தோழி நியூஸ் ரூம்

வாசிக்க… யோசிக்க…

21ம் நூற்றாண்டு? 

Image

மேற்கு வங்கத்திலுள்ள பிர்பும் மாவட்டம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கிருக்கும் காப் கிராமத்தில் 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடூரம் உலகையே உலுக்கி எடுத்திருக்கிறது. அந்தப் பெண் செய்த மாபெரும் தவறு(!) காதலித்ததே. அதுவும் வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை. இருவரையும் ஒருசேர பார்த்த சிலர் ஊர் மத்தியில் கட்டிப் போட்டார்கள். விசாரித்தார்கள். பெண்ணின் குடும்பத்தினருக்கு அபராதம் விதித்தார்கள்… 25 ஆயிரம் ரூபாய்! ‘அவ்வளவு பணம் எங்க கிட்ட இல்லை சாமி’ என்று கதறி அழுதிருக்கிறார்கள் குடும்பத்தினர். ‘அப்படியா? அவளை அந்தக் குடிசைக்கு தூக்கிட்டுப் போங்கடா!’ என்று கட்டளையிட்டிருக்கிறது பஞ்சாயத்து. ‘யார் வேண்டுமானாலும் அவளுடன் வல்லுறவு கொள்ளலாம்’ என்றும் பஞ்சாயத்துத் தலைவரால் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். விடிய விடிய நடந்தது இந்தக் கொடுமை. இறுதியில், ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என எச்சரிக்கப்பட்டு, விரட்டப்பட்டார் அந்தப் பெண். எப்படியோ தப்பித்து அவர்கள் காவல்துறையில் புகார் செய்ய, 13 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் கண்ணீர் மல்க சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்… ‘‘அவர்களில் சிலருக்கு என் தந்தையின் வயது…’’

சட்டம்… உயிர்… குழந்தை! 

Image

ந்தப் பெண்ணின் பெயர் மார்லைஸ் முனோஸ். அமெரிக்காவைச் சேர்ந்தவர். 33 வயது. 2013 நவம்பரில் மூளையில் ரத்தம் உறைந்து போனதன் காரணமாக கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மூளை செயல்பாடு முற்றிலும் இல்லாமல் போனது. இச்சூழலில் நோயாளி இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவரின் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவும் மாட்டார்கள். டெக்சாஸ் ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனை முனோஸுக்கோ தொடர்ந்து சிகிச்சை அளித்தது. காரணம், 14 வார கருவை சுமந்து கொண்டிருந்தார் முனோஸ். கருவைக் காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. முனோஸின் கணவர் எரிக், ‘சிகிச்சை தேவையில்லை… எங்கள் குடும்பத்தினர் யாரும் இதை விரும்பவில்லை’ என்றார். மருத்துவமனையோ ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குத் தொடர்ந்தார் எரிக். டெக்சாஸ் நீதிமன்றம் முனோஸுக்கு வழங்கப்படும் சிகிச்சையை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெர்மன் டாக்டர்கள் ஒரு படி மேலே போய், பழைய கேஸ் ஃபைல்களை புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இது போல 30 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் வரை உயிரோடு இருந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

சூப்பர் 50! 

Image

‘நடுத்தர வயதைக் கடந்த பெண்மணிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்கள்’ என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். அதற்கு உதாரணங்களும் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. லிஸ் டிமார்க்கோ வீன்மேன், நியூ யார்க்கை சேர்ந்தவர். 2001 செப்டம்பர் 11 அன்று, இரு விமானங்கள் வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதிய சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர். 2007ல், தன் 55வது வயதில் சுயதொழில் தொடங்க முடிவெடுத்தார், பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து கற்றுக் கொண்டார். இன்றைக்கு லிஸ் வெற்றிகரமான தொழில்முனைவோர். அமெரிக்காவில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் 55-64 வயதுக்குட்பட்டவர்கள் 23.4 சதவிகிதமாம். அவர்களிலும் பெண்களே அதிகமாம்… அப்படிப் போடுங்க!

கொஞ்சம் ‘கவனிங்க’ பாஸ்! 

Image

மெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று நம் தலைநகர் டெல்லிக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறது. ஆனால், அது பெருமைப்படும்படியான செய்தி அல்ல! ‘உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசு நிலவும் நகரம் டெல்லி’ என்கிறது அந்த ஆய்வு. சீனாவின் பீஜிங் நகரத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கே நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை அரசு நிறுவனங்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.

பசுமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 178 நாடுகளில் இந்தியா இருப்பது 155வது இடத்தில். டெல்லியின் காற்று மாசு, பீஜிங்கை விட இருமடங்கு அதிகம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு காற்று மாசு 44 சதவிகிதம் அதிகமாம். இப்படி அதிகமாவதற்குக் காரணம், வாகனங்களும் தொழிற்சாலைகளும் வெளியேற்றும் புகை. இந்த லட்சணத்தில், டெல்லி சாலைகளில் பவனி வரும் வாகனங்களோடு ஒவ்வொரு நாளும் 1,400 வாகனங்கள் புதிதாகச் சேருகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மை சீர்கெடுவது என்பது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். டெல்லியில், 5க்கு 2 பேர் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறார்களாம்.

மலாலாவின் மனம்! 

Image

‘நான் மலாலா’. பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதிய புத்தகம். கடந்த 28ம் தேதி, பெஷாவர் பல்கலைக்கழகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. என்ன காரணமோ, ‘எங்களால் போதுமான பாதுகாப்புக் கொடுக்க முடியாது’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இரண்டு அமைச்சர்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை தொடங்கி பல அரசு அதிகாரிகள் வரை நூல் வெளியீட்டை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி நிகழ்ச்சி நடத்த முயன்றபோதுதான் காவல்துறை, பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று கை விரித்திருக்கிறது. தலிபான்கள், புத்தக வெளியீடு நடக்கும் பகுதியில் இருக்கும் கடைக்காரர்களிடம் மலாலாவின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்களாம். ‘நான் மலாலா’ புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையும் விமர்சனமும் கிளம்பியுள்ளன.

கண் என்ப வாழும் உயிர்க்கு! 

Image

‘உலகில் உள்ள அத்தனை சிறார்களும் ஆரம்பக் கல்வி பெற வேண்டுமா? 70 வருசம் பொறுங்கப்பா!’ என்று ஒரு போடு போட்டிருக்கிறது யுனெஸ்கோ… ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பு. ‘உலக அளவில் 5 கோடியே 70 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள்’ என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. ‘ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசிப்பு, கணக்குப் போடுதல் திறன் இல்லை. உலகில், மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருக்கும் ஆசிரியர்களில், கால் பங்குக்கும் மேலானவர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானில், மூன்றில் ஒரு குழந்தைக்குத்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கவும், அடிப்படைக் கணக்குகளைப் போடவும் தெரிந்திருக்கிறது. இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா, தான்சேனியா போன்ற நாடுகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகளும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும்தான் குழந்தைக் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. வறிய நாடுகளில் கால்வாசிக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதே இல்லை’ என்று பல புள்ளிவிவரங்களை தெளித்திருக்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை.

 தொகுப்பு: பாலு சத்யா

தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க..!

குளிர்… அம்மாடி! 

Image

ற்கனவே குளிர் வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் உலகிலேயே அதிகக் குளிரான பகுதியை அடையாளம் காட்டி மேலும் உடம்பை உதற வைத்திருக்கிறது ஒரு செய்தி! அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த சாட்டிலைட், கிழக்கு அண்டார்ட்டிகாவில் இருக்கும் ஒரு இடத்தைப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. பனிக்கட்டிகளால் உறைந்து கிடக்கும் அந்தப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை மைனஸ் 93.2 டிகிரி செல்சியஸ். இதற்கு முன் அதே அண்டார்ட்டிகாவில் குளிர் தொடர்பாக ஓர் ஆய்வை செய்தது ரஷ்யாவின் ‘வோஸ்டாக் ரிசர்ச் ஸ்டேஷன்’. ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, ‘இதுதாம்ப்பா உலகத்துலயே ரொம்ப குளிரான இடம்’ என்றது. அங்கே நிலவிய வெப்பநிலை 89.2 டிகிரி செல்சியஸ். இது நடந்தது 1983ம் வருடத்தில். இப்போது 93.2 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியிருக்கிறது. குலை நடுங்கும் குளிர்… நம்பித்தான் ஆகவேண்டும்! 

அடங்காதா அமில மழை? 

Image

லூதியானாவில் மீண்டும் ஒரு தாக்குதல்… பெண் மீது ஆசிட் வீச்சு. அதுவும் மணப்பெண் மீது! அவர் பர்னாலாவைச் சேர்ந்தவர். திருமணக் கனவுகளுடன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக லூதியானா, சாராபா நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்குச் சென்றிருக்கிறார். தன் சகாக்களுடன் உள்ளே நுழைந்த ஓர் இளைஞன் அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசிவிட்டு, ஓடிப் போயிருக்கிறான். போனவன், ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றிருக்கிறான். அதில் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் உறவு இருப்பதாக எழுதியிருந்தது. போலீஸ் விசாரணையில் அது பொய் என்பது தெரிய வந்திருக்கிறது. வழக்கை திசை திருப்புவதற்காக அந்தக் கடிதம். உண்மையில், ஆசிட் வீசியவன் கூலிக்காக இந்தப் பாதகத்தைச் செய்தவன். மாப்பிள்ளையின் குடும்பத்தின் மேல் கோபம் கொண்ட மற்றொரு உறவினரின் குடும்பம்தான் இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞன் உட்பட ஆறு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. மிக ஆபத்தான நிலையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்தப் பெண். ஆசிட் விற்பனைக்குக் கெடுபிடி… பல புதிய விதிமுறைகள்… அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பெண்கள் மீதான இது போன்ற கொடூர தாக்குதல் இன்னும் குறைந்தபாடாக இல்லை. என்ன செய்யப் போகிறோம்?

விலையில்லா உயிர்கள்! 

Image

திர்ஷ்டவசமாக… இந்தச் சம்பவத்தை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் காவல்துறையால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். குண்டஸ் மாவட்டம்… டாஷ்ட்-ஐ-ஆர்ச்சி பகுதி… தலிபான்களின் ஆட்சி நடக்கும் பிராந்தியம். ஒரு பெண்ணின் மீது கணவனுக்கு எரிச்சல்… கோபம்… ஆத்திரம். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தலிபான்களிடம் மனைவி மீது புகார் தருகிறான். ‘என்னை ஏமாற்றிவிட்டாள்’. அவ்வளவுதான்… பெண்ணுக்கு தண்டனை கொடுக்கத் தயாராகிறது தலிபான் படை. என்ன தண்டனை? உயிரோடு கல்வீசித் தாக்கிக் கொல்லும் மரண தண்டனை. இரக்கமுள்ள அந்தப் பெண்ணின் உறவினர்கள் யாரோ காவல்துறைக்குத் தகவல் தர, அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கிறாள். காவல்துறை வந்ததும் தலைமறைவான தலிபான்களுடன் கணவனும் ஓடிப் போயிருக்கிறான். அந்தப் பெண் இப்போது காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார். இந்தக் கற்கால கொடுமைகளை நிறுத்தவே முடியாதா?

உடற்பயிற்சி… உறுதி! 

Image

டிமென்ஷியா (Dementia). முதுமைக் காலத்தில் வரும் மறதிக் குறைபாடு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு வராது என்று நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. டிமென்ஷியாவை தடுக்கும் முக்கியமான ஐந்து விஷயங்கள்… உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் இருப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் எடையைக் குறைவாக வைத்திருப்பது, மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பது! இந்தப் பழக்கங்களில் நான்கு அல்லது ஐந்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடும் டிமென்ஷியாவும் 60 சதவிகிதம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு. அதே நேரத்தில் இதையெல்லாம் கடைப்பிடிக்காதவர்களுக்கு நீரிழிவு பிரச்னை, இருதயக் கோளாறுகள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 70 சதவிகிதம் இருக்கிறதாம். ‘‘ஆரோக்கியமான வாழ்வியல் முறை பல நன்மைகளை உடலுக்குத் தருகிறது. மருத்துவ சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட உடற்பயிற்சி மிக நல்லது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒரு தனி மனிதனின் பொறுப்பு. ஆனால், பலபேர் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் வருத்தப்படக்கூடிய விஷயம். அதுவும் எங்கள் ஆய்வில் தெரிந்திருக்கிறது.’’ என்று சொல்கிறார் இந்த ஆய்வைத் தலைமை ஏற்று நடத்திய அமெரிக்கர் பீட்டர் எல்வுட்.

பேய்கள் உலாவும் பள்ளிகள்! 

Image

பாகிஸ்தானில் இருக்கும் பள்ளிக்கூடங்களை ‘பேய்ப் பள்ளிகள்’ (Ghost Schools) என்றுதான் வர்ணிக்கின்றன பல பத்திரிகைகள். சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பளிச்செனத் தெரியும் பள்ளிகளில் பலவற்றில்கூட பாடம் நடத்தப்படுவதில்லை. இருப்பதிலேயே வயதில் மூத்த சிறுமியோ, சிறுவனோ மற்ற குழந்தைகளை அதட்டி, மிரட்டிக் கட்டுப்படுத்தும் காட்சிதான் தினமும் அரங்கேறுகிறது. முக்கிய காரணம், ஆசிரியர்கள் இல்லை. தெற்கு பாகிஸ்தானில் உள்ள ‘சான்சர் ரெத்தார்’ கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘எங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. அவர்களுடைய பெயரை எழுதத் தெரியவில்லை. அதற்கான அர்த்தமும் தெரியவில்லை. ஆரம்பக் கல்விக்கான அடிப்படை எழுத்தைக் கூட அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை’. அரசும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க எந்த ஆர்வமும் காட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அரசு, பள்ளிகளுக்கு ஒதுக்கும் பணம் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டாலும் அதிகாரிகளின் கைகளுக்குத்தான் போய்ச் சேர்கின்றன என்கிறார்கள் பொது மக்கள். சில பள்ளிகளில் வேறொரு கொடுமை… பெயருக்குத்தான் கல்வி நிறுவனங்களே தவிர மாணவர்கள் யாரும் சேர்க்கப்படுவதில்லை. அந்தப் பள்ளிகளில் வேலை(!) பார்க்கும் ஆசிரியர்களுக்கு வீட்டுக்கே சம்பளப் பணம் போய்ச் சேர்ந்துவிடுகிறதாம். ‘பாகிஸ்தானில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்விக்குக் கூட அனுப்பப்படுவதில்லை’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ஒன்று. கடந்த ஆண்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பள்ளிகள் என்ற பெயரில் இயங்கும் கல்வி நிறுவனங்களை சோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த நவம்பரில் பள்ளிகளை ஆய்வு செய்த  முடிவுகளும் அறிக்கையாக வெளி வந்தது. அதில்தான் ‘பெயரளவு கல்வி நிறுவனங்கள்’ என்கிற அதிர்ச்சிகரமான உண்மை வெளி வந்திருக்கிறது. ‘எத்தனை மலாலாக்கள் தோன்றினாலும், அரசும் அதிகாரிகளும் மனது வைக்கவில்லை என்றால், கல்வி முன்னேற்றம் என்பது பாகிஸ்தானில் ஏற்பட வாய்ப்பே இல்லை’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பாகிஸ்தான் பள்ளிகளில், வராத ஆசிரியர்களுக்காக காத்திருக்கிறார்கள் பிள்ளைகள்.

தேவை பாதுகாப்பு! 

Image

‘இந்தியாவில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்திருக்கிறது’. இதைச் சொன்னது பத்திரிகையோ, சமூக ஆர்வலரோ அல்ல… மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத். பாராளுமன்றத்தில், எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 3 வருடங்களில், இது தொடர்பாக பெண்கள், மகளிர் ஆணையத்துக்கு அளித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேசிய மகளிர் ஆணையம், ‘ஒவ்வொரு துறையிலும் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. இதையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதியளித்திருக்கிறார் மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

தொகுப்பு: பாலு சத்யா

தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க…

Image

பரிசுக் கவலை தேவையா?

ஜும்பா லாஹிரி… இலக்கிய உலகில் பரபரப்பாகப் பேசப்படும் பெண்மணி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர். 2000ம் ஆண்டு புலிட்சர் பரிசு பெற்றதிலிருந்தே பிரபலமாகிவிட்டார். இந்த ஆண்டு ‘மேன் புக்கர் பரிசு’ அறிவிக்கப்பட இருந்த தருணம்… பட்டியலில் இருந்த புத்தகங்களில் ஜும்பா லாஹிரியின் ‘தி லோலேண்ட்’ நாவலும் இடம் பெற்றிருந்தது. அவருக்குத்தான் பரிசு என்று பல பத்திரிகைகள் செய்தியே வெளியிட ஆரம்பித்துவிட்டன. இலேனா கேட்டன் என்ற நியூசிலாந்து பெண் எழுத்தாளர் அந்தப் பரிசை தட்டிச் சென்றார். அந்த அலை ஓய்வதற்கு முன்பாகவே இன்னொரு பரிசு… புனைவுகளுக்காக அமெரிக்கா வழங்கும் ‘தேசிய புத்தக விருது’ ஜும்பா லாஹிரிக்குத்தான் என்கிற பேச்சு எழுந்தது. கடைசியில், ஜேம்ஸ் மெக்பிரைடு என்கிற அமெரிக்க எழுத்தாளருக்குப் பரிசு யோகம். இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை ஜும்பா லாஹிரிக்கு… தன் அடுத்த புத்தகத்துக்கான வேலையில் மேடம் பிஸி!

***

Image

வீடா… சிறையா?

‘அடிமைகள் இல்லை’ – சொல்வதற்கு நன்றாக இருக்கலாம். நிஜம் சுட்டெரிப்பதாக இருக்கிறது. தெற்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல… 30 வருடங்கள். மூவரில் ஒருவர், ‘ஃப்ரீடம் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனத்துக்குக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே அவர்களை மீட்பதற்கான வேலையில் இறங்கிய ஃப்ரீடம் நிறுவனம், காவல்துறை உதவியுடன் சமீபத்தில் காப்பாற்றியிருக்கிறது. மூவரில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர், இரண்டாமவர் அயர்லாந்துக்காரர், மூன்றாவது பெண் இங்கிலாந்துக்காரர். இவர்களில் அயர்லாந்துப் பெண்மணிக்கு 57 வயது. மலேசியப் பெண்ணுக்கு 69 வயது!

***

Image

பொறுப்புகளுக்குப் பொருத்தமானவர்!

‘சுந்தரம் க்ளேட்டன்’ (Sundaram Clayton), தமிழகத்தின் டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த பெரிய நிறுவனம். சமீபத்தில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, லட்சுமி வேணுவுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. லட்சுமி வேணு, இந்நிறுவனத்தின் ‘தொழில்நுணுக்க இயக்குனர்’ (Director – Starategy) பதவியில் இருக்கிறார். இந்தப் பதவி நிர்வாக இயக்குனர் பதவிக்கு ஈடானது. ‘உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும், தொழிலை விரிவுபடுத்தவும் லட்சுமிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கம்பெனியின் செலவைக் குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் நிதி மற்றும் பட்ஜெட் நடவடிக்கைகளை உடனிருந்து கண்காணிப்பார் அவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது இயக்குனர்கள் குழு.  கூடுதல் பொறுப்புகளைச் செய்ய வேண்டி இருப்பதால், லட்சுமி வேணுவின் ஊதியமும் உயர்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு புதிய ஊதியம் லட்சுமிக்கு வழங்கப்பட இருக்கிறது. மாதத்துக்கு 7.50 லட்ச ரூபாய்!

***

Image

மனதைக் கவரும் மாய(ம்) பாடல்கள்!

மாயம் மஹ்மூத் (Mayam Mahmoud). இதுதான் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணின் பெயர். ராப் இசைப் பாடகி. ‘அராப்ஸ் காட் டேலன்ட்’ என்ற டி.வி. நிகழ்ச்சியில் நடந்த ராப் பாடல் போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதிச் சுற்று வரை முன்னேறிவிட்டார். இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. பத்து வயதிலிருந்து பாடல்களைப் பாடி வருகிறார் மஹ்மூத். எல்லாமே எகிப்தில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட பாடல்கள்! மஹ்மூதின் தந்தை, ‘வழக்கமாக எல்லாரும் பாடுவதைப் போல் பாடாமல், புதிதாக எதையாவது முயற்சி செய்’ என்று ஒருமுறை சொன்னாராம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது இந்த இசைப் புயல். எகிப்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கையிலெடுத்தார். பாடலில் அதைக் கொண்டு வந்தார். இன்றைக்கு, ‘எகிப்தில் முக்காடு (Hijab) அணிந்து ராப் இசை பாடும் முதல் பெண்’ என்ற பட்டத்தையும் தட்டிக் கொண்டு போயிருக்கிறார்.

***

Image

உடலினை உறுதி செய்!

‘பெரியோர்களே… தாய்மார்களே! தயவு செய்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உடல் உறுதியில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்!…’ கெஞ்சாத குறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ‘எஜுஸ்போர்ட்ஸ்’ (EduSports) நிறுவனம். இது ஒரு உடற்கல்வி நிறுவனம். இந்நிறுவனம் நடத்திய, பள்ளிகளுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலுறுதி ஆய்வில் பள்ளிக்குச் செல்லும் பல குழந்தைகள் உடல் உறுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. 17 மாநிலங்கள்… 68 நகரங்கள்… 176 பள்ளிகள்… 7லிருந்து 17 வயதுக்குட்பட்ட 77,669 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிலைக் குறையீட்டு எண்ணில் மட்டும்தான் பெண் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். பையன்கள் 59 சதவிகிதம், பெண் பிள்ளைகள் 66 சதவிகிதம். மற்ற எல்லா உடல் உறுதியிலும் பெண் பிள்ளைகள் பின் தங்கியே இருக்கிறார்களாம். ஒரே இடத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மிகக் குறைவாக விளையாடுவது அல்லது விளையாட்டுப் பக்கம் திரும்பாமலே இருப்பது இவையெல்லாம்தான் காரணம் என்று ஒரு பட்டியலை வாசித்திருக்கிறது எஜுஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கை. பெரிய நகரங்களில் (Metro Cities) வசிக்கும் மாணவர்களைவிட, நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் உடல் உறுதியில் கொஞ்சம் பரவாயில்லை ரகமாம். அதாவது, அவர்களுக்கு விளையாட அவகாசம் கிடைத்திருக்கிறது, கொஞ்சமாவது ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுகிறார்கள் என்று அர்த்தம். மொத்தத்தில், பள்ளி செல்லும் பிள்ளைகளின் உடல் உறுதியில் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்த ஆய்வு.  

***

Image Courtesy: http://www.topnews.in

http://media.mlive.com

http://news.bbcimg.co.uk

தொகுப்பு: பாலு சத்யா

தோழி நியூஸ் ரூம்!

கௌரவக் குடியுரிமை! 

Image

மைதிக்கான நோபல் பரிசு தொடங்கி, இந்தியா வழங்கும் ‘சர்வதேச புரிதலுக்கான ஜவஹர்லால் நேரு விருது’ (Jawaharlal Nehru Award for International Understanding) வரை எத்தனையோ விருதுகளைப் பெற்றவர் ஆங் சான் சூகி. மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர். அப்படி பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்று, ‘ரோம் நகரில் வசிப்பதற்கான கௌரவக் குடியுரிமை’. 1994ல் இந்தக் குடியுரிமை ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டாலும் அவரால் அதைப் பெற முடியவில்லை. காரணம், பல ஆண்டுகளாக அவர் வீட்டுச் சிறையில் இருந்தார். சமீபத்தில் (அக்டோபர் 27), அந்தக் குடியுரிமையை நேரில் சென்று பெற்றுக் கொண்டார் ஆங் சான் சூகி. ரோம் நகர மேயர் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘’19 வருடங்களுக்கு முன்னால் வழங்கப்பட்ட இந்த விருது, கடைசியில் சுதந்திரம் பெற்ற பெண்மணிக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது’’.

2007ம் ஆண்டு கனடா அரசும், ஆங் சான் சூகிக்கு தங்கள் நாட்டின் கௌரவக் குடியுரிமையை வழங்கியிருக்கிறது. ரோம் நகரின் கௌரவக் குடியுரிமையோடு நின்றுவிடவில்லை சூகியின் பயணம். இத்தாலியின் மற்றொரு பெரிய நகரமான போலோக்னா (Bologna) குடியுரிமையையும் பெற இருக்கிறார்.

ரோம் நகரில் பேசியபோது ஆங் சான் சூகி இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘நான் ஸ்பெஷலாக எதையும் செய்துவிடவில்லை. அப்படியான வாய்ப்புகள் என் வாழ்க்கையில் அமைந்தனவே தவிர, நான் தியாகம் ஒன்றும் செய்துவிடவில்லை’’.

தடைகளைத் தாண்டியவர்கள்!

Image

டந்த வாரம் சனிக்கிழமை சவூதி அரேபியாவில் அது நடந்தது. சவூதியில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளில் முக்கியமான ஒன்று, பொதுவெளியில் கார் ஓட்டுவதற்கான தடை. அது சட்டத்துக்குப் புறம்பானது. குற்றம். அதை மீற முடிவெடுத்தார்கள் சில பெண்கள். அதற்கான பிரசாரம் சில நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் அறிவிப்பாக வெளியானது. சில பெண்கள் தாங்கள் கார் ஓட்டும் புகைப்படத்தையும் கூட வெளியிட்டிருந்தார்கள். ‘வாருங்கள் பெண்களே கார் ஓட்டுவோம்!’ என்ற அந்த அறிவிப்பு எத்தனையோ பெண்களின் கவனத்தை ஈர்த்தது. சிலர் மட்டும் அதை செயல்படுத்த முடிவெடுத்தார்கள். அப்படி கார் ஓட்டிய 16 பெண்களைப் பிடித்து அபராதம் விதித்திருக்கிறது சவூதி காவல்துறை. அதோடு, அந்தப் பெண்களின் தந்தை, கணவர், சகோதரர், பேரன் போன்ற காப்பாளர்களிடம் ஒரு கையொப்பமும் பெறப்பட்டிருக்கிறது. ‘அரசாங்கத்தின் சட்டத்தை மதிப்போம்’ என்று எழுதி கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் அவர்கள்.  

பெண்கள் கார் ஓட்டப் போகிறார்கள் என்று தெரிந்ததுமே, சில பெண்களுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. ‘கார் ஓட்ட மாட்டோம்’ என்று சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறது. அதோடு, ‘பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள், அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது. அதையும் மீறித்தான் பெண்கள் கார் ஓட்டியிருக்கிறார்கள்.

சவூதியில் கிட்டத்தட்ட 17,000 பெண்கள் ‘நாங்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும்’ என்று அரசுக்கு ஒரு விண்ணப்பமும் விடுத்திருக்கிறார்கள். இன்னும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதற்கான, அடையாளப் போராட்டம்தான் சமீபத்தில் நடந்த நிகழ்வு என்கிறார்கள். கார் ஓட்டிய பெண்களிடம் கிட்டத்தட்ட 300 ரியால் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் ரூபாய்.

உரிமைக்குரல்! 

Image

சில சமயங்களில் எதிர்க் குரல் கொடுத்தால்தான் நீதி கிடைக்கிறது. பொறுமைசாலிகள், காலமெல்லாம் என்ன கஷ்டம் என்றாலும் சகித்துக் கொண்டே வாழ வேண்டியதுதான். சமீபத்தில் எதிர்க்குரல் கொடுத்த ஒரு பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைத்திருக்கிறது.

தெற்கு மும்பையில் இருக்கும் மலபார் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் ஷா. அவர், அவர் மனைவி, இரண்டு குழந்தைகள் எல்லோருமாக ஒரு தனியார் ஸ்லீப்பர் பஸ்ஸில், சூரத்திலிருந்து மும்பைக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். அது, சூரத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து. நான்கு டிக்கெட்டுக்குப் பயணக் கட்டணமாக 1,600 ரூபாய் கொடுத்திருக்கிறார் பிரதீப். இரவுப் பயணம். பஸ்ஸில் ஏறிய பிறகு அதன் நிலைமையைப் பார்த்து அரண்டு போனார் பிரதீப்பின் மனைவி. அவ்வளவு அழுக்கு. இருக்கைகளுக்கு மேல் இருந்த விளக்குகள் எரியவில்லை. விளக்கைப் போட வேண்டிய ஸ்விட்ச் உடைந்து கிடந்தது. ஜன்னல் கண்ணாடியில் ஓட்டைகள். போதாததற்கு சில உடைந்த ஜன்னல் கண்ணாடித் துண்டுகள் அவர்கள் அமர வேண்டிய இருக்கையில் விழுந்து கிடந்தன. இதுவாவது பரவாயில்லை… இரவு 11:30க்குக் கிளம்ப வேண்டிய பேருந்து, 1:20க்குத்தான் கிளம்பியது. ஒவ்வொரு 15-20 நிமிடங்களுக்கும் பஸ் நிறுத்தப்பட்டது. வழியில் நிற்கிறவர்களையெல்லாம் ஏற்றினார்கள். ஏறியவர்கள், இவர்களின் இருக்கைக்கு அருகே நின்று, இவர்கள் மேலேயே சாய்ந்து விழுந்தார்கள்.

மனைவி சொன்னதன் பேரில், டிரைவரிடமும் அவரின் உதவியாளரிடமும் போய் புகார் கொடுத்தார் பிரதீப்.

‘‘என்ன இப்போ… கண்ணாடியிலே ஓட்டைதானே… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க. ராத்திரி நேரம்… எப்படி இருந்தாலும் கொஞ்ச நேரத்துல தூங்கப் போறீங்க… அப்புறம் எதுக்கு லைட்டு? உங்களுக்குத்தான் சீட்டு இருக்குல்ல… அப்புறம் எதுக்கு மத்தவங்களைப் பத்திக் கவலைப்படுறீங்க? அவங்க எங்கேயோ, எப்பிடியோ சாஞ்சு தூங்கிட்டுப் போறாங்க…’’ என்று எகத்தாளமாக பதில் கிடைத்திருக்கிறது.

பிரதீப்பும் அவர் மனைவியும் ஜன்னல் ஓட்டைகளை ஒரு பேப்பரைக் கொண்டு அடைத்திருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை ஒன்று நடந்திருக்கிறது. பிரதீப்பின் மனைவிக்கு இயற்கை உபாதை. அவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்காக வழியில் நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் கேட்டிருக்கிறார் பிரதீப். ‘‘அதெல்லாம் நிறுத்த முடியாது. நாங்க வழக்கமா ஒரு ஓட்டல்ல சாப்பிடுறதுக்கு நிறுத்துவோம். அங்கே போய்க்கச் சொல்லுங்க. வேணும்னா, ஒரு பிளாஸ்டிக் கவர்ல போகச் சொல்லுங்க’’ என்று அசிங்கமாக பதில் வந்திருக்கிறது.

ஊருக்குத் திரும்பிய பிரதீப் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். எந்த பதிலும் இல்லை. வேறு வழியில்லாமல், மும்பை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். பிரதீப்பும் அவர் குடும்பமும் அடைந்த வேதனைக்கு பிராயசித்தமாக டிக்கெட் தொகையோடு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம்.

Photo Courtesy: http://cdn.lightgalleries.net/ and http://cdn-wac.emirates247.com

தொகுப்பு: பாலு சத்யா

(மேலும் ‘தோழி நியூஸ் ரூம்’ செய்திகளுக்கு நவம்பர் 1-15 ‘குங்குமம் தோழி’ இதழைப் பார்க்கவும்)

தோழி நியூஸ் ரூம்!

நீதி கிடைத்தது!

court

1996, ஜூலை. மேற்கு டெல்லியில் வசித்த ஒரு பெண் தன் கணவர் சாதேந்தர் யாதவ், மாமியார் சாந்தி தேவி, மாமனார் நாதுராம் மீது புகார் கொடுத்தார். வரதட்சணை கேட்டு தன்னை சித்திரவதை செய்வதாக வழக்கு. அதற்குப் பிறகு கணவர் பிரிந்தார். வேறு திருமணம் செய்து கொண்டார். வழக்கு நடந்து… மன்னிக்கவும்… தவழ்ந்துகொண்டே இருந்தது. 18 வருடங்களுக்குப் பிறகு டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவருக்கும் 61 வயதான மாமியாருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை! இடையில் மாமனார் நாதுராம் இறந்து போனார். நீதி கிடைத்திருக்கிறது. சரி… அதற்காக இம்பூட்டு தாமதமாகவா?

தமிழிசைக்கு கௌரவம்! 

Image

காந்தர்வக் குரலுக்குச் சொந்தக்காரர் கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம். முக்கியமாக தன் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களை அதிகம் பாடி தமிழிசையைப் பரவலாகக் கொண்டு சென்றவர். அதற்காகவே இந்த ஆண்டுக்கான ‘டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு விருது’ அவருக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள் மேடம்!

இது… தீர்மானம்!

Image

சமீபத்தில் 113 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இணைந்து ஒரு தீர்மானத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள். அது, ‘பாலியல் வன்முறைக்கு எதிரான தீர்மானம்’. இது ஒரு வகையில் முக்கியமான தீர்மானம். பாலியல் வன்முறையை கண்டும் காணாமல் இருக்கும் நாடுகள் இனி அப்படிச் செய்ய முடியாது. அந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. ‘இது மட்டுமல்ல… பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வுக்காக இங்கிலாந்து அடுத்த ஆண்டு ஒரு மாநாட்டையே நடத்த இருக்கிறது’ என்று அறிவித்திருக்கிறார் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக். உலக அளவில் தகித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையைக் குறைக்க இந்தத் தீர்மானங்கள், மாநாடு உதவும் என்றே நம்பலாம்.

தொகுப்பு: பாலு சத்யா

(மேலும் ‘தோழி நியூஸ் ரூம்’ செய்திகளுக்கு அக்டோபர் 16-31 ‘குங்குமம் தோழி’ இதழைப் பார்க்கவும்).