ப்ரியங்களுடன் ப்ரியா–16

சேமிப்பும் செல்லங்களும்!

sav5

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

sav3

இனிமையான இல்லறத் தலைவியின் பண்பாக அறியப்படும்

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்ற வள்ளுவனின் வரியை இன்றைய கால சூழலில் இவ்வாறுதான் கையாள வேண்டும் ,

தனது சொத்துகளையும் பாதுகாத்து தனது கணவனின் சொத்துகளையும் வளர்த்து , குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்கு வேண்டிய பாதுகாப்பை சோர்வில்லாமல் செயல் செய்பவளே நல்ல குடும்ப தலைவி.

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று பள்ளியில் படிக்கிற காலத்தில் ,மண்டையில் இடித்து, இடித்து சொல்லிக் கொடுத்துவிட்டு, படிப்பு முடிந்தபிறகு “ கடன் வாங்காத குடும்பம் கரையிலேயே நிற்கிற கப்பல்” என்று வாழ்க்கைக்கு தலைகீழ் பாடம் நடத்துவது யாருடைய தவறு? வரவுக்குள்ளாக செலவு செய்கிறபொழுது வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர , கஷ்டமா மாறாது ; வரவை மீறி , கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு கஷ்டம்  மட்டுமல்ல…  பெரும்பாலும் நஷ்டமே ..

இதை தடுக்க தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்.

sav1

சேமிப்பை முதலில் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்!

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின்  சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் நம்ம குழந்தைகளின் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்…

sav7

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.

ஏனெனில், நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.

sav2

‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது.

பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை” என்று (குறள் 759).

sav7

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.

(1) கஞ்சத்தனம்

(2) சிக்கனம்

(3) ஆடம்பரம்

(4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது  மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், ‘சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார், தாங்கள் ஏன்?‘’

உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!

”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாக அவற்றை இழந்துவிட நேரும்.

sav6

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…

Neither a borrower nor a lender be;
For loan oft loses both itself and friend,
And borrowing dulls the edge of husbandry.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு  வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன..

எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.

sav4

மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்…

பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்…

சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர … மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.

சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்!

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

  • ப்ரியா கங்காதரன்

20150414_093124

பயணங்கள் மறப்பதில்லை !

ப்ரியங்களுடன் ப்ரியா–15

செப்டம்பர் 27

உலக சுற்றுலா தினம்

tour101

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு .. .

எடுத்துவை  பகிர்ந்து கொள்வோம்…
சிறகுகள் விரித்துப் பறக்க
அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம்…
பாதையில் தெளித்துச் செல்ல
அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு…

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 

நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …
உன்முகம் துடைக்க 
அதோ அந்த
புல்லின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம்..
பயணங்கள்
மறப்பதில்லை…
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
tour7

நம்மோட  மனசு  ஒரு ஓயாத பயணி. தான் சென்று வந்த இடங்களை மட்டுமல்ல… செல்லாத இடங்களுக்குக் கூட பயணிக்கும் வல்லமை கொண்டது. பார்த்த இடங்களைக் குறித்து நாலு பேரிடம் சொன்ன பிறகே சிலரது மனசு அமைதியாகும். இன்னும் சிலருக்கு அதைப் பத்தி எதாவது குறித்து வைத்தால்தான் தூக்கமே வரும்!

நானும் அப்படிதான்… பார்த்ததை பகிர்வதில் உள்ள பரவசம் மிக மிக இனிமையானது…

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் ஓய்வாக மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள்.சுற்றுலாவின் அடிப்படையே ‘பயணங்கள்’தான்.

tour10

1814ல் தாமஸ் குக் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் ‘சுற்றுலாவின் தந்தை’ என்றும் ‘உலகின் முதல் பயண முகவர்’ என்றும் கருதப்படுகிறார்.
இப்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டிராத சுவிட்சர்லாந்தின் (ராணுவமே இல்லாத நாடும் கூட!) முதன்மை வருவாயே சுற்றுலாதான்.
tour4
சுற்றுலா…
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான ‘ரீ சார்ஜ்’ செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.
மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களைக் காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவேதான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, ‘ஆணையிடும் மனிதர்’ இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
tour1
அன்றாட நிகழ்வுகளில் கரைந்துபோகும் வாழ்வை ஒருசில கணங்களே உயிர்ப்பிக்கின்றன. மழலையின் சிரிப்பு, மகிழ்வூட்டும் திருவிழா, பிடித்த புத்தகம், மலைக்க வைக்கும் மலைகள், கலையின் உச்சமான சிலைகள், உற்சாகமூட்டும் வீதிகள் என இப்படிப் பல விஷயங்கள் நம் வாழ்வைப் புதுப்பிக்கின்றன. மனம் ஓரிடத்தில் நில்லாமல் கவலைகளில் உழன்று, இன்பங்களில் திளைத்து தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கிறது. அதனூடாகத்தான் இந்த பயணங்களும் பயணம் சார்ந்த  வாசிப்பும்.
tour8
இன்னைக்கு எவ்வளவோ சுற்றுலா  பயணங்கள் சென்றாலும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது ஐந்தாவது படிக்கும் போது பள்ளியில் போன   என் முதல் சுற்றுலா பயணம்தான்.

மருதமலை… சின்ன வயதிலே வீட்டில் எல்லோருடன் பல முறை சென்று இருந்தாலும் முதல் முதலாக தனியாக சென்றது…

‘பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதணும்‘ என்று டீச்சர் சொன்னதும் பார்க்கும் இடத்தை எல்லாம் வார்த்தையாக வருடி வந்தது…

அதிகாலையிலேயே  எழுந்து அம்மா எங்க எல்லோருக்கும் மதியம் சாப்பிட புளி சாதமும், பருப்பு சட்னியும்  அம்மா கட்டி தந்தது…

25 பேருடன் போன என்னை வழியனுப்ப எங்கள் வீட்டில் இருந்து வந்த 35 பேர் … இன்னும் மனசை விட்டு மறையாத நினைவுகள்!

தொடர்ந்து எத்தனையோ நாடுகள், மாநிலங்கள், ஊர்கள் சென்றாலும் முதல் பயணம் என்னால் என்றுமே மறக்க முடியாது.

நான் ஈடுபட்டுள்ள விற்பனை துறையில் சிறந்த முறையில் செயல்பட்டதால் இரண்டு முறை மலேசியா சுற்றுலா.

என்னை நானே புரிந்துகொள்ள  வருடம் இருமுறை திருப்பதி…

இயற்கையுடன் பேச வருடம் இரு முறை கொடைக்கானல், ஊட்டி,

கடவுளின் தேசமும் எனக்கு சொந்த தேசம் ஆனதால் மனது வலிக்கும் போதெல்லாம் கேரளா பாட்டி வீடு…

இப்படி தமிழகத்தின் தென்கோடி முதல் வடக்கு வரை பயணம் செஞ்சாச்சு.

ஆனாலும் இன்னும் தேடல் குறையவில்லை … மனசு இன்னும் தேடுது. எதையுமே தொலைக்காமல் தேடுவதும் சுகம்தான்!

விமானம்… ரயில்… பஸ் என ஒவ்வொன்றிலும் வித விதமான ஆசான்கள் சக பயணியாக…

tour3

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்… ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு நமது இந்தியா. ‘உலக புவியியலாளர்களின் சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டிடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும் நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் நமது நாட்டில் உண்டு. நாம் நமது நாட்டிலே ரசிக்க உணர நெறைய இருக்கு…

tour2

ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் கண்ட காட்சிகள் வாழ்வியலை அழகாக ரசிக்க வைத்தது ..

ஒரு புறம் வாழ்வை தேடி அயல்நாடு பயணிக்கும் சகோதர்களின் கண்ணீர்… ஒரு புறம் வாழ்வை வென்று தாயகம் திரும்பும் சகோதர்களின் சிரிப்பு…

இப்படி இரண்டு துருவங்களை சந்தித்தாலும் அந்த இரு துருவங்களும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சந்தித்து கண்ணீர் சிரிப்பாகவும், சிரிப்பு கண்ணீராகவும் மாறும் என்ற நிலையை உணரும் போது பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்பது கண் முன்னே வந்து போனது…

tour6

என் ஒவ்வொரு சுற்றுலாவும் எனக்கு வாழ்வியல் பாடங்கள்தான்…

கலாசாரம், உணவு முறைகள்,  உழைக்கும் முறைகள், அப்பப்பா .. எல்லாமே பாடம்தான் …

‘பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை’ என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவேதான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப்புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். ‘அறிவை விரிவு செய்… அகண்டமாக்கு…’ என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!
tour5

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். அப்படித்தான் பயணங்களை பார்க்க வேண்டும்.

எதிர்பாராத கணங்களில் ஒளிந்திருக்கும் அழகை தரிசிக்கத் தொடங்கும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது.

ஏதோ  ஒரு வகையில் பயணங்கள்  ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா? இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடையதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத் தொட்டுத் தொட்டு நாம் பயண பட்டுத்தான்   போகிறோம்?

tourm
மலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றிவிடும்.

மலைமுகட்டில் நின்று நீங்களே பேசி பாருங்களேன்… நம் மனதில் தோன்றும் எல்லா வினாக்களுக்கும் கடவுளே பதில் சொல்வது போல இருக்கும்.

அதான் நிஜமும் கூட … ஒருவனை உருவாக்குவதில் இயற்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

மனித வாழ்க்கையே ஒரே ஒரு வினாடிதான் என்ற புத்தர், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார், ‘வாழ்வு ஒரே ஒரு நொடி என்று அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்; ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும்’ என்பதுதான் அது.

இனி, இதுமாதிரியான அனுபவத்திற்காகவாவது, சின்ன சின்ன சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வோம்!

tour9

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு . . 

எடுத்துவை , பகிர்ந்து கொள்வோம் …

சிறகுகள் விரித்துப் பறக்க

அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம் …

பாதையில் தெளித்துச் செல்ல

அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு …

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 
நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …

உன்முகம் துடைக்க 

அதோ அந்த
புல்களின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு  …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம் ..
பயணங்கள்
மறப்பதில்லை …
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
– ப்ரியா கங்காதரன்
IMG_20150721_070238

ப்ரியங்களுடன் ப்ரியா – 12

என் வீட்டுத் தோட்டத்தில்…
garden8 garden7 garden6 garden5 garden4 garden3 garden1 garden
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி என்னை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார் ..
இயற்கை… நம்ம எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம் .. நாகரிக வாழ்கையில் நவீன கோமாளியாக நாம் மாற ஆரம்பித்த பின்னர் இயற்கை மீதான காதல் நம்ம எல்லோருக்கும் ரொம்ப குறைஞ்சு இருக்கு… ஒரு வினாடி நின்றால் கூட நம்மை 100 பேர் வென்றுவிடுவார்கள் என்று காலத்தின் பின்னே நாம் ஓடினாலும் நமக்கு என்று நம்மை சற்று இளைப்பாற நமது தினசரி வாழ்வில் ஒரு அங்கம் எல்லோருக்கும் வேண்டும். அது நம் மனதில் மகிழ்ச்சி விதைப்பதாக  இருக்க வேண்டும் என்பதே எனது இந்த பதிவின் நோக்கம்…
தோட்டம்… இன்றைய வேதியியல் கலந்த வேளாண் உலகில் எந்த கலப்பும் இல்லாமல் நாமளே உற்பத்தி செஞ்சு சாப்பிடுவதும் ஒரு வரம்தானே ? தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே…ஆர்வம் இல்லையென்றாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம்.. ‘மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய திட்டம்  நமக்கு சரி வராது’னு சொல்றவங்க முதலில் இதை  படிங்க…ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே…. நமக்காகவே ..
நம்ம   எல்லோர் வீட்டிலும்  எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா ‘டென்ஷன்’ இருக்குது .  யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை…காரணம் இன்றைய பரபரப்பான சூழல்…!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிட்டே இருந்தா நம்மளை  யார் கவனிக்கிறது…உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்…காய்கறிகள், பூக்களை பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்…!!
ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை…நன்கு கழுவி சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயம் இல்லாம சாப்பிட முடியுமா ?
நீங்க  சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லையே  என சாமார்த்தியமா தப்பிக்க முடியாது …தூங்க, சமைக்க, FB  பார்க்க, வாட்ஸ் அப் அரட்டை அடிக்க எல்லாம் நேரமும் இடமும்  இருக்குதுல அது மாதிரி இதுக்கும்  ஒரு இடத்தை ஒதுக்குவோம் …மொட்டை மாடி, பால்கனி ,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே..
வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்…அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்…! நீங்க மனசு வச்சு வேலைய ஆரம்பிங்க , அப்புறம் பாருங்க இவ்வளவு  இடம் நம்ம வீட்ல தானா என்று ஆச்சரியமா இருக்கும்…
அப்பாடி..   ஒருவழியா இடத்தை தயார்  செஞ்சுவிடலாம் தானே ? அப்புறம்…  விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை…நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க… கலக்கிடலாம்..
வீட்டிலேயே காய்கறி உற்பத்தி செய்வதை பாப்போம் ..
ஆரம்பத்துல தோட்ட கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்…ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்தி பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில் இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க… உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல…
தேவையான பொருள்கள்…
* மண் அல்லது சிமென்ட் தொட்டி
* பிளாஸ்டிக் அரிசி சாக்
* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)
20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்)
ஓகே!  இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது…)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க.
செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கல், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால்  கலந்து  வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.
காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணை போட்டு நிரப்புங்கள்…இலைகள்  மக்கி உரமாகி விடும்…அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்…வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !
தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும்  தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.
புதினா, கீரை
புதினா இலைகளை பறித்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்…வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.
தினமும் தேவையான எளிய முறையில் பயிர் செய்யும் காய்கறிகள் …
கொத்தமல்லி
கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் வெட்டி  சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்…மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்…
சின்ன வெங்காயம்
வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்…மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது…வளர வளர பார்க்க அழகாக இருக்கும்…வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்..
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்கலாம் ..
இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால்  வீட்டில் வளர்த்து பயன் பெறலாம் ..
தக்காளி, மிளகாய், கத்தரி
நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும்….விதைகள் தனியே பிரியும்…பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்…
நன்கு முற்றிய கத்தரி வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
விதைக்கும் முறை
விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்…காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்…செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்றாக நட்டு விட வேண்டும்.
தக்காளி காய்க்க தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.
பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும்.
பந்தல் அமைத்தல்
தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கை பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி ஒரு ஆறு  அடி  விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்…கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 16  இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டி கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்…இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், .
கயிறுக்குப்  பதிலாக  கம்பிகளையும் உபயோகபடுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம்.
மற்றொரு முறையிலும்  பந்தல் அமைக்கலாம்
சிமென்ட் பையில்  மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்…இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்…மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.
நம்ம தோட்டத்துக்கு நாமே உருவாக்கும் உரங்கள்…
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம்.
வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.
இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும்.இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும்.
இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.
பிற  கழிவுகள்…
மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும்.
அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.
ஆக்சிஜன் அவசியம்
கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும்.
எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது… இவை மட்டுமே மிக சிறந்த இயற்கை உரங்கள்.
நீர் பற்றாக்குறையை சமாளிக்க சில முறைகள்…
நாம் பயன்படுத்திய கழிவு நீரையே சுத்தம் செய்து செடிகளுக்கு விடலாம் ,
கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் இருக்கும் …இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல… எனவே இதை  சுத்திகரிக்கலாம்…
சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்…விரைவில் வளர்ந்து  விடும்…கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்…நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்… கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்…சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்…
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி மேலே கூறிய அதே மெத்தட்தான். கருங்கல் ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.
தோட்டம் நன்கு உருவாக சில சிறப்பு முறைகளை காண்போம் ..
தரையில் கனமான  பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் உருவாக்கலாம் … தரையில் நீர் இறங்கி  விடும் என்ற பயம் இல்லை , ஒன்றும் ஆகாது…இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சியும்  கிடைக்கும் ..
* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் நம்மை போல ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்…
* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்…சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லைஎன்றால் சாதாரண தண்ணீர் போதும்.
* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறலாம்
நம் மீது அக்கறையும் கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்து  நாமே  பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில சங்கடங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும்.
இயற்கையோடு இணைந்து புதுயுகம் படைப்போம். நம்மை நாமே செதுக்கி கொள்ள நமக்கு கிடைத்த வாய்ப்பாக தோட்டம் கருதுவோம் …
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி எனை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார்!
– ப்ரியா கங்காதரன்
p4

ப்ரியங்களுடன் ப்ரியா – 11

நாங்கள்…
கடவுள்   படைத்தவற்றில் 
கடவுளுக்கு  நிகரான  
இனம் நாங்கள்…
அனைத்தையும் அடுத்தவர்க்காக
அர்ப்பணிப்பவர்கள்   நாங்கள்…
அன்பை மட்டுமே
செலுத்துபவர்கள் நாங்கள்…
தன்மானத்தின்
தனிஉருவம் நாங்கள்…
அன்னையும் நாங்கள்…
சகோதரியும் நாங்கள்…
தோழியும் நாங்கள்…
காதலியும் நாங்கள்…
மனைவியும் நாங்கள்…
மகளும் நாங்கள்…
உலகில் உள்ள 
அனைத்து உறவுகளும்
நாங்களே…
இன்பங்களின்
தொழிற்சாலை நாங்கள்…
இன்னல்களின்
மயானமும் நாங்கள்…
அன்பென்ற வார்த்தையின்
அகராதி நாங்கள்..
பூமியில் பிறந்த  தேவதை
நாங்கள்…
வாழ்நாள் முழுவதும் 
பிறருக்காக வாழும் 
நாங்கள்  என்றும் அடிமை அல்ல…
இந்த அகிலம்தான் எங்களின் அடிமை!
oil on canvas painted by artistelayarajamo:+919841170866

oil on canvas painted by artistelayarajamo:+919841170866

 
சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, நட்பாக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக காலம் காலமாக ஒரு பெண் ஏற்கும் வேடங்கள்தான் எத்தனை… எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாக பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்ட முடியும்?
 
பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.
 
elayaraja7
இன்றைய சுதந்திர இந்தியாவில் எங்களின் நிலை…
 
 21 -ம் நூற்றாண்டில், இந்தியா பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது, விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகி விடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேசத்தின் சரிபாதி மக்களான நமது  நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்று…
 
இந்தியாவில் பெண்களின் நிலை என்று கேட்ட உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில்தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம்.பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.
 
இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இந்த ஆய்வு, இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
 
elayaraja5
இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவத‌ற்கு எதிராகவே உள்ளது..
 
நம் நாட்டில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பொருள் ஈட்டும் குடும்பப் பெண் ஒருவரின் நிலையை எண்ணிப் பாருங்கள். வீட்டில் காலை முதல் இரவு வரை வேலைக்கு செல்லாத குடும்பப் பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கவனிப்பது இன்றும் முழுமையாக இவர்கள் பொறுப்புதான். நகரங்களில் ஒரு சிலரால் உதவிக்கு வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு ஆட்களை நியமித்துக்கொள்ள முடிகிறது என்றாலும், பெரும்பாலான வீடுகளில் பணத்தட்டுப்பாட்டின் காரணமாக இது சாத்தியப்படாது. எத்தனை ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு ஈடாக வேலைப் பளுவை பகிர்ந்து கொள்ள இறங்கி வருகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
 
இந்திய திருநாட்டில் இன்றும் வழக்கத்தில் உள்ள வரதட்சணை முறை, பெண் பார்க்கும் படலம், பெண்ணுக்கு தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் இயற்றிய பின் திருமணத்திற்கு முன்பே முத்திரைத் தாள்களில்(legal stamp papers) பெண்ணிடம் கையொப்பம் வாங்கி விடுவது, பள்ளி கல்லூரி மற்றும் வேலை இடங்களில் ஆண்களின் கேலிப் பொருளாக நடத்தப்படுவதை பொறுத்துக் கொள்வது, புகுந்த வீட்டில் அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வது, புகுந்த வீட்டின் நடைமுறைக்கு ஏற்ப தன் பழக்கவழக்கங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்வது என்று ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கட்டத்தில் அடக்குமுறைக்கு உட்பட்டதாகவே உள்ளது. 
elayaraja4
இன்று பெண்ணடிமைத்தனம் என்பது நடைமுறையில் இல்லை எனக் கூற துணிவுள்ள ஒவ்வொருவருக்கும் எனது சவால்…
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளில் ஏதாவது ஒன்றை தன் வாழ்வில் எதிர்கொள்ளாத பெண் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா?
 
பாலின வேறுபாடுகள் …
 
இன்று பாலின வேறுபாடு (Gender inequality) அனைத்துத் துறைகளிலும் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகள் பலவற்றிலும் இந்த நிலை கிடையாது. 2010 -ம் ஆண்டு உலக வங்கி ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’(GDP) அடிப்படையில் வெளியிட்ட உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா 7 -வது இடத்தில் உள்ளது. இது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விசயம் தான். அதே 2010 -ம் ஆண்டு ஐ.நா.-வின் மனித உரிமை வளர்ச்சிப்பிரிவு வெளியிட்ட பாலின சமத்துவமின்மை(Gender inequality) அறிக்கையில் மொத்தம் 138 நாடுகள் உள்ளடங்கிய தர வரிசையில் இந்தியா 122 -ம் இடம் பெற்றுள்ளது. என்ன ஒரு வெட்கக் கேடான நிலை. இந்த தகவல் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் சமுதாய அக்கறையுள்ள எவருக்குமே வருத்தத்தை அளிக்கும். ஆனால், நிச்சயம் வியப்பாக இருக்காது. தினக்கூலி வேலையில் ஆரம்பித்து, உயர் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். கூலி வேலை பார்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரே விதமான உடல் உழைப்பிற்கு ஆணுக்கு, சராசரியாக பெண்ணைவிட 33% அதிக கூலி வழங்கப்படுகிறது. படித்து பட்டம் பெற்று உயரிய வேலைகளில் தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பிரச்சினையை வேறு விதமாக சந்திக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் சம பதவிக்கு சம ஊதியம் வழங்கினாலும், பதவி உயர்வு என்று வரும் பொழுது பெண்களுக்கு இரண்டாம் இடமே.
 
elayaraja3
சமுதாய அமைப்பிலே நமது சுதந்திரம், நமது  சமத்துவம், நமது விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. ஆனால், நமக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் சரிவர அமையவில்லை. சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி வழிவந்த பெண்ணினம் என வீர முழக்கமிடும் சமுதாய கோஷத்தில் நீதியின் கண்முன் பெண்களுக்குச் சமுதாய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? 
 
elayaraja2
20ம் நூற்றாண்டுச் சமுதாய அமைப்பில்  நமக்கென  குரலெழுப்பியவர் பாரதியார்…
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ எனமுழக்கமிட்டார்.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். 
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் 
இளைப்பில்லை காண்’
என்று சமத்துவக் குரல் எழுப்பினார்.
நமது சுந்திர இந்தியாவில் சாதித்த முதல் பெண்களை காண்போம்…
இந்திராகாந்தி முதல் பெண் பிரதமரான காலம் (1966); கமல்ஜித் சாந்து ஆசிய பந்தயங்களில் முதலில் தங்க மெடலைப் பெற்ற பெண் (1970); கிரண் பேடி இந்திய காவல் துறையில் முதன் முதலில் உயர்பதவி வகித்த பெண்மணி. திஹார் ஜெயிலை யோகா ஜெயிலாக மாற்றிய பெருமைக்கு உரியவர் (1972); மதர் தெரசா நோபல் பரிசை உலக அமைதிக்காக பெற்ற முதல் இந்தியக் குடியுரிமைப் பெண் (1979); 1989ல் பாத்திமா பீபி சுப்ரீம் கோர்ட்டில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்றார். கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை (1997); முதல் பெண் கவர்னர் பதவி வகித்தவர் – கவிக்குயில் சரோஜினி நாயுடு; முதல் பெண் அமைச்சர் சுதேச கிருபளானி; மகாராணி எலிசபெத் அவர்களால் பகுதி நேர நீதிபதியாக நேரடியாக நியமகிக்கப்பட்டவர் கல்யாணி கௌல் என்கிற இந்தியப் பெண்மணி என்பது பெருமைக்குரிய செய்தி; முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர், துணை சபாநாயகராக பதவி வகித்த பெண் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். 1994ல் ஹரிதா கௌர் இந்திய விமானப் படையின் முதல் பெண் விமான ஓட்டி. 2000 கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பித்தளை மெடலை பெற்ற முதல் இந்திய பளுதூக்கும் சாம்பியன். மீரா குமார் இநதிய லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர், பி.டி.உஷா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மங்கை. இந்திரா நூயி. பெப்சி தலைவர். 2010இல் கொடுக்கப்பட்ட கல்பனா சாவ்லா விருது பெற்றவர்கள் சமூக அர்வலர் நபீஸா அலியும் உயர் காவல் துறை அதிகாரி கிரண்பேடியும். முதல் பெண் டி ஜி பி லத்திகா சரண்.
oil on canvas painted by artistelayarajamo:+919841170866

oil on canvas painted by artistelayarajamo:+919841170866

 

நமது பெண்களுக்கோர் வேண்டுகோள் …

பணத்தட்டுப்பாட்டின் காரணமாக உயர் கல்வி கற்க இயலாமல் போகும் நமது சகோதரிகளை கண்டெடுத்து, அவர்கள் படிப்புக்கு உதவுங்கள். இது அவர்களை மட்டும் அல்லாது அவர்களது வருங்கால சந்ததியினரும் மேன்மையடைய வழிவகுக்கும்.
வீட்டிலும் வெளியிலும் போராடி தன் உரிமைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஓர் வேண்டுகோள்…
தங்கள் அளவிற்கு உலக அறிவும், போராட்ட குணமும் வாய்க்கப்பெறாத தங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுங்கள். அவர்களது அறிவுரையாளராக (mentor) செயல்பட்டு அவர்கள் உரிமைகளை பெற உதவுங்கள். அடக்கு முறையை அழிக்கத் துடிக்கும் ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் நல்லொழுக்கத்தையும், உயர்ந்த கொள்கையையும் தங்கள் ஆண் நண்பர்களுக்கு தவறாமல் பரப்புங்கள். அவர்கள் எண்ணம் செயல் இரண்டிலும் நல் மாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள்.
இது பற்றி பெரிதான கருத்து ஒன்றும் இல்லாத ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள்…
தங்களை சுற்றி உள்ள பெண்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். தங்களையும் அறியாமல் கலாச்சார போர்வையில் நீங்கள் வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். தங்களை சுற்றி உள்ள அன்பான பெண் உள்ளங்கள் உரிய உரிமையும் வாய்ப்பும் பெற வழிவகை செய்யுங்கள்.
ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கும் ஓர் வேண்டுகோள்…
பல இடங்களில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் இருக்கிறாள். இந்த நிலை மாற பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல் தவிர்த்து பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வழிவகுப்போம் என இந்த சுதந்திர நாளில் உறுதி காண்போம்.
கடவுள் படைத்தவற்றில் கடவுளுக்கு நிகரான இனம் நாங்கள்… அனைத்தையும் அடுத்தவர்க்காக அர்ப்பணிப்பவர்கள் நாங்கள்…
அன்பை மட்டுமே செலுத்துபவர்கள் நாங்கள்…
தன்மானத்தின் தனிஉருவம் நாங்கள்…
அன்னையும் நாங்கள்…
சகோதரியும் நாங்கள்…
தோழியும் நாங்கள்…
காதலியும் நாங்கள்…
மனைவியும் நாங்கள்…
மகளும் நாங்கள்…
உலகில் உள்ள அனைத்து உறவுகளும் நாங்களே…
இன்பங்களின் தொழிற்சாலை நாங்கள்…
இன்னல்களின் மயானமும் நாங்கள்…
அன்பென்ற வார்த்தையின் அகராதி நாங்கள்…
பூமியில் பிறந்த தேவதை நாங்கள்…
வாழ்நாள் முழுவதும்
பிறருக்காக வாழும் நாங்கள் என்றும் அடிமை அல்ல…
இந்த அகிலம் தான் எங்களின் அடிமை…
மாதர் தமை இழிவு செய்யும் மடமை தனை கொளுத்துவோம்!
 v33
Paintings Courtesy: Artist S.Elayaraja

ப்ரியங்களுடன் ப்ரியா – 10

புடவை… ரொம்ப பெரிய தலைப்பு …
அழகாக மடித்து கொடுத்தால்
அருமையாக படிக்கலாம்!
 

IMG_7101
பால் நிலவு
பருத்தியை நூலாக்கி …
விண்ணில்  
தறி செய்து…
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க …
நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!
Sundari Silk_Day 2 -09
புடவை ,நம்ம எல்லோருக்கும் ரொம்பபிடிச்ச விஷயம்… பிடிச்ச விஷயத்தை பிடிச்ச மாதிரி நாம எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறோம்?

அதனால சேலை பற்றி கொஞ்சம் பேசுவோமே…

கடலில் இருக்கும் மீனை கூட எண்ணிவிடலாம்… பெண்கள் நம் மனதில் இருக்கும் புடவை பற்றிய ஆசைகளை மட்டும் எண்ணி விடவே முடியாது!

ஆதிகால  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பதில் ஒரு வரி வருகிறது ..

*பாத்து இல் புடைவை உடை இன்னா*

பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.

அப்போவே பாருங்க… நம்ம முன்னோரே சொல்லி இருக்காங்க.. சரியான முறையில் இல்லாத புடவை உடுத்துவது துன்பம் என்று.

அப்போவே அப்படி என்றால் இப்போ நாம எப்படி இருக்கணும்?

நாம்  கட்டுகின்ற தைக்கப்படாத உடையான புடவை  பல்லாயிரம்   ஆண்டுகளுக்கு முன்பே  பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் ஏதும்  இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் புடவைகள்  இருந்திருக்கின்றன.

Sundari Silk_Day 2 -03

புடவைகளின் வகைகள்

பட்டு, கைத்தறி ,சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் ,டிசைனர் எம்ப்ராய்டரி,  டிசைனர் பார்ட்வேர் ,  டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா , ஹாஃப் ஆம்ப்,  ஹாஃப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், டெனிம்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைகின்றன ..

img_02_black copy

புடவைகள் தேர்வு செய்யும் முறை

பொதுவாக நாம் கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை  விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். அவர் ஒன்னு ஒண்ணா எடுக்க எடுக்க நம்ம மனசுல  வரும் பாருங்க ஒரு சுனாமி பேரலை… இதை எடுப்போமா அதை எடுப்போமா என்று!

அங்கேதான் நாம கவனமா இருக்கணும்…. வெறும் கண்ணைப் பறிக்கும் அழகில் மயங்காம, நாம குடுக்கும் பணத்திற்கு வொர்த் இருக்கா? இதை நாம கட்டிய பின்னாடி நல்லா இருக்குமா ? துணியின் தரம் என்ன? இதையெல்லாம் நிதானமா யோசிச்சு தான் தேர்வு செய்யணும்.

எங்கே ப்ரியா. அதையெல்லாம் பார்க்க முடியுது ?? சுத்தி 10 கண்ணாடி வச்சு சேலையை தோளில் வச்சு நம்மை வாங்க வச்சு விடுறாங்களே என்று மட்டும் சொல்லாதிங்க… நம்ம பணம் நாமதான் பொறுமையா தேர்வு செய்யணும்!

தரம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்..

அதைப் போலவே நம்ம உடல்வாகு, நிறம்பொருத்தும் தேர்வு செய்யணும்.

ஒரு  புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது… எனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் ..

‘இந்த நினைவு மாறாது, யார் என்ன சொன்னாலும் , இதற்காக  நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்!

img_01 copy
புடவை  கட்டும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை

பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

சில புடவைகளில்  உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.

புடைவையின்  ஒரு முனையில் முந்தானையும் மறுமுனையில் சில சேலைகளில்  தைப்பதற்கான ப்ளவுஸ் துணியும் இருக்கும். ப்ளவுஸ் தைப்பதற்கான துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும். கட்டுவதற்க்கும் கனமாக இருக்கும்..

புதுப் புடவை  கட்டுவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் தேய்த்து   கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய  உதவி செய்யும் ..

_DSC4555
சற்று உயரமானவர்களுக்கான புடவை  முறைகள்

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.

அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.

கொஞ்சம் பருமனானவர்களுக்கு  மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்..

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.

பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

உயரம் குறைவான தோழிளுக்கு  புடவை முறைகள்

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.

டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.

கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஊடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லைட் வயலட், வெளிர் நீலத்தில் பூக்கள் இதெல்லாம் ஓகே.

ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.

சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்த வேண்டாம். மேலும் குண்டாகக் காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்…

_DSC4454l

புடவைகளை எப்படி பாதுகாப்பது?

ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்…

விலை உயர்ந்த புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

விலை உயர்ந்த உடைகளை வைக்கும் வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது வார்ட்ரோபின் வாசனையை தரும். ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது. பர்ஃப்யூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெளளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம்.

உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில்  கறை உண்டாக்கும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.

நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும்.

புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்..

பால் நிலவு   
பருத்தியை நூலாக்கி…
விண்ணில்  
தறி செய்து ..
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க…

நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!

 

– ப்ரியா கங்காதரன்

v1படங்கள்: சுந்தரி சில்க்ஸ்

இந்திய சமையல் கலையின் ராணிக்கு அஞ்சலி!

படம்

இந்திய சமையல் கலை ராணிக்கு அஞ்சலி!

பிரபல சமையல்கலை நிபுணர் தர்லா தலால் இன்று காலை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அவரது கடைசி பத்திரிகை பேட்டி – குங்குமம் தோழி ஆகஸ்ட் 16 இதழில் (இரு மாதங்களுக்கு முன்) வெளியாகியிருந்தது.

சமையல் என்பது குடும்பத்தின் கூட்டு வேலை!

கிட்டத்தட்ட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலிருந்தும் விடுபட்டு, முழுமையாக ஓய்வு அனுபவிக்கிற வயது…. அந்த வயதிலும் 20ல் இருந்த அதே ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் 80ஐ நெருங்கும் போதும் உழைக்க முடியுமா ஒருவரால்?

‘முடியும்’ என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் தர்லா தலால். இந்தியாவின் முன்னணி சமையல்கலை நிபுணர்.
சமையலைப் பெண் அடிமைத்தனமாகப் பேசி மாய்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில், சமையலின் மூலமே சர்வதேசப் பிரபலமானவர் தர்லா தலால். சமையலில் ருசி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆரோக்கியமும் அவசியம் என்பதைத் தனது சமையல் குறிப்புகளில் வலியுறுத்துபவர் இவர். சமையல் கலைக்காக ‘பத்மஸ்ரீ’ விருது வாங்கிய தர்லா தலாலை ‘இந்திய சமையல் கலையின் ராணி’ என உலகமே கொண்டாடுகிறது.

‘குங்குமம் தோழி‘ உணவு சிறப்பிதழுக்காக தர்லா தலால் அளித்த சிறப்புப் பேட்டி…

‘‘இன்னிக்கு நான் இருக்கிற இந்த இடம், எனக்குக் கிடைச்சிருக்கிற அங்கீகாரம், பெயர், பெருமை, பாராட்டுகள்னு எல்லாமே கனவு மாதிரி இருக்கு. இதுல எதுக்குமே நான் ஆசைப்பட்டதில்லை. புதுசா கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குப் போற எல்லாப் பெண்களுக்கும், தன் கணவரையும், புகுந்த வீட்டாரையும் தன் சமையலால கட்டிப் போடணுங்கிற ஆர்வம் இருக்கும். எனக்கும் அப்படித்தான்.
பூனாவுல ஒரு நடுத்தரக் குடும்பத்துல பிறந்தவள் நான். கல்யாணத்துக்குப் பிறகு மும்பைக்கு போனேன். கணவர் நிறைய பயணம் செய்வார். அவர் சரியான சாப்பாட்டுப் பிரியர். ஐம்பதுகள்லயே விதம் விதமான நூடுல்ஸை பத்தியும், பீட்சாவை பத்தியும் பேசுவார். எளிமையான சைவ உணவுகளால அவரைத் திருப்திப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சது, சமையலறைக்குள்ள என் சாகசங்கள் அப்பதான் ஆரம்பமானது.

அசைவ உணவுகளைப் போலவே சைவ உணவுகளை சமைக்க ஆரம்பிச்சேன். இத்தாலியன், மெக்சிகன், சைனீஸ்னு எல்லாத்துலயும் உள்ள அசைவ அயிட்டங்களை சைவத்துல ட்ரை பண்ணினேன். பிரபல ரெஸ்டாரன்ட்டுகள்ல கிடைக்கிற அத்தனையையும் வீட்ல செய்து, தினம் தினம் என் கணவருக்கு விருந்து பரிமாறுவேன். அப்படித்தான் இந்தப் பயணம் தொடங்கினது. என் சமையலை ருசி பார்த்த சில ஃப்ரெண்ட்ஸ், அவங்களுக்கும் கத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. ஆனா என் மாமியார் அதுக்கு ஒத்துக்கலை. சமையலை ஒரு பிசினஸா பண்றதா…. கூடாதுன்னு சொல்லிட்டாங்க. என் கணவர்தான் கஷ்டப்பட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ணி, எனக்கு பர்மிஷன் வாங்கித் தந்தார். வெறும் 6 ஸ்டூடன்ட்ஸோட, 20 ரூபாய் ஃபீஸ்ல குக்கரி கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்…” – நினைவுகள் கிளர்ந்தெழ, சுவாரசியமாக ஆரம்பிக்கிறது தர்லாவின் பேச்சு.

‘‘கத்துக்க வந்த பெண்களோட ஆர்வம் பிரமிக்க வச்சது. புதுசு, புதுசா கத்துக்கவும், ஆரோக்கியமா சமைக்கவும் தயாரா இருந்தாங்க. எது ஆரோக்கியமான சாப்பாடுங்கிற தெளிவே இல்லாம இருந்தாங்க பலரும். ஆரோக்கியமான சமையலைப் பத்தின புத்தகங்கள் எழுத எனக்கு அதுதான் தூண்டுதலா இருந்தது. டயட் என்கிற பெயரில் உணவைத் தவிர்க்கிறது மிக மோசமான பழக்கம். ஒருத்தரோட சாப்பாட்டுல சப்பாத்தி, சாதம், தால் அல்லது சாம்பார், முளைகட்டின தானியங்கள், தயிர் அல்லது மோர், கேழ்வரகு, கம்பு, ஓட்ஸ், நெல்லிக்காய், காய்கறிகள், வெங்காயம், பூண்டு (இந்த ரெண்டும் கொலஸ்ட்ராலை குறைச்சு, நுரையீரல் தொற்றைத் தவிர்க்கும்) எல்லாம் இருக்கணும். அதே போல சீரகம், தனியா, பெருங்காயம், வெந்தயம், கடுகு, மஞ்சள் இதெல்லாமும் கட்டாயம் சேர்த்து சமைக்கப்படணும். ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் போதுமானது. சரியான சாப்பாடும், உடற்பயிற்சியும்தான் ஒருத்தரை ஆரோக்கியமா வைக்கும். என்னோட ஒவ்வொரு சமையல் புத்தகத்தையும், சத்துணவு நிபுணர்களோட ஆலோசனைகளைக் கேட்ட பிறகே தயாரிக்கிறேன்…’’ என்கிற தர்லா, இதுவரை 110 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அடுத்து celiac என்கிற நோய் குறித்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறாராம்.

‘‘செரிமானம் தொடர்பான ஒரு நோய் இது. கோதுமை, ஓட்ஸ், பார்லி மாதிரியான சில உணவுகள்ல உள்ள க்ளூட்டன் இவங்களுக்கு ஒத்துக்காது. க்ளூட்டன் இல்லாத உணவுக் குறிப்புகளைக் கொண்ட அந்தப் புத்தகம் நிச்சயம் பெரிய வரவேற்பைப் பெறும்’’ என்கிறவர், அடிக்கடி வெளியில் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘வீட்டுச் சமையல்தான் ஆரோக்கியமானது. கூடியவரைக்கும் வெளியில சாப்பிடறதைத் தவிர்த்துடுங்க. சமையலை குடும்பத்துல உள்ள எல்லா நபர்களும் சேர்ந்து செய்யற ஒரு கூட்டு வேலையா மாத்திக்கிட்டா, சிரமம் தெரியாது. ஃபாஸ்ட் ஃபுட்ஸை கூட இன்னிக்கு புத்தகங்களைப் பார்த்து வீட்லயே செய்ய முடியும். இன்னிக்குப் பெண்கள் வீடு, வேலைன்னு ரெண்டையும் திறமையா சமாளிக்கிறாங்க. வேலைக்காக சமையலை காம்பரமைஸ் பண்றதில்லை. ஆண்களைவிட அதிகம் உழைக்கிற பெண்கள், வீட்ல உள்ள ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்துப் பார்த்து சமைக்கிறாங்க. அஷ்டாவதானி அவதாரம் எடுக்கிறதுங்கிறது பெண்களோட டி.என்.ஏலயே இருக்கு போல…..‘‘ பெண்குலப் பெருமை பேசுகிற தர்லா, முறையான பயிற்சி ஏதுமின்றி, தாமாகவே சமையல் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாக ஆச்சரியத் தகவல் சொல்கிறார்.

‘‘நான் நிறைய சமையல் கலை புத்தகங்களைப் படிப்பேன். நிறைய ரெஸ்டாரன்ட் போய், புதுப் புது உணவுகளைப் பத்தி நிறைய ஆராய்ச்சி செய்வேன். என்னோட 25 வருஷ ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தின் விளைவா இன்னிக்கு எனக்கு 15 ஆயிரத்துக்கும் மேலான ரெசிபி அத்துப்படி. புதுசா சமைக்க ஆரம்பிக்கிற எல்லாருக்கும் ஒரு பயமும், தயக்கமும் இருக்கிறது இயல்புதான். அனுபவமின்றி சமைச்சுப் பழகறவங்க, ஆரம்பத்துல சுலபமான அயிட்டங்களை சமைச்சுப் பழகறதே பிற்காலத்துல சமையலை எளிதாக்கும்…’’ – அனுபவம் கலந்த அட்வைஸ் சொல்கிறவரிடம், கடைசியாக ஒரு கேள்வி…

சமையல் ருசிக்க ஒரே ஒரு டிப்ஸ் மேடம்….?
‘‘அன்பு கலந்து சமைச்சுப் பாருங்க. அது தரும் சுவைக்கு ஈடே இருக்காது.‘‘
ஆஹா!

– ஆர்.வைதேகி
……………..

தர்லா தலால் டிப்ஸ்…

* எந்த உணவுக்கு என்ன மசாலா சேர்க்கணுங்கிறதை சரியா தெரிஞ்சுக்கிட்டு சமையுங்க. சூப்லேருந்து, டெஸர்ட் வரைக்கும் ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு மசாலா இருக்கு. சரியான அளவுல, சரியான பக்குவத்துல அதைச் சேர்த்தாலே, உங்க சாப்பாடு பிரமாதம்னு பேர் வாங்கிடுவீங்க.

* பல முறை நீங்க கேட்ட அதே விஷயம்தான். சமைக்கிறதுக்கு முன்னாடி, சமையலுக்குத் தேவையான பொருள்களை தயாரா எடுத்து வச்சுக்கோங்க. சமையல் குறிப்பைப் படிச்சிட்டு சமைக்கிறதா இருந்தா, ஒண்ணுக்கு ரெண்டு தடவை முழுக்கப் படிச்சிட்டு ஆரம்பியுங்க.

* இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுதெல்லாம் எப்போதும் உங்க ஃப்ரிட்ஜ்ல இருக்கட்டும். அது உங்களோட சமையல் டென்ஷனை பாதியா குறைக்கும்.

……………………………..

‘‘ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் போதுமானது. சரியான சாப்பாடும் உடற்பயிற்சியும்தான் ஒருத்தரை ஆரோக்கியமா வைக்கும்…’’