எழுத்தாளர் பூரணிக்கு ஓர் அஞ்சலி! – பூரணியின் படைப்புகள் சில…

Image

இதுதானே பூரணம்?

நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…

‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே கேள்விக்குறியான நிலையில் போராட்டமான வாழ்க்கை. ஒரு நாள் க்ரீம் பிஸ்கெட் சாப்பிட வேண்டுமென ஆசை. அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி, தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டேன். அதை எடுத்துப் பார்த்த அம்மா ரொம்பவும் நெகிழ்ந்து போனார். அதுதான் என்னுடைய முதல் எழுத்து.

அம்மாவின் வழிகாட்டுதல்தான் என்னையும் இலக்கியத்துக்குள் இழுத்தது. சிறு வயதிலேயே வாழ்க்கையை, அதன் யதார்த்தத்தைத்தான் பதிவு செய்ய வேண்டும் என்பதும் புரிந்தது. அம்மாவின் எழுத்துப் பாணியும் எனது எழுத்து வகையும் வேறு வேறு. ஆனாலும், உள்ளது உள்ளபடி எழுதுவதென்பது அம்மாவின் பாடம்தான்.

Image

அம்மா மூன்றாம் தலைமுறையின் பிரச்னைகளைக்கூட எப்படி எடுத்துக் கொண்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம். என் மகள் 3 வயது முதல் பரதக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தாள். அவள் திருமணமும் அதைத் துண்டிக்காததாக இருக்க வேண்டும் என எண்ணினோம். ‘பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல… நாட்டியம் தொடர வேண்டும்’ என்று ஒருவருக்கு மணமுடித்துக் கொடுத்தோம். நாட்டியம் ஆடுபவர் என்பதை இருபதாம் நூற்றாண்டிலும் வேறு வகையில் புரிந்து கொண்டவராக இருந்தனர் அந்த ஆணும், அவரைச் சார்ந்தவர்களும். மேலும், திருமணத்துக்கு ஏற்றவரல்லாத ஒரு ஆண் என்பதையும் நாங்கள் அறியாமல் திருமணம் முடிந்திருந்தது. திருமணம் முடிந்து 10 நாட்களிலேயே இதில் ஏதோ சிக்கல் என்று எங்களுக்குப் புரிய வந்தது. அப்போது நாங்கள் அம்மாவின் எதிர்வீட்டில்தான் குடியிருந்தோம். 3 மாதங்கள் வரை இயல்பாகவே நடந்து கொண்டோம். எங்கள் மகளின் வேதனைகளுக்கு விவாகரத்து ஒன்றே வழியென தீர்மானம் செய்தோம். அம்மா, அண்ணன், அண்ணி என எல்லோரிடமும் சொன்னோம். அம்மா வயதானவர், எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயமும் பதற்றமும் இருந்தது. சொல்லி முடித்தவுடனேயே அம்மா, ‘எனக்கு முன்னமே சந்தேகம்தான். புதிதாக திருமணமான ஆணின் எந்தச் செயலும் அவனிடமில்லை. இந்த மாதிரி திருமணம் தேவையில்லை’ என்றார். அந்த ஆணைச் சேர்ந்தவர்களை தன் வீட்டுக்கு அழைத்தார். வந்தவர்கள், அம்மா வயதில் பெரியவர், அதனால் அவமானம் கருதி பேத்தியை தங்களுடன் அனுப்பி வைத்து விடுவார் என்ற எண்ணத்தில் பேசினார்கள். அம்மா அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ‘இப்படியொரு கல்யாணம் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். இது கல்யாணமும் இல்லை. என் பேத்திக்கு கையில் கலை இருக்கிறது. அதன் எதிர்காலம் பரந்து கிடக்கிறது. தயவுசெய்து எல்லோரும் எழுந்து வெளியே போங்கள். இது கனவு என்று நாங்கள் நினைக்கத் தொடங்கி வெகு காலம் ஆயாச்சு’ என்றார். அதிர்ந்து விட்டனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பும் கேட்டனர். ஆனாலும். சமுதாயமும் உறவுகளும் (அம்மாவைத் தவிர) எங்களுக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து என் மகளுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைந்ததும், அதைப் பார்த்து அம்மா மகிழ்ந்து, நெகிழ்ந்ததும் தனிக்கதை. அப்போது அம்மாவுக்கு வயது 86!

என்ன சொன்னார்களோ, என்ன எழுதினார்களோ அப்படியே வாழ்ந்தவர் என் அம்மா. திருமணம் அவரவர் விருப்பம் சார்ந்தது என்பதில் மிகுந்த தெளிவு கொண்டவர். ‘பொருந்தாத போது கழட்டி எறிய வேண்டியதுதானே?’ என்பார். ‘காலுக்கு ஆகாத செருப்பை கழட்டி எறி… எப்பவோ மாட்டிண்டு கழட்டிப் போடற செருப்புக்கே இந்த சுதந்திரம்னா, எப்பவுமே கூட இருக்க வேண்டிய கல்யாணத்துல ஒட்டாம எப்படி இருக்கிறது?’ என்பார்.

100 வயது வரை என்னுடன் இருந்த என் அம்மா, இப்போதும் என்னுடனேயேதான் இருக்கிறார். இருப்பார். தன்னுடைய எழுத்துகள் அத்தனையையும் எனக்கு சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார். எழுத்துதான் எனக்கு அம்மா அன்றும் இன்றும் என்றும்…’’

தொகுப்பு: ஆர்.வைதேகி

பூரணியின் சில படைப்புகள்…

வயிறு  (சிறுகதை) 

அன்று ஒரு காரியமாக என் சினேகிதி கமலா மாமியின் வீடு சென்றேன். அது ஒரு வசதியான குடும்பம். குழந்தைகள் சாப்பிட அமர்ந்திருந்தனர். சமையற்கார அம்மாள் பரிமாற வந்தாள். எனக்கு அவளை அங்கு பார்த்தும் ஒரு ‘ஷாக்’. அவள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவள். பெயர் காமாட்சி… ‘காமு’ என எல்லோராலும் அறியப்பட்டவள். அவளும் என்னை அங்கு பார்த்ததும் திகைத்து நின்று விட்டாள். முகத்தில் சற்று வெட்கம் கலந்த சோகம். நான் என்னை சமாளித்துக் கொண்டு, “அடி காமு, நீ எப்படியடி இங்கு வந்தாய்?” என்று கேட்டேன். காமு, “வயிறு இருக்கிறதே!” என்று பதில் சொன்னாள். கமலம் மாமி, “இவரை உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டார். “தெரியும், எங்கள் கிராமம்தான். தூரத்துச் சொந்தம்கூட” என்றேன். காமுவின் முகம் மலர்ந்தது.

வீட்டுக்கு வந்த பிறகு, எனக்குக் காமுவின் நினைவாகவே இருந்தது. அவள் தகப்பனார் பஞ்சு சாஸ்திரிகள் வைதீகம். ஏதோ கொஞ்சம் நிலபுலம், இருக்க வீடு என்று இருந்தது. எங்கள் வீட்டில் என் தகப்பனார் செய்யும் சிரார்த்தத்தில் பஞ்சு சாஸ்திரிகளும் ராமசாமி ஐயரும்தான் பிராமணார்த்தம் சாப்பிட அழைக்கப்படுவார்கள். ஏனெனில், என் தகப்பனாருக்கு நன்கு தாங்கிச் சாப்பிடுபவர்களைத்தான் அழைக்கப் பிடிக்கும். (இவர்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள்.) கொறிப்பது போல் சாப்பிடுபவர்களை கூப்பிடமாட்டார். ரசித்து, ருசித்து திருப்தியாக அவர்கள் சாப்பிடுவதை என் தகப்பனார் பிரம்மானந்தமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்.

Image

பஞ்சு சாஸ்திரிகளுக்கு காமு ஒரே மகள். பிள்ளைகள் மூவர். மூவரும் படித்து வேலை பார்த்துக் கொண்டு அவரவர் குடும்பத்தை கவனித்துக் கொண்டனர். சாஸ்திரிகள் அவர்களிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. காமுவை நல்ல இடத்தில் வரன் பார்த்து, திருமணம் செய்து கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருந்தேன். பத்து வருடங்களுக்குப் பிறகு இன்று இப்படி சந்திக்க நேர்ந்தது.

சில நாட்கள் சென்றிருக்கும். காமு என் வீட்டுக்கு வந்தாள். ‘‘வா’’ என்றேன்.

“மாமி, அன்று உங்களைப் பார்த்ததும் எனக்கு மனதில் ‘திக்’கென்று ஆகி விட்டது. ஆனால், நீங்கள் மிக சகஜமாக என்னைத் தெரியுமென்றும், நான் உங்கள் உறவினள் என்றும் அந்த அம்மாளிடம் சொன்னது எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இவ்வளவு வசதி படைத்த நீங்கள் என்னை உறவினள் என்று சொல்லிக் கொள்ள முடிந்தது என்றால் உங்கள் மனசு எவ்வளவு விஸ்தாரமானதாக இருக்க வேண்டும்!”

“இதில் என்னம்மா அதிசயம்? இன்று நீ சமையற்காரியாக இருப்பதனாலேயே உறவு இல்லையென்று போய்விடுமா? சரி, அதை விடு. உன்னை நல்ல இடம் பார்த்துத்தானே உன் தந்தை மணம் செய்து கொடுத்தார், பின் ஏன் இந்த நிலை?”

“புக்ககம் இன்றும் வசதியாகத்தான் இருக்கிறது. ஆனால், எனக்குத்தான் அங்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை. பத்து வருடம் வாழ்ந்தேன். என்றாலும் ஒரு குழந்தைக்குத் தாயாகும் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. கணவர் இறந்தபின் பிறந்தவீடு வரவேண்டியதாகி விட்டது. புக்ககத்தார் எனக்கு ருபாய் 25 ஜீவனாம்சமாகக் கொடுக்கிறார்கள். அப்பா உயிரோடு இருந்தவரை சிரமம் தெரியவில்லை. என் ஜீவனாம்சத் தொகையைக் கூட சேர்த்துத்தான் வைத்தார். அவர் உடல் நலம் கெட்டதும் அந்தப் பணம் வைத்தியச் செலவில் தீர்ந்துபோய் விட்டது. அப்பா சாகும்வரை எட்டிக்கூடப் பார்க்காத பிள்ளைகள் அவர் இறந்த பிறகு நிலத்தை பங்கிட்டுக் கொண்டு போய் விட்டார்கள். ஏதோ பெரிய மனது செய்து வீட்டை விற்காமல் நான் உயிருடன் இருக்கும் பரியந்தம் அதில் வசித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவுதான், அதன் பிறகு என்னைப் பற்றி விசாரிப்பது கூடக் கிடையாது. என்ன செய்வது? பிரும்மா தோண்டின வயிற்றை தூர்க்க முடியுமா? சௌகர்யமானவர்களுக்கு சாண் வயிறு என்றால், எனக்கோ சர்வாங்கமும் வயிறாக இருக்கிறது.”

“கமலம் மாமி வீட்டில் உனக்கு வசதியாக இருக்கிறதா?”

“எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டில் எல்லாம் ரொம்பக் கணக்கு கச்சிதம். அவர்கள் எல்லோரும் சாப்பாட்டைக் கொறிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், ஹார்லிக்ஸ், பால், பழம் எல்லாம் அவர்களால் சாப்பிடமுடிகிறது. அவர்களெல்லாம் மூன்றே தோசையோடு எழுந்துவிடும்போது நான் மாத்திரம் அதிகம் சாப்பிட முடியுமா? தட்டின் முன் உட்கார்ந்தால் வயிறு நிறைய சாதம் பரிமாறிக் கொள்ள எனக்கே வெட்கமாக இருக்கு. பாடுபட்டும் வயிறார பசிதீர சாப்பிட முடிவதில்லை. ஊருக்கே போய்விடலாம் என்று இருக்கிறேன். வரும் ஜீவனாம்சத்தில் குருணைக் கஞ்சியானாலும் வயிறு நிறைய, சங்கோஜப்படாமல் குடித்துக் கொள்ளலாம் அல்லவா?”

***

பூரணியின் நினைவலைகள்…

முதுமை 

Image

‘தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறு’ என்பது பழ மொழி. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரத்த பாசமும் அன்பும் உண்டுதான் என்றாலும், அதைவிடச் சற்று தூக்கலானதுதான் தன் நலன் பேணல். ஒவ்வொரு ஜீவனும் தன் வாழ்வின் பொருட்டுத்தான் உலகில் இயங்குகிறது. தனக்கு மிஞ்சிய பிறகுதான் தான தருமம் செய்யமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் திருமணம், குழந்தைப்பேறு, அவர் களுக்குச் செய்யவேண்டிய வளர்த்தல் படிப்பித்தல் போன்ற கடமைகள் எல்லாம் இயற்கையாக இருக்கிறது. ஆனால், அவர்கள் தமது பெற்றோருக்கு முதுமையில் செய்தல் என்பது கடமைக்காகவே அன்றி இயற்கையானது அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளும் வளர்ந்தபின் தனித்துப் போவதுதான் இயற்கையாக உள்ளது.

உண்மையாகச் சிந்திப்போமானால், நம் குழந்தைகளை நாம் வளர்த்தது போல, அவர்கள் தாங்கள் பெற்றவைகளை வளர்த்து ஆளாக்க நினைப்பது தான் ஞாயம். அதுதான் இயற்கை. ஆனால், மனித குலம் தனக்கென சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, தன்னுடையது பிறருடையது என்னும் பாகுபாட்டை உண்டாக்கிக் கொண்டு செயல்படுவதால் ஏழை, செல்வந்தர் என்பன போன்ற பல இருமைகளை ஏற்றுச் செயல்படத் தேவைப்படுகிறது.  பொருளாதார வசதி உள்ள சிலர் தமது முதிய காலத்தில் தாம் பெற்ற மக்களின் கையை எதிர் பார்க்காதவர்களாக இருக்க முடிகிறது. பலரால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

வாய்விட்டுச் சொல்ல மனித நாகரிகம் இடம் தராவிட்டாலும் மனதில் சற்று பாரம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பொருளாதார உரிமையற்ற வயோதிகப் பெண்களுக்கு இந்த நிலை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. முன் அறிமுகமாகாத ஆணாக இருந்தாலும் மணமான பின்பு கணவன் என்ற உரிமையில் தனது சம்பாத்யத்தை செலவு செய்வதில் சிரமம் இருப்பதில்லை. ஆனால், பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்திருந்தாலும் ஒரு தாய்க்கு மகனின் வருமானம் அன்னியமானதே. அதில் உரிமை பாராட்ட முடியாது. அதேபோல, குடும்பத்தில் மூத்தவளாக அவர்களோடு வாழ்ந்து வந்தாலும் சற்று அன்னியமாகி விடுகிறாள். விவேகியாக இருந்தால் உரசல் ஓசைப்படுத்துவது இல்லை. சராசரியான இடங்களில் ஒலியெழுப்பி அபஸ்வரத்தை உண்டாக்கி விடுகிறது. இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்கு அந்த நபர் கலை, இலக்கியம், இசை, ஆன்மீகம் போன்ற எதிலாவது ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டிருந்தால் நெருக்கடியைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கிறது. சராசரியாக வாழப் பழக்கப்பட்டவர்கள் அந்தத் தருணங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தன்னை ஒரு அகதி போல் உணர்ந்து அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

இக்கால தர்மம் பணம் தேடல், சுயநலம் பேணல், என்னும் ஒரு சூழலில் சிக்குண்டு இருக்கிறது. மனித மனங்கள் இயந்திரத் தனமாக மாறி வருகின்றன. சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் பெண்களும் படிப்பையும் சுய சம்பாத்யத்தையும் விரும்புகிறார்கள். ஆனாலும் இல்லத்தை பராமரிப்பது, வீட்டுக் கடமைகள் போன்றவற்றிலிருந்து விடுபடமுடிவதில்லை. விடிவதற்கு முன் எழுந்து, ‘கிரைண்டர்’ போன்ற பல மின் கருவிகளின் உதவியுடன் தானும் ஒரு இயந்திரமாக மாறி செயல்பட்டால்தான் அவளால் காரியாலயம் செல்ல முடியும் என்ற சூழ்நிலையில், மனதில் அமைதி, நேசம், அன்பு எல்லாம் வெளிப்பட முடியாமல் போய்விடுகிறது. ஆணும் பெண்ணும் ஆய்ந்து ஓய்ந்து காரியாலயத்திலிருந்து திரும்பும் நேரத்தில் அவர்களுக்குள் சோர்வும் அலுப்பும் இருப்பதால் வீடு மௌனத்தில் ஆழ்ந்து கலகலப்பு இன்றி தோற்றமளிக்கிறது. இது போன்ற பல மாற்றங்களால்தான் இந்தியாவிலும் முதியோர் இல்லம் பெருகிவருகிறது.

***

கால மாற்றம் 

Image

ரு எழுபது வருடங்களுக்கு முன்னால், இருந்த குடும்பஸ்தர்களுக்கு எட்டு, பத்து என்று குழந்தைகள் பிறந்தன. காரணம் குடும்பக் கட்டுப்பாட்டு முறை தெரியாது என்பது மட்டும் அல்ல. அக்காலத்திலும் அதற்கு சில வேறுவிதமான முறைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், பொதுவாக அந்தக்கால மக்கள் கடவுளையும், பாப புண்ணியத்தையும் நம்பினார்கள். கருக்கலைப்பு மஹா பாபம் என்று கருதினார்கள். ஆனால், செயலும் விளைவும் தவிர்க்க முடியாதது. நமக்கு முன்னோர்கள் விதித்த ஒழுக்க நெறியும், மனக் கட்டுப்பாடும் இல்லாத போது, விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு, வறுமையிலும் கூட சகிப்புத்தன்மையோடு குழந்தைகளை வளர்த்தார்கள்.

அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு பாட்டு, “காதலுக்கு வழிவைத்து கர்ப்பத்துக்கு தடை வைத்து” என்பதான தலைப்பில். குழந்தைகள் பெறாமல் மனம்போல் உடலுறவுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்னும் பொருள் பற்றி எழுதியிருந்த பாட்டு அது. அன்று அந்தப் பாட்டை எழுதியவர் மீது எனக்கு அசாத்தியமான கோபமும் வெறுப்பும் உண்டானது. ஆனால், எங்களைப் போன்றோரின் எண்ணத்தால் இன்று நம்நாட்டில் தாங்க முடியாத ஜனத்தொகை, வறுமை காரணமாக இருக்க நிழல் வேண்டி ஏரிகளில் எல்லாம் குடிசை. அந்த மக்களின்மீது கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் பணம், ஓட்டு முதலிய ஆசையும் கொண்டு அவர்களுக்கு அதற்கு அனுமதியும், நிலப்பட்டாவும் மின்சார வசதியும் அளித்துவிட்டு, இன்று அசுரத்தனமாக வீடுகளை இடித்தல். இருக்க இடமில்லை, குடிக்க நீர் இல்லை, உண்ண உணவில்லை என்று பாமர மக்களின் தவிப்பு. அன்று கருத்தடையைப் பாபமாகக் கருதிய என் போன்றவர்களே இன்று பேரன் பேத்திகளை முழு மனதோடு தடுத்துக்கொள்ள புத்தி சொல்கிறோம்.

இதே போல்தான், கால மாற்றத்தை உணராமல் கற்பு என்ற போர்வைக்குள் பெண்களை மூடிவைத்து ஆண்களின் சீக்கை வாங்கி அல்லலுற வைப்பதும். ஆண்கள் ஒழுக்கத்துக்குக் கட்டுப்பட மாட்டார்கள் என்னும்போது, பெண்கள் தடுப்பு செய்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இதில், கன்னியா சம்சாரியா என்னும் கேள்விக்கே இடமில்லை. சூழ்நிலை பாதகமாக இருந்தால் தற்காப்பு செய்துகொள்வது தப்பல்ல. முப்பது வயதுக்கு மேலும் முதிர் கன்னியாக வாழும் அவலம் இன்று பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இந்நிலையில், உத்தியோகம் வேறு பார்க்க நேர்கிறது.

***

கவிதைகள் (எழுதிய காலம் – 1930-45)

நலங்குப்பாடல் 

Image

து தருணம் வருவீரே நாதா

என்னரும் நேசரே

பொன்னெனும் மாலை

தன்னிலே நலங்கிடவே (இ)

மாலையில் மேற்கே மறைந்திடு ரவியுடன்

நீல நிறமுடைய வானில்

கோலமுடைய பக்ஷி ஜாலங்கள் பறந்து

கூட்டினின் அடையுது பாரீர் (இ)

பசிய புல்வெளியில் பசுக்களும் மேய்ந்து

பசி ஒழித்து கன்றை நினைந்து

விசையுடன் வீட்டை நோக்கியே வந்திடும்

வேளையிதே வருவீரே (இ)

பூஜைக்குகந்த நல்ல பூ பழம் தேங்காய்

பூவையர் கரமதில் ஏந்தி

ஆலயம் செல்லும் அற்புத வேளையில்

ஆனந்த நலங்கிடுவோமே (இ)

***

நாகரிக ஓடம் 

Image

ணபதியே கலைமகளே இந்தக் கப்பல் செல்ல அருள் புரிவீர்.  கடுகியே முன் காலமதில் பெண்கள் உடை நகையும் இக்கால மடமயிலார் புடவையுடன் நகை விரைந்துரைக்க வரம் தருவாய்.

முடுகு

சுட்டி பட்டம் ஜடை

சிங்காரம் போச்சு

இஷ்டமுடன் தலையிலே

சிலைடு ரிப்பன் ஆச்சு

புஷ்பங்கள் தலையிலே

தைப்பதும் போச்சு

பிச்சோடா மேல் வளைத்துப்

பூ வைக்கலாச்சு

கம்மலுடன் வாளிகளும்

குண்டலமும் போச்சு

கமலங்களால் செய்த

டோலக்குமாச்சு

புல்லாக்கு நத்து நகை

இல்லாது போச்சு

பேசரியுடன் கிளாவர்

ஆசை நகை ஆச்சு

பசு மஞ்சள் பூசுவது

பழமையாய் போச்சு

பவுடர் முகம் தன்னில்

பூசிடவும் ஆச்சு

உட்கழுத்து அட்டிகை

செயினெல்லாம் போச்சு

மிக்க நகை அணிவதே

மௌடீகமாச்சு

காப்புடன் கொலுசுகளும்

கனத்த நகை போச்சு

கையிலே கடிகாரம்

சன்ன வளையாச்சு

கொட்டடிச் சேலைகளைக்

கட்டுவது போச்சு

புட்டாக்களோடு சரிகை

புடவைகள் உண்டாச்சு

கட்டமொடு காலிறங்கு

சேலைகளும் போச்சு

மட்டமான கார்டு கரை

டிக்கட் கரை யாச்சு

பெரிய கரைப் புடவைகள்

பழமையாய் போச்சு

பார்டரில் பூ புதுச்சேரி சில்காச்சு

பாதசரம் பட்டாடைகள்

பீலிகளும் போச்சு

பாவையர்கள் பாதமதில்

சிலிப்பர் இடலாச்சு

தண்ணீர் குடம் தூக்கும்

தருணியர்கள் இப்போ

டென்னிஸ் விளையாட

கிளப்புகள் உண்டாச்சு

ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்போழுதும் மாறுதலே

இதையறியா பல பெரியோர் கண்டு இகழுவதும் அறியாமை.

***

போஜனப் பாட்டு 

Image

வித விதமான

விசித்திரப் பந்தலில்

இலை விரித்திருக்கு

போஜனம் செய்யவே

ராஜ ராஜாக்களே

நீர் வாரும்!

ஆசனங்களில் அமர்ந்து

ஆசையாய் உண்டிடும்

பளிங்கினால் பல மேஜை

பவளக்காலொடு குரிச்சி

பரிமாறுபவர் கனச் சுத்தம்

பரிசாரகரோ நளன் மட்டம்

பாதாம் கீர் பால் பாயாசம்

பிரமாதம் கேரளப் பிரதமன்

ஏதேதோ பல பரமான்னம்

எப்படிச் சொல்லுவ துபமானம்

சம்பா அன்னம் பூப்போல்

சுவை கூட்டும் பொன் பருப்பு

சாம்பாரும் தயிர்வடையும்

சாப்பிட உடனே வாரும்

கத்தரிக்காய் ரஸவாங்கி

காரமுள்ள கறிவகைகள்

கொத்தவரை அவரை காரட்

கோசுடன் பலபல காய்கள்

அவியல் பொரியல் துவையல்

வறுவல்களில் பல வகைகள்

புவியில் புகழ் படு துருவல்

பொங்கல் சட்னி கொத்சு

பொரிச்ச கூட்டில் ஆறுவகை

புளிச்ச கூட்டில் வேறுவகை

எரிசேரியுடன் புளிசேரி

எத்தனை கேரள வகைகள்

கர்னாடகா பிஸி பேளா பாத்

காரம்குறைந்த ஹுளி சொப்பு

ஆந்திர ஆயிட்டம் பல கண்டீர்

அதுவும் சாப்பிட உண்டு

கருவட வற்றல் குழம்பு

கண்கவர் கலரில் மோர் குழம்பு

கசக்கா பாவற்காய் பிட்டலை

கலந்திருக்கும் அதில் கடலை

பைனாப்பிள் பன்னீர் ரசங்கள்

சைனாக் கிண்ணியில் ஊற்றி

பருகிடுவீர் சுவைத்திடுவீர்

சுறுசுறுப்பாக்கிடும் மனதை

விளாமிச்சை கலந்த குளிர் நீர்

வெந்நீரும் குடித்திட உண்டு

வேண்டியதெதுவோ கேட்பீர்

விரைவாய் கிடைத்திடும் காண்பீர்

ஜிலேபி லட்டு பால் கோவா

குலாப் ஜாமூன் ஹல்வா

தில்லி பாதுஷா சுருள் பூரி

தித்திக்கும் மைசூர் பாகு

நாக்கில் போட்டால் கரையும்

கேக்குகள் எத்தனை வகைகள்

போக்கிட இனிப்பை பஜ்ஜி

பொங்கல் வடை வகை சொஜ்ஜி

மிக்சர் போண்டா சேவை

பிக்சர் பாப்கார்ன் பக்கோடா

சொச்சம் பலப் பல அயிட்டம்

சொல்வது மிகவும் கஷ்டம்

ஆடை தோய்த்த நல்ல தயிரும்

கூடை கூடையாய் பழவகையும்

ஐஸ்ஸுடனே வாசனை நீரும்

நைசாய் உண்டிட வாரும்

கைகளைக் கழுவவும் வெந்நீர்

ஹாங்கரில் கலர்கலர் டவல்கள்

காஷ்மீர் கம்பள விரிப்பு அதில்

சுவையாய் பீடா ட்ரே இருக்கு.

***

நடமாடும் நரகம்!

addicted-to-your-cellphone-you-re-not-alone-3a52e782b7

செல்பேசும் கருவியோடு

கையதுவோ காதினிலே

வாசலிது எனும் உணர்வை

மறந்த நிலை பரவசங்கள்…

யோசித்தல் எனும் செயலால்

எதிர்வருவோர் தெரிவதில்லை.

ஆக்ஸிடென்ட் அதிகரிப்பு,

அரிய உயிர் மதிப்பிழப்பு,

வேகப்பயணம் செய்

வண்டிகளால் உயிர்ச்சேதம்!

தாகத்தைத் தீர்க்கின்ற

குளிர் பானமதிலும் நச்சு!

மோகம் தருகின்ற

விளம்பரங்களில் மயக்கம்!

நாகரீக வாழ்வு தரும்

நாசமதோ கொஞ்சமல்ல!

(2009ல் எழுதப்பட்டது)

கவிதைகள்

ஆற்று வழி

Imageமராவதி பாயும் அழகியதோர் சிற்றூராம்
சிற்றூரின் ஆற்றுவழி சிந்தனைக்கு ஊற்றுவழி.
அடைத்திருக்கும் வேலியுள்ளே தழைத்திருக்கும் வெற்றிலையோ
மடைதிறக்க அருவியென வயல் நிறைந்து நீர் நிற்கும்
நீரோடு சேர்த்து சிறு மீன் வந்து துள்ளிவிழும்
துள்ளிவிழும் மீன் பிடிக்க தூரத்தே நாரை வரும்.
வெண்கழுத்துப் பொன் கருடன் வானத்தில் வட்டமிடும்.
சங்கெனவே வெண்கொக்கு தவமிருக்கும் நீர்த் தடத்தில்
முள்முருங்கையின் கிளையில் மாணிக்கம் பூத்திருக்கும்
கள்ளக் கரும் காகம் கண்சாய்த்துத் தேன் குடிக்கும்
கிள்ளை அருகில் வரக் காகம் அதைத் துரத்தும்
முள்ளுக் கிடைத்தாழை மஞ்சள்குளித்திருக்கும்
படர்ந்த செடியினிலே பச்சரிசி போல் அரும்பு
அடர்ந்த இலைகளிலே அழகழகாய்ச் செம்புள்ளி
மூக்குத்தி போன்ற மலர் மலர்ந்து மணம்வீசும்
தூக்கத்திலே கனவாய்த் தோற்றம் அளித்திருக்கும்
தங்கரளிப் பூ சிதறி தரைமுழுதும் பாய் விரிக்கும்
செங்கரும்பு பூத்திருக்கும் சாமரம்போல் ஆடிநிற்கும்
தென்னை பிளந்தளிக்கும் தந்தத்தின் பூச்சரங்கள்
அன்னையின் அன்பெனவே அமுதூட்டும் செவ்விளநீர்
பாறையிடை நாணல் பச்சைக்கொடி காட்டும்
கூரை கவிந்ததெனக் கார்முகில்கள் கூடிவரும்
ஆடிப்பெருக்கெடுத்து அழகு நதி பாய்ந்து வரும்
ஓடிவரும் செங்குழம்பில் உருண்டு வரும் பெருமரங்கள்
ஆடிப்பெருக்கினிலே ஆற்றுவழிக் காட்சியிலே
மோடிக்குப் பாம்பெனவே மனம் நிறைந்து தனை மறக்கும்
(கணியூர் அமராவதி ஆறு பற்றிய இக்கவிதை எழுதிய காலம் 1970. அவர் 1960-64 களில் வசித்த கணியூர் என்னும் சிற்றூர் பழநிக்கு அருகில் அமைந்தது.)
***
எழுத்து

Image
ட்டிடத்தின் மாடியில்
கைப்பிடிச்சுவரை அண்டிய
கற்பாறைச் சந்தில்
விழுந்த ஒரு விதை
காலம் கடந்த நாளில்
செடியாக முளைத்துவிட்டது.
***
Image Courtesy:

http://uwalive.blogspot.in/

http://www.mdgfund.org

http://manakkalayyampet.blogspot.in

http://commons.wikimedia.org

http://media-cdn.tripadvisor.com

http://blog.gardenmediagroup.com

http://gorkhatimes.wordpress.com/

பூரணியின் காலத்தை வென்ற கதைகளை வாசிக்க…

பூரணி

காலத்தை வென்ற கதைகள் – 8

பூரணி

Image

எழுத்தாளரும் கவிஞருமான இவருக்கு இப்போது 100 வயது.  1913 அக்டோபர் 17ம் தேதி பிறந்தார். சாதாரண மத்தியதரக் குடும்பம். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். 13 வயதில் திருமணம். பிறகு, இந்தி கற்றுக் கொண்டு அதில் ‘ராஷ்டிர பாஷா’ பரீட்சை எழுதி தேறினார். பலருக்கும் இந்தி கற்றுக் கொடுத்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவிகளில் பிரபல மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத்தும் ஒருவர். கபீர் கவிதைகளையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் சில கவிதைகளையும், சமகால இந்திக் கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். 1937ல் பழநியில் இருந்து வெளி வந்த ‘சித்தன்’ பத்திரிகையிலும், கோவையிலிருந்து வெளி வந்த ‘பாரதஜோதி’ பத்திரிகையிலும் இவருடைய 5 சிறுகதைகள் வெளியாயின. 1929ல் ‘ஸ்வயம்வர கும்மி’ என்கிற தலைப்பில் கவிதைகளும், 1930–45க்கு இடைப்பட்ட காலத்தில் ‘நலங்குப் பாடல்கள்’ சிலவற்றையும் எழுதினார். ‘நலங்குப் பாடல்கள்’ தேசிய விடுதலை இயக்கம் சார்ந்த எழுச்சிப் பாடல்கள். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும், மாதர் சங்கத்துக்காகவும் சில பாடல்களை எழுதியிருக்கிறார். மரபுக் கவிதைகள், 2001-2005க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுக் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவர் புதுக் கவிதைகளை ‘புது மரபுக் கவிதைகள்’ என்றே குறிப்பிடுகிறார். சிறுகதை, கவிதை போன்ற புனைவுகள் தவிர நினைவலைகள், சுயவரலாறு, வேதாந்த விசாரங்கள் என்று நீள்கிற இவருடைய படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருப்பூர் ‘சக்தி இலக்கிய விருது’ உள்ளிட்ட விருதுகளையும் பல பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். இவருடைய கவிதைகளும், சிறுகதைகளும், நினைவலைகளும் நூல்களாக வெளியாகி இருக்கின்றன. இப்போது சென்னையில் வசிக்கிறார். இவருடைய மகள் க்ருஷாங்கினியும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ்ப் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவர். வெகு யதார்த்தமான, அலட்டல் இல்லாத, மனதில் தோன்றி உண்மைகளை, அதன் இயல்பு சற்றும் குறையாமல் வெளிப்படுத்துபவை பூரணியின் எழுத்துகள். இவரின் இரு சிறுகதைகள் இங்கே…

*****

சாவு

வீட்டு சொந்தக்காரர் வாடகை வாங்க வந்தபோது, “என் பெண் வரப் போகிறாள். இந்த ஊரில் சில மாதம் தங்க வேண்டுமாம். ஆகையால்,  வீட்டை அவளுக்காக காலி செய்ய வேண்டி வரும். நீங்கள் ஒரு மாதத்திற்குள் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். இம்மாத வாடகை போக மீதி உள்ள அட்வான்சு பணத்தை நான் இரண்டொரு நாளில் கொடுத்து விடுகிறேன்” என்று சொன்னார். 

“என்ன, நீங்கள் திடீர் என்று இப்படிச் சொல்லுகிறீர்களே? வேறு வீடு கிடைக்கா விட்டால் நாங்கள் எப்படி காலி செய்ய முடியும்?” என்றேன் நான்.

“கவலைப் படாதீர்கள், அடுத்த தெருவில் உள்ள என் வீட்டில் உள்ள இரண்டு குடித்தனங்களில் ஒரு குடும்பத்தார் ஒரு வாரத்தில் காலி செய்கிறார்கள். நீங்கள் அந்த வீட்டில் வசித்துக் கொள்ளுங்கள். ஒண்டுக் குடித்தனம் சரிப்படா விட்டால், என் மகள் சென்ற பிறகு இதே வீட்டிற்கு வந்து விடுங்கள்” என்று அவர் சொன்னதன் பேரில், வீடு மாற்றி இந்த வீட்டிற்குக் குடி வந்தோம்.

நடுவில் தொட்டி முற்றமும், கூடம் தாழ்வாரமுமாக அந்த நாள் வீடு. கூடத்துப் போர்ஷனில் ரிடையர் ஆன ஜானகிராம ஐய்யர், அவர் மனைவி சரசு, மகன் சுப்பையா, மருமகள் நீலா, அவளுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை ஆகியோரைக் கொண்ட குடும்பம். சுப்பையா தனியார் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் வேலை பார்த்து வந்தான். இவர்கள் தவிர ஒரு அத்தைக் கிழவியும் அவர்கள் குடும்பத்தில் இருந்தாள். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். நடமாட்டம் கிடையாது. அவளது அத்யாவசியத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு கோணிச் சாக்கில் உட்கார்த்தி, சாக்கை வண்டியாக இழுத்துச் செல்வார்கள். அவளின் தேவைக்கு ஏற்ற இடங்களில் தூக்கி உட்கார்த்தி வைப்பார்கள்.

Image

கிழவி மிகுந்த அமைதியாக இருப்பாள். அதிகம் பேசவே மாட்டாள். மற்றவர்களும் அவளிடம் பொறுமையாகத்தான் நடந்து கொள்ளுவார்கள். சரசு அம்மாள் தன் நாத்தியான அந்தக் கிழவியின் வேலைகளை எல்லாம் சிறிதும் முகம் கோணாமல் தானே முன் நின்று பணிவிடை செய்யும் அழகே அழகு. அக்குடும்பத்தைப் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. அனாவசிய வம்பு வார்த்தை, சண்டை, சலிப்பு எதுவுமில்லாமல் பார்க்க திருப்தியாக இருந்தது.

சுறுசுறுப்பும், அடக்கமும், அமைதியுமான சரசு அம்மாள், ஒரு நாள் நெஞ்சுவலி என்று சிறிது நேரமே துடித்து மரணமடைந்து விட்டாள். குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அதிலும் அந்த வயோதிக மாது துடித்த துடிப்பு மிகவும் பரிதாபமாக இருந்தது. எல்லோரும் அந்தக் கிழவியை சமாதானம் செய்ய முயன்றனர். பார்க்க மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. சரசுவின் அந்திமக் காரியங்கள் நடந்து முடிந்தன.

சரசு செத்த நாலாம் நாள் என்று நினைக்கிறேன். அன்று எனக்குத் தூக்கமே வரவில்லை. அந்த வீட்டுக் கூடத்திலும், தாழ்வாரத்திலும் ஜனங்கள் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தனர். கிழவி சற்று ஒதுக்குப் புறமாக படுத்திருந்தாள். இரவு ஒரு மணி இருக்கும். மெல்ல மெல்ல ஒரு ஆண் உருவம் கிழவியை நெருங்குவதைக் கண்டேன். கிழவியின் கையைப் பிடிப்பது போல அந்த இருட்டிலும் எனக்கு மசமச என தெரிந்தது. வலிதாங்காத சின்ன ஒரு சத்தம் கிழவியிடமிருந்து வந்தது. அந்த உருவம் அவசர அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்து சென்று விட்டது. என் நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது.

பொழுது விடிந்தது. கிழவி பிணமாகத் தன் படுக்கையில் கிடந்தாள். எல்லோரும் ஒப்புக்கு அழுதனர். சரசுவின் சாவால் கிழவி கதிகலங்கிப் போய் விட்டாள். சோகம் அவளைக் கொன்று விட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டனர். கிழவியின் சாவுக்கு சோகம் காரணமில்லை என்னும் உண்மை என் ஒருத்திக்கு மாத்திரம் தெரிந்தது. ஆனால் அந்த உண்மை என் மனத்திலேயே புதைந்து விட்டது.

Painting Credit: http://kootation.com/

****

துளசி

இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராலாவது மூளை சரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா? அதிலும், காலை ஒரு ஒன்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய ஆரம்பிக்கும் போது பளிச்சென்று குளித்து சுத்தமான பாவாடை தாவணியோடு கண்ணுக்கு இதமாகத்தான் இருக்கிறது. தெருத் தெருவாக சுற்ற ஆரம்பித்து விடுகிறாள். சில சமயம் ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மணிக் கணக்காகப் பாடிக் கொண்டே இருப்பாள். குரல் தேன்தான். சில சமயம் நடுத்தெருவில் உட்கார்ந்து கொண்டு தெரு மண்ணையெல்லாம் மடியில் போட்டுக் கொண்டிருப்பாள். குழிகள் பறித்து சிறு சிறு கற்களைப் பொறுக்கி பல்லாங்குழி ஆடக் கிளம்பி விடுவாள். எதிரே ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவும், அவள் தப்பாட்டம் ஆடுவது போலவும் பாவித்து, ஏகமாக சண்டை போடுவாள். சில சமயம் அழுதல், சில சமயம் சிரித்தல், எங்காவது திண்ணையில் படுத்துத் தூங்குதல் என்று பொழுது போகும். மாநிறம்தான் என்றாலும் நல்ல அழகான தோற்றம். வயது பதினெட்டுக்குள்தான் இருக்கும்.

நான் அவளைக் கூப்பிட்டு பேச்சுக் கொடுத்துப் பார்ப்பேன். நன்றாகத் தெளிவாகப் பேசுவாள். தனக்கு தாய், தந்தை, அண்ணன் எல்லோரும் இருப்பதாக சொல்லியிருந்தாள். பக்கத்துத் தெருவில் அவள் வீடு இருப்பதாகவும் சொன்னாள். நான் அவளை ஒரு நாள் கேட்டேன். “ஏன் அம்மா, நீ இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாயே? பிறகு ஏன் கிறுக்குப் போல சுற்றிக் கொண்டிருக்கிறாய்?” 

“எனக்கு அப்படி சுற்றினால்தான் நிம்மதியாக இருக்கிறது. என்னால் வீட்டில் இருக்கவோ, பள்ளிக்கூடம் போகவோ முடிவ தில்லை. இது தெரிந்துதான் அப்பா, அம்மா என்னை என் போக்கில் விட்டு விட்டார்கள்.”

நான் குடியிருந்த வீட்டுக்கு எதிர் புறத்தில் ஒரு கல்யாண மண்டபம் உண்டு. சிறிய மண்டபம். சாமானிய மனிதர்கள் அங்கு குறைந்த வாடகையில் கல்யாணம் போன்ற சுப காரியங்களை செய்து கொள்வார்கள். இந்த மாதிரியான ஒரு கல்யாண நாளில் அந்தப் பெண் மண்டபத்தின் வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டிருந்தாள். உள்ளே மொய் எழுதுதல் நடந்து கொண்டிருந்ததால், சத்திரத்து வாசலில் யாரும் தென் படவில்லை. அந்த நேரத்தில், மண்டபத்தினுள் இருந்து ஒரு வாலிப் பையன் வெளியே வந்தான். பாடிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்ததும் அருகே சென்றான். நான் என் வீட்டு வாசலில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் அந்தப் பெண்ணை நெருங்கினான். அவனது பார்வையிலிருந்த ஒரு மயக்கம் எனக்குக் கலவரத்தைக் கொடுத்தது. அந்தப் பெண் அவனை நிமிர்ந்து பார்த்தது. அவள் முகத்தில் ஒரு மருட்சி. சட்டென தன் கையை பாவாடைக்குள் விட்டு எடுத்தது. அதன் கை நிறைய மூத்திரம். பையன் முகத்தில் வீசி அடித்தது. சிட்டாய் பறந்து ஓடிப் போய் விட்டது. அந்தப் பையன் அறுவெறுப்போடு ‘தூ! தூ!’ என்று துப்பியபடி மண்டபத்துக்குள் போய் விட்டான். நான் பிரமிப்பில் கல்லாய் சமைந்து  நின்றுவிட்டேன். அதன் பிறகு அந்தப் பெண் இந்தத் தெருப்பக்கமே வரவில்லை.

Image

அப்பெண் வருவது நின்றபின் எனக்குக் கொஞ்சம் மனதிற்குக் கஷ்டமாகவே இருந்தது. ஏக்கமாகக்கூட இருந்தது. இரண்டொரு மாதம் சென்றிருக்கும். ஒரு நாள், நான் காரணீஸ்வரர் கோயில் சென்று வரலாம் என்று எண்ணினேன். நான் அதிகமாகக் கோயில் குளம் என்று போக ஆசைப்பட மாட்டேன். கடவுளை என் மனதிலும் இஷ்ட தெய்வத்தின் படத்திலுமே வைத்து பக்தி செய்து கொள்ளுவேன். அன்று கோயில் பிரகாரத்தைச் சுற்றும் போது யாரோ என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது கண்டு திரும்பிப் பார்த்தேன். என் இள வயது சிநேகிதி ஜானகி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். மகிழ்ச்சியோடு அவளுடன் சேர்ந்து பிரகாரம் சுற்றலானேன். அவள் என்னிடம் இரண்டொரு வார்த்தை சம்பிரதாயமாகப் பேசிவிட்டு வாய்க்குள்  ஸ்தோத்திரங்களை சிரத்தையோடு முணுமுணுத்துக் கொண்டே வந்தாள். சுவாமி தரிசனம், கற்பூர ஆரத்தி எல்லாம் முடிந்த பிறகு கோயிலில் சற்று உட்கார்ந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற வழக்கத்தை அனுசரித்து பிரகாரத்தின் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டோம்.

முதலில் அவள் என்னைப்பற்றி விசாரித்தாள். நான் சுருக்கமாக சொல்லிவிட்டு இப்பொழுது என் கடைசி மகனோடு வசிக்கிறேன் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் கணவர் இரண்டாவது மகன் வீட்டில் இருந்து வருகிறார். அவர்கள் எல்லாம் நகரில் மற்றொரு பகுதியில் இருக்கிறார்கள் என்று சொன்னேன். ஜானகி தான் சென்னையிலேயே பல வருடங்களாக இருப்பதாகவும், தன் கணவரும் மகனும் சேர்ந்து ஏதோ தொழில் நடத்துவதாகவும் சொன்னாள். அந்த சமயத்தில் புத்தி சுவாதீனமற்ற அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்து “அம்மா, பசிக்கிறது. ஏதாவது தின்னக் கொடு” என்று கேட்டாள். நான் “இந்தப் பெண் உன் மகளா?” என்று கேட்டேன். “ஆம். என் வயோதிக காலத்தில் அனுபவிக்க வேண்டிய விதியாக அமைந்து போனது.” என்றாள் விசனத்துடன். “நான் வசிக்கும் தெருவுக்கு இந்தப் பெண் அடிக்கடி வந்து பார்த்திருக்கிறேன். பேசினால் தொடர்ச்சியாக தெளிவுடன்தான் பேசுகிறாள். டாக்டரிடம் காட்டினீர்களா? சரியான வைத்தியம் செய்தால் குணமாகி விடுவாள் என்று எனக்குத் தோன்றுகிறது.” என்றேன்.

ஜானகி சொல்லத் துவங்கினாள், “இவள் இரண்டு ஆண்டு முன்பு வரையிலும் நன்றாகத்தான் இருந்தாள். பள்ளியில் படித்து வந்தாள். நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள். ஆசிரியர்கள் எல்லாம் அவள் நன்றாகப் படிக்கிறாள் என்றார்கள். சமர்த்துப் பெண் என்று சொல்லுவார்கள். என் போதாத காலம் என் தம்பி மகன் ரூபத்தில் வந்தது. அவனும் இவள் வயது உடையவன்தான். ஒரு சமயம் பள்ளி விடுமுறையில் அவன் வீட்டிற்கு வந்திருந்தான். இரண்டு பேரும் கலகலப்பாக பழகிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர். ஒரு நாள், இருவரும் கேரம் விளையாடிக் கொண்டு இருந்தனர். எனக்கு சமையல் பொருள் ஏதோ வாங்க வேண்டிவந்தது. நான் அவர்களிடம் நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள், நான் கடை வரை சென்று பொருள் வாங்கி வருகிறேன் என்று சொல்லி விட்டு போனேன்.

“திரும்பி வந்த போது, வீட்டுக் கதவு உட்பக்கமாக தாளிட்டு இருந்தது. உள்ளே ‘தட தட’ வென்று ஓசை கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அந்தப் பையன் அவளிடம் தப்பான நோக்கத்துடன் நெருங்கிக் கொண்டிருந்தான். இவள் சட்டென தன் மூத்திரத்தைக் கையில் ஏந்தி, அவன் முகத்தில் அடித்தாள். கோபம் கொண்ட அவன், இவளைப் பிடித்து இழுத்துத் தள்ளிய வேகத்தில் சுவற்றில் மோதிக் கொண்டு கீழே விழுந்தாள். தலையிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. கதவை நான் தட்ட முயல்வதற்குள் அவனே கதவைத் திறந்து கொண்டு வந்தான். கலவரம் தேங்கிய முகத்துடன் என்னைத் தாண்டிக் கொண்டு ஓடினான். அன்று போனவன்தான். ஆளே காணாமல் தொலைந்து போய் விட்டான். அன்றையிலிருந்து துளசி இப்படி இருக்கிறாள். நாங்களும் நிறைய வைத்தியங்கள் செய்து பார்த்து விட்டோம். ஆனால் பலன் தெரியவில்லை. இவள் வீட்டை விட வெளியில் சுற்றுவதையே விரும்புகிறாள். அதிலும் வீட்டுக் கதவை யாராவது மூட முயன்றால் முகம் வெளிறி அலற ஆரம்பித்து விடுகிறாள். இரவில் கூட இவள் நன்கு உறங்கிய பிறகே வீதிக் கதவை சாத்துகிறோம். அவள் விழிப்பதற்குள் திறந்து வைத்து விடுகிறோம். மருத்துவரோ, அவள் போக்கிலேயே விட்டுப் பிடியுங்கள். கண்டிப்பாக குணம் அடைவாள் என்று உறுதியாகக் கூறுகிறார். தெய்வம் விட்ட வழி.” என்று சோகமாக சொல்லி முடித்தாள்.

Painting Credit: http://www.excellence.org/

****