த போது  பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோட்டத்திற்கு   விளையாட சென்று விடுவேன் !

நிறைய  விளையாட்டுக்கள் விளையாடுவோம்
ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது , கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி , சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம்.

game11

இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் ..
ஓடிபிடிப்பது –  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை – வலிமை சேர்க்கும் , மணல் வீடு – சோறு பொங்குதல்  போன்றவை சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை உணர்த்தும், பல்லாங்குழி – சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் அவரது வீட்டில் செய்த உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில் விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும்.

நொண்டி,பச்சை குதிரை, மேடு பள்ளம், கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் என நாம் மறந்து போன, மறைந்து போன குழந்தைப் பருவ விளையாட்டுகள் ஏராளம்.

game5

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது. கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம் தன்னந்தனியாக. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு என சீர்படுத்தி, அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று வகைப்படுத்தி நம்மவர்கள் இதிலும் புத்திசாலித்தனத்தை ஆழமாக பதித்தவர்கள்.

கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி மகிழ்ந்தவர்கள் 1990 முன்னர் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டு நாளுக்கு நாள் மாற்றத்தை பரிசளித்து, நமது நினைவுகளை பேரழிவுக்குள்ளாக்குகிறது. மாற்றம் மட்டுமே மாறாதது என்ற போதிலும். இந்த அதிவேக மாற்றங்கள் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கின்றன…

game7

வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம்..

இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?

இப்படி எல்லாத்தையும் தொலைசிட்டு நம்ம பிள்ளைங்களுக்கு வேற எதை சேர்த்து வைக்க போறோம் ?

முதலில் பிள்ளைங்க மனநிலையை நாம்தான் மாற்றனும்.

விளையாட்டில் வியர்வை வெளியேறினால் உடம்புக்கு என்னன்னா நன்மைகள் என்று நாம்தான் சொல்லி குடுக்கணும்..

அவங்களை விளையாட அனுமதிக்கணும்.

game10

இவ்வாறான விளையாட்டுக்கள் இப்போது அழிய காரணம் புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், என ஒரு புறம் இருந்தாலும்  சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் குழந்தைகள் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவங்க  வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது.

இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டை ஆரம்பிப்போம்!

game8

தரையில் விளையாடிய காலம் மறந்து 
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்..

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய்
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

game6

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும்…

என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு 
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

  • ப்ரியா கங்காதரன்

IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–23

ஆதலினால்…
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்…
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் …
என் ரகசியம் அனைத்தையும் 
தன் ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
ஆதலினால் காதல் செய்வீர் …
l4
காதலர் தினத்திற்கு  வாழ்த்து சொல்ல காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…. அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்லை….. இரு இதயங்கள் இணைகின்ற நாள்..உண்மையான காதலினை ஏற்று கொள்வதில் தவறு ஏதும் இல்லை..
காதல் என்றுமே காதலிக்க படும் என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லையென்றாலும் ஊரோடு ஒத்து வாழ் நிகழ்வில் இந்த ஒரு நாளும் திருநாளாக மாறியதே ..
என் பள்ளி .. கல்லூரி கால கட்டங்களில் காதல் என்பது ஒரு மிக பெரிய பாவ செயல் போல ஒரு மாய தோற்றம் இருந்தது உண்மைதான் ,,
இப்போ இருப்பது போல எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும் மிகுதியாக இல்லாத காலங்களில் என்னோட கல்லூரி தோழர்களின் காதல் பயணங்களை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பும் சந்தோசமும் என்னை சுற்றி வந்து விடும் ,,
காதல் கடிதங்கள் … ரோஸ் வாங்கி கையில் வச்சுக்கிட்டு காத்திருப்பது ,,, கடைக்கண் பார்வைக்கு காலையில் இருந்தே காத்திருப்பது …
வார இறுதியில் கோவிலில் சந்திக்க வாரத்தின் முதல் நாளே திட்டமிடல் …  செமஸ்டர் லீவ் 60 நாளையும் தினமும் சபிச்சே கழிச்சது ,,’
அந்த 60 நாளும் அவங்க அவங்க காதலி / காதலன் வீடு . தெரு பக்கம் சுத்துவது … அவன் / அவ வீட்டுக்கு போன் செஞ்சு வேற யாரவது எடுக்கும்
பொழுது பூமியே பிளந்து விடுவது போல உணர்வு …
எல்லோரும் சேர்ந்து ஒரு படம் போக ஒரு மாசமா திட்டம் போட்டும் கடைசியில் மாறி விடுவது ,,
ஹா ஹா ,,, இப்படியே கழிந்து போன எங்கள் கால கட்டங்களை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை ரொம்ப குடுத்து வச்சவங்க …
விரல் நுனியில் காதலை வைத்திருக்கிறார்கள் …
வாட்ஸ் அப் … ஐமோ ..FB .. கால் … என 24 மணிநேரமும் காதலும் கையுமாக கலந்து இருக்காங்க ,, அது எவ்வளவு சந்தோசமோ அதே அளவு
கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் வருத்தம் கலந்த உண்மைதான் …
எங்க வீட்டில் படத்துக்கு போகலாம் என்று சொன்னால், வீட்டிலே ஒரு தணிக்கை குழு கூடி அந்த படத்தில் காதல் காட்சிகள் இருக்கா ?? போக கூடிய படமா என்று ஒரு பெரிய ஆலோசனையே   நடந்து எல்லாம் இருக்கு ,,,
இப்போ நடுவீட்டிலே எல்லா கண்றாவியும் வந்திரிச்சு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ..
நம்மதான் எல்லாத்தையும் சரி செஞ்சு நமக்கான சரியான பாதையை தேர்வு செய்து போகணும்…
l6
காதல் எப்போவுமே தேன்தான்…. இயற்கை சுவையில் என்றுமே திகட்டாது  …
காதலையும் ஒரு வியாபார வணிக நோக்கமாக்கி பணம் சம்பாதிக்க வலி செய்தது இந்த நாகரிக வளர்ச்சி என்றும் கூட சொல்லலாம்.
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் சொல்ல, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ..? எனும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு..
காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடவில்லை எனில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
l8
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்,  கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது.  டிஸ்கோதே, இரவு விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கென்று குத்தகைக்கு விடப்பட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் மழைகாளான்கள் போல் தோன்றி மறையும் காதலாக உள்ளன..
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.
பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ….
கம்ப ராமாயணத்தில் கம்பரின் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகு சேர்ப்பதாய் தான்  இருக்கிறது . காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் இருக்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை..
l2
காதலர் தினம் தோன்றிய வரலாறு..
கி.பி இருநூறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த மன்னன் கிளாடியஸ் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். இவருடைய  ஆட்சி காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.
மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..
ரோமில் பிப்ரவரி மாதம் என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.எனினும் வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்திருக்கிறது..
சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ என்று சொல்லப்படும்  இந்த காதலர் தினம் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்..
l1
1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் வருகிறது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது..
காதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்,  அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்..
l3
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்..
காதல்  எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது தீண்டாமல் போவது இல்லை…
ஒவ்வொரு நொடியும் உணர்ந்து சுகித்து ரசித்து வாழுவோம்.
l9
காதலை காதல் செய்து ,,,
ஆதலினால் காதல் செய்வீர் …
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் ..
ரகசியம் அனைத்தையும் 
ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
– ப்ரியா கங்காதரன்
IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–21

நம்பிக்கையுடன் தொடர்வோம்!

dawn

இந்த ஆண்டு இனிய ஆண்டே!

 

நேற்றும் இன்றும் 
மாறிவிடாத 
தவமொன்றின் வலிகளாய்

மேகங்கள் மெய்வருத்தத் 
தருங் கூலியென 
பெய்யென பெய்த 
பெருமழை தாண்டி

இதோ 
நமக்கான  விடியல் 
தன் கதவுகளை 
திறக்கிறது…

கனவுகளால் 
கட்டமைக்கப் பட்ட 
ஒவ்வொரு நாளும் 
நமக்கான  பறவையே

தேட முடிவெடுத்த பின் 
தொலைதலில் 
பயம் கூடாது…

வெல்ல  தொடங்கிய பின் 
தொடுவானம் தூரம் 
என்பதில் 
மூச்சு மட்டுமே வாங்க முடியும்…

எல்லாம் முடியும் 
என்பதாகவே பேசட்டும் 
கண்களும் காலமும்…

புதிய வருடமும் 
புதிதாக பிறக்கும் குழந்தையும் 
வளர்க்கும் கைகளும் 
வாழும் வாழ்கையும் 
தீர்மானம் செய்வது போல

நீண்டு கிடக்கும் நீலவானம் 
மௌனமாய் புன்னகைக்கிறது
இரு கரம் நீட்டி நம்மை வரவேற்கிறது.

பொதுவா ஒவ்வொரு வருட தொடக்கத்தையும் சந்தோசமா வரவேற்போம். இத்தனை வருஷம் இயற்கைக்கு எதிராக நாம் செய்த எல்லாவற்றிக்கும் ஒரே வாரத்தில் இயற்கை தந்த பதிலால் கொஞ்சம் இல்லை நிறையவே வேதனையுடன் இந்த வருடத்தை தொடங்கி இருக்கிறோம்.

முன்னாடி எல்லாம் புதுவருஷம் என்றால் காலையிலே சீக்கிரமா எந்திரிச்சு கோவிலுக்கு போயிட்டு அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கி ஆண்டை தொடங்கிய காலம் கடந்து, வருடம் விடிந்துதான் படுக்கை செல்லும் அளவிற்கு நாம் முன்னேறி இருக்கிறோம்.

2015…

மனிதம் தழைய செய்த மழை வெள்ளம்

அக்னிசிறகு நாயகன் அப்துல்கலாம் ஐயா மறைவு

இப்படி இரண்டு பெரிய நிகழ்வை இந்த ஆண்டு கடந்தோம்.

ஒவ்வொரு வருடமும் வழக்கமாக வரும் டைரி, காலெண்டர், கேக், புத்தாண்டு சபதம் என இயல்பு நிகழ்வுகள் தொடர்ந்தாலும், என்றுமே தொடங்கும் ஒரு நாளாகத்தான் தொடங்கி இருக்கிறது இந்த ஆண்டும்.

நாங்கள் புத்தாண்டை வரவேற்ற முறைக்கும் இப்போதைய தலைமுறை வரவேற்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தோம் என்றால், ஒரு தலைமுறைக்குள் நூற்றாண்டு வேறுபாடுகள்…

காதை கிழிக்கும் இரைச்சல்… உணர்வை மறக்க உற்சாக பானங்கள் என அதி நவீன வாழ்வின் அடிமைகள் ஆன நமது தலைமுறைகளை நினைக்கும் பொழுது மனம் வேதனை அடைவது என்னவோ உண்மைதான்.

பொதுவாக நாம் எல்லோருமே புத்தாண்டை ஒரு விடுமுறை தினமாக தான் பார்க்கிறோம். அதான் உண்மையும் கூட… மேற்கத்திய கலாசாரம் என்று அதை ஏற்றுக்கொண்ட பொழுதிலும், தமிழ் புத்தாண்டுக்கு உரிய மனநிறைவை ஏனோ  அது தருவதில்லை.

dawn2

கடந்து செல்லும் நாட்களில் அதுவும் ஒன்றாக எண்ணாமல் புதிதாகத் தொடங்கும் ஆண்டின் உறுதிகளாக சிலவற்றை தொடர்வோம்…

  • ‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.
  • பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.
  • ‘மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுகளிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

dawn1

  • தனித்தன்மையுடன் திகழுங்கள். அதில் பெருமை கொள்ளுங்கள்.
  • நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் அனைவரின் பார்வையும் உங்கள் மேல் உள்ளதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
  • வாழ்க்கை உங்களுக்கு அளிக்கவிருக்கும் அரிய அனுபவங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்பதே உங்கள் முன் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி.
  • முடியாது என்று மற்றவர்கள் சொல்வதை நாம் செய்து முடிப்பதன் மூலம் அடையக் கூடிய மகிழ்ச்சி அளவற்றது.
  • கனவுகளைக் காண முடிந்தவர்களால் அடைய முடியாதது என்று எதுவுமே கிடையாது.
  • எந்த ஒரு பொருளையும் முதலாவதாகவோ அல்லது கடைசி முறையாகவோ பார்ப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் மிகவும் அழகாகத் தோன்றும்.
  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.
  • நம் கனவுகளின் தேடல் வேட்டையில், தேடலில் தொலைந்து போய் அதனை விட சிறப்பான ஒன்றை நாம் பெறுகிறோம்.
  • உங்கள் வாழ்க்கைப் பாதைகளில் வரும் தடங்கல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஏனென்றால் நம்முடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே அவை ஏற்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிரச்னைகள் உண்டு. அவை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை… அவை ஒவ்வொன்றும் நன்மை தரும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியே அமைகின்றன… பிரச்னைகள் ஒவ்வொன்றும் மனிதனை பட்டை தீட்டும் வலிமை கொண்டவை.
  • இந்த ஆண்டில் தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம்தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ, அலுவலக நண்பர்களோ, நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தாகவும் இருக்கட்டும்.
    மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும்!

DSC01519

  • ப்ரியா கங்காதரன்

ப்ரியங்களுடன் ப்ரியா–20

குளிர்

winter2..

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய 

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை, பெருமழை

எதுவும் குளிரை  மட்டும் 

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்…

குளிர் காலம்… உடலின் உட்புற செல்களையும் உறைய வைக்கும் குளிரையும்,, நெருப்பில்லாமலேயே புகைய வைக்கும் பனியையும்   சூழ்ந்து கொண்டு, இந்த பருவத்திற்கே உரிய அழகுடன் மிளிரும் காலம்… ஏழைகளும்  இலவசமாக ஏசியை அனுபவிக்கட்டும் என பெருந்தன்மை காட்டும் இயற்கை.. பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது..குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்…

.

என் சிறு வயதில் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது.. அதிலும்  படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, சூடான காப்பியின் நறுமணத்துடன் கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்..காப்பியை குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும்.. யாராவது எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான்.. பாட்டி வீட்டில் விறகடுப்புதான்.. அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் வெளியில் வந்து பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவதை பார்க்க  வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்று  அக்கா,, அண்ணன் களுடன் சேர்ந்து செய்ததும் உண்டு.

கடவுளின் தேசத்தில்  நானிருந்த வீட்டின் பின் புறத்தில் பலா மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்து இருக்கும், சுற்றிலும் செடிகள் இருந்தாலும்  அந்த  மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து கம்பிரமாய் இருக்கும் ,, குளிர் காலங்களில் பாட்டி பேச்சை கேட்க்காமல் ஆட்டம் போட்டு திட்டு வாங்கி பலா  மரத்தடியில்   உக்காந்து அதோட இலையை கன்னத்தில் வைத்து உரசும் போது சவரம் செய்யாத அப்பாவின் 5 நாள் தாடை  முடியின் சொரசொரப்பும் கத கதப்பும் எனக்கு கிடைக்கும் ..   அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப் போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும் ..

குளிர் அதிகமாக இருக்கும்  நாட்களில், வைக்கோல்போரை கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்து போட்டு . வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்ந்ததையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் குளிருக்கு  எவ்வளவு இதமாக இருக்கும் தெரியுமா..?

நம் ஊரில் எப்பொழுதும் வெயில் காலம் . மழைக் காலம், குளிர் காலம் என்று காலநிலை மாறி,மாறி வந்தாலும், பெரும்பாலான நாட்கள் வெய்யிலிலும், வியர்வையிலும் தான்.. குளிர்காலம்… மனதுக்கும் உடலுக்கும் குளிரூட்டக் கூடிய காலம் தான். இதோ குளிர்காலம் தொடங்கிவிட்டது…ஆனாலும்,பனிக்காலம் தொடங்கும் போதே நமது தலை முதல் கால் வரை ஒவ்வொருவிதமான தொல்லைகள் ஏற்படுகின்றது.கொஞ்சம் கவனமாக இருந்தால் எந்தவித பிரச்சனையும் இன்றி பனிக்காலத்தையும் ரசிக்கலாம்.

winter1

குளிர்காலத்தை சமாளிப்பது எப்படி :

குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவு நிறைய ஊட்டச்சத்து நிரம்பியவையாக இருக்கவேண்டும்.

இதன் மூலம், குளிர் காலங்களில் ஏற்படும் ஜல தோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக உடல்வளத்தை பெறலாம். குளிர்காலம் தொடங்கி விட்டதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய நேரம் இது.. கம்பளிகளையும், ஸ்வெட்டர்களையும் எடுத்து தயாராக வைத்திருங்கள். வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். பெரியவர்கள் மப்ளர் கட்டிக் கொள்ளலாம். தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று பிரட்சனை தரும். ஆகவே இப்படிச் செய்வது வரும்முன் காப்பது போலாகும்..

.

பனிக்கால பராமரிப்பு:-

இந்த குளிர்காலத்தில் சருமமும் தலைமுடியையும் வறண்டு போகச் செய்யும். பனிக்காலம் வந்து விட்டாலே உடலில் ஒரு வறட்சித் தன்மையும் வந்து விடுகிறது. சருமம் வறண்டு போகாமல் இருக்க கிரீம்கள் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்பாக இலேசாக எண்ணை தடவிக் கொண்டு குளித்தால் குளித்த பின் தோலில் வறட்சியால் வரும் சுருக்கங்கள் தவிர்க்கப்படும்.

சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறும், சிறிதளவு தேனும் கலந்து குடிக்க புத்துணர்ச்சியாய் இருக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டால் சருமத்தின் உள்சூடு பாதுகாக்கபடும். கால்பாதங்கள் வெடித்து விடுவது பனிக்காலங்களில் சகஜம். இதற்கு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் வைத்து நீரில் உப்பு சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து. 15 நிமிஷம் கழித்து ப்யூமிக்ஸ் கல்லில் நன்கு தேய்க்கவும். பிறகு பாதங்களை அழுந்தத் துடைத்து லேசாக க்ரீம் தடவவும். பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் நல்லது அது வாசிலைனுக்கு சமம். தோலுக்கு சிறந்த பாதுகாப்பை தரும்.

உதடுகளுக்கு அவ்வப்போது சிறிது வெண்ணை பூசவும். வாசிலைன் அல்லது உதடுகளுக்கென்றே உள்ள

பிரத்தியேகக் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.

பாதாம்

பாதாம் பருப்பு  பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.  இது சர்க்கரை நோய்க்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும். வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளதால் உங்கள் சருமத்திற்கும் சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவாகும்.

தேன்

இந்த குளிர்காலங்களில்  தேனை சேர்த்து கொள்ளுவது நல்லது . இது ஜீரண சக்தியை அதிகரித்து உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உங்கள் நோய்எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

ஒமேகா 3

கொழுப்பு அமிலங்கள் இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் குளிர்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளில் சிறந்த ஒன்றாகும். மீன்களில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும். தேவையான அளவு மீன்களை உட்கொள்ளுவது குளிர்காலங்களில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவும்

இதில் அதிக அளவில் ஜிங்க் நிறைந்துள்ளதால் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும். இந்த வெள்ளை ரத்த அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருப்பது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் தான் நாம் பலவகை நோய்களிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

இஞ்சி

அதிக மருத்துவப் பலன்களை பெற்ற இஞ்சி குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் உட்கொள்ளப்படும் பொதுவான உணவாகும். இது ஜலதோஷத்திற்கும், காய்ச்சலுக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்கக்கூடியது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால், அது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களை ஜீரணிக்க உதவி புரியும். மேலும், அசிடிட்டியை போக்குவதற்கும் உதவி புரியும்.

வேர்க்கடலை

குளிர்காலங்களில் பிராண வாயுவின் அளவு குறைவாக இருக்கும். அதனால், இந்த குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும் தேவையான பிராண வாயுவை உட்கொள்வதற்கும், இந்த வேர்க்கடலைகளை உணவில் சேர்த்துக் கொள்லலாம். இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுவகைகளில் ஒன்றாகும்.

winter4

குளிர் காலத்தில் நோய்களைத் தடுக்கும் முறைகள்

எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும்.

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும்.

வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும். இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை’ கட்டி வைக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது.

அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம். அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும். உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம்.

தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:- வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும்.

தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம்.

இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும். சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும்.

குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்..

winter5

நீ…நான்…

பின் நமக்கான குளிர் …

நீயும் நனைய நானும் நனைய

நம்மோடு சேர்ந்து தானும் நனைந்து

நடுங்கியது குளிர் ..

மழை குளிரை  மட்டும் கொணர்வதில்லை

சில நேரங்களில் காதலையும் …

குளிர் உன் அருகாமையில்

அருமையாகவும்

தூரத்தில் அவஸ்தையாகவும் ..

சிறுமழை , பெருமழை

எதுவும் குளிரை  மட்டும்

கொண்டுவருவதில்லை

உன் நினைவுகளையும் சேர்த்தே ..

நீ மழையாக

நான் துளியாக

மெல்ல பொழியட்டும்

குளிர் சாரல் …

நம் உலகில்

நான்

நீ

பின், நமக்கான குளிர்

– ப்ரியா கங்காதரன்

IMG_20151029_123940

ப்ரியங்களுடன் ப்ரியா–16

சேமிப்பும் செல்லங்களும்!

sav5

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

sav3

இனிமையான இல்லறத் தலைவியின் பண்பாக அறியப்படும்

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்ற வள்ளுவனின் வரியை இன்றைய கால சூழலில் இவ்வாறுதான் கையாள வேண்டும் ,

தனது சொத்துகளையும் பாதுகாத்து தனது கணவனின் சொத்துகளையும் வளர்த்து , குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்கு வேண்டிய பாதுகாப்பை சோர்வில்லாமல் செயல் செய்பவளே நல்ல குடும்ப தலைவி.

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று பள்ளியில் படிக்கிற காலத்தில் ,மண்டையில் இடித்து, இடித்து சொல்லிக் கொடுத்துவிட்டு, படிப்பு முடிந்தபிறகு “ கடன் வாங்காத குடும்பம் கரையிலேயே நிற்கிற கப்பல்” என்று வாழ்க்கைக்கு தலைகீழ் பாடம் நடத்துவது யாருடைய தவறு? வரவுக்குள்ளாக செலவு செய்கிறபொழுது வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர , கஷ்டமா மாறாது ; வரவை மீறி , கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு கஷ்டம்  மட்டுமல்ல…  பெரும்பாலும் நஷ்டமே ..

இதை தடுக்க தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்.

sav1

சேமிப்பை முதலில் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்!

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின்  சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் நம்ம குழந்தைகளின் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்…

sav7

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.

ஏனெனில், நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.

sav2

‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது.

பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை” என்று (குறள் 759).

sav7

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.

(1) கஞ்சத்தனம்

(2) சிக்கனம்

(3) ஆடம்பரம்

(4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது  மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், ‘சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார், தாங்கள் ஏன்?‘’

உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!

”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாக அவற்றை இழந்துவிட நேரும்.

sav6

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…

Neither a borrower nor a lender be;
For loan oft loses both itself and friend,
And borrowing dulls the edge of husbandry.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு  வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன..

எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.

sav4

மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்…

பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்…

சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர … மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.

சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்!

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

  • ப்ரியா கங்காதரன்

20150414_093124

பயணங்கள் மறப்பதில்லை !

ப்ரியங்களுடன் ப்ரியா–15

செப்டம்பர் 27

உலக சுற்றுலா தினம்

tour101

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு .. .

எடுத்துவை  பகிர்ந்து கொள்வோம்…
சிறகுகள் விரித்துப் பறக்க
அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம்…
பாதையில் தெளித்துச் செல்ல
அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு…

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 

நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …
உன்முகம் துடைக்க 
அதோ அந்த
புல்லின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம்..
பயணங்கள்
மறப்பதில்லை…
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
tour7

நம்மோட  மனசு  ஒரு ஓயாத பயணி. தான் சென்று வந்த இடங்களை மட்டுமல்ல… செல்லாத இடங்களுக்குக் கூட பயணிக்கும் வல்லமை கொண்டது. பார்த்த இடங்களைக் குறித்து நாலு பேரிடம் சொன்ன பிறகே சிலரது மனசு அமைதியாகும். இன்னும் சிலருக்கு அதைப் பத்தி எதாவது குறித்து வைத்தால்தான் தூக்கமே வரும்!

நானும் அப்படிதான்… பார்த்ததை பகிர்வதில் உள்ள பரவசம் மிக மிக இனிமையானது…

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் ஓய்வாக மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள்.சுற்றுலாவின் அடிப்படையே ‘பயணங்கள்’தான்.

tour10

1814ல் தாமஸ் குக் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் ‘சுற்றுலாவின் தந்தை’ என்றும் ‘உலகின் முதல் பயண முகவர்’ என்றும் கருதப்படுகிறார்.
இப்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டிராத சுவிட்சர்லாந்தின் (ராணுவமே இல்லாத நாடும் கூட!) முதன்மை வருவாயே சுற்றுலாதான்.
tour4
சுற்றுலா…
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான ‘ரீ சார்ஜ்’ செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.
மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களைக் காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவேதான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, ‘ஆணையிடும் மனிதர்’ இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
tour1
அன்றாட நிகழ்வுகளில் கரைந்துபோகும் வாழ்வை ஒருசில கணங்களே உயிர்ப்பிக்கின்றன. மழலையின் சிரிப்பு, மகிழ்வூட்டும் திருவிழா, பிடித்த புத்தகம், மலைக்க வைக்கும் மலைகள், கலையின் உச்சமான சிலைகள், உற்சாகமூட்டும் வீதிகள் என இப்படிப் பல விஷயங்கள் நம் வாழ்வைப் புதுப்பிக்கின்றன. மனம் ஓரிடத்தில் நில்லாமல் கவலைகளில் உழன்று, இன்பங்களில் திளைத்து தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கிறது. அதனூடாகத்தான் இந்த பயணங்களும் பயணம் சார்ந்த  வாசிப்பும்.
tour8
இன்னைக்கு எவ்வளவோ சுற்றுலா  பயணங்கள் சென்றாலும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது ஐந்தாவது படிக்கும் போது பள்ளியில் போன   என் முதல் சுற்றுலா பயணம்தான்.

மருதமலை… சின்ன வயதிலே வீட்டில் எல்லோருடன் பல முறை சென்று இருந்தாலும் முதல் முதலாக தனியாக சென்றது…

‘பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதணும்‘ என்று டீச்சர் சொன்னதும் பார்க்கும் இடத்தை எல்லாம் வார்த்தையாக வருடி வந்தது…

அதிகாலையிலேயே  எழுந்து அம்மா எங்க எல்லோருக்கும் மதியம் சாப்பிட புளி சாதமும், பருப்பு சட்னியும்  அம்மா கட்டி தந்தது…

25 பேருடன் போன என்னை வழியனுப்ப எங்கள் வீட்டில் இருந்து வந்த 35 பேர் … இன்னும் மனசை விட்டு மறையாத நினைவுகள்!

தொடர்ந்து எத்தனையோ நாடுகள், மாநிலங்கள், ஊர்கள் சென்றாலும் முதல் பயணம் என்னால் என்றுமே மறக்க முடியாது.

நான் ஈடுபட்டுள்ள விற்பனை துறையில் சிறந்த முறையில் செயல்பட்டதால் இரண்டு முறை மலேசியா சுற்றுலா.

என்னை நானே புரிந்துகொள்ள  வருடம் இருமுறை திருப்பதி…

இயற்கையுடன் பேச வருடம் இரு முறை கொடைக்கானல், ஊட்டி,

கடவுளின் தேசமும் எனக்கு சொந்த தேசம் ஆனதால் மனது வலிக்கும் போதெல்லாம் கேரளா பாட்டி வீடு…

இப்படி தமிழகத்தின் தென்கோடி முதல் வடக்கு வரை பயணம் செஞ்சாச்சு.

ஆனாலும் இன்னும் தேடல் குறையவில்லை … மனசு இன்னும் தேடுது. எதையுமே தொலைக்காமல் தேடுவதும் சுகம்தான்!

விமானம்… ரயில்… பஸ் என ஒவ்வொன்றிலும் வித விதமான ஆசான்கள் சக பயணியாக…

tour3

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்… ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு நமது இந்தியா. ‘உலக புவியியலாளர்களின் சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டிடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும் நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் நமது நாட்டில் உண்டு. நாம் நமது நாட்டிலே ரசிக்க உணர நெறைய இருக்கு…

tour2

ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் கண்ட காட்சிகள் வாழ்வியலை அழகாக ரசிக்க வைத்தது ..

ஒரு புறம் வாழ்வை தேடி அயல்நாடு பயணிக்கும் சகோதர்களின் கண்ணீர்… ஒரு புறம் வாழ்வை வென்று தாயகம் திரும்பும் சகோதர்களின் சிரிப்பு…

இப்படி இரண்டு துருவங்களை சந்தித்தாலும் அந்த இரு துருவங்களும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சந்தித்து கண்ணீர் சிரிப்பாகவும், சிரிப்பு கண்ணீராகவும் மாறும் என்ற நிலையை உணரும் போது பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்பது கண் முன்னே வந்து போனது…

tour6

என் ஒவ்வொரு சுற்றுலாவும் எனக்கு வாழ்வியல் பாடங்கள்தான்…

கலாசாரம், உணவு முறைகள்,  உழைக்கும் முறைகள், அப்பப்பா .. எல்லாமே பாடம்தான் …

‘பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை’ என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவேதான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப்புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். ‘அறிவை விரிவு செய்… அகண்டமாக்கு…’ என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!
tour5

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். அப்படித்தான் பயணங்களை பார்க்க வேண்டும்.

எதிர்பாராத கணங்களில் ஒளிந்திருக்கும் அழகை தரிசிக்கத் தொடங்கும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது.

ஏதோ  ஒரு வகையில் பயணங்கள்  ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா? இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடையதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத் தொட்டுத் தொட்டு நாம் பயண பட்டுத்தான்   போகிறோம்?

tourm
மலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றிவிடும்.

மலைமுகட்டில் நின்று நீங்களே பேசி பாருங்களேன்… நம் மனதில் தோன்றும் எல்லா வினாக்களுக்கும் கடவுளே பதில் சொல்வது போல இருக்கும்.

அதான் நிஜமும் கூட … ஒருவனை உருவாக்குவதில் இயற்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

மனித வாழ்க்கையே ஒரே ஒரு வினாடிதான் என்ற புத்தர், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார், ‘வாழ்வு ஒரே ஒரு நொடி என்று அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்; ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும்’ என்பதுதான் அது.

இனி, இதுமாதிரியான அனுபவத்திற்காகவாவது, சின்ன சின்ன சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வோம்!

tour9

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு . . 

எடுத்துவை , பகிர்ந்து கொள்வோம் …

சிறகுகள் விரித்துப் பறக்க

அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம் …

பாதையில் தெளித்துச் செல்ல

அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு …

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 
நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …

உன்முகம் துடைக்க 

அதோ அந்த
புல்களின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு  …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம் ..
பயணங்கள்
மறப்பதில்லை …
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
– ப்ரியா கங்காதரன்
IMG_20150721_070238

ஏய் வாசகா !!! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

ப்ரியங்களுடன் ப்ரியா–14

book1

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாகக்கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும்…
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன…
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்…

 book2

ஏய் வாசகா !!!  உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

என்று நகுலனின் ஒரு கவிதை…

இந்த வரி ஒன்றே போதும் , வாசிப்பவனும் , வாசிப்பதுவும் எவ்வளவு பெரிய வரம் என்பதற்க்கு.. எப்போதெல்லம் நாம்  தொலைந்து போனோமோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கொடுப்பதும் ,எதையெல்லாமோ நாம்  தொலைத்தோமோ அதையெல்லாம் இப்போதும் தேடித்தருவதும் புத்தகங்கள்தான் .அப்படி இருந்தும் ஏன் வாசிக்கும் பழக்கம் தொடர மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணுகிறதே இந்த மனம் எனும்போது மனசின் மேல் அறிவு கொஞ்சம் கோபம் கூட படுகிறது

புத்தகம் படிப்பது என்பது  நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் குறித்து  ஆயிரம் கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன…

 book

எனது வாசிப்பு …

உயிர்ப்பாக எழுத்தை நான் சுவாசிக்க ஆரம்பித்தது கடவுளின் தேசத்தில் தான்.. ஆம்… நான் வாசிப்பை தொடங்கியது கேரளாவில்தான்!

நான்காம் வகுப்பு வரை மழலை தமிழை மலைமுகட்டில் வாசிக்க ஆரம்பித்தேன் ..

அம்மா அப்பாவின் வருகை அவர்களின் அருகாமை அன்பை விட அவர்கள் எனக்கு கொண்டுவரும் சிறுவர்மலர் .. பூந்தளிர் ..எதிர்நோக்கியே இருந்தது …

காமிக்ஸ் கதைகள் .. அம்புலிமாமாவில் தொடங்கிய எனது வாசிப்பு இன்றுவரை தடையற்ற வெள்ளமாக பல்கி பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.

கொங்குவாசியான நான் எங்க ஊர் எழுத்தாளார் ராஜேஷ் குமார் அவர்களின் தீவிர வாசகியாகி ஒரு கால கட்டத்தில் க்ரைம் நாவலும் நானுமாகி போனதும் நிஜமே.

அதனை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் குடும்ப நாவல் பக்கம் திரும்பிய பொழுது கல்கியில் தொடராக வெளியான லக்ஷ்மி அம்மாவின்  எதற்காக என்ற நாவல் வாசிப்பின் மறுபக்கத்தை எனக்கு அழகாகக் காட்டியது.

இதுவரை படிக்கணும் என்று ஆசைப்பட்டு வாங்கியும் இதுவரை படிக்கச் முடியாத நாவல் ** கங்கை கொண்ட சோழபுரம் ** 2 ,3 , 4 பகுதிகள் மட்டுமே.

அதை போல பலமுறை படித்த நாவல்கள் என்றுபார்த்தால் ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்கள் ** காதெலெனும் சோலையிலே , மாலை மயங்குகிற நேரம், வளையோசை, விடியலை தேடும் பூபாளம் , மானே மானே ,,, புதுவைரம் நான் உனக்கு ** இதுவரை எத்தனை முறை வாசிச்சு இருப்பேன் என்று தெரியலை ,, எத்தனை முறை வாசிக்க போறேன் என்றும் தெரியலை …

ஆதர்ச எழுத்தாளர் வரிசையில் நான் நெறைய பேரை சந்தித்து இருந்தாலும் இதுவரை நிறைவேறாத விரைவில் நிறைவேற வேண்டிய ஆசை என்று ஒன்று இருந்தால் அது ரமணிச்சந்திரன் அம்மா அவர்களை சந்திக்கணும்… சந்திச்சே ஆகணும்…

எல்லோருக்கும் வாசிப்பின் மேல காதல் வர எதாவது ஒரு காரணம் இருக்கும். எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா குமுதம்,விகடன் என்று படிக்கப் படிக்க எனக்கும் வாசிப்பின் மீதான காதல் வளர ஆரம்பித்தது …

சிறுவயசில் மளிகை கடையில் பொட்டலம் கட்டி தரும் தாளை வீட்டில் வந்து பிரிச்சு படிக்கக் கூட பொறுமை இல்லாமல் இடப்புறம் வலப்புறம் என்று அந்த பொட்டலத்தை தலைகீழாக வாசித்துதான் வீடு வந்து சேர்வேன் ..
 book5

வாசிக்கும் சமுகமே வளரும் சமுகம் என்ற வார்த்தையை மனதார பின்பற்றுவள் நான். இந்த நாகரிக கணினி உலகில் என் மகளையும் வாசிக்க வைக்கணும் என்று சிறுவயதிலே நீதிக்கதைகளில் ஆரம்பித்து இப்போ போன மாதம் கல்பனா சாவ்லா பற்றிய புத்தகம் வாங்கி கொடுத்தேன்.

வாசித்தலில் வருடியவர்கள்.. ( இதை முன்னமே நமது ஸ்டார் தோழி பகுதியில் எழுதி இருந்தேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஆகச்சிறந்த படைப்புகள் நீங்களும் இதை வாசிக்கணும் என்று)

சில நேசிக்கும் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும்… கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும்… அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சிலரின் வரிகள்…

1. எஸ் ரா ..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி.

s-ramakrishnan
வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணித்த அனுபவம் .. ஒவ்வொரு பக்கமும் ஒவொரு தேசமாய் ஒவ்வொரு மனிதராய் சந்தித்த போது பயணத்தின் சுகானுபவம். படிக்கும் பொழுதே பலரை சந்திக்கும் அனுபவம்.

இவரின் விழி வழியே வரிகளை கடக்கையில் அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என மனசு கேக்காமல் இருபதில்லை . , தேசாந்திரி புத்தகத்தின் சில தேன் துளிகளை சொல்கிறேன் ..தித்திப்பை நீங்களும் ரசியுங்கள் ..

சாரநாத்தில் ஒரு நாள்…. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது..

நிலமெங்கும் பூக்கள்…

பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்…. எத்தனைவிதமான மலர்கள்…! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் ..

உறங்கும் கடல்…

தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன….

2. எழுத்துச் சித்தரின் வரிகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை .. பாலா ஐயாவின் வரிகளை புத்தகங்களை வரிசை செய்து வகை செய்யும் அளவிற்கு எனக்கு பக்குவம் இல்லை என்றாலும் ஐயாவின் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்.

 balakumaran

மனசோ உடம்போ சோர்வாவும் பொழுது ஐயாவின் புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை ..

ஐயாவின் வரிகளில் எனது அடி நாதம் வென்றவை …

மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.

உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை. — குன்றிமணி

விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.- சுழற்காற்று

நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை. -உத்தமன்….

பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.–என் கண்மணித்தாமரை

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர். ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன்..

 ramanichandran

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை.

சில நேரங்களில் அந்த கதாநாயகிகள் ஆகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு … படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது….

4. விகடனில் தொடராக வந்து படித்ததுதான் என்றாலும் மீண்டும் புத்தகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்… இன்று வரை மீள இயலவில்லை!

 vairamuthgu

திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

வைரமுத்து ஐயாவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிய கருவாச்சி காவியம் பற்றித்தான் சொல்கிறேன் ..

ஒத்தையில கருவாச்சி புள்ள பெத்தது. படிக்கும் போதே உசிரு ஒடுங்கி ஒரு நடுக்கம் வருவது தடுக்க முடியாது

கருவாச்சி, அவ ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவனப்பன் சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம். இவங்க எல்லார் கூடவும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்ச அனுபவம் இருக்கும் இத படிச்சி முடிச்ச உடனே.

நல்லா காவியம் படிச்ச சந்தோஷமா?.. கதைல உள்ள சோகமா?.. எது விஞ்சி நிக்குது-னு தெரியாது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

5. நிலவையும் தாளில் கொண்டு வந்த வித்தகக் கவி பா.விஜய். கி.பி, கி.மு நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய் . சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

 pavijay
பா.விஜயோட “உடைந்த நிலாக்கள்” ஆகச் சிறந்த கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு… எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு…

ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுட்டே போகும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

“பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன் முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன் தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன் தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன் மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்”

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.

ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரும்போது அதை தொடர்ந்து அந்த புத்தகத்தின் ஆரம்பம் ஒருவிசயத்தில் தொடங்கி மெல்ல தன் வசப்படுத்துகிறது ,பிறகு ஒரு இடத்தில் நம்மை யோசிக்க வைத்து விட்டு ஏதோ ஒரு முடிவை சொல்லியதுபோல தந்து விட்டு குழந்தைகளின் யோசிக்கும் திறனை தொடங்கிவிடுகிறது என்பதோடு  சூசன் கிரின்பீல்ட் நிறுத்திவிடவில்லை.அதை படித்து காட்டும் பக்குவத்தையும்  பொறுளையும் நாம் சொல்ல சொல்லும்போது மூளை செல்கள் ஊக்கம் பெற்று படிப்பில் அவர்களுக்கு ஒரு தொடர்ப்பை ( Continuity ) நினைவுறுத்த பயிற்சி தருகிறது என்கிறார்.அது மட்டுமல்ல இது கம்யூட்டரில் செலுத்தும் கவனத்தை விட பல மடங்கு பலன் தருகிறது என்கிறார் .

 book3

மனிதரில் நாம் தரம் பிரிப்பதை போல புத்தகமும் அவ்வளவு சுலபமாக எடை போடுவது தவறான பார்வை .ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிர்தான் .அந்த புதிரை அவிழ்க்க பலருக்கும் பொருமை இருந்தாலும் ஏன் இவன் இப்படி எழுதுகிறான் என்று எழுதியவன் தளத்தில் நின்று பார்க்கும் பக்குவம் வரவேண்டும் என்பது ஆரோக்கியமான சிந்தனை .

சமுதாய வளர்ச்சியில் தனிமனித பங்காக வாசிப்பை சொல்வேன் நான் ..

வாசிப்பவன் என்றுமே பிறரை நேசிப்பான் ..

பிறரை நேசிப்பவன் என்றுமே தவறு செய்ய மாட்டான் …

வாசிப்போம் …வளம் பெறுவோம் …

 book4

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாய் கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும் …
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன.
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்.

  • ப்ரியா கங்காதரன்

book6

ப்ரியங்களுடன் ப்ரியா – 13

ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக!

நிலவு ஊடுருவ 
முற்றத்தில் 
பாட்டி கதை சொல்ல 
அம்மா சோறு ஊ ட்ட 
அப்பா தலை கோத
தங்கை விரல் நீவ
குடும்பம் ஒரு கதம்பமாக 
அழகான ரோஜா கூட்டம் நடுவில் 
ஆசிர்வதிக்கப்பட்ட 
தேவதையாக நான்!

ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக… குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றி , இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும் சிட்டுக்குருவிகள் போல . சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு நமது கூட்டு குடும்பம்.  அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம் நமது குடும்ப முறைகள் . இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழும் நிலை காலத்தின் கட்டாயமாக…

p1

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.

மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது.

தமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்க்கு காரணம். கூட்டு குடும்ப வாழ்க்கையும் அங்கு உருவான அன்பும் தான்;. கூட்டு குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் ஒடி வந்து உதவும், ஆதரவு தரும் அன்பும், நேசமும் அங்கிருந்தது. குடும்பத்தில் வேலைகள் பங்கிட்டு செய்யும் ஒற்றுமையிருந்தது. மாமியார் கொடுமைகள் கூட்டு குடும்பத்தில் அவ்வளாக இருந்ததில்லை. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் ஆண்கள் போதை, பேதைகளுக்கு அடிமையாக பயந்தனர். பெண்கள் குடும்பத்திற்க்கு தெரியாமல் எதையும் செய்ய தயங்கினர். உற்றார் உறவினர்களுடன் நெருக்கம் வளர்ந்தது. நல்ல நண்பர்கள் யார் என்பதற்க்கான அடையாள படுத்தல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் வளரும் இளம் வயது இளைஞன் இளைஞிகள் தவறு செய்ய தயங்கினர்.

இப்போதைய நிலைகள் என்ன ?? சிதைவை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது நமது குடும்ப அமைப்பு முறைகள் ..

பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம். அப்படி உறவுகளைப் போற்றும் சந்தோஷ குடும்பங்களின் அனுபவங்களை, பகிர்ந்து கொள்வோம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து குடித்தனம் செய்வது தான் கூட்டுக் குடும்பம். என்னைப் பொறுத்தவரை கூட்டுக் குடும்பத்தில் நிறைய கற்றுக் கொள்ளலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள,ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க, நம்முடைய முன்னோர்களிடமிருந்து நம்முடைய பழக்க வழக்கங்களையும்..நடை முறைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

வைசு ஸ்கூல்ல மிஸ் எல்லா குழந்தைங்க கிட்டயும் அவங்க குடும்பம் பத்தி கேட்டிருக்காங்க. வைசு சொல்லி இருக்கா எங்க வீட்டுல 7 பேரு இருக்கோம்.. தாத்தா,பாட்டி, சித்தி,சித்தப்பா, நான், அப்பா,அம்மா எல்லாரும் கூட்டுக்குடும்பமா இருக்கோம்னு சொல்லி இருக்கா, கிளாஸ்ல 37 குழந்தைங்க இருக்காங்க நீ மட்டும் தான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வர கேட்கவே சந்தோசமா இருக்குனு சொல்லிருக்காங்க…  7 பேர் இருக்க குடும்பத்துக்கே மிஸ் இவவளவு சொல்லி இருக்காங்க.. அப்போ என் சின்ன வயசுல இங்க எப்படி இருந்தாங்கனு தெரிஞ்சா இன்னும் என்ன சொல்லி இருப்பங்கனு தோணுச்சு.. அப்போ யோசிச்சேன் கூட்டு(க்) நம்ம குடும்பம் பத்தி எழுதாமேனு..

சின்ன வயசுல ஸ்கூல் லீவுக்கு ஒவ்வொரு முறையும் பல்லடம் வருவதற்க்கு ரொம்ப புடிக்கும்.. சின்ன பாட்டிகள் இருவருக்கும் ஒரே குடும்பத்தில் திருமணம் அண்ணன், தம்பி என.. ஒவ்வொருக்கும் சுமார் 8 குழந்தைகள், இது போக வீட்டிற்க்கு வரும் விருந்தினர்கள், அம்மா, பெரியம்மா, சித்தி, என லீவுக்கு வரும் குழந்தகள் வேறு… இந்த காலத்தில் ஒரு குழந்தையை வளர்க்கவே ரொம்ப கஷ்டம் அந்த காலத்துல எப்படி தான் இந்தனை குழந்தைகளை வளர்தாங்களோனு நினைச்சா இப்போ கொஞ்சம் பிரமிப்பா தான் இருக்கு..

பாட்டிங்க கிட்ட அந்த காலத்து கதை எல்லாம் கேட்கும் போது ரொம்ப சுவாரஸ்யமா தான் இருக்கும்.. சமையல்ல எல்லாம் இப்போ ஆட்ட,அரைக்கனு எல்லா வசதியும் வந்திடுச்சு அந்தக் காலத்துல இவ்வளவு பேருக்கும் எப்படி சமைச்சிருப்பாங்க..? அந்த பெரிய ஆட்டாங்கல்ல இப்போ ஒரு சுத்து சுத்தரருக்கே இவ்வளவு சோர்வாகி விடுது…

அத்தைங்க சமையலும் அப்படிதான்.. பாட்டிங்க தான் ஒரே வீட்டிலிருந்து வந்தவங்க..  ஆனா அத்தைங்க எல்லாம் அப்படி இல்லையே வேற வீட்டிலிருந்து வந்தாலும் அவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்க.. எல்லா மாமாங்களுக்கும் திருமணம், அவர்கள் குழந்தைகள்ன்னு இன்னும் அதே ஓற்றுமைதான் அனைவருக்குள்ளும். இன்றும் எங்க வீட்டில் விசேஷம் என்றால் ஒரு நேரத்திற்கு 80 பேருக்கு சமைக்கனும், ஒரு அத்தை அடுப்பு பார்த்து பார்த்துப்பாங்க, இன்னொரு அத்தை காய்கறி எல்லாம் வெட்டி பண்னுவாங்க, நல்ல வேளை எனக்கு எல்லாம் பரிமாறும் வேலை மட்டும் தான்( மருமக அடுப்படியில கஷ்ட படக்கூடாது நினைச்சிருப்பங்க போல ).. சின்ன வயதிலிருந்து பார்ததினாலோ என்னவோ திருமணத்திற்க்கு பின்னும் இயல்பாய் அவர்களுடன் இருக்க முடிந்தது என் வரம்..

இன்றும் வீட்டின் மூத்த மருமகள் இப்படிதான் இருக்கனும்.. பார்த்துக்க எப்படி செய்யறோம் நீயும் நாளைக்கு இப்படி தான் இருக்கனும்னு சொல்லுவாங்க.. தாத்தா, பாட்டிக்கு வயதானாலும் இன்றும் மரியாதையாய்,அன்பாய், பாசமாய் அவர்களுக்கு வேண்டியதை செய்கிறார்கள்… ஊரிலும் எங்க குடும்பத்திற்க்கு இருக்கும் மரியாதையே தனிதான்..

கூட்டு குடும்பம் ஒன்றில் தானே அன்பும் நெஞ்சம் அதிகம் இருக்கும் ..
வீட்டு வேலை குவியும் போதும் ஆளுக்கொன்றாய் செய்தே முடிக்கும்..
மனந்தனை சுமக்கும் அணுக்கள் போலவே..
சின்ன சின்ன வேலைக்கே பிள்ளை உண்டு வீட்டிலே..
தாகம் வந்த நேரத்தில் தண்ணீர் கொண்டு தருவாளே..
தடம் மாறி போகும் போது வழி காட்ட பெரியோர் உண்டு..
பசி என்று சொல்லும் முன்னே பரிமாறும் கைகள் உண்டு..
ஒரு மரக்கூட்டிலே பறவைகள் போலவே வாழ்வதும் ஆனந்தம்.. என்று சொல்வதும் சரிதான்…

கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள்

என்னைப் பொறுத்த வரையில் நிறைய நன்மையே கிடைத்தது எனலாம். இன்றும் எவ்வளவு வேலை இருந்தாலும், முகம் சுளிக்காமல் , என்னால் வேலை செய்ய முடிகிறது. அடுத்தது, சகிப்புத் தன்மை, இவங்க  இப்படிதான் இவர்களைக் ஏன் குறை சொல்லனும் . ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கத் தான் செய்யும் என்று ,  என்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சிப்பேன், முடியவில்லை என்றால் விட்டு விடுவேன்.. எல்லோருடனும் பேசிக் கொண்டு வேலை செய்வது  வேலை பளுவைக் குறைக்கிறது,

பண்டிகை நாட்களில் பலாரங்கள் செய்ய, பாத்திரங்கள் தேய்ப்பது, வேலைக்காரி இல்லாவிட்டால், தன் கையே தனக்கு உதவி என்றிருப்பது, அவசரத்திற்கு புடவை, நகைகளை, மாறிக்கொள்வது,  வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வது, தாராள குணம், பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது, உறவினர்களுக்கு நல்ல விருந்தோம்பல் செய்வது என இவை எல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

புதிதாக எந்த ஒரு வேலை செய்ய துவங்கும் போதும் நமக்கு பக்க பலம் இருக்கிறது என்பதே நம்மை ஊக்குவிக்கும்.. எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களை கலந்து பேசி முடிவெடுக்கலாம். அவர்களுடைய அனுபவம் நமக்கு நல் வழிக் காட்டும். ஒருத்தருடைய பலம் , பலவீனம் அறிந்து வேலைகளை செய்யலாம்.முக்கியத்துவம் கொடுப்பதால் , சீக்கிரத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது. அன்பும்,பண்பும் பரிமாறி , உதவும் வழக்கம் இருப்பதால் சகிப்புத் தன்மை வருகிறது..பெரியவர்கள் எப்படி சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துகிறார்கள் என்று அனுபவத்திலே தெரிந்து கொளவதால், அதை அடுத்து ,அடுத்து வரும் சந்ததியும் அந்த வழி முறைகளைக் கடைப் பிடிக்க முடிகிறது.

ஒரு கலர் ப்பென்சில் பாக்ஸில் எவ்வளவு விதமான கலர்கள்..எல்லாம் தனித்து இருந்தாலும் அவற்றை வைத்து ஒரு படம் வரையும் பொழுது, எல்லா கலருமே தனித்தனியாக பிரதிபலிப்பதைப் போல தான் கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களும்.. தனித்து இருந்தாலும் குடும்பம் ஒன்றாக சேரும் போது ஒப்பற்ற ஓவியமாக திகழும்..

போன வருஷ கோடை கொண்டாட்ட நினைவுகள் :

பள்ளியின் கோடை விடுமுறை ஆரம்பிக்கும் முன்னரே, என் மகள் ஆரம்பித்து விட்டாள். லீவுல போர் அடிக்கும்… நான் என்ன செய்யுறது..?

போன விடுமுறைகளில் காலை 8 மணிக்கு எழுந்து 8.05க்கே ‘ரொம்ப போர் அடிக்குது’ என்று அவள் புலம்பிய ஞாபகங்கள் என் வயிற்றில் புளியைக் கரைத்தன…

போன தலைமுறைப் பிள்ளைகளின் அகராதியில் ‘போர்’ என்ற சொல் இருந்ததேயில்லை.. பரீட்சை முடிந்த நாளே எல்லோரும் கிளம்பி பாட்டி வீட்டுக்கு ஓடிவிடுவோம். எல்லா பேரன் பேத்திகளையும், உட்கார வைத்து, கல் சட்டியில் சுண்ட வைத்த குழம்பில் சோற்றைப் பிசைந்து, உருட்டி, குட்டிக் குட்டியாய் மலர்ந்திருக்கும் உள்ளங்கைகளில் பாட்டி வைக்க, சோற்று உருண்டைகளை விழுங்கும் குழந்தைகளைப் பார்த்தால், புத்துணர்வு முகாமுக்குப் போன யானைகள் கூட வெட்கப்படும்….

வீட்டின் கூடத்தில் தலையணைகளையும் பாய்களையும் பற்றிக் கொண்டு, அனைவரும் படுத்திருப்போம்… பாட்டி வந்ததுமே கதை செஷன் ஆரம்பம்…

’சண்டையில் ஜெயிச்சப்புறம், அனுமார் வந்து சீதையைப் பாத்தாராம்.. இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தின அரக்கிகளுக்கு ஓங்கி ரெண்டு அடி வைக்கட்டுமா..? ந்னு கேட்டாராம்.. பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ‘நாந்தான் அனுமார்… இவதான் அரக்கி ! ந்னு பக்கத்திலிருக்கும் தங்கையை ஒரு ‘பஞ்ச்’ விட முயற்சித்த அக்காவை செல்லமாக மிரட்டி, நீ அரக்கி இல்லடி… அழகின்னு சமாதானம் சொல்லும் பாட்டியின் மடியில் தலை வைத்து உறங்கி.. வெயிலில் பாழாகாமல் விளையாடி, வயிறு வாடாமல் எதையும் தின்று, கதை கேட்டுக் கண்ணயர்ந்த காலங்களில் போராவது… ஒன்றாவது….

மீண்டும் பாட்டி வீட்டில் சிறு பிள்ளையாக மனம் தவழ நானும் மழலை ஆனேன்.

கூட்டுக் குடும்பத்தில் தியாகம்   விட்டுக்கொடுக்கும் தன்மை பகிர்ந்து உண்ணுதல்  ..மரியாதை, கருணை ,,தலைமை வகிக்கும்  திறன் குழந்தைகளின்  சிறந்த  வளர்ப்பு… இப்படி  எத்தனையோ  நன்மை!

கூட்டு குடும்பம்

எல்லையில்லா  ஆனந்தம் ,
உறவினர்களின் சுற்றம்
உறவை வளர்க்கும்  ஏற்றம்
கூட்டுக் குடும்பம் ,
மனம் கொண்டாட்டம்
இணைந்து செய்யும் செயலே தனிதான்
அதில் இருக்கும் பெருமையும் தனிதான்
தியாக மனப்பான்மை தன்னால் வளர ,
விட்டுக்கொடுக்கும் தனமைப் பெருக ,
பெரியவர்கள் ஆசிகள் தினமும்  சூழ
அன்பு மழையில்  ஓயாமல் நனைய
கூட்டுக் குடுமபம் திரும்ப வரணும்
இன்ப ஊற்று மீண்டும் பெருகணும் ..

வாழ்க்கையும்  ஒரு கொடுக்கல் வாங்கல் போலதான், இந்தக் கையால் கொடுத்தால் அடுத்தக் கையால் பெறலாம் அன்பைகூடி வாழ்ந்தால் கோடி நன்மை…
IMG_20150821_160058

நிலவு ஊடுருவ 
முற்றத்தில் 
பாட்டி கதை சொல்ல 
அம்மா சோறு ஊ ட்ட 
அப்பா தலை கோத
தங்கை விரல் நீவ
குடும்பம் ஒரு கதம்பமாக 
அழகான ரோஜா கூட்டம் நடுவில் 
ஆசிர்வதிக்கப்பட்ட 
தேவதையாக நான்!

  • ப்ரியா கங்காதரன்