நாங்கள்…
கடவுள் படைத்தவற்றில்
கடவுளுக்கு நிகரான
இனம் நாங்கள்…
அனைத்தையும் அடுத்தவர்க்காக
அர்ப்பணிப்பவர்கள் நாங்கள்…
அன்பை மட்டுமே
செலுத்துபவர்கள் நாங்கள்…
தன்மானத்தின்
தனிஉருவம் நாங்கள்…
அன்னையும் நாங்கள்…
சகோதரியும் நாங்கள்…
தோழியும் நாங்கள்…
காதலியும் நாங்கள்…
மனைவியும் நாங்கள்…
மகளும் நாங்கள்…
உலகில் உள்ள
அனைத்து உறவுகளும்
நாங்களே…
இன்பங்களின்
தொழிற்சாலை நாங்கள்…
இன்னல்களின்
மயானமும் நாங்கள்…
அன்பென்ற வார்த்தையின்
அகராதி நாங்கள்..
பூமியில் பிறந்த தேவதை
நாங்கள்…
வாழ்நாள் முழுவதும்
பிறருக்காக வாழும்
நாங்கள் என்றும் அடிமை அல்ல…
இந்த அகிலம்தான் எங்களின் அடிமை!

oil on canvas painted by artistelayarajamo:+919841170866
சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, நட்பாக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக காலம் காலமாக ஒரு பெண் ஏற்கும் வேடங்கள்தான் எத்தனை… எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாக பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்ட முடியும்?
பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.

இன்றைய சுதந்திர இந்தியாவில் எங்களின் நிலை…
21 -ம் நூற்றாண்டில், இந்தியா பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது, விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகி விடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேசத்தின் சரிபாதி மக்களான நமது நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்று…
இந்தியாவில் பெண்களின் நிலை என்று கேட்ட உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில்தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம்.பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு, இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவதற்கு எதிராகவே உள்ளது..
நம் நாட்டில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பொருள் ஈட்டும் குடும்பப் பெண் ஒருவரின் நிலையை எண்ணிப் பாருங்கள். வீட்டில் காலை முதல் இரவு வரை வேலைக்கு செல்லாத குடும்பப் பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கவனிப்பது இன்றும் முழுமையாக இவர்கள் பொறுப்புதான். நகரங்களில் ஒரு சிலரால் உதவிக்கு வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு ஆட்களை நியமித்துக்கொள்ள முடிகிறது என்றாலும், பெரும்பாலான வீடுகளில் பணத்தட்டுப்பாட்டின் காரணமாக இது சாத்தியப்படாது. எத்தனை ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு ஈடாக வேலைப் பளுவை பகிர்ந்து கொள்ள இறங்கி வருகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
இந்திய திருநாட்டில் இன்றும் வழக்கத்தில் உள்ள வரதட்சணை முறை, பெண் பார்க்கும் படலம், பெண்ணுக்கு தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் இயற்றிய பின் திருமணத்திற்கு முன்பே முத்திரைத் தாள்களில்(legal stamp papers) பெண்ணிடம் கையொப்பம் வாங்கி விடுவது, பள்ளி கல்லூரி மற்றும் வேலை இடங்களில் ஆண்களின் கேலிப் பொருளாக நடத்தப்படுவதை பொறுத்துக் கொள்வது, புகுந்த வீட்டில் அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வது, புகுந்த வீட்டின் நடைமுறைக்கு ஏற்ப தன் பழக்கவழக்கங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்வது என்று ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கட்டத்தில் அடக்குமுறைக்கு உட்பட்டதாகவே உள்ளது.

இன்று பெண்ணடிமைத்தனம் என்பது நடைமுறையில் இல்லை எனக் கூற துணிவுள்ள ஒவ்வொருவருக்கும் எனது சவால்…
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளில் ஏதாவது ஒன்றை தன் வாழ்வில் எதிர்கொள்ளாத பெண் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா?
பாலின வேறுபாடுகள் …
இன்று பாலின வேறுபாடு (Gender inequality) அனைத்துத் துறைகளிலும் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகள் பலவற்றிலும் இந்த நிலை கிடையாது. 2010 -ம் ஆண்டு உலக வங்கி ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’(GDP) அடிப்படையில் வெளியிட்ட உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா 7 -வது இடத்தில் உள்ளது. இது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விசயம் தான். அதே 2010 -ம் ஆண்டு ஐ.நா.-வின் மனித உரிமை வளர்ச்சிப்பிரிவு வெளியிட்ட பாலின சமத்துவமின்மை(Gender inequality) அறிக்கையில் மொத்தம் 138 நாடுகள் உள்ளடங்கிய தர வரிசையில் இந்தியா 122 -ம் இடம் பெற்றுள்ளது. என்ன ஒரு வெட்கக் கேடான நிலை. இந்த தகவல் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் சமுதாய அக்கறையுள்ள எவருக்குமே வருத்தத்தை அளிக்கும். ஆனால், நிச்சயம் வியப்பாக இருக்காது. தினக்கூலி வேலையில் ஆரம்பித்து, உயர் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். கூலி வேலை பார்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரே விதமான உடல் உழைப்பிற்கு ஆணுக்கு, சராசரியாக பெண்ணைவிட 33% அதிக கூலி வழங்கப்படுகிறது. படித்து பட்டம் பெற்று உயரிய வேலைகளில் தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பிரச்சினையை வேறு விதமாக சந்திக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் சம பதவிக்கு சம ஊதியம் வழங்கினாலும், பதவி உயர்வு என்று வரும் பொழுது பெண்களுக்கு இரண்டாம் இடமே.

சமுதாய அமைப்பிலே நமது சுதந்திரம், நமது சமத்துவம், நமது விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. ஆனால், நமக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் சரிவர அமையவில்லை. சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி வழிவந்த பெண்ணினம் என வீர முழக்கமிடும் சமுதாய கோஷத்தில் நீதியின் கண்முன் பெண்களுக்குச் சமுதாய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா?
20ம் நூற்றாண்டுச் சமுதாய அமைப்பில் நமக்கென குரலெழுப்பியவர் பாரதியார்…
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ எனமுழக்கமிட்டார்.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண்’
என்று சமத்துவக் குரல் எழுப்பினார்.
நமது சுந்திர இந்தியாவில் சாதித்த முதல் பெண்களை காண்போம்…
இந்திராகாந்தி முதல் பெண் பிரதமரான காலம் (1966); கமல்ஜித் சாந்து ஆசிய பந்தயங்களில் முதலில் தங்க மெடலைப் பெற்ற பெண் (1970); கிரண் பேடி இந்திய காவல் துறையில் முதன் முதலில் உயர்பதவி வகித்த பெண்மணி. திஹார் ஜெயிலை யோகா ஜெயிலாக மாற்றிய பெருமைக்கு உரியவர் (1972); மதர் தெரசா நோபல் பரிசை உலக அமைதிக்காக பெற்ற முதல் இந்தியக் குடியுரிமைப் பெண் (1979); 1989ல் பாத்திமா பீபி சுப்ரீம் கோர்ட்டில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்றார். கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை (1997); முதல் பெண் கவர்னர் பதவி வகித்தவர் – கவிக்குயில் சரோஜினி நாயுடு; முதல் பெண் அமைச்சர் சுதேச கிருபளானி; மகாராணி எலிசபெத் அவர்களால் பகுதி நேர நீதிபதியாக நேரடியாக நியமகிக்கப்பட்டவர் கல்யாணி கௌல் என்கிற இந்தியப் பெண்மணி என்பது பெருமைக்குரிய செய்தி; முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர், துணை சபாநாயகராக பதவி வகித்த பெண் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். 1994ல் ஹரிதா கௌர் இந்திய விமானப் படையின் முதல் பெண் விமான ஓட்டி. 2000 கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பித்தளை மெடலை பெற்ற முதல் இந்திய பளுதூக்கும் சாம்பியன். மீரா குமார் இநதிய லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர், பி.டி.உஷா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மங்கை. இந்திரா நூயி. பெப்சி தலைவர். 2010இல் கொடுக்கப்பட்ட கல்பனா சாவ்லா விருது பெற்றவர்கள் சமூக அர்வலர் நபீஸா அலியும் உயர் காவல் துறை அதிகாரி கிரண்பேடியும். முதல் பெண் டி ஜி பி லத்திகா சரண்.

oil on canvas painted by artistelayarajamo:+919841170866
நமது பெண்களுக்கோர் வேண்டுகோள் …
பணத்தட்டுப்பாட்டின் காரணமாக உயர் கல்வி கற்க இயலாமல் போகும் நமது சகோதரிகளை கண்டெடுத்து, அவர்கள் படிப்புக்கு உதவுங்கள். இது அவர்களை மட்டும் அல்லாது அவர்களது வருங்கால சந்ததியினரும் மேன்மையடைய வழிவகுக்கும்.
வீட்டிலும் வெளியிலும் போராடி தன் உரிமைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஓர் வேண்டுகோள்…
தங்கள் அளவிற்கு உலக அறிவும், போராட்ட குணமும் வாய்க்கப்பெறாத தங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுங்கள். அவர்களது அறிவுரையாளராக (mentor) செயல்பட்டு அவர்கள் உரிமைகளை பெற உதவுங்கள். அடக்கு முறையை அழிக்கத் துடிக்கும் ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் நல்லொழுக்கத்தையும், உயர்ந்த கொள்கையையும் தங்கள் ஆண் நண்பர்களுக்கு தவறாமல் பரப்புங்கள். அவர்கள் எண்ணம் செயல் இரண்டிலும் நல் மாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள்.
இது பற்றி பெரிதான கருத்து ஒன்றும் இல்லாத ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள்…
தங்களை சுற்றி உள்ள பெண்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். தங்களையும் அறியாமல் கலாச்சார போர்வையில் நீங்கள் வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். தங்களை சுற்றி உள்ள அன்பான பெண் உள்ளங்கள் உரிய உரிமையும் வாய்ப்பும் பெற வழிவகை செய்யுங்கள்.
ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கும் ஓர் வேண்டுகோள்…
பல இடங்களில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் இருக்கிறாள். இந்த நிலை மாற பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல் தவிர்த்து பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வழிவகுப்போம் என இந்த சுதந்திர நாளில் உறுதி காண்போம்.
கடவுள் படைத்தவற்றில் கடவுளுக்கு நிகரான இனம் நாங்கள்… அனைத்தையும் அடுத்தவர்க்காக அர்ப்பணிப்பவர்கள் நாங்கள்…
அன்பை மட்டுமே செலுத்துபவர்கள் நாங்கள்…
தன்மானத்தின் தனிஉருவம் நாங்கள்…
அன்னையும் நாங்கள்…
சகோதரியும் நாங்கள்…
தோழியும் நாங்கள்…
காதலியும் நாங்கள்…
மனைவியும் நாங்கள்…
மகளும் நாங்கள்…
உலகில் உள்ள அனைத்து உறவுகளும் நாங்களே…
இன்பங்களின் தொழிற்சாலை நாங்கள்…
இன்னல்களின் மயானமும் நாங்கள்…
அன்பென்ற வார்த்தையின் அகராதி நாங்கள்…
பூமியில் பிறந்த தேவதை நாங்கள்…
வாழ்நாள் முழுவதும்
பிறருக்காக வாழும் நாங்கள் என்றும் அடிமை அல்ல…
இந்த அகிலம் தான் எங்களின் அடிமை…
மாதர் தமை இழிவு செய்யும் மடமை தனை கொளுத்துவோம்!
Paintings Courtesy: Artist S.Elayaraja