ஸ்டார் தோழி – 15

ஒரு தோழி பல முகம்

star thozhi 1

தேனம்மை லெக்ஷ்மணன்

நான்…

ரொம்ப பர்ஃபெக்ட் என்று நினைத்துக் கொள்ளும் சாதாரண மனுஷி. வெற்றியைக் கொண்டாடுகிறேனோ இல்லையோ தோல்வியைக் கொண்டாடி விடுவேன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்யும் அனுசூயையாகவோ, அமிர்தானந்தமயியாகவோ, கிரேக்க தேவதை ஹீராவாகவோ (HERA) நினைத்துக் கொள்வதுண்டு. என் தந்தை தாய்க்கும் என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் தோழி. அப்புறம் முகநூல் நட்பு வட்டத்தில் அனைவருக்கும் பாசக்கார அக்கா!

பள்ளியும் ஆசிரியர்களும்

காரைக்குடி அழகப்பா ப்ரப்பரேட்டரியில் கே.ஜி. படித்தேன். அதிகம் ஞாபகமில்லை. மன்னார்குடி கணபதி விலாஸில் மூன்றாம் வகுப்பு சண்முகம் சாரைப் பார்த்தால் மிரட்சியாக இருக்கும். எங்கள் ஆசிரியர்கள் இல்லத்துக்கே வந்து ட்யூஷன் சொல்லிக் கொடுக்கும்படி அப்பா ஏற்பாடு செய்திருந்தார்கள். அடுத்து செயின்ட் ஜோசப். அங்கே தங்கம் மிஸ், மைதிலி மிஸ், பிளஸ் டூவில் ராஜேஸ்வரி மிஸ். எந்த ஆட்டபாட்டமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாகவே வளர்க்கப்பட்டதுதான் ஞாபகம் வருது. பள்ளியில் தமிழ் ‘அறம் வாழி’ மாஸ்டரும் ஃபாத்திமா கல்லூரியில் சுசீலாம்மாவும் ஃபாத்திமாம்மாவும் இன்றைய என்னுடைய தமிழுக்குக் காரணம்னு சொல்லலாம். மொழிப்பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொண்டதும் பெரியோர் வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு நடந்துகொள்ளவேண்டும் என்று வளர்த்தெடுத்ததும் பள்ளி போதித்தது என்று குறிப்பாக சொல்லலாம்.

ஊர்

hyderabad

இப்போது ஹைதராபாத். இங்கே சில்பாராமம் கிராமம் அழகு. ஹைடெக் சிட்டி தொல்லைகள் இல்லாத ஹைடெக் வாழ்க்கை. இன்னும் தெலுங்கு கற்றுக் கொள்ளவில்லை. இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் ஹிந்தி (பள்ளியில் கட்டாயப் பாடம்) தெரிவதால் மொழிப் பிரச்னை பாதிக்கவில்லை. இங்கே ஹைதராபாத் பிரியாணியும் ஹலீமும் ஸ்பெஷல் என்பார்கள். எனக்கோ கோங்குரா சட்னி பிடித்திருக்கிறது. நிறைய விதம் விதமான சட்னி (பீரகாய சட்னி, ஊர்ப்பிண்டி சட்னி) வகையறாக்கள்தான் ஆந்திர சமையலில் இடம் பிடிக்கின்றன. எளிமையான இனிய மக்கள். இன்னும் பாரம்பரிய உணவுகளுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.

புத்தகங்கள்

Crime and Punishment-3 new

sivakamiyin sabadham

விக்டர் ஹியூகோவின் ‘ஏழை படும்பாடு’, ஃப்யோதர் தஸ்தாவ்யெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ (சுசீலாம்மா மொழி பெயர்ப்பு). வைக்கம் முகம்மது பஷீரின் ‘மந்திரப் பூனை’. கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’. சுசீலா தேஷ்பாண்டேயின் ‘மௌனத்தின் குரல்’.

ஃப்ரெஞ்சுப் புரட்சியில் தாய் தந்தையை இழந்த கோஸ்த் ம், ஜீன் வல் ஜீனும் , எதிர்பாராமல் ஒரு கொலை செய்துவிட்டு மனச் சிக்கலுக்கு உள்ளாகி கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சைபீரியச் சிறைக்குச் செல்லும் வெகுசாமான்ய இளைஞன் ரஸ்கோல்னிகோவும், நம்முன்னே இருக்கும் சௌபாக்கியவதிகளைப் பற்றிய நுண்மையான பார்வையில் மிக அருமையான ஹாஸ்யமான கதைகள் படைக்கும் பஷீரும், ‘நாட்டியப் பெண்கள் மனோராணிகளாகலாம். மகாராணிகளாக முடியாது’ என்று உணரும் சிவகாமியும், என்னைப் போன்ற குடும்பத் தலைவியாகத் தன்னைப் பூரணமாக வெளிப்படுத்தும் ஜெயாவும் என்னை ஆட்டிப் படைக்கிறார்கள்.

குடும்பம்

கணவர் வங்கி கணக்காய்வாளர். என் எல்லா முயற்சிகளுக்கும் துணை நிற்பவர். மனைவியாகவும் அம்மாவாகவும் மட்டுமே இருந்த நான் சில வருடங்களாக வலைத்தளம், பத்திரிகைகளில் எழுதவும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவும் செய்கிறேன். அப்போதெல்லாம் ஊக்கம் கொடுப்பார். .பையன்கள் திருவேங்கடநாதன், சபாரெத்தினம். பொறியியல் வல்லுனர்கள். மூவரும் என் மனோபலம்.

பொழுதுபோக்கு

புத்தகங்கள் வாசிப்பது, கவிதை, கதை, கட்டுரை எழுதுவது, பின்னல், தையல் வேலைகள். (ஹாண்ட் எம்பிராய்டரி, க்ரோஷா, ஸ்வெட்டர் பின்னுதல்), சுடோகு போடுதல், வீட்டுத் தோட்டம், பயணம் செய்வது, சமையல் குறிப்புகள் எழுதுதல், கோலங்கள் போடுதல் மற்றும் வலைத்தள எழுத்து. 5 வலைத்தளங்களில் எழுதி வருகிறேன். (சும்மா, டைரிக் கிறுக்கல்கள், கோலங்கள், THENU’S RECIPES, CHUMMA!!! ).

இயற்கை

ரொம்ப சீரழிந்து கொண்டிருக்கிற ஆனால் பாதுகாக்கப்படவேண்டிய விஷயம். பெட்ரோலுக்காக ஜட்ரோப்பா கார்க்கஸ்னு ஒரு செடியின் எண்ணெயை மாற்றாக உபயோகிக்கலாம். அதேபோல மின் தேவைக்காக அச்சுறுத்தும் அணுமின்சாரம் தவிர்த்து நீர், காற்றாலை போன்றவற்றில் கிடைப்பதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். ஆற்றில் மணல் அள்ளுவதைத் தவிர்த்து செயற்கை மணல், ஹாலோ ப்ளாக்ஸ் போன்றவற்றை உபயோகிக்கலாம். பின்னாடி வர்ற தலைமுறை வாழ நாம் இந்த மண்ணை மட்டுமாவது விட்டுட்டுப் போகணும்.

தண்ணீர் சிக்கனம் / பிளாஸ்டிக் பயன்பாடு

RainWaterHarvesting

குடி தண்ணீரை கேன்களில் வாங்கும் சமூகத்தில் வசிக்கிறோம் நாம். மழை நீர் சேகரிப்பு ஒவ்வொரு கட்டிடத்துக்கும் வீட்டுக்கும் அவசியம். ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் மழை நேரங்களில் வழியும் நீர் ஆழ்கிணறுகளில் சேமிக்கப்பட்டு உபயோகப்படுது. நம்ம ஊர்ப்பக்கம் எல்லா வீடுகளிலும் போர்வெல் போட்டு பூமியைத் துளைச்சிருக்காங்க. நதிகளில் சம்பாப் பருவங்களில் விடப்படும் நீர் பிளாஸ்டிக் குப்பைகளோடு ஓடுது.

plastic

30 வருடங்களுக்கு முன் பிளாஸ்டிக் பைகள் ரொம்ப இல்லை. மலேஷியாவிலிருந்து உடைகள் பொருட்கள் கொண்டுவரும் உறவினர்கள் அதைப் பாலித்தீன் பையில் போட்டுக் கொடுப்பார்கள். ரொம்ப வாசனையா மென்மையா இருக்கும் அந்தப் பைகள் ஒன்றிரண்டு பார்ப்பதே அபூர்வம். இப்போ பார்த்தா வீட்டை விட்டு வெளியே காலை எடுத்து வச்சா ரோடு, மரம், செடி, கொடி, நதி, சாக்கடை, கடல் என்று எல்லா இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள்தான். பால் பாக்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் நாம் பாலிதீன் பைகளில் வாங்கி வந்துதான் உபயோகிக்கிறோம். பெருகிவரும் கான்சர் போன்றவற்றுக்கு இவைதான் மூலகாரணமாக இருக்கக் கூடும். பழைய மாதிரி கடைக்குப் போகும்போது மஞ்சள் பை, ஜவுளிக்கடைப் பைகள், எடுத்துச் செல்லலாம். எண்ணெய், பால் போன்றவற்றை பூத் போல வைத்து பாத்திரங்களில் வாங்கிச் செல்லும்படி அமைக்கலாம். உணவுப் பொருட்களை முடிந்தவரை பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கி உண்ணாமல் இருப்பது நலம்.

சமூக அக்கறை

பெண்களுக்கான சமத்துவமும் உரிமையும் கிடைச்சிட்டதா சொன்னாலும் இன்னும் பேலன்ஸ்டா இருக்காத இருவேறு சூழ்நிலைகளில்தான் பெண்கள் வாழ்றாங்க. கிராமங்களில் சிசுக்கொலை, கருக்கொலை, கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், வேலைவாய்ப்பு மறுப்பு, குடும்ப வன்முறை போன்றவை அதிக அளவில் இருக்க, நகரங்களில் விவாகரத்து, லிவிங் டுகெதர், குடிப்பது, சிகரெட் புகைப்பது , போதைப் பொருட்கள் உபயோகிப்பது போன்றவை சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். எங்கேயும் பெண்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லை.. வேலைக்குச் செல்லுமிடத்தில் கல்வி கற்கச் செல்லுமிடத்தில் பாலியல் தொந்தரவுகள், குழந்தைகளுக்கான செக்ஷுவல் அப்யூஸ், ஆகியவை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டியவை. சாதி, மத, இன ரீதியிலான பிரிவினைகள் இருக்கக் கூடாது.

மரபணு மாற்றப் பயிர்கள், விதைகள், உரங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதைத் தடை செய்யணும். விவசாயிகள் நமது பாரம்பரிய முறையில் மீண்டும் பயிர்செய்து நம் மண்ணை வளப்படுத்தித் தாங்களும் வளமாக வாழணும். நீர் மின்சாரம் போன்றவற்றை மாநிலங்கள் பகிர்ந்து வாழப் பழகணும்.

மனிதர்கள்

பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திப்பது எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. 1 வயதுக் குழந்தையானாலும் 100 வயது ஆனவர்களானாலும் ஒற்றைப் புன்னகையில் சிநேகமாகி விடுகிறார்கள். நட்பு, வெறுப்பு விருப்பு, அன்பு, பாசம், காமம், குரோதம், நெகிழ்ச்சி அனைத்தும் கலந்தவர்கள்தாம் அனைவருமே. எல்லாரிடமும் நல்லவையும் நிரம்பி இருக்கின்றன. நமக்கான நல்லதை மட்டுமே அவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டு அல்லதை அங்கேயே விட்டுவிடவேண்டும். ரூமி சொன்னபடி What you seek seeks you… அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறோம். நம்மிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடும்.

பிறந்த ஊர் / சொந்தங்கள்

பிறந்த ஊர் காரைக்குடி. அப்பத்தா வீட்டு அருணாசல ஐயா, அன்பாலே செய்த மனிதர். அப்பா, ‘உனக்கு நல்லது கிடைத்தால் உன் அதிர்ஷ்டம், கெடுதல் கிடைத்தால் என் துரதிர்ஷ்டம்’ என்பார். எல்லா இடத்திலும் என் உறுதுணையாக இருப்பார். இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் இதே பெற்றோருக்கு மகளாகப் பிறக்கவேண்டும். தம்பிகள் மூவர். அனைவரும் பாசக்காரர்கள்தான். நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர் கொண்ட காலத்திலும் அப்பாதான் தோள் கொடுத்தவர். அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்றாலும் பாசக்காரர். தங்கள் தேவையை எல்லாம் எளிமையாக்கி, கோயில், திருமணம், படிப்பு செலவு என்று தேவைப்படுவோருக்கு அப்பா, அம்மா உதவி செய்வதும், 70 வயதிலும் அம்மா சிஎன்பிசி, என்டிடிவி பார்த்து போன் மூலமாகவே ஷேர் பிஸினஸ் செய்வதும் பிரமிக்கவைக்கும் விஷயங்கள். வீட்டில் வேலை செய்ய வரும் யாரையுமே பிள்ளைகள் போல அம்மா, அப்பா நடத்துவதும் ரொம்பப் பிடிக்கும்.

நேர நிர்வாகம்

Time-Management

ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருந்தாலும் கடைசி நேரம் சில சமயம் பரபரப்பாகி விடும். இப்போதுதான் அது ஒழுங்குக்கு வந்திருக்கிறது. அரக்கப் பரக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடுவது, பிள்ளைகளின் ஸ்கூல், காலேஜ் போன்றவற்றுக்கும், சினிமா, விருந்து, கோயில் போன்றவற்றுக்கும் போகும் போதும் வீட்டு வேலைகளை முடித்து க்ளியர் செய்துவிட்டுப் போகவேண்டும் என்று அரக்கப் பரக்கச் செய்வேன். இப்போது முதல் நாளே ப்ளான் செய்துவிடுவதால் சீக்கிரம் செய்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். (இத கத்துக்க இத்தனை வருஷம் ஆச்சான்னு கேக்காதீங்க. இப்போத்தானே பிள்ளைகள் நம்மை டிப்பெண்ட் பண்ணாம இருக்காங்க.!!)

சமையல்

cooking

ரொம்பப் பிடிச்ச விஷயம். விதம் விதமா மட்டுமில்ல. டெய்லி சமையலையே ரொம்ப ரசிச்சி செய்வேன். பொருத்தம் பார்த்துத்தான் சமைப்பேன். ஒண்ணு காரம்னா ஒண்ணு எளசா, அப்பிடி. நளபாகம்தான்னு சாப்பிடுறவங்க எல்லாம் சொல்வாங்க. நிறையப் பேருக்கு அவங்க சமைச்சது பிடிக்காது. ஆனா, என் சமையலை நானே ரசிச்சிச் சாப்பிடுவேன். அவ்ளோ பிடிக்கும். செட்டிநாட்டு சமையல் மட்டுமில்ல எந்த ஊருக்குப் போறோமோ அந்த ஊர் சமையல் எல்லாம் ட்ரை பண்ணி சமைச்சு டேஸ்ட் பண்ணிடுறது உண்டு. (டெஸ்ட் இல்லைங்க அதை எல்லாம் ஃபோட்டோ எடுத்து ப்ளாக்கில் சமையல் குறிப்பு எழுதுறது.

பிற கலை

KOLAM

ஓவியம், கோலம் போடப் பிடிக்கும். ஒவ்வொரு பண்டிகைக்கும், கடவுளுக்கும் ஏத்த மாதிரி தீம் கோலங்கள் போட்டு வச்சிருக்கேன் என்னோட கோல ப்ளாக்கில். ராசிக் கோலங்கள், கிழமைக் கோலங்கள், கிராம தெய்வக் கோலங்கள், முருகன், சிவன், அம்மன், விநாயகர், பெருமாள், ஐயப்பன் கோலங்கள், மார்கழி, பொங்கல், தீபாவளி, ஓணம், நவராத்திரி, மாசி மகம்,தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், ஆடி மாதம் அம்மனைப் பற்றி என்று கோலங்கள் வரைந்து ப்ளாக்கில் போட்டு இருக்கிறேன்.

வீடு – அலுவலகம் பேலன்ஸ் செய்வது…

வீடுதான் என் ஒரே இடம். என் சுவாசம் போல அது. ஒவ்வொரு வீட்டை விட்டுப் போறதும் தோழியைப் பிரியறது போலக் கஷ்டமா இருக்கும். அப்புறம் அடுத்துப் போற வீடும் புதுத்தோழி போலப் பழகி அன்னியோன்யமாகிடும். இதுவரைக்கும் ட்ரான்ஸ்ஃபர் காரணமா 25 வீடுகள் மாறி இருப்போம். எனக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும். அப்பப்போ க்ளீன் பண்ணி அடுக்கி வச்சுக்கணும். அடிக்கடி வீடு , ஊர் மாறுறதால வேலைக்கு ஆள் கிடைக்காது. பொறுமையா அதெல்லாத்தையும் நானே செய்துக்குவேன். பெட், புக்ஸ், ட்ரெஸ் ஷெல்ஃப், சாமி ஷெல்ஃப், கிச்சன் எல்லாம் பளிச்சின்னு இருக்கும். வீடு நீட்டா இருந்தாத்தான் எனக்கு மைண்ட் கிளியரா இருக்கும்.

கடந்து வந்த பாதை

கல்லூரியில் படிக்கும்போது நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன். சில கல்கி, புதியபார்வை, சிப்பி, வைகறை, புரவி, நம் வாழ்வு போன்ற பத்ரிக்கைகளில் வந்துள்ளன. மாணவ நிருபராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின் திருமணம் ஆகிவிட்டது. முழுநேர இல்லத்தரசி. பிள்ளைகள் கல்லூரி செல்லும் வரை எந்த வெறுமையும் தெரியவில்லை. அவர்கள் வேலைக்குச் சென்றவுடன் ஏற்பட்ட தனிமையைத் தீர்க்க வலைப் பூ தொடங்கி, எழுத ஆரம்பித்தேன். பத்ரிக்கைகளும் வாய்ப்புக் கொடுக்க எழுத்தாளர் ஆகிவிட்டேன். கடந்துவந்த பாதை கரடும் முரடும். ஆசையும் நிராசையும் பள்ளமும் மேடும் நிரம்பியதுதான். என்றாலும் இன்று அடைந்திருக்கும் இடம்தான் மனதில் இருக்கிறது.

சினிமா பிரபலங்கள்

எப்படியும் சினிமாவுக்கு ஒரு பாடல் எழுதிடணும்னு வலைப்பூ எழுத வந்த ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. அதுவும் ஷங்கர் டைரக்‌ஷனில், ரஹ்மான் இசையமைப்பில் என் பாடல் இடம் பெறணும்னு பேராசை கூட இருந்தது. அதுக்காக நிறைய மெனக்கெடனும்னு சொன்னாங்க. நாம யாருன்னே அவங்களுக்குத் தெரியாதில்ல. ஒரு வலைப்பதிவரா நான் எழுதிய கவிதைகள் இரண்டை முகநூல் நண்பரும் இயக்குநருமான ஐஎஸ்ஆர் செல்வகுமார், இசையமைப்பாளர் விவேக் நாராயணின் இசையமைப்பில் மகளிர்தினப் பாடலா இசையமைச்சு வெளியிட்டார். முகநூல் நண்பர்கள் சேரன், மிஷ்கின், பாரதி மணி, நிகோலஸ் ராஜன், மோகன், இயக்குநர் செல்வகுமார் இவங்கதான் எனக்குத் தெரிஞ்ச சினிமாக்காரங்க.

உடல் – மனம்

bharathiar

‘விசையுறு பந்தினைப் போல உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’னு பாரதியார் பாடுனது ரொம்பப் பிடிக்கும். பேச்சு எப்பிடி ஃபாஸ்டோ அதே போல உடம்பும் செயல்படணும்னு நினைப்பேன். அதுக்காக பறக்குறது போல நடந்து அடிக்கடி காலை ஒடச்சுக்குவேன். உடம்புல கால்சியம் குறைவா இருந்தாலும் இப்பிடி ஆகும்னு சொல்றாங்க. ‘அனைத்துக்கும் ஆசைப்படு’ அப்பிடின்னு சொல்றாங்க. ஆனா, ‘அப்செட் ஆகு’ன்னு சொல்லல. ஆசைப்படுறனோ, இல்லையோ அப்பப்போ மூட் அவுட் ஆகி, அப்புறம் என்னை நானே சரிப்படுத்திக்குவேன். Don’t expect, don’t compareனு சொல்லிக்கிட்டு!

எழுதியதில் பிடித்தது

கல்யாண முருங்கை

கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்

உன் பாதங்கள் வரைகிறேன்…

சீடைகள் செய்யத் தெரியாததால்

வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்…

நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட.

விஷம் கக்கும் பூதனை, காளிங்கன்

இல்லை இங்கு…

அன்பைக் கக்கும் நான் மட்டுமே.

வருடம் ஒரு முறை

வருகிறாய் வீட்டுக்குள்…

என் வயிற்றில் ஒரு முறையாவது வாயேன்.

உறை பனியிலிருந்து

குழாய் வழிப் பயணத்திலோ

தொட்டிலில் இருந்து தத்தாகவோ…

***

சுமந்தவள்

அவள் கண்கலங்க அமர்ந்திருந்தாள்.

என்னைப் பிரியும் துயரம்.

முன்பே பிரித்திருக்கிறாள்.

பிரித்தபின் மகிழ்ந்திருக்கிறாள்.

எனக்கும் துயரம்தான்

இருந்தும் வலைபின்னிக்

கிடக்கிறது வலியப்

பிரியவேண்டிய வேலை.

வழக்கம்போல அணைத்தாள்.

நெற்றியில் முத்தமிட்டாள்.

முதுகுச் சுமை விட

கனமாய்க் கிடந்தது அவளது அன்பு.

கடக்க நினைகிறேன்.

கண்ணீர் பெருகுகிறது.

உப்புமுட்டையாய் இறக்கமுடியவில்லை

வயிற்றில் சுமந்தவளின் அன்பை…

***

உதறப்பட்ட வார்த்தைகள்

மௌனக்கூடுடைத்து

வார்த்தை சிறகுகளில்

வலம் வரும் பட்டாம்பூச்சிகள்

வீழ்ந்து கிடக்கும்

வெள்ளைத்தாள்களில்

தொத்தி தொத்தி

கிறுக்கலாகின்றன.

நிம்மதியின்மையை

சுமந்த தாள்

தாளமுடியாமல்

காற்றில் தலைதிருப்பி

உழன்று கொண்டிருக்கிறது,

உதறப்பட்ட வார்த்தைகளோடு.

இசை

music

பழைய திரை இசைப் பாடல்கள், சில ஹிந்திப் பாடல்கள், ரிக்கி மார்ட்டின், மோரிஸ் ஆல்பர்ட், ஈகிள்ஸ், பீட்டில்ஸ், ஜாஸ், பாப், ராக், கஜல், கவ்வாலி, ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் என்று எல்லாமே ரசிப்பது உண்டு. கேள்வி ஞானம்தான். பாடவோ இசைக்கவோ தெரியாது. (பாத்ரூம் பாடகி என்று வேண்டுமானால் சொல்லலாம்).

பிடித்த ஆளுமைகள்

THIRUSHKAMINI

அன்னை தெரசா, ஜெ.ஜெயலலிதாம்மா, இந்திரா காந்தி அம்மையார், மலாலா, அருந்ததி ராய் பட்டாச்சார்யா, சந்தா கோச்சார், பாடலாசிரியர் தாமரை. எழுத்தாளர் சுஜாதா, நடிகர்கள் பசுபதி, தனுஷ், நாடகத்தில் கோமல் சுவாமிநாதன், பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினி.

பிடித்த பெண்கள்

குடும்பத்தில் அம்மா, ஆயா, அப்பத்தா, அத்தைகள் இவர்களது அன்பும் கண்டிப்பும் பிடிக்கும். தீர்க்கமான சிந்தனைகளோடு வளர இவர்கள்தான் காரணம். வெளியில் மோகனா சோமசுந்தரம், உமா ஷக்தி, தமிழச்சி தங்கபாண்டியன். என்றும் அன்பைச் சொரியும் முகநூல் சகோதரிகள் ராஜிகிருஷ் அக்கா, லலிதா முரளி, கயல்விழி லெக்ஷ்மணன், ராஜி மலர், வாணி மல்லிகை, கயல்விழி ஷண்முகம், மலர்விழி ரமேஷ், புவனேஷ்வரி மணிகண்டன், சித்ரா சாலமன், அரசி அன்புரத்னம், சாந்தி மாரியப்பன், வல்லிம்மா, ஏஞ்சல், கீதா இளங்கோவன், மணிமேகலை, விஜி, கவிதா, உமா மோகன் ஆகியோர்.

நகைச்சுவை

நான் கொஞ்சம் சீரியஸான ஆள். சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும்போதே அதை சீரியஸா எடுத்துக்கிடுவேன்னு வீட்டில் கிண்டலடிப்பார்கள்.

ஃபேஸ்புக் – கற்றதும் பெற்றதும்

எதைக் கொடுக்கின்றீர்களோ அதையே பெறுவீர்கள். நிறைய நட்பும், அன்பும் சில பாடங்களும் பெற்றதைக் குறிப்பிடலாம்.

அழகென்பது

உள் ஒளி.

வீடு

கிட்டத்தட்ட 25 வீடுகள் மாறி இருப்போம். ஒவ்வொரு வீட்டிலும் பல சௌகரியங்களும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து அடுத்து மாறுவதால் இருக்கும் வீட்டுக்கேற்ப பொருட்களை அடுக்கிக் கொள்வேன். வீடு விட்டு வீடு மாறும்போதெல்லாம் பல பொருட்கள் உடையும். பலது புதுசு வாங்குவோம். ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான வசதியை செய்து முடிக்கும்போது அடுத்த வீடு மாறிவிடுவோம். ஷாண்ட்லியர்ஸ், காலப்ஸ் வைத்த திரைகள், திவான், ஃப்ரெஞ்ச் டோருடன் கூடிய சொந்த வீட்டையும் பணி மாற்றத்தில் வாடகைக்கு விட்டு வந்தோம். கணவரின் ரிட்டயர்மென்டுக்குப் பிறகு சொந்த வீட்டில் செட்டிலாகும்போது இன்னும் பார்த்துப் பார்த்துச் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.

வாழ்க்கை

தீர்மானமாக இருப்பவர்கள் ஜெயிக்கிறார்கள். எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கவனம் வேண்டும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பதில் முழு நம்பிக்கை உண்டு.

மறுசுழற்சி

எதையும் வீணடிப்பதில் எனக்குப் பிரியம் கிடையாது. உடைகள் ஓரளவு நன்றாக இருந்தால் அந்த அந்த ஊரில் வேலை செய்யும் பெண்களிடமே கொடுத்துவிடுவதுண்டு. எந்தப் பொருள் ரிப்பேரானாலும் அதைப் பழுது நீக்கி உபயோகித்தலே சிறந்தது என்று நினைப்பேன். மார்க்கெட்டில் புதுசாக வந்திருக்கு என்று கம்ப்யூட்டரும், டி.வி.யும், செல்போனும், 4 பர்னர் அடுப்பும் வாங்கிக் குவிப்பதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் எப்படி எப்படியோ சேர்ந்துவிடும் சிலதை அடுத்த ஊருக்குப் போவதற்குள் தேவைப்படும் யாரிடமாவது கொடுப்பதுண்டு.

எழுத்தும் வாசிப்பும்

sathanai-arasigal-wrapper

anna-patchi-fb-500x416

என்னுடைய மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ‘சாதனை அரசிகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பு. இது வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களின் வெற்றிக் கதைகளின் தொகுப்பு. ‘ங்கா’ – ஆராதனா என்ற குழந்தையின் புகைப்படங்களோடு கூடிய கவிதைத் தொகுப்பு. ‘அன்ன பட்சி’ என்ற தலைப்பில் என்னுடைய கவிதைத் தொகுப்பு.

பஜ்ஜி, சுண்டல் கட்டின பேப்பரைக் கூட விடாமல் படிக்கும் ரகம் நான். ஒரு புத்தகத்தை எடுத்தால் முதல் அட்டையிலிருந்து கடைசிப் பக்கம் முற்றுப் புள்ளி வரை படிப்பேன். இப்போதெல்லாம் முகநூலும் வலைத்தளமும் பெரும் நேரத்தை எடுத்துவிடுவதால் படிப்பது குறைந்துவிட்டது. வாசிப்புக்குத் திரும்ப யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் வாங்கிய புத்தகங்கள் தேங்கிப் போய் இருக்கின்றன. அடுத்துப் படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

புகைப்படக்கலை

photography

போற ஊரைப் பார்க்கும் பொருளை எல்லாம் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் போடுவதுதான் ஒரே வேலை. என் லூமிக்ஸ் காமிராவில் எடுக்கப்படும் படங்கள் சில சமயம் அழகானதாக அமைந்துவிடுவதும் உண்டு. மேகத்தில் ஆஞ்சநேயர், குவாலியர் சூரியனார் கோயில் மயில், ஆந்திராவில் சன்செட், குல்பர்கா சோலே கம்பா மாஸ்க், பிதார் கோட்டை ஆகியன பலராலும் விரும்பப்பட்ட புகைப்படங்கள். உணவுப் புகைப்படங்கள் பல கூகுள் சர்ச்சில் அடிக்கடி சிக்கி முதலிடத்தில் இருக்கின்றன. குழந்தைகள், பூக்கள், விநாயகர் ஆகியோர் என் புகைப்படத்தில் முதலிடம் பெறுவார்கள். நேரடி ஒளிபரப்புப் போல எங்கு சென்றாலும் அந்த ஊரைப் பற்றி அல்லது அந்த நிகழ்வைப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் எழுதுவது பிடித்தமான ஒன்று.

star thozhi 2

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

Image courtesy:

http://www.educationworld.in

http://www.plasticoceans.net

http://spinsucks.com

http://www.fubiz.net

http://puthu.thinnai.com/

http://hdwidescreenwallpapers.com

பின்னூட்டமொன்றை இடுக