மதுமிதா
சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!
சத்துமாவு தயார் செய்ய…
தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.
1. சத்துமாவு கஞ்சி
என்னென்ன தேவை?
சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.
எப்படிச் செய்வது?
சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது, தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.
* கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்!
2. சத்துமாவு உருண்டை
என்னென்ன தேவை?
சத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.
எப்படிச் செய்வது?
இதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.
வெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
3. புட்டு
என்னென்ன தேவை?
சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.
எப்படிச் செய்வது?
சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.
* இனிப்புப் புட்டு
வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு ஏலக்காய், சர்க்கரை கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.
* வெல்லப் புட்டு
வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு வெல்லம், ஏலக்காய் கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.
* காரப் புட்டு
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், மிளகாய் வத்தல் தாளித்து, பெருங்காயத்தூள், தேவையான உப்புச் சேர்த்து, வேக வைத்து இறக்கிய புட்டை சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.
4. கார கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
சத்துமாவு.
தாளிக்க…
நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), உப்பு.
எப்படிச் செய்வது?
இவை அனைத்தையும் சேர்த்து தாளித்ததும், சத்துமாவை சேர்த்து லேசாக நீர் தெளித்து கொழுக்கட்டை செய்ய வரும் அளவில் உருட்டி எடுத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் கொழுக்கட்டை பிடித்து வைத்து வேக வைத்து எடுக்கவும்.
5. இனிப்பு கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
சத்துமாவு, வெல்லம், பொடியாக நறுக்கிய தேங்காய், நெய் அல்லது நல்லெண்ணெய், தேவையெனில் சிறிது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி.
எப்படிச் செய்வது?
வெல்லத்தில் நீர் விட்டு, தூசு எடுத்துவிட்டு, சத்துமாவு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். பொடியாக நறுக்கிய தேங்காய், வறுத்த முந்திரி சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து கொழுக்கட்டை பிடிக்கவும். இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
6. சத்துமாவு நிப்பட்டி
என்னென்ன தேவை?
சத்துமாவு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), மிளகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர அனைத்தையும் லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும். மாவு இனிப்பாக இருக்கும் என்பதால் கொஞ்சம் அளவு அதிகமாகவே காரம் சேர்க்கலாம். சப்பாத்தி உருண்டை செய்வது போல கொஞ்சம் பெரிய அளவில் எடுத்து, கையாலேயே தட்டி அப்படியே தோசைக்கல்லில் போட்டு, அதிலும் லேசாக தட்டி அளவை பெரிதாக்கலாம். இல்லையெனில் ஒரு டிபன் ப்ளேட்டை பின்பக்கமாகத் திருப்பி, லேசாக எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து கையாலேயே தட்டி தோசை போல வட்டமாக விரித்து தோசைக்கல்லில் போடலாம். நல்லெண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப்போட்டு நல்லெண்ணெய் விட்டு மறு பக்கமும் கொஞ்சம் வெந்து நிறம் மாறியதும் எடுக்கவும். சுவையான சத்துமாவு நிப்பட்டி அல்லது அடை தயார்.
7. சத்துமாவு தோசை
என்னென்ன தேவை?
சத்துமாவு – 5 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் நீர் சேர்த்து நைசாக அரைக்கவும். உப்புச் சேர்க்கவும். அரைத்த உளுந்த மாவுடன் சத்துமாவு சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். இப்போது தோசை சுடலாம்.
8. சத்துமாவு முறுக்கு
என்னென்ன தேவை?
சத்துமாவு – 6 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு, பொரிக்க தேவையான எண்ணெய்.
எப்படிச் செய்வது?
உளுந்தம் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முறுக்கு சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.
* முறுக்கு, சீவல், ஓமப்பொடி செய்யும்போது முதல் முறை செய்யும் அளவு சரி பார்த்து அளவு சேர்க்கவும். வேக வைத்த பருப்பின் அளவின்படி அதில் இருக்கும் நீர் அளவுக்கு தகுந்தாற்போல சத்துமாவு அளவைச் சேர்க்க வேண்டும். பிசையும் போது சிறிது எண்ணெய் சேர்க்கலாம்.
9. சத்துமாவு முள்முறுக்கு
என்னென்ன தேவை?
சத்துமாவு – 6 பங்கு, பாசிப் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முள்முறுக்கு சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.
10. சத்துமாவு சீவல்
என்னென்ன தேவை?
சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீவல் சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.
* பாசிப் பருப்பு முறுக்கு மாவு போலச் செய்தும் சீவல் பிழியலாம்.
11. சத்துமாவு ஓமப்பொடி
என்னென்ன தேவை?
சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், ஓமப்பொடி சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.
* பாசிப் பருப்பு முறுக்கு மாவு போலச் செய்தும் ஓமப்பொடி பிழியலாம்.
12. சத்துமாவு வடை
என்னென்ன தேவை?
சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 1, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.
எப்படிச் செய்வது?
பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை உருண்டை செய்து வடையாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.
* பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்க்கலாம்.
13. சத்துமாவு பக்கோடா
என்னென்ன தேவை?
சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 2, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.
எப்படிச் செய்வது?
பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை எடுத்து சிறு உருண்டையாக உதிர்த்துப் பொரித்தெடுக்கவும்.
14. சத்துமாவு இடியாப்பம்
என்னென்ன தேவை?
சத்துமாவு, உப்பு.
எப்படிச் செய்வது?
தேவையான சத்துமாவில் சிறிது உப்புச் சேர்த்து, வெந்நீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். இடியாப்ப சில்லில் பிழிந்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
* இனிப்பு இடியாப்பம்
பிழிந்து வேக வைத்த இடியாப்பத்தை உதிர்த்து, தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்தால் இனிப்பு இடியாப்பம் தயார். பால், சர்க்கரையோடும் சாப்பிடலாம்.
* கார இடியாப்பம்
தாளிக்க…
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் வற்றல் – 1, இஞ்சி – சிறிது, பெல்லாரி வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் – தேவையான அளவு.
தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து, பிழிந்து வேகவைத்த இடியாப்பத்தை உதிர்த்துச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்தால் சத்துமாவு கார இடியாப்பம் தயார்.